Monday, March 19, 2012

எங்கள் விடுதலையின் பொருளறியும்


கண்முன் விரிந்து
கனவுவெளியெங்கும்
விதைந்து கிடக்கிற
எங்கள் மீதான வன்மங்கள்
ஒருநாள்
ஓர்மமாய் எழும்.
அன்று எங்கள் தீ விரல்கள்
இப்பூமியெங்கும் தணலேற்றும்…..
தமிழச்சிகளின் மார்பையறுத்தவனும்
பிறப்புறுப்பை மிதித்தவனும்
மரணத்தின் வலியறியும் விதியெழுதும்
நாளின் பொழுதறியும் - எங்கள்
விடுதலையின் பொருளறியும்....
12.03.2012

 (நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பார்த்த வலியின் வெளிப்பாடாய் இக்கவிதை)

Saturday, March 10, 2012

யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி

அக்கா...! அவ்வப்போது தொலைந்து போகிறவன் இடையிடை இப்படித்தான் அழைப்பான். கிட்டத்தட்ட 3மாதங்கள் தொடர்பறுந்து போனவன் நேற்று மீண்டும் அழைத்திருந்தான்.

எங்கைசாமீ ஒளிச்சிருந்தனீங்கள்...? ஒரு எஸ்எம்எஸ் கூடப்போட நேரம் கிடைக்கேல்லயோ ?
நாய்க்கென்ன வேலை அது ஓடிக்கொண்டுதானேயக்கா இருக்கும்....

அப்ப நாய் வாழ்க்கை இன்னும் முடியேல்லெயெண்றீங்களோ...? அதெங்கக்கா முடியுறது....?
எவ்வளவோ துயரங்களையும் வலிகளையும் மனசுமுட்டச் சுமந்து கொண்டிருந்தாலும் தொடர்பில் வருகிற நேரங்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டவன் போல கதைக்க ஆரம்பித்துவிடுவான்.

வளமையான சுகநல விசாரிப்புகள்....குடும்பம் குழந்தைகளில் ஆரம்பித்து வளமைபோல நேற்றும் தாயகத்தில் போய் நின்றது.

நேற்றைய நமது கதையில் பவி பற்றிய கதை எப்படி வந்ததென்று தெரியாமல் வந்துவிட்டது. நினைச்சா நெஞ்சு வெடிச்சிடும் மாதிரியிருக்கு....கடைசியா அந்தாள் என்னிட்டை கேட்டது ஒண்டு தான்....தன்ரை பிள்ளையள் மூண்டையும் படிப்பிச்சு விடச்சொன்னது மட்டும்தானக்கா.....

அவன் பவியின் கணவனான ஒரு தளபதியின் கடைசி ஆசையைப் பற்றி கிட்டத்தட்ட 47 நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் அவனது இயலாமை அவனைக் குற்றவாளியாய் வரைந்து அவனை வருத்திக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

என்ன செய்றது....? யார் நினைச்சம் இப்பிடியெல்லாம் வருமெண்டு....

என்னக்கா சொல்றியள்....இந்தக் கட்டமைப்புகள் செயலகங்கள் நினைச்சிருந்தா எல்லாருக்கும் எல்லாம் செய்திருக்கலாமக்கா....நாங்கெல்லாம் ஊரிலை நிக்கேக்க இங்கை அரசியல்வேலை நல்லா நடக்குது எங்களுக்குத் தான் வெற்றியெண்டு சாவுக்கை நிண்டம்....இஞ்சை வந்தப்பிறகு தான தெரியுது நாங்கெல்லாம் முட்டாளுகளா இருந்திட்டமெண்டது....இவனுகளின்ரை வெளிநாட்டரசியலின்ரை விறுத்தத்தை சத்தியமா இஞ்சை வந்தப்பிறகு தானக்கா முழுசாப்புரிஞ்சன்.....ஒருநாள் கூட களமறியாதவனெல்லாம் இப்ப கடைசீல நடந்ததென்னெண்டு கதைவிடுறாங்கள்....அது போதாதைக்கு நம்மையெல்லாம் துரோகியுமெல்லோ ஆக்கீட்டாங்கள்......22வருசம் இந்த இனத்துக்காக எல்லாத்தையும் இழந்து இண்டைக்கு சொந்தக் குடும்பத்தையே காண முடியாம கடைசியில 22வருசம் போராடின குற்றத்துக்கு துரோகிப்பட்டமும் தந்திட்டாங்கள்.....இந்த விதியை நினைச்சாத்தான் வலிக்குதக்கா....

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அவனது கதைகளுக்கு நடுவில் சின்னச் சின்னப் பகிடிகள் விட்டு அவனை அந்தச் சில நிமிடங்கள் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது.

000 000 000
16வயதில் தனது சுயவிருப்போடு விடுதலைப்புலியானவன். எத்தனையோ சமர்கள் களங்கள் அவனது கள அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு. ஜெயந்தன் படையணியின் சிறந்த சண்டைக்காரர்களில் அவனும் ஒருவன். ஜெயசிக்குறுவே அவனது கடைசிக்களமாக தொடர் காயங்கள் கால்களையும் கைவிரல்களையும் ஊனமாக்கும் வரை அவன் ஒரு சிறந்த சண்டைக்காரனாகவே திகழ்ந்தான்.

சிறந்த சண்டைக்காரனே சிறந்த அரசியல்காரனாகுவான் என்பது அவன் விடயத்தில் உண்மையாக அவன் களத்திலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட அரசியல் பொறுப்பைத் தலைமை வழங்கியது. அரசியல் பிரிவுக்காரர்கள் ஆடைமடிப்புக்கலங்காமல் பணிசெய்யும் இலகுப்பணிக்காரர்கள் என்ற களப்போராளிகள் பலரது கருத்தே இவனுக்கும் இருந்தது. தானும் அரசியல் பிரிவில் அதுவும் மாவட்டங்களை கட்டி நிர்வகிக்கும் பொறுப்பு வரும்வரை அரசியல் பிரிவில் உள்ள கடினங்களை அறிந்து கொள்ளவேயில்லை.

சண்டையில நிண்டு கொண்டு அரசியல்காறரை ஏதோ பெரிய வாழ்க்கை வாழிறாங்களெண்டு கதைச்ச கதைக்குத்தான் காலமெனக்கு இந்தத் தண்டனையைத் தந்திருக்கெண்டு நினைப்பான்.
சண்டைக்களங்களில் இருந்த முகம்போய் அரசியல் பிரிவுக்குரிய முகத்தை வரவழைத்துக் கொண்டான். மக்கள் தொடர்பு முதல் அனைத்தையும் செய்யத் தொடங்கிய போது வரியுடைக்கு ஓய்வு கொடுத்து பொது உடைக்கு மாறினான். விளையாட்டுத்தனங்கள் போய் சீரியசான அரசியல் போராளியாய் பொறுப்பு மிக்கவனாகிப் போனான். ஆயினும் பலமுறை களம்காண விரும்பும் தனது கனவைத் தலைமையைச் சந்திக்கிற போதுகளில் சொல்லி வைக்கத் தவறுவதில்லை. ஏதோ இனி அரசியல் பணியே உனது பணியென்பது போல தலைமையின் பதில் சிரிப்போடும் கண்டிப்போடும் வருகிற போது வாய்மூடிவிடுவான்.

கடைசிக்கள நிலமை மாறிப்போய் வன்னியை விட்டு விலகி நின்ற வெளிமாவட்டப் போராளிகள் நிலமை துடுப்பிழந்து போகுமென்று கனவில் கூட எண்ணாமல் தனக்குப் பணியாகத் தரப்பட்ட மாவட்டத்திலிருந்து பணிகளோடு கவனமாகினான்.

வாழ்வும் மரணமும் முள்ளிவாய்க்காலில் எழுதப்பட்டுக் கொண்டிருக்க அங்கே சென்றுவிட இவனும் இவனது மாவட்டத்திலிருந்த பலரும் முயற்சித்த முயற்சியும் தோற்றுவிட்ட போது முடிவுகள் அவரவரின் சுய விருப்பங்களாகியது.

எவ்வவோ குழப்பங்கள் விரக்தியின் மத்தியில் தான் நாட்டைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்தான். அவனது ஆயுளின் நீளமோ அல்லது அதிஸ்டமோ தெரியாது ஐரோப்பிய நாடொன்றில் வந்திறங்கச் சிலர் உதவி செய்து ஐரோப்பாவில் வந்திறங்கினான். வந்த பின்னர் தான் ஐரொப்பாவின் தாயகம் தேசியம் தன்னாட்சி குழுமோதல் முதல் புரிந்து கொண்டான்.

தன்கையால் மண்போட்டு விதைத்தவர்களை தன்கையால் வளர்ந்தவர்களை களத்தில் இழந்தவர்களை தன்னோடு ஒன்றாய் உறவாடி வாழ்ந்து ஒரே களத்தில் மடிந்தவர்களின் தியாககங்கள் ஆளாளுக்கு கூறுபோட்டு மாவீரர்களின் தியாகங்கள் துண்டாடப்படுவதனை எதிர்த்து ஒற்றுமைப்பாடொன்றை உருவாக்குமாறு எங்கும் வேண்டினான்.

ஒற்றுமையை வேண்டியதற்கான பலன் அவன் பெரிதுரோகியாக்கப்பட்டு இணையங்களில் கிழித்தெறியப்பட்டான். எத்தனையோ நாட்கள் தனக்குக் கிடைத்த துரோகிப்பட்டத்தை நினைத்து அழுதிருக்கிறான். 22வருடம் தமிழினத்துக்காக வாழ்ந்தவனை அவன் போராட்ட வாழ்க்கையின் வயதுகூட இல்லாததெல்லாம் அவனைத் துரோகியாக்கி தேசியம் பேசியது கூடப் பொறுக்க முடிந்தது. ஆனால் அவன் பிறந்த மாவட்டமே துரோகிகளின் மாவட்டமென்று பிரதேசப்பாகுபாட்டை புலத்தில் வளர்ப்பது போன்ற பெரிய கனவான்களின் பிரிவினைவாதக் கருத்துக்கள் எழுத்துக்களை மட்டும் அவனால் தாங்கவே முடியவில்லை.

வெளியில் வெளிக்கிட்டால் துரோகி மாவீர் நாளுக்குப் போனால் துரோகி....எங்கும் துரோகி எதிலும் துரோகி....இப்போது எங்கும் போவதில்லை. ஒரு அறைக்குள் வாழ்க்கையாகிப் போய்விட்டது. வாரத்தில் 3நாள் மிகவும் குறைந்த சம்பளத்திற்குச் செய்யும் வேலையைக்கூடச் செய்ய முடியாது போனது.

உணர்விழந்த வலக்கையின் 3விரல்களையும் பார்த்த மக்டோனால்ஸ் முதலாளி அவனால் வேகமாக வேலைசெய்ய முடியாதென்று வேலையை நிறுத்திவிட புதிய றெஸ்ரோரண்ட் ஒன்றில் கிடைத்த 5நாள் வேலையிலும் சம்பளம் மிகக்குறைவு. ஆனாலும் அரச வேதனத்தில் இருப்பதை விரும்பாமல் தனது சுய உழைப்பில் வாழ வேண்டுமென்ற வைராக்கியம் 12கிலோமீற்றர் தினமும் வேலைக்கு நடந்து போய்வருகிறான். கேட்டால் இதென்ன கஸ்ரமக்கா...? ஏன சிரிக்கிற அவன் மனசுக்குள் எரிகிற துயரத்தீயையும் துரோகமாக்கிவிடுகிற தியாகிகள் நடுவில் அவனுக்காக ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே சொல்ல முடிகிறது.

மற்றவர்களுக்காக வாழ்ந்தவன் இப்போதும் தன்னுடன் வாழ்ந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வை உயர்த்த ஏதாவது செய்துவிட வேண்டுமென்ற ஆவலில் தனது உழைப்பில் முடிந்ததைச் செய்கிறதோடு நின்றுவிடாமல் என்னிடமும் பல குடும்பங்களின் தொடர்புகளைத் தந்து அவர்களுக்கு உதவும்படி அடிக்கடி அன்புத் தொல்லை தந்து கொண்டிருப்பான். அந்த வரிசையில் தான் பவிபற்றி இன்று சொல்லத் தொடங்கினான்.

000 000 000

பவிக்கு ஏதும் ஒழுங்கு செய்யேலுமேயக்கா ? பாவம் சரியாக் கஸ்ரப்படுறாளாமக்கா...பிள்ளையளும் அதோடை அவளும் சண்டையில காயப்பட்டு காலொண்டும் ஏலாதவள்....எங்கினையோ வீடொண்டில வேலை செய்யிறாளாம்....பெரிசா செய்யேலாட்டிலும் அந்தப்பிள்ளையளுக்கு படிக்க மாதnமொரு ரெண்டாயிரம் குடுத்தாலும் அது பெரிய உதவியா இருக்குமக்கா....

சரி நம்பறைத் தாங்கோ....என பவியின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன். பவியைக் கண்டிருந்த காலங்களில் ஒரு தளபதியின் மனைவி ஒரு போர்க்களத்தின் போராளியென்ற மதிப்பும் சின்னப் பயமும் இருந்தது. அதனால் சந்தித்த காலங்களில் புன்னகையால் மட்டுமே பவியுடன் விடைபெற்றிருக்கிறேன். இப்போ அவளுடன் கதைக்க வேண்டி வந்தது சற்று சங்கடமாகவே இருந்தது.

08.03.2012 மதியம் அவளை அழைத்தேன்.

சொல்லுங்கக்கா...! ஏன ஆரம்பித்தவள் சொன்ன கதைகளைக் கேட்கக் கேட்க ஐயோ எனக்கத்த வேணும்போலிருந்தது.

பிள்ளையள் எப்பிடியிருக்கினம்....? இருக்கினமக்கா மூத்தவன் என்னோடை இல்லக்கா....சின்னவை ரெண்டு பேரும் தான் என்னோடை அதுவும் மகள் மட்டும் தான் இப்ப என்னோடை ரெண்டாவது அம்மா வைச்சிருக்கிறா...

மூத்தவனுக்கு இருதய வருத்தம் தெரியும் தானேயக்கா.....கடைசிநேரம் முகாமுக்கு வந்தாப்போல பிள்ளைக்கும் சரியா ஏலாமப்போட்டுது....அவனை ஒரு தெரிஞ்சாக்கள் தாங்கள் பாக்கிறமெண்டு கேட்டினம்....எனக்கும் அந்த நேரம் வேறை வழி தெரியேல்ல பிள்ளையை அவேட்டைக் குடுத்திட்டன்....இந்தச் சமூகத்தோடை எப்பிடி ஒட்டி வாழப்போறனெண்ட பயம் ஒருபக்கம்.... பிள்ளையெண்டாலும் எங்கினையும் வாழட்டுமெண்டு குடுத்திட்டனக்கா....மகனின் கதையைச் சொல்லிக் கொண்டிந்தவள் இப்போது அழ ஆரம்பித்தாள்.

ஊருக்கை வந்தா ஒருத்தரும் மதிக்கினமில்லை. அம்மா மட்டும்தான் ஆறுதல். அவற்றையாக்களிட்டையும் போய்ப்பாத்தன் ஒருதரும் என்னையோ என்ர பிள்ளையளையோ பாக்கிறமாதிரியில்லை....எங்கினையுமொரு வேலையைத் தேடுவமெண்டா எங்கை போனாலும் குறைஞ்சது ஓலெவல் தகுதி கேக்கினம்....15இயக்கத்துக்குப் போனநானெங்கை ஓலெவல் படிச்சனக்கா....அதுவும் புலியில இருந்து வந்துமெண்டா வாசலோடை வெளியில விடாத குறையா கதைக்கிறாங்களக்கா....

கடைசியா ஒரு வீட்டில வேலைக்கு ஆள் தேடினாங்கள் அதையாவது செய்து இந்த ரெண்டையும் பாப்பமெண்டு இந்த வீட்டு வேலையைச் செய்ய வந்திருக்கிறன். மகளையும் என்னோடை வைச்சிருக்கக் கேட்டன் அவை ஓமெண்டினம்....தனியவெண்டா மாதம் 5ஆயிரம் ரூபா தாறமெண்டினம்....இப்ப பிள்ளையுமெண்டதும் 4ஆயிரம்தான் தருவினமாம்.....சாப்பாடு தருகினம்....அப்ப ஓமெண்டிட்டன்....

எனக்கு யெகோவா ஆண்டவர்தான் துணையக்கா அவரைத்தான் இப்ப நம்பிறன்....ஆனால் யெகோவாக்காறரெண்டா பெரீசா ஏதோ அள்ளித்தருவினமெண்டு எங்கடையாக்கள் சொல்லுவினமக்கா....எனக்கு பணம் பொருள் ஒண்டையும் யெகோவா சபை தரேல்லயக்கா.....ஆனால் என்ரை மனதை வழிப்படுத்தி செத்துப்போற நிலமையில இருந்த என்னை வாழ வைச்சிருக்கு யொகோவா ஆண்டவர்.....வெளியில காணேக்க எங்கடையாக்கள் நக்கலடிக்கினமக்கா யெகொவாக்காறர் எனக்கு வசதியைத் தந்திருக்கினமெண்டு....சத்தியமா நான் யெகோவா திருச்சபையிட்ட ஒரு சதத்தையும் வாங்கேல்லயக்கா....

முகாமிலயிருந்து ஊருக்கை வரேக்க நான் ஒரு பிணம்மாதிரித்தானக்கா வந்தனான்....கடைசீல அவர் சொல்லிவிட்டது எங்கடை பி;ள்ளையளைக் கைவிட்டிராத எண்டதுதான்.....ஆனா என்னாலை ஒண்டுமே செய்யேலாமப் போச்சக்கா.....மனநலம் பாதிக்கிற நிலமையிலதானக்கா இருந்தனான்....அப்பதானக்கா யெகோவா ஆண்டவரிட்டைப் போனனான். நானிப்ப ஓரளவு மனத்தைரியத்தோடை வாழுறனெண்டா நான் தேடின யெகோவா ஆண்டவற்றை கிருபைதான் காரணமக்கா....

அவள் யெகோவா ஆண்டவர் பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தாள். யெகோவா ஆண்டவர் பற்றிய புத்தங்களோடு வந்து வாசலைத் தட்டுகிற எல்லாரையும் துரத்திவிடுகிற என்னால் பவியைத் தொடர்பறுக்க முடியவில்லை. அவளது தேர்வு பிழையென்று வாதாட எனக்கு எவ்வித தகுதியும் இல்லையென்பதனை மனசார ஒப்புக் கொண்டேன். வாழ வழியற்றுப்போன நேரம் அவளை ஆற்றுப்படுத்தியது யெகோவா ஆண்டவரென்று அவள் நம்பியதால் இன்று தனது பிள்ளைகளுக்காக வாழும் தைரியத்தைப் பெற்றிருக்கிறவளோடு விவாதித்து எனது பெருமையை வெளிப்படுத்தவில்லை.

எனக்கு ஆடம்பரமா வாழ வேணும்....சம்பாரிக்க வேணும்....பகட்டா திரிய வேணுமெண்டெல்லாம் ஆசையில்லையக்கா...!என்ரை பிள்ளையள் படிக்க வேணும் அது போதுமக்கா....என்றவள் உறுதியாய் சொன்னது இதுதான்:-

தன்னை வழிப்படுத்திய ஆண்டவருக்கு ஊழியம் செய்கிற பிள்ளைகளாகத் தனது பிள்ளைகளை ஆன்மீகக் குழந்தைகளாக வளர்க்க வேணுமெண்டதே தனது கனவென்றாள்.

உங்களுக்கு உங்களை ஆற்றுப்படுத்த என்ன வழி சரியெண்டு நினைக்கிறீங்களோ அதை நீங்கள் தெரிவு செய்ததில பிழையில்லை.....அது உங்கடை சுதந்திரம்.....என அவளது யெகோவா ஆண்டவரின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

அவர் கடைசியா ஆசைப்பட்டது பிள்ளையளை கவனமாப்படிப்பிக்க வேணுமெண்டதுதானக்கா....என்ரை பிள்ளையள் படிக்க ஏதாவது உதவ ஏலுமெண்டா பாருங்கோக்கா....உங்காளலை உதவேலாமல் போனாலும் பறவாயில்லை....இடைக்கிடை எடுத்துக் கதையுங்கோக்கா....அதே எனக்கு பெரிய ஆறுதலா இருக்குமக்கா....இஞ்சை எங்கடை முகத்தைப் பாக்க எங்களோடை கதைக்கவே சனம் தயாரில்லையக்கா.....நாட்டைவிட்டுத் தூரத்தில இருந்தாலும் ஞாபகம் வைச்சு எடுத்திருக்கிறீங்களக்கா....அதுக்கு நன்றியென்றாள்.

அவளோடு கதைக்கச் சொல்லி தொடர்பைத் தந்த தோழனைப் பற்றிச் சொன்னேன். அவனுக்கே இந்த நன்றிகளைச் சொல்லச் சொன்னேன். அவள் அழுதாள்....அண்ணனிட்டைச் சொல்லுங்கக்கா நாங்கள் உங்களை மறக்கேல்லயெண்டு....எங்கேயெண்டாலும் அண்ணன் நல்லாயிருக்கட்டுமென்று வாழ்த்தினாள்.

பவியின் கண்ணீர் தன்னை மேலும் துன்புறுத்தும் என்ற பயத்திலேயே அவளுடன் தொடர்பெடுக்க மறுத்திருக்கிற தோழனின் இக்கட்டை அவளுக்குச் சொல்ல முடியவில்லை. நான் சொல்றன் எடுத்துக் கதைக்கச் சொல்லி....என்றேன். சொல்லுங்கக்கா நாங்களிஞ்சை செல்லாக்காசுகளாப் போனமெண்டு....அவள் அழுது கொண்டிருந்தாள்.

சரி பவி நான் ஆறுதலா இன்னொரு நாள் கதைக்கிறனே....! என்ரை நம்பர் இதுதான் எழுதுங்கோ....என்றேன். பவி அழுதழுது எனக்கு விடை தந்தாள்.

பவியின் வாழ்வுக்கு ஏதாவதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேணும்...ஆற்றை காலைப்பிடிச்செண்டாலும் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் ஏதாவது செய்தாக வேணுமென்ற சிந்தனை மனசுக்குள் வலம்வருகிறது.

அவள் சொன்ன யாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்ற முடிவில் புவியின் தொடர்பைத் தந்த தோழனின் தொலைபேசியிலக்கங்களை அழுத்துகிறேன்....

08.03.2012

Monday, February 27, 2012

லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று


வருடம் தவறாது வந்த வாழ்த்து மடல்களிலும் கடிதங்களிலும் மட்டுமே உங்கள் நினைவுகள் மிஞ்சிக்கிடக்கிறது. அண்ணனாய் ,தோழனாய் , ஆசானாய், மாமனாய் , கடிதம்மாமாவாய் எம்மோடு வாழ்ந்த வீரனே ! இன்றுங்கள் நினைவுநாள் இதயம் முட்டிய துயரோடு உங்களை நினைவு கூருகிறோம்....


கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும்

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, March 2, 2010


ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம்
உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில்
நீ எத்தனையோ அடையாளங்களாய்.....

தேசம் தேசியம் என்றெல்லாம்
கனவுகள் நிரம்பியல்லவா உனது
கடிதங்களை எழுதினாய்...!
ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும்
உரமூட்டி உரமூட்டியல்லவா
உன்னைத் தீட்டிக்கொண்டாய்....!

உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும்
காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று
கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில்
எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது....
எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய
நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்....

மேமாத முடிவுகளைத்
தைமாதமே உரைத்த நீ
மாசி27 கிபீரடியில்
உன் கொள்கையும் இலட்சியமும்
தமிழீழ தேசத்தின்
கனவுடனே கரைந்து போனது....
நீ கண்ட கனவும்
உன்போல் ஆயிரமாயிரம் பேரின் கனவுகளும்
கொள்ளைபோய்விட்டன.....
தடுப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும்
அள்ளுண்டு அரியுண்டு
அனைத்துமே பூச்சியத்தில் போய் நிற்கிறது.

வாழ்வோடு உன்னில் பாதியானவள் - உன்
உயிரின் துளியான உன் குழந்தை
உனது வயதான பெற்றோர்கள்
உன்னை நேசித்த நாங்கள் எல்லோரும்
நீயிருந்தால் நீயிருந்தாலென்று
எத்தனையோ விதமான கற்பனைகள்
எங்களுக்குள்.....

உன்னை வார்த்தாற்போல
உன் செல்வமகன்
அவன் மழலைக்குரலில்
உன் குணங்கள் யாவும்
தேங்கிக் கிடப்பது போல....
உன்னை எழுதுகிறான்
உன்னைத் தேடுகிறான்....
உன் நினவுகளை எங்களோடு தேக்கி
அவன் மழலைக்குரலில் நீயே வாழ்கிறாய்....

தொலையலையில் அழைக்கும் போதெல்லாம்
என்னை அத்தையென்கிறான் உன் பிள்ளை
அக்கா அண்ணா பற்றியெல்லாம் அக்கறைப்படுகிறான்.....
அவன் குரல் கேட்டால்
உன்னையே காண்பது போன்ற பிரமை....
நீ வந்தால்....
இந்த மகிழ்வுகள் எத்தனை நிறைவாயிருக்கும்...?

(லெப் கேணல் அருணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு 27.02.2010)

Thursday, January 12, 2012

8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும்

கிட்டத்தட்ட 5மாதம் அவனுடன் பேசியிருக்கிறேன். இதுவரையில் தனக்காகவோ தனது மனைவிக்காகவோ தனது 3வயது மகனுக்காகவோ ஒரு சதம்கூடக் கேட்கவில்லை. ஒவ்வொருமுறை கதைக்கிற போதும் தன்கூட இருக்கிறவர்கள் தன்போல சிறைகளில் அடைபட்டவர்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் போன குடும்பங்கள் ,தன்னோடு களமாடி வீரச்சாவணைத்த தோழர்களின் குழந்தைகள் குடும்பங்களைளையே நினைவு கொள்வான். அவர்களுக்கான உதவிகளின் அவசியத்தை ஞாபகப்படுத்துவதும் அதற்கான ஒழுங்குகளைத் தேடுவதிலுமே இதுவரை நாளும் உரையாடியிருக்கிறான்.

மனசுக்குள் தானும் விடுதலையாகிப்போக வேண்டுமென்ற ஆசையிருப்பினும் அதனை வெளியில் சொல்வதில்லையோ என்னவோ தனது விடுதலைக்காக எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. விடுகிற நேரம் போவோமென்றே இருந்தான். ஆனால் கடந்த மாதம் வந்த தீர்ப்பில் அவன் பிணையில் செல்வதற்கான வாய்ப்பை சட்டத்தரணி உறுதிசெய்து சொன்னார். 5லட்சம் பிணைக்கான பணத்தை ஒழுங்கு செய்யும்படி சட்டத்தரணி கூறிவிட்டார். 5சதத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலமையில் 5லட்சம் அவனுக்கு எட்டாக்கனிதான்.

விடயத்தை மனைவிக்குத் தெரிவித்தான். தனது கழுத்தில் கிடந்த தாலியைக் கொண்டு 5லட்சத்தைப் பெற்றுக் கணவனை வெளியில் கொண்டு வந்துவிடலாம் என்று நம்பித் தாலியை விற்கப்போனதிலும் ஏமாற்றம்தான். ஆனாலும் தாலிக்கு கிடைத்த 2லட்சத்தோடு வந்து மீதி 3லட்சத்துக்கான முயற்சியைத் தொடங்கியிருக்கிறாள் அவனது மனைவி.

புதுவருடத்தன்று வாழ்த்துச் சொன்னவனிடம் வழக்கு நிலமைகள் எந்தளவில் உள்ளதென்பதை விசாரித்த போது 3லட்ச விடயத்தை தயக்கத்தோடு சொன்னான்.

அப்ப காசொழுங்கு செய்ய வேணுமென்ன ? இது நான்.

ஏலுமெண்டா முயற்சிச்சு பாருங்கோ. கட்டாயமில்ல....10ம் திகதிக்குள்ள கிடைக்குமெண்டா....அதற்கு மேல் அவன் அதுபற்றி எதையும் கேட்கவில்லை.

அவனுக்கான 3லட்சத்தை எப்படித்திரட்டுவதென்ற குழப்பம். இந்தப்பெரிய தொகையை அவன் பெயர் சொல்லியும் சேகரிக்க முடியாத நிலமையில் அவனது நிலமை.

01.01.2012வரையும் அவன் இன்னும் உயிரோடிருக்கிற விடயத்தை அவனை அறிந்தோம் பழகினோம் அவனைப்போலொருவனுக்கு நட்பாயிருந்ததற்காக ஆயிரம் கோடி புண்ணியம் செய்தோம் என்ற எவருக்கும் சொல்லேல்ல. ஒன்று அவன் அதனை விரும்பவில்லை. காரணம் மற்றவர்களைத் தொல்லை கொடுக்கக்கூடாதென்ற மனம்.

சமாதான காலத்தில் பணியென்று ஊர்போனவர்கள் மாதக்கணக்காக அவனோடு பணிபுரிந்திருக்கிறார்கள். இந்த இரண்டரை வருடத்தில் அவனுக்காக எவரும் எதையும் செய்யவுமில்லை. அவனைத் தேடவுமில்லை. புலம்பெயர்நாடுகளிலிருந்து போய் அவனுடன் பணியாற்றிய பழகியவர்கள் புலம்பெயர் சமூகம் தன்னைமட்டுமல்ல தன்போன்றவர்களையெல்லாம் கைவிட்டுவிட்டார்களேயென்ற கவலை உள்ளுக்குள் இருந்து கண்ணீராய் பலதரம் வெளிப்பட்டிருக்கிறது. ஆயினும் யாரையும் மனம் நோகாமல் அவைக்கும் என்னென்ன இடைஞ்சலோ தெரியாதென அவர்களில் யாரையும் விட்டுக் கொடுத்ததில்லை.

01.01.2012 வளமைபோன்ற புதுவருட வாழ்த்தொன்று ஸ்கைபில். அவனுடன் பழகிய பணியாற்றிய ஒருவர். அவனைப்பற்றித் தெரிவித்து அவன் இன்னும் உயிருடன் சிறையொன்றில் வாழ்கிறானென்று சொன்ன போது அந்த நண்பர் வெளிப்படுத்திய அவன்மீதான அன்பில் வியந்து போனேன். அவன் தோழனில்லை என் தம்பி கடவுள் என்றெல்லாம் கதை அவிழ்ந்தது. ஒடிந்துபோன நம்பிக்கை எனக்குள் மீண்டும் புத்துயிர் கொண்டது. அவனுக்குத் தேவைப்படுகிற 3லட்சம் பற்றி உதவி கேட்க ஆளின்றிப்போன துயர் அற்றுப்போன சந்தோசம். அவனுடன் சமாதான காலத்தில் ஒன்றாயிருந்த அமெரிக்க கனடிய அவுஸ்ரேலிய ஐரோப்பிய பிரமுகர்களிடமெல்லாம் பேசி அவனுக்கு உதவி கிடைக்கும் போன்ற விம்பத்தை எனக்குள் விதைத்தார் நண்பர். இருண்டு போன அவன் வாழ்வு மீண்டும் ஒளிகாணப்போகிற மகிழ்ச்சியை விதைத்தது நண்பரின் கதை.

10ம் திகதிக்குள் உதவி கிடைத்தால் அவன் பிணைவரலாமென்ற என்ற வேண்டுகைக்கு 5நாளில் பதில் தருவதாகச் சொன்ன நண்பர் 12ம் திகதியாகியும் தொடர்பிலும் இல்லை உதவ முடியாதென்ற சொல்லைக்கூடச் சொல்லாமல் மறைந்துவிட்டார்.

ஒருவரை மட்டும் நம்பியிராமல் அவனுக்குச் சொல்லாமல் அவனை நேசிக்கிறோம் சாமியாக வணங்க வேண்டியவன் என்றெல்லாம் கதைசொன்ன மேலும் சிலரிடமும் பிச்சைபோடுமாறு 9ம் திகதி இரவுவரை தொடர் முயற்சி தோல்விதான். ஒரு கர்ணனும் கருணை காட்டவில்லை.

பெரிய பொறுப்பில இருந்தவரை எப்பிடி அரசாங்கம் சிம்பிளா பிணையில விடுவாங்கள் ? உது அரசாங்கம் எங்கடை வெளிநாட்டுக் கட்டமைப்பை உடைக்கச் செய்யிற திட்டமிட்ட வேலையெண்டுதான் நாங்கள் நம்பிறம். உங்கை கன சதியள் நடக்குது....உங்களிலயும் எங்களுக்குச் சந்தேகம்....? அதெப்பிடி உங்களாலை மட்டும் அவையோடையெல்லாம் கதைக்க முடியுது ? உங்களாலை மட்டுமெப்படி அங்கை உதவியளைக் குடுக்க முடியுது ? கேள்விகளால் அவர்கள் தேசியவீரர்களாயினர்.

000 000 000 000

உந்தச் சமாதானப் பேச்செண்ட காலங்களில என்னெண்டு இயக்கம் அரசாங்கத்தோடை சேந்து வேலை செய்தது ?
தமிழ்ச்செல்வன் கட்டுநாயக்காவில கைகுலுக்கி வெளிநாடு வெளிக்கிட அதே கட்டுநாயக்கா வளாகத்துக்கை கரும்புலியையும் புலனாய்வாளனையும் கைதும் நடந்ததே அதெப்பிடி ?

பிறேமதாசாவோடை மேசையில இருந்து கொண்டு அரசியல் பேசேக்கையும் சந்திரிகாவோடை சமரசம் பேசேக்கையும் எப்பிடியாம் எதிரியோடை பேச்சுவார்த்தை நடந்தது ? அப்பெல்லாம் இயக்கம் சமரசம் செய்துதானே எல்லாத்தையும் செய்தது ?

இங்கை மாவீரர்நாள் கொண்டாட கோலெடுக்கிறியள்...மாவீரர் நாளைக் கொண்டாடப்போறமெண்டோ எடுக்கிறியள் ? பொய்க்காரணம் சொல்லித்தானெ எடுக்கிறியள் ? கரும்புலிகள் நாளைச் செய்யேக்க பொலிஸ் வந்தா கரும்புலியளின்ரை படங்களை பூக்களாலை மறைச்சுக் கலைவிழாவெண்டுதானே சொல்லியிருக்கிறியள் ? இதுகளெல்லாம் என்ன வகையான விட்டுக் கொடுப்புகள் ?

கேட்க முடிந்த கேள்விகளை அந்தத் தேசியத் தூண்களிடம் கேட்கத்தொடங்க....

உங்களுக்கு அரசியல் விளங்கிறேல்ல....என்றுதான் தொடர்பை அறுத்துக் கொண்டு போனார்கள்.

தேசியத்தின் பெயரால் மாதச்சம்பளம் எடுத்தும் தேசியத்தின் பெயரால் வசதியை அனுபவித்தும் வாழும் இவர்கள் மீது அவன் இன்னமும் அன்போடிருக்கிறான். இவர்களை நேசிக்கிறான். ஆனால் தங்கள் கல்லாப்பெட்டிகளைத் திறக்க விரும்பாத பழிசுமத்தல் குற்றச்சாட்டு என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த கழுகுகளை நேசிக்கிற நம்புகிற அவனுடன் தொடர்பு கொண்டு நீங்கள் நம்புகிற எல்லாரும் உங்களை நம்பவில்லை துரோகியாய் நினைக்கிறாங்கள் என்று சொல்ல.....அவன் நம்பவேயில்லை. அப்பவும் சிரித்தான் அவர்களை நம்பினான்.
அவையளுக்கும் என்ன பிரச்சனையோ ? என்றான்.

நீங்க திருந்தமாட்டியள்....சொன்ன எனக்குச் சொன்னான்.

என்னாச்சி செய்யிறது அவையள் இருக்கிற நிலமையில இப்பிடித்தான் நினைக்க வரும்போல....ஆச்சி எனக்காக அவையளைப் பகைக்காதையம்மா....!

இத்தகைய மனம் படைத்த இவனை எப்படி ஒன்றாய் இருந்து பழகியவர்களால் நம்ப முடியாது போகிறது ?

சரி பாப்பம் வேறை வழியைத் தேடுவம்...என்றேன். ஆச்சி அதைவிடுங்கோ கஸ்ரப்படாதையுங்கோ....எனத் தனது விடுதலையில் அக்கறையெடுக்காது திரும்பவும் 10கைதிகளின் குடும்பங்களின் விபரங்களை எழுதச் சொன்னான்.

ஒவ்வொரு குடும்பத்தின் கதையும் ஒவ்வோரு வகையான சோகம். அதிலும் குறிப்பாக சந்திரமோகன் என்ற முன்னாள் போராளியின் குடும்பத்தை முதலாவதாக பாக்கச் சொன்னான். சந்திரமோகனின் பிரதேசத்தில் இவன் மக்களுடன் பணி செய்த காலங்கள் பற்றி நிறையச் சொன்னான். சொல்லும்படி முன்னேற்றமில்லாத சந்திரமோகனின் ஊரில் இவன் 100பேரை ஆழுமையாளர்களாக உருவாக்கிய கதையைச் சொன்னான்.

சந்திரமோகனும் ஒரு சிறையில் கைதியாய் இருக்கிறான். அவனுக்கு 4 பிள்ளைகள். ஒரு பிள்ளை வெள்ளை முள்ளிவாய்க்காலில செல்பட்டு இறந்து போக அதேயிடடத்தில் சந்திரமோகனின் சகலனும் தலையில் செல்பட்டு இறந்து போக இரு உடல்களையும் அருகில புதைச்சுப்போட்டு சந்திரமோகனின் குடும்பம் போனதாம். பிள்ளையை இழந்த துயரில சந்திரமோகனின் மனைவி மனநோயாளியாகிப்போய் அவனுடைய மிச்சம் 3பிள்ளைகளும் செல்பட்ட காயங்களோடை உடல் ஏலாம இருக்கினமாம். அந்தப்பிள்ளையளையும் கவனிக்க முடியாத பிள்ளைகளையே மறந்த நிலமையில சந்திரமோகனின் மனைவி இருக்கிறாவாம். சந்திரமோகனின் குழந்தை இறந்த இடத்தில் இறந்த மைத்துனனின் மனைவி மொறிஞ்சலாதான் சந்திரமோகனின் பிள்ளைகளையும் அவனது மனைவியையும் பராமரிக்கிறாவாம். அன்றாடம் சாப்பிடவோ உடுதுணிகளுக்கோ வசதியில்லாமல் இருக்கினமாம்.

இப்போது அவன் தனது நிலமையைப் பற்றி அக்கறைப்படவில்லை. சந்திரமோகனும் அவன்போன்ற பலரது நிலமைகளையும் தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவனது விடுதலையை எதிர்பார்த்திருக்கிற அவனது மனைவியைக்கூட மறந்து இன்னும் மற்றவர்களை எப்படி இவனால் நேசிக்க முடிகிறது ? உண்மையான போராளியொருவனின் மனது இப்படித்தானிருக்குமோ ? எண்ணிக் கொள்கிறேன்.
இப்போது 20ம் திகதி தவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலை பணம் கட்டாட்டில் பிறகு அவனுக்குத் தண்டனைதான்.

இன்று 12ம் திகதி. இன்னும் எட்டுநாளில் அவனுக்கு ஏதாவது ஒழுங்கு செய்தால் சரி அல்லது ????

12.01.2012 காலை 9.40மணி. எனது நகரில் உள்ள நகை அடைவு கடையில் ஒரு பவுணுக்கு எத்தினை யூரோ கிடைக்குமெனக் கேட்டேன். ஒரு பவுணுக்கு 100யூரோ தருவினமாம். 4வீதவட்டி 3மாதமொருமுறை வட்டி கட்ட வேணும்.

இப்பத்தைய பவுண் விலையில ஏப்பிடியும் ஒரு ஆயிரத்து ஐநூறு யூரோ கிடைக்குமென்று என்னிட்டைக் கிடந்த ஒருநெக்லஸ், ஒரு சோடி காப்பையும் கொண்டு போனதிலும் தோல்விதான். 600€தான் தரலாமென்றான் கடைகாரன். நானும் நகையள் சேத்து வைச்சிருக்கலாம். பவுணென்னத்துக்கெண்டு நினைச்சு எதையும் சேர்த்து வைக்காதது இப்போ உறைத்தது.

ஓவ்வொருமுறை ஒவ்வொருதனும் தனது குடும்ப நிலமையை வறுமையைச் சொல்கிறபோதும் கடைசி எல்லைவரை சென்றும் அவர்களுக்கான அவசர உதவிகளை ஒழுங்கு செய்ய முடியாது போகிற நேரங்களில் இதை விப்பமோ அடைவு வைப்பமோண்டு நினைக்கிற நெக்லஸ்சும் காப்பும் வெள்ளைக்காறனின் அடைவு கடை அலுமாரிக்குள் போய் சிரித்து விடைதந்தது. கடைகாரன் தந்த கடதாசிகளில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.

பெரியதாள் வேணுமோ இல்லது சின்னத்தாள் வேணுமோ ? காசுப்பெட்டியில் நின்ற வெள்ளைக்காரி கேட்டாள். ஒற்றை ஐநூறையும் நூறு யுரோவையும் தரச்சொன்னேன். கையில் காசைத் தந்தவள். இந்நாள் இனிய நன்நாளாய் அமையட்டுமென வாழ்த்தினாள். பதிலுக்கு உனக்கும் அப்படியே அமையட்டுமென்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறேன். இன்னும் மிஞ்சியிருக்கிற 8நாளில் எப்படி 3லட்சத்தின் மீதியைச் சேர்ப்பதென்ற சிந்தனைதான் ஞாபகமெல்லாம் நிறைகிறது. இறுதி முயற்சி இன்னும் 8நாளில் தொங்குகிறது.

12.01.2012

Tuesday, January 3, 2012

அக்காவுக்கும் பொதுமன்னிப்புக் கிடைக்கும்.

19வது வருடத்தை இவ்வருடத்தோடு நிறைக்கிறது காலம். மகனுக்கு இப்போ 18வயது ஆரம்பமாகப் போகிறது. அவன் எப்படியிருப்பான் என்னென்ன கனவுகளுடன் பறந்துதிரிவான் என்றதெல்லாம் அறிய வேணும் போலும் அவனைப் பார்க்க வேணும்போலையும் இருக்கும். எல்லா அம்மாக்களைப் போலவும் அவளது குழந்தையைப் பற்றி ஆயிரமாயிரம் ஆசைகள். ஆனால் எல்லா ஆசைகளும் உள்மனசுக்குள் சுனாமியலையாய் அடிக்க கண்ணீரால் நனையும் அவளது கனவுகளை யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இத்தனை வருடங்களிலும் எத்தனையோ பேர் உள்ளே வந்தார்கள் போனார்கள். அவளும் தனக்கும் ஒருநாள் விடியுமென்றுதான் காத்திருந்தாள். தீர்ப்பு ஆயள்தண்டனையென்றாகிய பின்னர் எல்லாக் கனவுகளும் ஒரேயடியாய் சாம்பலாகிப்போச்சு. இருளுக்குள் இனி உலகம் என்ற பின் அவள் கருவில் காத்துப் பெற்றெடுத்த மகனை இனிப் பார்க்க ஆசைப்படுவதெல்லாம் அபத்தம் என நினைத்தாள்.

19வயதில் மனசுக்குள் துளிர்விட்ட காதலும் காதலனும் அவளை ஏமாற்றிப் பச்சைத் துரோகம் செய்துவிட்டதாகவே பலதரம் கோபித்திருக்கிறாள். காதலையும் காதலனையும் கனகாலம் சிறையில் அடைபட்ட பின்னரும் சுமந்திருக்கிறாள். அவள் பெற்ற குழந்தையை அவள் காண முடியாத பிரிவின் பின்னர் காதலையும் காதலனையும் அவள் சுமந்த புனித உலகத்தை விட்டுத் நிரந்தரமாக விலக்கி வைத்துவிட்டாள். தானாகத் தேடிய வினையின் பரிசு தன் காதல் என்ற முடிவிற்கே வந்துவிட்டாள்.

1992...! அவளது இலட்சியக்கனவின் ஒரு கட்டம் முழுமையடைந்து பல்கலைக்கழகம் தெரிவானாள். அடுத்ததாய் அவள் ஒரு பொறியியலாளராகும் கனவோடு வடக்கிலிருந்து தெற்குக்கு பயணமானாள். அவள் அதுவரை காலமும் வாழ்ந்த வாழ்வுக்கும் இப்போதைய புதிய வாழ்வுக்கும் இடையிலான பெரும் மாற்றம் ஆச்சரியம்தான் ஆனாலும் அந்தச் சூழலுக்குள் தன்னை இசைவாக்கிக் கொண்டாள்.

மாலைநேரங்களில் பல்கலைக்கழக நட்புகளுடன் கடற்கரைக்குச் செல்லுதல் சனி ஞாயிறுகளில் விக்ரோறியாப்பாக் தெகிவளை மிருகக்காட்சிச்சாலையெனப் பொழுது கழிக்கக் குறைவில்லாத அழகான இடங்களுக்கெல்லாம் போய்வருவாள். அப்படிப்போய்வருகிற ஒரு கடற்கரையில்தான் அவன் அறிமுகமானான்.

'உன்பார்வையில் ஓராயிரம் கவிதைதான் எழுதுவேன்'' என்ற கணக்கில் அவனது கண்களில் அவள் கவிதையானாள். அவனைச் சந்திப்பதற்காகவே அவன் வரும் நேரங்களைக் கணிப்பிட்டு அவனைச் சந்திக்கத் தொடங்கினாள். தூரத்தூர பார்வைகளால் எழுதப்பட்ட காதல் அருகருகாய் சந்திப்புகள் நெருக்கமாகி அவர்கள் காதலர்கள்.

தோழிகள் தேவையற்றுப் போக அவளது உலகம் எல்லாம் அவனாகினான். ஊர் ஒழுங்கைகளுக்குள் ஆரம்பமாகிற காதல்கள் போலல்லாமல் கொழும்புக்காதல் சற்று முன்னேற்றமாக அருகருகான சந்திப்பு நெருக்கமாகி உடலுறவு வரையும் வளர்ந்தது காதல். தொழில்நுட்பவியலாளராகும் கனவோடு ரயிலேறியவள் அவனுக்காக எல்லாவற்றையும் இழந்துவிடவும் அவனுக்காகச் செத்துப்போகவும் தயாராகினாள்.

வளமைபோன்ற ஒரு விடுமுறை மாலைநேரம். அன்றும் கடற்கரையில் சந்திப்பு. இருளும் வரை அவன் தோழில் சாய்ந்து கடலை கொறித்தபடி மாலைச்சூரியனின் இறுதிச் சங்கமத்தை ரசித்தபடியிருந்தாள். அவன் மட்டும் ஏதோ தொலைத்துவிட்டதான உணர்வோடு ஒரு புயலை எதிர்கொள்கிறவன் போல கடும் யோசனையில்.

அவளை அடிக்கடி பார்த்தான். காரணம் கேட்டவளுக்கு ஒன்றுமில்லையென்ற ஒற்றைத் தலையாட்டலோடு மீண்டும் யோசனையில்.....நாக்குநுனி வரையும் உந்திக் கொண்டு வருகிற வார்த்தைகளைத் திரும்பியும் தொண்டைக்குளிக்குள் மென்று விழுங்கினான். உப்பும் மிளகாய்த்தூளும் தூவிய அன்னாசித் துண்டுகளை விற்றுக் கொhண்டிருந்த அன்னாசி வியாபாரியைக் கூப்பிட்டு 4அன்னாசித் துண்டுகளை வாங்கினான். நிறைவேற்ற வேண்டிய விடயத்தை அன்னாசி சாப்பிட்டு முடித்த கையோடு சொல்லிவிடுகிற தைரியத்தோடு அன்னாசியை அவளிடம் கொடுத்தான்.

ஆளையாள் அடையாளம் தெரியும் வெளிச்ச நிழலில் அவளது கண்களைப் பார்த்தான். மெல்லிய கடற்கரைக்காற்றின் குளிரில் குளிர்ந்த அவளது கைகளை எடுத்துத் தனது கையோடு சேர்த்து அழுத்தினான். நெஞ்சில் தலைசாய்த்து அவனோடு ஒட்டிக் கொண்டாள். கடலில் சென்று கொண்டிருந்த கப்பல்களிலிருந்து தூரத்தே தெரிந்த சின்னச்சின்ன ஒளிப்பொட்டு அவர்களை நெருங்கி வருவதுபோலிருந்தது.

இடம் பொருள் காலமறிந்து அவன் தனது திட்டத்தை அவள் காதுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லத் தொடங்கினான். அவனது அருகாமையை விட்டெழுந்து ஓயாமல் கரைகளைத் தொட்டுக் கொண்டிருந்த அலைகளில் கால் புதைத்தாள். அவளுக்குள் பல்லாயிரம் கிலோமீற்றர் வேகத்தில் அலையடிக்கத் தொடங்கியது. கண்ணுக்குள் முட்டிய கண்ணீரை கைலேஞ்சிக்குள் ஒற்றிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள். அவன் இருந்த இடத்தைவி;ட்டு அசையவில்லை. அந்த நேரம் கூட அவனில் கோபம் வரவில்லை அவளுக்கு.

எத்தனைதான் கரையில் மோதினாலும் திரும்பியும் கடலுக்குள் ஓடியொளிகிற அலைகள் போல திரும்பி அவனிடம் வந்தாள். அவன் ஒரு கடவுள்போலத் தெரிந்தான். அவள் கால்களை நனைத்த அலைகளில் அவனது தோழர்கள் வாழ்வதாகச் சொன்னான். அவர்களது கனவுகளோடு கரைந்து போகவே இவனும் காத்திருப்பதாகச் சொன்னான். மற்றைய நாட்களைவிடவும் இன்றைய நாள் அவன் அவளுக்கு மேன்மையானவாகத் தெரிந்தான்.

000 000 000

அவன் சொன்னபடி ஊரில் உறவொன்று மரணமடைந்ததாகவும் ஊர்போய் வருவதற்காக ஒருவாரம் விடுமுறை எழுதிக் கொடுத்துவிட்டு அடுத்த 2வது நாள் அவனோடு போனாள். அந்த இரவு பணக்காரர்களால் நிறைகிற ஒரு விடுதியில் அறையெடுத்துக் கொண்டார்கள். முதல் முதலாக அத்தகையதொரு ஆடம்பர விடுதியில் அன்றுதான் அவள் காலடி வைத்தாள். அந்த வாழ்வையே தினமும் அனுபவிப்பவன் போல் அங்கே அவளை அழைத்துக் கொண்டு போனான். தனது முகத்தை அந்த விடுதியின் நிலத்தில் பார்த்து வியந்துபோனாள்.

அங்கே அவனுக்கு அறிமுகமான பல பெரும் புள்ளிகளை இவளுக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவர்களில் சிலர் இராணுவ அதிகாரிகள் , புலனாய்வு அதிகாரிகள் எனப் பலரது அறிமுகம் அவளுக்கும் அன்று அவனால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு அவளைத் தனது காதலியெனவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அடையாளப்படுத்தினான். அவர்களுடன் சேர்ந்து அவனும் விலையுயர்ந்த மதுவகைகளை அருந்தினான். நிதானத்தை இழக்காத நிலமையில் தானிப்பதை அவளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தான். நள்ளிரவு தாண்ட தங்களுக்காக ஒழுங்கு செய்த அறைக்கு அவளை அழைத்துப் போனான்.

மறுநாள் அவன் சொன்னபடி அவள் தயாரானாள். இரவு கொண்டு வந்த சில்லுப்போட்ட உடுப்புப் பெட்டியை அவள் உருட்டிக் கொண்டுவர அவன் ஒரு இராசகுமாரனின் மிடுக்கோடு வந்து கொண்டிருந்தான். காவலுக்கு நின்றவர்கள் அவனுக்குத் தலைகுனிந்து நிமிர்ந்து விடைகொடுக்க அந்த அதிசயம் மிக்க உலகத்தைவிட்டு வாசலிற்கு வந்தார்கள். சற்று நேரத்தில் சொகுசு வாகனமொன்று அவனையும் அவளையும் ஏற்றிப்போக வந்தது. அவள் உருட்டி வந்த பெட்டியை அவன் தூக்கி வாகனத்தில் ஏற்றினான்.

நாளை நீ விரும்பியபடி ஊருக்குப் போகலாம். பிறகு நானுன்னைத் திருமணம் செய்து கொள்வேன். நீ விரும்பியடி நானும் நீயும் வாழுவோம் என்ற அவனது வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவளது காதுக்குள் மீள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லாளமன்னன் , பண்டாரவன்னியன், சங்கிலியன் பற்றி நேற்றைய இரவு அவன் சொன்ன கதைகளை இன்று நினைத்துப் பார்த்தாள். அந்த மன்னர்கள் எல்லோரும் அவன் வடிவாய் அவளுக்கு முன் தோன்றித் தோன்றி மறைந்தார்கள்.

மதுஅருந்தினால் மதிமயங்குமென்றுதான் அவள் அறிந்திருந்தாள். ஆனால் அவன் அதற்கெல்லாம் விதிவிலக்கானவன் என்பதனை அன்று அவனது செயற்பாட்டில் அறிந்து கொண்டாள். அவளால் செய்து முடிக்க வேண்டிய காரியத்தையே அவளுக்கு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டிருந்தான்.

அது பிரதான ரயில் நிலையம். காலிசெல்லும் ரயிலில் அவளை ஏற்றி சில்லுப்பூட்டிய பெட்டியையும் அவளோடு சேர்த்து ஏற்றிவிட்டு அவன் இறங்கினான். ரயில் புறப்பட்டது. அவன் சொன்னபடி சொன்ன இடம் வரை விடயம் பிசகாமல் அவள் பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் இறங்க வேண்டிய இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. எவ்வித படபடப்புமின்றி கவனமாக அவனால் சொல்லிக் கொடுக்கப்பட்ட காரியத்தைச் செய்துவிட்டு இறங்குவதற்காகக் காத்து நின்றாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் அவனிடம் திரும்பிச் செல்லும் ரயிலில் ஏறினால் அவளது காதலும் அவளது காதலனும் அவளும் காதலை வென்றுவிடுவார்கள்.

ரயில் தரித்தது. அவள் அவன் சொன்னபடி சொன்னதைச் செய்துவிட்டு இறங்கி அவனிடம் போகும் ரயிலில் ஏறக்காத்திருந்தாள். காலை அவசரம் சன நெரிசல் அவள் எதிர்பார்த்த சத்தம் கேட்கவில்லை. சிலவேளை நேரம் தப்பலாம் அல்லது இடம்மாறலாம் என நினைத்தபடி அடுத்த பயணத்துக்குக் காத்திருந்தவளைக் காக்கிச் சட்டைகள் சுற்றிக் கொண்டது. பெரிய நாய்களும் காக்கிச் சட்டைகளும் அவளை விலங்கிட்ட அந்தக்கணங்களை அவளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அனுராதபுரம் தாண்டி வவுனியா போகும் ரயிலில் போகலாம் என்று சொன்னவனையும் அவள் முன் கொண்டு வந்து இருவரையும் விலங்கிட்டு ஏற்றிக் கொண்டு போனார்கள். காதல் கண்ணை மறைத்ததா அவளது கவனப்பிழை காரியத்தைக் கெடுத்ததா ? எதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் அறியாத வதைகள் அவளை இரவுபகல் தெரியாமல் வதைத்தது. சித்திரவதை என்பதனைச் செவிகளால் மட்டுமே கேட்டிருந்தவள் அந்தக் கொடும் வதைகளையெல்லாம் அனுபவித்தாள். மாதங்கள் பல அவளுக்கு நினைவில் நிற்கவில்லை. ஒட்டிய அவள் வயிறு உப்பி உயிரின் ஓசை அவள் உணர்வைத் தட்டியெழுப்பியது. காற்றோடு கரைந்து போனாலும் அவன் காதலைச் சுமப்பதில் இன்பமென்று ஒருகாலம் நினைத்தவளுக்கு அவன் மீது எரிச்சலாயிருந்தது.
சித்திரவதைக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுச் சிறையொன்றுக்கு மாற்றப்பட்டாள். அவளது வயிற்றுக்குள் வளர்ந்த உயிர் உருவமாகிக் குழந்தையாய் சிறைக்கம்பிகளின் பின்னால் கண்விழித்தது. அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டாள். சிறையின் அரியண்டங்களோடு அவளது குழந்தை அவளது காதலின் மீதம் அவளோடு 2வயதாகும் வரை வாழ்ந்தது.

தனது குழந்தையின் எதிர்காலம் பற்றியே அவளுக்குப் பெரும் பயம். சிறையில் வளரும் தனது குழந்தையை வெளியில் யாராவது வளர்க்க முன்வரமாட்டார்களா என ஏங்கினாள். அவளது ஏக்கம் வேண்டுதல் நிறைவேற அவளது உறவுகள் அவளது குழந்தையைச் சிறையிலிருந்து வெளியில் கொண்டு போக முன்வந்து அவளது குழந்தையைக் கொண்டு போய்விட்டார்கள். 5வயது வரையும் அம்மாவுக்கு மகனைக் கொண்டு வந்து காட்டியவர்கள் நிரந்தரமாக அவளது குழந்தையைக் கொண்டு போய்விட்டார்கள்.

ஒவ்வொரு வயதிலும் தனது குழந்தை எப்படியிருப்பான் எப்படியான வளர்ச்சியில் இருப்பான் என்ற கனவுகளோடு காலங்கள் போகத் தொடங்கியது. அவளது காதலனைச் சந்திக்க வாரம் ஒரு ஞாயிற்றுக் கிழமை அனுமதி கிடைத்தது. இருவரும் சந்திக்கிற நேரமெல்லாம் ஆளையாள் குற்றம் சாட்டியே பிரிவது வளமை.

எப்படியும் வெளியில் போய்விடலாம் குழந்தையுடன் சேர்ந்து வாழலாம் என்ற கனவில் இடிவிழுந்து இருவருக்கும் ஆயள்தண்டனை வழங்கப்பட்டது. இருந்த நம்பிக்கையும் போய்விட்ட துயரில் அவள் அவனை முற்று முழுதாக வெறுத்தாள்.

தனது கனவுகளையும் இலட்சியத்தையும் ஏமாற்றி அழித்த பாவம் அவனுக்குரியதாக்கி அவனைச் சந்திப்பதையும் முழுதாக நிறுத்திக் கொண்டாள். காதல் பேசிய அவனது கண்களில் துரோகம் நிரம்பிய விரோதமாகவே தெரிந்தான் அவளுக்கு.

எப்படியோ வாழலாம் என்ற கனவோடு வடக்கிலிருந்து ரயிலேறியவள். தெற்கின் சிறையில் வாழ்வும் போய் வயிற்றில் சுமந்த குழந்தையையும் பிரிந்து அப்படியொரு அம்மாவின் குழந்தைதான் தானென்றதைக் கூட அறியாது மறந்து போன குழந்தையின் நினைவுகளையே தனது கனவாக்கிக் கொண்டு நடைபிணமானாள்.

தண்டனை பெற்ற கைதிகள் வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் வாகனத்தில் இவளும் ஏற்றப்படுவாள். அதிகாரிகளின் ஏவலுக்கு எல்லாக் கடினங்களையும் மாய்ந்து மாய்ந்து செய்து தொலைய வேண்டிய தனது விதியை நினைத்து அழுவாள். உடல் வலிக்க செய்கிற வேலைக்கு உகந்த உணவும் கிடைக்காது. உடல் அசந்து ஓய்வாய் உறங்கவும் முடியாத கடந்தகாலத்துயரம் சிறையோடு வாழ்வே இனி முடிவென்றாயிற்று.

இலங்கையில் இப்படியொரு உலகம் இருக்கென்பதனை இலங்கை ஜனாதிபதிகூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய கொடுமைகளும் அசிங்கங்களும் அந்தச் சிறைச்சாலைக்குள் ஒளிந்திருந்தது. போதைவஸ்து , விபச்சாரம் , கொள்ளை , கொலை , களவென எல்லாக் குற்றங்களுக்கும் தண்டனை பெற்ற சிங்களக் கைதிகள் நடுவில் இவளும் இவள் போன்ற தமிழ் அரசியல் கைதிகளும் படுகிற வலிகளையும் தாங்கியபடி அவள்.....

2012ம் ஆண்டு புதுவருடப் பிறப்பில் ஆயள்தண்டனை பெற்ற சில கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்போவதாகவும் அதற்கானபடிவங்;களை நிரப்புமாறும் சொன்னார்கள். இப்படி எத்தனையோ கடிதங்கள் மன்னிப்பு மன்றாட்ட மனுக்கள் இந்தப் 19வருடத்தில் அனுப்பியிருப்பாள். இதுவரையில் ஒரு ஜனாதிபதியும் அவளுக்குக் கருணை காட்டவுமில்லை கண்திறக்கவுமில்லை. இம்முறை இந்த நாடகத்தில் அவள் பங்கேற்பதில்லையென்றே ஒதுங்கியிருந்தாள். ஆனால் அவளோடிருந்தவர்கள் சிலர் அவளது பெயரையும் இணைத்து ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளார்கள்.

புதுவருடத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் யாரோ கொடுத்த உதவியில் அவர்களுக்கெல்லாம் புரியாணிசாப்பாடு கிடைத்திருந்தது. புழு அரிசியும் வேகாத சூத்தைக்கத்தரிக்காய் வெண்டக்காய் அவியல் சாப்பிட்ட வாய்க்கு புரியாணி சோறு தேவாமிர்தம் போலிருந்தது. அந்தச் சோற்றில் கைவைக்க ஒருத்தி சொன்னாள் அக்காவுக்கும் பொதுமன்னிப்புக் கிடைக்கும்.
நீண்டகாலம் கட்டி வைத்த அழுகை அந்தக் கணத்தில் வந்து குதித்தது. புதுவருடத்தில் கிடைத்த புரியாணிச் சோற்றின் முன்னிருந்து கதறியழுதாள். இந்தச் சிறையை ஜனாதிபதியை வந்து பாக்கச் சொல்லி மனுப்போடுங்கோ எனக்கத்தினாள். ஆசையோடு எடுக்கப்பட்ட புதுவருடப் புரியாணிச் சோறு சுவையிழந்து போக அவளது கண்ணீர் போல எல்லாக்கண்களும் கண்ணீரால் நிறைந்தது......

01.01.2012

Saturday, December 31, 2011

எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா?

(இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.)

பன்னிரண்டு மணி
பட்டாடை கட்டி வானம்
விழித்துக் கொள்கிறது.

கருவானக் கதவுடைத்து
கனவு கலைந்து வான வெளி
கண்விழித்துக் கொள்கிறது.

வண்ண வண்ண ஒளிக்கலவை...
அழகின் இருப்பிடமெல்லாம்
அகன்ற வானில்
அள்ளிக் கொட்டியிருக்க
வீதிகளில் புகைமூடி
வர்ண ஒளிக்கீற்று
வடிவுதான்....

பனித்துளி சொட்டப்
பகலைத் தெளித்தது போல் பொழுது
பட்டாசுகளால் பல்வர்ணம்....
புத்தாண்டுப் பிறப்பு
பகற் சேமிப்பெல்லாவற்றையும்
பட்டாசாய் வெடித்து மகிழ்கிறது
பக்கத்து வீடுகள்.....

எனக்கு ?

புத்தாண்டு இன்று
என் மண்ணில்
பிணங்களின் மேலால் விடிகிறது.
முப்பதாண்டுச் சோகம்
முடியாமல் விடியாமல்
என் மக்களுக்குத்
துப்பாக்கிச் சத்தமும்
எறிகணைக் கூவலுமே
இருள் அகற்றிப் - போர்
முகம் காட்டுகிறது.

என் போராளித் தோழர்களின்
துப்பாக்கி முனைகள்
தூங்காமல்.....
என் தோழர்களின்
விழிகளைப் போல் தவமியற்றுகின்றன.
தமிழர் விதி மாற்றிவிடும்
கனவுடனே காவலரண்
கம்பி வேலிகளுக்கால்
தடையறுத்துச் சமர்க்களத்தில்
சத்தமின்றிப் போகின்றனர்.

எங்களுக்கும் புத்தாண்டு
இப்படியாய் விடியாதா ?
பொன்னள்ளிச் சொரிந்து
வானப் பண்ணள்ளி
வெற்றிப் பரணி பாட
எங்களுக்கும் புத்தாண்டு
இப்படியாய் விடியாதா ?

01.01.09

Monday, December 19, 2011

முள்ளிவாய்க்கால் முடிவு.


அவள் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அவன் வரும்வரை அது எத்தனையாண்டுகள் ஆனாலும் அவள் காத்திருப்பாள். அவன் விடுதலையாகி வெளிவரும் நேரம் ஒரு இலட்சியத்திருமணம் நிகழும் என்றுதான் பலர் சொன்னார்கள். இரண்டு இலக்கிய கர்த்தாக்களின் இணைவு இரண்டு மண்ணை நேசிக்கிற இதயங்களின் இணைவு ஒரு வரலாற்றை எழுதுமென்று அந்தக்காதலுக்குப் பலர் கெளரவ தூதர்களாக இருந்தது பெரிய கதை.

அந்தக்காதலன் புலியில்லை. புலிகளை நேசித்தவன். புலிகள் அமைப்பின் ஒரு பிரிவுக்கான முகவராக பணியாற்றியவன். 10ஆண்டுகள் முன் கைதாகி சிறையில் அடைபட்டவன்.

அந்தக்காதலி ஒரு பெண்புலி. 17வயதில் களம் சென்று பயிற்சியெடுத்துக் களங்களில் காவலிருந்து ஒரு காவியம் படைத்த சமரில் காயமுற்று ஊனமடைந்தவள். காவலரணில் நின்றபடி கவிதைகள் எழுதியவள்.

ஊனமுற்ற பின் களத்தைவிட்டு அரசியல்துறையில் இணைக்கப்பட்டாள். அரசியலில் இருந்தவளின் எழுத்தாற்றலை இனங்கண்டு அவளது எழுத்துக்களை ஊக்குவித்தார்கள். அவள் எழுத்துகள் வானொலி பத்திரிகை வரை வியாபிக்கத் தொடங்கியது. போராளிகள் ஒயாத இயங்கு சக்திகள் என்பதற்கு இலக்கணமாய் அவள் இயக்கம் ஒரு பிரிமிப்புத்தான் வெளியாட்களுக்கு.

அது சமாதானக்கதவுகள் திறபட்டதாய் நம்பப்பட்ட யுத்த நிறுத்தகாலம். சிறைகளில் உள்ளவர்களும் தொலைபேசும் வசதிகள் முதல் விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை வசதிகளையும் வன்னிமண் பெற்றிருந்த காலம்.

சிறையில் இருந்தவர்களுடன் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கம்பிகளின் பின் கண்ணீரோடு இருந்தவர்களுக்கு மனிதர்களோடு பேசக்கிடைத்த தருணங்களை அவர்கள் வரமாகவே எண்ணினர். அத்தகைய ஒரு அழைப்பில் தான் அவனுடன் பேசக்கிடைத்தது அவளுக்கு. ஆரம்பம் அவன் எழுதிய எழுத்துக்களை அவள் தட்டச்சுச்செய்து வெளியீடுகளுக்கு அனுப்பினாள். தனது நிகழ்ச்சிகளில் சேர்த்தாள். அவன் அக்கா என்றும் இவள் தம்பியென்றும் உருவானது உறவு.

நாட்கள் போகப்போக அக்கா தம்பியுறவு அன்னியமாகியது. ஒருநாள் கதையோடு கதையாக அவன் அவளைக் காதலிப்பதாகத் தனது காதலை தொலைபேசியில் வெளிப்படுத்தினான். அதுவரை காதல் கல்யாணம் எவ்வித சிந்தனையும் அற்றிருந்தவள் திடுக்குற்றுப் போனாள்.

அடுத்த நாள் பொறுப்பாளர் அக்காவிடம் தனியே கதைக்க வேண்டியிருப்பதாய் சந்திப்பு நேரம் கேட்டாள். ஏதோ கொடுக்கப்பட்ட பணிபற்றிக் கதைக்கப் போகிறாள் என்றுதான் பொறுப்பாளரும் நினைத்தார்.

அக்கா…..,அவன் என்னைக் காதலிக்கிறானாம்…..!
பொறுப்பாளருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
என்னடியாத்தை விளையாட்டுக்கும் அளவில்லையோ ?
அக்கா சிரிக்காதையுங்கோ….
உண்மையாத்தான் சொல்றன்……
என்னட்டை முடிவு கேட்டிருக்கிறார்….
உங்கடை சம்மதம் வேணுமெனக்கு….
சரி அவனுக்கு உன்னில காதல்…உனக்கு…? நானும் காதலிக்கிறேன்…..
எடுத்த எடுப்பிலேயே அவள் சொன்னாள்.
இதப்பாரம்மா….,அவன் சிறையில….
நீ வெளியில….
மற்றது உனக்கும் அவனைத் தெரியாது…அவனுக்கும் உன்னைத் தெரியாது…..இது சினிமாமாதிரியில்லையா…?
இது சாத்தியமாகுமோண்டு யோசிச்சீங்களோ ?
நேரை பாத்து விரும்பிச் செய்த கலியாணங்களே எத்தினை தமிழீழ நீதிமன்றத்துக்கு வந்த கதையள் உங்களுக்குத் தெரியுமெல்லோ….?

அவள் பொறுப்பாளரின் விளக்கம் விபரம் எதையும் கேட்கவில்லை. விடாப்பிடியாக நின்றாள். தங்கள் காதல் புனிதம் , தூய்மை , தெய்வீகம் , காவியம் என்றெல்லாம் கனக்க விளக்கம் சொன்னாள்.

அந்த முறுகலுக்குப் பின்னர் அந்தப்பிரிவை விட்டு அவள் வேறு பிரிவுக்கு மாறிப்போனாள். காரணம் முகம் தெரியாத குரல்கள் மட்டும் அறிமுகமான காதலைப் பிரிக்க நின்ற பாவம் பொறுப்பாளர் மேல் விழுந்தது. ஆனால் அவளது இலட்சியக்காதலுக்கு பலரது ஆதரவு கிடைத்து அவளும் சிறையில் இருந்த அவனும் காதலர்கள் ஆனார்கள்.

சமாதானப்பறவை இரத்தத்தில் சிதைய யுத்தம் ஆரம்பமாகி பல்லாயிரம் உயிர்கள் இழப்பு காணமற்போனவை கடைசியில் சிதைக்கப்பட்டவையென விடுதலைப்போராட்டத்தின் முடிவு மர்மமாகியது.

2009மேமாதம் அவளும் ஆயிரமாயிரம் பேருடன் சரணடைந்தாள். ஆயிரமாயிரம் துயரங்கள் சுமந்து அவளுக்கும் புனர்வாழ்வு கிடைத்துச் சிறையிருந்து 2010 விடுதலையாகி வெளியில் வந்தாள்.

இலட்சியக்காதலனின் தொடர்பைத் தேடிப்பெற்றுக் கொண்டு அவனுடன் தொடர்பு கொண்டாள். காவியக்காதல்கள் பற்றி புராண இதிகாசங்கள் தோற்றுப் போயிருக்குமென்றுதான் அவளது காதலுக்குத் துணைநின்ற பலர் நினைத்தார்கள்.

மீண்டும் புதுப்பிக்கப்பட்ட காதல் என்றென்றும் வாழும் சாகாதென்ற சத்தியத்தோடு உறவு புதுப்பிக்கப்பட்டது. அவன் வரும்வரை அவள் அவனுக்காகக் காத்திருப்பதாக மீண்டும் சபதமெடுத்தாள். அவனும் அப்படித்தான் அவளுக்குச் சொன்னான்.

2011வருட ஆரம்பம். புதுப்பிக்கப்பட்ட உறவு மெல்ல மெல்லக் கருகுவது போலிருந்தது அவர்களது காதலுக்குப் பச்சைக் கொடியோடு நின்ற நண்பர்களுக்கு.

ஒருநாள் ஒரு வெளிநாட்டுத் தோழி அவளுடன் பேசிய பொழுது அவர்களது காதல்பற்றிக் கேட்டாள் தோழி. அதைப்பற்றி அவள் அக்கறையெடுக்கவில்லை…..

என்னை வெளிநாடு எடுக்க முடியுமெண்டா உதவி செய்தால் நல்லம்….உதவ முடியுமா ? எனக்கேட்டாள்.

தோழிக்குப் பெரிய குழப்பமாகிவிட்டது. இலட்சியக்காதல் இதிகாசக்காதலென்ற தத்துவங்களையெல்லாம் நம்பியிருந்தவள். பச்சைக் கொடி மட்டுமில்லை அவர்களது திருமணத்திற்கு கட்டாயம் எங்கிருந்தாலும் போக வேண்டுமென்றிருந்தவளுக்கு ஆச்சரியம். அவள் சொன்ன காரணங்களுக்கான தனது தரப்புப்பதில்களைத் தோழி சொன்னாள். எதுவும் எடுபடவில்லை.

தகவல் பலமட்டங்களுக்குப் பரிமாறப்பட்டு இலட்சியக்காதலை வெல்ல வைக்கும் பிரயத்தனம் பல பக்கத்தால் நிகழ்ந்தது. எல்லாம் தோற்று கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தையை சிறையில் இருந்த அவளது காதலனுடன் ஒருவர் நிகழ்த்தினார். முடிவு சுபமாகுமென நம்பிய யாவரின் நம்பிக்கையும் தோல்வியானது.

அவளுக்குப் புதிய வெளிநாட்டு உறவுகள் உதவிகளாகக் கிடைத்தது. அவர்கள் பற்றி அவளது பழைய நட்புகளுக்குப் பெருமையாய்ச் சொன்னாள். ஆபத்தில் அவளுக்காக உதவியவர்களையெல்லாம் அவள் மறந்தாள் போலிருந்தது நிலமை. உதவுகிறவர்கள் அவளை வெளிநாடு எடுப்பார்கள் அவளுக்கான புதிய நல்வாழ்வைக் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவள் கனவு காணுகிறாள் என்பதனை மட்டும் புரிய முடிந்தது.

2011 இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் எல்லாம் அந்தச் செய்தி வந்தது. அது இலட்சியக்காதலனின் விடுதலைச் செய்தி. அந்தச் செய்தியை அவளது நட்புகள் பார்த்த போது உண்மையான காதல் தோற்காதென்று நம்பிக்கையை மீண்டும் வளர்த்தார்கள்.

2011வருட இறுதியாகிவிட்டது. இலட்சியக்காதலன் வெளியில் வந்து 5மாதங்கள் ஓடிவிட்டது. காதல் புதுப்பிக்கப்படவுமில்லை முடிவு சுபமாகவுமில்லை. மர்மமானது அந்தக்காதலர்களின் காதல்.

அண்மையில் அந்தக்காதலனின் ஊரவன் ஒருவன் சொன்னான். அவனுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக. பெண்யாரெனத் தோழியொருத்தி கேட்டதற்கு அவன் சொன்ன பெயர் அவன் வரும்வரை காத்திருப்பேன் என்று சொல்லிக் காத்திருந்த காதலியின் பெயரில்லை.

அப்ப அவேடை காதலின்ரை முடிவு முள்ளிவாய்க்கால் முடிவுதானென்றாள் தோழி. அந்த நண்பனுக்குப் புரியவில்லை.
என்னது ? முள்ளிவாய்க்கால் முடிவு ? முள்ளிவாய்க்காலில என்ன நடந்ததெண்டது ஆருக்கேன் தெரியுமோ ? இல்ல….அது அதுதான் இந்தக்காதலின்ரை முடிவு.

நான் கொஞ்சம் ரியூப்லைட் கொஞ்சம் விளக்கமாச் சொன்னால்….? என அவன் இழுத்தான். எட கேணைப்பயலே முள்ளிவாய்க்காலில அப்பிடி நடந்தது இப்பிடி நடந்தணெ்டு ஆளாளுக்கு அலசுறமெல்லோ ஆருக்காவது உண்மை தெரியுமோ ? தெரியாதெல்லோ ? முள்ளிவாய்க்கால் முடிவோடை சம்பந்தப்பட்டவையைத் தவிர மற்ற ஒரு குருவிக்கும் ஒரு நாசமும் தெரியாது. அதுமாதிரித்தான் நாங்கள் நம்பியிருந்த இந்த இலட்சிய காதல் சோடியைத் தவிர மற்ற ஒருதருக்கும் இலட்சியக்காதல் ஏன் தோற்றதெண்டது தெரியாது. அதுதான் சொன்னன் முள்ளிவாய்க்கால் முடிவு.

19.12.2011