Tuesday, July 30, 2019

என்றும் போல....

என்றும் போல....
(13வருடங்களின் முன்னர் ஒரு கரும்புலி வீரனின் நினைவாய் எழுதிய கவிதை)

சாந்தி நேசக்கரம்

----------------------------------
நிலவுக் கதிர்களை
விழுங்கிச் செல்கிறது
மழைக்கால வானம்.

மாவீரம் சொன்னபடி
மழைத்துளிகள்
நிலம் நனைக்க
கருவறை வாசம் நினைவேற்று
நித்திரை அறுகிறது.....

ஒளிக்காட்சியொரு பொழுதில்
உயிர் அதிர்த்த ஞாபகத்தில்
விழிக்காட்டிக்குள்ளிருந்து
துளித்துளியாய் சொட்டுக்கள்.....

சென்று வருவதாய்
சொல்லிப் போனவனின்
கடைசிக் கடிதத்தின்
சொற்கள் கசங்சி மங்கலாகி
பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப்
பாடமான பின்னாலும்....
அவனைக் காணும் அவசரம்
என்றும் போல.....

இரவுக் கரி திரட்டி
ஒளியின் விழி தன்
உயிரில் திரிமூட்டி
ஊரதிர உயிர்க்காற்று
பேரதிர்வாய் நிறைகிறது.

சொல்லாமல் கொள்ளாமல்
சென்றவனின் சிரித்த முகம்
கொல்லாமல் கொல்கிறது.

'மீளவொரு பிறப்பில்
உன் கடன் முடிக்க வருவேன்"
நம்பிக்கைகள் இன்னும்
கரையாமல்....

21.11.06
சாந்தி நேசக்கரம்

Sunday, July 28, 2019

பார்த்திபனின் வரவு - பாகம் 2

16. 07. 1996 காலை...,
எனது அறையில் மேலும் இருவர் குழந்தைகளைப் பெற்றவர்கள் இருந்தார்கள்.  அவர்கள் அருகில் தொட்டில்களில் குழந்தைகளை வளர்த்தியிருந்தார்கள். எனக்கருகில் தொட்டில் இல்லை.

ஒன்பது மணிக்கு பிறகு மருத்துவர்கள் பரிசோதனைக்கு வந்தார்கள். இரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை யாவும் எழுதினார்கள். 

வலிக்கிறதா?  வயிற்றை அழுத்திய மருத்துவர் கேட்டார். 
இல்லை...,
ஒற்றைக்கையைத் தந்து கட்டிலில் இருந்து நிலத்தில் நிற்கச் சொன்னார். எழுந்து நின்றது மட்டுமே நினைவில் தெரியும். 

அதன் பின்னர் 2மணிநேரம் கழித்து விழித்த போது வேறொரு அறையில் கிடந்தேன்.  துளித்துளியாய் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. அருகில்  இருந்த இயந்திரத்தில் இருந்து எனது சுவாசத்துடிப்பு இரத்த அழுத்தம் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது.

தாதியொருத்தி அருகில் வந்தாள். 
இப்ப எப்படி இருக்கு?
தண்ணி வேணும்... கேட்டேன்.

ஏறிக்கொண்டிருந்த மருந்து முடியும் வரை தண்ணீர் தரமாட்டோமென்றாள். துவாயொன்னை நனைத்து முகத்தைத் துடைத்து விட்டு தலையைத் தடவிவிட்டு கொஞ்சம் பொறுத்திரு என்றாள்.

மருந்து ஏறி முடிய மதியச்சாப்பாட்டு நேரமாகிவிட்டது.  கட்டிலோடு உருட்டிப்போய் எனக்கான அறையில் விடப்பட்டேன்.  மருந்து கழற்றப்பட்ட பிறகும் மணிக்கட்டில் ஏற்றப்பட்டிருந்த உரசி கழற்றப்படவில்லை.  நெருப்பு பட்டது போல கை வலித்துக் கொண்டிருந்தது.

எனது அறைக்கு கொண்டு வந்த பிறகும் என் பார்த்திக்குட்டியை கொண்டு வர அது தரவில்லை. மற்றவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை தூக்கி வைத்திருந்தார்கள்.

அவசர அழைப்புமணியை அழுத்தினேன்.  சற்று நேரத்தில் தாதியர்கள் வந்தார்கள்.  ஏன் அழைத்தாயெனக் கேட்டார்கள். 

எனது குழந்தையை ஏன் கொண்டு வரவில்லை? 

உங்கள் மகன் குழந்தைகள் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலநாட்கள் அங்கே அவர் கண்காணிக்கப்படுவார்.  நாளைக்கு பிறகு தான் நீங்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பார்கள். நீங்கள் தனியாக குளியலறை போக வேண்டாம்.  எங்களை அழையுங்கள்.  சொன்னவர்கள் போய்விட்டார்கள்.

தந்த சாப்பாடு மறந்து போனது.  கண்ணீர் தான் வந்தது.  சாப்பாட்டை விலத்திவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். 

என் குழந்தைக்கு என்ன நடந்தது? குழந்தைகள் கிளினிக்கில் ஏன் வைத்திருக்கிறார்கள் ?

மனம் தன்பாட்டில் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கியது.  வீட்டில் சிகரெட் வாடை வந்தாலே கதவுகளைத் திறந்து விட்டு அந்தப்புகை கருவறையில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வரக்கூடாதென்ற என் கவனம்.... வெளியே போகும் நேரத்தில் சிகரெட் பிடிக்கும் ஆட்களின் பகுதியை தவிர்த்து எத்தனை கவனமெல்லாம் பார்த்தேன்...?

வீட்டுக்கு தொலைபேசியெடுத்தேன். மறுமுனையில் கலோ... என்ற குரல் கேட்டதும் அழுகை தான் வந்தது. பிள்ளையை நான் பாக்க தரேல்ல. குழந்தைகள் கிளினிக்கில் வைச்சிருக்கினமாம்.

ஏதாவது வருத்தங்கள் இருக்கோண்டு பாக்கவாயிருக்கும்.  நான் பின்னேரம் வாறன்.  இன்னும் ஆட்களுக்கு பிள்ளை பிறந்தது சொல்லி முடியேல்ல. சரி நான் வாறன் வந்து  கதைக்கிறேன். தொலைபேசி தொடர்பு அறுபடுகிறது.

மனம் அமைதி இல்லாமல் போனது. அப்படியே உறங்கிப் போயிருந்தேன். ஆட்களின் சத்தம் கேட்டு விழித்த போது அங்கிருந்த தாயர்களின் உறவினர்கள் நின்றார்கள்.   

பின்னேரப் பரிசோதனை நேரம்.  இரத்த அழுத்தம் காச்சல் பரிசோதிககப்பட்டுக் கொண்டிருக்க  அறைக்கதவைத் தட்டிக் கொண்டு வந்த நபரைக் கண்டதும் குழந்தை பற்றிய விபரம் கிடைக்குமென்ற நம்பிக்கை வந்தது.

இரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவே இருப்பதாகச் சொன்னார்கள்.  இன்னும் ஒருமணிநேரம் கழித்து மருந்து மீண்டும் ஏற்றப்படுமென்றாள் தாதி.

என் குழந்தையைக் காட்டினால் நான் உயிர்த்து விடுவேன் எனக்கத்த வேண்டும் போலிருந்தது.

அதொரு பிரச்சினையும் இல்லையாம் பிள்ளை மஞ்சள் நிறமாயிருக்கிறானாம்.  அதுதான் கண்ணாடிப்பெட்டியில வைச்சிருக்கிறாங்களாம்.  மூண்டு கிழமை செல்லுமாம் தர.

என் குழந்தை என் கையை விட்டுப் போனதான உணர்வு. அழுகை அழுகை அதுதவிர வேறெதுவும் தெரியவில்லை.

நான் பிள்ளையைப் பாக்க வேணும்.  கேளுங்கோ. 
நீ கேக்கிறமாதிரி காட்டமாட்டாங்கள் பேசாமல் இரு. அதற்கு மேல் என் துயரைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லையென்பது புரிந்தது.

நான் பிள்ளை பிறந்ததுக்கு பெடியளுக்கு பாட்டி வைக்க வேணும்.  எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறாங்கள். பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க அந்தரிக்கும்  எனது தவிப்பு புரிந்து கொள்ளப்படவில்லை. அதற்கு மேல் எதுவும் பேசும் மனநிலையும் எனக்கில்லை. எனக்குள் எல்லாத் துயரையும் விழுங்கிக் கொள்ளென்றது விதி.

நண்பர்களுக்கு குழந்தை பிறந்த மகிழ்வைக் கொண்டாட போய்விட்டார்.  மீண்டும் மருத்துவமனையில் நான்.

குழந்தைக்குப் பால் கொடுக்காத வலி உயிரைத்தின்றது. மார்பு கட்டிப் போனது. வுலியைக் குறைக்க மெசினில் பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் பார்த்திபன் என எழுதி வைக்கச் சொன்னார்கள். குழந்தைகள் கிளினிக்கிற்கு பாலை அனுப்புவோமென்றார்கள். எனக்காக ஒரு மெசின் தரப்பட்டது. பால்கட்டி வலியெடுக்கும் நேரம் பாலை மெசினில் எடுத்து கொடுக்க வேண்டும்.

பால்கொடுக்காமல் விட்டால் எவ்வளவு வலியென்பதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இதைவிடக் குழந்தைப் பேற்று வலியைக் கூட தாங்கிவிடலாம் போலிருந்தது. அந்தளவு வலி. வலிகளால் மட்டுமே என் வாழ்வு ஏனோ சபிக்கப்பட்டிருந்தது.

17. 07. 1996 காலை பரிசோதனைக்கு மருத்துவர்கள் வந்தார்கள். என் குழந்தையைப் பார்க்க வேண்டும் என கேட்டேன்.  மறுநாள் குழந்தையைப் பார்க்க அழைத்துப் போவதாக மருத்துவர் சொன்ன பதில் பாரமொன்று இறங்கிய அமைதியைத் தந்தது.

18.07.1996. காலை பத்துமணிக்கு தாதியொருவர் குழந்தையைப் பார்க்க அழைத்துப் போக வந்திருந்தார். கட்டிலால் இறங்க கைதந்தாள் வந்திருந்த தாதி. எழுந்து நிற்க தலைசுற்றியது.

நடக்க ஏலுமோ ? கேட்டவளுக்கு ஓமென்றேன். அறைக்கதவு வரை வந்ததன் பிறகு ஞாபகம் இல்லை. சில நிமிடங்களில் கண்விழித்தால் கட்டிலில் கிடந்தேன். தாழ் இரத்த அழுத்தம் எனச் சொன்னார்கள். மீண்டும் சேலைன் ஏறத்தொடங்கியது.

அந்த 3நாட்களும் வந்த மருத்துவமனைச் சாப்பாட்டை சரியாகச் சாப்பிடவில்லை. கட்டாயமாகச் சோறு சாப்பிட்டுப் பழகிய என்னால் உப்புச்சுவை குறைந்த உறைப்பே இல்லாத மருத்துவமனைச் சாப்பாட்டைச் சாப்பிட முடியவில்லை.

குழந்தையைப் பார்க்க பின்னேரம் அழைத்துப் போக வந்திருந்த மருத்துவத்தாதி சக்கரநாற்காலியொன்றைக் கொண்டு வந்து நிறுத்தினாள். அதிலே என்னை இருக்க வைத்து உருட்டிச் சென்றாள் 35ம் இலக்க கட்டடத்திற்கு. அங்கே அனுமதியின்றி எல்லோரும் போக முடியாதபடி கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினாள் கதவு திறபட்டது.

உள்ளே போனதும் ஒரு இடத்தைக் காட்டிச் சொன்னாள். கைளைக் கழுவிவிட்டு அந்தப் பகுதியில் போட வேண்டிய அங்கியொன்றும் தொப்பியும் தந்தாள். இனி எப்பொது வந்தாலும் இதுபோலவே கிருமிநீக்கியில் கைகழுவி அந்தப்பகுதிக்கான தண்ணீர்ப்பச்சை அங்கியும் வெள்ளைநெற் தொப்பியும் அணிந்து தான் உள்ளே போக வேண்டுமெனச் சொன்னாள்.

பெற்றோர் தவிர வேறுயாரையும் உள்ளே கூட்டிவரக் கூடாதெனவும் கூறப்பட்டது. என்னைக் கூட்டிவந்த தாதி குழந்தையைப் பார்க்கும் நேரம் முடியும் போது தங்களுக்கு தொலைபேசியில் அறிவிக்கச் சொன்னாள். மீண்டும் ஒருவர் என்னை அழைத்துப் போக ஒருவர் வருவார் எனச் சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.

அவர்கள் சொன்ன யாவற்றையும் செய்து உள்ளே கூட்டிச் செல்லப்பட்டேன். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் குழந்தைகள். மாதங்கள் முழுமையடையாது பிறந்த குழந்தைகளுக்கு பெரிய மெசின்களில் உணவு உயிர்க்காற்று யாவும் போய்க் கொண்டிருந்தது. பார்க்கவே பயமாக இருந்தது.

அவசர சிகிச்சைப் பிரிவுபோல மெசின்கள் கண்ணாடிப் பெட்டிகள் அவற்றுள் குழந்தைகள் பொம்மைகள் போலக் கிடந்தார்கள். கால்கள் நடுங்கத் தொடங்கியது. தொண்டை வரண்டு போனது. 4வுது கண்ணாடி அறையினுள் கண்ணாடிப் பெட்டிகளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர் பிறந்த திகதி நேரம் நிறை உயரம் தலைச்சுற்றளவு எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. ஏனது குழந்தையை அந்த அடையாளத்தைப் பார்த்துப் போனேன்.

என் குழந்தை ஒரு பொம்மை போலக் கிடந்தான். கண்ணை மூடி வெள்ளைத்துணி போன்ற அகலமான பஞ்சினால் பாதிமுகம் கட்டப்பட்டிருந்தது. வெறும் மேலில் கட்டப்பட்ட பம்பஸ் மட்டுமே அவனது ஆடையாக இருந்தது. வெள்ளை நிறத்தில் மின்குமிழ் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் கண்ணைப் பாதிக்காமல் இருக்க அந்த மின்குமிழ் போடப்பட்டிருப்பதாக அந்த அறைக்கு பொறுப்பாக நின்ற தாதி சொன்னாள். 5.30இற்கு பால் கொடுக்க வேண்டும் இன்னும் அரை மணித்தியாலத்தில் குழந்தையை வெளியில் தூக்கி வைத்திருக்க தருவதாகச் சொன்னார்கள். என் குழந்தையின் அருகில் எனக்கு ஒரு கதிரை தரப்பட்டது. அதில் இருந்து என் குழந்தையைப் பார்த்தேன்.

என் குழந்தைக்கு என்ன நடந்தது ? ஏன் இப்படி வைக்கப்பட்டுள்ளான் என்பதற்கான சரியாக விளக்கம் ஏதும் எனக்கு முழுமையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் குறைந்தது  மூன்று வாரங்கள் இப்படியே வைத்துத் தான் வீட்டுக்கு போக விடுவார்கள் எனச் சொல்லப்பட்டது. அது பற்றி மேலதிகமாக விசாரித்து விளங்கிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு மொழியாற்றலும் இல்லை.

என் பார்த்திக்குட்டி அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் குப்புற கால்களைக் குடக்கிக் கொண்டு படுத்திருந்தான். அப்படியே அவனைப் பார்க்க அழுகைதான் மேலிட்டது.

5.35 மணிக்கு பார்த்திக்குட்டி அழத் தொடங்கினான். அங்கிருந்த சில குழந்தைகள் மெல்ல மெல்ல அழத் தொடங்கினார்கள். அந்த அறையில் இருந்த 8கண்ணாடிப் பெட்டிகளில் இருந்த குழந்தைகளின் தாய்களும் தந்தையர்களும் வந்து நின்றார்கள்.

வுந்தவர்கள் அவரவர் தங்கள் குழந்தைகளின் கண்ணாடிப் பெட்டியில் மின்குமிழை நிறுத்தினார்கள். பிறகு கண்ணைக் கட்டியிருந்த பஞ்சுத்துணியைக் கழற்றிக் குழந்தைகளைக் கையில் எடுத்தார்கள். எனது குழந்தையை எப்படி வெளியில் தூக்குவதென எனக்குத் தெரியவில்லை. அங்கு நின்ற ஒரு பெண் எனக்கு உதவினாள்.

மெசினில் எடுக்கப்படும் தாய்ப்பாலை பாதுகாக்க இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தனது குழந்தைக்கான பாலையும் எனது குழந்தைக்கான பாலையும் எடுத்து வந்து சூடாக்கித் தந்தாள்.

முதல் முதலாக குழந்தைக்குத் தாய்ப்பாலை சூப்பிப் போத்தலில் ஊட்டினேன். பால் குழந்தைகள் குடித்து முடித்ததும் தோழில் போட்டு முதுகைத் தடவிக் கொடுத்தார்கள். மற்றவர்கள் செய்வது போல நானும் பாலைக் கொடுத்துவிட்டு தோழில் போட்டு என் குழந்தையை முதகில் தடவினேன்.

அருகில் இருந்த மேசையில் வைக்கப்பட்ட பம்பஸ் பெட்டியை நானும் எடுத்துக் குழந்தைக்கு பம்பஸ் மாற்றத் தொடங்கினேன். அவன் கால்களை உதறிக் கொண்டிருந்தான். என்னால் மாற்ற முடியாதிருந்தது. என் போராட்டத்தை அவதானித்த மருத்துவத்தாதி எனக்கு உதவினாள்.

பார்த்திக்குட்டியைக் கையில் ஏந்திக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் உலகத்திற்கு வெளிச்சமாய் வந்த என் குழந்தையின் கைவிரல்களை கன்னங்களை தலையை எல்லாம் வருடினேன். அந்தச் சின்னக் கண்ணால் என்னைப் பார்த்தான். அவனோடு கதைபேசினேன். அவன் விரைவில் என்னோடு வர வேண்டுமென்று அவனுக்குச் சொன்னேன்.

ஏழுமணிக்கு பார்வையாளர் நேரம் முடிகிறதென அறிவித்தார்கள். மீண்டும் குழந்தையை வாங்கி கண்ணைக் கட்டி மின்குமிழ் ஒளியில் கண்ணாடிப் பெட்டியினுள் குழந்தையைப் படுக்க வைத்தார்கள்.


Sunday, July 14, 2019

15.07.1996 பார்த்திபனின் வரவு பாகம் 1

15.07.1996 பார்த்திபனின் வரவு - பாகம் 1

12.07.1996 வெள்ளிக்கிழமை. காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தேன். வளமையைவிட வித்தியாசமாக வயிறு வலித்தது. கொஞ்சநேரம் வலி பிறகு ஏதுமில்லை. மதியத்திற்கு பிறகு என்னால் நிற்க இருக்க முடியாது விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. பின்னேரமாகியது. வலியில் மாற்றமில்லை.

என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்படி அழுதேன். ஏற்கனவே பலதடவைகள் மருத்துவமனை போய் வந்த அனுபவங்களைச் சொல்லி தாமதித்து போகலாம் என சொல்லப்பட்டது.

வெள்ளிக்கிழமை பின்னேரம் நண்பர்களோடு கூடி கிறிக்கெட் விளையாடும் அவசரம் மட்டுமே இருந்ததை அறிவேன். பின்னேரம் வெளிக்கிட்டால் இரவு டிஸ்கோ உலாத்தி வீடு வர விடியப்பறமாகும்.

அதவரை என்னால் தாக்குப்பிடிப்பேனா என்பது சந்தேகமாக இருந்தது. என்னை மருத்துவமனையில் விட்டுவிட்டு எங்கென்றாலும் போகுமாறு சொன்னேன். கடைசியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

பரிசோதித்த மருத்துவர் மறித்துவிட்டார். நாளை அல்லது மறுநாள் குழந்தை பிறக்கும் என தெரிவித்தார். ஏற்கனவே எனக்கான உடுப்புகள் ஒரு பையில் தயாராக வைத்திருந்தேன். அதனை வரும்போது கொண்டுவர மறந்து போனேன். எனக்கான அறையிலக்கம் தந்து போகச் சொன்னார்கள்.

ஏன்ர உடுப்புகள் எடுத்துவர மறந்து போட்டேன்....ஒருக்கா எடுத்து வந்து தாங்கோ...,
வெளிக்கிடேக்க ஞாபகம் வரேல்லயோ ? வந்த சினப்பையும் பேச்சையும் வாங்கிக் கொண்டேன்.

யாருமற்றுத் தனித்து மருத்துவமனையில் என் குழந்தையின் வரவுக்காகக் காத்திருந்தேன். ஓரிடத்தில் இருக்க முடியாது இடுப்பு வலித்துக் கொண்டிருந்தது. 
3வது மாடியில் அமைந்திருந்த மகப்பேற்றுப் பகுதியில் இருந்து முதலாவது மாடிவரை பலதடவை ஏறியிறங்கினேன். படியேறி இறங்கினால்  வலியின்றி விரைவில் குழந்தை பிறக்குமென்ற நம்பிக்கை.

மாலை ஆறுமணிக்கு இரவுச்சாப்பாடு கொண்டு வந்தார்கள். இரவு உணவாக மண்ணிறப்பாண் வந்திருந்தது. கத்தரிக்காய் உறைப்புக்கறியோடு அந்தப்பாணைச் சாப்பிட்டால் அதன் சுவை எப்படியிருக்கும் என்பதை எனக்குள் நினைத்துப் பார்த்தேன்.

நல்ல உறைப்புச் சாப்பிட வேண்டும் போலிருந்தது. எதையும் கொண்டு வந்து தரவும் ஆட்களில்லை. ஏன்னருகிலும் யாருமில்லாமல் தனித்திருந்தேன்.

குழந்தையின் அசைவோட்டம் எனது இரத்த அழுத்தம் சுவாசத்துடிப்பு யாவையும் பதிவு செய்யும் இயந்திரத்தை அருகில் கொண்டு வந்து வைத்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் அழைப்புமணியை அழுத்தச் சொன்னார்கள்.

ஆடிமாத வெயில் வெக்கை வியர்த்து எரிச்சலாக இருந்தது. தலைசுற்றிக் கொண்டிருந்தது.

இரவு ஏழுமணி. எனது அறைக்கு வந்த மருத்துவத்தாதி குழந்தையின் அசைவோட்டத்தை குறிக்கும் இயந்திரத்தின் வயர்களைப் பொருத்திவிட்டுப் போனாள். வயிற்றுள் இருக்கும் என் குழந்தையின் ஓட்டம் இரைச்சல் துள்ளல் கரகரப்பு என மாறிமாறி சத்தங்கள் வந்து கொண்டிருந்தது. 20 நிமிடங்கள் அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது.

குழந்தை இன்னும் 24 – 48 மணித்தியாலத்திற்கிடையே பிறக்கும் எனச் சொன்னார்கள். தாய்வாசல் விரிவடைந்தது போதாதெனவும் கூறப்பட்டது.


இரத்த அழுத்தம் 52-85 என இருந்தது. சீனிக்கட்டியில் 20துளிகள் மருந்தொன்றை சொட்ட வைத்துத் தந்த தாதி அதை மெல்ல மெல்ல உமிந்து விழுங்குமாறு சொன்னாள்.

கால் பகுதியால் கட்டிலை உயர்த்திப்படுக்க வைத்தார்கள். தங்களை அழைக்காமல் கட்டிலை விட்டு இறங்க வேண்டாமெனவும் ஏதாவது தேவையென்றால் அவசர அழைப்புமணியை அழுத்துமாறும் சொன்னார்கள். 

12.07.1996 – 15.07.1996 பின்னேரம் வரையும் கட்டிலைவிட்டு அதிகம் இறங்கவிடாமல் சேலைன் ஏற்றப்பட்டது. மருத்துவமனைச் சாப்பாடு உறைப்புமில்லை உப்புமில்லை புளிப்புமில்லை சப்பென்ற சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

15.07.1996 அன்று மதியம் மருந்துகள் கழற்றப்பட்டு குளிக்க அனுமதித்தார்கள். இரண்டுநாள் வெக்கையும் வியர்வையும் போக மென்சூட்டுத்த தண்ணீரில் முழுகினேன். அங்கேயும் அவசர அழைப்புமணியை எப்படி அழுத்த வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.

இடுப்புவலி 5நிமிடங்களுக்கு ஒருமுறையாக இருந்து மெல்ல மெல்லக் கூடிக்கொண்டிருந்தது. தாங்க முடியாத வலி. அழுகையாக வந்தது. என் சிலுவைத் துயரைத் துடைக்க யாருமின்றிய தவிப்பும் தனிமையும் சேர்ந்த துயரைச் சொல்ல முடியவில்லை.

அந்த இரண்டு நாட்களும் எப்படி இருக்கிறேன் என்ன நடக்கிறது என்பதைக் கூட எட்டிப்பார்க்க முடியாதளவு கொண்டாட்டத்தில் இருந்தவரைத் தேடி தொலைபேசியெடுத்தேன். சில உடுப்புக்களும் மருத்தவமனை வெளிக்கிட்ட அன்று வைத்த கணவாய்கறியையும் கொண்டு வந்து தரச் சொன்னேன்.

சரியாக அவியாத வெள்ளையரிசிச் சோறும் பழைய கணவாய் கறியும் பகல் இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னேரம் கிறிக்கெட் விளையாடப் போக வேண்டுமெனச் சொல்லப்பட்டது. 3நாள் உறைப்பு இல்லாத சாப்பாட்டைவிட்டுவிட்டு பழைய கணவாய்க்கறியையும் சோற்றையும் சாப்பிட்டேன்.

தனது கோடைகால விடுமுறையை நண்பர்களோடு கிறிக்கெட் விளையாடியும் குடித்து டிஸ்கோவுக்குப் போய் கும்மியடித்தும் கொண்டாடிக் கொண்டிருந்தவரால் எனது வலியை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அடுத்த சில மணித்தியாலத்தில் சாப்பிட்ட கணவாய்க்கறியும் சோறும் சத்தியாக வந்தது. இடுப்பு வலி அதிகரித்துக் கொண்டிருந்தது. கட்டிலைவிட்டு இறங்க முடியாத வலி.

அழுதபடி  அவசர அழைப்புமணியை அழுத்தினேன். என்னால் தாங்க முடியாதிருந்த வலியை வந்திருந்த மருத்துவத்தாதிக்குச் சொன்னேன். 20வருடகாலம் மகப்பேற்றுப் பிரிவில் பணியாற்றும் அந்தத் தாதி என் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். அழாதே என ஆறுதல் சொன்னாள். இன்னும் சில மணித்தியாலங்களில் குழந்தை பிறந்துவிடுமென்றாள். உனக்கு வேண்டிவர்களைக் கூப்பிடென்றாள்.

தெரிந்த சிலரது வீடுகளுக்கு அழைத்து நிலமையைச் சொன்னேன். கிறிக்கெட் விளையாட அந்த வீட்டு ஆண்களும் போயிருப்பதாக பதில் வந்தது. அவர்களும் தாங்கள் தேடிச் சொல்வதாகச் சொன்னார்கள்.

இரவு எட்டுமணிக்கு பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றார்கள். வலி வலி வலி...எப்படி அதனை விளக்குவதென்று தெரியாத வலியது. கட்டிலில் படுக்க வைத்து பூட்டப்பட்ட இயந்திரத்தின் இரைச்சல் குழந்தையின் அசைவுகளோடு எனது இயங்குதலையும் குறித்துக் கொண்டிருந்தது. இரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவே இருந்தது.

பிரசவ அறைக்குப் போன பிறகு பத்துமணி தாண்டியதும் மருத்துவர்கள் இருவரும் 3தாதியர்களும் என்னருகில் வந்தார்கள். அருகிருந்த அறைகளில் பெரும் கூக்குரல்களும் அழுகையுமாக இருந்தது.

பலரும் குழந்தைப் பேற்றின் கடைசி மணித்துளிகNளூடு போராடிக் கொண்டிருந்தார்கள். அனைவருக்குமே குடும்ப உறுப்பினர்கள் கணவர்கள் காவலிருந்தார்கள். கண்ணீர் துடைத்துத் தேற்றி ஆற்ற ஆட்களிருந்தார்கள்.  நான் தனியே போராடிக் கொண்டிருந்தேன்.

அப்போது எனது அறை தட்டப்பட்டது. கதவைத் திறந்து கொண்டு வந்தவரின் பியர் நாற்றம் தடுமாற்றம் மருத்துவர்களை தாதியர்களை அருவெருப்படைய வைத்தது. அவமானம் என்னைப் பிடுங்கித் தின்றது. அந்தக் கணங்களை என்றுமே மறக்க முடியாது.

அந்த அந்தரமான நிமிடங்களில் கூட என்வலியைப் புரிந்து கொள்ளாத மனிதனாக என்னோடு கிரந்தம் கதைத்துக் கொண்டிருந்தது. நான் சத்தமாகக் கத்தியழுவது அவமானமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு நின்றது.

மருத்துவர்களும் தாதியர்களும் சுற்றி நின்றார்கள். வியர்வையில் வளிந்த முகத்தை ஒருதாதி ஈரத்துவாயால் துடைத்துவிட்டாள். குழந்தையின் அசைவோட்டத்தையும் எனது இரத்த அழுத்தம்  சுவாசத்துடிப்பு ஆகியவற்றை அவதானிக்கும் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது.  வயிற்றைச் சுற்றி கட்டப்பட்ட பட்டியைக் கழற்றியெறிய வேண்டும் போல அந்தரம். கால்பகுதியில் நின்ற மருத்துவரை உதைத்துவிட்டேன்.

என் ஓலக்குரலால் அந்த அறை நிறைந்திருந்தது. ஏல்லோரையும் தள்ளி விட்டு எழுந்து ஓடென்றது மனம். வாழ்வில் அப்படியொரு போதும் அழுதிருக்காத அழுகையது.

முதுகைக் குடங்கி படுக்குமாறு மருத்துவர் சொன்னார். முதுகில் ஊசியேறியது. இனி இடுப்புக்கு கீழ் வலிகுறையும் என்றார். தாங்க முடியாத வலி என்னைத் தின்று கொண்டிருந்தது. இடுப்பு எலும்புகள் ஒவ்வொன்றாய் உடைந்து போவது போலிருந்தது.

கைகளிரண்டையும் ஒரு தாதி இறுகப்பிடித்தாள். கால்களை அகட்டி மருத்துவர் ஒருவர் பிடித்தார். அடுத்த இரண்டு மருத்துவர்களும் „'நன்றாக முக்கு' என சொல்லிக் கொண்டு மேல் வயிற்றிலிருந்து கீழ்நோக்கி வயிற்றை அழுத்தினார்கள்.

மூச்சு நின்றுவிடும் போலிருந்தது. 1...2..3...இப்ப உனது குழந்தை வரப்போறான் நல்லா முக்கு...நன்றாக மூச்சை உள்ளிளுத்துக் கொண்டு முக்கு....4தடவை நான் முயற்சித்தும் என்னால் முடியவில்லை.

மூச்சடங்கிப் போவதை உணர்கிறேன். அனைவரின் குரல்களும் எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருந்தது. கன்னத்தைத் தட்டி யாரோ எழும்பென்று சொல்வது கேட்கிறது. கால்களிரண்டினிடையிலும் மெல்லிய சூடாக திரவம் ஏதோ வெளிவருவதை  உணர்கிறேன்.

செயற்கைச் சுவாச மஸ்க்கினை முகத்தில் பொருத்தினார்கள். சில வினாடிகளில் எனது சுவாசத்துடிப்பு சீராகியது.  அந்தா பார் உனது குழந்தை எப்பிடி ஓடிவாறான்....நீ முயற்சி செய்தால் இன்னும் சில நிமிசத்தில உனது குழந்தை வெளியில வந்திடுவான்.....கணணித்திரையைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார் மருத்துவர்.

உன்னாலை முடியும் இன்னொரு தடவை முயற்சி செய் உனது சக்தியைத் திரட்டி முக்கு... சொல்லிக் கொண்டு வயிற்றை இரண்டு மருத்துவர்களும் ஊண்டி அமத்தினார்கள். அவர்கள் சொன்னது போல என் சக்தியெல்லாம் ஒன்றாகியதா அல்லது அவர்கள் அமத்திய அமத்தில் குழந்தை வெளியில் வந்ததா தெரியாது. 

23.20...மணிக்கு பார்த்திபன் பிறந்தான். என் நெஞ்சில் குழந்தையை மருத்துவர் படுத்திவிட்டார். என் பார்த்திக்குட்டி என் நெஞ்சில் கிடந்து அழுதான்.

பார் பார் வந்தவுடனும் அவருக்குப் பசிக்குது...மருத்துவர் சிரித்தார்.  அவ்வளவு நேரம் நான் அழுத அழுகை ஓய்ந்தது. அதுவரையில் என்னை வதைத்த வலியை என்னால் உணர முடியவில்லை.

புhர் அழகான குழந்தை நல்ல கறுப்பு தலைமயிர் வடிவான கண் மூக்கு முகம்...என ஒவ்வொன்றாகச் சொல்லிச் சிரித்தபடி தொப்புள் கொடியை வெட்டி குழந்தையைத் தாதியொருத்தியிடம் கொடுத்தார் மருத்துவர்.

குழந்தையின் நிறை உயரம் தலையின் சுற்றளவு யாவையும் அவள் எழுதி ஒரு அட்டையில் குறித்தாள். குழந்தையை மெல்லிய சுடுநீரில் கழுவிக் கொண்டிருந்தாள். மருத்துவர் கதைத்துக் கதைத்து என் வயிற்றிலிருந்து அகற்ற வேண்டிய கழிவுகளை அகற்றி தைத்துக் கொண்டிருந்தார்.

குழந்தையைக் கழுவிக் கொடுக்க அடுத்த மருத்துவர் குழந்தையின் கண்கள் கைகால்களை பரிசோதனை செய்துவிட்டு திரும்ப தாதியிடம் கொடுக்க அவள் பிள்ளைக்கு உடுப்புப் போட்டு என் நெஞ்சில் வைத்தாள்.

என் குழந்தையின் கைவிரல்களைப் பிடித்தேன் அவன் கன்னங்களை மெல்ல வருடினேன். எனக்கு புதுவாழ்வு தந்த கடவுளாக அவன் என் நெஞ்சில் கிடந்தான்.

கைகள் இரண்டையும் குடக்கி கால்களையும் மடித்து என் நெஞ்சில் கிடந்தான். என் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டேன். அவன் பஞ்சுக் கைவிரல்களை என் கன்னத்தில் வைத்து அழுத்தினேன். ஆழதான்.

அவனது வாயை பால்குடிக்க வசதியாக சரித்துப் படுக்க வைத்தார்கள். அவன் அழுதான். சில நிமிடங்கள் பாலை உறிஞ்ச முடியாமல் அழுதவன் கொஞ்ச நேரத்தில் அமைதியாக பால் குடிக்கத் தொடங்கினான்.   


14.07.2019