Tuesday, April 23, 2013

அன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி


அவன் ஒரு கரும்புலி. ஒரு காலம் அவனின் தேவையும் சேவையும் தேவையாக இருந்தது. 15வயதில் இயக்கத்திற்குப் போனபோது இப்படியொரு கரும்புலிக் கனவை அவன் கண்டதேயில்லை. ஆனால் காலம் அவனை ஒரு புலனாய்வுப் போராளியாக்கியது புலனாய்வின் தொடர் எதிரியின் கோட்டைக்குள் பணியமைந்து தானாகவே கரும்புலிக்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டு பிறந்த கிளிநொச்சியை விட்டு சமாதான காலத்தில் வெளியேறினான். குடும்பத்தில் தம்பியும் அக்காவும் போராளிகளானார்கள்.

எல்லாக் கரும்புலிகள் போல அவனும் குடும்பம் , உறவு என்ற வட்டத்தைத் தாண்டி தாயகக்கனவோடு சாவினைத் தழுவ அவன் தனக்கான சந்தர்ப்பத்தை தேர்ந்து வெளிக்கிட்ட போது இலட்சியக்கனவை நிறைவேற்றி தன்னினம் வாழ வேண்டுமென்றதை மட்டுமே நினைத்திருந்தான்.

போகும்போது அவன் சொத்தென்று கொண்டுபோனது சில உடுப்புக்கள் மட்டுமே. முற்றிலும் மாறுபட்ட கொழும்பைக் கற்று முடிக்கச் சிலமாதங்கள் எடுத்தது. கடையொன்றில் பகல்நேர வேலையாளாகவும் , அதிகாலையில் இராணுவ மையமொன்றிலும் பணியாளனாக மாறினான்.

நாடு லட்சங்களை இந்த லட்சிய வீரர்களுக்காகக் கொடுக்கத் தயாராக இருந்த போதும் தங்கள் உழைப்பிலே தங்கள் செலவையும் தங்கள் தேவையை கவனித்து சரித்திரங்களான பல வேர்கள் போலவே இவனும் பணியில் இணைந்தான்.

இலக்கின் எல்லையைத் தேடியே விழிகள் எப்போதும் புலனாயும். அணியும் சேட்டில் மறைக்கப்பட்ட சயனைட் மட்டுமே அவனுக்கான பாதுகாப்பு. ஆள ஊடுருவி வன்னியை நிலை குலைக்கும் கனவோடு காரியத்தில் இறங்கி வன்னிக்குள் அச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான் எதிரி. 

ஏதிரியின் பகுதிக்குள் ஊடுருவி அவர்களது கோட்டைக்குள்ளிருந்து இழப்பைக் கொடுத்து ஈழ விடியலை நோக்கிய வீச்சுக்கு வெளிச்சமாகும் கனவோடு கரைந்த வெளியில் வராத எரிமலைகள் போலவே அவனும் கனவோடலைந்தான். கொழும்பின் இயல்புக்கு ஏற்ப அவனும் மாறி இலக்கையடையும் நாளொன்றில் விடியலுக்குத் தயாராகினான்.

அன்றோடு அவன் ஒரு பெயரற்ற கல்லறைக்கும் அவனைப் புரிந்தவர்களின் இதயத்தில் மட்டும் அடையாளம் காணப்படுபவனாக மாறிவிடும் வேகத்தில் ஒருநாள் விடியற்காலை தயாராகினான். அவனது தயார்நிலையை முந்திக் கொண்டு விதியாய் வந்தது எதிரியின் புலனாய்வு. அதிகாலை தட்டப்பட்ட கதவு அவனது கட்டுப்பாட்டை மீறி உடைக்கப்பட்டு உள்நுளைந்தவர்களால் கைது செய்யப்பட்டான். உறங்காத அந்த விழிகள் உள்புகுந்தவர்களால் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டான்.

யாருமறியாத இருட்டறைகளில் வதையிடங்களில் சிறையிடப்பட்டு தொடர் சித்திரவதைகள் உறுதியோடு தயாராயிருந்த கரும்புலியின் இறுதி நாட்களையே அறிய விடாது நாட்கணக்கில் நினைவிழந்து போயிருந்தான். ஆள்மாறி ஆள்மாறி விசாரணையென்ற பெயரால் உயிரறும் உச்ச வதைகள் எல்லாவற்றையும் தாங்கினான். விடுதலையின் வெளிச்சம் புலருமொரு நாளில் அவன் வீழ்ந்தானென்ற சொல்லோடு போய்விடவே காத்திருந்தான்.

2வருடங்கள் அடையாளம் சொல்லப்படாத இடங்களில் வைத்து வதைக்கப்பட்டான். அனுப்பியவர்களும் தொடர்பு கொள்ளவோ தேடிப்பார்க்கவோ அவகாசமின்றி களநிலமை நிலையிழந்து கொண்டிருந்தது.

2009 எல்லாம் முடிந்து ஆயிரக்கணக்கில் போராளிகள் சரணடைந்தார்கள் என்ற செய்தியை அவனும் கேள்விப்பட்டான். கிளிநொச்சியில் வாழ்ந்த குடும்பத்தைப் பற்றிய கவலை அவர்கள் யாராவது மிஞ்சியிருப்பார்களாக அல்லது இறந்து போனார்களா என்ற தகவலும் தெரியாது.

அவன் அடைபட்டிருந்த இடத்திற்கு சரணடைந்த பலரும் கொண்டு வரப்பட்டார்கள். ஏன் ? எப்படி ? காவலாளிகளின் கண்காணிப்புகளையும் தாண்டி சங்கேத மொழியால் கேட்டுக் கொள்வான். என்ன வதையானாலும் அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் சிறைவாசத்தை சாதாரணமாக ஏற்றுக் கொண்ட பலரது நெஞ்சில் வீழ்ந்த இடியாக மாறிய நிலமையால் ஏற்பட்ட ஏமாற்றம் அவனுக்கும்.

000          000             000

2010இல் அவன் நிரந்தரமாக சிறைக்கம்பிகளின் பின்னால் அடைக்கப்பட்டான். இப்போது முன்பு போல அடிக்கடி வந்து வந்து ஆளாளுக்கு அடியுதையில்லை. ஆனால் ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசிகள் , போத்தல்கள் உடலில் ஏற்பட்ட தாக்கங்கள் அவனால் இயங்க முடியாத நிலமைக்கு ஆளாக்கியது. சிறைச்சாலையின் உணவு மட்டுமே. அது தவிர சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தரப்படும் சில மருந்துகள். அதுவும் ஏனோ தானோ என சாட்டுக்கு வழங்கப்படும்.

இறுதியுத்தத்தில் இருந்து வந்தவர்களைப் பார்க்க உறவுகள் வருவார்கள். நெருங்கிய கம்பிக்கட்டுக்கு மறுமுனையில் நின்று சில நிமிடங்கள் தங்கள் உறவுகளைப் பார்த்துவிட்டு கண்ணீரோடு பிரிந்து போய்விடுவார்கள். அப்படி வந்தவர்கள் மூலம் கூடவிருந்தவர்களின் உதவியில் தனது குடும்பத்தைத் தேடினான்.

வலைஞர் மடத்தில் இடம்பெயர்ந்து இருந்த போது விழுந்த எறிகணையில் குடும்பமாக காயமுற்று தங்கை காலிழந்து , மைச்சினனும் காயமுற்று ,மருமக்களும் காயங்களோடு உயிர் தப்பி அப்பா நோயாளியாகி அவன் எங்கோ வெடித்து காவியமாகிவிட்டதாக நம்பிய அம்மா மனநலம் பாதிப்புற்று தம்பி வீரச்சாவடைந்து போனதாகவும்; செய்தி வந்தது.

கடைசிவரை வன்னியில் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்தின் இழப்பு போல அவனும் தனது குடும்பத்திலிருந்து இழந்தது திரும்ப ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவனைப் பார்க்கவோ அல்லது அவன் எப்படியிருக்கிறான் என்பதனை அறியவோ அவனது குடும்பத்திலிருந்து ஒருவரும் சிறைக்குச் செல்வதில்லை.

குடும்பத்தின் மொத்த பொருளாதாரமும் சிதைந்து இன்றைய அவர்களது வாழ்வு அன்றாடமே அவதியாக. அவனைப் பார்க்க ஒருமுறை பயணிக்க தேவைப்படும் பெரும் தொகை பணமற்று மிகவும் அடிநிலைக்குப் போய்விட்டார்கள். அடிப்படைத் தேவைகளைக் கூட அவனுக்கு அனுப்பவோ அல்லது யாரிடமேனும் கொடுத்துவிடவோ அந்தக் குடும்பத்திடம் வசதியில்லை. கூடவிருப்போர் தங்களால் இயன்றதை கொடுத்தாலே தவிர வேறெதுவும் இல்லை.

இறுதியாக 2006 இல் பார்த்த அவன் இப்போது தனது வயதையும் மீறிய தோற்றமும் கண்டறியப்படாத நோயாய் சொல்லப்பட்ட நோய் புற்றுநோயென மருத்துவர்களின் அறிக்கைகள் சொல்கிறது. உடலை வருத்தும் நோயின் வலியும் துயரமும் அவனது குடும்பத்தால் அறிய முடியாத கதைகள்.

தனது ஆடைகளைத் துவைக்கவோ தண்ணீர் அள்ளவோ களைத்துச் சோருகிற உடல் சோர்வும் வலியும் இன்று படுக்கைக்குப் போனால் நாளை எழுவானோ என்றதே தெரியாத வாழ்வு. சுமத்தப்பட்ட வழக்கு எவ்வித முடிவுமின்றி அதுவும் காலம் நீட்டப்பட்டு முடிவற்ற தொடராய்.....!


சிலவேளைகளில் நல்ல உணவைச் சாப்பிட வேணும் போலிருக்கும் சிலநாட்களில் குடும்பத்தினருடன் பேச வேணும் போலிருக்கும் எதற்குமே பணமிருந்தால் மட்டுமே முடியும். அவனிடம் பணமுமில்லை சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற பணம் கொடுக்கவும் யாருமில்லை.

அவனது குடும்பத்து வறுமை அவனையும் கிட்டத்தட்ட மறந்த நிலமையே இப்போது. 8வருடங்கள் முதல் பார்த்த அம்மாவை ,அப்பாவை , தங்கையை , மருமக்களையெல்லாம் பார்க்க வேண்டும் போல சிலவேளைகளில் மனசு துடிக்கும் ஆனால் யாருக்கும் தெரியாமல் தனது ஆசைகளை மறைத்து தனித்து அழுதுவிட்டு மற்றவர்கள் முன்னால் சிரிக்கிற வல்லமையைக் கற்றுக் கொண்டுவிட்டான்.

ஒரு காலத்தின் கரும்புலி , பெரு வெற்றியின் ஏணி , 15வயதில் தேசக்கனவோடு போய் இன்று 37வயது மனிதன். தனது சாவின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். மரணம் எத்தனை விரைவாய் அழைக்குமே அத்தனை விரைவாய் அழைத்துக் கொண்டு போனாலே போதுமென்ற மனநிலையில் நீண்ட சிறைவாழ்க்கை வெறுப்பைத் தருகிறது.

ஆனாலும் நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளை அனுபவிக்க வேண்டும் போலவும் ஆசைப்பட்டவற்றையெல்லூம் சாப்பிட வேண்டும் போலவும் மனசு அலையும் நேரங்களில் தன்னைத் தானே கட்டுப்படுத்தி என்றாவது தனக்கும் விடுதலை வருமென்று நம்புகிறான்.

21.04.2013 அவன் அழைத்தான். கிட்டத்தட்ட ஒருவருடங்களின் பின்னர் வந்த அழைப்பு அது.

அக்கா ! நான்********* ! எப்பிடியிருக்கிறீங்கள் ?
கிடைத்த 2நிமிடத்திலும் அவன் சொல்ல விரும்பிய யாவற்றையும் சொல்லிவிடும் ஆவலில் கதைக்கத் தொடங்கினான்.

வீட்டுக்காறர் வாறவையோ ? கேட்ட போது சொன்னான்.

அவையளை 8வருசமா பாக்கேல்லயக்கா....எல்லாருக்கும் விசிற் வருமக்கா எனக்கு ஒருத்தரும் வாறேல்ல...! முந்தி கொஞ்ச நாள் உங்கடை உதவி கிடைச்சது. பிறகு நீங்களும் விட்டிட்டீங்கள்.

எங்கை தொடர்புகள் விடுபட்டுப் போச்செல்லோ அதுதான் விடுபட்டுப் போச்சு.
தொடர்ந்து ஆளாளுக்கு உதவி உதவியென்று அழைக்கிற அழைப்புக்களில் யாருக்கு முதலிடம் கொடுக்க யாரை தொடர்ந்து கவனிக்க ?

ஒவ்வொருவருக்குமான உதவியை எங்கிருந்து பெற்றுக் கொள்ள ? என்ற பாரத்தை இவனுக்குச் சொல்ல முடியவில்லை.
இப்ப வருத்தமெல்லாம் என்னமாதிரி ?
மாற்றமில்லையக்கா....!

இப்ப துப்புரவா உடம்பு முடியுதில்லை.
சரியான களைப்பும் வலியும் சிறுநீரகத்திலயும் பிரச்சனையாம்....!
எனக்கு மாதம்மாதம் ஏதுமொரு சின்ன உதவி செய்யேலுமெண்டா செய்யுங்கோ அக்கா....!

23.04.2013


(இந்த இளைஞன் எத்தனை காலம் உயிர்வாழ்வானோ தெரியாது. வாழும்வரை அவனுக்கானதொரு சின்ன உதவி மாதம் இலங்கை ரூபா (அண்ணளவாக 20€) என்றாலும் கொடுக்க வேண்டும். 

யாராவது இந்த மனிதனுக்கு உதவ விரும்பின் தொடர்புகளுக்கு :-
Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany
Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418
nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh
www.nesakkaram.org

Saturday, April 20, 2013

3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.

ஐயாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள் அடங்கிவிட்டது. 3ஆண்பிள்ளைகளும் 3பெண் பிள்ளைகளுமாக ஆறுபிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த காலத்தை எண்ணினால் அது பெரும் துயர் சூழ்ந்த காலம் தான். இப்போது தானொரு சுமையாகிப் போனேன் என்ற இயலாமைதான் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது.

ஐயா ஒரு கடற்தொழிலாளி. ஊரில் ஐயாவும் கடற்தொழிலால் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு காலம் அள்ளிக் கொடுக்கும் கையாகத்தான் இருந்தார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்வு ஐயாவின் குடும்பம் அனுபவித்ததும் ஒரு காலம்.

ஐயாவின் மூத்த ஆண்மகனை கடலில் வைத்து இலங்கை இராணுவ கடற்படை என்று சுட்டுக் கொன்றதோ அன்று விழுந்த இடி ஐயாவின் குடும்பத்தின் பாதையை திசைமாற்றி திசைக்கொன்றாய் அள்ளியெறிந்தது. ஐயாவும் விபத்தொன்றில் கையொன்று இயங்காமல் போக உடைந்து போனார்.

அண்ணனை கடற்படை கொன்றுவிட தம்பிகள் போராளிகள் ஆனார்கள். ஒருவன் புலனாய்வுப்போராளியாகவும் மற்றையவன் கடற்புலியானான். கடைசித் தங்கையும் புலியாகினாள். மிஞ்சிய இரு பெண் பிள்ளைகளும் திருமணம் முடித்து குடும்பமாகினர்.

பிள்ளைகளின் பிரிவு அம்மாவை நிரந்தர நோயாளியாக்கி 2005இல் மரணித்துப் போனதோடு ஐயாவின் நம்பிக்கையும் பறிபோனது. கடைசிமகள் சமரொன்றில் காயமுற்று ஊனமாகினாள். தொடர்ந்தும் தனது தேசத்துக்கான பணியைச் செய்து கொண்டிருந்தாள்.

2006இல் கடற்புலிப் போராளியொருவனைக் காதலித்துத் திருமணம் செய்தாள். ஐயாவுக்கும் ஆறுதலாயிருந்தவள் அவள். திருமணம் முடிந்த கையோடு  ஐயாவையும் அந்த மகள் தன்னோடு கொண்டு போனாள். போராளியான மகளும் போராளியான மருமகனும் தங்கள் கடமைகளில் உறைந்துவிட்டாலும் அவர்களுடன் வாழ்வது ஐயாவுக்குப் பிடித்திருந்தது. தனது ஊனமுற்ற கையோடு வீட்டுக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துவிட்டு மகளுக்காகவும் மருமகனுக்காகவும் காத்திருப்பார்.

2008இல் அந்த மகள் ஒரு ஆண் குழுந்தைக்குத் தாயானாள். பேரக்குழந்தை ஐயாவின் உலகத்தை மகிழ்ச்சியால் நிரப்பியது. குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் கடமைக்காக வீட்டைவிட்டு மருமகன் போய்விட மகளுக்கும் பேரப்பிள்ளைக்கும் ஐயாதான் உறுதுணை. காலையில் வீட்டிலிருந்து தனது பணிக்காக போகிற மகள் இரவு திரும்பும் வரை ஐயாவே அந்தக் குழந்தையின் ஆதாரம்.

யுத்தம் தொடர் இடப்பெயர்வு  ஐயாவைச் சோர வைத்துவிட்டது. ஆனால் மகளோடு ஒவ்வொரு ஊராக இடம் பெயர்ந்து 2009மேமாதம் 9ம் திகதிவரை ஐயாவின் அலைச்சலும் துயரமும் ஆயிரம் காலத்துக்கும் மாறாத துயரங்கள். ஏற்கனவே ஊனமுற்றிருந்தும் திரும்பவும் தனது தேசக்கடமை முடிக்கச் சென்ற மருமகன் காயமுற்றதாக செய்தி வந்தது.

இயலாத காயத்தோடு அவனைக் களத்தில் வைத்திருக்காமல் சக போராளிகள் அவனது குடும்பத்தோடு போயிருக்க அனுப்பினர். முள்ளிவாய்க்காலில் அவர்கள் இருப்பதை அறிந்து தகவல் கொடுத்த போராளி சொன்ன அடையாளத்தை வைத்துத் தேடி அவனைக் குடும்பத்தோடு இணைத்தான் சக போராளி.

ஐயாவின் மூத்த மகள் குடும்பமும் ஒரேயிடத்தில் இருந்தார்கள். காயத்தோடு திரும்பிய மருமகனுக்கு ஐயாவே வைத்தியனாய் கவனம் பார்த்தார். அவன் ஐயாவின் மருமகனான நாள் முதல் அவனை ஐயா ஒரு போதும் மருமகனாய் நினைத்ததுமில்லை அழைத்ததுமில்லை. எப்போதும் ஐயாவுக்கு அவன் மகனாகவே வாழ்ந்தான். ஐயா மூச்சுக்கு முன்னூறுமுறை மகன் மகன் என்றுதான் அவனில் அன்பைச் சொரிந்தார்.

எல்லாரும் போயினம் மகன் நாங்களும் போவம்....! பெரிய மருமகன் நல்லா சிங்களம் கதைப்பார் நாங்களும் அவையோடை வெளிக்கிட்டா அவர் கதைச்சு எங்களையும் காப்பாற்றிடுவர்....!

ஐயாவின் சொல்லை முதல் முறையாக மறுத்த மருமகன் வேண்டுமானால் தங்கள் குழந்தையை அவர்களைக் காப்பாற்ற முடியுமென்றால் கொண்டு போகச் சொன்னான்.

நாங்கள் கடைசி மட்டும் நிக்கப்போறம் நடக்கிறத இஞ்சையே காணுவம்...! என பிடிவாதமாய் நின்றான். ஐயாவும் அவர்களோடு நிற்பதாக மூத்த மகள் குடும்பத்துக்குச் சொல்லிவிட்டு அவர்களோடு தங்கினார்.

17.05.2009 கடைசி முடிவெடுக்க வேண்டிய நிலமையில் ஐயா மருமகன் மகளின் முடிவையே தானும் ஏற்றுக்கொண்டு காலகாலமாய் வாழ்ந்த நேசித்த மண்ணைவிட்டு எதிரியிடம் சரண் புகுந்தார்கள். அந்தக் கொடிய நாட்களை வதைகளைத் தாங்கிய லட்சக்கணக்கானவர்களுடன் ஐயாவும் மகள் மருமகன் பேரக்குழந்தையும்....

2010இல் ஊனமுற்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட போது ஐயாவின் மருமகனும் விடுதலையாகி மீளவும் ஒன்றிணைந்த போது ஐயா இன்றைப் போலொரு துயரம் தனக்கு வருமென்று நினைக்கவேயில்லை.
விடுதலை செய்யப்பட்ட மருமகனும் மகளும் தொடர் விசாரணைகள் என்ற பெயரால் மீளவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வெளிவராத குரல்களின் மௌனங்கள் உலகின் செவிகளுக்கு கேட்காது நடந்த அந்தக் கொடுமைகளால் இனி ஊரில் வாழ முடியாத நிலமை உருவாகியது.

கருவுற்றிருந்த மகள் கடத்தப்பட்டு வதைக்கப்பட்டாள். தொழில் தேடி யாழ் சென்ற மருமகன் வரும்வரை அவளை விடுதலை செய்யாமல் வைத்துத் துன்புறுத்தினார்கள். ஊர் மீண்டு மனைவியைக் காத்து தினம் தினம் அச்சம் நிறைந்த இரவுகள். எவரது கண்ணையும் நம்ப முடியாத அந்தரத்தின் கொடிய பொழுதுகளைத் தாங்க முடியாது ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

000          000              000

வாழ்வு அல்லது மரணம் என்ற முடிவோடு 2011இல் நாட்டைவிட்டு வெளியேறி அயல்நாடு போனார்கள். ஐயாவையும் அழைத்துப் போக முடியாத அந்தரம். ஐயா நாங்கள் கொஞ்சநாளில நிலமை சரிவந்தா திரும்பி வந்திடுவம் அதுமட்டும் அக்காவோடை இருங்கோ....! மருமகன் சொன்னபோது ஐயாவும் ஓமென்றுதான் சொன்னார். ஐயா மகனாய் நேசித்த மருமகனும் மகளும் ஐயாவின் ஆறுதலாயிருந்த பேரனும் நாட்டைவிட்டு வெளியேற அவசர அவரசமாய் இருந்த காணிகளை விற்றுக் கொடுத்தார் ஐயா.

காலம் எப்போதும் நம்பிக்கைக்கு எதிரியாய் மாறிவிடுவதுபோல ஐயாவின் நம்பிக்கையும் பொய்யாகியது. பிரிந்து போன மகளும் மருமகனும் பேரனும் ஐயாவிலிருந்து பிரிக்க முடியாத அங்கமாகி அவர்கள் நினைவில் ஐயா தன் இயல்பை இழந்து போனார்.

ஐயா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். உயிர் இதோ அதோ என இருந்த நேரம் மருமகனின் நண்பர் மூலம் மருத்துவத்திற்கு சேர்க்கப்பட்டு சத்திரசிகிச்சை வரை போய் உயிர் மீண்டார். ஐயாவிற்கு அப்போதைய ஆறுதலாக இருந்த இரண்டாவது மகள் 4பிள்ளைகளோடும் வீட்டு வறுமையை சமாளிப்பதா ஐயாவை கவனிப்பதா என்ற நிலமையில் வறுமையே அந்த வீட்டில் நிரந்தரமாகத் தங்கியது.

பரம்பரையாகச் செய்து வந்த கடற்தொழிலைச் செய்ய வசதியில்லாது போனதால் இரண்டாவது மகளின் கணவன் ஐயாவின் இரண்டாவது மருமகன் ஏதாவதொரு தொழில் செய்ய வேண்டுமென்றதே இறுதித் தேர்வாகியது. கையில் முதலின்றி சுயதொழிலைத் தொடங்க முடியாது போக மேசன் வேலைக்குப் போய் வந்த மருமகனின் உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரம்.

இக்காலப் பொருளாதார இறுக்கம் பிள்ளைகளின் கல்வி செலவுகள் உணவுத் தேவைகள் வருமானத்துக்கு மேலாகியது. ஐயாவுக்கான மருந்து தேவைகளையும் மருமகனின் உழைப்பே நிவர்த்தி செய்ய வேண்டியிருந்தது. ஐயாவால் சதாரணமாக உணவை உட்கொள்ள முடியாது போனது. தண்ணீர் வகைகளும் , பால்மா , தேனீர் , பழம் மட்டுமே அவரால் உண்ண முடிந்தது. பால்மாக்கள் விற்கிற விலையில் அதனை வாங்கிக் கொடுக்க அந்தக் குடும்பத்திடம் வசதியில்லை. கிடைக்கிற உழைப்பில் ஐயாவுக்கும் எதையாவது கொடுத்து 6மாதங்கள் கடந்த போது அந்தக் குடும்பத்தின் துயரில் மேலுமொரு இடி.

மேசன் வேலைக்குப் போன மருமகன் கட்டடமொன்றிலிருந்து தவறி வீழ்ந்து கோமாநிலமைக்குப் போயிருந்தார். 'பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்ற பழமொழி ஐயாவின் குடும்பத்திற்கு நிகழ்ந்தது. உழைக்கவிருந்த ஒரு மருமகனும் சிலமாதங்கள் கோமாநிலமையிலிருந்து நினைவுகள் மறந்து ஒரு குழந்தையின் வடிவாமாக வீடு வந்து சேர்ந்தார்.

இரு நோயாளிகளைப் பராமரிப்பு , 16,14,12,9 வயதுகளிலிருக்கும் பிள்ளைகளை கவனிப்பது எல்லாவற்றுக்கும் மேலாக வருமானமேயின்றிய வாழ்வு ஐயாவின் மகளுக்கு. ஒரு நேரமேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு கொடுக்கவேனும் உழைக்க வேண்டிய பொறுப்பும் 36வயதான ஐயாவின் மகளின் தலையில்.

அழுதாலும் தீராத துயரம் அந்தக் குடும்பத்தின் விதியாகி 75வயதான ஐயா தன்னை மரணம் கொண்டு போகமலிருக்கும் விதியை எண்ணி கட்டிலிலேயே கண்ணீரோடு கழிக்கிறார். 3ஆண்பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் நாட்டுக்குக் கொடுத்துவிட்டு அனாதையான தனது வாழ்வு மீது ஐயாவுக்கு வெறுப்பாயே இருக்கிறது. ஐயாவிடம் விரைவில் வருவார்கள் என ஐயா நம்பியிருந்த இளைய போராளி மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் ஆசிய நாடொன்றில் பயண முகவரால் ஏமாற்றப்பட்டுச் சிறையொன்றில்....!

நேற்று 19.04.2013 ஐயாவுடன் தொடர்பு கொண்டேன்.

அம்மா....! எப்பிடியம்மா இருக்கிறியள் ? இருக்கிறமய்யா...!  எப்பிடி ஐயா சுகமா இருக்கிறியளே ? கேட்ட எனக்கு ஐயாவின் அழுகை மட்டுமே பதிலாய் வெளி வந்தது. என்னை ஏனம்மா கடவுள் இப்பிடி சோதிக்கிறான் ? 3ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்திட்டு இண்டைக்கு என்ரை பொம்பிளைப் பிள்ளைக்கு பாரமா இருக்கிறனம்மா....! எல்லாம் போச்சம்மா....!

அப்பாவிற்கு நிகரான ஐயாவின் கண்ணீர் கதைகள் இதயத்தில் சுமையாகிறது. ஐயா உயிர் வாழும் வரையில் ஐயாவிற்கு உணவு வேண்டும். அதற்கான ஒரு வழி வேண்டும்....!

ஈழவிடுதலைப் போராட்டம் நடைபெற்ற சமகாலத்தில் ஆதரவற்ற மாவீரர்களின் பெற்றோர்கள் வாழ அவர்களுக்கான இல்லம் ஒருகாலம் இருந்தது....! ஆளில்லையென்று சொல்ல ஆளில்லாமல் அவர்களுக்கான நல் வாழ்விருந்தது....இன்று....! எத்தனையோ மாவீரர்களின் பெற்றோர்கள் ஒருநேர உணவுக்கு ஒரு தலையிடி மருந்துக்காகவும் ஏங்குகிற இந்த ஏழைப் மாவீரர்களின் பெற்றோர்களுக்காக எங்கிருந்தாவது ஒரு நேசக்கரம் நீளுமென்ற நம்பிக்கையில்.....!


20.04.2013 (இந்த ஐயாவிற்கு யாராவது ஒரு கருணையுள்ளம் உதவ முன் வர வேண்டும். ஐயாவின் ஆதரவற்றுப் போன மகளின் 4 பிள்ளைகளின் படிப்புக்கும் ஒரு சிறு தொழிலுக்கும் ஆதரவு தேவை. அவர்கள் மீள எழ ஒரு சந்தர்ப்பத்தை புலம்பெயர் வாழ் உறவுகள் வழங்குங்கள்)

ஐயாவிற்கு மாதம் 5ஆயிரம் ரூபா (அண்ணளவாக 30€) வாழும் நாட்கள் கொஞ்சம் அதுவரை உணவு வேண்டும்.
ஐயாவின் மகள் சிறு பெட்டிக்கடையொன்றை நடாத்த விரும்புகிறார் - 50000,00ரூபா (அண்ணளவாக 315€)


4பிள்ளைகளுக்கும் ஒரு மாதம் ஒரு பிள்ளைக்கு ஆயிரம் ரூபா கல்வியுதவி. (தாய் தனது பெட்டிக்கழைட வியாபாரத்தில் மீள எழ இந்த ஒருவருட கல்வியுதவி பேராதாரமாக இருக்கும்) எங்கள் வாழ்க்கை
க்கு தங்கள் குடும்ப உறவை உயிரைத் தந்த இந்தக் குடும்பத்திற்கு உதவுங்கள்.

Friday, April 12, 2013

ஆபிரிக்காவில் பசியிருக்கும் ஈழப்போராளியின் குழந்தைகள்.

அவன் ஒரு கடற்புலிப்போராளி. அவனொரு திறமையான சண்டைக்காரன். அவனொரு சிறந்த படகோட்டி , அவனொரு சிறந்த கலைஞன் , நடிகன்....! இப்படித்தான் அவனைப்பற்றிய அறிதல் இருந்தது.

2009 முடிவுகளின் பின்னர் நாட்டைவிட்டுத் தப்பிவிட ஆயிரக்கணக்கில் நேசித்த தாயகத்தைவிட்டு வெளியேறவும் அவர்களது குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா , இந்தோனேசியா ,மலேசியா என கடல்கடக்கத் துணிந்தார்கள்.

எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமென புதிய புதிய வெளிநாடனுப்பும் முகவர்கள் பாதிக்கப்பட்ட போராளிகளை அணுகினார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பல அழைப்புக்கள். துறைசார்ந்த நட்புகள் தொடக்கம் பல அழைப்புகள் தெரிந்த அறிந்த பழகியவர்களென நாடிவரத் தொடங்கிய 2010இன் ஆரம்பம்....!

இந்தியா வந்துவிடு இந்தோனேசியா வந்துவிடு மலேசியா வந்துவிடு ஐரோப்பா , அவுஸ்ரேலியா , கனடாவிற்கு அழைக்க முடியுமென்ற ஆசை வார்த்தைகளும் வாக்குறுதிகளும் கொடுத்த உற்சாகத்தில் பலர் ஒளித்தொழித்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் தான் அவனும் இனிமேல் வாழ முடியாதென்ற முடிவில் இருந்தவற்றையெல்லாம் விற்று தெரிந்தவர்களிடமும் உதவி பெற்று ஒன்பதரை லட்சரூபாவை சேகரித்து பயணமுகவராக அறிமுகமானவர்களிடம் பணத்தையும் கொடுத்து 2பிள்ளைகள் மனைவியோடு நாட்டைவிட்டு வெளியேறினான். 

கனடா போகலாம் என 2011இல் கப்பல் ஏறினான். நன்றாய் துளிர்த்து வளர்ந்த செடியொன்றை இடையில் பிடுங்கியெறிவது போன்ற வலியை மனசு அனுபவித்தாலும் தனது குடும்பத்திற்கான தனது குழந்தைகளுக்கான நல்வாழ்வொன்று வெளிநாட்டில் காத்திருப்பதாக நம்பி எல்லாத் துயர்களையும் தாங்கினான்.

கனடாக்கனவறுந்து தென்னாபிரிக்காவின் நாடொன்றில் கரை சேர்ந்தார்கள். நம்பிக்கை கொடுத்து காசை வாங்கியவர்கள் கைவிரித்தார்கள். வாழ்வா சாவா நிலமையில் அன்றாடத் தேவைகள் , பசி , அடுத்த கட்ட வாழ்வுக்கான வழி எதுவும் தெரியாது போனது.

ஐஆழு நிறுவனம் நாடுதிரும்ப விரும்புகிறவர்களை திருப்பியனுப்ப உதவுவதாகச் சொன்னார்கள். நாடுதிரும்பி இனி வாழவும் முடியாத நிலமை. நாடு திரும்பினால் நேரடியாக சிறையே நிரந்தரமாகும். ஏற்கனவே நடந்த இராணுவ தொந்தரவுகள் திரும்பவும் குடும்பம் மீது பாயும் என்ற அச்சம். கையில் இருந்ததெல்லாம் கரைந்து பிள்ளைகளுக்கு சோறு கொடுக்கவும் வழியற்றுப்போய்விட்டது.

எல்லாம் இழந்து இனி வழியேதுமற்ற நிலமையில் தெரிந்த அறிந்த எல்லாரையும் நாடி உதவி கோரினான். அப்படி அவன் தேடி வரும் வரை எனக்கு அவன் பற்றி தெரிந்தது இவ்வளவும் தான்.

000             000             000

உதவியென அழைக்கிற பல குரல்கள் போலவே அவனது குரலும். ஸ்கைப்பில் ஒருநாள் அழைத்தான். எனது தொடர்பைக் கொடுத்த ஒரு போராளியின் பெயரைச் சொல்லி அறிமுகமானான்.

அக்கா எனக்கேதாவது உதவி செய்யுங்கோ.....! என்னாலை ஊருக்கும் போகேலாது....இங்கை ஏதும் வேலை தேடிச் செய்யலாமெண்டு முயற்சி செய்யிறன் ஆனால் கிடைக்குதில்லை. பிள்ளைகள் சோளம் களிதான் சாப்பிடுதுகள்....! அப்பா சோறு வேணுமெண்டு கேக்குதுகளக்கா....! என்ரை பிள்ளையளுக்கு சோறு சமைச்சுக்குடுக்க ஏதாவது உதவுங்கோ அக்கா....!

உடனடியாக எதுவித வாக்குறுதியையும் கொடுக்க முடியாதிருந்தது. சில மணித்துளிகள் மட்டுமே அவனால் ஸ்கைபில் பேச முடிந்தது. தனது தொடர்புக்கான தொலைபேசியிலக்கத்தை எழுதிவிட்டுச் சொன்னான்....!

ஸ்கைப் காசு முடியுதக்கா நேரம் கிடைச்சா ஒருக்கா ரெலிபோனெடுங்கோக்கா....!

உங்கடை நாட்டுக்கு சரியான காசு போகும் ரெலிபோனுக்கு....! நெற்கபே வரேலுமெண்டா ஸ்கைப்பில இலவசமா கதைக்கலாம். எனச்சொன்ன எனக்குச் சொன்னான்...,

அக்கா நெற்கபேக்கு நான் இருக்கிற இடத்திலயிருந்து வாறதுக்கு ஒரு மணித்தியாலம் செல்லும். முச்சக்கரவண்டியில வாறதெண்டா காசு அதாலை நான் நடந்துதான் வந்து கதைக்க வேணும். என்னாலை வேகமா நடக்கேலாது நீங்கள் அப்பிடியெண்டா மிஸ்கோல் விடுங்கோ ஒருமணித்தியாலத்தில வந்திருவன். அன்று போய்விட்டான்.

அதோ இதோ என்ற கொடையாளர்கள் சிலரிடம் அவனுக்காக உதவி வேண்டி தொடர்பு கொண்ட போது எல்லாத்தரப்பும் கழுவும் நீரில் நழுவும் மீன்களாக ஆரவாரமில்லாமல் ஒளிக்கத் தொடங்கினார்கள். ஒரு போராளி மட்டும் அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற முயற்சியில் இணைந்து தனது தொடர்புகளுக்கால் உதவியைத் தேடிக்கொண்டிருந்தான். அதுவும் கைகூடவில்லை.

அவனுக்கு உதவியை எங்காவது பெற்று வழங்க வேண்டுமென்ற முயற்சியில் இணைந்த போராளியே எனக்கு அவன் நடித்த குறும்படம் பற்றிச் சொன்னான். அவனுடன் கதைத்தபடி Youtubeஇல் அந்தக்குறும்படத்தைத் தேடியெடுத்தேன்.

ஏற்கனவே 4தடவை பார்த்த அந்தப்படம் அதில் நடித்தவர்கள் பற்றித் தெரியாதிருந்த போது ஒரு கரும்புலியின் வாழ்வு பற்றிய உண்மை மட்டுமே அறிந்திருந்தேன். அந்தப் பாத்திரமாகவே அவன் வாழ்ந்து நடித்திருந்தான். நடிப்போடு மட்டுமன்றி விடுதலைப்பாதையில் அவனும் இறுதி வரை பயணித்திருந்தான் என்ற உண்மை அவன் மீதான மதிப்பை உயர்த்தியது.

மறுநாள் ஸ்கைப் வந்தான். அக்கா நேற்று உங்களுடன் பேசியதாக வீட்டில் சொன்னேன் பிள்ளைகள் கேட்டார்கள் நாளைக்கு நாங்கள் சோறு சாப்பிடலாமா என்று. கடந்த ஒரு கிழமையாக சோளன் களிதான் சாப்பிடுகிறார்கள். மகளுக்கு சத்துக்குறைவு அதாலை ஒரே வருத்தம் மகன் பறவாயில்லை இருக்கிறான் எனக்கு அவசர உதவியாக என்ரை பிள்ளையளுக்கு சோறு குடுக்க ஏதாவது செய்வீங்களோ அக்கா ?

யாரிடமாவது உதவி பெற்று தனது குழந்தைகளின் பசி போக்க விரும்பும் தந்தையாக அவன் குரல் உடைகிறது. புலரிடம் தனது குழந்தைகளுக்காக உதவி கோரி நொந்து நம்பிக்கையிழந்து போன பின்னால் கடைசி முயற்சியாக வந்திருப்பதாகச் சொன்னான். முதலில் தனது பிள்ளைகளின் முகத்தை ஸ்கைப்பில் போட்டான். பின்னர் தனது முகத்தையும் போட்டுக் காட்டினான்.

பட்டினியால் நலிவுற்ற ஆபிரிக்கநாடுகளின் குழந்தைகள் மனிதர்களை தொலைக்காட்சி பத்திரிகைகளில் பார்த்த நினைவுதான் அவனது குழந்தைகளின் முகங்களையும் அவனது முகத்தையும் பார்த்த போது நினைவு வந்தது. இன்னும் கண்ணுக்குள் அந்த முகங்களும் அந்தக் கண்களில் நிரம்பியிருந்த வெறுமையும் மட்டுமே நினைவில் நிற்கிறது.

10.04.2013 மதியம் ஸ்கைப் வந்திருந்தான். அக்கா யாராவது உதவ முன்வந்தினமா ? பிள்ளைகளின்ரை சாப்பாடுதான் பெரிய பிரச்சனையா இருக்கு.....! எந்த முயற்சியும் பயனளிக்கவில்லையென்ற உண்மையைச் சொல்ல வேண்டி வந்துவிட்டது கைவிரித்த யாவரையும் சொன்னேன்.

கடைசி  முயற்சி உங்கட நிலமையை ஒரு பதிவாக எழுதட்டோ ? கட்டாயம் வாசிக்கிற ஒரு கருணையுள்ள மனமாவது உங்கடை பிள்ளையளுக்கு சோறுதர உதவலாம். முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடெதுக்கெண்டு நினைச்சானோ என்னவோ சொன்னான். எழுதுங்கோ பிரச்சனையில்லை.
அன்று தன்னைப்பற்றிய முழுமையான விபரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

15வயதில் இயக்கத்தில் இணைந்தவன். 29வயது வரை போராளியாக வாழ்ந்திருக்கிறான். 98இல் சமரொன்றில் காயமடைந்து ஒரு கால் ஊனமுற்று காயம் ஆறி மீளவும் களவாழ்வு. 2005இல் நீதி நிர்வாகத்துறையில் இணைக்கப்பட்டு நீதிநிர்வாகம் கற்று சட்டத்தரணியாகி 2008வரையும் சட்டத்துறையில் பணியாற்றினான்.

இறுதிக்களம் உக்கிரமடைந்ததோடு மீண்டும் சண்டையில் போய் நின்றான். நாட்டுக்காய் புறப்பட்ட போது எடுத்துக் கொண்ட சத்தியத்தைக் காக்க சண்டையில் நின்றவன் 2009இல் மீண்டும் காயமடைந்தான். 98இல் காயமடைந்த அதேகால் மீண்டும் காயமடைந்து கடுமையாகப் பாதிப்புற்றான்.

பட்டகாலிலே படும் என்ற பழமொழி அவனுக்குச் சரியாகவே பொருந்தியது.
கடைசிவரை நேசித்த மண்ணுக்குள் நின்று அந்த மண் மீளும் என்ற கனவோடு புதைந்தவர்களின் கனவுகளைச் சுமந்து களமாடி ஊனமாகி எல்லாம் இழந்து ஒரேநாளில் மயானமாகிய முள்ளிவாய்க்காலைவிட்டு எதிரியிடம் கையுயர்த்திச் சரணடைந்தவர்களோடு அவனும் அவனது குடும்பமும் சரணாகதியாகி.....!

காலம் கைவிட்டு கடவுள்களும் கைவிட்டு அனாதையான வன்னிமண்ணும் 3லட்சத்துக்கு மேலான மக்களும் இறுதிவரை போராடிச் சரணடைந்த 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் அனாதைகளாகினர்.

000                 000               000

11.04.2013 தொடர்பு கொண்டேன். அவன் இருக்கும் நாட்டில் இரவு 12மணி. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வறுமையால் வாடும் அந்த நாட்டில் வேலை தேடுவதே வளமையென்றான். அன்று யாரோ ஒருவரோடு சேர்ந்து ஒரு பாண்தயாரிக்கும் வெதுப்பகம் போனான். காலையிலிருந்து மாலைவரை அந்த வெதுப்பகத்திற்குத் தேவையான விறகு கொத்திக் கொடுத்தானாம். இரவு அந்த நாட்டுப்பணம் 2ஆயிரம் கிடைத்திருக்கிறது. ஒரு கிலோ அரிசியின் விலை அந்தநாட்டுக்காசு ஆயிரம் ரூபா விற்கிறது. வீட்டிற்கு 2கிலோ அரிசி வாங்கிக் கொண்டு போயிருக்கிறான். பிள்ளைகள் இரண்டும் ஏங்கும் சோற்றைக் கொடுக்க அன்றைய பணம் உதவியிருக்கிறது.

புpள்ளைகள் பள்ளிக்கூடம் போறேல்லயா ? அதுக்கெல்லாம் லச்சக்கணக்கில வேணுமக்கா....! இப்போதைக்கு என்ரை பிள்ளையளுக்கு சாப்பாடு வேணுமக்கா. அவன் வார்த்தைகளில் தெறித்த இயலாமையும் வறுமையும் முகத்தில் உமிழ்வது போல உறைத்தது. பாடசாலை போகும் வயதில் இருக்கும் பிள்ளைகள் இருவருக்கும் அவனே ஆசான்.

எனது பிள்ளைகள் படித்து பெரிய முன்னேற்றமடைய வேண்டும். ஒரு விஞ்ஞானியாக , ஒரு விமான ஓட்டியாக , ஒரு விண்வெளி ஆராட்சியாளராக இப்படி எனக்கு உள்ள எல்லாக் கனவுகளும் அவனுக்கும் அவனது மனைவிக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் அன்றாட உணவே போராட்டமாக உள்ள போது அவனது கனவுகள் ?????

பிள்ளையள் ரெண்டும் இல்லையெண்டா நானும் மனைவியும் செத்திடுவமக்கா....! இண்டைக்கு எல்லாத்தையும் இழந்திட்டு நடுத்தெருவில நிக்கிற நிலமையும் இருந்திருக்காது....! இப்பிடி அவமானப்பட்டுக் கொண்டு வாழவும் தேவையில்லையக்கா....! அவன் வெறுப்பின் உச்சத்தில் கதைத்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் கறந்த ஒன்பதரை லச்சத்தையும் வேண்டி விழுங்கீட்டு எதுவுமே நடவாதது போல வாழும் முகவரால் எப்படித்தான் நிம்மதியாக உறங்க உண்ண உலாவ முடிகிறதோ ?

இல்லாதவன் பொல்லாதவானாகிறான் என்பது ஊர் மொழியொன்று. அவன் பொல்லாதவானாகாமல் இன்னும் பொறுமையோடிருப்பதே அதிசயமாயிருந்தது. அவனது பொறுமையின் ஆதாரம் அவனது இரு குழந்தைகளுமே.

கண்ணதாசன் எழுதிய பாடலொன்றில் வரும் வாசகங்கள் :- „'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது'.

உயர்ந்தவர்களாய் மான மறவர்களாய் ஒருகாலம் உலகத்தாலும் எங்கள் இனத்தாலும் உச்சத்தில் ஏற்றி வைக்கப்பட்டவர்களின் நிலமை 2009இல் மாறியது. அவர்களை அவர்களது நிழல் மட்டுமில்லை அவர்கள் நிழல்களாய் வருவோம் என்று சபதம் செய்து வீரராய் மதித்த தமிழரே இன்று வீதியில் விட்டெறிந்து நல்ல வீணைகளை நலங்கெட புழுதியில் எறிந்து...!

'தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம்' எழுதிவிட்டுப் போனான் மீசைக்கவிஞன் பாரதி. இந்திய தேசத்தின் எழுச்சியின் குறியீடாகினான் பாரதி. எல்லா இலக்கண வரையறைகளுக்கும் உதாரணமாயும் உயர்வாயுமிருந்த என் சக உறவின் குழந்தைகளின் பசி போக்க நாங்கள் இந்த ஜெகத்தை எரிக்கவா முடியும் ?

பசியால் அழும் குழந்தைகளின் அழுகையில் உயிரை வதைக்கும் கொடுமை இனியுலகில் எந்தப் போராளிக்கும் வரவே கூடாது. ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் சாப்பிடும் போதும் அவன் தனது பிள்ளைகள் பற்றிச் சொன்னதே நினைவில் வருகிறது. அந்தக் குழந்தைகளின் அழுகையாக அவனது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

அவன் நடிப்பில் வெளியாகிய குறும்படத்தை மீளவும் பார்க்கிறேன். தற்கொடையாளனாய் தன்னினத்தை மட்டுமே நேசித்து குடும்பம் அம்மா அக்கா சக தோழர்கள் யாவரையும் பிரிந்து போன அந்தக்கரும்புலியின் மறுவடிவமாகிய அவன் ஒரு காலத்தின் குறியீடாக....!

அவனது சிரிப்பு பேச்சு இன்று ஆபிரிக்க நாடுகளின் அடையாளமாக உருமாறிப் போன தோற்றமும் கண்ணீராய் வழிகிறது. யாருக்கென்று அழுவதென்று தெரியாது ஆனால் அவனது குழந்தைகளுக்காக இன்று அழுகிறேன். அவர்கள் சாக எங்கள் உயிர்காத்துப் புலம் பெயர்ந்து வாழும் இந்த வாழ்வைத் தந்த அவர்களுக்காய் அழுகிறேன்.

12.04.2013 இரவு அவனை அழைத்தேன். ஆறாத ரணமாக அவனது பிள்ளைகளின் பசியைத்தான் சொல்லி வருந்தினான். கையில் எதுவுமில்லை கடனும் வாழ்வின் சுமையும் அழுத்துகிற அவலத்தை அவனுக்குச் சொல்லி தப்பித்துப் போக முடியவில்லை. மாதத்தின் நடுப்பகுதி எல்லாம் முடிந்து கடனட்டையில் மிஞ்சியிருக்கும் 110€. அடுத்தமாதத் தொடக்கம் வரையில் அவசர தேவைகளுக்காக இருக்கிற 110€ அவன் வாழும் ஆபிரிக்க நாட்டுப்பெறுமதியில் 61600வரும்.

அடுத்த கிழமை என்னாலை முடிஞ்ச சின்ன உதவியொண்டை அனுப்புறன். யாராவது உங்களுக்கு உதவ வருவினம். அதுவரை பொறுத்திருங்கோ. சொன்ன எனக்குச் சொன்னான். நன்றியக்கா....! மாதம் ஒரு 30€ யாராவது உதவினால் ஒரு காலத்தின் பெறுமதியான அவனின் குழந்தைகள் பசியாறும்.....!

13.04.2013 (எழுதப்பட்ட நேரம் அதிகாலை 02.26)
பிற்குறிப்பு :- இந்தக் குடும்பத்துக்கு யாராவது உதவ விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் வீட்டின் பிள்ளைகளின் பசிபோலவே அந்தக் குழந்தைகளுக்கும் பசிக்கிறது. அவர்கள் பசியாற்ற கருணையுள்ளம் படைத்தவர்களே உதவுங்கள்.

Saturday, April 6, 2013

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.

அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்களன்....!

28.03.2013 முதல் ஒரு தொலைபேசியழைப்பு ஒருமுறை ஒலிப்பதும் பின்னர் தொடர்பு அறுபடுவதுமாக 03.04.2013 மதியம் வரை இந்த அழைப்பு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. கடந்த ஏழுநாட்களில் அதிகாலையில் எழுப்பும் அழைப்பும் இதுவாகவே இருந்தது.

இப்போதெல்லாம் ஒரு அழைப்பு வந்தால் முன்பு போல அடித்துப்பிடித்து உடனடியாக எடுப்பதில்லை. தொடர்ந்து துயர்களைக் கேட்கிற தாங்கு சக்தி இப்போது இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. அதுவோ என்னவோ புதிய அழைப்புகள் என்றால் பயம் தொற்றிவிடுகிறது. கையில் எதுவும் இல்லாமல் உதவிகள் என்று வருகிறவர்களுக்கான மாற்று வழியைச் செய்ய வகையும் தெரியவில்லை.

03.04.2013 மதியம் 12.27இற்கு அந்த இலக்கத்திலிருந்து வந்த குரல் ஒரு பெண்ணுடையது.

ஏன்னக்கா உங்களுக்கு இரக்கமே வராதா ? எத்தின தரமமக்கா மிஸ்கோல் விட்டனான் ? உங்கடை பிள்ளை தானக்கா நானும்....நீங்கள் தானக்கா எங்களுக்கு உதவ வேணும்....! எனக்கொரு கையும் கண்ணும் இல்லை நான் காயப்பட்டிருக்கேக்க நீங்கள் வந்து பாத்தனீங்களக்கா....! அழுதழுது தனது கதைகளைச் சொல்லிக் கொண்டு போனவளின் தொடர்பு அறுபட்டது.

அடுத்து அரைமணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் அழைத்தாள். அக்கா காசு முடிஞ்சுது ஒருக்கா எடுங்கோ...! சரி நீங்க கட்பண்ணுங்கோ நானொரு 2மணித்தியாலம் கழிச்சு எடுக்கிறன். காத்திருப்பன் கட்டாயம் எடுங்கோ அக்கா....! சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். உரிமையோடும் அதிகாரத்தோடுமான அவளது குரல் ஞாபகத்தில் எங்காவது பதியமாகியிருக்கிறாளா ? அவள் யார் ?  தேடத் தொடங்கியது மனசு.
அடுத்த 3மணித்தியாலத்தின் பின் அவள் அழைத்த இலக்கத்திற்கு அழைத்தேன்.

உங்கடை பேரென்ன ? சங்கீதத்துடன் சேர்ந்த ஒரு இராகத்தின் பெயரைச் சொல்லித் தன்னை அடையாளப்படுத்தினாள். அவளும் அவளது கணவனோடு வீரச்சாவடைந்துவிட்டதாகவே 2009 முடிவுகளின் பின்னால் கிடைத்த செய்தி. ஆனால் 2013இல் அவள் தான் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை நம்புவதற்கு சிரமமாகவே இருந்தது.

000            000               000

1990களில் அவள் போராளியானவள். அந்த நாட்களில் விடுதலைப்பாதையில் அணிவகுத்தவர்களுள் அவளும் ஒருத்தியாய் மாங்குளத்தில் முதல் சண்டையனுபவத்தைப் பெற்றுக் கொண்டாள். அதற்குப் பின் 1991ஆனையிறவுச் சமரில் ஒரு கண்ணை இழந்தாள். யாழ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று மீண்டும் பணியில் இணைந்து 1992இல் துறைசார் பயிற்சியொன்றில் இணைக்கப்பட்டாள். அவளது சாதனையும் ஒவ்வொர வீரமிகு விழுதுகளின் கதைபோல 2001 வரையும் எழுதிவிட முடியாத வீரம் படைதோரின் பெயர்களுள் அவளும் ஒருத்தியாய்....!

2001இல் தீச்சுவாலை நடவடிக்கையில் கையையும் காதையும் இழந்தாள். அவள் பணியாற்றிய துறையைச் சேர்ந்தவொரு வீரன் அவளைக்காதலித்தான். 2002இல் அவனுக்கும் அவளுக்கும் திருமணம் முடிந்தது. 2004இல் ஒரு குழந்தைக்கு அம்மாவானாள். பணியின் நிமித்தம் வீடு குடும்பம் பலருக்கு மறந்து போகிற விடயம். அதுபோல அவளது காதல் கணவனும் வீட்டை மறந்து பணியில்....! காற்றுப்புகா இடங்களில் கடமை முடிக்க அவன் வீட்டை மறந்து போயிருந்தான்.

நம்பிய சமாதானம் இரத்தகளமாய் மாறிக்கொண்டிருந்த தருணத்தில் வன்னிக்கள முனையில் கணவனும் மனைவியும் கடமையில் மூழ்கினர். பிள்ளையுடன் கூட நேரம் செலவளிக்க முடியாது பணியில் ஊறிக்கிடந்தனர்.
யுத்தம் வன்னியை இறுக்கிய காலம். 2009ஏப்றல் மாதத்தின் தொடக்கம். புதிய வழியொன்றின் திறவுகோலாக நம்பிய ஆனந்தபுரம் சமர்க்களத்தில் அவளது காதல் கணவனும் களத்தில் நின்றான்.

வெற்றிவரும் ஒரு பெரும் மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் அவளும் அவள் போன்ற பலரும் தங்கள் கணவர்களை , சக தோழ தோழிகளின் வெற்றிச் செய்திக்காய் காத்திருந்தார்கள்.

சமரின் உக்கிரம் எதிர்பாராத பேரிடியாய்.....ஈழவிடுதலைப்பாதையின் விடிவெள்ளிகளான  முதல் நிலைத்தளபதிகள் பலரையும் இழந்து களம் மாறியது. ஏல்லோருடைய கனவுகளும் நம்பிக்கைகளும் கரைந்து போனது. அவளது கணவனும் அந்தச் சமரில் வீரச்சாவடைந்து விட்டதாய் செய்தி மட்டும் வந்தடைந்தது.

நெஞ்சில் விழுந்த பேரிடியைத் தாங்கும் வலுவை இழந்தாலும் குழந்தைக்காக அவள் உயிர் மீண்டாக வேண்டிய கட்டாயம். மணவாழ்வில் அவனோடு கரைந்த பொழுதுகளின் நினைவோடு வழியும் கண்ணீரின் கடைசிச்சொட்டு காயும் வரை அவனுக்காய் அழுதாள். ஊலகத்தின் மூலையெங்கும் எழுச்சி கொண்டிருந்த உலகத்தமிழரின் பேரெழுச்சி மூலம் மாற்றமொன்று துளிர்க்குமென நம்பிய ஆயிரமாயிரம் பேரைப்போல அவளும் நம்பியிருந்தாள்.

கால நேரம் பாராமல் வெடிக்கும் குண்டுகளின் சத்தமும் சாவுகளின் குரல்களுமான பொழுதொன்றில்; விழுந்த எறிகணையில் வயிற்றில் காயமடைந்தாள். சாவின் கடைசித்துளி வரை போனது நிலமை. இடையில் செத்துப்போய்விடாமல் தன்னுயிர் மீள வேண்டுமென அவள் இயன்றவரை முயன்று மருத்துவம் பெற்றாள்.

000         000           000

நினைத்தவை எல்லாம் மாறி நிலமையும் மாறியது. 2009மே 17கால் போன போக்கில் எதிரியின் எல்லைக்குள் குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள். களையெடுப்பில் அவளும் கைநீட்டப்பட்டு சிறையில் அடைபட்டு வெளியுலகை வெளியுலக மனிதர்களையெல்லாம் மறந்த காலங்கள் அவை. சூனியத்தின் வாயில் சிதைந்து போனது குரல்கள். அவளது குரலும் 4ம் மாடிவரை போய் மீண்டு சிறையொன்றில் அடைக்கப்பட்டாள்.
வாழ்வுக்கும் சாவுக்குமான மரண வேதனையை அந்த நாட்களில் அனுபவித்தாள். துயரமே அவளைத் தின்று தொலைத்தது. ஒரு புறம் ஊனத்தின் வலி....மறுபுறம் குழந்தையின் எதிர்காலம்.....இன்னொரு புறம் சிறைவாழ்வின் நீளம்....? இரவுகள் நித்திரை தொலைக்க மன அழுத்தம் பயங்கரம் மிக்க கனவுகள் இதுவே நிரந்தரமானது.

எல்லா இழப்பின் இறுதியிலும் எல்லோரும் இனி கடவுளே எல்லாம் என நம்புகிற ஒரு நிலமை இவளுக்கும். 2011இல் சிறைவாழ்வு முடிந்து குழந்தையுடன் இணைந்தாள். வருமானமில்லை வாழ்வுக்கான ஆதாரமில்லை.

அப்போது சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு உள்ளுரில் இயங்கிய நிறுவனமொன்று 10ஆயிரம் ரூபா பண உதவி கொடுத்தது. அந்தப் பத்தாயிரம் ரூபாவோடு இரவல் காணியில் தறப்பாளைக்கட்டிக் கொண்டு அவளுக்கு மிஞ்சிய உறவான அம்மாவும் வன்னியில் ஒரு ஊரில் குடியேறினார்கள்.
அன்றாடப் பொழுதைக் கழிக்கவே பேரவலம் மிக்க கொடுமையை தினம் தினம் அனுபவிக்க வேண்டிய துயரம். உதவிகள் தேடி யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாத அச்சம். வெளிநாடுகளிலிருந்து முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் செய்கிறார்கள் என ஆட்கள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனால் யாரிடம் தொடர்பு கொண்டு யாரிடம் கேட்பது ? இன்னொருவரிடம் கையேந்த சுயகௌரவமும் இடங்கொடுக்காத மனநிலை....!

அண்மையில் ஊனமுற்ற முன்னாள் போராளியொருவனின் மரணவீட்டுக்குப் போயிருந்தாள். வந்திருந்த பலரும் ஆளையாள் கண்டதும் அழுது தங்களை ஞாபகம் கொண்டனர். மரண வீட்டில் வந்திருந்த ஒரு ஊனமுற்ற முன்னாள் சக தோழன் தான் அவளுக்கொரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்தான். இலக்கம் கிடைத்தும் எப்படி அறிமுகமாவது எப்படி உதவி கேட்பதென்ற குழப்பம் மீண்டும் அந்தத் தோழனே நம்பிக்கை கொடுத்தான்.

எடுத்துக் கதையுங்கோ அவையின்ரை கடமைதானே எங்களுக்கு உதவிறது ? இதிலையென்ன பயப்பிடக்கிடக்கு ? பயப்பிடாமல் கேளுங்கோ... யோசிக்காமல் உரிமையோடை கேளுங்கோ.....! என்ற அவனது வார்த்தைகளோடு கொஞ்சம் தெம்பு வந்தது.

000         000            000

பேச ஆரம்பித்து ஒரு மணித்தியாலமும் 23நிமிடங்களும் கரைந்து போனது. ஆயிரமாயிரம் கதைகளை அவளது வாழ்வு சுமந்து துடிப்பதை அவள் விளக்கிக் கொண்டு போனாள்.

என்னாலை வேலையொண்டும் செய்யேலாதக்கா பிள்ளையின்ரை படிப்பு , வயது போன அம்மா இதோடை இந்த ஊனத்தோடை இந்த சமூகத்தோடை சண்டை போட்டு சமாளிக்கேலாமல் இருக்குதக்கா...! எங்களைக் கண்டாலே சனம் ஒரு மாதிரியாத்தானக்கா பாக்குது...! றோட்டில போனா ஒவ்வொருதற்றை பார்வையும் ஏதோ நாங்கள் தீண்டத்தகாத மாதிரித்தானக்கா பாக்கினம்....அந்த நேரம் செத்துப் போகாமல் ஏன் வாழ்றமெண்ட வெறுப்புத்தான்....என்னேயிறதெண்டே தெரியாமல் தானிருக்கிறன்.

நீங்களும் நான் கனதரம் மிஸ்கோல் விட எடுக்காமல் விட்டது சரியான கோவமாக் கிடந்தது அதுதான் கோவமாக் கதைச்சுப்போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோக்கா. நாங்கள் இருந்த நிலமையும் வாழ்ந்த வாழ்க்கையும் பாருங்கோ இப்ப என்ன நிலமையெண்டு ? ஏனடா இயக்கத்துக்கு போனமெண்டும் சிலவேளை நினைக்கிறது தான்.  

அழுகை மாறி அவள் அந்தநாள் கதைகள் முதல் ஆயிரமாயிரம் நினைவுகளை மீளவும் தந்தாள். இறந்து போனதாய் நம்பிய பலர் உயிருடன் வாழும் கதைகளையெல்லாம் சொன்னாள்.

அக்கா அமுதினியைத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரியுமெல்லோ அவளுக்கு காலில்லை கையும் ஏலாதுதானே...! அவளை ஒருவர் பிரான்சிலையிருந்து வந்து கலியாணங்கட்டி ஒரு குழந்தையும் பிறந்திருக்கு தெரியுமே ?

அமுதினியாரைக்கட்டினாள் ?

அது பெரிய கதையக்கா....அவளுக்கு 35வயது. குடும்பம் சரியான கஸ்ரம் கடையொண்டில வேலை செய்து கொண்டிருந்தவள். பிரான்சிலயிருந்து ஒருவர் இஞ்சை வந்து நிண்டு ஆக்களுக்கு உதவி செய்தவர். அவருக்கு இப்ப வயது 66. தான் கலியாணங்கட்டிறனெண்டு உங்கை கனபேரைக் கேட்டவர். அமுதினி வேலை செய்த இடத்திற்கு நெடுகப்போய் வந்திருக்கிறார்.
இஞ்சை எங்கடை சனம் தெரியும்தானேக்கா தனிய எங்களை வாழ விடாதுகள்.....! அவளுக்கும் வேறை வழியில்லை இவர் வெளிநாடு எடுக்கிறனெண்டு சொல்லி கலியாணங்கட்டீட்டார். பிறகு வெளிநாடும் எடுக்கேல்ல வருசத்துக்கு ஒருக்கா வந்து 3மாதம் நிண்டிட்டுப் போறார். ஒரு கடையும் போட்டுக்குடுத்து ஓட்டோ ஒண்டும் எடுத்துக் குடுத்திருக்கிறார். பிள்ளைக்கும் இப்ப 2வயதாகீட்டுது. அவர் வெளிநாடு கொண்டு போறது கஸ்ரமெண்டு சொல்றாராம்.

அவரது பெயர் விபரத்தை விசாரித்தேன். அவள் சொன்ன போது எனக்கு யாரோ மூஞ்சியைப் பொத்தி அடிச்சது மாதிரியிருந்தது. 2010ம் ஆண்டு நான் வானொலியொன்றில் நேசக்கரம் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது ஒருவர் தொடர்பு கொண்டு விதவைகளுக்கு உதவ விரும்புவதாகக் கேட்டிருந்தார். நானும் வயதான ஒருவர் தன் பிள்ளையைப் போலொருத்திக்கு உதவுவார் என நம்பி கதைத்த போது அவர் ஒரு போரால் பாதிக்கப்பட்ட விதவையை தான் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னார்.
எனக்கு அறுவது தாண்டீட்டுது மனிசி செத்துப்போட்டா 4பிள்ளையள் அவையெல்லாம் கலியாணம் கட்டீட்டினம் நான் நல்லா வேலை செய்தனான்...இப்ப பென்சன் வருது....நான் செத்துப் போனா என்ரை பென்சன் வீண்தானே.....ஆரும் ஒரு பிள்ளையை கலியாணம் கட்டினா அந்தப்பிள்ளைக்கு என்ரை காசும் பிரியோசனப்படுமெல்லே ?

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் அந்த அறுபது தாண்டிய ஐயாவின் இரக்கத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஐயா நீங்கள் கலியாணம் கட்டாமல் உங்கடை பென்சனில பத்துப்பிள்ளையளைப் படிப்பிச்சு விடுங்கோவன் ? எங்கடை பிள்ளையின்ரை வறுமையை நீங்கள் ஒரு தமிழன் இப்பிடி பயன்படுத்த நினைக்கிறது சரியோ ?

ஐயாவுக்கு கடும் கோவம் வந்திட்டுது. நான் ஊரில போனால் ஆளாளுக்கு வயது வித்தியாசம் பாக்காமல் வந்து நிக்குங்கள். இப்பத்தைய நிலமையில வெளிநாடு வாறதெண்டா உந்த வயது வடிவு ஒண்டும் பாக்காமல் வெளிக்கிடுங்கள் தெரியுமே ?

அதுக்கு மேல் அவரோடு முரண்பட்டு வாதிட விரும்பாமல்.....சரி உங்கடை விருப்பப்படி செய்யுங்கோ ஆனால் தயவு செய்து எனக்கு ரெலிபோனெடுக்காதையுங்கோ என்னிட்டை இப்பிடி கலியாணங்கட்ட பெண் கேட்காதையுங்கோ.....! சொல்லிவிட்டுத் தொடர்பை நானே அறுத்தேன்.
அதன் பின் பல தடவை அந்த ஐயா தொடர்பு கொண்டு ஒரே தொல்லையான போது இனிமேல் என்னுடன் இத்தகைய கதையோடு வந்தால் பெயர் விலாசம் யாவற்றோடும் ஊடகங்களில் அம்பலப்படுத்திவிடுவேன் எனச் சொன்னபோது „' நீ பாரன் நான் ஊருக்குப் போய்....அடுத்த வார்த்தைகள் தமிழில் உள்ள கெட்டவார்த்தைகளாக தொடர்பைத் துண்டித்து அந்த இலக்கத்தையும் தொலைபேசியில் நிறுத்தி விட்டேன்.

அன்று சவால்விட்டு  இதோ பார் என்ற அதே நபர் அமுதினியைத் திருமணம் செய்துள்ளதை மனசால் ஏற்க முடியாது போனது. இந்த நிலமைக்கு இட்டுச் சென்ற எல்லார் மீதும் கோபமே வந்தது.

அக்கா இஞ்சையிப்ப கனபேர் வெளிநாட்டிலயிருந்து வருகினம் இப்பிடி கன கலியாணம் நடந்திருக்கு. அவள் மேலும் 4பேரின் கலியாணக்கதையையும் சொன்னாள்.

அக்கா என்னை பிழையாய் நினைக்கக்கூடாது இப்பிடியான வயது போன யாரும் இருந்தா எனக்கும் ஒண்டைக்கட்டித்தாங்கோக்கா நானும் என்ரை பிள்ளையை ஒரு நல்ல நிலமைக்கு கொண்டு வந்திருவன்...!

உமக்கென்ன விசரோ ? பைத்தியம் மாதிரி....! (தணிக்கை...) எனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனது கட்டுப்பாட்டை இழந்து அவள் மீது கோபமாக மாறியது. அவள் அழத்தொடங்கினாள்.

அக்கா இஞ்சை நாங்கள் தினம் தினம் படுற வேதனையை அனுபவிச்சாத்தான் தெரியும்....பிள்ளையைப் பாக்க வேணும் இந்தச் சனத்தின்ரை வாயுக்காலை தப்ப வேணும்....எல்லாத்துக்கும் மேலாலை பசி அண்டண்டைக்கு சாப்பிடவே படுற சிரமம் இதெல்லாம் உங்கை இருக்கிற உங்களுக்கு விளங்காது....!
சாமானுகள் விக்கிற விலையில சாதாரணமா வாழிறதெண்டாலே நாளுக்கு ஐநூறு ரூவாய் வேணும்....மாதத்துக்கு 15ஆயிரம் ரூவாய் அதுகும் என்னைமாதிரியான ஊனங்களுக்கு மருந்து அதிதெண்டு எவ்வளவு தேவையள்...! ஆரிப்ப எங்களை மதிக்கினம் சொல்லுங்கோ பாப்பம் ?
அறுவது வயதோ எழுவது வயதோ இருக்கிற வரையும் ஏதோ வாழ்ந்திட்டுப் போக ஆராவது வெளிநாட்டு ஆம்பிளையள் முன் வந்தா நான் கட்டுவனக்கா....! ஏனெண்டா எனக்கு என்ரை பிள்ளையின்ரை வாழ்க்கை முக்கியம்....! அவள் அழுதழுது சொல்லிக் கொண்டு போனாள்....

என்னால் அவளது முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தொலைபேசியை நிறுத்தினேன். அவளது கதைகள் தான் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அவள் ஊனமென்றதை தெரிந்தே முன்வந்து காதலித்து அவளை அவளது கணவன் திருமணம் செய்தான். அவளது ஊனத்தை அவன் ஒரு போதும் சுமையாகவே எண்ணியதில்லை. கண்ணுக்குள் வைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். இன்று அவன் ஒரு வேளை உயிரோடிருந்து இந்த முடிவினைக் கேட்க நேரின்....???

அண்மையில் பீபீசியில் பேட்டி கொடுத்திருந்த போராளிப்பெண்களின் குரல்களில் ஒரு குரல் போலவே இவளது குரல் எனக்குள் வந்து வந்து போனது....! இந்த அவலங்களுக்கெல்லாம் காரணமான நானும் என்போன்ற தமிழர்களும் இவர்களது வாழ்வை மாற்ற என்ன செய்யப்போகிறோம் ?????
05.04.2013 அதிகாலை தொடக்கம் மதியம் வரையும் 11தடவைகள் மிஸ்கோல் விட்டிருந்தாள். 2குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தாள்.

05.04.2013 மாலை 15.57இற்கு அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் இப்படித்தான் எழுதியிருந்தாள்:-

அக்கா மன்னிச்சுக் கொள்ளுங்கோ....உங்கடை தொடர்பு வந்த போது என்னுறவை மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தேன். எனது இயலாமையையே உங்களிடம் சொன்னேன். நான் கதைத்தது பிடிக்காமல் கட் பண்ணீட்டீங்கள். அக்கா உங்களை நம்புகிறேன் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் எதிர்பார்த்திருக்கிறேன்.

06.04.2013 (இரவு 00.45மணி)