Monday, December 28, 2020

றைன் நதியோடு நானொருநாள்

சாந்தி நேசக்கரம் யேர்மனி

நேரத்தைப் பார்க்கிறேன்.  காலை 6.56. இன்னும் 2 மணித்தியாலங்கள் இருக்கிறது என் பயணத்தின் இலக்கையடைவதற்கு.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மகளிடம் போகிறேன். ஒரு குழந்தையென்ற எனது கனவுகள் விலக்கி அவள் 4வது செமஸ்ரர் தொடக்கத்தில் நிற்கிறாள். இன்னும் இரண்டு செமஸ்ரர் முடிந்தால் அவளது கற்றலின் இளமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்வாள்.

காலமே என் குழந்தையைக் காத்திடு. அவள் கனவுகள் மெய்ப்பட உன் கைகளால் ஆசீர்வதித்து ஒளியிடு. நீயே நிதர்சனம் நித்தியம்.  உன்னைச் சரணடைகிறேன் என்னை வதைக்காதே.

குறையுறக்கத்தில் கண்கள் தடுமாறுகிறது.

மலைகளின் உறக்கத்தையும்  மரங்களின் சோம்பலையும் கலைத்துக் கொண்டு வெயில் கீழிறங்கிக் கொண்டிருந்தது.

சூரியக் கோளத்துச் சிவப்பு சந்தனமாகிக் கரையத் தொடங்கிப் பிறகு வெண்ணிறத்தை மலையின் இடுக்குகளில் வடித்தது.

அழகான ஏப்றல் மாதத்தின் துளிர் மரங்களின் வர்ணப்பச்சையில் குதித்தன வெயில் கதிர்கள்.

ஒடிக்கொண்டிருந்த ரயிலில் எனது இருக்கையைத் தேடிவந்து ஊற்றிய காலை ஒளியில் என் நித்திரை கலங்கி விழித்து கலங்கி மீண்டும் குறைத்தூக்கம் என் கண்களைப் பிடிக்கிறது.


றைன் நதியோரமாய் இன்ரசிற்றி எக்ஸ்பிறஸ் நடைவேகத்தில் உருளத் தொடங்கி வேகமெடுத்தது.

நதியின் கரையோரத்து மரங்களின் கிளைகளும் இலைகளும் பரப்பிய நிழல்க்கவிதை நதியில் ஏறி நின்றது.

மரங்களின் நிழலோடு முகில்கூட்டம் சேர்ந்து அழகான ஓவியமொன்றைக் கண்முன்னே விரித்து வைத்தது.

இயற்கை எவ்வளவு மர்மம் நிறைந்தது. வினாடிக்கு வினாடி எத்தனை அற்புதங்களையும் அனர்த்தங்களையும் நிகழ்த்தி விடுகிறது ?

வந்து வந்து போன ஒளிச் சிதறலில் நித்திரை தீர்ந்து போகிறது.  முழுமையாக முறிந்தது சோம்பல்.  றைன் நதியின் கரும்பச்சை நிறத்தின் மீது கண்கள் பாய்கிறது.

கண்ணில் தெரிந்த ஓவியம் கண்ணெதிரே கரைகிறது.  காவல்துறையென எழுதப்பட்ட படகொன்று  சத்தமேயில்லாம் கிடந்த சித்திரம் மீது ஏறிச்செல்ல வர்ணங்களெல்லாம் கலந்து கலங்கி நவீன வர்ணச் சித்திரமாகியது.

குட்டித்தீவுகள் போல இடையிடையே கற்பாறைகள் அதைச்சூழ சில மரங்கள். அங்கங்கே வாத்துக் குஞ்சுகள்.  ஈரச்சிறகுகளைக் கற்களின் மேலேறி உலர்த்திக் கொண்டிருந்தன. தாய் வாத்துகளின் அருகே சில குஞசுகள் குந்தியிருந்தன.

காற்றிலே மெல்லவூரும் அலைகளின் கைகளால் நீருயரம் இடையிடையே மேலேறிப் பிறகு தன் பாதைகளை தேடி ஓடிக் கரைகளை உதைக்கிறது.

நீண்ட அகன்ற பெரிய  சரக்குக்கப்பல்கள் சில பச்சை அடையாளமான பெருங்குற்றிகளின் வழியே பயணிக்கின்றன.

தன்னை யாரென அடையாளம் சொல்வது போல தன் பாதைவழியே றைன்நதி நடந்து கொண்டிருந்தது.

இந்தக் கரைகளின் வழியில் எனது பயணங்கள் ஆரம்பமாகி ஒன்றரை வருடமாகிவிட்டது.

வருடத்தின் அனைத்துக் காலநிலை மாற்றத்தையும் கடந்தே நடக்கிற  நதியோடு  என் மௌனங்களும் கண்ணீரும் கலந்தேயிருக்கிறது.

10. 15மணிக்கு மைன்ஸ் ரயில் நிலையத்தில் இறங்கி மகளின் வீட்டுக்கு நடக்கிறேன்.  மலைகள் றைன்கரைகள் தாண்டி மனிதத்தலைகள் நடுவே போகிறேன்.

12பாகை செல்சியஸ் வெக்கை. வியர்க்கிறது போட்டிருந்த யக்கற்றைக் கழற்றி இடுப்பில் கட்டுகிறேன். மகளுக்கான பொருட்கள் பாரம் வலது தோளில் இருந்து இடது தோழுக்கு மாற்றுகிறேன்.

அவளது வீட்டுக்கு 300மீற்றர் இருப்பதாக ஜீபிஎஸ் குரல் ஒலிக்கிறது.  50மீற்றர் தொலைவில் வரும் பாதசாரிகள் சமிஞ்ஞை விளக்கில் வலது பக்கம் திரும்பி நடவென்கிறது ஜீபிஎஸ்.

திரும்புகிறேன் அந்த வளைவின் நான்காவது உயர்ந்த கட்டடம் வங்கியொன்று. ஆட்கள் போயும் வந்தும் கொண்டிருந்தார்கள். அதைத்தாண்டி ஒரு துருக்கிய உணவகம்.  அதனருகில் ஒருத்தி வெள்ளை நிறத்திலான கப் ஒன்றினை நீட்டிப் பிச்சை கேட்டுக் கொண்டிருநதாள்.

பிச்சையெடுப்போர் மீது முன்பெல்லாம் கோபம் வரும்.  என்னை மறித்துப் பிச்சை கேட்ட பலருக்கு 'வேலைக்கு போங்கோ' சொல்லியிருக்கிறேன்.

அம்மா... உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையோ? ஒருதரம் பிள்ளைகள் என்னில் சினந்தார்கள்.

 எல்லாராலையும் வேலை செய்ய ஏலாது தெரியுமோ ?  உதவி செய்யாட்டில் பேசாமல் போங்கோ... அவையளும் மனிசரம்மா....

இங்கே வாழ வசதிகள் இருந்தும் வாழத்தெரியாது சோம்பேறிகளாக இருப்போரே இப்படி வீதிகளில் இரப்போரென்பது  என் எண்ணம்.

நேசக்கரம் செய்து கொண்டு உப்பிடிச் சொல்லைதையுங்கோ....

இப்போது அப்படிச் சொல்வதில்லை.  அவர்களுக்கும் என்னென்ன இடைஞ்சல்களோ ?  முடிந்தால் இயன்றதைப் போட்டு விட்டுப் போகப்பழகி விட்டேன்.

பச்சைப் பாவாடையும் வெள்ளை நிறத்தில் பூப்போட்ட மேலாடையணிந்து இன்னொரு பெண் அடுத்த வீதியில் இருந்தாள்.

000         000              000

மணி 12.10 மகளோடு அவள் வீட்டிலிருந்து வெளியில் வருகிறோம். சனிக்கிழமை அவசரமில்லாது இயங்குவது போல கடைகளில் வீதிகளில் மனிதர்கள் திரிந்தார்கள்.

அடுத்து பிராங்பேட் நகரத்திற்கு நான் போக ரயிலுக்கான நேரத்தை இணையத்தில் பார்க்கிறேன்.

மகள் வேலைக்குப் போகும் ரயில் வர இன்னும் 10நிமிடங்கள் இருந்தன.

நான் உங்களை ஏத்தீட்டு போறனம்மா...

சொல்லிக் கொண்டு என்னோடு வீதிச் சமிஞ்ஞையைக் கடந்து  என்னோடு வருகிறாள்.

அம்மா..., ஒரு வீடில்லாத ஆளுக்கு கிழமைக்கு ஒருக்கா சாப்பாடு குடுப்பேன் அந்த ஆளைப்போன கிழமை கண்டனான். நல்ல உடுப்புப் போட்டு ரயிலுக்கு நிண்டவர்.  என்னட்டை வந்து கதைச்சவர்.  நான் சாப்பாடு தந்ததுக்கு கனதரம் நன்றி சொன்னவர். அவர் இப்ப வேலை செய்றாராம்...

நல்லது...

அந்த மனிதனை அவள் சந்தித்த அனுபவம் பற்றி கடந்த வருட இறுதியில்  சொல்லியிருந்தாள்.  

அப்போது அவள்  மனவுளைச்சல் அதிகமாகி மிகவும் அந்தரப்பட்ட நேரம்.  வாரம் ஒருநாள் தேவாலயம் சென்று வருவாள்.

ஒரு இரவு உறங்க முடியாது அவள் விடியற்காலை 4மணி வரையும் தொலைபேசியில் என்னோடு அழுதபடியிருந்தாள்.  உடனடியாக அருகே ஓடிப்போக முடியாத அந்தரம் எனக்கு. மறுநாள் பின்னேரம் தான் அவளிடம் போனேன்.

முதல் நாள் அவள் தேவாலயம் போகும்போது வாசலில் அந்த மனிதன் தேவாலயத்தின் வாசலில் கையேந்தி நின்றான். அவனுக்கு கொடுக்க அன்று அவளிடம் எதுவும் இல்லை.

 மனக்கலக்கத்தில் தேவாலயம் போனவள் திரும்ப வரும் போது பணம் தருமாறு அவன் கேட்டால் தனது மனநிலை மேலும் துயரடையும் என நினைத்தபடி வந்தாள்.

அவன் எதுவும் கேட்காமல் கையை நீட்டிக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்துச் சிரித்தான். இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டுமெனச் சொன்னான்.  

சிலர் பிச்சையேந்துவார்கள் எதுவும் கொடுக்காமல் போகிறவர்களை சபிப்பார்கள். இவன் யாரையும் சபிக்காமல் அமைதியாகவே கையேந்திக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு சிலநாட்கள் பேரூந்து நிலையத்தில் கையேந்திக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.

வீட்டிலிருந்து தனக்கு கொண்டு போகும் சாப்பாட்டில் அவனுக்கும் கொடுக்கத் தொடங்கினாள்.  

ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து பெறும் உணவுக்கு அவன் சொல்லும் நன்றி அவளுக்கு பசியிருக்கும் ஒருவரின் பசிபோக்கும் ஆறுதலைக் கொடுத்தது.

வாரத்தில் சிலநாட்கள் தொடர்ந்து ஒருநேர உணவைக் கொடுத்து வந்தாள்.

000             000            000

13.35 மணிக்கு பிராங்பேட் பிரதான ரயில் நிலையத்தை அடைகிறேன். ஓர் விஞ்ஞானியுடனான சந்திப்புக்கான பயணம்.

மின்னஞ்சல் குறுஞ்செய்தியில் ஆரம்பித்த எங்கள் உறவு இன்று நேரே சந்திக்கப் போகிறோம்.

என் பெரும் பலத்தை நம்பிக்கையை கனவுகளைக் காவு கொண்டது 2019ம் ஆண்டு. இந்த வருடம் தந்த  பெருந்துயரையும் அதிர்ச்சியையும் கடந்து போக  அதற்கான தீர்வைத் தேடியலையும் இந்த நாட்கள். இனி இழப்பதற்கு எதுவுமற்ற நிலையை மாற்றும் வழியொன்னை எதிர்பார்த்து எங்கெல்லாமோ அலைகிறேன்.

ஒரு சிறு துவாரம் கிடைத்தாலே அதனூடு பயணித்து என் பாதையைக் கண்டடைவேன் என்ற என் நம்பிக்கை மீது வீழ்கின்ற பாறைகளைத் தாண்டியோடும் பயணத்தில் இதுவும் ஒன்று.

ரயில் நிலையத்தில் என்னை வரவேற்ற உறவும் நானும் நெருக்கம் மிகுந்த பிராங்பேட் நகரின் வீதியொன்றில் நடந்து உணவகமொன்றிற்குப் போனோம்.

எங்களுக்கான உணவு வந்தது. சாப்பிட்டபடி பேசத் தொடங்கினோம்.  திறமைகளைப் பலிகொள்ளும் உலகின் பயங்கரங்கள் பலியெடுப்புக்கள் பற்றிய உரையாடலில் என் கண்ணீரும் கலந்தது. ஆச்சரியமும் பரிதவிப்பும் அந்தக் கண்களிலிருந்த கருணையும் எனக்கு உதவுமென்ற நம்பிக்கையைத் தந்தது.

மூன்றரை மணிநேரம் நாங்கள் பேசினோம். நான் வேண்டிய உதவி தவிரவும் நிறையவே பேசினோம். ஒரு சின்ன வழியைக் கண்டு பிடித்த ஆறுதல் என்னுள் குடியேறுகிறது.

16.38 மணிக்கு மீண்டும் மைன்ஸ் நகர் நோக்கிப் போகிறேன். நதிகளைக் குறுக்கறுக்கும் பாலங்களையும் பாதைகளையும் கடந்து ஓடும் ரயிலில் கண்ணாடி வழியே என் விழிகள் போகிறது.

எத்தனையோ கேள்விகள் அதிர்ச்சிகள் பயங்கரங்கள் நடைபெறும் நாடு.  துறைசார் போட்டிகள் நேர்மையை மட்டுமே நம்பும் மனங்களை தடயங்கள் இல்லாமல் அழிக்கும் கொடூரம், வியாபாரிகள் பணமுதலைகள் கையில் சிக்கிய நேர்மையாளர்களின் இழப்பு... இப்படி எத்தனை மர்மங்கள்....?

ஜனநாயகம் மனிதம் பேசிக்கொண்டு  அடையாளமில்லாத பலியெடுப்புக்கள்.

எத்தனை அம்மாக்களை என்போல் உயிரோடு கொல்லும் நுணுக்கங்களை  இந்த உலகம் தன் பொய்யான முகத்துள் புதைத்து வைத்திருகிறது...?

நினைவுகளில் தடக்கித் தடக்கி விழும் என் காலத்தைத் தொடரும் பயம் வெறுப்பாகிக் கண்ணீராகி கைவிரல்களில் காய்கிறது.....????

17. 20 மணிக்கு மைன்ஸ் ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். அடுத்த பயணத்திற்கு இன்னும் 81 நிமிடங்கள் இருந்தன.  ஆட்கள் குறைந்த இடமொன்றில் இருந்த இருக்கையொன்றில் போயிருந்தேன்.  

மைன்ஸ் ஓப்பிள் அரேனாவில் நடைபெற்ற மைன்ஸ் டுசில்டோர்ப் இடையேயான காற்பந்தாட்டத்தில் மைன்ஸ் 3கோலடித்து வென்றதை செய்தியில் வாசித்துக் கொண்டிருந்தேன்.

எத்தனை மனிதர்களின் வாழ்வையும் கனவுகளையும் சுமந்து செல்லும் ஒவ்வொரு ரயிலுக்காகவும் காத்திருக்கும் பலரோடு நானும் ஒருத்தியாக காத்திருந்தேன்.

நான் காத்திருந்த பகுதிக்கு டுசில்டோர்ப் ரீசேட்கள் அணிந்த பலரும் வந்திருந்தார்கள்.  அவர்கள் அனைவருமே டுசில்டோர்ப் காற்பந்தாட்ட அபிமானிகள். பலரின் கைகளில் பியர்ப்போத்தல்கள்.

 சிலர் நடனமாடியும் சிலர் மௌனமாகவும் பலர் பாடியும் அந்த நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தது.

18. 41மணிக்கு ரயிலேறுகிறேன். டுசில்டோர்ப் காற்பந்து ரசிகர்கள் பலராலும் அதிகம் ரயில் பெட்டிகள் நிறைந்தது.

மீண்டும் றைன்நதிக் கரைகளால் ரயில் போகிறது.  இரவு 19. 42மணி.  கண்ணுக்கு நேரே தன் கதிர்களை வீசுகிறது சூரியன். கண்ணில் ஒளிவீழக் கண்கள் கூசுகிறது.

மேலிருந்து கீழாக நிழலைக் கீறுகிறது சூரியக்கதிர்கள்.  எதிர் வளத்தில் படிக்கட்டுக்களாக ஒழுங்கமைக்கப்பட்ட மேடுகளில் துளிர் கட்டியிருக்கும் முந்திரிகைக் கொடிகள் மீதும் நதிக்கரைகளில் அமைந்த வீடுகளின் முகடுகளில் படிந்த சூரிய வெளிச்சம் தண்ணிரில்லாத சித்திரமாகி தன்னழகோடு என்னை அழைக்கிறது.

அங்கங்கே பழங்கால வரலாறுகள் எழுதிய கோட்டைகள் பழமை மாறாத இளமையோடு கூட ஒடிவருவது போலிருந்தது.  

யேர்மனியக் கோட்டைகள் ஒரே கலைஞரின் கைவண்ணமோ ?    பலதடவை நினைத்திருக்கிறேன். அவை எப்போதும் ஒரே வடிவங்களையே கொண்டிருக்கிறது.

சில இடங்களில்  உள்மனைகளை ஊடறுத்து ரயில்  ஓடும் போது கோடைகாலத் தோட்டங்கள் தேவாலயங்களைக் கொண்டு வரும் ஊர்மனையழகு உயிரோவியங்களைக் கண்ணிலூற்றுகிறது.

நேரம் 20. 02 நிமிடங்கள்...,
கண்ணைக் காந்திய சூரியன் கோபமாறிச் சிவக்கிறது. கீழிருந்து மென்னிருள் மேலேறுகிறது. மலைகளின் மறைவுகள் கருமண்ணிறமாகிறது. மரங்களின் குருத்திலைகள் இருளையேந்தத் தயாராகிறது.

நேரம் 20. 24....
நதிகளின் பாதைகளை மறைத்துக் கொண்டு ரயில் பதிவான பகுதியில் ஓடுகிறது.  

மஞ்சள் வெளிகளாய் கடுகுத் தோட்டங்கள்.  ஒரே சீராக வடித்த குன்றுகளாக கடுகுப் பூக்கள். பரந்த பச்சை வெளிகளில் புற்கள் பாய்விரித்திருக்க சிறு பறவைகள் குந்தியிருக்கின்றன.

மீண்டும் றைன்நதிக்கரை வருகிறது. மலைகளின் வெளிகளில் ஆங்காங்கே புகார் மூட்டம்.

நேரம் 20. 33....,
துரத்தே தெரியும் கட்டடங்களிலிருந்து ஒளிப்பூக்கள் கண் திறக்கிறது. நதியின் மடியில் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பல்களும் மின்குமிழ்களால் ஒளியேறிக் கண்திக்கிறது.

றைன்நதிக்கு நித்திரை வருது போல. அலைகளின்றி நதி அமைதி கொள்கிறது. மரங்கள் ஆடாமல் அப்படியே கண்ணுறங்கத் தொடங்குகிறது.

நதியோடு நானும் கரைகிறேன். பயண அலைவின் களைப்புத் தீர காதில்  கெட்செற்றூடாக காதை நிறைக்கும் தாமரையக்காவின் '  கண்கள் நீயே காற்றும் நீயே 'பாடல் ஒலிக்கிறது.  

கொலோன் நகரத்துக் கோபுரங்களிலிருந்து சிதறும் ஒளிவெள்ளம் இரவு நேரத்தின் கொலோன் அழகை இதோ பாரென அழைத்தது.எத்தனை தடவைகள் இந்தக் கரைகளையும் அழகையும் அனைத்துக் காலநிலை மாற்றங்களோடும் கண்டாயிற்று. ஆனாலும் புதிது புதிதாய் தன்னழகை கொலோன் நகரும் கோபுரங்களாய் உயர்ந்து நிமிர்ந்திருக்கும் கட்டடங்களும் கண்ணுக்குள் புதிதுபுதிதாய் எழுதிக் கொள்ளும் கவிதைகளின் படிமங்களாய் பதிகிறது.

கொலோன் ஆற்றங்கரைகளை அடையாளம் சொல்லுமாப் போல ஆற்றிலோடிக் கொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சம்.

இருளைப் பிரித்தோடிக் கொண்டிருந்த ரயில் யன்னல்களில் பயணிகளின் முகங்கள் தெரிந்தன.

கொலோன் பிரதான தொடரூந்து நிலையத்தை அடையவிருப்பதை ரயில் அறிவிப்பு ஒலிவாங்கி அறிவித்தது.

நேரம் 20. 54..,
நான் இறங்க வேண்டிய தரிப்பிடத்தை இன்னும் சில நிமிடங்களில் அடையவிருப்பதாக அறிவிப்புக் கேட்கிறது.

இப்போது இருளோடு வெளிச்சப் பொட்டுகள் தெரிகின்றன. இருள் கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியாகி ரயில் வெளிச்சம் மட்டுமே இப்போது கனமடைகிறது.  

சாந்தி நேசக்கரம் யேர்மனி
04/2019

றைன்நதி பற்றிய குறிப்பு :-
றைன் நதியானது சுவிஸ் நாட்டின் அல்ப்ஸ் மலைத்தொடரின் தென்கிழக்குப் பகுதியில உருவாகி ஐரோப்பாவின் பல நாடுகளை ஊடறுத்து ஓடும் பிரதான நதியாகும்.

இது ஐரோப்பாவின் நீளமான நதிகளில் ஒன்றாகும். நீளம் கிட்டத்தட்ட 1230கிலோமீற்றர். நீர்வழிப் போக்குவரத்தின் பிரதான வழியாகவும் அமைகிறது.

யேர்மனியில் றைன் ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் கொலோன் நகரமாகும். யேர்மனியின் பிரதான வரலாற்று நகரங்களில் கொலோன் நகரும் ஒன்றாகும்.

றைன் நதியானது சுவிஸ்,ஒஸ்ரியா ,லக்சம்பேர்க் யேர்மனி ஆகிய நாடுகள் உடாகப் பாய்ந்து நெதர்லாந் நாட்டின் வடகடலில் கலக்கிறது. இந்த நதிக்கரைகளையண்டி பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டைகள் கட்டப்பட்டுள்ளது.

 (4/2019 எழுதப்பட்ட கதை. 2020 நவம்பர் தேசத்தின் குரல் இணையஇதழில் வெளியானது)