Friday, January 31, 2014

இருள் வெளியின் விடிவெள்ளி.

காலிக்கடற்கரையின் அலைகள் அவனது கால்களை வந்து வந்து நனைத்துச் சென்று கொண்டிருந்தது. அலைகளோடு கரைந்து கனவுகள் நுரையாக கண் முன்னே பரந்து கொண்டிருந்தது. மக்களுக்காக மக்களின் வாழ்வுக்காக கரைந்து போகும் நஎண்ணத்தை அந்தக் கரைகளில் நின்றே பலமுறை உரக்கச் சொல்லியிருக்கிறான். மனிதர்களின் குரல்களைவிட அலைகளின் குரலே அவனது காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.

அந்தக் கரையோர மணலில் வெறும் கால்களைப் புதைத்துக் கொண்டு சற்று நேரம் எதையோ யோசித்தான். தான் பிறந்த கரையோரக் கிராமத்தின் நினைவுகள் வந்திருக்க வேண்டும். முகத்தில் அறைந்த கடற்காற்றின் மென்விரல்கள் அழகாய் வாரியிருந்த தலைமுடியைக் குழப்பியது. விரல்களால் தலைமுடியைக் கோதினான்.

அங்கங்கு காதல் சோடிகள் காதலால் மயங்கியிருந்தனர். அவர்களைத் தாண்டி நடந்தான். அன்னாசித் துண்டுகளுக்கு உப்பும் தூளும் தோய்த்து பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டு அன்னாசியின் சுவைபற்றி வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தவனைத் தாண்டியவன் ஜஸ்கிறீம் காரனிடம் போனான். கோண் ஜஸ்கிறீம் வாங்கினான். மாலைப்பொழுதின் இனிமையில் கரைய மறுத்த மனசை மாற்றப் பிரயத்தனப்பட்டான். கையில் இருந்த ஜஸ்கிறீம் கரைந்து கைவிரல்களில் ஒழுகியது.

இருளும் வரையும் கடற்கரையில் கால்புதைத்து இருந்தவன் எழுந்து நடந்தான். மெலிதாகப் பாடலொன்றை உச்சரித்தபடி கடற்கரையைத் தாண்டி வீதியருகால் நடக்கத் தொடங்கினான். மனசுக்குள் ஏதோவொன்று கனத்துக் கொண்டிருந்தது. தாண்டிப்போன பொலிஸ் வாகனத்தை நிதானமாக அவதானித்தபடி வீதியின் மறுகரையை அடைந்தான். தெருவின் இரு மருங்கும் ஒளிச்சிதறல். முகத்தை நேருக்கு நேராய் அடையாளம் காண முடியாதிருந்தாலும் ஆளாளுக்கு முன்னால் வருகிற அல்லது அருகால் செல்கிறவர்களை விலத்திக் கொண்டு போக முடிந்தது.

தங்குமிடத்தையடைந்த போது இரவு 9.40ஆகியிருந்தது. தம்பி சாப்பிட வாங்கோ....! தங்க இடம் கொடுத்த வீட்டின் அம்மா கூப்பிட்டாள். பசிக்கேல்லயம்மா...! சொல்லிவிட்டு நேரே படுக்கைக்கு போனான். நித்திரை வரவில்லை. வெளியில் தொலைக்காட்சியில் படம் ஏதோ போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் படம் பார்ப்போமென எழுந்தான்.

அறையின் வலது பக்க மூலையில் அவனுக்கான மேசையிருந்தது. அந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசியின் மெல்லிய இசையின் அதிர்வு அவனை அழைத்தது. தொலைபேசியை எடுத்து காதில் வைத்தான். வெளிநாட்டிலிருந்து அக்கா அழைத்திருந்தாள்.

எப்பவும் போல அக்கா சுகம் விசாரித்துக் கொண்டாள். சாப்பிட்டியோ ? நித்திரை கொண்டியோ ? அக்காவின் கரிசனை அன்றைக்கும் இயல்பாயே இருந்தது. ஓமக்கா....விளங்குது....! வேறை என்னக்கா....? வேnறையென்ன சொல்லன் ? இன்று அதிகம் பேசத் தெரியாதவன் போல அக்காவின் கதைகளுக்கு பதில் சொல்ல முடியாது தவித்தான்.

என்னடா தடுமாற்றம்...? அக்கா கேட்டாள். காச்சலக்கா அதான்....பொய் சொல்லாதை சொல்லு என்ன ? அன்று அக்காவை சமாளித்து வென்றான். சரி கவனம் நாளைக்கு இரவு எடுக்கிறன். அக்கா தொடர்பிலிருந்து விடுபட்டாள்.
000         000             000

அவனது பயிற்சி முகமொன்றில் அக்காவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். முதல் அறிமுகமே அக்காவோடு அவனை நெருக்கமாக்கியது. அவனிலும் 4வயதால் மூத்தவள் அக்கா. தோற்றத்தில் அவள் அவன் சக வயது போலவே இருந்தாள்.

பணிகள் தவிர்ந்து எவரது தொடர்பையும் பேணிக்கொள்ளக்கூடாத இறுக்கத்தை தனக்குள் வைத்திருந்தவனின் எல்லா முறாலும் அக்காவின் முன்னால் காணாமல் போனது.. அம்மாவுக்குப் பிறகு அக்காவை அவன் அதிகம் நேசித்தான்.

அக்கா எங்கே பிறந்தாள் எங்கே வளர்ந்தாள் ? எதுவும் அறிய நினைத்ததுமில்லை அறிந்ததுமில்லை. ஆனால் அக்காவை அம்மாவாய் நேசித்தான். அக்கா அவனை முழுவதுமாகப் புரிந்தவள் அவனது மனக்குழப்பத்தை ஏதோவொரு உணர்வால் எப்போதுமே உணர்ந்து கொண்டவள்.

அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு அக்காவும் அவனுமே பயணித்தார்கள். போன இடத்திற்கு ஏற்ப இருவரும் உடையிலிருந்து சகல முறைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அக்காவுடன் தென்னிலங்கைத் தெருக்களில் சேர்ந்து திரிந்த காலங்களில் அக்காவின் ஆற்றலை அவன் வியந்து பாராட்டியிருக்கிறான். சரி பப்பாவில ஏத்தாதை வா....என்பாள் அக்கா.

சத்தியமா அக்கா....அவனது சத்தியத்தை அவள் நம்பியதேயில்லை.
உப்பிடி எத்தினை சத்தியமடா செய்திருப்பாய்...? ஏன் நீங்கள் பொய் சத்தியம் ஒருக்காலும் பண்ணேல்லயா ? எனக் கேட்பான். யாரிப்ப இல்லையெண்டா ? அக்கா திரும்பிக் கேட்பாள். பாசம் , பணி, இலட்சியம் இவற்றுக்கிடையிலான வேறுபாட்டை அடிக்கடி சொல்லுவாள். சின்னச் சின்ன விடயங்களில் கூட நிதானத்தை அவனுக்கு கடைப்பிடிக்க வைத்தாள். சிலவேளைகளில் தடுமாறும் அவனது மனசை தலையில் குட்டி அல்லது கோபித்து மாற்றியிருக்கிறாள்.

மூச்சுக்கு மூச்சு அக்கா அக்கா என்று அவன் அழைக்கிற ஒவ்வொரு நொடியும் அக்காவின் அன்பை அவன்மீது அக்கா காட்டுகிற பரிவை அவன் முழுமையாக அனுபவித்திருக்கிறான். அவன் கண்களைக் கவர்ந்த அழகி(கை)களையும் அக்காவுக்குச் சொல்லியிருக்கிறான். பணிக்காக செல்லும் இடமெங்கும் அவனை அழகிகள் அலையாய் வந்து மோதிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த அலைகளின் அடிபடாமல் தனது கடமையை சாதுரியமாய் முடித்து திரும்பிவிடுவான்.

எடுத்துக் கொண்ட இலட்சியத்தை நெஞ்சில் தீயாய் மூட்டியவன். நெருப்போடு திரியும் அவனது இலக்கின் எல்லையைத் தொடும் கனவோடு மட்டுமே அவன் இயங்கிக் கொண்டிருந்தான். அந்த நெருப்பை ஒரு பூ தனது அழகிய இதழ்களால் காயப்படுத்தியிருந்தது.

பிரதான மையமொன்றில் எல்லையை அந்த மையத்தின் உள்ளே நிகழும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள தரவு சேகரிக்க அவளோடு அறிமுகமாக வேண்டியிருந்தது. இவனுக்கு முதல் சிலர் அந்த இடத்தை நெருங்க முடியாது இடையில் திரும்பியிருந்தார்கள். அவன் கண்டுபிடித்த வழியில் அவள் எதிர்பார்க்காத வகையில் அவனது பணிக்கு ஆதரவாய் மாறினாள்.

பெரும் பொறுப்பொன்றில் கடமையில் இருந்த அவனை அவள் காதலித்தாள். அக்கா சொன்னது போல காதல் எப்பவும் வரலாம். எனது எதிரியிலும் வரலாம் என்ற வாக்கு பொய்யாகாமல் ஐயர்வீட்டு அழகியில் அவனுக்குக் காதல் வந்தது அதிசயமில்லைத்தான். அக்காவுக்கு அவசரமாக அந்தக்காதல் பற்றிச் சொன்னான். நேரில் நின்றிருந்தால் அவன் மண்டை உடைந்திருக்கும் அக்காவின் குட்டில்.

என்ன கலியாணம் கட்டப்போறியோ ? அக்கா கோபமாய் கேட்டாள். இல்லை....சொல்லோணும் போல இருந்தது...நான் வேறையாரிட்டையும் இதைச் சொல்லேலுமோ ? என்ரை அக்காட்டைத்தானே சொல்லலாம்.....அக்காவுக்கு பனிக்கட்டிகளால் அரிச்சனை செய்து அக்காவை குளிர்விக்க முயன்றான். காணுமடா ராசா....நிப்பாட்டு....!

பாவமாயிருக்குதக்கா....அவன் குளைந்தான். அதுக்கு...? அக்கா கடுமையாகவே பேசினாள். உதையெல்லாம் விட்டுப்போட்டு வேலையைப் பாரடா....! பிறகு அக்கா ஆசிரியையாகினாள். அந்தப் புயல் காற்றிலிருந்து அவனைக் காப்பாற்ற அக்கா ஆலோசனைகள் சொன்னாள். பாவம் மனங்களை குழப்பாதையடா....! அளவோடை தொடர்பை வைச்சிரு...! அக்காவாணை நம்பு நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல....!

அவன் முற்றும் துறந்த முனிவனில்லை அவனும் எல்லா ஆசைகளையும் கொண்ட உணர்வும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதன் தான். அவனது கட்டுப்பாடு ஒழுக்கம் யாவையும் தாண்டி ஒருத்தி இதயத்தில் இடம் கேட்கிறாள். இலட்சியத்துக்காக தன்னை ஒட்டுமொத்தமும் தத்துக் கொடுத்துவிட்டானென்று அவளுக்குச் சொல்ல முடியாதிருந்தது.

நான் வெளிநாடு போகப்போறன்....! லண்டனில எனக்கொரு காதலி இருக்கிறாள்....சத்தியமா நான் உங்களை விரும்பேல்ல... என்று அவளுக்குப் பொய் சொன்னான். அவள் அழுது கொண்டே இறுதியாய் அவனைக் கடந்து போனாள். அந்த அழுகை ஆயிரங்காலத்துப் பாவச்சாபத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டுப் போவது போலுணர்ந்தான்.

அவள்  போய் 5மாதங்கள் கடந்திருந்தது. ஆனாலும் அவள் ஞாபகங்களைவிட்டு அகலாமல் அவன் இதயத்தில் கதிரை போட்டு உட்கார்ந்திருந்தாள். பிறகொருநாள் கதிரேசன் கோவிலில் எதேச்சையாக நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. தெரியாதவள் போலவே கடந்து சென்றாள். அனால் அவனால் அவளது மௌனத்தைக் கடந்து செல்ல முடியவில்லை. அவன் அன்றைக்கு அவளையே பார்த்தான்.

ஒருத்தியின் மனசில் ஆசையை வளரச் செய்து அதனைக் காதலாகக் துளிர்க்கச் செய்து  அவளை அழ வைத்து துயரைக் கொடுத்த தனது மூஞ்சி மீது சின்னக் கோபமும் வந்தது. எத்தனையோ பேரை பணிசார்ந்து பழகியதும் சந்தித்ததும் உறவுகள் நீடித்ததும் அவனது கடந்த பாதையில் பலரைக் கடந்திருக்கிறான். அவள் மட்டும் அவனைக் கடந்து போக விடாமல் கண்களில் கண்ணீரைப் பூக்க வைத்ததற்கான காரணத்தைத் தேடினான். மண்டையைக் குடையும் அந்த மர்மத்தை மட்டும் கடைசி வரையும் அவன் கண்டு பிடிக்கவேயில்லை.

இன்னொரு முறை இந்த உலகில் பிறக்க வேண்டுமென்று கடவுளை வேண்டினான். அவளைக் காதலித்து திருமணம் செய்து வாழ ஒரு பிறவிக்கு அப்போதே கடவுளிடம் விண்ணப்பித்துக் கொண்டான்.

பொhடியளுக்கு பெட்டையளில காதல் வாறதும் பெட்டையளுக்கு பொடியளில காதல் வாறதும் பெரிய புதினமில்லையடா தம்பி....காதலுக்காக ஒருதரும் உயிரை விடாயினம்....அங்கினைக்கை ஞாபகத்தில வைச்சு சிலவேளை அழக்கூடும்....உதெல்லாத்தையும் விட்டிட்டு தந்த வேலையைச் செய்....அக்கா இதைத்தான் கடைசியாய் சொன்னாள்.
000                   000               000

இலட்சியத்தின் முன்னால் அவனது காதல் தோற்றுப்போனது. தனக்கான பணியில் கவனமாக இயங்கத் தொடங்கினான். தனக்கான இலக்கைத் தேடிய பயணத்தில் அவனுக்கான நாள் இடம் தெரிவாகியது.

வாழ்வின் முழுமையும் அர்த்தமும் அன்றைய முடிவில் எழுதப்படுமென்று நம்பினான். அன்றைக்கு அவன் தெளிவாகவே புறப்பட்டான். தாயக மீட்பிற்கான தனது கடமையை முடிக்கும் கனவோடு தடையொன்றை அகற்றி அந்தக் காற்றோடு கல(ரை)ந்து போய்விடும் கடைசித் தருணமும் கடைசி வினாடியும் அது....!

அதிர்ந்த பேரோசையின் முடிவில் அவன் துகள் துகளாகிக் கரைந்தான். முகம் மறைந்தது முகவரி மறைந்தது குரலும் மறைந்தது அவன் கொள்கை மட்டும் உறுதியோடு வரலாற்றில் அவனை எழுதிக் கொண்டது. இருள் கலைந்து விடியும் நாளிலும் வெளியில் வராத அவனது வெற்றியும் வீரமும் மௌனமாக இருளின் வெளியில் ஒளியாய்....!

அவன் ஒளிபொருந்திய சூரியனாய் நட்சத்திர வெளிகளில் ஒளிப்பொட்டாகி அக்காவின் கண்ணில் ஈரமாக அவனது நினைவுகள் ஈர நினைவாக....பல்லாயிரம் மைல்கள் கடந்து ஒளிதரும் விடிவெள்ளியாய் அவன் அக்காவின் நெஞ்சிலும் அவனைப் பொத்தி வளர்த்து வழிகாட்டி வழியனுப்பியவர்கள் நினைவுகளிலும் நிரந்தரமாகினான்.....!

04.11.2012
- சாந்தி நேசக்கரம் -

Tuesday, January 14, 2014

மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு)

இக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)



அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.



அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிகள் விழித்திருக்க இருக்கிறேன். திரும்பத் தூங்க முடியாது அந்தக்குரல் அடிக்கடி வந்து போனது.


என்ன நித்திரை கொள்ளாம எழும்பியிருக்கிறீர்....?
இது என்னவனின் குரல்.
நித்திரை வரேல்ல....
வாரும் வந்துபடும்...
இல்லை கொஞ்சநேரம் இருக்கப் போறன்...
சொல்லிவிட்டு அதே இடத்தில் இருக்கிறேன்.



ஏதோ அந்தரமாய்..... யாரையோ பறிகொடுத்து விட்டதான உணர்வில் மனம் துடிக்கிறது. எழுந்து போய்ப்படுக்கிறேன். மீண்டும் உறங்க எடுத்த முயற்சி தோற்றுப் போய் எழுகிறேன்.


இன்று அவன் தொடர்பு கொள்வான். அது ஏதோவொரு சோகத்தை எனக்குத் தந்துபோகும். என் ஆன்ம உணர்வின் அதிர்வு அது. அந்த அதிகாலையில் முகம் கழுவி விபூதி பூசிக் கடவுளைக் கும்பிடுகிறேன். கடவுளே ஒருத்தருக்கும் ஒண்டும் நடக்கக் கூடாது. அவர்கள் யாரையும் நமது தேசம் இழக்கக்கூடாது. இழப்பில்லாத வெற்றியை அவர்கள் பெற்று அவர்கள் வெல்ல வேண்டும். ஆண்டவரே அவர்களை அந்தச் சிங்கங்களின் கண்களிலிருந்து காத்துக்கொள்.


இல்லை. அவன் ஒரு சேதியைக் சொல்லப்போகிறான்.....நீ.... அந்தச்சேதியில் உடைந்து.....நொருங்கப் போகிறது உனது ஆன்மா.....ஏதோவொரு அசரீரீ என்மனமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.


அக்கா சொல்லுங்கோ நேற்று நடந்த சம்பவத்திலை அது உண்மையாமெண்டு.
எனக்கும் சரியான காச்சலெண்டும் சொல்லுங்கோக்கா....!
சொல்லீட்டு ஒருக்கா என்னண்டு சொல்லுங்கோ நான் நிக்கிறன்....
என் பதிலுக்குக் காத்திராது தன் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான்.



அவனது தொடர்பிலக்கத்தைக் குறித்த கடதாசியில் அவனது பெயரைப் பதிவாக்கியது பேனா. அவர்களின் இலட்சியம் சுமந்து பாதியில் ஒருவன் பயணம் முடியமுன்னரே பலியாகிவிட்டான். அவனது இழப்பில் அவனது அவர்கள் இடிந்து போவார்களா.......? இதயம் முட்ட சோகம் சுமந்து ஊமையாய் அழுவார்களா.....? இல்லை அவர்கள் கொண்ட கொள்கையில் இன்னும் வீச்சடைவார்கள்....! வீரமுடன் இன்னும் பலர் அவன்வழியில் எழுவார்கள்....


அவனின் அவர்களின் மனங்கள் துடிக்கும் அந்தச்செய்தியை அவர்களுக்குச் சொல்லிவிட்டு மீண்டும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அவன்தான் அவனின் குரல்தான்.


என்னவாமக்கா....?
உங்களைக் கவனமா இருக்கட்டாம்...!
கண்டபாட்டுக்கு வெளியளிலை திரிய வேண்டாமாம்.
கவனமா இருக்கட்டாமோ....?
சொல்லுங்கோ கவனமா இருக்கிறனாமெண்டு.



சிரித்துக் கொண்டு சொன்னான். அவனது அவர்களில் பலரது இறுதி ஊர்வலத்தில் கலந்து , அவர்களுடன் பழகிய நாட்களின் நினைவுகள் எத்தனையோ கடந்த நாட்களில் கரைந்துள்ளது. ஆனால் இத்தனை உறுதியாக , இத்தனை துணிவாக , என்காதுகள் இப்படியொரு செய்தியை இதுவரை கேட்டறியவில்லை. இதுவே முதல்தடவையாகக் கேட்கிறேன்.


அந்தப்பகல் என் நினைவையெல்லாம் அள்ளிக் கொண்டு போனது. அடிக்கடி அவன் குரல் என் செவிப்பறைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. எந்த வேலையையும் செய்யமுடியாது அவனது குரலும் , அவன் தந்த செய்தியும் என் சிந்தை முழுவதும் சிறகடித்துக் கொண்டிருந்தது.


முதல் நாளைய பொங்கலுக்கான வாழ்த்துக்கள் அன்றும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவனது செய்தியே என் மனசெங்கும் பரந்து கிடந்தது. அநாமதேயமாய் நேற்று சிங்கப்படைகளின் சன்னங்கள் துளைத்து அந்த நகரின் தெருவில் அணைந்து போன அவர்களது அவனுக்காக இதயம் அழுதது.


இடையில் சிலதடவைகள் செய்தி தரும் அவன் குரல் அக்கா என்றழைக்கும். ஏதாவது செய்தியோடு வரும். நாளடைவில் அவன் குரல் வருவதேயில்லை. ஆனால் என் நினைவையெல்லாம் ஆக்கிரமித்துப் போன அந்தக்குரல். அடிக்கடி என்னை அழவும் வைத்து விடும். இடையிடை அவன் நினைவில் பாதியில் தூக்கம் அறுந்துபோய் ஏதோ துயரின் கனவுகள் மனவெளியெங்கும் அலையும். அதிலிருந்து மீழ்வதற்கு அடுத்துச் சில வாரங்கள் கூட ஆகும். பின் அவனது அவர்களின் குரல்கள் வருகின்ற போது அமைதியாகும்.



அன்றொரு அதிகாலை அந்தப்பெரு நகரின் பெரிய மையமொன்று அவனது அவர்களால் அழித்தொழிக்கப்பட்டது. ஆனந்தத்தில் மனம் துள்ளிக் குதித்து ஆரவாரித்தது. உலகே அன்று வாய்பிழந்து பார்க்க அவர்கள் செய்த தியாகத்தில் சிங்கப்படையும் கலங்கிப்போனது. அந்தக்களத்தில் அவர்கள் தீயாகி , தியாகத்தின் இமயம் ஏறி காற்றாகி , குருதியில் குளித்துக் கிடந்தசிலரது முகங்களையும் , உடலங்களையும் உலக ஊடகங்களெல்லாம் தலைப்புச் செய்தியாக்கி அடிக்கடி அந்த ஒளிப்பதிவினை ஓடவிட்டுக் கொண்டிருந்தது.


அந்தப்பெரும் மையத்துள் புகுந்து சிங்கப்படைகளையும் ,அவர்கள் அள்ளிக் கொட்டிய குண்டுகளின் ஆணவத்திற்கு அடிகொடுத்து அடங்கிப்போன மூச்சுகளின் முகங்களை இணையங்களும் பதிந்திருந்தது. அவர்களின் முகங்களுக்குள் அவனின் நினைவுகள் ஆன்மாவைப் பிடுங்கியெடுத்துக் கொண்டிருந்தது.


ஏதோ உடன்பிறந்தவர்களை , ஊரில் தெரிந்தவரை , உறவாயிருந்தவர்களை இழந்து போனதான உணர்வில் உயிர் வலித்தது. அந்த மானமறவர்களை ஈன்றவரின் , உடன்பிறந்தவரின் , அவர்களை வீரத்தின் வேர்களாய் ஆக்கி உலகே வாய்பிழக்குமளவிற்கு உயர்த்தி விட்ட உயர்ந்தவர்களுக்கு எத்தனை துயரைக் கொடுக்கும் அவர்கள் நினைவு...! அதேபோல் என் ஆன்மாவும் அவர்களை அடிக்கடி நினைவில் ஆழ்த்தி நெஞ்சு கலங்கியது.


அவன் குரல் இப்போ வருவதேயில்லை. வருடம் ஒன்றும் முடிந்து போனது. அவர்களின் தியாகங்களின் பெறுமதி எல்லோரும் ஊர் காணும் அமைதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஊர் போயிருந்தேன். அவனின் அவர்களுடன் கதைத்து , சிரித்து அவர்களுக்குள் அவனது குரலைத் தேடியது என் ஆன்மா. யாருக்குள்ளும் அந்தக் குரல் இருக்கவில்லை. அவர்கள் நினைவுகளோடு வந்தாயிற்று.


பொங்கல் , வருடம் , தீபாவழி , பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் , நலம் விசாரித்து அவர்கள் எழுதுகின்ற கடிதங்கள் எல்லாம் வருகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளைத் தருகின்ற அந்த எழுத்துக்கள் இதய அறைகளிலும் , எனது நாளேட்டிலும் பத்திரமாயிருக்கின்றன. அவனது குரலும் அவனும் அமைதியாயே..... வந்து போகிறது பொங்கல் தினம். அவனது குரல் இப்போதும் என் இதயத்தில்க் கேட்கிறது. அவன் எங்கிருப்பான்...?


அன்பான நண்பா....,
எங்கிருக்கிறாய் நீ...!
கல்லறையிலிருக்கிறாயா......?
அல்லது யாரும் காணாமல் வெடித்தாயா......?
ஊர்; சொல்லாமல் ,
உறவுகள் தெரியாமல்
உறங்கிடுவோர் வரிசையில் நீயும்
அமைதியாய் துயில்கிறாயா.....?
எங்கிருக்கிறாய் நீ.....?
உனது குரல், உனது சிரிப்பு ,
உனது துணிந்த பேச்சு ,
உனது நினைவுகள் எல்லாமே நினைவிருக்கிறது.
நீ எங்கிருக்கிறாய்....?



* 19.03.03 
 சாந்தி நேசக்கரம்

Monday, January 13, 2014

தேசத்தின் புயல் மாதவன்.



பச்சை வயல் நிறைந்த 
தென்மராட்சி மண்ணில் 
மாதவமாய் வந்துதித்த 
மனோரஞ்சன்.

தொண்ணூறுகளின் தொடக்கம்....,

யாரெவனோ என்றிவனை ஊர் போற்றும்
வீரனாய் புலி வேங்கையாய்
போர்க்காலமொன்றில் 
யாழ் மண்ணில் பணிசெய்ய வந்தான்.

'மாதவன்'
மறக்க முடியாத நினைவுகளில் 
அவன் புன்னகையும் ஆழுமையும்
ஆற்றலின் பன்முகமும் 
அழியாச்சுடர் அவன்.....!

நெருப்பைச் சுமந்தான் 
சிரிப்பில் மட்டும் 
இனிப்பாய் கரைந்தான்.
இனிமையான போராளியாய்
இதயங்களில் நிறைந்தான்....!

இசையூடக வழியே பாடகனாய்
திரையூடக வழியே நடிகனாய்
கவியூடக வழியே கவிஞனாய்
கலையின் மொத்த வடிவம் - மாதவன் 
கலைபண்பாட்டுக்கழகத்தில்
இவனொரு வரலாறு.

இவனின்றிய வரலாறொன்று 
இருந்தறியாத நாட்களில் 
கலைகடந்து கனரகம் சுமந்து
களம் கண்ட போர் வீரன்
ஓய்வின்றி உழைத்தவன் 
ஒருநாள் ஓய்ந்து போனான்.

வீரனாய் விழிமூடி வுpத்தாய் 
ஓயாத அலை மூன்றில்
காயாத வீரத்தின் கதையாக
கண்மூடித்துயின்றான்....!

தென்றலாய் வளர்ந்து தேசத்தின் புயலாகி
கண்களில் என்றும் போல் 
கனதியான புன்னகை
கடைசிவரையிலும் கனலாய் திரிந்து
கடைசி விடியலின் பூவிதழ் நுனியில்
வாசனையாய் வரலாறாய்
சென்றான் மாதவன் வென்றான்....!

ஏன்றுமே மாறாத அன்பொடு 
போனான் வீரனாய் மேஜர் மாதவன்
இன்றுமுன் நினைவுகள் நேற்றுப் போலவே 
நீதிரிந்த தெருக்களில் உனது சுவடுகள்
நீ நேசித்தவர்கள் நெஞ்சுகளில் 
நீங்கா நினைவாய் தேங்கியிருக்கிறாய்
தேசத்தின் புயலாய்....!


- சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

Tuesday, December 10, 2013

பெருமை கொள்ளும் செயல் வீரன் கப்டன் ஊரான்

இன்பசோதி'
பெயரோடு இணைந்த சோதிபோல்
நீயும் ஒளிபொருந்தியவன்.

காற்றிலேறிக் கைவீசிச் செல்லும்
வண்ணத்துப் பூச்சியாய்
உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில்
நீயொரு ராசகுமாரன்.

காலம் உனக்காய்
கட்டியெழுப்பிய கோட்டையில்
நீயே கடவுளாய்
காலவிதியின் கதையாய்....!

நிலவாய் நீல வானமாய்
நீயுருவாக்கிய காலத்தின் கோலம்
உனது எண்ணங்கள் போல
வர்ணங்களாய்.....!

காலச்சக்கரம்
மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி
உனது வர்ணங்களாலான உலகை
இரத்தச் சிவப்பாக்கிய போது
நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி
தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....!

ஊரான் உனது பெயர் போலவே
ஊரைக்கவர்ந்த புலிவீரன்  நீ.
உன் போல உருவாக
உன்போல உடையுடுக்க
உன்போல வாகனமோட
உன் போல் வாழ ஆசைப்பட்ட
உன் சக தோழர்களின் கனவு நாயகன் நீ.

கண்களில் சூரியப்பெருநதி
என்றென்றும் கருணையை மட்டுமே
சுமந்த ஈரநிலம் உன்னிதயம்.
ஆதனால் தானே எல்லோரையும்
உன்னை நேசிக்க வைத்த
வித்தியாசமானவன் நீ.

உன் ஆற்றலும் ஆழுமையும்
உன்னை வித்தியாசப்படுத்தியது
அதனால் தானே
வித்தியாசமான வேங்கையாய் - நீ
புலியாய் புலனாய்வாளனாய்
சக போராளிகளுக்கெல்லாம் ஆசானாய்
அறிவியல் ஞானியாய் நீயொரு அவதாரம்.

முல்லைமண் கொள்ளையிட்ட பகைவர்கள்
முகாம் மீது தீமூட்ட நீயும் தீயாகி
வந்த பகைவிரட்டிச் சமராடி
அளம்பில் மணல்வெளியில்
ஆகுதியாய் போனாய்.

கனபுரம் துயிலிடத்தில்
ஓய்வெடுத்துறங்கிய வேங்கையே....!
சொல்வதற்கு உன் சாதனைகள்
பெருமை கொள்ளும் செயல் வீரன் நீ.

ஆண்டுகள் பல சென்று - நீ
அமைதியாய் போனாலும்
ஆறாது அலையும் அலகைளின்
ஓசையாய் ஒலியாய்
என்றுமே வாழ்வாய்
கப்டன் ஊரானாய் கௌதமனாய்
காலமுள்ள வரையும் உன் சாதனைகள்
வாழந்து கொண்டேயிருக்கும்.

- சாந்தி நேசக்கரம் - Email :- rameshsanthi@gmail.com

Friday, December 6, 2013

ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா !


நிறவெறிக்கெதிராய்
நெருப்பெடுத்த கறுப்புச் சுடர்.
காலம் ஆபிரிக்க இருளகல
கைபிடித்தேற்றிய பேரொளி.

இருள் கொன்று ஆபிரிக்கர்
ஓளிகொண்டெழ உதித்த
மூத்தவன் மண்டேலா.
இனவிடுதலையை
உயிராய் கொண்டதால் - நீ
இருபத்தேழு வருடங்கள்
இரும்புக்கம்பிகளில் அடைபட்டு
வெளியில் வந்த போது நீயே
உலக விடிவெள்ளியாய் ஆகினாய்.

போராடும் தேசங்களின்
வழிகாட்டியாய்
ஒளியூட்டிய இரும்பு.
இறந்து போனாயாம்
இன்றைய செய்திகள்
உன்னையே நினைவில்
உடுத்திக் கொள்கிறது.

தங்கச் சூரியன் எங்கள் தலைவன்
உன்னையும் சொல்லியே
உருவாக்கினான் தமிழனை
தமிழீழ விடுதலைப்போரை
வரலாறாக்கினான்.

உனக்கு நிகராய் உனக்கு நேராய்
வாழ்ந்த எங்கள் தலைவனை
உன்னில் காண்கிறோம்
உலகில் வாழ்கிறோம்.
என்றோ நாங்களும்
இவ்வுலகை வெல்லுவோம்.

உண்மையின் குறியீடே
உலகின் ஒப்பிலா வீரனே
இருள் அகற்றிய ஒளியே
 போய் வருக
போராடும் பூமியெங்கும்
போராடியவர்கள் யாவரின் சார்பாய்
உனக்கெங்கள் வீரவணக்கம்.

ஓய்வில்லை வீரனுக்கு - அவன்
உறங்கினாலும் ஓயாத வேகம்
கல்லறைக்குள்ளிருந்தும்
படைநடத்தும் அவன் வாழ்வு.
நீயும் காலமெல்லாம்
படை(கை) வெல்லும் வீரனாய்
இந்தப் பாருள்ளவரை
படைநடத்திக் கொண்டேயிருப்பாய்.
போய் வருக மண்டேலா
உலகின் போர் விதியை வென்றவனே
போய் வருக.

06.12.2013
சாந்தி நேசக்கரம்

Friday, November 29, 2013

வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர்


ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும்.

2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி.அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ?

இன்பசோதியென்ற பெயரிலுள்ள சோதியின் ஒளிபோல அவனது சாதனைகளும் அவன் இயல்புகளும் ஒளிபொருந்தியவையே. அதிகம் அலட்டாத அமைதியே உருவானவன். வாய் திறந்து பேசினால் கலகலப்பை மட்டுமே தரும் அவனது பேச்சும் சிரிப்பும் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும்.

வீட்டிலும் உறவுகளாலும் தம்பியென்றும் இமையாளன் என்றும் அழைக்கப்பட்ட இன்பசோதி நகைச்சுவையோடும் நட்போடும் எல்லோரது அன்பையும் பெற்றிருந்தான்.

குடும்பத்தில் செல்லப்பிள்ளையான அவனுக்கு சின்ன வயதில் இறைச்சி , மரக்கறி உணவுகள் பிடிக்காது. அவனது தந்தையார் அடைக்கலம் ஐயா தமிழ் மீதும் தமிழ் மண்மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட தமிழ்த்தேசியவாதி.

தனது மகனை மரக்கறி , இறைச்சி வகைகளைச் சாப்பிட வைப்பதற்கு அடிக்கடி சொல்லுவார். இவற்றையெல்லாம் நீ சாப்பிட்டால் தான் பலமுடையவனாவாய். உனது தாயகத்திற்காக போராட உனக்குப் பலம் கிடைக்கும். அப்போதுதான் நீ தமிழீழத் தாயகத்திற்காகப் போராட முடியும்.
அவன் சாப்பிட மறுத்த இறைச்சி ,மரக்கறி உணவை அவன் சாப்பிடத் தொடங்கியதே பலமுள்ளவனாகி தமிழீழ தேசத்துக்காகப் போராடுவேன் என்ற வைராக்கியத்தோடுதான் வளர்ந்தான். 

அப்பா சொன்னது போலவே அவன் பலமுள்ளவனாக வளர்ந்து ஒரு நாள் தமிழீழ தாயகத்திற்காகவே தனதுயிரையும் தருவானென்று அன்று யாரும் அறிந்திருக்கவேயில்லை.

வீட்டின் செல்லப்பிள்ளையை ஊரின் மதிப்புக்குரிய பிள்ளையை யாருக்குத்தான் பிடிக்காது. அவன் அப்படித்தான் வாழ்ந்தான் வரலாறாகினான். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கணிதமேதையை அவனது குடும்பம் எதிர்பார்த்திருந்தது. அதே கனவோடுதான் யாழ் சென் பற்றிக்ஸ்சின் மாணவனாகினான்.

படிப்பில் திறமையான மாணவனான இன்பசோதி சென் பற்றிக்ஸ் கிறிக்கெற் விளையாட்டு அணியின் சிறப்பு வீரனாகவும் திகழ்ந்தான் என்பதை அந்தப்பாடசாலை தனது வெற்றிக் கிண்ணங்களில் நிச்சயம் நினைவு கொள்ளும்.

இடது கைப்பந்து வீச்சாளனான இன்பசோதியின் வேகப்பந்து வீச்சில் வெற்றியைத் தீர்மானிக்கும் வேகத்தை நடுவர்களே அசந்து போகும் வண்ணம் அவனது பந்துவீச்சும் வேகமும் ஆச்சரியப்படவைக்கும். இன்பசோதி களமிறங்கினால் வெற்றியை அவனது அணியே வென்று செல்லும். அவ்வளவு திறமையான கிறிக்கெட் விளையாட்டுக்காரன்.

வெடியோசைகளும் மரணங்களும் யாழ்மண்ணின் அமைதியைக் கலை(ரை)த்துச் சாவோலம் நிரம்பிய காலமது. சாதரணதரத்தில் சிறந்த புள்ளிகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்துறையைத் தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்த இன்பசோதியை அவனது அமைதியைக் கொன்றது யுத்தம்.

வாழ்வதற்கான சுதந்திர தேசம் இல்லாத வரை உயர்கல்வி கற்றும் தன்னால் நிம்மதியைப் பெற முடியாதென்ற உண்மையை உணர்ந்தான். துடினமும் அதே நேரம் கண்டிப்பும் மிக்கவனைக் காலம் அழைத்தது களம் நோக்கி.

சென்பற்றிக்ஸ் கல்லூரியிலிருந்து தாயகப்போரில் தங்களை இணைத்து தாயகம் மீட்கவெனப் புறப்பட்ட 30மாணவர்களில் இன்பசோதியும் ஒருவனாக 1991இல் விடுதலைப்புலியாக இணைந்தான். எதிர்காலம் பெறவிருந்த 30 கல்விமான்களை அடக்குமுறையாளர்கள் ஆயுதம் தரிக்கக் காரணமாகினார்கள். ஒவ்வொரு போராளியின் உருவாக்கத்தின் பின்னும் ஓராயிரம் கதைகளும் துயர்களும் இருக்கும். அந்தத் துயர்களும் கதைகளுமே அவர்களை விடுதலைப்போரில் வீச்சோடும் வீரியத்தோடும் வீழும் வரையும் வாழ வைத்தது வரலாறு.

இம்ரான் பாண்டியன் படையணியின் பயிற்சி முகாமான சரத்பாபு 3 இன்பசோதியையும் உள்வாங்கியது. இன்பசோதி ஊரான் அல்லது கௌதமன் என்ற பெயரோடு பயிற்சியை நிறைவேற்றி வரிச்சீருடை தரித்த புலியாகினான்.

தோற்றத்தில் கடுமையும் , பார்வையில் கடமையும் அந்தக் கண்ணில் இருந்த கர்வமும் ஒரு சிறந்த இராணுவ வீரனை எங்களுக்குத் தந்தது. ஊரான் என்ற இளம்புலிவீரனை சிறந்த ஆற்றலாளனை கடமையை மட்டுமே கவனத்தில் நிறைத்து ஈழக்கனவை இதயத்தில் சுமந்து திரிந்த எரிமலையை விடுதலைப்புலிகள் அமைப்பின் வேர்களில் ஒருவனாக ஊரானும் இருந்தான் என்றால் அது பெருமையே.

பயிற்சி முடித்து வெளியில் வந்த ஊரான் சண்டைக்களத்திற்கே செல்லும் கனவோடு வந்தான். ஆயினும் அவனது ஆற்றல் மேலும் பல திறமையாளர்களை உருவாக்கும் வல்லமை பொருந்தியது என்பதனை உணர்ந்தவர்களால் 1992இல் தோற்றம் பெற்ற வெளியக பாதுகாப்பணியின் முதலாவது அணியின் சிறப்புப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட முதல் 30பேரில் ஊரானும் இணைக்கப்பட்டான்.

களத்தில் சென்று நேரடிச்சமராடும் போருக்கு நிகராக சவாலாக இருந்த பாதுகாப்பணியின் தேவையும் விரிவாக்கமும் உணரப்பட்ட பொது ஊரான் மிகவும் சாதுரியம் மிக்க போராளியாக பாதுகாப்பணியின் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டான்.

1993 – 1994 காலப்பகுதி விடுதலைப் போராட்ட காலத்தில் சவால்களையும் சதியையும் சந்தித்த காலப்பகுதிகளில் மறக்கப்படாத வடுக்களால் நிறைந்த காலம். அக்காலத்தில் ஊரானின் பங்கும் திறமையும் வெளிப்பட்ட விதம் தலைவராலேயே கௌரவம் பெற்றது.

அக்காலப்பகுதியில் தளபதிகளான சொர்ணம் , பொட்டு அம்மான் போன்றவர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் ஊரான் என்பது அவனது ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த வெற்றிதான். மிகவும் சிக்கல் மிகுந்த அந்தக்காலத்தில் ஊரானின் புத்திசாலித்தனமான செயற்பாடு வெற்றிகளை அவதானித்த தலைவர் 1995இல் வெளியகப் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக ஊரானை நியமித்தார்.

ஓவ்வொரு விடுதலைப்புலி வீரனுக்கும் உரிய வித்தியாசமான ஆற்றல்களில் ஊரானின் ஆற்றல் புலனாய்வுத்துறையில் மிகவும் காத்திரமானதாகவும் அவசியமானதாகவும் அமைந்திருந்தது. இயல்பிலே அமைதியான போராளி. அது வீட்டிலிருந்து வரும் போதே கூட வந்த இயல்பு. தோற்றத்தில் கம்பீரமும் பார்வையில் கூட அவனொரு புரியாத புதிர். ஆனால் அவனை நெருங்கி அவனோடு பழகியவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஈரநெஞ்சுக்காரன்.

'கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுமுண்டு கரும்புலிகள் விழிகளில் நீர் வழிவதுமுண்டு'' என்பது பாடல் வரியொன்று. ஆனால் ஊரான் என்ற கடுமையான மனிதனுக்குள்ளும் ஈரமும் வீரமும் அந்தக் கண்களில் சுரந்த கருணையும் அவனோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய வித்தியாசமான போராளி.

இவனின் நடையை,மோட்டார் சைக்கிள் ஓடும் திறனை ,உடை அழகைப் பார்த்து அவனைப் போல இருக்க ஆசைபட்டவர்கள் பலர். எல்லோரையும் தனது பார்வையால் கட்டிப் போடுகிற ஆளுமையால் வெல்லுகிற வல்லமையைப் பெற்றிருந்த ஒரு இரும்பு அவனென்றால் அது மிகையில்லை.

சிறந்த கிறிக்கெட் வீரனான அவன் மீளவும் கிறிக்கெட் விளையாட விரும்பினான். அவனது ஆசைக்குத் தடையின்றி அவனை இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிக்கெட் போட்டிக்கு அனுப்பியது. இடது கைப்பந்து வீச்சாளன் இன்பசோதி ஊரானாகி கிறிக்கெட் போட்டியில் பங்கெடுத்து பள்ளிக்காலத்து மாணவனாகி அந்தப்போட்டியில் மீண்டும் வெற்றியைத் தனதாக்கினான்.

அவன் பங்கேற்று விளையாடிய அணியே அந்தப் போட்டியில் வென்றது. வெற்றி பெற்ற நாயகனாக வந்தான். அப்போது யாழ் மண்ணில் வெளியாகிய பத்திரிகைகளை ஊரான் நிறைத்திருந்தான். அவனது வெற்றிச் செய்தியைப் பிரசுரித்த பத்திரிகைகள் பெருமையடைந்தன. அந்தப் புலியின் விளையாட்டு வீரத்தை யாழ் மண்ணெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தன பத்திரிகைகள்.
கிறிக்கெட் மட்டுமன்றி சதுரங்க விளையாட்டிலும் சாதனை படைத்தவன். போராளிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளின் வெற்றி நாயகனாகவும் வலம் வந்தான்.

தான் பொறுப்பு வகித்த துறையில் பணியாற்றிய போராளிகள் விடுமுறையில் வீடுகளுக்குச் செல்லும் போது அவர்களைத் தானே வீடுகளுக்குக் கொண்டு போய் விடுவது வளமை. ஒவ்வொரு போராளியுடனும் சென்று அவனது வீட்டு நிலமைகளை அவதானித்து வந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வைப்பதிலும் தனது கவனத்தைச் செலுத்தி சக போராளிகளிடத்தில் நீங்கா அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்ட போராளி.

எத்தனையோ சிறந்த போர்வீரர்களை உருவாக்கி சிறந்த புலனாய்வாளர்களை உருவாக்கி படையணிகளுக்குப் பணிக்கு அனுப்பிய ஊரானின் மனவுறுதியை அந்த இரும்பு நெஞ்சை உறைய வைத்து உருக வைத்த சம்பவம் அவனைக் களம் போகத் தூண்டுகோலானது.

சென்பற்றிக்ஸ்சிலிருந்து போராளிகளாக வந்த அவனது நண்பர்களில் அவனது ஆத்ம நண்பனான உதயச்சந்திரன் அல்லது கண்ணாடியின் வீரச்சாவு அவனையும் களம் சென்று எதிரியை வீழ்த்த வேண்டுமென்ற ஓர்மத்தை விதைத்தது.

1995ல் திருகோணமலை பன்குளம் இராணுவ மினிமுகாம் மீதான தாக்குதலில் களமாடி தனது இன்னுயிரை ஈகம் தந்து வீரச்சாவடைந்த மேஜர் உதயச்சந்திரனின் மரணம் ஊரானை உறங்க விடாமல் அலைத்தது. தன்னிடம் வழங்கப்பட்டிருந்த வெளியகப்பாதுகாப்பணியின் பொறுப்பை விட்டு சண்டைக்குச் செல்லப் போவதாக மேலிடத்திற்கு தொல்லைகொடுத்துக் கொண்டிருந்து ஒருநாள் தனது ஆசையை நிறைவேற்றும் அனுமதியையும் பெற்றுக் கொண்டான்.

பாதுகாப்பணியின் பொறுப்பு ரட்ணம் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டு ஊரான் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் அணியில் இணைக்கப்பட்டான்.
யாழ்மண் புலிகளிடமிருந்து அரசபடைகளிடம் போனதோடு புலிகளின் பலமெல்லாம் போய்விட்டதென சந்திரிகா அரசும் ராணுவத் தளபதி ரத்வத்தையும் புலம்பித் திரிந்த காலமது. 

முல்லைத்தீவில் முகாமிட்டு கடல் பாதைக்கும் பெரும் சவாலாக இருந்த முல்லைத்தீவு முகாமின் அழிவில் புலிகளின் வீரம் மீண்டுமொருமுறை உணர்த்தப்பட வேண்டிய காலத்தை சந்திரிகா அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.தமிழர்களும் போராட்டம் மீது சற்று அவநம்பிக்கையில் யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என மனச்சோர்வடைந்த காலமது.

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகள் பூனகரி படைத்தளத்தையண்டிய பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பயிற்சிகளில் இணைந்திருந்த போராளிகளால் கூட அந்தப் பயிற்சியானது எந்த முகாமுக்கான தாக்குதலாக அமையப்போகிறதென்பது தெரியாமல் கடும் பயிற்சி ஆரம்பித்திருந்தது. அந்தப் பயிற்சிகளில் ஊரானும் இணைந்து முல்லைத்தீவு மீட்புச் சமருக்கு தயாராகினான்.

தொடர் பயிற்சி உறக்கம் மறந்து உண்ண மறந்து மண்ணை மீட்கும் போருக்கான பயிற்சியில் கலகலப்பும் காலத்தின் கட்டளையை ஒவ்வொரு போராளியும் நெஞ்சில் தாங்கியபடி பொறுமையோடும் கவனத்தோடும் பயிற்சியில் நின்றார்கள். கடுமையான பயிற்சி இலகுவான சண்டைக்கான சிறப்பு. ஒவ்வொரு போராளியின் கடுமையான பயிற்சியும் பெருமைமிகு வெற்றியைப் படைக்கும் பேராயுதமாகியிருந்தது.

ஓயாத அலைகள் 1 முல்லைத்தீவை மீட்கும் முனைப்போடு அதிகாலை இருளோடு அணிகள் நகர்த்தப்பட்டது. வெற்றி பெற்ற மிதப்பில் கனவோடிருந்த சந்திரிகா அரசு திகைத்துப் போனது. புலிகளால் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.

முல்லைத்தீவு முகாம் மீதான புலிகளின் மூர்க்கமான தாக்குதலில் முல்லைத்தீவு படைமுகாமிலிருந்த படைகள் வழங்கல் , விநியோகம் , தொடர்புகள் யாவும் அறுபட்டு செய்வதறியாது திகைத்துப் போனார்கள்.

தாக்குதல் ஆரம்பித்த அரைமணிநேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல திருகோணமலையிலிருந்து டோறா விசைப்படகுகள் முல்லைத்தீவு நோக்கி விரைந்தன. கடலில் வந்த பகைவனைக் கடற்புலிகள் மறித்துச் சமரில் ஈடுபட்டனர். கடற்சமருக்கு நிகராக தரையிலும் புலிகளணி தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

கடலில் விநியோகத்திற்கென வந்த ரணவிரு என்ற போர்க்கப்பல் கடற்கரும்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. வான்வழியாய் படையினரை தரையிறக்க முயன்று வான் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. கந்தக வாசனையால் முல்லைமண் நிரம்பியது.

முல்லைத்தீவில் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளான படைகளைக் காக்கவும் படைத்தளத்தைக் காப்பாற்றவும் அரசபடைகளால் அவசரமாகத் தரையிறக்கமொன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் தளத்திற்குத் தெற்கே 3மைல் தொலைவில் உள்ள அளம்பில் கடல் வழியால் பெருமெடுப்பிலான தரையிறக்கத்தை மேற்கொண்டது இலங்கை அரசபடைகள்.

அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத் தரையிறக்கத்திற்கு திரிவிட பகர எனப்பெயர் சூட்டப்பட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெட்டைவெளியும் எவ்வித காப்பு வசதிகளும் இல்லாத அளம்பில் பகுதியில் சண்டையணிகளை இறக்கி சமரை நடாத்தினர் புலிகள்.

இப்பகுதியில் சமரிட்ட புலிகளின் படையணிகளுடன் தளபதி கேணல்.ராஜேஸ் தலைமையில் இம்ரான் பாண்டியன் படையணியும் பங்கு கொண்டது. தளபதி.கேணல்.ராஜேஸ் 2009ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆனந்தபுரம் சமரில் வீரகாவியமானார்.

தளபதி கேணல் ராஜேஸ் அவர்களது பொறுப்பிலான ஒரு பிளாட்டுனுக்கான அணிப்பொறுப்பாளனாக ஊரானும் ஊரானின் அணியும் தாக்குதலில் இறங்கியது. அளம்பில் பகுதியில் முழுமையான வலுவையும் பிரயோகித்தது அரசு. அளம்பிலில் மறிப்புச்சமரை மேற்கொண்ட புலிவீரர்களின் சமரையும் வெல்ல முடியாது தோற்றது படைகள்.

புலிகளின் அகோர தாக்குதலில் இலங்கையரச படைகள் அடைய நினைத்த வெற்றியும் அவர்களது கனவும் சிதைந்து போக இறுதியில் புலிகள் வென்றார்கள். முல்லைத்தீவை அச்சுறுத்திக் கொண்டிருந்த இராணுவ முகாமும் இராணுவப்படைகளும் அழிக்கப்பட்டு 3நாட்களில் முல்லைத்தீவு முகாம் முற்று முழுதாக புலிகளிடம் வீழ்ந்து முல்லைத்தீவு மண் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டது.

புலிகளின் வரலாற்றில் முதல் முதலாக இருபெரும் ஆட்லறிகளையும் பெருமளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றி முல்லைச்சமர் முடிந்தது. அந்த வெற்றிக்கு வித்தாக 400வரையிலான போராளிகள் தங்கள் இன்னுயிர்களை விதைத்து விழிமூடிப்போயினர்.

அந்த 400 வரையானவர்களில் ஒரு வீரனாக கப்டன் எனும் பதவிநிலையோடு ஊரான் அல்லது கௌதமனும் விழிமூடி மாவீரனாய் சந்தனப்பேழையில் நீட்டி நிமிர்ந்து உறங்கிப் போனான்.

சமருக்குச் செல்கின்ற வீரர்கள் யாவரும் சாகப்போவதில்லை. அவர்கள் சாதிக்கவே களம் போகிறார்கள். அதுபோலவே எங்கள் கௌதமனும் சாதனை புரிந்து வருவானென்றுதான் தளபதிகள் போராளிகள் காத்திருந்தனர். ஆனால் அவனோ யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதனையை முடித்த திருப்தியில் முல்லைத்தீவு மண்ணின் மூச்சோடு நிறைந்து போனான்.

தான் வீரச்சாவடைகிற போது தனது வித்துடல் தன் ஆத்ம நண்பன் மேஜர் உதயச்சந்திரன் அல்லது கண்ணாடி விதைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட வேண்டுமென்று விரும்பியது போலவே கனகபுரம் துயிலிடத்தில் நிரந்தரமாய் துயின்றான்.
 விழிகள் கரைய உருகியுருகி (முல்லைத்தீவு வெற்றிக்காய் வீழ்ந்தவர்கள் நினைவுப்பாடல்

ஊரானை இழந்த போது புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஒரு சிறந்த புலனாய்வாளனை சாதனையாளனை இழந்து போனோமெனத் துயர் கலந்த அவனது இழப்பின் கனதியை நினைவு கூர்ந்தார். அது போல தளபதி சொர்ணம் அவர்களும் ஊரானின் இழப்பை மிகுந்த துயரோடுதான் ஏற்றுக் கொண்டார்.

இன்னொரு காலம் பெற்றிருக்க வேண்டிய பெறுமதி மிக்க போர்த்தளபதியை இழந்து போனது போலவே போராளிகளும் தளபதிகளும் ஊரானின் இழப்பை நினைவு கொண்டார்கள். அதிகம் அலட்டாத ஆனால் ஊரான் இருந்தால் கலகலப்பிற்கு குறைவில்லாத சிரிப்பும் மகிழ்ச்சியுமே நிறையும் நாட்களை நண்பர்கள் துயரத்தோடு கடந்து உறுதியோடு நிமிர்ந்தார்கள்.

கனகபுரம் துயிலுமில்லம் வருடாவருடம் ஊரானுக்காகவும் விளக்கெரித்து தன்மடியில் அவனைத் துயிலவைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்தது. 

கல்லறைகளில் விளக்கேற்றி அவர்கள் கனவுகளை நனவாக்கும் உறுதியோடு வருடம் தோறும் போராளிகள் உறுதியெடுத்துக் கொண்டார்கள். அவன் சென்ற வழி வெல்லும் வழி என்றோ ஒருநாள் விடியுமென்ற நம்பிக்கையோடு அவனது நினைவுகளைச் சுமந்தபடி அவனது தோழர்கள் அவனோடு களமாடியவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

இறைச்சி வேண்டாம் மரக்கறி வேண்டாமென்று அடம்பிடித்த குழந்தை ஒருநாள் உறுதியோடு தனது தாயகத்திற்கான பணி முடித்துப் பாதியில் போய்விடுவானென்று அறியாத அவனது அம்மா , அப்பா, அக்காக்கள் , உறவினர்கள் ,நண்பர்கள் நினைவுகளில் இன்பசோதி கப்டன் ஊரானாக , கௌதமனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். தேசம் மீட்கப்போனவர்களின் நினைவோடு எங்கள் ஊரானும் என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருப்பான் வரலாறாக....!

29.11.2013
நினைவுப்பகிர்வு – - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

 நிலமும் வானும் கடலும்நேற்று அழுதது அந்த நிலவும் இரவு வானில் அழுதது