Monday, November 25, 2013

சாவை வென்ற தளபதி லெப்.கேணல்.விமலன்/அன்பழகன்

லெப்.கேணல் அன்பழகன் (பலாலி – கைலாயபிள்ளை ஜெயகாந்தன்)

விவசாயமும் கடல் வளமும் மிக்க அழகான நிலம் பலாலி. இராணுவ கேந்திர மையமாக அறியப்பட்ட பலாலியென்ற கிராமத்தை உலகில் அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தப் பலாலி இராணுவ முகாமானது இலங்கையின் பிரதான முகாம்களில் ஒன்றாகவும் இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்டத்துக்கான வழங்கலுக்கான பிரதான தளமாகவும் அமைந்தது. யாழ் கோட்டை முகாம் புலிகளால் முடக்கப்பட்ட நேரத்தில் கோட்டை இராணுவத்திற்கான உணவு முதல் அனைத்து வழங்கலுக்கும் பலாலியே தளமாகியிருந்தது.

எத்தனை வசதிகளை வளத்தை பலாலியில் இருந்த படைகள் கொண்டிருந்தாலும் புலிகளின் உறுதியின் முன்னால் எல்லாமே தூசாகிப்போனது தான் விடுதலைப்புலிகளின் வெற்றியின் ஆதாரம்.

ஈழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியின் ஆரம்பம் முதல் பலாலி மண்ணுக்கும் போராட்ட வீரர்களுக்கும் இடையிலான உறவும் தொடர்ந்து கொண்டேயிருப்பதற்கான சாட்சியமாக பலாலி மண்ணும் தனது புதல்வர்களை விடுதலைக்காய் விலையாய் தந்து எத்தைனையோ இழப்புகளின் வலிகளையும் விலைகளையும் கொடுத்திருக்கிறது.

1986களிலிருந்து இடப்பெயர்வும் இழப்புகளும் இந்த மண்ணுக்குப் பழகிப் போனதாயினும் இந்த மண்ணின் வீரர்களின் தடங்களில் எழுதப்பட்ட வீர வரலாறுகளை காலம் ஒரு நாள் இந்த உலகத்திற்குச் சொல்லியே தீரும் நாளை இன்றே எழுதிக் கொள்வோம்.

ஒவ்வொரு குழந்தையும் பூமியில் பிறக்கின்ற போது சாதனைக்குரிய இயல்புகளோடும் சாதனையாளருக்குரிய பண்புகளோடுமே பிறக்கின்றது. ஆனால் காலமே ஒவ்வொரு குழந்தையின் கனவுகளை வெல்லச் செய்யும் திறனையும் கொண்டிருக்கிறது.

எல்லாத் திறன்களையும் ஒருங்கே கொண்ட ஒரு குழந்தையாக தனது ஊரின் இழப்பை சிறுவயது முதல் பார்த்து அதனது பாதிப்புகளோடு வளர்ந்த ஜெயகாந்தன் என்ற சிறுவனையும் இந்தப் பலாலி மண்ணே பெற்றெடுத்தது.

இவன் பிறந்த போது யாருமே கனவில் கூட நினைத்திருக்கமாட்டாத சாதனையாளனாக வாழ்ந்து முடிந்த வரலாற்றை இவன் எழுதிச் செல்வானென்று கூட யாரும் அறிந்திருக்கவில்லை. போரின் ஆரம்பம் வடக்கில் ஆரம்பிக்கிற போது முதலில் இடம்பெயரும் ஊர் பலாலியும் பலாலியை அண்டிய பிரதேசங்களுமே முதலாவதாக இடம்பெயரத் தொடங்கும்.

இப்படித்தான் ஜெயகாந்தன் குடும்பமும் இடம்பெயர்ந்து போனது. ஊரைப்பிரிகிற துயரை அனுபவிக்கிற உலகில் நாடற்றுப் போயிருக்கும் மில்லியன் கணக்கான மனிதர்களின் துயருக்கு நிகராக அதையும் விட மேலாக துயரத்தை அனுபவித்த ஈழத்தமிழர்களின் வலியை பலாலி மண்ணும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துயர் இன்றுவரையும் மாறாமல் அப்படியே....!

அண்ணாக்கள் இருவரோடும் அக்கா , தம்பி , தங்கையென குடும்பத்தின் மகிழ்சிக்கு குறையில்லாத குடும்பத்தில் 18.08.1972அன்று கைலாயபிள்ளை தம்பதிகளுக்கு மகனாய் வந்து பிறந்தான் ஜெயகாந்தன்.

தனது ஆரம்பக்கல்வியை பலாலியிலும் பின்னர் 5ம் வகுப்பிலிருந்து வசாவிளான் மத்திய மகாவித்தியாலய மாணவனாகி கல்வியைத் தவிர கனவுகள் ஏதுமில்லாத மாணவனின் கல்வியில் தடை வீழ்ந்தது 1989ம் ஆண்டில் தான்.

அப்போது இந்திய இராணுவ காலம். தேசிய இராணுவம் என்ற பெயரில் அப்போது சிறுவயதுப் பிள்ளைகளை EPRLF என்ற மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த இயக்கம் யாழ்மாவட்டத்திலும் இதர பகுதிகளிலும் பிள்ளைபிடியில் இறங்கியிருந்தது.

வீடுகளில் பயமும் அடுத்த வினாடி எந்த வீட்டின் பிள்ளை வதைக்கப்பட்டுப் பிடித்துச் செல்லப்படுவான் என்ற ஏக்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் நிரந்தரமான காலமாகியிருந்தது. திறமையான மாணவனாக கல்வி கற்றுக் கொண்டிருந்த ஜெயகாந்தனையும் EPRLF இயக்கத்தின் பிள்ளைபிடி விட்டு வைக்கவில்லை.

எதிர்காலம் கனவு கண்ட ஒரு சிறந்த கல்விமானை EPRLF பிள்ளைபிடி சிதைத்துப் போட்டது. தனது பாடசாலைக் காலத்தை நிறுத்தி ஊரூராய் ஒளித்துத் திரியத் தொடங்கி இறுதியில் இந்திய இராணுவம் வெளியேறி EPRLF தொலைந்து போன போதிலும் அந்தக்காலம் அனுபவித்த அவலத்தை அவனது மனசிலிருந்து யாராலும் அழித்துப் போட முடியவில்லை.

வருடக்கணக்கான அலைவு படிப்பு பாதியில் பறிக்கப்பட்டதோடு சோர்ந்து ஒதுங்காமல் 1993 வரையிலும் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக்கல்லூரியில் மின்னியல் கல்வியைத் தொடந்து கொண்டிருந்தான். நாடே போராடிக் கொண்டிருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்மண். ஆயினும் முழுமையாக மீட்கப்பட வேண்டிய சுதந்திர தமிழீழக் கனவோடு ஒருநாள் எங்கள் ஜெயகாந்தனும் புலியாகினான்.

இம்ரான் பாண்டியன் படையணியின் பயிற்சி முகாமான சரத்பாபு7 ஜெயகாந்தனையும் வரவேற்றது. அன்பழகன் என்ற இயக்கப் பெயரைப் பெற்று பயிற்சியைத் தொடங்கினான். மிகவும் உயரமான தோற்றம் பலவேளைகளில் பயிற்சியில் சிரமங்களைக் கொடுத்த போதும் தன்னை வருத்தி தனது இலட்சியத்தில் உறுதியோடு பயிற்சியை முடித்துக் கொண்டு தனது முதல் கள அனுபவத்தை 11.11.1993அன்று பூனகரி தவளைப்பாச்சல் தாக்குதலில் பெற்றுக் கொண்டான்.

விளையும் பயிரை முளையில் தெரியுமென்றது தமிழ்ப்; பழமொழியொன்று. பழமொழிக்கே புதுமொழி வகுத்த வீரனாக முதல் கள அனுபவமே அன்பழகனை ஒரு சிறந்த போர் வீரனாக அடையாளம் காட்டியது. முதல் களம் முடிந்து வந்த அன்பழகன் இம்ராம் பாண்டியன் வெளிப் பாதுகாப்பணிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

பாதுகாப்பணிப் பிரிவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தனது கடமைகளை கவனத்தோடும் நேர்மையோடும் செய்து கொண்டிருந்ததோடு மட்டுமன்றி சக போராளிகளோடு இனிமையாகவும் பொறுப்புணர்வோடும் அதேநேரம் எல்லோரையும் நேசிக்கும் பண்போடும் தன்னை வெளிக்காட்டிய வீரன்.

எல்லா விடயங்களிலும் நிதானமும் பணியின் தேவை காத்திரம் யாவையும் புரிந்து தேவைக்கேற்ப தனது ஆற்றலை வழங்கி அன்பழகன் இயங்கிய காலமும் பணிகளும் காலத்தால் அழியாதவை.

திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அன்பழகனும் முன்னுரிமையைப் பெற்ற போராளியாகவே இருந்தார். அதற்கு நல்லுதாரணமாக 2000ம் ஆண்டு தொடக்கம் 2003ம் ஆண்டு வரையும் வெளியகப்பாதுகாப்புப் பணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்றார். தலைவரின் வெளியகப் பாதுகாப்பணியில் தனது கடமைகளை கவனமாகச் செய்து கொண்டிருந்தார்.

2002இல் திருமணம் நடைபெற்றது. குடும்ப வாழ்வும் போராட்ட வாழ்வும் எப்போதும் புலிகளின் வரலாற்றில் வேறு வேறாக இருந்ததில்லை. அன்பழகனின் குடும்ப வாழ்வும் போராட்டத்திற்கான பலமாகவே இருந்தது.

குடும்பத்தோடு செலவிடும் நேரத்தைவிட கடமைக்காய் நாட்கணக்காக , வாரக்கணக்காக , மாதக்கணக்காக இரவுபகல் பராது உறங்காது உழைத்த போராளி. மிகவும் நெருக்கடி மிக்க காலங்களிலெல்லாம் தனது அயராத பணியால் உயர்ந்து விடுதலைப் போராளியென்பவன் எப்படி வாழ வேண்டுமென்ற உதாரணமாய் வாழ்ந்து காட்டிய விடுதலைப்புலிகளின் மரபை மீறாத சத்தியனாக வாழ்ந்த கடமை வீரன்.

தலைவரின் நம்பிக்கையை அன்பை மதிப்பைப் பெற்றவர்களுள் அன்பழகனும் ஒருவர். 2005 ஆரம்பத்தில் நிதிப்புலனாய்வுக்குத் தலைவரால் நியமிக்கப்பட்டார். வழங்கப்பட்ட கடமையை மதித்தும் கவனத்தோடு பொறுப்போடும் தனது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நடைமுறை அரசை நிறுவி ஒரு சிறந்த நாடு எப்படி அமைய வேண்டும் எப்படி அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் வரையப்பட வேண்டும் நடைமுறையில் இருக்க வேண்டும் இராணுவ அரசியல் கட்டமைப்புகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட சுதந்திரமான அரசொன்றிற்கான அனைத்துத் தகுதிகளையும் உலகிற்குச் சொல்லிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் அபரிமித வளர்ச்சியின் வெளிப்பாடு உலகையே உறுத்திக் கொண்டிருந்தது.

தனது காலில் வீழாத எந்த விடுதலைப் போராட்ட அமைப்பையோ அல்லது சிறுபான்மையினத்தையோ உலகின் பெரியவீட்டுக்கார அரசியல் விட்டு வைத்ததில்லை. அங்கங்கே விடுதலையடைந்த ,விடுதலை வேண்டிப் போராடும் தேசங்களிலெல்லாம் ஏதோ ஒரு வகையிலான தலையீட்டைச் செய்து தலையிடியைக் கொடுத்து தனது காலில் வீழ வைத்த வரலாற்றை விடுதலைப்புலிகளுக்கும் எழுதிவிட சமாதானம் என்ற பெயரில் உலகம் கட்டுப் போட்டது.

மெல்ல மெல்ல உலக வல்லரசுகள் இலங்கையரசோடு கைகோர்த்து ஈழவிடுதலைப்போரை அழிக்கத் தொடங்கி 2008 இன் இறுதிக்காலங்கள் வன்னி நிலத்தின் வளமும் வல்லமையும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது மட்டுமன்றி தினமும் மரணமும் தொடர் இராணுவ நகர்வும் யுத்தகாண்டமாக மாறியது வன்னிக்களம்.

பணியாதோரை வஞ்சத்தால் பணிய வைத்தல் அல்லது இல்லாதொழித்தல் இவ்விரண்டில் ஒன்றை இலங்கையரசிற்குத் துணையாகி உலகம் புலிகள் மீதும் தமிழர் நிலம் மீதும் கடும் போர் தொடுத்தது.

தமிழரின் வீரத்தையும் தமிழரின் நிலத்தையும் அழிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கில் நடாத்தப்பட்ட போரில் புலிகளின் மனவுறுதி மட்டுமே அன்றைய நாட்களில் என்றும் போல இறுக்கமாகவே இருந்தது. அந்த உறுதியே இறுவரையும் கலை(ரை)யாதிருந்தது.

2009 தொடக்கம் அன்பழகன் தானாகவே சண்டைக்களத்திற்கு போனார். தேவிபுரத்தில் சண்டையில் காயமடைந்தும் களத்தைவிட்டு விலகாது காயத்திற்குக் கூட மருந்திடவோ மாற்றுச் சிகிச்சை செய்யவோ இயலாத அந்த இறுக்கம் மிகுந்த காலத்தில் அன்பழகன் களத்தைவிட்டு விலகவேயில்லை.

போராளியாக இணைந்த போது எத்தனை வேகமும் வீரமும் இருந்ததோ அதே வீரத்தோடு களமாடி 2வது முறையும் காயமடைந்து அதுவும் சரியாக ஆறாத நிலமையில் 3ம் முறை உடல் முழுவமும் காயமடைந்தும் கடைசி வரை களத்திலே நின்று சாவெனென்ற உறுதியோடு களமாடிய புலிவீரன்.

2009 மேமாதம். வாழ்வெனிலும் போராடுவோம் சாவெனிலும் சமராடுவோமென்ற உறுதியோடு குண்டுமழைக்குள்ளும் தலை நிமிர்த்த முடியாத எறிகணை வீச்சுக்குள்ளும் உறுதி குலையாத இறுதி வரையும் போராடுவோமென்ற புலிகளின் உறுதியோடு களத்தில் நின்ற அன்பழகன் 05.05.2009 அன்று தான் நேசித்த மண்ணுக்கான கடமையை நிறைத்த நிறைவில் உயிரைக் கொடுத்து உறங்கிப் போனார்.

அந்த மாவீரன் கண்ட கனவை தன்வழி நின்றோர் நிறைவேற்றுவார்களென்ற நம்பிக்கையோடு சண்டையில் சமர்க்கள வீரனாக உயிர் மூச்சை நிறுத்திக் கொண்ட அன்பழகனின் கனவுகள் அந்த முல்லை மண்ணில் வியாபித்துப் பரந்தது.

முள்ளிவாய்க்கால் முடிவைக் காணாமல் தனது இலட்சியப்பாதையில் உறுதியோடு பயணித்து உயிரைத் தந்து இன்று எங்கள் முன்னால் மாவீரனாகி வரலாறாகிவிட்ட லெப்.கேணல் அன்பழகனுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிற சம நேரத்தில் அன்பழகனதும் அன்பழகன் போன்ற ஆயிரமாயிரம் வேங்கைகளதும் கனவுகள் நனவாக ஒவ்வொருவரும் பயணிப்போம் பணிசெய்வோம்....!

அன்பழகன் கனவு பலாலிக் கிராமத்தின் கடலலைகளோடும் கரைந்து நிறைந்து ஈழதேசமெங்கும் உலவும் காற்றாய் உலகத் தமிழர் வாழும் நாடெங்கும் வேங்கை மாவீரரின் கனவுகள் சுமந்து விடுதலை வேண்டி நகர்கிறது....!

காரியம் பெரிது தோழா
http://thesakkaatu.com/uploads/2013/03/09-Track-913.mp3
22.11.2013
நினைவுப்பகிர்வு – - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

No comments: