Monday, October 28, 2013

எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ.


சுற்றி நிற்கும்
இந்தியப்படைகளின்
முற்றுகைக்குள்ளால்
நீயும் உனது தோழர்களும்
இருள் கனத்த
பொழுதொன்றில் - எங்கள்
ஊரிலிறங்கினாய்....!



சிகரங்கள் தொடவல்ல
வீரர்களின் முகமாய்
அந்த நாட்களில்
எங்களின் சூரியன்
எங்களின் தோழன்
எல்லாமுமாய்
எங்களின் வசந்தம் நீ.

பூவிதழ் விரியும் அழகாய் புன்னகை
யாரெவரெனினும் சினேகப் பார்வை
ஊரிலே உனக்காயொரு சிறுவர் படை
அங்கே நீயும் சிறுவனாய் ஆசானாய்
வீடுகளில் உனக்காயென்றும்
காத்திருந்து எரியும் விளக்குகளின் கீழ்
உன் வரவைத் தேடும் நாங்கள்....!

எப்படியெல்லாமோ எங்கள் மனங்களில்
வந்து குடியேறிய புலி
எங்கள் அன்புக்குரிய றோயண்ணா
உங்களின் வரவில் மகிழ்ந்ததும்
உங்களின் அன்பில் நனைந்ததும்
இன்று போலவே எல்லாம்
இதயத்தில் பசுமை தரும் நினைவுகள்....!

போனாய் ஒருநாள்
எங்களை அழவைத்துப்
போர்க்களம் நீ சென்றாய்
போனவுன் பஜீரோ வீதியில் சென்றால்
வானத்தில் மிதப்போம் - நீ
வருவாய் மீண்டுமென்ற நம்பிக்கையை
என்றும் நீ ஏமாற்றியதில்லை.

அப்படித்தான் 1990 ஐப்பசி
அந்த நாளும் நினைத்திருந்தோம்
காலம் எங்களை ஏமாற்றி
காலனின் கையில் நீ
காயமடைந்து மருத்துவமனையில்
நீட்டி நிமிர்ந்து பேச்சின்றி மூச்சின்றி
புலிவீர மிடுக்கோடு பேசாமல் கிடந்தாய்....!

மீண்டுமுன் நிமிர்வும் சிரிப்பும்
வேண்டுமெங்களுக்கென
நாங்கள் வேண்டிய கடவுளரும் கைவிட்டு
கடல் கடந்த மருத்துவம் காக்குமென்று
கொண்டு செல்லப்பட்ட
காந்திய மண்ணிலே – உன்
கடைசி மூச்சைக் கரைத்தாய்....!

மார்கழி 31 மாவீரனாய் கப்டன் றோயாக
அந்த மழைக்கால மாதம் போல
எங்கள் கண்களிலும் மாரி காலத்து ஈரம்
நீ காவியமாய் கடந்து போய்
காலச் சுழற்சியில் வெற்றிடமாய்
எங்கள் இதயங்களில்
இட்டு நிரப்ப முடியாத இழப்பாய்....!

இன்றும் உன் நினைவுகள்
என்றுமே வற்றாத கடலாய்
வந்து போகும் ஞாபகமாய்
அந்தச் சிரிப்பும் ஆழுமையும்
அனைவராலும் நேசிக்கப்பட்ட றோயண்ணா
உங்களின் கனவுகள்
எங்களின் மனங்களில்
என்றோ ஒருநாள்
தமிழ் ஈழமாய் மலரும்.

12.10.2013
 எனது படைப்புகளை பிரதியெடுத்துக் கொள்ளும் இணைய நடத்துனர்கள் ஊடகர்கள் முல்லைமண்ணுக்கும் யாழ் இணையத்திற்கும் ஒரு நன்றியிடுங்கள்.  பழைய உறவுகள் நண்பர்கள் இந்த படைப்புகள் ஊடாக மீண்டும் கிடைக்கவும் இந்தப் படைப்புகள் எனக்கு உதவுகிறது. மறக்காது இந்த உதவியைச் செய்யுங்கள்.

No comments: