Tuesday, October 1, 2013

தேசத்திற்கு விலைதந்த மகளுக்கு தேவையானது 5 பவுண்கள் மட்டுமே.

தேசத்தின் விடுதலைக்குக் கொடையளித்தவர்கள் பலருக்கு முகமில்லை முகவரியில்லை பெயரில்லை அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை. அநாமதேயமாய் அவர்களது வரலாற்றை அவர்கள் பெற்றுத் தந்து வெற்றியும் அவர்களைப் பெற்ற தேசமும் மட்டுமே அறியும் கதைகள். ஈகத்தின் உச்சமாக இந்த மனிதர்களின் கொடை எங்கள் தேசத்தில் எழுதப்பட்ட பலரது வரலாற்றோடு வரலாறாக....!

இப்படித்தான் ஒரு வெற்றியைப் பெற்றுத்தர அந்தக் கரும்புலி தான் நேசித்து ஊரை உறவுகளை விட்டு விடுதலையமைப்பில் இணைந்து கொண்டது. அந்தப் போராளி ஒருநாள் கரும்புலியாகி தனது ஈகத்தின் உச்சத்தையடையும் நாளொன்றை காலம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

தேவைகளும் கடமைகளும் தமிழர் வாழ்நிலங்களுக்கும் அப்பால் இருந்ததை காலம் உணர்த்தியது. சிறப்புப் பணிக்கான பயிற்சிகள் தயார்படுத்தல்களும் கடினமானவை. அந்தக் கடினத்தையெல்லாம் அந்தக் கரியபுலி இலகுவாய் பயின்று தனது இறுதிப்பயணத்தையடையப் புறப்பட்டுத் தனது இலக்கமைந்த முற்றிலும் மாறுபட்ட சூலுக்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது.

தனக்கான தேவைகளைச் சமாளிக்க வேலையொன்று எடுத்துக் கொண்டு தாயகத்தின் பணத்தில் தனக்காக ஒரு துளியையும் சிந்தாமல் இலக்கைத் தேடியே தினமும் பயணிக்கத் தொடங்கியது.

அந்தத் தியாகத்தின் இமயத்தைக் காத்துக் கவனித்து இலக்கையடையும் நாள்வரையிலும் பாதுகாத்த குடும்பமொன்றின் ஈகம் எல்லா ஈகங்களைவிடவும் உயர்ந்து நின்றது.

2சிறிய குழந்தைகளின் பெற்றோர்களான அவர்கள் தேசத்தின் வெற்றிக்காக எதிர்காலத்தில் தங்களுக்கு நடக்கவிருக்கும் கொடுமையையும் மறந்து தங்கள் தேசக்கடன் முடித்தார்கள்.

சின்னஞ்சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையையும் பெற்றவர்கள் எத்தனை கனவுகளோடு வளர்ப்பார்கள்...! அதே போன்று வீட்டில் அந்தக் கரும்புலியை தங்கள் மூத்த குழந்தையாக ஏற்றுக் கொண்டார்கள்.

இலக்கின் தூரம் இதோ அதோ என்றும் பின்னர் இல்லை இன்னொரு தருணம் என்றும் இலக்குத் தவறி துயரோடு திரும்பும் தேசத்தின் சொத்தான மூத்த குழந்தையின் வெற்றியையே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இறுதியாக தனது மூத்த பிள்ளைக்கு தானே வெடிபொருளை அணிவித்து வெளியில் அறியாமல் அலங்கரித்து வழியனுப்பும் போது கசிந்த கண்ணீரை மறைத்து அந்தக் கரும்புலியை வழியனுப்பி வைத்தார்கள்.

போன காரியம் வெல்லும் துணிவோடு அந்தப்புலி புறப்பட்டு இறுதிவிடை கொடுத்து அந்த முகவர் குடும்பத்தின் கைகளை விட்டு விலகித் தன் இலக்கை நோக்கிப் பயணித்தது.

மனசுக்குள் மூண்டெரிந்த நெருப்பில் விடியும் தேசத்தின் ஒளிக்கதிராகத் தன்னை வடிவமைத்து இலக்கையடைந்த போது எழுந்த பெரு நெருப்பில் அந்த வீரப்புலி தன்னைத் துகள்களாக்கி அன்னிய நிலத்தில் தன்னைக் கரைத்துக் காவியமாக்கி தேசத்தின் விடுதலையின் கனவோடு காவியமான முகமற்றவர்களோடு சேர்ந்து கொண்டது. காலம் ஒருபோதும் இந்தக் கரிய வேங்கைகளைக் கண்டு கொள்ளவே போவதில்லை.

உலகம் அந்த நாளை ஊடகங்கள் வாயிலாக உற்றுப் பார்த்தது. அவலத்தைத் தந்தவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுத்த திருப்தியில் தன்னைத் தீயாக்கிக் கரைத்த கரும்புலியின் கதையும் அன்றோடு வரலாற்றில் தனது ஈகத்தை மௌனமாக எழுதிக் கொண்டது.

வெளிநாட்டு நிபுணர்கள் ஓடிப்போயிறங்கினார்கள். தடயங்களை அறிய தடய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆராய்ந்தார்கள். யாரென்ற அடையாளம் காணப்படாது சிதைந்து போன உடல் துணிக்கைகளை எடுத்துக் கொண்டு பறந்தது மேற்குலக நாடொன்று.

அந்தப்பெரிய வெற்றியின் துணையாக நின்று கடமை புரிந்த முகவரின் குடும்பம் எதிர்பாராத நாளொன்றில் எங்கள் வாழ்வை அழித்தவர்களால் குடும்பத்தோடு சுற்றிவழைக்கப்பட்டார்கள். வாழ்வில் இனி மீள்வில்லையன்ற தருணம் அது.

எதுவுமறியத வயதுக் குழந்தைகள் யாருமற்ற அனாதைகளாகினர். உலகில் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுத்த கொடுமையை எந்தக் குழந்தையும் பெறக்கூடாது. ஆனால் அந்தக் குழந்தைகள் உலகில் எந்தக் குழந்தையும் அனுபவிக்காத கொடுமைகளைத் துயரங்களையெல்லாம் அனுபவிக்கத் தொடங்கியது.

உறவு நட்பு சுற்றம் என்ற எல்லாரின் இயல்புகளையும் அந்தக் காலமே உணர்த்தியது. யாரும் பொறுப்பேற்க முன்வராத நிலமையில் அந்தப் பிஞ்சு வயதில் அந்தக் குழந்தைகள் அனாதையாகி....அனாதையில்லமொன்றில்....!
காலங்கள் ஓடி அந்தப் பிஞ்சுகள் இப்போது திருமண வயதில் வந்து நிற்கிறார்கள். ஒரு வெற்றியின் வேராக நின்ற அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு யாராலும் மீட்கப்படாத இடமொன்றில் அனாதரவாக....!

குழந்தைக்காலம் முதலான அனாதை வாழ்விலிருந்து மீளக்கல்வியில் முன்னேறினாலும் பெற்றோரின் கடந்த காலச் செயற்பாட்டைக் காரணம் காட்டி எங்குமே தடையே அந்த இளவயதுப் பிள்ளைகளுக்கு இடைஞ்சலாக....!

வழியெதுவும் இல்லையென்ற நிலமையில் யாரோ ஒரு உறவின் அழைப்பில் தாய்நிலத்தைவிட்டு அந்தப் பெண்பிள்ளை அயல்நாட்டிற்கு அழைக்கப்பட்டாள். அந்தக் கருணையால் அந்தப் பெண்பிள்ளைக்கு திருமண ஒழுங்கொன்று நிச்சயமாகியிருக்கிறது.

அவளது கடந்த காலத்தைக் கேட்கிற எல்லோருமே பின்னே தள்ளி நிற்க எல்லா உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு அவளுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அந்த நாட்டு வளக்கப்படி திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண் வீட்டிலிருந்தே பாத்திர பண்டங்கள் முதல் அனைத்தும் சீதனமாக வழங்கப்பட வேண்டுமாம்.

ஆதரவு கொடுத்து அந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்த கருணையாளனால் பாத்திர பண்டம் ஆடைகள் எல்லாம் தன் இயல்புக்கு மீறி ஒழுங்கு செய்து அப்பாடா என நிமிர்ந்த போது மேலதிகமாக எதிர்பார்க்கப்படும் 5பவுண் நகையை எங்கேயும் பெற முடியாத நிலமையில் இருக்கிறது.

தற்போது பவுண் போகிற விலையில் 5பவுண் கொடுப்பதென்பது பெரிய சவாலாக...! அந்தப் பிள்ளைக்கும் அவளது கல்விக்குமென உதவிக் கொண்டிருந்தவர்களை அழைத்துத் தனது இயலாமையை அவளும் அந்த வாழ்வை அவளுக்கு அமைத்துக் கொடுக்க உரிய குடும்பமும் முயல்கிறது. சிறுவயது முதலே தனிமையும் அனாதை வாழ்வுமான தனக்கு கிடைத்த புது உறவுக்கு 5 பவுணைத் தந்துதவுமாறு மன்றாடுகிறாள்.

அக்கா நான் உங்களுக்கும் மகள் தானே ? எனக்கு இவ்வளவு காலம் உதவினீங்கள் எங்களுக்கு முகம் தெரியாமல் உதவி செய்யிற அண்ணா அக்காட்டை கேளுங்கோ....! தனிச்சு வாழ்ந்து வாழ்க்கையில நான் பட்ட துன்பம் எவ்வளவோ கொடுமையானதக்கா....! எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கோ அக்கா....!

அந்த 23வயது மகள் கண்ணீரோடு தனது திருமணத்துக்குத் தேவைப்படும் 5பவுண்களையும் தந்துதவுமாறு வேண்டியுள்ளாள். திருமணம் நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இந்த ஒருமாத இடைவெளியில் அவளுக்கு 5பவுண் கிடைத்தாலே அவளுக்கு வாழ்வு....!

பிஞ்சு வயதில் அனாதையாய் பெற்றவரைப் பிரிந்து தனித்து ஒரு பெண்ணாய் இதுவரை போராடி தாயக விடிவுக்காய் அவள் இழந்ததை இன்றுவரையும் மீள முடியாத துயரோடு அவள் அழுகின்ற பொழுதுகளை மாற்ற 5பவுண் போதுமென்றால் அதைக் கொடுக்க ஆரிடம் முறையிடுவது ?

காத்து வளர்த்த தேசமில்லை 30வருடத்துக்கு மேலாக ஒரு இனத்தின் வாழ்வையும் அதன் வரலாற்றையும் காத்துப் போராடிய தேசத்தின் தலைவனில்லை. அந்தத் தலைவன் நம்பிய தேசிய இனம் மட்டுமே இன்று இந்த மகளுக்குப் புதுவாழ்வை வழங்க வேண்டிய கடமையில் இருக்கிறது.

மகளே இந்த ஏழை அம்மாவிடம் உனக்குத் தர எதுவுமேயில்லை. உனக்காக உனது நிலமையை இந்த உலகில் வாழும் கருணையாளர்களிடம் எடுத்துச் செல்லவே முடியும். உனக்காய் உனது வாழ்வுக்காய் உலகில் வாழும் கோடித் தமிழர்களில் யாராவது நிச்சயம் கைதருவார் என் நம்பிக்கையில்.....!

01.10.2013

No comments: