Tuesday, July 30, 2019

என்றும் போல....

என்றும் போல....
(13வருடங்களின் முன்னர் ஒரு கரும்புலி வீரனின் நினைவாய் எழுதிய கவிதை)

சாந்தி நேசக்கரம்

----------------------------------
நிலவுக் கதிர்களை
விழுங்கிச் செல்கிறது
மழைக்கால வானம்.

மாவீரம் சொன்னபடி
மழைத்துளிகள்
நிலம் நனைக்க
கருவறை வாசம் நினைவேற்று
நித்திரை அறுகிறது.....

ஒளிக்காட்சியொரு பொழுதில்
உயிர் அதிர்த்த ஞாபகத்தில்
விழிக்காட்டிக்குள்ளிருந்து
துளித்துளியாய் சொட்டுக்கள்.....

சென்று வருவதாய்
சொல்லிப் போனவனின்
கடைசிக் கடிதத்தின்
சொற்கள் கசங்சி மங்கலாகி
பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப்
பாடமான பின்னாலும்....
அவனைக் காணும் அவசரம்
என்றும் போல.....

இரவுக் கரி திரட்டி
ஒளியின் விழி தன்
உயிரில் திரிமூட்டி
ஊரதிர உயிர்க்காற்று
பேரதிர்வாய் நிறைகிறது.

சொல்லாமல் கொள்ளாமல்
சென்றவனின் சிரித்த முகம்
கொல்லாமல் கொல்கிறது.

'மீளவொரு பிறப்பில்
உன் கடன் முடிக்க வருவேன்"
நம்பிக்கைகள் இன்னும்
கரையாமல்....

21.11.06
சாந்தி நேசக்கரம்

No comments: