Monday, May 25, 2009

எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே















எங்களுக்காய் வாழ்ந்து
எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே !
வணங்குகிறோம்.

சூரியனாய்ப் பிறப்பெடுத்துச்
சுதந்திரத்தின் காவலனாய்
கால்நூற்றாண்டையும் கடந்து
காடும் மேடும் களவாழ்வுமென
வாழ்வையும் உங்கள் வம்சத்தையும்
எங்களுக்காய்த் தந்தவரே !

காலப் பெருநதியில் காணாமல் போகாமல்
ஓயாமல் பாய்ந்த எரிமலையே !
காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள்
அவதாரனின் துயரில் அனைத்தும்
அசையவோ அடுத்து நகரவோ இயலாமல்
போட்டு வைத்த பிணங்கள் போல்
காலம் காப்பிடமின்றி அலைகிறது.

வஞ்சம் கொன்றது
எங்கள் வாழ்வைத் தின்றது
இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க
என்ன மர்மம் உள்ளதோ…..?
வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல்
இறுதிவரை போராடியே மாண்டீர் அல்லது மறைந்தீர்.

மரணம் மாவீரரை வென்றதில்லை – மாவீரம்
மரணத்தை வென்ற பெரும் வல்லமை படைத்ததை உங்கள்
வழிவந்த தோழதோழியரைக் களப்பலியெடுத்த
துரோகங்களே சாட்சியாக
`´சாவெனில் சமர் வாழ்வெனில் போரென்று`´
போனவர்கள் முடிவுகளில் கண்டோம்.

கடைசி நிமிட வேண்டுகையும்
காப்பாற்றுகிறோம் என்றவரின் கழுத்தறுப்பும்
ஓடிய காலப்பெருங்கடலை இடையறுத்துத் தடைவிழுத்தித்
தமிழரின் விதியறுத்து வென்றதாய் விழாக்காணும்
கொலைஞர்கள் இன்று போகட்டும்.
எல்லாளன் பின்னர் எழுந்த கதிரவன் உங்கள் பின்
எழுந்த எரிமலைகள் உள்ளார்கள் என்பதை
உறுதியுடன் நம்புகிறோம்.

உலகம் இதையெல்லாம் ஒதுக்கிவிட முடியாத
உண்மைகள் புரியப்படும் ஒருநாளில்
எல்லாம் ஒளிர்வு பெறும் முடிவு வரும்.
அந்நாள் வரையிலும் அமைதியுடனிருப்போம்.

நன்றியென்றுங்கள் கொடையை
மூன்றெழுத்துக்குள் முடக்கமாட்டோம்.
நாளையெங்கள் சந்ததிக்கு
நீங்களே முன்னோடி
முகவரி எல்லாம் நீங்களே….,
எங்கள் மூச்சுள்ள வரையுமுங்கள்
முகமே எங்களுக்கு விடிவெள்ளி.

நீங்கள் விரும்பிய தேசம்
நீங்கள் விரும்பிய விஞ்ஞானம்
உங்கள்விருப்பான எல்லாம் கொண்டு
எங்கள் வம்சம் எழுந்து வரும்
உங்கள் புதல்வர்களாய் புதல்விகளாய்…..,

எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே
எங்களால் இயன்றது
இன்று ஒரு நினைவிருத்தல்
இதைவிட ஒன்றுமேயில்லையிப்போது எங்களிடம்.
நாங்கள் விட்ட கண்ணீரால்
நிறைந்திருக்கும் நந்திக்கடல் சோம்பல் முறித்து எழும்
சோகம் துடைத்து வரும் நன்நாளில்
உங்கள் கனவுகளை நினைவாக்கி எழுந்து வருவோம்.
26.05.09

1 comment:

Anonymous said...

"" நீங்கள் விரும்பிய தேசம்
நீங்கள் விரும்பிய விஞ்ஞானம்
உங்கள்விருப்பான எல்லாம் கொண்டு
எங்கள் வம்சம் எழுந்து வரும்
உங்கள் புதல்வர்களாய் புதல்விகளாய்…..,""

"இதையே உறுதிமொழியாகக் கொள்வோம்"

தேவி