
பதுங்கப் பிறப்பெடுத்த அகழிகளிலிருந்து
ஒதுங்குகிறது தசைத்துகள்கள்.
புழுதியின் வாசம் தொலைந்து
குருதியின் வாசம்
நாசியை அரிக்கும் நாற்றத்தில்
ஆயிரமாயிரம் பேரின்
அவலக் குரல்களின்
இறுதிக் கணங்கள் உலகத் துரோகத்தை
ஒன்றுவிடாமல் ஒப்புவிக்கிறது.
`காப்பாற்று காப்பாற்று´ என்ற
கடைசிக் குரல்களின் கடைசி நேர நம்பிக்கைகள்
காப்பிடமின்றி முள்ளிவாய்க்காய் மீதுறைந்து
மிஞ்சியிருந்தோரும் மிஞ்சாமல்
கோத்தபாயவின் கட்டளையின் பெயரால்
கொள்ளையிடப்படுகிறது.
கண்ணீரைத் திரட்டி நந்திக்கடலோடு
கரைக்கிறது முல்லை நிலம்.
களத்திலிருந்தோரின் கடைசி மூச்சு
வஞ்சம் கொன்று இறுதிவரை போராடிய
நிறைவோடு இயக்கமின்றிச் சரிகிறது.
இழப்பதற்கு இனியெதை இவ்வுலகிடம் ஒப்படைக்க….?
எதுவுமில்லை எல்லாவற்றையும்
அமைதியின் பெயரால் ஆயிரமாயிரமாய்
அள்ளி வார்த்துவிட்டு
அமைதியாகிப் போனவர்கள் நினைத்தது யாதோ ?
கேள்புலனைக் குடைந்து
மனக்கதவைத் தட்டுகிறது குரல்கள்.
யாரை நோக யாரை இறைஞ்ச…?
21.05.09
1 comment:
Post a Comment