Thursday, April 24, 2014

காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....!

ஆளரவம் தொலைத்த
அடர் வனங்கள்
அன்றைக்கு மௌனித்து
மயானம் பூண்டு
ஆட்களற்றுப் போனது.

ஆழகான புற்தரைகளின் பச்சையம்
ஆட்களற்றுத் தனித்த
பனித்துளியின் ஈரம்
குருதித் துளியாகிக்
காயத் தொடங்கியது.

நீங்களும் வெடியாகி இடியாகி
வெளியில் வராத ஒளியாகிப்
போனீரென்றுதான் காலமழுதது.
எனினும் போரின் கறைகள் காயாமல்
கண்ணீரின் ஈரம் தோயாமல்
நீங்களெல்லாம் வனமளப்பதான
வதந்திகளையெல்லாம்
மௌனங்கள் காடேற்றிக்
கடந்தது காலநதி.

உங்கள் நிழலைக் கூடத்
தொட்டறியாத பேயெல்லாம்
உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது
அங்கென்றும் இங்கென்றும்
அறிக்கைகள் கொடுத்தது.

சொல்லியழ முடியாத் துயர்
கண்ணில் நிறைந்தாலும்
வெளியில் சொல்லியழும் தைரியமின்றி
தனிமையில் தொலைந்த நாட்கள்....!

தட்டச்சு விசைப்பலகை வீரரின்
வீணாய்ப் போன கதைக்கெல்லாம்
வாயடைத்து மௌனித்து
காலம் வருமென்றெண்ணிக்
காத்திருந்த காலமொன்றில்
கருவிழி நிறைந்த இருள்.

காலம் மீண்டும் கண்ணீரை
விழியெங்கும் நிரப்புகிறது.
மீண்டும் இருள் நிரம்பி உறைகிறது
வனங்களும் எங்கள் மனங்களும்
மேலும் இருள்கிறது.

காடறியும் பனித்துளியில் - உங்கள்
காற்தடங்கள் கரைகிறது.
ஊரறிய ஒப்பாரி வைத்து
நாடழுத காலங்கள் போய்
மீண்டும் காலமறியாக் கற்பூரங்களாய்
காடுகளில் நடந்தவரே....!

காலமும்மைக் கைபற்றி
வருமொருநாள்
அதுவரையும் காலமறியாக்
கடவுளர் அறியாத காலத்தின்
சுடர்களாய் வாழும் தெய்வமாய்
வாழ்ந்திடுவீர்.

20.04.2014
சாந்தி நேசக்கரம்

Saturday, April 19, 2014

சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர்.

சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது.

ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை.

இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் நம்பியிருக்கும் கணவனுக்கு மறைக்க அவள் பட்ட துயரங்களை வார்த்தைகளில் கோர்த்துவிட முடியாது.

அக்காவுக்கும் , அவள் கணவனுக்கும் 2009வரையிலும் அவர்களுக்காக அவர்களது உயிர் காக்கவும் ஆட்கள் இருந்தார்கள். ஆறுதல் தருவதற்கே ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். 2009மே மாதத்தோடு எல்லாம் போனது. ஏனென்று கேட்க நாதியற்றுப் போன பல்லாயிரக்கணக்கானவர்களுள் அவர்களும் அடக்கமாயினர்.

20வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையில் உடலெங்கும் இரும்புத்துகள்களும் நஞ்சூறிய கந்தகக்காற்றையும் சுவாசித்தே வாழ்ந்தார்கள். ஓடியோடி கடமையும் களமும் என வாழ்ந்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. அவளுக்குப் பொருத்தமான துணையாக வந்த கணவனின் துணையோடு அவர்கள் மூச்சு விடுதலைக்காகவே சுவாசித்துக் கொண்டிருந்தது.

ஒருகாலம் தங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது உறவென்று சொல்லிக் கொள்ளவோ ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தைரியத்தையும் உடல் பலத்தையும் கூட களத்தில் தான் அக்கா இழந்தாள். அதற்காக அவர்கள் ஒருநாளும் கலங்கியதுமில்லை கவலைப்பட்டதுமில்லை. இன்று அத்தகையதொரு குழந்தையொன்று இல்லாது போனதற்காய் அதிகம் கவலைப்படுகிறாள் அக்கா.

அந்தரிக்கும் உயிருக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றவே ஆளில்லாது வாழ்நாள் நோயாளியாகிப் போன அவர்களுக்கு உறவென்று சொல்லிக் கொள்ளும் அளவில் ஊரில் யாருமில்லை. ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்தவர்களுக்காக அவர்களது பாதையை நேசித்து அவர்களோடு வாழ்ந்த சிலரின் சின்ன ஆறுதல் மட்டுமே அவர்களை ஏதோ வாழ வைத்துக் கொண்டிருந்தது.

ஏற்கனவே பலதடவைகள் காயங்களுக்கு உள்ளாகிய அண்ணை திடீரென ஒருநாள் மயங்கி விழுந்து நினைவிழந்தார். அக்கா துடித்துப் போனாள். அடுத்தநாள் விடிந்ததும் யாழ்ப்பாணம் மருத்தவத்திற்கு அண்ணையை அழைத்துப் போனாள். உடனே தலையில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென்றார்கள். ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படக்கூடிய சத்திரசிச்சையை தனியார் மருத்துவமனையில் தான் செய்ய முடியுமென்றார்கள் இலவச மருத்தவமனையில் சம்பளம் பெறும் மருத்துவர்.

யாருக்கும் தொல்லை கொடுத்து சிரமப்படுத்தக் கூடாதென்று வாழ்ந்த அக்கா வெளிநாட்டிலிருந்து அவளுக்கு அவ்வப்போது சின்னச் சின்ன உதவிகளை வழங்கிய அக்காவோடு ஒருகாலம் களமாடியவளைத் தான் தொடர்பு கொண்டு அண்ணையின் நிலமையைத் தெரிவித்து அழுதாள்.
அண்ணைக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய அக்கா தன் மகளாய் நேசிக்கும் ஒருத்தியே உதவினாள்.

சத்திரசிகிச்சை முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து மருத்துவத்திற்கான மருந்துக்கான செலவுகள் அவர்களை நிம்மதியாய் விடவில்லை. இயன்றவரை கிடைத்த சின்னச் சின்ன உதவிகள் மூலம் அண்ணையின் உயிர் போராடிக் கொண்டிருந்தது.

வெயிலில் நின்று வேலை செய்யவோ அல்லது பாரமொன்றைத் தூக்கி சுமக்கவோ ஒரு கூலிவேலையைத் தன்னும் செய்யும் பலத்தை இழந்து போனது அண்ணையின் ஆரோக்கியம். அக்காதான் தன் இயலாத நிலமையோடும் அண்ணையைக் காத்தாள். மருந்தின்றேல் அண்ணையால் இயங்க முடியாத நிலமையாகியது.

திடீரென அக்கா சுவாசிக்கச் சிரமப்பட்டாள். மூச்செடுக்க அவளுக்கு முடியாமல் போகத் தொடங்கியது. பணமில்லாதவர்களுக்காக இலவச மருத்துவமனைகள் தான் உயிர் தரும் இல்லங்கள்.

தன்னையே கொண்டு செல்ல முடியாத அண்ணை அக்காவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இலவச மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த மருத்துவர் பணம் கொடுத்தே அக்காவிற்கு உயிர்காக்க முடியுமென்று அறிவித்தார். கடவுளாகத் தெரிந்த மருத்துவர் காசுப் பிசாசாகி அக்காவின் உயிரைப் பலியெடுக்கும் காலனாகித் தெரிந்தார்கள். காசு இல்லாது போனால் அக்காவை வீட்டுக்குக் கொண்டு போகச் சொன்னார்கள்.

அண்ணையின் உலகம் , ஆறுதல் ,பலம் , நம்பிக்கை , வாழ்வு எல்லாமே அக்காதான். அவளில்லையென்றால் எதையும் சமாளித்து வாழக்கூடிய நிலமையே இல்லாத தனிமனிதன் அக்காவின் உயிர்காக்கப் போராடினார். ஆனால் பணம் தான் அக்கா உயிரைத் தரும் கடவுளாகியது.

அக்கா வாழும் வரையும் வாழ்ந்துவிட்டுப் போகிறேனென ஊர் திரும்பினாள். ஒரு மாதம் வரையிலும் எதுவோ சமாளித்துவிட்டாள். கடந்த வாரம் அவளால் உணவை உட்கொள்ளவோ எழுந்து நடக்கவோ முடியாது போனது. உயர் இரத்த அழுத்தம் அத்தோடு சுவாசிக்க முடியாது அவள் சாவின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அண்ணை அவளை யாழ்ப்பாணம் கொண்டு சென்றார். பணம் வை இல்லையேல் ஆளைக் கொண்டு போ...! இலவச மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். தெரிந்தவர்களின் வீட்டில் அக்காவை வைத்துக் கொண்டு அண்ணை கடைசி நம்பிக்கை கைவிடாதென நம்பி வெளிநாட்டுக்கு தொடர்பெடுத்தார்.

என்ரை புள்ள உங்களை விட்டா எங்களுக்கு ஒருத்தருமில்லை...அக்கா சாகப்போறாள்....காப்பாற்று....என்ற அண்ணையின் கண்ணீர் ஐரோப்பா வரையிலும் கசிந்தது. அந்தச் செய்தியைக் கொண்டு வந்தாள் ஒரு போராளித் தங்கை. என்ன செய்தெண்டாலும் அக்காவை காப்பாற்ற வேணும்.

முகநூல் , வலைப்பூ மூலம் அறிமுகமான மருத்துவர்கள் பலரது இலக்கங்களைத் தேடிய போது திருகோணமலையில் வாழும் வலைப்பூவில் அறிமுகமான மருத்துவர் தம்பியொருவரின் தொடர்பே கிடைத்தது. அவசர மருத்துவ சேவையில் நின்ற அந்தத் தம்பி தனது அவசர நிலமைக்கு மத்தியிலும் உடனடியாக தொடர்பில் வந்து அக்காவை காப்பாற்ற வேண்டிய ஆதரவைத் தர முன்வந்தார். காசுக்காயே மருத்துவம் செய்யும் காசுப் பிசாசுகள் மத்தியில் அந்த மருத்துவர் தம்பி சத்தியமாய் என் கண்ணில் கடவுளாயே தெரிந்தார்.

17.04.2014 அன்று வேகவேகமாக அக்காவின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி 18.04.2014 ஏதாவது ஒரு வழியைக் காணும் வேகத்தில் தொடங்கிய முயற்சி. 18ம் திகதி அக்காவை மருத்துவமனையில் எதிர்பாராமல் ஒருவர் சந்தித்ததை கடவுள் அருளென்பதா ? இல்லை விதியென்பதா ?

1991இல் அக்காவோடு களமாடி வரலாற்றுச் சமரொன்றில் காயமடைந்து அவள் உயிர் போய்விட்டதென நம்பினார்கள். ஆனால் அக்கா மட்டுமே அவளுக்கு உயிர் இருப்பதை நம்பித் தன் தோழில் நீண்ட தூரம் காவிச் சென்று பிணமாகிக் கிடந்தவளுக்கு உயிர் கொடுத்திருந்தாள். அந்தத் தோழி பின்னர் குடும்பமாகி போராட்ட வாழ்வை விட்டு விலகியிருந்தாள். நீண்ட காலம் தொடர்புகள் எதுவும் இல்லாது போனது. அப்படியொரு உயிரைக் காத்ததைக் கூட அக்கா மறந்து போனாள்.

1991இல் அக்காவால் உயிர் காக்கப்பட்டவள் அக்காவின் நிலமையைக் கேட்டாள். அன்றைக்கு அக்கா தந்த உயிரே இன்று அவளை அந்த இடத்தில் உயிரோடு நிறுத்தியிருந்ததையும் நினைவுபடுத்தி அக்காவுக்கு உயிரைக் கொடுத்தேனும் உதவுவேன் என முன்வந்தாள்.

எங்கள் ஏற்பாடுகளின் நடுவில் அக்காவுக்கு கிடைத்த அந்தத் தோழி தனது உறவினர்கள் மூலம் அக்காவுக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய ஏற்பாட்டைச் செய்து இரவோடிரவாக கொழும்பு கொண்டு செல்லப்பட்டாள்.
சிகிச்சை முடிந்தால் ஆறுமாதங்கள் வரையில் அக்காவை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும். அதற்கான செலவை கட்டாயம் கருணையுள்ளம் படைத்தோர் யாராவது செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் குடும்பம் அக்காவுக்கான சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்துள்ளார்கள்.

தனது மனைவியின் அருகில் போயிருக்கத் தேவையான பணமில்லாததால் அண்ணை ஊரில் போயிருந்து தனியே அக்காவிற்காக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். உலகில் யாருக்கும் வரக்கூடாத துயரம் அண்ணைக்கு.
18ம் திகதி வீடு சென்ற அண்ணை திடீரென மயங்கி வீழ்ந்தார். ஏன் எதற்கு ?
காரணம் எதுவும் புரியவில்லை. தனித்தே வாழும் அந்த மனிதனுக்கு சுடுதண்ணீர் கொடுக்கக்கூட ஆளின்றி படுக்கையிலிருந்து எழ முடியாது போனது. தனது நிலமையை அக்கா அறிந்தால் வேதனைப்படுவாள் என யோசித்து தான் சுகமாய் இருப்பதாய் பொய் சொல்லிவிட்டு அக்காவின் வரவிற்காய் காத்திருக்கிறார்.

19ம் திகதி காலை 9மணிக்கு சிகிச்சை நடக்குமென்றார்கள். 18.04.2014 மாலை அக்காவை அழைத்தேன். அவள் கதைக்கவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு சொல்லை அவள் சொல்லும் போதும் நிமிடக்கணக்கில் அந்தரிக்கிறாள்.

ஆச்சி என்னால ஏலாதமணை....அண்ணையோடை கதையுங்கோ....அவர் பாவம்....நானில்லாட்டில் அவர் தனிச்சுப் போவர்....உங்கை யேர்மனியிலயும் எனக்கு சொந்தக்காறர் ரெண்டு பேர் இருக்கினம். அவைக்கெல்லாம் ரெலிபோன் எடுத்துப் பாத்தனான்...ஒருத்தரும் உதவமாட்டமெண்டிட்டினம்....அம்மாச்சி என்ரை செல்லம் கடவுள் தான் உங்களையெல்லாம் எனக்குக் காட்டியிருக்கிறான்.

நேற்றைக்கு மட்டும் இனியெனக்கு சாவுதான் தப்பமாட்டனெண்டுதானணை நினைச்சனான்....ஆனால்....அக்காவால் பேச முடியாது குரல் மிகவும் சோர்ந்து போய்க்கொண்டிருந்தது. அண்ணையோடை எடுத்துக் கதையணை....அவர் பாவம் என்னோடை ஏலாதத்தோடை அலைஞ்சவர்....பாவம் இப்ப தனிச்சு கிடக்கிறார்....!

அக்கா நீங்க யோசிக்காமல் படுங்கோ...நாளைக்கு எல்லாம் நல்லா முடிஞ்சு நீங்கள் திரும்பி வருவீங்கள்....உங்களுக்கு உதவிறதுக்கு இங்கை கனபேர் இருக்கினம் எல்லாரிட்டையும் கேட்பம்....உங்களை நாங்க கைவிடமாட்டம்....நிம்மதியா படுங்கோ....சொன்ன போது அக்கா அழுதாள்...
என்ரையம்மா என்னாலை ஏலாதாம் நான் படுக்கட்டே....அக்கா விடைபெற்ற போது இலங்கை நேரம் இரவு 9.40ஆகியிருந்தது. நீ வருவாய் எங்கள் அக்காவாய் உனக்கான உதவியை புலம்பெயர்ந்து வாழும் கருணையாளர்கள் தருவார்கள் நிம்மதியாய் இரு என்று சொல்லிக் கொண்டு தொடர்பை துண்டிக்கிறேன்.

அவளது குரலும் அவள் மூச்செடுக்க சிரமப்படுவதும் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. நேற்றைய இரவு விடியும் வரையும் அக்காவின் சிகிச்சை முடிவு பற்றிய செய்தியையே கைபேசி எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

பொறுமை கடந்து அண்ணைக்கு தொடர்பெடுத்த போது....ஓம் பிள்ளை சொல்லணை என்ற தீனக்குரலில் அழைத்தார். அக்காவுக்கு என்னமாதிரியண்ணை எல்லாம் முடிஞ்சுதே ? இல்லையம்மா அவவுக்கு பிறசர் சரியா கூடீட்டுதாம் பிறசர் குறையத்தானாம் செய்வினம்....!

தனது தனிமை , தனது இயலாமை , தனது நோயின் வலி பற்றியெல்லாம் அண்ணை சொல்லிக் கொண்டிருந்தார். 21ம் திகதி அண்ணைக்கான அடுத்த மருத்துவ சோதனைக்குப் போக வேணும். ஆனால் போவதற்கு கையில் எதுவும் இல்லாது இருக்கிறார். ஏதாவது வழி செய்வமண்ணை நாளைண்டைக்கு போங்கோ என்ற போது சொன்னார். எனக்கு உதவாட்டில் காரியமில்லை மகள் அக்காவைக் காப்பாற்றுங்கோ....அக்காவுக்கு உதவுங்கோ....!

அண்ணையின் குரல் அழுகையாகி விக்கலெடுத்துத் தேம்பினார். பணமே எல்லாவற்றையும் எல்லாரையும் வாழ வைக்கும் பலமாகிய விதியை நினைக்க கோபம் இயலாமை விரக்தியென ஏதோதோ உணர்வுகள் கண்ணிலிருந்து கண்ணீராய் வழிகிறது.

யோசிக்காதையுங்கோ அண்ணை....அக்கா சுகமாகி கெதியில வருவா....காசுதானே இந்த உலகத்தில எத்தினை பேர் இருக்கினம்....இன்னும் மனிதமும் மனிதர்களும் சாகேல்லயண்ணை திங்கள் விடியக் கிடையில உங்களுக்கு மருந்துக்கு காசு வரும்....! சொன்ன போதும் அண்ணை அக்காவைத் தான் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அக்காவைக் காக்க அக்காவைத் தவிர யாருமில்லாத அண்ணையைக் காக்க கருணையுள்ளம் படைத்தவர்களே உங்களிடமெல்லாம் கையேந்துகிறோம். எங்களுக்காக வாழ்ந்த இரு சீவன்கள் உயிர்காக்க உங்களால் மட்டுமே முடியும்.

19.04.2014 (இந்த உயிர்கள் இரண்டையும் காப்பாற்ற உதவுங்கள். உதவக் கூடியவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை வழங்கி உயிர்காத்துத் தாருங்கள்)

தொடர்புகளுக்கு :-
நேசக்கரம்
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418
nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh



Wednesday, April 9, 2014

காணாமற்போனவர்கள் இனி வர வேண்டாம்

நீலக்கோடுகள் அடர்த்தியாய் வரையப்பட்ட சாரமும்  வெள்ளைச் சேட்டும் அணிந்திருந்தான். சன நெரிசலை விலக்கி வந்து கொண்டிருந்தவன் தனது நடையின் வேகத்தைக் கூட்டி ஓடிவரத் தொடங்கினான். கையில் ஒரு பை அதனுள் எதையோ வைத்துக் காவிக்கொண்டு ஓடிவந்தான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். கையில் இருந்த பையிலிருந்து ஒரு அழகான பெட்டியை அவளிடம் நீட்டினான். இது உன்னுடைய மகனுக்காக நான் எடுத்து வைச்சிருந்தனான். இத அவனிட்டைக் குடு மாமா தந்தனெண்டு....!

அவன் கொடுத்த பெட்டி தவறி கீழே விழுந்தது. அதனுள் சில்லறைக்காசுகள். நிலத்தில் சிதறிய காசுகளைப் பொறுக்கிப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். பச்சையுடையுடுத்த சட்டித் தொப்பியணிந்தவர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.  பாதணி அணியப்படாத வெறும் காலோடு சகதி நிறைந்த ஆற்றுநீரில் இறங்கினான். ஆற்று நீர் அவனை தன் மெல்லிய கால்களோடு இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தது.

அவன் பெயரைச் சொல்லிக் கத்தியழுதாள். சிரித்தபடி அவளிடம் வந்தவன் இரத்தம் வழிய ஆற்றோடு அடிபட்டு இழுபட்டுப் போய்க்கொண்டிருந்தான். மெல்லென ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில் அவனது குருதியும் கலந்தோடியது. ஆற்றோடு இழுபடும் அவனை நோக்கிக் கைகளை நீட்டியழுதாள் அவன் கண்ணிலிருந்து விடுபட்டுத் தொலைவாகிக் கொண்டிருந்தான்.....!

அவசரமாக எழுந்தாள். சே...கனவு....! உறங்கிக் கொண்டிருந்த மகனின் அறையைத் திறந்து மின் விளக்கைப் போட்டாள். என்னம்மா...! நித்திரைத் தூக்கத்தில் கேட்டான் மகன். சரி படுங்கோ செல்லம்....! சொல்லிவிட்டுத் தன் கட்டிலில் வந்து மீண்டும் சரிந்தாள். ஆனால் அந்தக் கனவில் சிரித்தபடி வந்தவன் இரத்தம் கலந்து ஆற்றோடு அடிபட்டுப் போனது மனசுக்குள் ஏதோ அந்தரிப்பாயிருந்தது. திரும்ப நித்திரை வர மறுத்தது. மனசுக்குள் ஏதோ அந்தரிப்பாயிருந்தது.

2009இன் பின்னர் அனேகமான கனவுகள் இப்படித்தான். காணாமற்போனோர் முகங்களும் கடைசியாய் சிரித்தபடி விடை தந்து போனோருமே நிறையும் கனவுகளாகியிருக்கிறது. அவர்கள் பிரிவும் , துயரங்களும் கனவுகளையும் நிம்மதியாய் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய கனவில் வந்தவனும் 2009இல் காணமற்போனவன். இந்த 5வருடத்தில் ஒருமுறையும் கனவில் வராதவன் இன்று வந்து போயிருக்கிறான். சிலவேளை எங்கேனும் இருப்பானோ ? கைபேசித் திரையைத் தட்டி இணையத்தில் உலாவத் தொடங்கினாள். அவனது பெயரை கூகிளில் அடித்துப் பார்த்தாள் ஏதாவது செய்திகள் அண்மையில் வந்ததோ என தேடினாள்.

அப்படியேதும் இருக்கவில்லை. ஆனால் நினைவுகளில் இருந்து மறந்து போனவன் ஏன் இன்று கனவில் வந்து சில்லறைக்காசுகளை அவளது மகனுக்காக கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான் பெரும் குழப்பமாகவே இருந்தது. கனவுகளுக்கு காரணங்கள் ஆய்வுகள் ஆயிரம் சொல்லப்பட்டாலும் இதுவரை கனவுகள் பற்றி எவரும் சரியான ஆய்வை காணாமல் இருப்பது பற்றி அந்த நேரம் யோசித்தாள்.

இப்போது கனவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. கனவுகளைப் பகிர்ந்து கொண்டால் அது பலிக்காதென்று சொல்வதை நம்பி பலமுறை தனது கனவுகளை பகிரப்போய் எல்லோரிடமும் நன்றாக வேண்டிக்கட்டியிருக்கிறாள்.

ஒண்டையே ஒரே நினைச்சுக் கொண்டிருந்தால் கனவும் அதுதான வரும்....! எல்லோரும் சொல்வார்கள். அதனால் கனவுகளை யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் அந்தக் கனவிலிருந்து விடுபடும் வரையும் அமைதியின்றி அலைவாள். மௌனமாய் நினைவுகளோடு கரைதலும் பின்னர் மீள எழுதலுமே வளமையாகிப் போனது.

000               000               000

அவனும் அவளும் ஒரே ஊரில் பிறந்திருந்தார்கள். அவன் அப்பா அவளது தாய்வழி உறவு. மாமா என்ற மதிப்போடு அவனது அப்பா அவள் வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் அவனைப் பற்றி ஏதாவது சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டேயிருப்பார். அவன் க.பொ.த.சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கணித பிரிவில் உயர்தரத்தை ஆரம்பித்திருந்தான். அவனிலும் 2 வயதால் இளைய அவள் அவனது கடைசித் தங்கையுடன் படித்துக் கொண்டிருந்தாள்.

ஆண்களும் பெண்களும் கலந்து படித்த பாடசாலைக்கு அவள் ஆறாம் வகுப்பில் இணைந்த போது அவனும் கூடவே வருவான். மதியம் பேயயுலவும் என்று நம்பிய புளியமரத்தடியை அவன் வரும் துணிவோடு பயமில்லாமல் கடந்து போவாள். பனைவடலிகளைத் தாண்டிப் போகும் போதெல்லாம் அவனே துணையாக வந்திருக்கிறான். பின்னர் அவனது கடைசித் தங்கையுடன் சேர்ந்து போகும் போது அவனும் கூடவே அவர்களோடு சயிக்கிளில் வருவான்.

அதிகம் கதைக்க வேண்டிய தேவைகள் இல்லாது போனாலும் அவன் தங்கைக்கு காவலனாய் வரும் போது அவளுக்கும் காவலாயே வருவான். வெள்ளி , செவ்வாய்க்கிழமைகளில் வயிரவர் கோவிலில் பஜனை பாடும் போதும் அவனும் வருவான். நெற்றியில் விபூதியும் சந்தனமும் வைத்து அமைதியாய் வைரவரை வழிபடுவான். சரஸ்வதி பூசைக்கு பேச்சுப்போட்டி , தேவார மனனப்போட்டி எல்லாவற்றிலும் அவனும் கலப்பான். ஆளாளுக்கு போட்டி போட்டு பரிசை வெல்வார்கள்.

எதுவென்று பிரித்தறிய முடியாத உறவிணைப்பு. அவன் வீட்டு வளவில் காய்க்கும் நெல்லிக்காய் , கொய்யாக்காயிலிருந்து எல்லாமே அவன் எல்லோருக்கும் பங்கிடுவான். சிறுவயது மகிழ்ச்சிக் காலங்களில் அவனோடு சேர்ந்து கிளிக்கோடு மறித்தது தொடக்கம் எட்டுப்பாத்தி , மாங்கோடு , கப்பல் கோடு வரையும் போட்டி எப்போதுமே அவனுடன் இருந்து கொண்டேயிருந்தது.

உயர்தரம் கணித பிரிவில் படிக்க ஆரம்பித்து சில மாதங்களில் அவன் ஊரிலிருந்து காணாமற்போனான். அது இந்திய இராணுவம் வெளியேற்ற காலம். அவனுடைய அப்பா அவள் வீட்டில் வந்து போகும் நேரமெல்லாம் கண்கள் பனிக்க அவனைப் பற்றிச் சொல்லுவார். என்ன குறைவிட்டனான் ? ஏன் இப்பிடிச் செய்திட்டுப் போனவன் ? அவரது கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவளது அம்மாவுக்குச் சொல்லுவார்....அவன் ஒரு பெரிய ஆளா வருவனெண்டு தான் படிப்பிச்சன்...ஆனால் அவருக்கு நாடு பெரிசெண்டு போயிட்டார்....!

அந்த அப்பாவின் வலியின் கொடுமை அவளுக்கு அப்போது புரிந்ததில்லை. ஆனால் அவனைப் பற்றி பெருமையாக இருந்தது. மனசில் சின்ன நெருடல் அவ்வப்போது இருந்தாலும் அவன் ஒருநாள் துவக்கோடு ஊரில் வந்து வரிச்சீருடையுடன் அவளையும் தாண்டி மோட்டார் சயிக்கிளில் போன போது ஏனோ இனம்புரியாத துயரம் மனசை நெருக்கியது.

அவனது உயிர் இன்று அல்லது நாளை போய்விடும் போல அவனது கடமை அமைந்து அவன் களத்தில் நின்றான். எங்காவது எதேச்சையாக காணும் நேரங்களில் ஒரு சிரிப்பு அவ்வளவுதான் அதற்கு மேல் எதுவுமில்லை. அவனை உறவென்று சொல்லிக் கொள்வதில் ஒருவகை பெருமிதம்.

1990 மேலும் ஊரிலிருந்து ஆண்கள் , பெண்கள் காணாமற்போனார்கள். அவன் போன கடுமையான பயணத்தில் பலர் இணைந்தார்கள். மீண்டும் இடப்பெயர்வு  , குண்டுச் சத்தங்கள் , மரணங்கள் அவலத்தின் பொழுதுகள் அவன் பிறகு காணாமற்போய்விட்டான். பொறுப்பாளராய் உயர்ந்து ஓமந்தையில் நிற்கிறான் எனச் சொன்னார்கள்.
.......,
காலநதியில் எழுதப்பட்ட கதைகள் பல அவை கண்ணீராலும் எழுதப்பட்டு கரைந்து கொண்டேயிருந்தது. அவள் நாட்டைவிட்டுப் பிரிந்தாள். திருமணம் குழந்தைகள் என வாழ்வு மாறிப்போனது. அவன் நடந்த களத்திலிருந்து தூரமாகினாள்.

இடையில் களங்கள் இறுகி தொடர்புகள் அறுந்து உறவுகள் அயல் எல்லாம் எங்கெங்கோ பிரிந்து போனார்கள். அவனும் நினைவுகளிலிருந்து மறந்து போகாமல் பல தோழர்களின் நினைவுகளோடு அவ்வப்போது நினைவுகளோடு வந்து போயிருக்கிறான். உறவொன்றைச் சந்தித்த போது அவனைப் பற்றி விசாரித்தாள். அவன் ஒரு தளபதியாக தகுதிநிலை உயர்ந்தானென்று தகவல் சொன்னார்கள். ஒரு பெண் போராளியை திருமணமும் செய்தானென்றும் சொன்னார்கள்.

காலம் 2002.....,மீண்டும் தாயகப்பயணம் போன போது அவனது கடைசித் தங்கையைத் தேடிப்பிடித்தாள். முல்லைத்தீவில் ஒரு அழகான தென்னந்தோப்பு வளவில் குடியிருந்தார்கள். அண்ணா என்ன செய்றான் ? கேட்ட போது அவனது சின்னத்தங்கை அவனைப் பற்றிச்  சொன்னாள். சந்திக்கக் கூடிய இடத்தில் அவன் அப்போது இல்லையென்றார்கள். மீண்டும் 2003இல் பிள்ளைகளோடு போன போது கிளிநொச்சியில் அவன் அரசியல் அலுவலகத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். அந்தக்கால அவசரங்களோடு அவனும் அலுவலாகியிருப்பதாக சொன்னார்கள்.

ஒருநாள் அறிவமுது புத்தகசாலையில் அவள் புத்தங்கள் வாங்கப் போயிருந்தாள். பலர் புத்தகக் கடைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவள் ஒவ்வொரு புத்ததங்களையும் பார்த்துப் பார்த்து அது வேணும் இது வேணும் என எடுத்துக் கொண்டிருந்தாள். என்னக்கா கடை போடப்போறியளோ ? புத்தகக் கடையில் நின்ற தம்பியொருவன் கேட்டான்.

மேலும் சிலர் வந்தார்கள். அவள் புத்தங்களை பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள். பலசரக்குக் கடைக்கு சீனிச்சரை சுத்தவோ உவ்வளவு புத்தகமும் ஒருவன் சொன்னது கேட்டது. திரும்பிப் பார்த்த போது அவன் தனது முகத்தைக் காட்டாமல் மறுபக்கம் திரும்பி நின்றான். இடுப்பில் பெலிற் கட்டி பிஸ்ரல் செருகிகியிருந்தான். பிஸ்ரல் கட்டிய ஒருவர் புத்தகங்கள் சீனிச்சரை சுத்தவோ புத்தகங்கள் என்றது சட்டென கோபத்தைக் கொடுத்தாலும் அதை வெளிக்காட்டாமல் புத்தகங்களை எடுத்தாள்.

பிள்ளைகள் வெளியில் ஐஸ்கிறீம் வாகனத்தைக் கண்டதும் ஜஸ்கிறீம் வேணுமென அடம்பிடித்தார்கள். பிள்ளைகளுடன் அவளுக்கு உதவியாய் வந்திருந்த தம்பியிடம் சொன்னாள். தம்பி ரெண்டு பேருக்கும் ஐஸ்கிறீம் வேண்டிக் குடுக்கிறீங்களே நான் புத்தகத்தை எடுத்திட்டு வாறன். ஓமக்கா....என்றவன் வாங்கோ நாங்க ஐஸ்கிறீம் வாங்குவம் என பிள்ளைகளை கூட்டிக் கொண்டு தெருவுக்குப் போனான்.

123புத்தகங்களை கொள்வனவு செய்து கொண்டு வெளியில் வந்தாள். பிள்ளைகள் ஜஸ்கிறீமும் கைகளில் விளையாட்டுப் பொருட்கள் சிலவற்றையும் வைத்துக் கொண்டு தம்பியுடன் நின்றார்கள். அரசியல்துறை அண்ணையொராள் வந்தவர் பிள்ளையளுக்கு ஜஸ்கிறீமும் விளையாட்டுச் சாமானுகளும் வாங்கிக் குடுத்திட்டு போறார் என்றான். உங்கடை ஊராம் உங்களைத் தெரியுமாமெண்டு சொன்னவர். பிள்ளையளுக்கு தான் மாமாவெண்டு சொல்லி உதெல்லாம் வேண்டிக் குடுத்தவர்.

தம்பி சொல்லியும் அது யாரென்பது புரியவில்லை. அவனை நினைவும் வரவில்லை. வீடு போன பின்னர் தம்பியிடம் அவனது பெயரை விசாரித்ததில் அவன் நினைவில் வந்தான். சமாதான செயலகத்தில சொல்லிவிட்டால் ஆளைப் பாக்கலாமக்கா...!

அண்மையாக சந்தித்தவன் பேசாமல் போனது கோபமாக இருந்தது. தம்பி சொன்ன பிறகும் கௌரவம் விடாமல் அவனைச் சந்திக்கும் முயற்சியை எடுக்கவில்லை. எங்கே நிற்கிறாள் யாருடன் நிற்கிறாள் என்பதெல்லாம் நிச்சயம் அறிந்திருப்பான். அப்படியிருக்க அருகில் வந்தும் பேசாமல் போனானென்றால்....திமிர் என தனக்குள் முணுமுணுத்தாள். ஆளாளுக்கு பிடிவாதத்தில் சந்திக்க முயற்சியெடுக்கவில்லை. அவள் ஐரோப்பா திரும்பிவிட்டாள்.

2006இல் இந்தியாவில் இருந்த அவனது சித்தி நோய்வாய்ப்பட்டு இருப்பதாக அறிந்து கதைக்க எடுத்த போது கதையோடு அவனது கதையும் வந்தது. நீயென்னடி 3மாதம் கிளிநொச்சியில் நிண்டியாம் தன்னை ஒருமுறை கூட பார்க்க வரேல்லயெண்டு சொன்னான். ஏனடியாத்தை ஒருக்கா பிள்ளையளையும் காட்டி பாத்திருக்கலாமெல்லே ?
புத்தகக்கடையில கண்டவர் ஏனன்ரி என்னோடை கதைச்சிருக்கலாம் தானே...! பிள்ளையளுக்கு விளையாட்டுச் சாமானுகளை வாங்கிக் குடுத்திட்டு போகத் தெரிஞ்சவர் கதைச்சா என்ன குறைஞ்சே போயிடுவர் ?
நீ தன்னை அடையாளம் பிடிக்கிறியோண்டு பாக்கத்தான் அவன் கடையில கண்டிட்டு கதைக்காமல் போயிருக்கிறான். சீனிச்சரை சுத்தவோ புத்தகமெண்டு சொன்னவனாம்....அப்ப பக்கத்தில தானே நிண்டவனாம்.....! சத்தியமா எனக்கு அடையாளம் தெரியேல்லயன்ரி...! ஏத்தின வரியம் இப்பத்தைய தோற்றத்தை என்னாலை அடையாளம் காண முடியேல்ல...வேணுமெண்டு தானே கதையாமல் போனவர்.....!

பழைய குரல் நினைவிருக்கலாம் என நினைத்தானோ என்னவோ...! அவன் கொஞ்சம் வீம்பு பிடித்தவன் என்பாள் அவளது தங்கை. அதற்காக அருகில் நின்றும் தன்னை அடையாளம் காட்டாமல் போனவன் மீது சொல்ல முடியாத கோபம். ஆளாளுக்கு பிடிவாதம் பிடித்து சந்திக்காமல் தொடர்பு கொள்ளாமல் விட்டு அதுவொரு சின்ன வயசு கால கோபம் போலவே போய்விட்டது.
அவனைப்பற்றி பலரும் கதைத்தார்கள். அவனது பதவிநிலை , பணிகள் , திறமை எல்லாவற்றையும் ஊரவர்கள் தொடக்கம் அவனது பெயரையும் காலம் உச்சரித்துக் கொண்டேயிருந்தது. அவனது அலுவலகத்தில் அவனுக்கு உதவியாளராயிருந்த அவனது துறைசார் போராளியொருவனுடன் ஒருமுறை அலுவல் ஒன்றிற்காக தொடர்பேற்படுத்திய போது அவனைப் பற்றி அடிக்கடி அறியக் கிடைத்தது. ஒருமுறை அவனது உதவியாளர் அவனது நிழற்படமொன்றை மின்னஞ்சலிட்டிருந்தான்.

சொல்லுங்கோ தம்பி அவர் கதைக்காட்டி நானும் கதைக்கமாட்டனாமெண்டு. ஐயோ கடவுளே இந்தக் குழந்தைப்பிள்ளையள் ரெண்டின்ரை தொல்லையும் எனக்கு பெருந்தொல்லையப்பா...! ஏன் அவ கதைக்கமாட்டாவோண்டு அவரும் இவ ஒராள் என் அவர் கதைக்கமாட்டாரோண்டு ....! தம்பி ஒருமுறை கதைத்த போது இப்படித்தான் அலுத்துக் கொண்டான்.

காலம் ஓடியது யுத்தம் மூண்டது. இரத்தமும் அவலமும் தோய்ந்த நாட்களாய் விடியத் தொடங்கியது. தொடர்பில் இருந்த அவனது உதவியாளர் தம்பி இடையிடை தொடர்பு கொள்வான் சுகம் விசாரிப்பான். அவனும் ஆனந்தபுரம் சண்டை முடிவோடு இல்லாமல் போய்விட்டான். சொல்லாமல் கொள்ளாமல் காணாமற் போயிருந்தான்.

மேமாதம் 2009 உலகம் பரபரத்தது தமிழர்கள் மட்டும் கண்ணீரோடும் துயரத்தோடும் அந்தப் பொழுதுகளை வரவேற்றுக் கொண்டார்கள். எல்லாம் மாறியது நினைக்காத சரணடைவு கனவிலும் பார்த்திராத அந்த நிகழ்வு நடந்து....எல்லாம் முடிந்து போனது....பலரின் முடிவு போல அவனும் இறுதியில் சரணடைந்தானா ? சாவை தனக்குத் தானே மூட்டினானா என எதுவும் தெரியாது.

தேடித்திரிந்தவர்களில் அவனும் ஒருவனாய் அவள் தேடினாள். அவனது குடும்பம் அவனது மனைவி , பிள்ளைகள் யாரையும் எங்கும் கண்டுபிடிக்கவில்லை. உறவுகள், நண்பர்கள் , தெரிந்தவர்கள் என காணாமற்போனவர்களின் பட்டியலில் அவனும் காணாமற்போயிருக்கிறான்.

இணையத்தில் செய்திகளைத் தேடுகிறாள். அவர் கைது , இவர் கடத்தல் என தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுகளும் , செய்திகளும் தூள்பறக்கும் அலசல்களால் நிறைகிறது தமிழ் இணையங்கள். அவனது பெயர் இதுவரை எங்குமே வரவில்லை. துரோகியாய் ஆராயப்பட்டு அவன் வாழ்ந்த வாழ்வை எவரும் இதுவரை கொச்சைப்படுத்தாதது ஆறுதலாக இருந்தது.

அவன் விரும்பியிருந்தால் வெளிநாடொன்றில் வசதியை அனுபவித்து தனது வாழ்நாளை கடத்தியிருக்கலாம். அவனது கணிதத்துறைக் கல்வியைத் தொடர்ந்து வென்றிருந்தால் ஒரு விஞ்ஞானியைக் கூட அவனது குடும்பமும் அவனது ஊரும் பெற்றிருக்கலாம். ஆனால் பதின்மம் மாறாத அந்த வயதில் தேசத்தை நேசித்துப் போனதால் அவன் காணாமல் போனான்.

எல்லோரையும் போல சுயநலமாய் இல்லாமல் பொதுநலமாய் யோசித்து தன்னை மறந்து தேசத்தை நேரித்த போராளிகளை மாவீரர்களை சமகால தமிழ்ச்சாதி கவனிக்கும் கவனிப்பையெல்லாம் பார்க்காமல் மறைந்தவரும் காணாமற்போனவரும் இனி வரவே வேண்டாமென நினைத்துக் கொண்டாள்.
ஒரு வேளை காணாமற்போனவர்கள் திரும்பி வந்து இந்த நிலமையைப் பார்த்தால் எதிரியிடம் பிடிபடாமல் இலட்சியத்தை வெல்ல அணிந்த சயனைட் வில்லைகளை இந்த சமூகத்தின் மீதான அவநம்பிக்கையை சகிக்க முடியாமல் தற்கொலைக்காக பயன்படுத்தக் கூடும். அவர்கள் வர வேண்டாம்...காணாமலேயே இருக்கட்டும்.

சின்னப்பிள்ளையள் மாதிரி ஆளாளுக்கு முரண்டு பிடித்து கதைக்காமல் தொடர்பு கொள்ளாமல் விட்டது இப்போது நெஞ்சுக்குள் வலியைத் தருகிறது. நீ முதல் கதைச்சாலென்ன என ஆளாளுக்கு அடம்பிடித்ததையும் ஒருகாலம் விளையாட்டாக ரசித்தது போல இப்போது ரசிக்க முடியவில்லை. இனி என்றுமே திரும்பக் கிடைக்காத அவனும் அவன் போன்றவர்களினதும் நினைவுகள் மட்டும் மீதமாக....!

08.04.2014 (அண்மைய நாட்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளைப் படித்த போது எழுந்த உணர்வும் ஒரு காலத்தின் ஞாபகமும் ஒரு கனவும் தந்த பாதிப்பிலிருந்து இக்கதை பிறந்திருக்கிறது)

Friday, April 4, 2014

ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...!

அந்த நாட்கள்
தீயின் நாக்குகளால்
தின்னப்பட்ட தீராத்துயர்
எங்கள் வீரத்தின்
விலாசங்களை
வெ(கொ)ன்ற நாட்கள்.


வெற்றிகள் தந்தெங்கள்
விடுதலைச் சுவடுகளில்
வீரம் எழுதிய
மகனாரும் , மகளாளும்
இறுதிச் சமர் புரிந்து
எரிந்து கரைந்த
5ம் ஆண்டு நினைவில்
ஆனந்தபுரம் அழியாத நினைவாக....!

பூக்களின் வாசனை கலந்த
பொன்னிதழ் விரியும்
புன்னகை முகங்கள்
பொசுங்கிக் கிடந்த நாளை
வசந்த கால மலர்வாசம் தரும்
ஏப்றல் மாதம் என்றென்றும்
எங்களில் எரியும் தீயாய்...!

இழப்பின் கதைசொல்லும்
என்றைக்கும் இதயம் நிரம்பிய
துயர் தருமாதம் நஞ்சு கலந்து
எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட
நிலத்தின் கதைசொல்லும்
நீங்காத் துயர் மாதம்.

04.04.2014 (2009 முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான நாள். உலகம் திரண்டு அழித்த ஈழவிடுதலைப்போரில் அன்று உலகின் கண்முன்னால் எங்கள் தளபதிகளும் போராளிகளும் எதிரிக்கு அதிகளவு இழப்பை ஏற்படுத்தி இறுதிவரை சமரிட்டு தங்கள் உயிர்களைத் தந்து போனவர்கள்)

Email - rameshsanthi@gmail.com

Sunday, March 23, 2014

பெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம் என்ற காமுகன்.

22.03.2014 அன்று ttnnews என்ற இணையத்தினை நடாத்தும் விசுவலிங்கம் சிறீறங்கராம் என்ற றாம் அவர்கள் முன்னாள் போராளியான அஸ்வினி பற்றி தனது இணையத்தளமான ttnnews இல் மிகவும் கீழ்த்தரமாகவும் பொய்யான செய்தியொன்றை எழுதியிருந்தார். அச்செய்திக்கு தானே பல பெயர்களில் கருத்தும் எழுதி அஸ்வினி அவர்களை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளார்.

பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவின் மகளீர் பிரிவின் தளபதியாக இருந்த அஸ்வினி அவர்கள் காமக்கதை பேசி புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் பறிப்பதாகவும் இறுதி யுத்தத்தில் அஸ்வினி அவர்கள் இலங்கை புலனாய்வுப்பிரிவினிருடன் உல்லாசமாக இருந்து பலரை காட்டிக் கொடுத்ததாகவும் எழுதி தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் றாம்.

தனது வாழ்க்கையை எங்கள் இனத்தின் விடுதலைக்காகவே தந்து இன்று வாழும் வழியையும் இழந்து நிற்கும் இந்தப் போராளியின் தற்போதைய வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது றாம் என்ற வக்கிரம் பிடித்த காமுகனின் செய்தி. அஸ்வினியினதும் அவரது குடும்பத்தினது வாழ்வும் அவரது பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் என்ன செய்யப்போகிறோம் ?

ஒரு சக பெண்ணை தோழியை எங்களுக்காக போராடி எல்லாம் இழந்து யாராவது புலம்பெயர்ந்தவர்கள் உதவுவார்கள் என்று நம்பி கையேந்திய அஸ்வினி மீதான ஊடக வன்முறைக்கு எதிராக பேசாமல் மௌனமாக என்னால் இருக்க முடியவில்லை. அஸ்வினிக்காக குரல் கொடுக்கும் என்மீது கூட நாளை இந்த ஊடக வியாபாரியால் ஏதாவது புனைகதையொன்றைத் தயாரிக்க முடியும்.

அநீதிகளை எதிர்த்தோ அல்லது சக பெண்போராளி மீதான பாலியல் அச்சுறுத்தலை எதிர்த்தோ ஒரு பெண் நின்றால் அவளுக்கு இந்த றாம் போன்ற தமிழ் ஆணாதிக்கம் கொடுக்கும் பட்டம் விபச்சாரிகள்.

சக பெண் போராளிகளை வெளிநாடு அழைப்பதாகவும் , திருமணம் செய்வதாகவும் பொய் கூறி ஏமாற்றிய றாமை எதிர்த்து தன் சக தோழிகளுக்கு நியாயம் கேட்டதற்காக இன்று அஸ்வினி என்ற முன்னாள் போராளி றாம் என்ற காமுகனின் பொய்யான பழிக்கு ஆழாகியிருக்கிறாள்.

அக்கிரமத்தைக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு பெண்ணையும் றாமின் ஆணாதிக்க வக்கிரம் பலியெடுத்துக் கொண்டே போகப்போகிறது. தயை கூர்ந்து தமிழ்ப் பெண்கள் அனைவரும் இந்த றாமின் அடாவடித்தனத்துக்கும் பெண்போராளிகள் மீதான இத்தகைய ஊடக வக்கிரத்திற்கும் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

போரில் எல்லாவற்றையும் இழந்த பல போராளிகள் இந்தியா, இந்தோனேசியா , மலேசியா என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு நல்வாழ்வொன்று வருமென்று நம்பும் இவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் உதவி கேட்கிறார்கள். உதவுகிறோம் எனும் பெயரால் அவர்களது சுயமரியாதையை கௌரவத்தை விலைபேசும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலரால் எத்தனையோ பெண்களின் வாழ்வு அனாதரவாகிக்கிடக்கிறது.

ஒருகாலம் வன்னிக்குச் செல்லவும் போராளிகளைக் சந்திக்கவும் இவர்களது தோழ தோழியர்கள் என்று சொல்லியும் பெருமைப்பட்டு படங்கள் எடுத்துக் கொண்டு புலம் வந்தவர்கள் தங்களுக்கு ஏதோவொரு வழியைக் காட்டுவார்கள் என்று நம்பியே உதவிகள் கேட்கிறார்கள். உதவி ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்பட்டிருக்கிறது.

ஆனால் உதவுகிறோம் என்பதற்காகவே தங்கள் இச்சைகளுக்கு அவர்களைப் பலியாக்குவதும் , உடன்படாதவர்களை விபச்சாரிகள் , இலங்கையரச புலனாய்வாளர்களின் ஆசைநாயகிகள் என எழுதி அவர்களது வாழ்வின் நிம்மதியைப் பறிக்கின்ற றாம் போன்றவர்களின் அடாவடிகளைப் பார்த்தும் இன்னும் மௌனமாயே இருக்கப் போகிறதா ?

மேலும் பல போராளிப் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களுக்கு உதவுவுதாகக் கூறி பலருக்கு பல பெண்களை விற்ற றாமின் உண்மை முகத்தை பல முன்னாள் போராளிகளும் இன்னும் நம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இவரது உதவிகளுக்குப் பின்னால் பல மர்மங்களும் பலரது முகங்களும் மறைந்து கிடக்கிறது. அவர்களையும் விரைவில் வெளிப்படுத்துவோம்.

ஓவ்வொரு போராளியும் வாழ்க்கையின் இளமைக் காலத்தை போராட்ட களத்தில் கொடுத்து வெளியுலக வாழ்வினை அனுபவிக்காதவர்கள். இவர்கள் மக்களையும் மண்ணையும் மட்டுமே நேசித்தவர்கள். றாம் போன்ற வக்கிரமானவர்கள் எல்லாம் இதே தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாதவர்கள்.

உதவுகிறோம் என அழைத்தவுடன் தங்கள்  வறுமையையும் தங்கள் நிலமையையெல்லாம் கூறிவிடுகிறார்கள். வறுமையும் யாரும் ஆறுதலுக்கு இல்லாத நிலமையிலும் இருக்கும் போராளிகள். அவர்கள் மீது அன்பு காட்டுவது போல பேசி சில ஆயிரம் ரூபாய்களை உதவிவிட்டு தன்னுடைய பாலியல் வியாதிக்கு வடிகால் தேடும் றாம் போன்றவர்களால் தொடர்ந்து பல பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

றாமின் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை வரையும் சென்ற பெண்போராளிகளும் இன்னும் தங்களால் வெளியில் சொல்லியழ முடியாத துயரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வருடாவருடம் பலமுறை சுற்றுலா சென்று வரும் போதெல்லாம் பல பெண்களின் வாழ்வை பலியெடுத்துக் கொண்டு வருகிற மிருகம்.

தாயகத்தில் வாழும் பல பெண்போராளிகளின் குடும்பங்களை சிறைக்கு அனுப்புவேன் என தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் றாமின் அச்சுறுத்தலுக்குத் தினமும் பயந்தபடி வாழும் போராளிகளின் கண்ணீருக்கும் துரயத்துக்கும் முடிவு என்ன ?

றாம் என்பவர் யார் !

இவர் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர். விசுவலிங்கம் சிறீறங்கராம் என்பது இயற்பெயர். 90களில் புலிகள் அமைப்பில் இணைந்து 95இல் காவலரணிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடியவர்.  பின்னர் இந்தியா சென்று பிரித்தானியாவை வந்தடைந்தவர்.

மச்சாள் முறையான றாதிகாவைத் திருமணம் செய்து 2பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையோடும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ராதிகா இந்தக் காமுகனின் எல்லா அடாவடிகளையும் தாங்கிக் கொண்டு வாழும் கண்ணகி கால மனைவி. தன்போன்ற பெண்களை பாலியல் வக்கிரம் புரியும் விடயங்களை அறிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தெரியாத அப்பாவிப் பெண்ணாக இருக்கிறார்.

2009வரை றாம் யாரென்று யாருக்கும் தெரியாது. 2009யுத்த முடிவின் பின்னர் தான் தலைவர் பிரபாகரனின் மைத்துனன் எனவும் மூத்த பெண்போராளி ஒருவரின் தம்பியெனவும் கூறிக் கொண்டு ஆட்கடத்தல் வேலையை ஆரம்பித்திருந்தார்.

2009நாட்டில் இருக்க முடியாத நிலமையில் இருந்த போராளிகள் பலரை வெளிநாடு அழைக்கும் ஆட்கடத்தல் முகவராக வெளிப்படையாக இயங்கத் தொடங்கிய போதே பல போராளிகள் இவரிடம் உதவி கேட்கும் நிலையேற்பட்டது.

தாயகத்தில் இருந்த பல போராளிகளுக்கு அங்கே வாழ முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாகக் கூறி பல போராளிகளை மலேசியா , இந்தியா , இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்து பாதுகாப்பு வழங்குவதாக உதவிகளைக் கோரியிருந்தார். இவனது கதைகளை நம்பி புலத்திலிருந்து பலர் உதவிகளையும் வழங்கியிருந்தார்கள்.

சில லட்சங்களுடன் தங்கள் வாழ்க்கையை அவுஸ்ரேலியா ,கனடா , ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழ வழி கிடைக்கும் என நம்பிய பலர் தங்கள் பணத்தையும் இழந்து இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். இருந்த உடமைகளையும் விற்று றாமை நம்பி வெளிநாடு பார்க்க வெளிக்கிட்ட பலர் தற்போது எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள்.

வெளிநாடு அழைக்கிறேன் என்றும் தனது மனைவி இறந்துவிட்டாரெனவும் கூறி பல போராளிப் பெண்களை ஆசிய நாடுகளில் அழைத்து அவர்களை பாலியல் வதை செய்திருக்கிறான். இவனால்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பை யாராலும் வழங்க முடியவில்லை. வந்த நாடுகளில் சட்ட ரீதியற்று வாழ்வதால் சட்டம் உள்ளே தள்ளிவிடுமென்ற பயத்தில் றாமின் அநியாயத்துக்கெல்லாம் பல பெண்கள் பலியாகியுள்ளார்கள்.

இன்னும் தொடரும்.....!

Sunday, March 16, 2014

தாயே உனக்காயும் விபூசிக்காகவும்.

அம்மா அம்மா என - நீ
அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம்
நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள்
இன்று போல.....!
உன்னைக் கைவிடோமென நம்பிய
உனது பிள்ளைகளின் கனவுகள் மீது
உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன.

உனது கண்ணீரை உனது துயரங்களை
நீ சொல்லியழுகிற போதெல்லாம்
மறுமுனையில் உனக்காய் 
உனது குழந்தைகளுக்காய்
அழுத நாட்கள் அதிகம் தாயே....!


நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள்
விதையாகிப்போன பின்னும்
வீரத்தின் அடையாளமாய் அவர்கள்
விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில்
வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் 
அங்கேயே வாழ விரும்பினாய்....!

ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற
கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய்
அவனது வரவைத் தானே நீ தினமும் ஏந்தினாய்...!
'காணாமற்போனவர்கள் ஒருநாள் வருவார்கள்'
நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நீ
அவனைத் தேடித்தானே அலைந்து திரிந்தாய்....!

காணாமற்போனவனை நாங்களும் தேடித்திரிந்தோம் 
என்றாவது வருவானென நீ நம்பியது போலவே நம்பினோம்.
இன்றோ உன்னையும் உனது மீதி நம்பிக்கையான
குழந்தையையும் பறிகொடுத்து
உங்களிருவரையும் தேடுகிறோம் தாயே....!

மீண்டு வருவீர்களென்ற நம்பிக்கையில்
தாயே உனக்காயும் விபூசிக்காகவும்
மனுக்களோடு மனிதவுரிமையாளர்கள் 
மனங்கள் மட்டுமல்ல – அவர்
கண்களும் திறக்குமென்ற நம்பிக்கையோடு
தாயே உங்கள் விடுதலைக்காக
உலகெங்கும் வேண்டுகிறோம்.....!

16.03.2014
 சாந்தி நேசக்கரம்

Friday, February 14, 2014

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

“லெப்.கேணல்.சிரித்திரன் (முருகுப்பிள்ளை சிவரூபன்)
வீரனாய் – 07.09.1979
வித்தாய் – 20.04.2009
பிறந்த இடம் – இடைக்காடு 
கல்வி கற்றது – இடைக்காடு மகாவித்தியாலம்”

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன்.
சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் விவேகத்தின் ஆற்றலின் ஆதாரம்.விடுதலையின்றேல் வாழ்வில்லை போராட்டமே வாழ்வென்று ஆகியிருந்த காலத்தின் கட்டளையை ஏற்றுச் சிரித்திரனும் புலி வீரனாகியது 1996ம் ஆண்டு. யாழ்மண்ணிலிருந்து வேரறுக்கப்பட்டு வீழ்ந்த வீரம் வன்னியில் புதுப்பிக்கப்பட்ட தருணமது.

விழவிழ எழும் வீர மரபைக் கொண்ட வீரத்தின் வேர்களின் வழியில் தன்னையும் இணைத்த சிரித்திரன் விசுவமடுவில் அமைந்திருந்த மாறன் 1 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டான்.

முதல் கள அனுபவம் கிளிநொச்சி ஊடறுப்புச் சமராகும். சமர் முனையில் சிரித்திரன் சிறந்த வீரனாய் தனது திறனை வெளிக்காட்டிய போராளி. போர்க்களத்தையே அதிகம் விரும்பிய தாய்மண் விரைவில் வெல்லப்பட வேண்டுமென்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த காரியப்புலியவன்.

முதல் கள அனுபவம் முடிந்து வந்த வீரன் 1998 இல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் பயிற்சிக்குத் தெரிவாகினான். சிறப்பாய் பயிற்சிகள் முடித்து விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ வீரனாகினான். கவசங்களை உடைத்து எதிரியை நிலத்திலிருந்து விரட்டி விடியலைத் தேடி விழித்திருந்த தென்றல் அவன்.
000 000 000

RPG என்ற ஆயுதத்தை சிறிலங்காப் படையினருக்கு அறிமுகம் செய்தவர்கள் புலிகள். ஏனெனில் புலிகள் இவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கிய பின்னரேயே சிறிலங்கா படை RPGஐ பாவிக்கத் தொடங்கியது.
யாழ் மண் எதிரியிடம் பறிபோன பின்னர் வன்னியில் 1996 நடுப்பகுதியில் RPGகொமாண்டோப் பயிற்சிகள் நடைபெற்று RPG அணியொன்று உருவாக்கப்பட்டது. முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருந்த காலத்தில் அந்த RPG அணியானது கிளிநொச்சியைக் கைப்பற்ற முனைந்த சத்ஜெய நடவடிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக களமிறக்கப்பட்டது.

சிறு அணியாக உருவாக்கம் பெற்றிருந்த RPG அணியானது அப்போது சிறப்பான பெயர் எதுவும் சூட்டப்பட்டிருக்காமல் ஒரு படையணியின் சிறு அணியாகவே செயற்பட்டிருந்தது.

சத்ஜெய சமரில் எதிரி அதிகம் டாங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டே படை முன்னேற்றங்களை மேற்கொண்டான். அந்தக் காலத்தில் எதிரியின் டாங்கிகளை எதிர்பார்த்த அளவு அழித்தொழிக்கும் வலுவை RPG படையணி கொண்டிருக்கவில்லை. அப்போது தான் RPG கொமாண்டோ அணியை புதிதாய் வடிவமைக்கும் நோக்கம் தலைவர் பிரபாகரன் அவர்களால் வித்திடப்பட்டது. எப்போதுமே எதிர்காலத்தேவைகளை முற்கூட்டியே உணர்ந்து செயற்படும் தலைவரின் நேரடியான கவனிப்பில் உருவாகியதே RPG கொமாண்டோ அணி. (விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி)

இம்ரான் பாண்டியன் படையணியின் கீழ் ‘கவசத்தை உடைப்போம் நாட்டினை மீட்போம்’ எனும் சுலோக வாக்கியங்களைக் கொண்டு ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ உருவாக்கம் பெற்றது. 1997 தொடக்கத்தில் முதலாவது ‘விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாறு ஆரம்பமாகியது.

ltte_rpg_force_12
இப்படையணியின் சீருடை நெடுக்கு வரிச்சீருடையாகும். ஏனைய படையணிகளிலிருந்து இப்படையணியானது வித்தியாசமாகவே அறிமுகமானது. இப்படையணியின் முதல் களம் ஜெயசிக்குறு களமாகும். ஜெயசிக்குறு ஆரம்பித்து முடிவதற்கிடையில் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி வீரர்கள் அதிகளவில் வீரச்சாவடைந்தார்கள். எனினும் புதிய புதிய அணிகள் வேகவேகமாகப் பயிற்சிகளை முடித்துக் களத்தில் நின்றார்கள். ஜெயசிக்குறு வெற்றியில் இப்படையணியின் பங்கும் காத்திரமானது.

கிளிநொச்சிச் சமரில் வீரச்சாவடைந்த மேஜர் நவச்சந்திரன், ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் மணிவண்ணன், சமாதான காலத்தில் சுகவீனமடைந்து சாவடைந்த லெப்.கேணல் சுட்டா போன்றோர் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளாக இருந்தார்கள்.

வன்னியின் மீட்பில் கவசப்படையணியின் பங்கு உணரப்பட்டு தலைவரால் உருவாக்கப்பட்ட இப்படையணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்று இறுதிவரை ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வேராக விழுதாக வாழ்ந்து வீரச்சாவடைந்தார் தளபதி லெப்.கேணல்.அக்பர் அவர்கள். ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாற்றில் அக்பர் அவர்களைத் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாத அளவு அக்பர் அவர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆணிவேராகியதை என்றென்றும் வரலாறு சுமந்து கொண்டே செல்லும்.
இவ்வாறு பல தளபதிகள் போராளிகள் மாவீரர்களின் தியாகத்தால் உருவாகிய ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் சிரித்திரனும் இணைந்து கொண்டதும் கவசங்களை உடைத்ததும் இன்னொரு வரலாற்றின் பரிணாமம் தான்.

யுத்தம் சமாதானம் இரண்டிற்கும் இடைப்பட்ட காலமொன்றை சர்வதேசத்தலையீடு உருவாக்கிய காலம். 2001 சிங்கள ஆளஊடுருவும் படையணி ஆதிக்கம் வன்னி நிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அது RPGகொமாண்டோக்களின் தேவைகளும் அவசியமும் குறைந்த காலம்.

சிங்கள ஆள ஊடுருவும் படையணியின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய சவால் நிறைந்த நேரமது. RPGகொமாண்டோவில் இருந்த போராளிகள் தரைக்கரும்புலியாவதற்கு தங்களை இணைக்குமாறு தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தார்கள். அவர்களில் சிரித்திரனும் தரைக்கரும்புலியாக தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தான்.

கரும்புலிகளுக்கு நிகரான ஆள ஊடுருவும் படையணியின் உருவாக்கத்தை தலைவர் தனது நேரடி நெறிப்படுத்தலில் ஆரம்பிப்பதற்கான தருணமும் வந்தது. அப்போது திடீரென ஒருநாள் கரும்புலிகளுக்காக கடிதம் எழுதிய போராளிகளைச் சந்தித்தார். கரும்புலியாக விரும்பிய அனைவரையும் புதிதாக உருவாக்கம் பெறும் ஆளு ஊடுருவும் அணிக்கான பயிற்சிக்கு தயாராகுமாறு அழைத்தார்.
தலைவன் அருகாமையில் தலைவனின் கண்காணிப்பின் கீழ் அமைந்த அந்த சிறப்பு அணியில் எங்கள் சிரித்திரனும் இணைந்து கொண்டான். குறித்த நேரத்தில் செய்து முடிக்கப்பட்ட வேண்டிய தெரிவுப்பயிற்சிகளில் சிரித்தின் தனது திறனை வெளிப்படுத்தி தெரிவாகி சிறப்புப் பயிற்சியினை முடித்திருந்தான்.

இக்காலத்தில் திறமையாகச் செயற்பட்ட சிரித்திரனின் திறமையை அவதானித்த ரட்ணம் மாஸ்ர் தலைவரின் பாதுகாப்புப் பணியில் சிரித்திரனை இணைத்துக் கொண்டார். அவனது ஆற்றலும் எடுத்த காரியத்தை சாதிக்கும் வல்லமையும் தலைவரின் பிரத்தியேக உதவியாளராகத் தெரிவு செய்யப்பட்டு தலைவரின் நன் மதிப்பையும் அன்பையும் பெற்றான் எங்கள் சிரித்திரன்.

சிரித்திரன் என்றால் அவனை யாரும் மறந்துவிடமாட்டார்கள் அந்தளவு எல்லோருக்கும் பிடித்த போராளி. அவனது சிரித்த முகம் , அவனில் சிறப்பாயமைந்த பண்புகள் , எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் பன்முக ஆற்றலுமே எல்லோரிடத்திலும் அவனை அடையாளப்படுத்தியது.

சிறந்த சண்டைக்காரன் மிகப்பெரும் ஆற்றலையெல்லாம் அள்ளி வைத்திருந்த பெருமைக்குரியவன் ஆனாலும் தனது கரும்புலிக் கனவை கைவிடாமல் தலைவரின் பிரத்தியேக செயலாளர் பணியின் இடையிலும் தனது கரும்புலியாகும் விருபத்தை தெரிவித்துக் கொண்டேயிருந்தான். குறைந்த இழப்பில் பெரும் இழப்பை எதிரிக்கு வழங்கி பெரிய வெற்றிகளைக் குவிக்கும் சிந்தனையே அவனது செயல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் இருந்தது.

தனது தரைக்கரும்புலியாகும் எண்ணத்தை தலைவருக்கு எழுதிவிட்டு கரும்புலியாகும் கனவோடு தான் தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தான். வெளியில் தென்றலாய் சிரிப்பவன் உள்ளுக்குள்ளே எரிமலையை வளர்த்துக் கொண்டேயிருந்தான்.இதயத்தில் ஈரமும் விழிகளில் நெருப்பையும் ஒன்றாய் கொண்ட தேசப்புயல் அவன்.
Vaan Karumpuli Lep.Kenal Siriththiran
சிரித்திரனின் இனிமையான சுபாவம் , அன்பு , ஆழுமை , ஆற்றலை அவதானித்த தலைவர் சிரித்திரனையும் மேலும் சில போராளிகளையும் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்குள் பணிக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்தார். காரணம் சிரித்திரனின் வல்லமையும் ஆற்றலும் தமிழீழ தேசத்திற்கு மேலும் பயனையும் பன்முக ஆற்றலையும் கொண்டவர்களை உருவாக்கும் திறiனையுடையது. அத்தகைய திறமையாக தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப சிரித்திரன் தன்னை ஆற்றலாளன் ஆக்கியிருந்தான். தலைவர் அதிகளவில் அவனிடமிருந்து எதிர்பார்த்தார். ஏனெனில் அவனது ஆற்றல் அந்தளவு பெறுமதியானவை.

ஆனால் தனது பணியை தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து செய்ய மறுத்து மண்ணில் நிற்பதையே விரும்பினான். தனது முடிவில் தளம்பாமல் ஒரே முடிவாக தாயகத்தில் இருந்து பணி செய்யப்போகிறேன் என்றே வெளிநாட்டுப் பயணத்தை மறுத்திருந்தான். கடைசியில் அவனது விருப்பமே நிறைவேறியது. அவன் வெளிநாடு சென்றிருந்தால் ஆயிரம் சிரித்திரன்களை அவனால் உருவாக்கியிருக்க முடியும். ஆனால் தான் நேசித்த தலைவனை தளபதிகளை போராளிகளைப் பிரிய விரும்பாமல் அவர்களுடனேயே வாழ விரும்பிய இனியவன்.

இக்காலத்தில் தான் சிரித்திரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு வான்புலிகள் அணியில் இணைவதற்கான அழைப்பு வந்தது. வான்புலிகளின் தேவையை உணர்ந்த சிரித்திரன் மகிழ்ச்சியோடு வான்புலிகள் பயிற்சிக்குச் சென்றான். பின்னால் உலகையே வியக்க வைக்கும் வான்கரும்புலியாகப் போவானென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவன் கரும்புலியாகவே தன்னை வளர்த்துக் கொண்டான்.
000 000 000

வான்புலிகளின் வரலாறு 1985 – 1986களில் உருவாக்கம் பெற்று விமானம் கட்டும் பணிகளும் ஆரம்பித்த காலமது. மெல்ல மெல்ல கால ஓட்டத்தோடு புலிகளின் வான்புலிகள் அணியானது உயிர் பெற்று உருவாக்கப்பட்டது. முதல் முதலாக 1998 மாவீரர் நாள் மாவீரர் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களால் வான்புலிகள் படையணி தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2000ம் ஆண்டு வான்புலிகள் ஆண்டாக விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு வான்புலிகள் வரலாறு எழுதப்படத் தொடங்கியது.

வான்புலிகளின் வேராகவும் அந்தப் படையணியின் உருவாக்கத்திலும் முக்கிய பங்காக இருந்து இயங்கியவர் தளபதி கேணல் சங்கரண்ணா அவர்கள். சென்னையில் பொறியியல் கல்லூரியில் ஏறோனோட்டிக்ஸ் பிரிவில் BA படித்து முடித்த தளபதி சங்கரண்ணா அவர்கள் கனடா நாட்டிற்குச் சென்று கனடா விமான நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணி புரிந்தார்.

வெளிநாட்டு வாழ்வை விட்டு தாயகம் திரும்பியவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து புலியாகிப் பல போராளிகளை வளர்த்தெடுத்ததோடு நின்று விடாமல் வான்புலிகளின் தோற்றமும் அவராகினார். வான்புலிகள் உருவாக்கத்தில் உறக்கம் மறந்து இறுதிவரை உழைத்த வீரன் தளபதி சங்கரண்ணா. 2001 செப்ரெம்பர் தியாகி திலீபனின் நினைவுநாளில் சங்கரென்ற இமயம் இலங்கையரசின் ஆழ ஊடுருவும் படையணியால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். எனினும் வானுயர்ந்த புலிவீரம் வான்புலிகள் வளர்சியில் வெகவேகமாக முன்னேற்றமடைந்து வளர்ந்தது.

000 000 000
விமானப்பயிற்சியை முடிப்பதற்கு சாதாரணமாக 2வருடங்கள் வரை செல்லும். ஆனால் சிரித்திரனும் அவனுடனான போராளிகளும் இரவு பகல் ஓய்வு ஒளிவின்றி இயங்கி 3மாதத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டார்கள். அதுவும் வன்னி நிலத்திலேயே வான்புலிகள் பயிற்சியினையும் பயின்று பயிற்சியை நிறைவு செய்தார்கள்.

பின்னாளில் வான்புலிகளின் வரலாறும் பயிற்சிகள் எங்கே பெற்றிருக்கலாம் என்ற இராணுவ ஆய்வாளர்களின் புனைவுகளும் கற்பனைகளும் ஊடகங்களை நிறைத்தது. எனினும் எவராலும் கண்டறிய முடியாது வான்புலிகளின் வீரம் நிமிர்ந்தது தான் உண்மை வரலாறு.

உலகில் எங்குமே நிகழ்ந்திராத மாற்றத்தை புலிகளின் வான்புலி வீரர்கள் நிகழ்த்திக்காட்டினர். வானோடிக்கான பயிற்சியில் சிரித்திரனின் ஆற்றலை நேரிலிருந்து பார்த்த சாட்சியங்கள் இன்றும் அவனை அதிசயிக்கும் அதிசயமாய் அவன் நிமிர்ந்து நிற்கிறான்.

சிங்கள தேசத்தினால் வன்னி வான்பரப்பில் பறக்க அனுப்பப்படும் ஆளில்லாத வேவு விமானங்களின் தொல்லைகள் அதிகரித்திருந்த காலமது. இவ் ஆளில்லா விமானங்களை சிங்கள தேசம் மிகப்பெரும் செலவில் கொள்வனவு செய்திருந்தது. இவ் ஆளில்லா வேவு விமானத்தை அழிக்க சிரித்திரனும் சக வான்புலி ஒருவரும் மேற்கொண்ட தாக்குதல் பற்றி சிங்கள தேசம் கூட செய்தியை வெளியில் விடாமல் இயந்திரக்கோளாறென்று கதையை முடித்த சம்பவம் ஒன்று வன்னி வான்பரப்பில் நிகழ்ந்திருந்தது.

தனது நவீன தொழில்நுட்பத்தினை எவராலும் அழிக்க முடியாதென்று இறுமாந்திருந்த சிங்கள தேசத்திற்கு எங்களால் எதுவும் முடியும் என்று செய்து நிரூபித்துக்காட்டிய சம்பவம் :-

அன்றொருநாள் வன்னி வானில் திமிரோடு பறந்த ஆளில்லா வேவுவிமானத்தை சிரித்திரனும் அவனது தோழனும் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள். அந்த ஆளில்லா விமானத்தை புலிகளின் விமானத்திலிருந்தே சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் என்பதனை இன்று வரை சிங்கள தேசம் கூட அறிந்திருக்காத உண்மை.

இத்தாக்குதலானது மிகவும் ஆபத்தும் சவாலும் நிறைந்தது. புலிகளின் விமானப்பறப்பு அடையாளம் காணப்பட்டால் அவர்களின் தரையிறக்கும் இடம் அடையாளம் காணப்படும். அடையாளம் காணப்படும் போது கிபிர் விமானங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலமையும் உருவாகும்.

வான்புலிகளின் விமானமும் பாதுகாப்பாக தரையிறங்க வேண்டும் அதேநேரம் தரையிறங்கும் இடமானது எதிரி அறியாமல் பாதுகாக்கப்பட வேண்;டும். எல்லா பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே தாக்குதலை நிகழ்த்த வேண்டும்.

ஆளில்லா வேவு விமானங்கள் வீதியில் வேகமாக செல்கின்ற இரு சக்கர ஊர்தியின் இலக்கத்தைக் கூட துல்லியமாகக் கணிக்கக் கூடிய தொழில்நுட்பத் திறனைக் கொண்டது. இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஆளில்லா வேவு விமானம் வன்னியின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது.

ஒரு விமானம் பறத்தலில் ஈடுபடும் பகுதியில் அந்த விமானத்தின் உயரத்திற்கு மேல் பறந்து தாக்குவது என்பது இலகுவானது அல்ல. ஆனால் வான்புலிகளால் எங்கும் செல்லவும் வெல்லவும் முடியும் என்பதனை சிரித்திரனும் அவனது தோழனும் நிரூபித்துக் காட்டினர்.

எதிரி விமானம் பறந்து கொண்டிருந்த சமநேரம் சிரித்திரனும் , அவனது தோழனும் தங்கள் விமானத்தை எதிரி விமானத்திற்கு மேலாக உயரப்பறந்து மேலிருந்து ஆளில்லா வேவுவிமானத்தைச் சுட்டுவீழ்த்தித் தரையிறங்கினார்கள்.

சிங்கள தேசம் இயந்திரக்கோளாற்றினால் வீழ்ந்ததாகச் சொல்லி தனது இழப்பை வெளியில் தெரியாமல் மறைத்துக் கொண்டது. இந்த மர்மம் பற்றி ஆய்வுகளும் அறிக்கைகளும் பல வடிவங்களின் அப்போது ஆராயப்பட்டது வேறுகதை.

வார்த்தைகளை விடவும் வரலாற்றைப் படைத்தவர்கள் புலிகள். அவ்வரலாற்றின் சுவடுகளில் சத்தமின்றிச் சாதித்துவிட்டு தரையிறங்கிய சிரித்திரனும் அவன்கூட அத்தாக்குதலில் இணைந்திருந்த தோழனும் அன்றைய ஆய்வுகளின் கதாநாயகர்கள். ஆனால் அந்த வேர்கள் வெளியில் வராமல் வெற்றியைத் தந்துவிட்டு அமைதியானார்கள்.
000 000 000

1998 மாவீரர் நாளன்று வான்புலிகள் பயிற்சியை முடித்த வான்புலி மறவர்கள் விமானத்திலிருந்து முதல் முதலாய் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பூத்தூவி தங்கள் முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள். அன்றைய நாள் தலைவரினால் அதிகாரபூர்வமாக வான்புலிகள் படையணியின் உருவாக்கம் பற்றிய அறிவிப்பு நிகழ்ந்தது.

வான்புலிகள் உருவாக்கப்பட்டு முதல் முதலாக எரித்திரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 2 விமானங்கள் முதல் முதலாக வான்படையை உருவாக்கிய எங்கள் தலைவனும் தளபதிகளும் நேரில் பார்வையிட்டு வான் புலிவீரத்தின் அடையாள முகங்களை வாழ்த்தி வரவேற்றார்கள். அவ்விமானங்கள் பின்னர் வரிநிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயார் செய்யப்பட்டது.

சிறிய ரக விமானம் நெடுந்தூரம் சென்று வருவதற்குப் போதியளவு எரிபொருள் போததது. ஆனால் தாக்குதலுக்குச் சென்று திரும்புவதற்குத் போதியளவு எரிபொருளை மீதப்படுத்த அவர்கள் மேற்கொண்ட உத்திகளை உலகம் அறிந்ததில்லை.

விமானத்தை வழங்கிய நிறுவனத்தால் கூட நெடுந்தூரத்துக்கான பயணத்தினைச் செய்ய முடியாதெனத் தெரிவிக்கப்பட்டும் வான்புலிகள் எரிபொருளை சேமிக்கும் வகையில் விமானத்தை மேலேற்றிப் பறந்து வெற்றியுடன் தாக்குதல்களை நடாத்திவிட்டுத் திரும்பும் வீரத்தையும் வித்தியாசமான உத்தியையும் எவரும் அறிந்திருக்கவே இல்லை. வான்புலிகளின் தோற்றமும் தாக்குதல் வியூகங்கள் வெற்றிகள் உலகிற்குப் புரியாத புதிர்களாகவே அமைந்தது.
000 000 000

தமிழர் நிலத்தைத் தேடி வந்து தாக்கி உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருந்த அரசின் தலைமை மையத்தினுள் „’காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என விடுதலைப்புலிகளின் வான்புலிகள் 26.03.2007அன்று கட்டுநாயக்கா இராணுவ விமானப்படைத்தளத்தின் மீது தாக்குதலை நடாத்தி வான்புலிகளின் இருப்பை உலகிற்கும் அதேவேளை இலங்கையரசிற்கும் அறிவித்தனர்.

இதுவே முதல் முதல் புலிகள் உரிமையேற்ற முதல் வான்தாக்குதல் ஆகும். அந்தத் தாக்குதலில் சிரித்திரனும் விண்ணிலேறி வீரனாய் நீலப்புலியுடையில் வானோடியாய் போனான். எங்கள் நிலத்தில் வந்து எங்கள் குடிமனைகளையும் குழந்தைகளையும் அழித்தவர்களின் வானில் நின்று தாக்குதல் மேற்கொண்டு திரும்பிய வான்புலிகளில் எங்கள் சிரித்திரனும் ஒருவன்.

22.10.2007 அன்று அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வான்புலிகளின் பங்கும் அளப்பரியது. திங்கள் அதிகாலை அனுராதபுரத்தினுள் ஊடுருவிய 21 சிறப்பு ஆண் பெண் கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அனுராதபுரம் வான்படைத்தளம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வீழ்ந்தது. புலிகளின் வான்படையினர் துணையாக அனுராதபுர வான்படை மையத்தினுள் குண்டுகளை வீசி சேதத்தை விளைவித்தனர்.

திங்கள் பகல் 11மணிவரையும் கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனுராதபுரத்தளத்திற்கு ஆதரவு வழங்க வவுனியாவிலிருந்து அனுப்பப்பட்ட பெல் 212 உலங்குவானூர்தி மிகிந்தலைப்பகுதியில் வைத்து விமான எதிர்ப்பு அணியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி இலங்கையரச வானோடிகளும் உலங்குவானூர்தியும் அழிந்து போனது. இலங்கையரசின் வான்படைபலமானது பெரும் வீழ்ச்சி கண்டது இப்பெரும் அழிவில்தான்.

22.10.2007 அன்று 21 விசேட கரும்புலிகள் அணிக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டு எல்லாளன் வாழ்ந்த மண்ணில் புலிவீரத்தை அறியச்செய்த மாவீரர்களின் தியாகத்தில் உலகமே திகைத்தது. அந்த வரலாற்று வெற்றியில் சிரித்திரனும் பங்கேற்றுத் தளம் திரும்பியிருந்தான்.
ellaalan-attack
வான்புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கலாம் என தனது இராணுவ ஆய்வில் இராணுவ ஆய்வாளரெனப்படும் இக்பால் அத்தாஸ் கட்டுரையெழுதியிருந்தார். அதேபோல மேலும் சில ஊடகங்கள் மலேசியாவில் பயிற்சிகள் பெற்றிருக்கலாம் எனவும் ஆளாளுக்கு ஆய்வுகள் செய்து கொண்டிருந்தார்கள்.

எல்லா ஆய்வுகளையும் விஞ்(மி)சிய வான்புலிவீரத்தை இதுவரையில் எந்த ஆய்வுகளும் ஆராட்சிகளும் அதன் அடி முடியைக் கண்டறியவில்லை. தென்னிலங்கையை கலங்கடித்து தென்னிலங்கையில் மட்டும் 7தடவைகள் சென்று தாக்குதலை நடாத்திவிட்டுத் திரும்பினர் வான்புலிகள்.

அனைத்து நவீன வளங்களையும் அறிகருவிகைளயும் பொருத்தி வானிலேறும் வான்புலிக்கலங்களைத் தேடிக்கொண்டிருந்தது சிங்கள தேசத்தின் தொழில்நுட்பம். அவற்றையெல்லாம் தாண்டி கட்டுநாயக்கா , அனுராதபுரம் ,கொலன்னாவை என வான்புலிகளின் வீரம் உலகை வென்றிருந்தது.

ஓரிடத்திலிருந்து மேலெழும் விமானம் திரும்பி வருகிற போது போதிய எரிபொருளைக் கொண்டிராது. எனினும் பிறிதொரு இடத்தில் தரையிறங்கி பாதுகாப்பாக வான்கலங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் திறன் வான்புலிகளுக்கானது. சாவல்களைத் துணிச்சலோடு ஏற்று சாதிக்கவும் , முடியாதென்ற எல்லாவற்றையுமே மனபலத்தால் செய்து முடித்துக் காட்டிய புலிவீரத்தின் வரலாற்றில் வான்புலிகள் வீரமும் வித்தியாசமானது.

வவுனியா கூட்டுப்படைத்தளம் மீதான வான்புலிகளின் தீரமிகு தாக்குதலை நடாத்தியதற்காக „நீலப்புலி மறவர்’ விருதினை வான்புலிவீரர்களுக்கு வழங்கி மதிப்பளித்துக் கௌரவித்தார் தேசியத்தலைவர்.

அதேபோல களனிதிச அனல்மின் நிலையத்தின் மீதான தாக்குதல் உட்பட 5தடைவைக்கு மேல் வான்தாக்குதல்களை நடாத்தி சிங்களத்திற்கு பெரும் பொருளாதார அழிவையும் இழப்பையும் ஏற்படுத்திய வான்புலிகளுக்கு ‚’நீலப்புலி’ விருதினையும் , இத்தாக்குதல்களுக்கு துணையாக செயற்பட்டு தாக்குதல் நடாத்திய துணை வானோடிகளுக்கு ‚’மறவர்’ விருதினையும் வழங்கினார் தலைவர். இப்படித்தான் வான்புலிகளின் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. தரை கடல் பலத்துக்கு நிகராக எங்கள் தலைவன் படைத்த வான்புலிகளின் சாதனைகளை வெற்றிகளை என்றென்றும் பெருமையுடன் நினைவு கொள்கிறோம்.
000 000 000

ஈழத்தமிழர் வரலாற்றில் கண்ணீரையும் துயரையும் அவலத்தையும் தந்த மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழனத்தின் அரசியல் வெளியில் பெரும் வெற்றிடத்தையும் இட்டு நிரப்ப முடியாத இழப்புகளையும் தந்த 2009ம் ஆண்டில் வீரமும் எங்கள் விடுதலையின் அடையாளங்களும் ஒன்றாய் அழிக்கப்பட்டு ஏதிலிகளாக நாங்கள் ஆகிப்போன விதியை எழுதியதும் இதே வருடம் தான்.

அவலங்கள் நிறைந்த 2009இல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மெல்ல மெல்ல எதிரியின் கையில் இழக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு விடுதலையமைப்பிற்கு எதிராக உலகம் கூட்டுச்சேர்ந்து 30ஆண்டுகால விடுதலைப் பயிரை அதன் வீரியத்தை வீரத்தை பலியெடுத்துக் கொண்டிருந்தது.

எதிரியின் கொலைவலயத்தினுள் வன்னி நிலம் முழுமையாகி இழக்கப்பட்டு எஞ்சிய முல்லைத்தீவும் இதோ அதோ என்ற நிலமையில் இருந்த போது மாற்று வழி ஏதோவொன்றைத் திறக்க வேண்டுமென்று திட்டமிடலில் இறங்கியது வான்புலிகள் அணி.

புதுக்குடியிருப்பு எதிரியிடம் பறிபோனால் மீள்வதற்கான வழிகள் யாவும் போய்விடும் என்பதனை உணர்ந்த வான்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல்.சிரித்திரன் இருவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்று முன்வந்து வான்கரும்புலிகளாகினார்கள்.

கேணல் ரூபன் தனது கடைசிப் பயணத்திற்கு தயாராகிய நேரம் தான்நேசித்த மக்களுக்கு தனது இறுதி மடலை எழுதிவிட்டு தோழன் சிரித்திரனோடு புறப்பட ஆயத்தமானான். 2002களிலிருந்து ஒருநாள் வானேறி பகைவன் பலத்தையழிப்பேனென்று சொல்லிக் கொண்டிருந்த ரூபன் கனவும் அன்று கைகூடும் நாளாக….!
ruban sirithiran with thalaivar
விமானத்தை வானேற்றக்கூட பொருத்தமான வான்தளமோ வசதியோ எதுவுமில்லாத சுற்றிவர எதிரியின் கொலைவளையத்தினுள் இருந்து கொலைஞர்களின் கோட்டையில் பேரிடியை இறக்கும் கனவோடு நந்திக்கடல் வெட்டையிலிருந்து புறப்பட்டார்கள் சிரித்தின்,ரூபன். 3லட்சத்துக்கும் மேலான மக்கள் , போராளிகள் சாட்சியாக கேணல் ரூபன், லெப்.கேணல். சிரித்திரன் வானேறினார்கள்.

அந்த நேரத்து மனவுணர்வுகளையும் அவர்களது தூய்மையான தேசத்தின் மீதான அன்பையும் விடுதலைக் கனவையும் இன்றுவரை உலகம் புரிந்ததில்லை. அவர்கள் புரியாத புதிர்களாகவே என்றும்….! ஆனால் எங்களால் புரிந்து கொள்ளப்பட்ட புனிதங்களாக நெஞ்சம் முழுதும் அவர்கள் நினைவுகள்…..!

கொழும்பு நகரம் வான்புலிகள் வரவில் விழித்துக் கொண்டது. சிங்களத்தின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளத்தை அழிக்கும் கனவோடு ரூபன், சிரித்திரன் எதிரியின் மையத்தை நெருங்கியிருந்தனர்.

கொழும்பு மாநகரம் பயத்தில் உறைந்தது. வெளிச்சம் நிறைந்த தெருக்கள் இருளில் நிறைந்தது. சிரித்திரன் , ரூபன் வரவில் சிங்களம் திகைத்தது. மரண வாசனையைக் கொழும்பு உணர்ந்தது. சாவின் பயத்தைக் சிங்கள தேசம் நுகர்ந்தது. தமிழனித்தின் வரலாற்றை அதன் வீரத்தை 30ஆண்டு விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடும் முனைப்போடு ஆயிரக்கணக்கில் வன்னியைத் தின்று கொண்டிருந்த படைகளின் நெஞ்சிலும் ரூபன், சிரித்திரன் பூகம்பச்சுழியாய் பயமுறுத்திக் கொண்டிருக்க வான்புலிவீரர்கள் இருவரும் வானிலே வரலாறு படைத்திட சிங்கள வான்பரப்பில்….!
வான்கரும்புலிகள்  கேணல் ரூபன் - லெப்.கேணல் சிரித்திரன்
வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தது வன்னிமண். வான்கரும்புலிகள் இருவரும் எதிரியின் இலக்கை மிகவும் அண்மித்திருந்தார்கள். இலக்கை எட்டும் தொலைவில் புலிகளின் வானுர்தி சிங்களதேசத்து வானில்….! சிரித்திரன், ரூபன் கனவு நனவாகும் கணங்கள் இலக்கு மிக அண்மையாகியிருந்தது.

எல்லாம் சரியாக அமைந்து இறுதிக்கட்டத்தில் தாயகக்கனவோடு தமிழரின் சேனையின் வீரத்தைச் சுமந்து புறப்பட்ட வான்கலம் எதிரியின் வானெதிர்ப்பு ஆயுதங்களால் அழிக்கப்பட்டு எங்கள் ரூபனும், சிரித்திரனும் தாயகத்திற்கான பயணத்தில் தங்கள் உயிர்களைத் தந்து எதிரி தேசத்தில் உயிரை விதைத்து காற்றிலேறி விண்ணையும் சாடும் வீரத்தை எழுதிவிட்டு அமைதியாகிப் போனார்கள்.

அவர்களது தாக்குதல் நினைத்தபடி வெற்றியில்லாது போனாலும் சிங்கள தேசத்தை சேதப்படுத்தி அச்சமூட்டி எங்கள் வீரத்தை அடையாளப்படுத்திவிட்டு இருவரின் மூச்சும் சிங்கள தேசத்தில் நிறைந்தது.
தலைவனின் நிழலில் வளர்ந்து வென்றுவரப்போன சிரித்திரனையும் ரூபனையும் எங்கள் தேசம் இழந்தது. ஒருகணம் சுவாசத்துடிப்பெல்லாம் நின்றுவிட்டாற்போலவே அவர்களது தியாகம் அவர்களை நேசித்த எல்லோரின் நெஞ்சிலும் துயரிடி.

வானில் பறந்தவர்கள் வானிலே தங்கள் வீரத்தையெழுதிய விலாசம் மறந்த விடிவெள்ளிகள். தங்களின் தாக்குதலில் போர்க்கள நிலமையில் மாற்றம் வருமென்று நம்பிப்போன இரு வீரர்களின் நம்பிக்கையும் கானலாகிப் போனதையும் அறியாமல் ஒருநாள் ஈழம் விடியும் எனும் கனவோடு போன ரூபன் , சிரித்திரன் கனவுகள் உலகெங்கும் வியாபித்துக் கிடக்கிறது.

இறுதியாய் சிரித்திரன் ,ரூபன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளும் , எங்கள் முன்னால் விதைத்துச் சென்ற கனவுகளும் இன்னும் ஆறாத , மாறாத காயத்தைத் தந்த போதும் அவர்கள் கனவை நனவாக்கும் வேகத்தோடும் விடுதலையின் மீதான தாகத்தோடும் நகர்கிறது.

ஒவ்வொரு மாவீரரின் நெஞ்சிலும் மூண்ட நெருப்பு ஒருநாள் பிரளமாய் எங்களை ஏமாற்றி எங்கள் தேசத்தை அழித்தவர்கள் வீடுகளில் நிச்சயம் இடியாகும். அழிவைத் தந்த ஒவ்வொரு வீட்டிலும் எங்களது விடுதலைக்காய் இழக்கப்பட்ட லட்சக்கணக்கான உயிர்களின் பேரோசை ஒலித்தபடியே இருக்கும்….அது விடுதலையடையும் வரையும் விழித்தபடியே….! உயிர்த்தபடியே….!
நினைவுப்பகிர்வு - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com