Friday, February 14, 2014

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

“லெப்.கேணல்.சிரித்திரன் (முருகுப்பிள்ளை சிவரூபன்)
வீரனாய் – 07.09.1979
வித்தாய் – 20.04.2009
பிறந்த இடம் – இடைக்காடு 
கல்வி கற்றது – இடைக்காடு மகாவித்தியாலம்”

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன்.
சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் விவேகத்தின் ஆற்றலின் ஆதாரம்.விடுதலையின்றேல் வாழ்வில்லை போராட்டமே வாழ்வென்று ஆகியிருந்த காலத்தின் கட்டளையை ஏற்றுச் சிரித்திரனும் புலி வீரனாகியது 1996ம் ஆண்டு. யாழ்மண்ணிலிருந்து வேரறுக்கப்பட்டு வீழ்ந்த வீரம் வன்னியில் புதுப்பிக்கப்பட்ட தருணமது.

விழவிழ எழும் வீர மரபைக் கொண்ட வீரத்தின் வேர்களின் வழியில் தன்னையும் இணைத்த சிரித்திரன் விசுவமடுவில் அமைந்திருந்த மாறன் 1 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டான்.

முதல் கள அனுபவம் கிளிநொச்சி ஊடறுப்புச் சமராகும். சமர் முனையில் சிரித்திரன் சிறந்த வீரனாய் தனது திறனை வெளிக்காட்டிய போராளி. போர்க்களத்தையே அதிகம் விரும்பிய தாய்மண் விரைவில் வெல்லப்பட வேண்டுமென்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த காரியப்புலியவன்.

முதல் கள அனுபவம் முடிந்து வந்த வீரன் 1998 இல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் பயிற்சிக்குத் தெரிவாகினான். சிறப்பாய் பயிற்சிகள் முடித்து விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ வீரனாகினான். கவசங்களை உடைத்து எதிரியை நிலத்திலிருந்து விரட்டி விடியலைத் தேடி விழித்திருந்த தென்றல் அவன்.
000 000 000

RPG என்ற ஆயுதத்தை சிறிலங்காப் படையினருக்கு அறிமுகம் செய்தவர்கள் புலிகள். ஏனெனில் புலிகள் இவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கிய பின்னரேயே சிறிலங்கா படை RPGஐ பாவிக்கத் தொடங்கியது.
யாழ் மண் எதிரியிடம் பறிபோன பின்னர் வன்னியில் 1996 நடுப்பகுதியில் RPGகொமாண்டோப் பயிற்சிகள் நடைபெற்று RPG அணியொன்று உருவாக்கப்பட்டது. முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருந்த காலத்தில் அந்த RPG அணியானது கிளிநொச்சியைக் கைப்பற்ற முனைந்த சத்ஜெய நடவடிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக களமிறக்கப்பட்டது.

சிறு அணியாக உருவாக்கம் பெற்றிருந்த RPG அணியானது அப்போது சிறப்பான பெயர் எதுவும் சூட்டப்பட்டிருக்காமல் ஒரு படையணியின் சிறு அணியாகவே செயற்பட்டிருந்தது.

சத்ஜெய சமரில் எதிரி அதிகம் டாங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டே படை முன்னேற்றங்களை மேற்கொண்டான். அந்தக் காலத்தில் எதிரியின் டாங்கிகளை எதிர்பார்த்த அளவு அழித்தொழிக்கும் வலுவை RPG படையணி கொண்டிருக்கவில்லை. அப்போது தான் RPG கொமாண்டோ அணியை புதிதாய் வடிவமைக்கும் நோக்கம் தலைவர் பிரபாகரன் அவர்களால் வித்திடப்பட்டது. எப்போதுமே எதிர்காலத்தேவைகளை முற்கூட்டியே உணர்ந்து செயற்படும் தலைவரின் நேரடியான கவனிப்பில் உருவாகியதே RPG கொமாண்டோ அணி. (விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி)

இம்ரான் பாண்டியன் படையணியின் கீழ் ‘கவசத்தை உடைப்போம் நாட்டினை மீட்போம்’ எனும் சுலோக வாக்கியங்களைக் கொண்டு ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ உருவாக்கம் பெற்றது. 1997 தொடக்கத்தில் முதலாவது ‘விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாறு ஆரம்பமாகியது.

ltte_rpg_force_12
இப்படையணியின் சீருடை நெடுக்கு வரிச்சீருடையாகும். ஏனைய படையணிகளிலிருந்து இப்படையணியானது வித்தியாசமாகவே அறிமுகமானது. இப்படையணியின் முதல் களம் ஜெயசிக்குறு களமாகும். ஜெயசிக்குறு ஆரம்பித்து முடிவதற்கிடையில் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி வீரர்கள் அதிகளவில் வீரச்சாவடைந்தார்கள். எனினும் புதிய புதிய அணிகள் வேகவேகமாகப் பயிற்சிகளை முடித்துக் களத்தில் நின்றார்கள். ஜெயசிக்குறு வெற்றியில் இப்படையணியின் பங்கும் காத்திரமானது.

கிளிநொச்சிச் சமரில் வீரச்சாவடைந்த மேஜர் நவச்சந்திரன், ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் மணிவண்ணன், சமாதான காலத்தில் சுகவீனமடைந்து சாவடைந்த லெப்.கேணல் சுட்டா போன்றோர் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளாக இருந்தார்கள்.

வன்னியின் மீட்பில் கவசப்படையணியின் பங்கு உணரப்பட்டு தலைவரால் உருவாக்கப்பட்ட இப்படையணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்று இறுதிவரை ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வேராக விழுதாக வாழ்ந்து வீரச்சாவடைந்தார் தளபதி லெப்.கேணல்.அக்பர் அவர்கள். ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாற்றில் அக்பர் அவர்களைத் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாத அளவு அக்பர் அவர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆணிவேராகியதை என்றென்றும் வரலாறு சுமந்து கொண்டே செல்லும்.
இவ்வாறு பல தளபதிகள் போராளிகள் மாவீரர்களின் தியாகத்தால் உருவாகிய ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் சிரித்திரனும் இணைந்து கொண்டதும் கவசங்களை உடைத்ததும் இன்னொரு வரலாற்றின் பரிணாமம் தான்.

யுத்தம் சமாதானம் இரண்டிற்கும் இடைப்பட்ட காலமொன்றை சர்வதேசத்தலையீடு உருவாக்கிய காலம். 2001 சிங்கள ஆளஊடுருவும் படையணி ஆதிக்கம் வன்னி நிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அது RPGகொமாண்டோக்களின் தேவைகளும் அவசியமும் குறைந்த காலம்.

சிங்கள ஆள ஊடுருவும் படையணியின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய சவால் நிறைந்த நேரமது. RPGகொமாண்டோவில் இருந்த போராளிகள் தரைக்கரும்புலியாவதற்கு தங்களை இணைக்குமாறு தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தார்கள். அவர்களில் சிரித்திரனும் தரைக்கரும்புலியாக தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தான்.

கரும்புலிகளுக்கு நிகரான ஆள ஊடுருவும் படையணியின் உருவாக்கத்தை தலைவர் தனது நேரடி நெறிப்படுத்தலில் ஆரம்பிப்பதற்கான தருணமும் வந்தது. அப்போது திடீரென ஒருநாள் கரும்புலிகளுக்காக கடிதம் எழுதிய போராளிகளைச் சந்தித்தார். கரும்புலியாக விரும்பிய அனைவரையும் புதிதாக உருவாக்கம் பெறும் ஆளு ஊடுருவும் அணிக்கான பயிற்சிக்கு தயாராகுமாறு அழைத்தார்.
தலைவன் அருகாமையில் தலைவனின் கண்காணிப்பின் கீழ் அமைந்த அந்த சிறப்பு அணியில் எங்கள் சிரித்திரனும் இணைந்து கொண்டான். குறித்த நேரத்தில் செய்து முடிக்கப்பட்ட வேண்டிய தெரிவுப்பயிற்சிகளில் சிரித்தின் தனது திறனை வெளிப்படுத்தி தெரிவாகி சிறப்புப் பயிற்சியினை முடித்திருந்தான்.

இக்காலத்தில் திறமையாகச் செயற்பட்ட சிரித்திரனின் திறமையை அவதானித்த ரட்ணம் மாஸ்ர் தலைவரின் பாதுகாப்புப் பணியில் சிரித்திரனை இணைத்துக் கொண்டார். அவனது ஆற்றலும் எடுத்த காரியத்தை சாதிக்கும் வல்லமையும் தலைவரின் பிரத்தியேக உதவியாளராகத் தெரிவு செய்யப்பட்டு தலைவரின் நன் மதிப்பையும் அன்பையும் பெற்றான் எங்கள் சிரித்திரன்.

சிரித்திரன் என்றால் அவனை யாரும் மறந்துவிடமாட்டார்கள் அந்தளவு எல்லோருக்கும் பிடித்த போராளி. அவனது சிரித்த முகம் , அவனில் சிறப்பாயமைந்த பண்புகள் , எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் பன்முக ஆற்றலுமே எல்லோரிடத்திலும் அவனை அடையாளப்படுத்தியது.

சிறந்த சண்டைக்காரன் மிகப்பெரும் ஆற்றலையெல்லாம் அள்ளி வைத்திருந்த பெருமைக்குரியவன் ஆனாலும் தனது கரும்புலிக் கனவை கைவிடாமல் தலைவரின் பிரத்தியேக செயலாளர் பணியின் இடையிலும் தனது கரும்புலியாகும் விருபத்தை தெரிவித்துக் கொண்டேயிருந்தான். குறைந்த இழப்பில் பெரும் இழப்பை எதிரிக்கு வழங்கி பெரிய வெற்றிகளைக் குவிக்கும் சிந்தனையே அவனது செயல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் இருந்தது.

தனது தரைக்கரும்புலியாகும் எண்ணத்தை தலைவருக்கு எழுதிவிட்டு கரும்புலியாகும் கனவோடு தான் தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தான். வெளியில் தென்றலாய் சிரிப்பவன் உள்ளுக்குள்ளே எரிமலையை வளர்த்துக் கொண்டேயிருந்தான்.இதயத்தில் ஈரமும் விழிகளில் நெருப்பையும் ஒன்றாய் கொண்ட தேசப்புயல் அவன்.
Vaan Karumpuli Lep.Kenal Siriththiran
சிரித்திரனின் இனிமையான சுபாவம் , அன்பு , ஆழுமை , ஆற்றலை அவதானித்த தலைவர் சிரித்திரனையும் மேலும் சில போராளிகளையும் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்குள் பணிக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்தார். காரணம் சிரித்திரனின் வல்லமையும் ஆற்றலும் தமிழீழ தேசத்திற்கு மேலும் பயனையும் பன்முக ஆற்றலையும் கொண்டவர்களை உருவாக்கும் திறiனையுடையது. அத்தகைய திறமையாக தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப சிரித்திரன் தன்னை ஆற்றலாளன் ஆக்கியிருந்தான். தலைவர் அதிகளவில் அவனிடமிருந்து எதிர்பார்த்தார். ஏனெனில் அவனது ஆற்றல் அந்தளவு பெறுமதியானவை.

ஆனால் தனது பணியை தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து செய்ய மறுத்து மண்ணில் நிற்பதையே விரும்பினான். தனது முடிவில் தளம்பாமல் ஒரே முடிவாக தாயகத்தில் இருந்து பணி செய்யப்போகிறேன் என்றே வெளிநாட்டுப் பயணத்தை மறுத்திருந்தான். கடைசியில் அவனது விருப்பமே நிறைவேறியது. அவன் வெளிநாடு சென்றிருந்தால் ஆயிரம் சிரித்திரன்களை அவனால் உருவாக்கியிருக்க முடியும். ஆனால் தான் நேசித்த தலைவனை தளபதிகளை போராளிகளைப் பிரிய விரும்பாமல் அவர்களுடனேயே வாழ விரும்பிய இனியவன்.

இக்காலத்தில் தான் சிரித்திரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு வான்புலிகள் அணியில் இணைவதற்கான அழைப்பு வந்தது. வான்புலிகளின் தேவையை உணர்ந்த சிரித்திரன் மகிழ்ச்சியோடு வான்புலிகள் பயிற்சிக்குச் சென்றான். பின்னால் உலகையே வியக்க வைக்கும் வான்கரும்புலியாகப் போவானென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவன் கரும்புலியாகவே தன்னை வளர்த்துக் கொண்டான்.
000 000 000

வான்புலிகளின் வரலாறு 1985 – 1986களில் உருவாக்கம் பெற்று விமானம் கட்டும் பணிகளும் ஆரம்பித்த காலமது. மெல்ல மெல்ல கால ஓட்டத்தோடு புலிகளின் வான்புலிகள் அணியானது உயிர் பெற்று உருவாக்கப்பட்டது. முதல் முதலாக 1998 மாவீரர் நாள் மாவீரர் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களால் வான்புலிகள் படையணி தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2000ம் ஆண்டு வான்புலிகள் ஆண்டாக விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு வான்புலிகள் வரலாறு எழுதப்படத் தொடங்கியது.

வான்புலிகளின் வேராகவும் அந்தப் படையணியின் உருவாக்கத்திலும் முக்கிய பங்காக இருந்து இயங்கியவர் தளபதி கேணல் சங்கரண்ணா அவர்கள். சென்னையில் பொறியியல் கல்லூரியில் ஏறோனோட்டிக்ஸ் பிரிவில் BA படித்து முடித்த தளபதி சங்கரண்ணா அவர்கள் கனடா நாட்டிற்குச் சென்று கனடா விமான நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணி புரிந்தார்.

வெளிநாட்டு வாழ்வை விட்டு தாயகம் திரும்பியவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து புலியாகிப் பல போராளிகளை வளர்த்தெடுத்ததோடு நின்று விடாமல் வான்புலிகளின் தோற்றமும் அவராகினார். வான்புலிகள் உருவாக்கத்தில் உறக்கம் மறந்து இறுதிவரை உழைத்த வீரன் தளபதி சங்கரண்ணா. 2001 செப்ரெம்பர் தியாகி திலீபனின் நினைவுநாளில் சங்கரென்ற இமயம் இலங்கையரசின் ஆழ ஊடுருவும் படையணியால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். எனினும் வானுயர்ந்த புலிவீரம் வான்புலிகள் வளர்சியில் வெகவேகமாக முன்னேற்றமடைந்து வளர்ந்தது.

000 000 000
விமானப்பயிற்சியை முடிப்பதற்கு சாதாரணமாக 2வருடங்கள் வரை செல்லும். ஆனால் சிரித்திரனும் அவனுடனான போராளிகளும் இரவு பகல் ஓய்வு ஒளிவின்றி இயங்கி 3மாதத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டார்கள். அதுவும் வன்னி நிலத்திலேயே வான்புலிகள் பயிற்சியினையும் பயின்று பயிற்சியை நிறைவு செய்தார்கள்.

பின்னாளில் வான்புலிகளின் வரலாறும் பயிற்சிகள் எங்கே பெற்றிருக்கலாம் என்ற இராணுவ ஆய்வாளர்களின் புனைவுகளும் கற்பனைகளும் ஊடகங்களை நிறைத்தது. எனினும் எவராலும் கண்டறிய முடியாது வான்புலிகளின் வீரம் நிமிர்ந்தது தான் உண்மை வரலாறு.

உலகில் எங்குமே நிகழ்ந்திராத மாற்றத்தை புலிகளின் வான்புலி வீரர்கள் நிகழ்த்திக்காட்டினர். வானோடிக்கான பயிற்சியில் சிரித்திரனின் ஆற்றலை நேரிலிருந்து பார்த்த சாட்சியங்கள் இன்றும் அவனை அதிசயிக்கும் அதிசயமாய் அவன் நிமிர்ந்து நிற்கிறான்.

சிங்கள தேசத்தினால் வன்னி வான்பரப்பில் பறக்க அனுப்பப்படும் ஆளில்லாத வேவு விமானங்களின் தொல்லைகள் அதிகரித்திருந்த காலமது. இவ் ஆளில்லா விமானங்களை சிங்கள தேசம் மிகப்பெரும் செலவில் கொள்வனவு செய்திருந்தது. இவ் ஆளில்லா வேவு விமானத்தை அழிக்க சிரித்திரனும் சக வான்புலி ஒருவரும் மேற்கொண்ட தாக்குதல் பற்றி சிங்கள தேசம் கூட செய்தியை வெளியில் விடாமல் இயந்திரக்கோளாறென்று கதையை முடித்த சம்பவம் ஒன்று வன்னி வான்பரப்பில் நிகழ்ந்திருந்தது.

தனது நவீன தொழில்நுட்பத்தினை எவராலும் அழிக்க முடியாதென்று இறுமாந்திருந்த சிங்கள தேசத்திற்கு எங்களால் எதுவும் முடியும் என்று செய்து நிரூபித்துக்காட்டிய சம்பவம் :-

அன்றொருநாள் வன்னி வானில் திமிரோடு பறந்த ஆளில்லா வேவுவிமானத்தை சிரித்திரனும் அவனது தோழனும் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள். அந்த ஆளில்லா விமானத்தை புலிகளின் விமானத்திலிருந்தே சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் என்பதனை இன்று வரை சிங்கள தேசம் கூட அறிந்திருக்காத உண்மை.

இத்தாக்குதலானது மிகவும் ஆபத்தும் சவாலும் நிறைந்தது. புலிகளின் விமானப்பறப்பு அடையாளம் காணப்பட்டால் அவர்களின் தரையிறக்கும் இடம் அடையாளம் காணப்படும். அடையாளம் காணப்படும் போது கிபிர் விமானங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலமையும் உருவாகும்.

வான்புலிகளின் விமானமும் பாதுகாப்பாக தரையிறங்க வேண்டும் அதேநேரம் தரையிறங்கும் இடமானது எதிரி அறியாமல் பாதுகாக்கப்பட வேண்;டும். எல்லா பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே தாக்குதலை நிகழ்த்த வேண்டும்.

ஆளில்லா வேவு விமானங்கள் வீதியில் வேகமாக செல்கின்ற இரு சக்கர ஊர்தியின் இலக்கத்தைக் கூட துல்லியமாகக் கணிக்கக் கூடிய தொழில்நுட்பத் திறனைக் கொண்டது. இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஆளில்லா வேவு விமானம் வன்னியின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது.

ஒரு விமானம் பறத்தலில் ஈடுபடும் பகுதியில் அந்த விமானத்தின் உயரத்திற்கு மேல் பறந்து தாக்குவது என்பது இலகுவானது அல்ல. ஆனால் வான்புலிகளால் எங்கும் செல்லவும் வெல்லவும் முடியும் என்பதனை சிரித்திரனும் அவனது தோழனும் நிரூபித்துக் காட்டினர்.

எதிரி விமானம் பறந்து கொண்டிருந்த சமநேரம் சிரித்திரனும் , அவனது தோழனும் தங்கள் விமானத்தை எதிரி விமானத்திற்கு மேலாக உயரப்பறந்து மேலிருந்து ஆளில்லா வேவுவிமானத்தைச் சுட்டுவீழ்த்தித் தரையிறங்கினார்கள்.

சிங்கள தேசம் இயந்திரக்கோளாற்றினால் வீழ்ந்ததாகச் சொல்லி தனது இழப்பை வெளியில் தெரியாமல் மறைத்துக் கொண்டது. இந்த மர்மம் பற்றி ஆய்வுகளும் அறிக்கைகளும் பல வடிவங்களின் அப்போது ஆராயப்பட்டது வேறுகதை.

வார்த்தைகளை விடவும் வரலாற்றைப் படைத்தவர்கள் புலிகள். அவ்வரலாற்றின் சுவடுகளில் சத்தமின்றிச் சாதித்துவிட்டு தரையிறங்கிய சிரித்திரனும் அவன்கூட அத்தாக்குதலில் இணைந்திருந்த தோழனும் அன்றைய ஆய்வுகளின் கதாநாயகர்கள். ஆனால் அந்த வேர்கள் வெளியில் வராமல் வெற்றியைத் தந்துவிட்டு அமைதியானார்கள்.
000 000 000

1998 மாவீரர் நாளன்று வான்புலிகள் பயிற்சியை முடித்த வான்புலி மறவர்கள் விமானத்திலிருந்து முதல் முதலாய் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பூத்தூவி தங்கள் முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள். அன்றைய நாள் தலைவரினால் அதிகாரபூர்வமாக வான்புலிகள் படையணியின் உருவாக்கம் பற்றிய அறிவிப்பு நிகழ்ந்தது.

வான்புலிகள் உருவாக்கப்பட்டு முதல் முதலாக எரித்திரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 2 விமானங்கள் முதல் முதலாக வான்படையை உருவாக்கிய எங்கள் தலைவனும் தளபதிகளும் நேரில் பார்வையிட்டு வான் புலிவீரத்தின் அடையாள முகங்களை வாழ்த்தி வரவேற்றார்கள். அவ்விமானங்கள் பின்னர் வரிநிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயார் செய்யப்பட்டது.

சிறிய ரக விமானம் நெடுந்தூரம் சென்று வருவதற்குப் போதியளவு எரிபொருள் போததது. ஆனால் தாக்குதலுக்குச் சென்று திரும்புவதற்குத் போதியளவு எரிபொருளை மீதப்படுத்த அவர்கள் மேற்கொண்ட உத்திகளை உலகம் அறிந்ததில்லை.

விமானத்தை வழங்கிய நிறுவனத்தால் கூட நெடுந்தூரத்துக்கான பயணத்தினைச் செய்ய முடியாதெனத் தெரிவிக்கப்பட்டும் வான்புலிகள் எரிபொருளை சேமிக்கும் வகையில் விமானத்தை மேலேற்றிப் பறந்து வெற்றியுடன் தாக்குதல்களை நடாத்திவிட்டுத் திரும்பும் வீரத்தையும் வித்தியாசமான உத்தியையும் எவரும் அறிந்திருக்கவே இல்லை. வான்புலிகளின் தோற்றமும் தாக்குதல் வியூகங்கள் வெற்றிகள் உலகிற்குப் புரியாத புதிர்களாகவே அமைந்தது.
000 000 000

தமிழர் நிலத்தைத் தேடி வந்து தாக்கி உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருந்த அரசின் தலைமை மையத்தினுள் „’காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என விடுதலைப்புலிகளின் வான்புலிகள் 26.03.2007அன்று கட்டுநாயக்கா இராணுவ விமானப்படைத்தளத்தின் மீது தாக்குதலை நடாத்தி வான்புலிகளின் இருப்பை உலகிற்கும் அதேவேளை இலங்கையரசிற்கும் அறிவித்தனர்.

இதுவே முதல் முதல் புலிகள் உரிமையேற்ற முதல் வான்தாக்குதல் ஆகும். அந்தத் தாக்குதலில் சிரித்திரனும் விண்ணிலேறி வீரனாய் நீலப்புலியுடையில் வானோடியாய் போனான். எங்கள் நிலத்தில் வந்து எங்கள் குடிமனைகளையும் குழந்தைகளையும் அழித்தவர்களின் வானில் நின்று தாக்குதல் மேற்கொண்டு திரும்பிய வான்புலிகளில் எங்கள் சிரித்திரனும் ஒருவன்.

22.10.2007 அன்று அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வான்புலிகளின் பங்கும் அளப்பரியது. திங்கள் அதிகாலை அனுராதபுரத்தினுள் ஊடுருவிய 21 சிறப்பு ஆண் பெண் கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அனுராதபுரம் வான்படைத்தளம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வீழ்ந்தது. புலிகளின் வான்படையினர் துணையாக அனுராதபுர வான்படை மையத்தினுள் குண்டுகளை வீசி சேதத்தை விளைவித்தனர்.

திங்கள் பகல் 11மணிவரையும் கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனுராதபுரத்தளத்திற்கு ஆதரவு வழங்க வவுனியாவிலிருந்து அனுப்பப்பட்ட பெல் 212 உலங்குவானூர்தி மிகிந்தலைப்பகுதியில் வைத்து விமான எதிர்ப்பு அணியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி இலங்கையரச வானோடிகளும் உலங்குவானூர்தியும் அழிந்து போனது. இலங்கையரசின் வான்படைபலமானது பெரும் வீழ்ச்சி கண்டது இப்பெரும் அழிவில்தான்.

22.10.2007 அன்று 21 விசேட கரும்புலிகள் அணிக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டு எல்லாளன் வாழ்ந்த மண்ணில் புலிவீரத்தை அறியச்செய்த மாவீரர்களின் தியாகத்தில் உலகமே திகைத்தது. அந்த வரலாற்று வெற்றியில் சிரித்திரனும் பங்கேற்றுத் தளம் திரும்பியிருந்தான்.
ellaalan-attack
வான்புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கலாம் என தனது இராணுவ ஆய்வில் இராணுவ ஆய்வாளரெனப்படும் இக்பால் அத்தாஸ் கட்டுரையெழுதியிருந்தார். அதேபோல மேலும் சில ஊடகங்கள் மலேசியாவில் பயிற்சிகள் பெற்றிருக்கலாம் எனவும் ஆளாளுக்கு ஆய்வுகள் செய்து கொண்டிருந்தார்கள்.

எல்லா ஆய்வுகளையும் விஞ்(மி)சிய வான்புலிவீரத்தை இதுவரையில் எந்த ஆய்வுகளும் ஆராட்சிகளும் அதன் அடி முடியைக் கண்டறியவில்லை. தென்னிலங்கையை கலங்கடித்து தென்னிலங்கையில் மட்டும் 7தடவைகள் சென்று தாக்குதலை நடாத்திவிட்டுத் திரும்பினர் வான்புலிகள்.

அனைத்து நவீன வளங்களையும் அறிகருவிகைளயும் பொருத்தி வானிலேறும் வான்புலிக்கலங்களைத் தேடிக்கொண்டிருந்தது சிங்கள தேசத்தின் தொழில்நுட்பம். அவற்றையெல்லாம் தாண்டி கட்டுநாயக்கா , அனுராதபுரம் ,கொலன்னாவை என வான்புலிகளின் வீரம் உலகை வென்றிருந்தது.

ஓரிடத்திலிருந்து மேலெழும் விமானம் திரும்பி வருகிற போது போதிய எரிபொருளைக் கொண்டிராது. எனினும் பிறிதொரு இடத்தில் தரையிறங்கி பாதுகாப்பாக வான்கலங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் திறன் வான்புலிகளுக்கானது. சாவல்களைத் துணிச்சலோடு ஏற்று சாதிக்கவும் , முடியாதென்ற எல்லாவற்றையுமே மனபலத்தால் செய்து முடித்துக் காட்டிய புலிவீரத்தின் வரலாற்றில் வான்புலிகள் வீரமும் வித்தியாசமானது.

வவுனியா கூட்டுப்படைத்தளம் மீதான வான்புலிகளின் தீரமிகு தாக்குதலை நடாத்தியதற்காக „நீலப்புலி மறவர்’ விருதினை வான்புலிவீரர்களுக்கு வழங்கி மதிப்பளித்துக் கௌரவித்தார் தேசியத்தலைவர்.

அதேபோல களனிதிச அனல்மின் நிலையத்தின் மீதான தாக்குதல் உட்பட 5தடைவைக்கு மேல் வான்தாக்குதல்களை நடாத்தி சிங்களத்திற்கு பெரும் பொருளாதார அழிவையும் இழப்பையும் ஏற்படுத்திய வான்புலிகளுக்கு ‚’நீலப்புலி’ விருதினையும் , இத்தாக்குதல்களுக்கு துணையாக செயற்பட்டு தாக்குதல் நடாத்திய துணை வானோடிகளுக்கு ‚’மறவர்’ விருதினையும் வழங்கினார் தலைவர். இப்படித்தான் வான்புலிகளின் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. தரை கடல் பலத்துக்கு நிகராக எங்கள் தலைவன் படைத்த வான்புலிகளின் சாதனைகளை வெற்றிகளை என்றென்றும் பெருமையுடன் நினைவு கொள்கிறோம்.
000 000 000

ஈழத்தமிழர் வரலாற்றில் கண்ணீரையும் துயரையும் அவலத்தையும் தந்த மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழனத்தின் அரசியல் வெளியில் பெரும் வெற்றிடத்தையும் இட்டு நிரப்ப முடியாத இழப்புகளையும் தந்த 2009ம் ஆண்டில் வீரமும் எங்கள் விடுதலையின் அடையாளங்களும் ஒன்றாய் அழிக்கப்பட்டு ஏதிலிகளாக நாங்கள் ஆகிப்போன விதியை எழுதியதும் இதே வருடம் தான்.

அவலங்கள் நிறைந்த 2009இல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மெல்ல மெல்ல எதிரியின் கையில் இழக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு விடுதலையமைப்பிற்கு எதிராக உலகம் கூட்டுச்சேர்ந்து 30ஆண்டுகால விடுதலைப் பயிரை அதன் வீரியத்தை வீரத்தை பலியெடுத்துக் கொண்டிருந்தது.

எதிரியின் கொலைவலயத்தினுள் வன்னி நிலம் முழுமையாகி இழக்கப்பட்டு எஞ்சிய முல்லைத்தீவும் இதோ அதோ என்ற நிலமையில் இருந்த போது மாற்று வழி ஏதோவொன்றைத் திறக்க வேண்டுமென்று திட்டமிடலில் இறங்கியது வான்புலிகள் அணி.

புதுக்குடியிருப்பு எதிரியிடம் பறிபோனால் மீள்வதற்கான வழிகள் யாவும் போய்விடும் என்பதனை உணர்ந்த வான்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல்.சிரித்திரன் இருவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்று முன்வந்து வான்கரும்புலிகளாகினார்கள்.

கேணல் ரூபன் தனது கடைசிப் பயணத்திற்கு தயாராகிய நேரம் தான்நேசித்த மக்களுக்கு தனது இறுதி மடலை எழுதிவிட்டு தோழன் சிரித்திரனோடு புறப்பட ஆயத்தமானான். 2002களிலிருந்து ஒருநாள் வானேறி பகைவன் பலத்தையழிப்பேனென்று சொல்லிக் கொண்டிருந்த ரூபன் கனவும் அன்று கைகூடும் நாளாக….!
ruban sirithiran with thalaivar
விமானத்தை வானேற்றக்கூட பொருத்தமான வான்தளமோ வசதியோ எதுவுமில்லாத சுற்றிவர எதிரியின் கொலைவளையத்தினுள் இருந்து கொலைஞர்களின் கோட்டையில் பேரிடியை இறக்கும் கனவோடு நந்திக்கடல் வெட்டையிலிருந்து புறப்பட்டார்கள் சிரித்தின்,ரூபன். 3லட்சத்துக்கும் மேலான மக்கள் , போராளிகள் சாட்சியாக கேணல் ரூபன், லெப்.கேணல். சிரித்திரன் வானேறினார்கள்.

அந்த நேரத்து மனவுணர்வுகளையும் அவர்களது தூய்மையான தேசத்தின் மீதான அன்பையும் விடுதலைக் கனவையும் இன்றுவரை உலகம் புரிந்ததில்லை. அவர்கள் புரியாத புதிர்களாகவே என்றும்….! ஆனால் எங்களால் புரிந்து கொள்ளப்பட்ட புனிதங்களாக நெஞ்சம் முழுதும் அவர்கள் நினைவுகள்…..!

கொழும்பு நகரம் வான்புலிகள் வரவில் விழித்துக் கொண்டது. சிங்களத்தின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளத்தை அழிக்கும் கனவோடு ரூபன், சிரித்திரன் எதிரியின் மையத்தை நெருங்கியிருந்தனர்.

கொழும்பு மாநகரம் பயத்தில் உறைந்தது. வெளிச்சம் நிறைந்த தெருக்கள் இருளில் நிறைந்தது. சிரித்திரன் , ரூபன் வரவில் சிங்களம் திகைத்தது. மரண வாசனையைக் கொழும்பு உணர்ந்தது. சாவின் பயத்தைக் சிங்கள தேசம் நுகர்ந்தது. தமிழனித்தின் வரலாற்றை அதன் வீரத்தை 30ஆண்டு விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடும் முனைப்போடு ஆயிரக்கணக்கில் வன்னியைத் தின்று கொண்டிருந்த படைகளின் நெஞ்சிலும் ரூபன், சிரித்திரன் பூகம்பச்சுழியாய் பயமுறுத்திக் கொண்டிருக்க வான்புலிவீரர்கள் இருவரும் வானிலே வரலாறு படைத்திட சிங்கள வான்பரப்பில்….!
வான்கரும்புலிகள்  கேணல் ரூபன் - லெப்.கேணல் சிரித்திரன்
வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தது வன்னிமண். வான்கரும்புலிகள் இருவரும் எதிரியின் இலக்கை மிகவும் அண்மித்திருந்தார்கள். இலக்கை எட்டும் தொலைவில் புலிகளின் வானுர்தி சிங்களதேசத்து வானில்….! சிரித்திரன், ரூபன் கனவு நனவாகும் கணங்கள் இலக்கு மிக அண்மையாகியிருந்தது.

எல்லாம் சரியாக அமைந்து இறுதிக்கட்டத்தில் தாயகக்கனவோடு தமிழரின் சேனையின் வீரத்தைச் சுமந்து புறப்பட்ட வான்கலம் எதிரியின் வானெதிர்ப்பு ஆயுதங்களால் அழிக்கப்பட்டு எங்கள் ரூபனும், சிரித்திரனும் தாயகத்திற்கான பயணத்தில் தங்கள் உயிர்களைத் தந்து எதிரி தேசத்தில் உயிரை விதைத்து காற்றிலேறி விண்ணையும் சாடும் வீரத்தை எழுதிவிட்டு அமைதியாகிப் போனார்கள்.

அவர்களது தாக்குதல் நினைத்தபடி வெற்றியில்லாது போனாலும் சிங்கள தேசத்தை சேதப்படுத்தி அச்சமூட்டி எங்கள் வீரத்தை அடையாளப்படுத்திவிட்டு இருவரின் மூச்சும் சிங்கள தேசத்தில் நிறைந்தது.
தலைவனின் நிழலில் வளர்ந்து வென்றுவரப்போன சிரித்திரனையும் ரூபனையும் எங்கள் தேசம் இழந்தது. ஒருகணம் சுவாசத்துடிப்பெல்லாம் நின்றுவிட்டாற்போலவே அவர்களது தியாகம் அவர்களை நேசித்த எல்லோரின் நெஞ்சிலும் துயரிடி.

வானில் பறந்தவர்கள் வானிலே தங்கள் வீரத்தையெழுதிய விலாசம் மறந்த விடிவெள்ளிகள். தங்களின் தாக்குதலில் போர்க்கள நிலமையில் மாற்றம் வருமென்று நம்பிப்போன இரு வீரர்களின் நம்பிக்கையும் கானலாகிப் போனதையும் அறியாமல் ஒருநாள் ஈழம் விடியும் எனும் கனவோடு போன ரூபன் , சிரித்திரன் கனவுகள் உலகெங்கும் வியாபித்துக் கிடக்கிறது.

இறுதியாய் சிரித்திரன் ,ரூபன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளும் , எங்கள் முன்னால் விதைத்துச் சென்ற கனவுகளும் இன்னும் ஆறாத , மாறாத காயத்தைத் தந்த போதும் அவர்கள் கனவை நனவாக்கும் வேகத்தோடும் விடுதலையின் மீதான தாகத்தோடும் நகர்கிறது.

ஒவ்வொரு மாவீரரின் நெஞ்சிலும் மூண்ட நெருப்பு ஒருநாள் பிரளமாய் எங்களை ஏமாற்றி எங்கள் தேசத்தை அழித்தவர்கள் வீடுகளில் நிச்சயம் இடியாகும். அழிவைத் தந்த ஒவ்வொரு வீட்டிலும் எங்களது விடுதலைக்காய் இழக்கப்பட்ட லட்சக்கணக்கான உயிர்களின் பேரோசை ஒலித்தபடியே இருக்கும்….அது விடுதலையடையும் வரையும் விழித்தபடியே….! உயிர்த்தபடியே….!
நினைவுப்பகிர்வு - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

Tuesday, February 11, 2014

இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....?

11.02.2009 அன்று எறிகணைவீச்சில் உயிரிழந்தார். இன்று 5ம் ஆண்டு நினைவுநாள்.

5ஆண்டு நினைவு நாளின்று எங்கள் உயிரறுந்த பொழுதின் நினைவும் இன்று....!  உனது மகள் இன்று உன்னைப்போலவே உலகை வெல்லும் சக்தியாய் வளர்கிறாள்.


(11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை)



பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப்
பதுங்குளி வாசலிலும் 
பாதையோரச் சகதியிலும் 
உழன்ற பொழுதுகளில் 
உனக்கும் சாவுவரும் 
என்றெண்ணியிருப்பாயா ?

நம்பிக்கையறுந்த வாழ்வு
நாளையுனக்கு இல்லையென்று
எப்போதாவது எண்ணியிருந்தாயா ?
எங்களைப்போல உனது மகளும் 
மனைவியும் அம்மாவும் அக்காவும்
மருமக்களும் பற்றித்தானே
மனசுக்குள் அழுதிருப்பாய் ?

சாவரும் நாளின் முன்னிரவு
உனக்குச் சாவு நாளையென்று
சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ?
போரின் கொடிய வாய்க்குள்
போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ?

பாழும் பொஸ்பரஸ் குண்டுகள் 
உன்மேல் வீழும்வரை உனக்கு எந்த
விபரீதமும் தெரிந்திருக்காது அல்லவா ?

ஒருவயது மகளும் 
உன்னையே நம்பிய அம்மாவும்
உன் அன்பினியவளும்
மட்டும்தானே - உன்
மனதில் நின்றிருப்பர். 

செத்து நீ கிடந்த தெருவில்
உனைப்பார்க்கவே முடியாமல்
யாவரும் தாண்டியோடினராம்....
பின் வந்து பார்த்த போது 
குருதிச் சேற்றில் நீ
முடிந்து மணிகள் ஆகியிருந்ததாம் ?

சுண்ணமிடிக்கச் சுடுகாடு கொண்டு செல்ல
உறவு கூடி ஒப்பாரி வைத்துன்
இழப்பின் வலி குறைக்க
அவகாசமில்லாமல் ஐயனே
அருகில் மண்கிண்டி
அப்படியே புதைத்துவிட்டு
உறவெல்லாம் திசைக்கொன்றாய்
சிதறியதாம்....

ஐயனே !
அந்தக்கணங்கள் 
நேரில் நின்றது போல்
நெஞ்சு வலிக்கிறது.

34வயதில் போர் உன் வாழ்வு தின்று
போய்விட்டாய் கோபி.
இங்கு நம் வீடுகளில் 
உன் நினைவுகளில்
அழுகையும் ஆற்றுதலில்லாத்
துயரமுமாய்....
மிஞ்சியிருப்போரையும்
இழப்போமா இல்லை
உயிருடன் பார்ப்போமா ?

15.02.09 
mail - rameshsanthi@gmail.com

Saturday, February 1, 2014

கப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....!

கப்டன் தாரகன் வீரனாய் :- 03.04.1974
வித்தாய் :- 01.02.2000 
சொந்த இடம் - முள்ளியவளை.


வன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது.

வீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும்.

03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது. 

வயல்களும் வரப்புகளும் இயற்கையின் பசுமையை ஏந்தி வைத்திருக்கும் முல்லைமண்ணின் ரம்மியங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் மழலைக்காலம் மகிழ்ச்சியானது.

யுத்தத்தின் சத்தங்கள் முல்லைமண்ணையும் அள்ளிக் கொண்டிருந்த காலங்களில் வெடியோசைகளும் உயிரிழப்புகளும் பார்த்தீபனின் நெஞ்சிலும் நெருப்பை விதைத்த நாட்களவை.

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியின் மாணவனாக கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தான் பார்த்தீபன். க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்தை தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்து உயர்தரம் பரீட்சையை எழுதிவிட்டு பெறுபேறு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனின் வாழ்வை மாற்றியது ஈழவிடுதலைப் போராட்டம்.

1994ம் ஆண்டு வீட்டைவிட்டுக் காணாமற்போனான் பார்த்தீபன். அமைதியும் இனிமையும் நிறைந்த வீட்டையும் சுற்றத்தையும் நண்பர்களையும் பிரிந்து காடுகள் நோக்கிப் போயிருந்தான். ஆம் அவன் விடுதலைப்புலியாக மாறினான்.

மணலாற்றில் 24வது பயிற்சி முகாமில் ஆரம்பப்பயிற்சியைத் தொடங்கிய பார்த்தீபன் தாரகன் எனப்பெயர் சூட்டப்பட்டு பயிற்சியில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சி முடிந்த போது இம்ரான் பாண்டியன் படையணிக்கு தளபதி சொர்ணம் அவர்களால் தெரிவு செய்யப்பட்டான்.

தலைவரின் வெளிப்பாதுகாப்புப் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் தாரகனும் தெரிவு செய்யப்பட்டு வெளிப்பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டான். தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் என்றுமே நேர்மையும் நிதானமும் கூடிய கவனத்தையுடைய போராளி. ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடிக்கும் வரை ஓய்வு உறக்கம் பசி களைப்பு எதையும் பார்க்காமல் ஓயாது இயங்கி காரியம் முடித்த பின்னரேயே ஓயும் களப்பணியாளன்.

1996இல் விசேட இராணுவப்பயிற்சிக்குச் சென்று திறமையோடு விசேட பயிற்சியை முடித்துத் திரும்பிய தாரகன் கப்டன் கௌதமன் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று புதிய போராளிகளை வளர்த்தெடுப்பதில் கவனமாகினான்.

களமாடச் செல்லும் கனவோடு காத்திருந்த தாரகனுக்கு முதல் கள அனுபவம் 09.01.1997 ஆனையிறவு ஊடறுப்புச்சமரில் தான் ஆரம்பமாகியது.

1996 நடுப்பகுதியில் முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட போது இலங்கையரச படைகளுக்கு பெருத்த இழப்பையும் கொடுத்ததோடு இலங்கை இராணுவத்தின் உளவுரணும் புலிகளால் சிதைக்கப்பட்டிருந்த காலமது.

முல்லைத்தீவை இழந்த படையினர் சத்ஜெய 1 எனும் பெயரில் பரந்தனையும் , சத்ஜெய 2,3 நடவடிக்கையை மேற்கொண்டு கிளிநொச்சியையும் கைப்பற்றியிருந்தனர்.

எனினும் புலிகள் ஓய்ந்து விடாமல் தொடர்ந்த அடுத்த நடவடிக்கைக்குத் தயாராகினர். வன்னிக்கு அச்சுறுத்தலாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளமும் சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி வெற்றியும் அரசபடைகளுக்கு வெற்றிகளாக அமைந்தது.

ஓயாத அலைகள் ஒன்று தொடக்கம் தொடர் சமர்களில் புலிகளின் அணிகள் சண்டையிட்டுக் கொணண்டிருந்த சம நேரத்தில் அடுத்ததொரு ஊடறுப்புச் சமருக்கான ஏற்பாடுகள் , பயிற்சிகளிலும் போராளிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையும் சிறீலங்காப்படைகளின் ஆதிக்கம் நிலையாகியிருந்த சமயம் அது. கிளிநொச்சி முகாம் மீது எவ்வித தாக்குதலையும் நிகழ்த்தாமல் பரந்தன் , ஆனையிறவு ஊடறுப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தயாராகிக் கொண்டிருந்தனர். இத்தாக்குதல் வெற்றி பெறுகிற போது கிளிநொச்சித் தளம் தனிமைப்படுத்தப்பட்டு இலகுவாக கிளிநொச்சியை மீட்கலாம் என்பது முடிவாகியது.

ஆனையிறவு பரந்தன் பகுதிகளை ஊடறுத்துச் செல்ல 1996வருட இறுதிப்பகுதியின் காலநிலை இடமளிக்காமல் போனது. நீரேரிகளையும் சதுப்பு நிலங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய இப்பகுதிகளின் நீரின் மட்டம் அதிகரித்திருந்ததோடு சமருக்கான அகபுற காரணிகளும் தடையாகியது. இதனால் அணிகள் நகர முடியாது போனது.
கிளிநொச்சி வெற்றியோடு படைகள் சற்று அதிக எதிர்பார்ப்பைக் கொண்டு அடுத்த நகர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

ஆனையிறவு பிரதான மையத்தைத் தகர்த்துக் கைப்பற்றுவதோடு பரந்தன் சந்தி உள்ளடங்கலாக பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் உட்பட படையினர் வசமிருந்த படைத்தளத்தையும் கைப்பற்றி கிளிநொச்சிக்கான தொடர்பை துண்டிக்கும் திட்டத்தில் அணிகளை தயார் செய்தார்கள். தாக்குதல் வெற்றியளிக்காது விட்டால் தாக்குதலை நிறுத்திக் கொள்வதெனவும் திட்டமிடப்பட்டது.

எதிரியா புலிகளா என்ற சவாலில் புலிகள் குறித்தபடி தாக்குதலிற்கு அணிகளை நகர்த்தி 09.01.1997 அன்று பரந்தன் ,ஆனையிறவு ஊடறுப்புச் சமருக்குத் தயாராகினார்.

08.01.1997 அன்று இருள் கவ்விய பொழுதில் நீரேரிகள் , சதுப்புகள் , வெட்டைகள் தாண்டி நீண்டதூரம் நகர்ந்து அணிகள் நிலைகளைச் சென்றடைந்து தயாராகியது. ஆனையிறவு மையத்தினுள் நுளைந்து ஆட்லறிகளை அழிக்கும் நடவடிக்கைக்குத் தயாராகி திட்டமிட்டபடி 09ம் திகதி தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் முன்னேற்றத்துக்கு அவகாசம் கொடுக்காமல் விரைவான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். சாள்ஸ் அன்ரனி படையணி ஆட்லறித்தளத்தினுள் புகுந்து ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றியதோடு ஒன்பது ஆட்லறிகளையும் கைப்பற்றியது. எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளாலேயே எதிரி மீது தாக்குதல் நிகழ்த்தினர் போராளிகள்.

இதர பகுதிகளில் திட்டமிடப்பட்டது போல தாக்குதல் வெற்றியைத் தராது போனது. பரந்தன் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டது போல அமையவில்லை. கைப்பற்றிய ஆட்லறித்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதானால் பரந்தன் படைத்தளம் போராளிகளிடம் விழ வேண்டும். ஆனால் நிலமை எதிரிக்கே சாதகமாகியது.

எதிரியும் புலிகளிடம் ஆட்லறித்தளத்தையோ பரந்தன் தளத்தையோ விடுவதில்லையென்ற முடிவில் சகல வளங்களையும் பயன்படுத்தி எதிர்த் தாக்குதலில் மூர்க்கமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதேபோல விடிவதற்கிடையில் வெற்றியை அடைய வேண்டுமென்ற வேகத்தோடு புலிகளும் சமரிட்டுக் கொண்டிருந்தனர்.

விடிந்தால் எதிரிக்கு ஆதரவாக விமானப்படை வந்துவிடும். அப்போது மிகவும் அச்சுறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருந்தது MI-24  உலங்குவானூர்தியின் தாக்குதல் ஆகும். அதேநேரம் வெட்டை வெளிகளில் சமரிடும் புலிகளின் அணிகளை MI-24 உலங்குவானூர்த்தியின் தாக்குதல் முன்னேற்றத்தை தடுத்துவிடும். அத்தோடு ஆட்லறிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் புலிகளின் அணிகள் கடும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ஆகவே பரந்தனை வென்றால் மட்டுமே அடுத்த வெற்றியென்பது நிச்சயமாகியது.

புலிகளின் வரலாற்று வெற்றிகளைத் தந்த சமர்களில் பெரும்பாலும் ஒரு வழி சாதகமாகாது போனால் மாற்று வழியின் மூலம் வெல்லும் வழிகளைத் தயாராகக் கொண்டிருப்பர். இம்முறை ஓரிரவிலேயே வெற்றியை பெற்றால் மட்டுமே இழப்புகளையும் தவிர்க்கிற நேரம் எதிரியைத் தோற்கடிக்கவும் முடியும் என்பது முடிவானது.

பரந்தன் முகாம் மீதான தாக்குதல் எதிர்பார்த்தபடி வெல்ல முடியாது என்பது உறுதியானது. இனி இறுதி முடிவு கைப்பற்றிய ஆட்லறிகளை அழித்துவிட்டு அணிகள் பத்திரமாக பின்வாங்குவதே முடிவானது. தாக்குதல் தளபதிகளின் கட்டளைப்படி ஆட்லறிகளும் பெரும் ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டு அணிகள் பின்வாங்கியது.

எதிரிக்கு பெரும் இழப்பையும் கொடுத்து எதிரியின் உளவுரணைத் தகர்த்த அச்சமரில் தான் தாரகனும் தனது முதல் கள அனுபவத்தைப் பெற்று சிறந்த சண்டைக்காரன் என்பதனையும் அடையாளப்படுத்தினான்.

வித்தியானந்தா கல்லூரியின் ஒருகாலத்தின் சிறந்த விளையாட்டு வீரனான விளங்கியவன் தாரகன். கப்டன் கௌதமன் (ஊரான்) உதைபந்தாட்ட அணியில் சிறந்த விரனாக மிளிர்ந்தது மட்டுமன்றி பத்திரிகைகளில் வரும் கணிதப் போட்டிகளில் கூட தனது கணிதத்திறமையை வெளிப்படுத்திய வீரன்.
சண்டையனுபவத்தைத் தொடர்ந்து கப்டன் கௌதமன் (ஊரான்) பயிற்சி பயிற்சிப்பாசறை ஒன்று முதல் மூன்று வரையான பாசறையின் பயிற்சியாசிரியனாகி சண்டைக்கள வீரர்களை வளர்த்தனுப்பினான்.

பின்னர் வெளிப்பாதுகாப்பணியின் பாதுகாப்பு பணியில் தனது பணிகளைத் தொடர்ந்த போது ஓயாத அலைகள் 3 நடவடிக்கை ஆரம்பமாகியது.
சண்டைக்களங்களில் சாதிக்க வேண்டும். இழந்து போன மண்ணை மீட்க வேண்டுமென்ற கனவோடு தானாகவே சண்டைக்குப் போக விரும்பி ஓயாத அலைகள் மூன்றில் இம்ராம் பாண்டியன் படையணியின் தாக்குதல் அணியோடு சென்றான்.

தனங்கிழப்பில் நிலையமைத்திருந்த அணியில் தாரகனும் ஒருவனாகினான். 01.02.2000அன்று அதிகாலை 4.30மணி. எதிரி இவர்களது பகுதியை உடைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். போராளிகளின் பகுதியைக் கைப்பற்றிவிடும் மூர்க்கத்தில் எதிரி தனது தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.

எதிரியின் மூர்க்கத்தை எதிர்கொண்டு போராளிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். தாரகன் சண்டையில் எதிரியை எதிர்த்து வீரத்துடனும் ஓர்மத்துடனும் சமரிட்டுக் கொண்டிருந்தான்.

ஒருகட்டத்தில் பதுங்குகுளியை விட்டு வெளியில் நின்று எதிரியுடன் நேரடிச்சமரில் ஈடுபட்டான். தொடைப்பகுதியில் காயமுற்ற போதும் தனது காயத்திற்கான மருத்துவத்தை பெறாமல் பீல்ட் கொம்பிறேசரைக் கட்டிவிட்டு தொடர்ந்து எதிரியுடன் மோதிக்கொண்டிருந்தான்.

எதிரியின் எறிகணைகள் எங்கும் வெடித்துக் கொண்டிருந்தது. அந்த எறிகணைகள் தாரகனின் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. அங்கே தான் தாரகன் தலையில் காயமடைந்தான். ஏற்கனவே காயமடைந்த தொடைப்பகுதியால் அதிக குருதி இழக்கப்பட்டிருந்தான். அடுத்த காயத்தை தலையில் ஏற்றுக் கொண்டவன் தனது இறுதிக் கணத்தை அடைந்து கொண்டிருந்தான்.

தனங்கிழப்பு மண்ணில் கப்டன் தாரகன் தனது கடைசிக்கனவை விதைத்து விட்டு வீரச்சாவடைந்தான். தனது இறுதிக்கணத்தில் கூட எவ்வித சலனத்துக்கோ இடறலுக்கோ உட்படாமல் இறுதி வரையும் வீரத்தோடு போராடினான். மரணத்தின் கடைசி நொடியிலும் என்றும் போல புன்னகை நிறைந்த அவன் முகத்தில் எந்தச் சோர்வுமின்றி வீழ்ந்தான் வித்தாக....!

தாரகன் ஒளிரும் நட்சத்திரப் பொட்டுகளில் மின்னும் தாரகையாக தமிழீழக்கனவில் தனது வரலாற்றுத் தடங்களையும் பதித்துக் கொண்டு அமைதியாய் உறங்கினான்.

தாரகன் படித்த வித்தியானந்தா கல்லூரியும் அவனை நேசித்த அவனது ஊரும் மாணவர்களும் அவன் தோழோடு தோழ் நின்று களமாடிய தோழர்கள் அனைவரின் மனங்களும் துயரத்தில் தோய்ந்தது. அவன் நேசித்த அவனது பிறந்த ஊரான முள்ளியவளை மண்ணில் உறங்கிய மாவீரர்களோடு அவனும் முள்ளியவளை துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டான் மாவீரனாக....! எல்லோர் மனங்களிலும் நிறைந்து போனான் கப்டன் தாரகனாக...!

நினைவுப்பகிர்வு :- - சாந்தி நேசக்கரம் -
01.02.2014
Email :- rameshsanthi@gmail.com


Friday, January 31, 2014

இருள் வெளியின் விடிவெள்ளி.

காலிக்கடற்கரையின் அலைகள் அவனது கால்களை வந்து வந்து நனைத்துச் சென்று கொண்டிருந்தது. அலைகளோடு கரைந்து கனவுகள் நுரையாக கண் முன்னே பரந்து கொண்டிருந்தது. மக்களுக்காக மக்களின் வாழ்வுக்காக கரைந்து போகும் நஎண்ணத்தை அந்தக் கரைகளில் நின்றே பலமுறை உரக்கச் சொல்லியிருக்கிறான். மனிதர்களின் குரல்களைவிட அலைகளின் குரலே அவனது காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.

அந்தக் கரையோர மணலில் வெறும் கால்களைப் புதைத்துக் கொண்டு சற்று நேரம் எதையோ யோசித்தான். தான் பிறந்த கரையோரக் கிராமத்தின் நினைவுகள் வந்திருக்க வேண்டும். முகத்தில் அறைந்த கடற்காற்றின் மென்விரல்கள் அழகாய் வாரியிருந்த தலைமுடியைக் குழப்பியது. விரல்களால் தலைமுடியைக் கோதினான்.

அங்கங்கு காதல் சோடிகள் காதலால் மயங்கியிருந்தனர். அவர்களைத் தாண்டி நடந்தான். அன்னாசித் துண்டுகளுக்கு உப்பும் தூளும் தோய்த்து பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டு அன்னாசியின் சுவைபற்றி வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தவனைத் தாண்டியவன் ஜஸ்கிறீம் காரனிடம் போனான். கோண் ஜஸ்கிறீம் வாங்கினான். மாலைப்பொழுதின் இனிமையில் கரைய மறுத்த மனசை மாற்றப் பிரயத்தனப்பட்டான். கையில் இருந்த ஜஸ்கிறீம் கரைந்து கைவிரல்களில் ஒழுகியது.

இருளும் வரையும் கடற்கரையில் கால்புதைத்து இருந்தவன் எழுந்து நடந்தான். மெலிதாகப் பாடலொன்றை உச்சரித்தபடி கடற்கரையைத் தாண்டி வீதியருகால் நடக்கத் தொடங்கினான். மனசுக்குள் ஏதோவொன்று கனத்துக் கொண்டிருந்தது. தாண்டிப்போன பொலிஸ் வாகனத்தை நிதானமாக அவதானித்தபடி வீதியின் மறுகரையை அடைந்தான். தெருவின் இரு மருங்கும் ஒளிச்சிதறல். முகத்தை நேருக்கு நேராய் அடையாளம் காண முடியாதிருந்தாலும் ஆளாளுக்கு முன்னால் வருகிற அல்லது அருகால் செல்கிறவர்களை விலத்திக் கொண்டு போக முடிந்தது.

தங்குமிடத்தையடைந்த போது இரவு 9.40ஆகியிருந்தது. தம்பி சாப்பிட வாங்கோ....! தங்க இடம் கொடுத்த வீட்டின் அம்மா கூப்பிட்டாள். பசிக்கேல்லயம்மா...! சொல்லிவிட்டு நேரே படுக்கைக்கு போனான். நித்திரை வரவில்லை. வெளியில் தொலைக்காட்சியில் படம் ஏதோ போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் படம் பார்ப்போமென எழுந்தான்.

அறையின் வலது பக்க மூலையில் அவனுக்கான மேசையிருந்தது. அந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசியின் மெல்லிய இசையின் அதிர்வு அவனை அழைத்தது. தொலைபேசியை எடுத்து காதில் வைத்தான். வெளிநாட்டிலிருந்து அக்கா அழைத்திருந்தாள்.

எப்பவும் போல அக்கா சுகம் விசாரித்துக் கொண்டாள். சாப்பிட்டியோ ? நித்திரை கொண்டியோ ? அக்காவின் கரிசனை அன்றைக்கும் இயல்பாயே இருந்தது. ஓமக்கா....விளங்குது....! வேறை என்னக்கா....? வேnறையென்ன சொல்லன் ? இன்று அதிகம் பேசத் தெரியாதவன் போல அக்காவின் கதைகளுக்கு பதில் சொல்ல முடியாது தவித்தான்.

என்னடா தடுமாற்றம்...? அக்கா கேட்டாள். காச்சலக்கா அதான்....பொய் சொல்லாதை சொல்லு என்ன ? அன்று அக்காவை சமாளித்து வென்றான். சரி கவனம் நாளைக்கு இரவு எடுக்கிறன். அக்கா தொடர்பிலிருந்து விடுபட்டாள்.
000         000             000

அவனது பயிற்சி முகமொன்றில் அக்காவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். முதல் அறிமுகமே அக்காவோடு அவனை நெருக்கமாக்கியது. அவனிலும் 4வயதால் மூத்தவள் அக்கா. தோற்றத்தில் அவள் அவன் சக வயது போலவே இருந்தாள்.

பணிகள் தவிர்ந்து எவரது தொடர்பையும் பேணிக்கொள்ளக்கூடாத இறுக்கத்தை தனக்குள் வைத்திருந்தவனின் எல்லா முறாலும் அக்காவின் முன்னால் காணாமல் போனது.. அம்மாவுக்குப் பிறகு அக்காவை அவன் அதிகம் நேசித்தான்.

அக்கா எங்கே பிறந்தாள் எங்கே வளர்ந்தாள் ? எதுவும் அறிய நினைத்ததுமில்லை அறிந்ததுமில்லை. ஆனால் அக்காவை அம்மாவாய் நேசித்தான். அக்கா அவனை முழுவதுமாகப் புரிந்தவள் அவனது மனக்குழப்பத்தை ஏதோவொரு உணர்வால் எப்போதுமே உணர்ந்து கொண்டவள்.

அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு அக்காவும் அவனுமே பயணித்தார்கள். போன இடத்திற்கு ஏற்ப இருவரும் உடையிலிருந்து சகல முறைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அக்காவுடன் தென்னிலங்கைத் தெருக்களில் சேர்ந்து திரிந்த காலங்களில் அக்காவின் ஆற்றலை அவன் வியந்து பாராட்டியிருக்கிறான். சரி பப்பாவில ஏத்தாதை வா....என்பாள் அக்கா.

சத்தியமா அக்கா....அவனது சத்தியத்தை அவள் நம்பியதேயில்லை.
உப்பிடி எத்தினை சத்தியமடா செய்திருப்பாய்...? ஏன் நீங்கள் பொய் சத்தியம் ஒருக்காலும் பண்ணேல்லயா ? எனக் கேட்பான். யாரிப்ப இல்லையெண்டா ? அக்கா திரும்பிக் கேட்பாள். பாசம் , பணி, இலட்சியம் இவற்றுக்கிடையிலான வேறுபாட்டை அடிக்கடி சொல்லுவாள். சின்னச் சின்ன விடயங்களில் கூட நிதானத்தை அவனுக்கு கடைப்பிடிக்க வைத்தாள். சிலவேளைகளில் தடுமாறும் அவனது மனசை தலையில் குட்டி அல்லது கோபித்து மாற்றியிருக்கிறாள்.

மூச்சுக்கு மூச்சு அக்கா அக்கா என்று அவன் அழைக்கிற ஒவ்வொரு நொடியும் அக்காவின் அன்பை அவன்மீது அக்கா காட்டுகிற பரிவை அவன் முழுமையாக அனுபவித்திருக்கிறான். அவன் கண்களைக் கவர்ந்த அழகி(கை)களையும் அக்காவுக்குச் சொல்லியிருக்கிறான். பணிக்காக செல்லும் இடமெங்கும் அவனை அழகிகள் அலையாய் வந்து மோதிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த அலைகளின் அடிபடாமல் தனது கடமையை சாதுரியமாய் முடித்து திரும்பிவிடுவான்.

எடுத்துக் கொண்ட இலட்சியத்தை நெஞ்சில் தீயாய் மூட்டியவன். நெருப்போடு திரியும் அவனது இலக்கின் எல்லையைத் தொடும் கனவோடு மட்டுமே அவன் இயங்கிக் கொண்டிருந்தான். அந்த நெருப்பை ஒரு பூ தனது அழகிய இதழ்களால் காயப்படுத்தியிருந்தது.

பிரதான மையமொன்றில் எல்லையை அந்த மையத்தின் உள்ளே நிகழும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள தரவு சேகரிக்க அவளோடு அறிமுகமாக வேண்டியிருந்தது. இவனுக்கு முதல் சிலர் அந்த இடத்தை நெருங்க முடியாது இடையில் திரும்பியிருந்தார்கள். அவன் கண்டுபிடித்த வழியில் அவள் எதிர்பார்க்காத வகையில் அவனது பணிக்கு ஆதரவாய் மாறினாள்.

பெரும் பொறுப்பொன்றில் கடமையில் இருந்த அவனை அவள் காதலித்தாள். அக்கா சொன்னது போல காதல் எப்பவும் வரலாம். எனது எதிரியிலும் வரலாம் என்ற வாக்கு பொய்யாகாமல் ஐயர்வீட்டு அழகியில் அவனுக்குக் காதல் வந்தது அதிசயமில்லைத்தான். அக்காவுக்கு அவசரமாக அந்தக்காதல் பற்றிச் சொன்னான். நேரில் நின்றிருந்தால் அவன் மண்டை உடைந்திருக்கும் அக்காவின் குட்டில்.

என்ன கலியாணம் கட்டப்போறியோ ? அக்கா கோபமாய் கேட்டாள். இல்லை....சொல்லோணும் போல இருந்தது...நான் வேறையாரிட்டையும் இதைச் சொல்லேலுமோ ? என்ரை அக்காட்டைத்தானே சொல்லலாம்.....அக்காவுக்கு பனிக்கட்டிகளால் அரிச்சனை செய்து அக்காவை குளிர்விக்க முயன்றான். காணுமடா ராசா....நிப்பாட்டு....!

பாவமாயிருக்குதக்கா....அவன் குளைந்தான். அதுக்கு...? அக்கா கடுமையாகவே பேசினாள். உதையெல்லாம் விட்டுப்போட்டு வேலையைப் பாரடா....! பிறகு அக்கா ஆசிரியையாகினாள். அந்தப் புயல் காற்றிலிருந்து அவனைக் காப்பாற்ற அக்கா ஆலோசனைகள் சொன்னாள். பாவம் மனங்களை குழப்பாதையடா....! அளவோடை தொடர்பை வைச்சிரு...! அக்காவாணை நம்பு நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல....!

அவன் முற்றும் துறந்த முனிவனில்லை அவனும் எல்லா ஆசைகளையும் கொண்ட உணர்வும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதன் தான். அவனது கட்டுப்பாடு ஒழுக்கம் யாவையும் தாண்டி ஒருத்தி இதயத்தில் இடம் கேட்கிறாள். இலட்சியத்துக்காக தன்னை ஒட்டுமொத்தமும் தத்துக் கொடுத்துவிட்டானென்று அவளுக்குச் சொல்ல முடியாதிருந்தது.

நான் வெளிநாடு போகப்போறன்....! லண்டனில எனக்கொரு காதலி இருக்கிறாள்....சத்தியமா நான் உங்களை விரும்பேல்ல... என்று அவளுக்குப் பொய் சொன்னான். அவள் அழுது கொண்டே இறுதியாய் அவனைக் கடந்து போனாள். அந்த அழுகை ஆயிரங்காலத்துப் பாவச்சாபத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டுப் போவது போலுணர்ந்தான்.

அவள்  போய் 5மாதங்கள் கடந்திருந்தது. ஆனாலும் அவள் ஞாபகங்களைவிட்டு அகலாமல் அவன் இதயத்தில் கதிரை போட்டு உட்கார்ந்திருந்தாள். பிறகொருநாள் கதிரேசன் கோவிலில் எதேச்சையாக நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. தெரியாதவள் போலவே கடந்து சென்றாள். அனால் அவனால் அவளது மௌனத்தைக் கடந்து செல்ல முடியவில்லை. அவன் அன்றைக்கு அவளையே பார்த்தான்.

ஒருத்தியின் மனசில் ஆசையை வளரச் செய்து அதனைக் காதலாகக் துளிர்க்கச் செய்து  அவளை அழ வைத்து துயரைக் கொடுத்த தனது மூஞ்சி மீது சின்னக் கோபமும் வந்தது. எத்தனையோ பேரை பணிசார்ந்து பழகியதும் சந்தித்ததும் உறவுகள் நீடித்ததும் அவனது கடந்த பாதையில் பலரைக் கடந்திருக்கிறான். அவள் மட்டும் அவனைக் கடந்து போக விடாமல் கண்களில் கண்ணீரைப் பூக்க வைத்ததற்கான காரணத்தைத் தேடினான். மண்டையைக் குடையும் அந்த மர்மத்தை மட்டும் கடைசி வரையும் அவன் கண்டு பிடிக்கவேயில்லை.

இன்னொரு முறை இந்த உலகில் பிறக்க வேண்டுமென்று கடவுளை வேண்டினான். அவளைக் காதலித்து திருமணம் செய்து வாழ ஒரு பிறவிக்கு அப்போதே கடவுளிடம் விண்ணப்பித்துக் கொண்டான்.

பொhடியளுக்கு பெட்டையளில காதல் வாறதும் பெட்டையளுக்கு பொடியளில காதல் வாறதும் பெரிய புதினமில்லையடா தம்பி....காதலுக்காக ஒருதரும் உயிரை விடாயினம்....அங்கினைக்கை ஞாபகத்தில வைச்சு சிலவேளை அழக்கூடும்....உதெல்லாத்தையும் விட்டிட்டு தந்த வேலையைச் செய்....அக்கா இதைத்தான் கடைசியாய் சொன்னாள்.
000                   000               000

இலட்சியத்தின் முன்னால் அவனது காதல் தோற்றுப்போனது. தனக்கான பணியில் கவனமாக இயங்கத் தொடங்கினான். தனக்கான இலக்கைத் தேடிய பயணத்தில் அவனுக்கான நாள் இடம் தெரிவாகியது.

வாழ்வின் முழுமையும் அர்த்தமும் அன்றைய முடிவில் எழுதப்படுமென்று நம்பினான். அன்றைக்கு அவன் தெளிவாகவே புறப்பட்டான். தாயக மீட்பிற்கான தனது கடமையை முடிக்கும் கனவோடு தடையொன்றை அகற்றி அந்தக் காற்றோடு கல(ரை)ந்து போய்விடும் கடைசித் தருணமும் கடைசி வினாடியும் அது....!

அதிர்ந்த பேரோசையின் முடிவில் அவன் துகள் துகளாகிக் கரைந்தான். முகம் மறைந்தது முகவரி மறைந்தது குரலும் மறைந்தது அவன் கொள்கை மட்டும் உறுதியோடு வரலாற்றில் அவனை எழுதிக் கொண்டது. இருள் கலைந்து விடியும் நாளிலும் வெளியில் வராத அவனது வெற்றியும் வீரமும் மௌனமாக இருளின் வெளியில் ஒளியாய்....!

அவன் ஒளிபொருந்திய சூரியனாய் நட்சத்திர வெளிகளில் ஒளிப்பொட்டாகி அக்காவின் கண்ணில் ஈரமாக அவனது நினைவுகள் ஈர நினைவாக....பல்லாயிரம் மைல்கள் கடந்து ஒளிதரும் விடிவெள்ளியாய் அவன் அக்காவின் நெஞ்சிலும் அவனைப் பொத்தி வளர்த்து வழிகாட்டி வழியனுப்பியவர்கள் நினைவுகளிலும் நிரந்தரமாகினான்.....!

04.11.2012
- சாந்தி நேசக்கரம் -

Tuesday, January 14, 2014

மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு)

இக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)



அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.



அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிகள் விழித்திருக்க இருக்கிறேன். திரும்பத் தூங்க முடியாது அந்தக்குரல் அடிக்கடி வந்து போனது.


என்ன நித்திரை கொள்ளாம எழும்பியிருக்கிறீர்....?
இது என்னவனின் குரல்.
நித்திரை வரேல்ல....
வாரும் வந்துபடும்...
இல்லை கொஞ்சநேரம் இருக்கப் போறன்...
சொல்லிவிட்டு அதே இடத்தில் இருக்கிறேன்.



ஏதோ அந்தரமாய்..... யாரையோ பறிகொடுத்து விட்டதான உணர்வில் மனம் துடிக்கிறது. எழுந்து போய்ப்படுக்கிறேன். மீண்டும் உறங்க எடுத்த முயற்சி தோற்றுப் போய் எழுகிறேன்.


இன்று அவன் தொடர்பு கொள்வான். அது ஏதோவொரு சோகத்தை எனக்குத் தந்துபோகும். என் ஆன்ம உணர்வின் அதிர்வு அது. அந்த அதிகாலையில் முகம் கழுவி விபூதி பூசிக் கடவுளைக் கும்பிடுகிறேன். கடவுளே ஒருத்தருக்கும் ஒண்டும் நடக்கக் கூடாது. அவர்கள் யாரையும் நமது தேசம் இழக்கக்கூடாது. இழப்பில்லாத வெற்றியை அவர்கள் பெற்று அவர்கள் வெல்ல வேண்டும். ஆண்டவரே அவர்களை அந்தச் சிங்கங்களின் கண்களிலிருந்து காத்துக்கொள்.


இல்லை. அவன் ஒரு சேதியைக் சொல்லப்போகிறான்.....நீ.... அந்தச்சேதியில் உடைந்து.....நொருங்கப் போகிறது உனது ஆன்மா.....ஏதோவொரு அசரீரீ என்மனமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.


அக்கா சொல்லுங்கோ நேற்று நடந்த சம்பவத்திலை அது உண்மையாமெண்டு.
எனக்கும் சரியான காச்சலெண்டும் சொல்லுங்கோக்கா....!
சொல்லீட்டு ஒருக்கா என்னண்டு சொல்லுங்கோ நான் நிக்கிறன்....
என் பதிலுக்குக் காத்திராது தன் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான்.



அவனது தொடர்பிலக்கத்தைக் குறித்த கடதாசியில் அவனது பெயரைப் பதிவாக்கியது பேனா. அவர்களின் இலட்சியம் சுமந்து பாதியில் ஒருவன் பயணம் முடியமுன்னரே பலியாகிவிட்டான். அவனது இழப்பில் அவனது அவர்கள் இடிந்து போவார்களா.......? இதயம் முட்ட சோகம் சுமந்து ஊமையாய் அழுவார்களா.....? இல்லை அவர்கள் கொண்ட கொள்கையில் இன்னும் வீச்சடைவார்கள்....! வீரமுடன் இன்னும் பலர் அவன்வழியில் எழுவார்கள்....


அவனின் அவர்களின் மனங்கள் துடிக்கும் அந்தச்செய்தியை அவர்களுக்குச் சொல்லிவிட்டு மீண்டும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அவன்தான் அவனின் குரல்தான்.


என்னவாமக்கா....?
உங்களைக் கவனமா இருக்கட்டாம்...!
கண்டபாட்டுக்கு வெளியளிலை திரிய வேண்டாமாம்.
கவனமா இருக்கட்டாமோ....?
சொல்லுங்கோ கவனமா இருக்கிறனாமெண்டு.



சிரித்துக் கொண்டு சொன்னான். அவனது அவர்களில் பலரது இறுதி ஊர்வலத்தில் கலந்து , அவர்களுடன் பழகிய நாட்களின் நினைவுகள் எத்தனையோ கடந்த நாட்களில் கரைந்துள்ளது. ஆனால் இத்தனை உறுதியாக , இத்தனை துணிவாக , என்காதுகள் இப்படியொரு செய்தியை இதுவரை கேட்டறியவில்லை. இதுவே முதல்தடவையாகக் கேட்கிறேன்.


அந்தப்பகல் என் நினைவையெல்லாம் அள்ளிக் கொண்டு போனது. அடிக்கடி அவன் குரல் என் செவிப்பறைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. எந்த வேலையையும் செய்யமுடியாது அவனது குரலும் , அவன் தந்த செய்தியும் என் சிந்தை முழுவதும் சிறகடித்துக் கொண்டிருந்தது.


முதல் நாளைய பொங்கலுக்கான வாழ்த்துக்கள் அன்றும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவனது செய்தியே என் மனசெங்கும் பரந்து கிடந்தது. அநாமதேயமாய் நேற்று சிங்கப்படைகளின் சன்னங்கள் துளைத்து அந்த நகரின் தெருவில் அணைந்து போன அவர்களது அவனுக்காக இதயம் அழுதது.


இடையில் சிலதடவைகள் செய்தி தரும் அவன் குரல் அக்கா என்றழைக்கும். ஏதாவது செய்தியோடு வரும். நாளடைவில் அவன் குரல் வருவதேயில்லை. ஆனால் என் நினைவையெல்லாம் ஆக்கிரமித்துப் போன அந்தக்குரல். அடிக்கடி என்னை அழவும் வைத்து விடும். இடையிடை அவன் நினைவில் பாதியில் தூக்கம் அறுந்துபோய் ஏதோ துயரின் கனவுகள் மனவெளியெங்கும் அலையும். அதிலிருந்து மீழ்வதற்கு அடுத்துச் சில வாரங்கள் கூட ஆகும். பின் அவனது அவர்களின் குரல்கள் வருகின்ற போது அமைதியாகும்.



அன்றொரு அதிகாலை அந்தப்பெரு நகரின் பெரிய மையமொன்று அவனது அவர்களால் அழித்தொழிக்கப்பட்டது. ஆனந்தத்தில் மனம் துள்ளிக் குதித்து ஆரவாரித்தது. உலகே அன்று வாய்பிழந்து பார்க்க அவர்கள் செய்த தியாகத்தில் சிங்கப்படையும் கலங்கிப்போனது. அந்தக்களத்தில் அவர்கள் தீயாகி , தியாகத்தின் இமயம் ஏறி காற்றாகி , குருதியில் குளித்துக் கிடந்தசிலரது முகங்களையும் , உடலங்களையும் உலக ஊடகங்களெல்லாம் தலைப்புச் செய்தியாக்கி அடிக்கடி அந்த ஒளிப்பதிவினை ஓடவிட்டுக் கொண்டிருந்தது.


அந்தப்பெரும் மையத்துள் புகுந்து சிங்கப்படைகளையும் ,அவர்கள் அள்ளிக் கொட்டிய குண்டுகளின் ஆணவத்திற்கு அடிகொடுத்து அடங்கிப்போன மூச்சுகளின் முகங்களை இணையங்களும் பதிந்திருந்தது. அவர்களின் முகங்களுக்குள் அவனின் நினைவுகள் ஆன்மாவைப் பிடுங்கியெடுத்துக் கொண்டிருந்தது.


ஏதோ உடன்பிறந்தவர்களை , ஊரில் தெரிந்தவரை , உறவாயிருந்தவர்களை இழந்து போனதான உணர்வில் உயிர் வலித்தது. அந்த மானமறவர்களை ஈன்றவரின் , உடன்பிறந்தவரின் , அவர்களை வீரத்தின் வேர்களாய் ஆக்கி உலகே வாய்பிழக்குமளவிற்கு உயர்த்தி விட்ட உயர்ந்தவர்களுக்கு எத்தனை துயரைக் கொடுக்கும் அவர்கள் நினைவு...! அதேபோல் என் ஆன்மாவும் அவர்களை அடிக்கடி நினைவில் ஆழ்த்தி நெஞ்சு கலங்கியது.


அவன் குரல் இப்போ வருவதேயில்லை. வருடம் ஒன்றும் முடிந்து போனது. அவர்களின் தியாகங்களின் பெறுமதி எல்லோரும் ஊர் காணும் அமைதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஊர் போயிருந்தேன். அவனின் அவர்களுடன் கதைத்து , சிரித்து அவர்களுக்குள் அவனது குரலைத் தேடியது என் ஆன்மா. யாருக்குள்ளும் அந்தக் குரல் இருக்கவில்லை. அவர்கள் நினைவுகளோடு வந்தாயிற்று.


பொங்கல் , வருடம் , தீபாவழி , பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் , நலம் விசாரித்து அவர்கள் எழுதுகின்ற கடிதங்கள் எல்லாம் வருகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளைத் தருகின்ற அந்த எழுத்துக்கள் இதய அறைகளிலும் , எனது நாளேட்டிலும் பத்திரமாயிருக்கின்றன. அவனது குரலும் அவனும் அமைதியாயே..... வந்து போகிறது பொங்கல் தினம். அவனது குரல் இப்போதும் என் இதயத்தில்க் கேட்கிறது. அவன் எங்கிருப்பான்...?


அன்பான நண்பா....,
எங்கிருக்கிறாய் நீ...!
கல்லறையிலிருக்கிறாயா......?
அல்லது யாரும் காணாமல் வெடித்தாயா......?
ஊர்; சொல்லாமல் ,
உறவுகள் தெரியாமல்
உறங்கிடுவோர் வரிசையில் நீயும்
அமைதியாய் துயில்கிறாயா.....?
எங்கிருக்கிறாய் நீ.....?
உனது குரல், உனது சிரிப்பு ,
உனது துணிந்த பேச்சு ,
உனது நினைவுகள் எல்லாமே நினைவிருக்கிறது.
நீ எங்கிருக்கிறாய்....?



* 19.03.03 
 சாந்தி நேசக்கரம்