Thursday, June 6, 2013

மரணம் கொன்ற மாவீரர்களின் அப்பா.


அப்பாவை அன்புச்சோலை முதியோர் இல்லத்தில் சமாதான காலத்தில் சந்தித்தேன். மகள் என்று சொல்லி தனது இருப்பிடம் பிள்ளைகளின் படங்களையெல்லாம் காட்டினார். எனது பிள்ளைகளை தன்னோடு கூட்டிச்சென்று தனது உணவிலிருந்து பங்கு கொடுத்தார். அன்புச்சோலையில் இருந்த பல அப்பாக்கள் அம்மாக்களில் அந்த அப்பாவும் ஒருவர். தலைவரிடம் கவுரவம் பெற்ற படமொன்றை தன்னோடு வைத்திருந்தார்.

அன்புச்சோலைக்கு பொறுப்பாயிருந்த டிஸ்கோ அண்ணா அங்கிருந்த பலரது சோகக்கதைகளை கதைகதையாகச் சொன்னார். அன்புச்சோலையை விட்டு வெளியேறும் போது பலரது பாசத்தையும் சுமந்து கொண்டே திரும்பினேன்.

யுத்தம் முடிந்து அனாதைகளான பலரைத் தேடியது போல அன்புச்சோலையின் அம்மாக்களை அப்பாக்களையும் தேடினேன். வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் பலர் இருப்பதாகச் சொன்னார்கள். சிலருக்கு இயன்ற உதவிகளைச் செய்ததோடு போய்விட்டது.

20.04.2013 அன்று ஒரு போராளி அப்பாவைப் பற்றிச் சொன்னான். அவரது 3வது மகளை அவன் திருமணம் செய்துள்ளதாகவும் அப்பா உணவுக்கே வசதியில்லாமல் இருப்பதாகவும் சொன்னான். அப்பாவைத் தேடி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது...., மகள் எனக்கு மருந்து வேணும் என்னாலை தாங்கேலாமல் இருக்கம்மா....! அப்பா அழுதார்.

ஏதாவதொரு உதவியை ஒழுங்கு செய்து தரலாமென்ற வாக்குறுதியை அப்பா நம்பினார். ஓம் மகள் ஓம் மகள் என சொன்ன எல்லா ஆறுதல் வார்த்தைகளையும் ஏற்றுக் கொண்டார். கதைத்துக் கொண்டிருந்த இடையில் அவரால் தொடர்ந்து கதைக்க முடியாமல் இருமல் இடையூறு செய்து அப்பா மகளிடம் தொலைபேசியைக் கொடுத்தார்.

அப்பாவின் மகளின் குடும்ப நிலமையை எழுதி உதவிகோரி முல்லைமண் வலைப்பூ , யாழ் இணையம் முகநூலிலும் போட்ட அடுத்த சில மணித்தியாலங்களில் யேர்மனியிலிருந்து தம்பி ஜீவா அப்பாவின் மகளின் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்த உடனடியாக 50ஆயிரம் ரூபாய்களை வழங்கி அந்த உதவி அடுத்த சிலநாட்களில் அவர்களுக்கும் சென்றடைந்தது.

அவுஸ்ரேலியாவிலிருந்து பிரகாஸ் என்ற உறவு தந்த உதவியை முதல் மாத தேவைக்கு அனுப்பிவிட்டேன். அடுத்த மாத தேவைக்கு யாரும் உதவ முன்வரவில்லை. வாழும் நாட்களில் ஒரு நேரம் கஞ்சியேனும் அப்பா குடிக்க வேண்டுமென்ற நினைப்பு தொடர்ந்து அலைத்தது. 27.05.2013 அன்று அப்பாவிற்கு உணவுத் தேவைக்காக சிறுதொகை அனுப்பிவிட்டு அப்பாவின் மருமகனுக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பினேன்.

அப்பாவின் மருமகன் 27.05.2013 இரவு ஐரோப்பிய நேரம் 7மணிக்கு அவசரமாக கதைக்க வேணுமென தகவல் அனுப்பியிருந்தார். ஸ்கைப் வந்த அவன் சொன்ன செய்தி. இலங்கை நேரம் இரவு 9மணிக்கு அப்பா இறந்துவிட்டாராம். மரணம் அப்பாவை விரைவில் எடுக்குமென்றது அறிந்திருந்தாலும் இப்படி திடீரென அது நிகழும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.
காலை அனுப்பப்பட்ட பணம் அன்றே அப்பாவின் மகளின் வங்கிக்கு போயிருந்தது. ஆனால் அந்தப் பணத்தில் ஒரு தண்ணீர் கூட வாங்கிக்குடிக்காமல் அப்பா போய்விட்டதை ஏற்றுக் கொண்டு ஆறுதல்பட முடியவில்லை.

இஞ்சை ஒரே அழுiகாயக்கிடக்குதக்கா....! இவள் சொன்னாலும் கேக்காமல் அழுது கொண்டிருக்கிறாளக்கா....! அவனது குரலும் மாறியது. ஒருக்கா குடுங்கோ கதைக்க....! அவன் கொடுத்ததும் அவள் பெருங்குரலெடுத்து அழுதாள்.

ஏன்ரையப்பா போட்டாரக்கா.....கடைசீல கூட பாக்கேலாத நிலமையில எங்களை ஆக்கீட்டாங்களக்கா....என்ரையப்பாக்கு உதவி கிடைக்குதெண்டு சந்தோசப்பட்டனானக்கா.... அதைக்கூட அனுபவிக்காமல் போட்டாரக்கா....!
அவள் சத்தமிட்டு அழுது கொண்டிருந்தாள்....அவளது குழந்தைகளும் அழத் தொடங்குகிறார்கள். அவளைத் தேற்றவோ ஆற்றவோ வார்த்தைகள் வரவில்லை. அழாதேயென்று சொல்லக்கூட நாவு எழவில்லை.

நான் அக்காவோடை கதைச்சிட்டு பிறகு உங்களோடை கதைக்கிறன் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தேன். அப்பாவை மரணம் வரையும் காப்பாற்றிய அக்காவின் இலக்கத்தை அழைத்தேன். பெயரைக் கேட்டதும் அவளும் பெருங்குரலெடுத்து அழுதாள்.

எத்தினை துன்பத்தையக்கா தாங்கிறது....? நேற்றைக்கு மூத்தவன் பள்ளிக்கூடத்தில பந்தடியில கை முறிஞ்சு வர ரெண்டாவது கூரைத் தகரத்தை காத்து இழுக்குதெண்டு பிள்ளை மேலையேறி தகரத்தை சரியாக்கீட்டு இறங்கேக்க பிள்ளை தவறி விழுந்து அவனும் முறிஞ்சு போனான்.
 மாஞ்சோலைக்குத் தான் கொண்டு போனனான் அங்கை ஏலாதெண்டு வவுனியாவுக்கு அனுப்ப வேணுமெண்டினம் அப்பாவை விட்டிட்டுப் போகேலாமல் பிள்ளையளை தெரிஞ்ச ஒராளைப் பிடிச்சு வவுனியாவுக்கு ஏத்திவிட்டிட்டு வீட்டை வந்தனானக்கா....என்ரையப்பா தனியவெண்டு ஓடியந்தனானக்கா.....

வீடு திரும்பியவள் படுக்கையிலிருந்த அப்பாவிடம் தான் போனாள். பிள்ளைகளின் நிலமையைச் சொல்லி அழுதாள்.  என்னாலை உனக்குத்தான் மேன கரைச்சல்....நான் நாளைக்கு போய்ச் சேந்திடுவன்....நீ யோசிச்சு கவலைப்படாமல் பிள்ளையளைப் பார் மேன....! மறுநாள் தான் இறந்து விடுவேனெனவே அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.

எவ்வளவோ கரைச்சல்பட்டு அவள் காப்பாற்றிய அப்பாவை அவளால் இழக்க முடியாதிருந்தது. ஒரே அபசகுனம் போல பிள்ளைகள் முறிந்து சத்திர சிகிச்சையில் தாயுமின்றி உறவு ஒருவரோடு வவுனியாவில்....இங்கோ மரணத்தை அழைத்தபடி அப்பா.....! இரவு முழுவதும் அவளுக்கு ஒரு கண் உறக்கமில்லை. அப்பாவும் பிள்ளைகளுமே மாறி மாறி மனம் அமைதியிழந்தது.

27.05.2013 காலை விடிந்ததும் அன்று அப்பா இயலாத தனது நிலமையையும் மீறி எழுந்தார். அன்று அப்பாவின் வாழ்வோடு இணைந்து அவரது சுக துக்கங்களில் எல்லாம் துணையிருந்த அவரது மனைவியின் நினைவுநாள். மனைவியின் நினைவு நாளில் மகளுக்கு துன்பம் குடுக்காமல் போய்விடப் போகிறேன் என அடிக்கடி சொல்லிக் கொண்டார்.

நீ அழாத மேன நான் போப்போறன் அம்மாவும் , கொண்ணன்மாரும் தான் கூப்பிடுகினம்.....! பிள்ளையளை கவனமாப் பார் , அவள் தங்கைச்சிக்குச் சொல்லு என்னை நினைச்சு அழாமல் இருக்கச் சொல்லி....! தனது மரணத்தை தானே அறிந்து வைத்திருந்தது போல அப்பா அன்று முழுவதும் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.....!

மதியத்துக்குப் பின்னர் அப்பா கட்டிலை விட்டு அசையவேயில்லை. கண்ணால் கண்ணீர் மட்டுமே வழிந்து கொண்டிருந்தது. அசைக்க முடியாத தனது கைகளால் மகளின் தலையைத் தடவிவிட்டார். தண்ணீரையும் மறுத்தார். மாலைநேரத்திற்குப் பின்னர் அப்பாவின் பேச்சு மெல்ல மெல்ல அடங்கிக்கொண்டு போனது. அயலை அழைத்து அவள் அழுதாள்.
மருத்துவமனைக்கு எடுத்துப்போகலாமென அயலாரிடம் உதவி கேட்டாள்.

பிள்ளை இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் நீ அலைஞ்சு பிரியோசனமில்லை......ஊரவர் ஒருவர் சொன்னார். மரணம் அப்பாவின் தலைமாட்டில் வந்து நிற்க அவள் அப்பாவைக் காக்க கண்ணீரால் கடவுளர்களையெல்லாம் வேண்டினாள். கடவுளரும் கைவிட்டு அப்பாவை தங்களடிக்கு அழைத்து போய்க்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்கு அப்பாவின் மூச்சு , பேச்சு யாவும் அடங்கி அப்பா நிரந்தரமாகவே தான் வாழ்ந்த நிலத்தைவிட்டு மறைந்து போனார்.

நான் எதிர்பாக்கேல்லயக்கா....இப்பிடி கெதியில போயிடுவரெண்டு....! முந்தநாள் மூத்தண்ணான்ரை நினைவுநாள் இண்டைக்கு அம்மான்ரை நினைவுநாள்....அப்பாவும் போயிட்டாரக்கா.....!

அவளுக்கு ஆறுதல் சொல்லி அவள் அதையெல்லாம் கேட்கும் நிலமையில் இல்லாமல் புலம்பிக் கொண்டிருந்தாள். நான் நாளைக்கு எடுக்கிறன்..., சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.

கடைசியாக ஒருமுறை அந்தக் குரலைக் கேட்டிருக்கலாம் போலிருந்தது. எனது அப்பா 2008இல் இறந்த போது வடித்த கண்ணீரைவிடவும் துரத்தை விடவும்  இந்த அப்பாவின் மரணம் மேலான துயரைத் தந்தது. எனது அப்பா எல்லா வசதிகளோடும் மரணத்துக்கு முதல் வினாடி வரையும் இருந்தார். பிள்ளைகள் யாருமில்லையென்ற குறையைத் தவிர அப்பா வாழ்வை நன்றாக வாழ்ந்து முடித்திருந்தார்.

இந்த அப்பாவோ தனது ஆண்பிள்ளைகளை மண்ணுக்கு மாவீரர்களாய் தந்துவிட்டு மரணத்தின் கடைசி வினாடி வரையும் வலியோடும் வாய் ருசிக்க ஆசைகள் இருந்தும் எதையும் ஆனுபவிக்க பணமின்றி அந்தரித்தே போய்ச் சேர்ந்தார். மகள் மகள் என்றழைத்த அந்தக் குரல் மீளாத் தொலைவாகிக் கொண்டிருந்தது.

ஸ்கைப்பில் வந்த ஒரு நண்பன் 25.05.1999அன்று கடலில் காவியம் படைத்து வீரச்சாவையணைத்த அப்பாவின் மூத்த மகனின் நினைவுநாள் இணைப்பைத் தந்தான். அந்த மாவீரன் பற்றி அவன் சொல்லிக் கொண்டு போனான்....!

ஒரு லெப்.கேணல் தாயகத்துக்காக தனது உயிரை கடலில் கரைத்துப் போனான்.....அந்த வீர மகனின் அப்பா வறுமையோடு இறந்து போனார் என்ற கதையை அவனுக்குச் சொன்ன போது அதிர்ச்சியால் அவனிடமிருந்து பேச்சு எதுவும் வரவில்லை.

சற்று நேரம் கழித்துச் சொன்னான். எங்கடை நிலமையும் ஒண்டும் செய்யக்கூடியமாதிரியில்லை என்ன செய்யிறது.....!  நினைக்காத போதில் ஸ்கைப்பில் வந்த நண்பன் அப்பாவின் மூத்த லெப்.கேணல் மகனின் நினைவுநாள் இணைப்பைத் தந்து மேலுமொரு துயரைத் தந்து போனான்.....!

எதிர்பாரத நிகழ்வுகள் எதிர்பாராத நேரங்களில் நிகழ்வது உண்மையென்பதை ஒரு மரணமும் ஒரு நினைவுநாளும் சம நேரத்தில் துயர் தரும் வலியின் பாரம் கண்ணீராகிக் கொண்டிருந்தது...!
28.05.2013


Sunday, May 26, 2013

மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....!

எதிர்பாராத நிகழ்வுகளாய்
வந்தடைகிற நட்புகளும் உறவுகளும்
உன்னவர்களாகவே
வருகிறார்கள்....!

நீண்ட வருடங்களைக் கரைத்திருக்கிற
காலக்கதவுகளை உடைத்தபடி
கனவுகளோடு இலட்சியம் சுமந்து
உன் தோழர்கள் மீண்டும் வருகிறார்கள்....!

உன்பற்றியும் உனது வீரமரணம் பற்றியும்
நேரமெடுத்துப் பேசுகிறார்கள்
நினைவழியா உன் வாழ்வை
நேசிக்கிறவர்களாய்....!

நினைவிலிருந்து
கழற்றியெறியப்பட்ட தடங்களை
மீளவும் புதுப்பித்துச் செல்கிறார்கள்
மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....!

வரலாறுகள் என்றுமே
வெற்றிடமாய் ஆவதில்லை
நீ வழிகாட்டிய பாதைவழி
அவை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

அன்பின் சின்னமாக.....!
காலம் உனக்காய் மீண்டும்
வாழச்சொல்கிற வரத்தைத்
தந்துவிட்டுச் செல்கிறது.

மாவீரம் மண்ணுக்கேயான வீ(ஈ)ரம்
அது உனக்கான நன்றியாக
மறக்காது உன் கனவு அதற்காய்
மரிக்கும் வரையும் தொடர்வேன் உந்தன் பணி.

10.05.2013

Sunday, May 19, 2013

மேமாத நினைவும் இருகண்களை இழந்த போராளியின் கதையும்.

தாயகத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலம் அது. 08.06.2003 மகளின் 5வது பிறந்தநாள். அந்தமுறைப் பிறந்தநாள் செஞ்சோலையில் காலையும் , மாலை காந்தரூபன் அறிவுச்சோலையிலும் , மதியம் நவம் அறிவுக்கூடத்தில் பல்துறை அறிவுசார் கற்கை நெறிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஊனமுற்ற போராளிகளோடும் அன்றைய பொழுதை செலவிடுவதென முடிவாகி காலை 8மணிக்கு வள்ளிபுனம் செஞ்சோலைக்குச் சென்று மதியம் 12மணிக்கு விசுவமடுவில் அமைந்துள்ள நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்றோம்.

ஏற்கனவே இருமுறை நவம் அறிவுக்கூடம் போயிருந்ததில் ஏற்பட்ட அறிமுகம் பல பாடகர்கள் , இசைக்கலைஞர்கள் , கவிஞர்கள் , எழுத்தாளர்களென பலர் அறிமுகமாகியிருந்தனர். பிள்ளைகளை மாமா , அன்ரி , அக்கா , அண்ணாவென ஆளாளுக்கு கூட்டிக் கொண்டு போனார்கள்.

நவம் அறிவுக்கூடத்தின் வளவுக்குள் போவோர் சந்திப்பிடமாக அமைந்த விருந்தினர் வரவேற்பிடத்துக்கு நேராக லெப்.கேணல்.நவம் அவர்களின் பெரிய படமும் நினைவிடமும் அமைந்திருந்தது. ஒரு பக்கம் கணணிப்பிரிவும் , அடுத்த பக்கம் அமைந்திருந்த கூடம் இசைக்கருவிகள் வைக்கப்பட்டு இசைப்பயிற்சி செய்வதற்கான ஒழுங்கமைப்பில் இசைக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது.

இசைக்கருவிகளின் இசையும் பாடலும் காற்றோடு கலந்து அந்த ஆனிமாத மதியம் இசைகருவிகளோடும் பாடலோடும் கலந்திருந்தது. பாட்டென்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது போல.

அக்கா போய்ப்பாப்பமே ? கேட்டான் மருது. விரும்பினா பாக்கலாமக்கா பிள்ளையள் பாட்டு பயிற்சியெடுக்கினம் என்றாள் ஒரு போராளி.

அக்கோய்....! என்றபடி புகழேந்தி வந்திருந்தான். எப்பிடியக்கா இருக்கிறியள் ? நான் நினைக்கேல்ல நீங்க திரும்பியும் வருவீங்களெண்டு ? நேற்று அண்ணை சொன்னவர் இண்டைக்கு வருவியளெண்டு.....! மீண்டும் சந்தித்ததில் அவனடைந்த சந்தோசத்தை அவனது வார்த்தைகள் வெளிப்படுத்தின.

கடந்த முறை சந்தித்த போது புகழேந்தி தனது கிளிநொச்சி களமுனை அனுபவம் பற்றியும் ஓயாத அலைகள் 3இல் ஆனையிறவு பகுதியில் தனது அனுபவங்கள் பற்றியும் நிறையச் சொல்லியிருந்தான். அவனது குரலில் அவனது கிளிநொச்சி கள அனுபவத்தை அவனுக்குத் தெரியாமல் ஒலிப்பதிவு செய்ததை அவனிடமிருந்து விடைபெற்ற போது சொன்னேன். என்ரை குரலை என்னக்கா செய்யப்போறியள் ? எனச் சிரித்தான்.

புகழேந்தி நல்ல சண்டைக்காரன். கதைகளில் வாசித்த களமுனைக்கதைகளை புகழேந்தியின் வாயால் கேட்கிற போது அந்தக்களத்தில் நிற்பது போலவே இருக்கும். அவன் வைத்திருந்த ஆயுதங்களுடன் அவன் எப்படி சண்டையிட்;டிருப்பானோ அதேபோல ஆயுதங்கள் பற்றிய கையாள்கை முதல் சகலத்தையும் விபரிப்பான்.

ஓயாத அலைகள்3 ஆனையிறவை மீட்ட களத்தில் புகழேந்தியும் களத்தில் நின்றான். ஒரு கட்டத்தில் நிலமை இறுக்கமடைந்து அவன் தனது ஆயுதத்துடன் கீழே விழுந்துவிட்டான். போராளிகளின் உக்கிரமான தாக்குதலில் படையினர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

தனது ஆயுதத்தை பாதுகாக்கும் நோக்கில் குப்புற விழுந்து தனது ஆயுதத்தை உடலால் மறைத்துக் கொண்டு படுத்திருந்தான். ஓடிக்கொண்டிருந்த படையினர் அவனுக்கு மேலால் மிதித்துக் கொண்டு ஓடினர். ஏற்கனவே தலையில் காயமடைந்து பாதிப்புற்றவன் மீதேறி ஓடியவர்களின் மிதிப்பில் அவன் உடல் பட்ட ரணங்களை அவன் சொல்லிக் கொண்டிருந்த போது உயிரைப் பிடுங்குமாப்போலிருந்தது.

ஒரு சிறந்த சண்டைக்காரன் தனது தாயகத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராளி அவனுக்குள்ளும் ஈரமுள்ள இதயமொன்று இயங்கிக் கொண்டிருப்பதை கடைசி இரு மணித்தியாலங்களும் பகிர்ந்து கொண்டான்.

ஏழை அம்மாவிற்காகவும் சகோதரங்களுக்காகவும் துயரடைந்தான். அவனது துயரின் ஈரம் இப்போதும் நினைவில் வரும் நேரமெல்லாம் நெஞ்சு வலிக்கும்.
அன்றைய நாள் பலருடன் பேசி பலருடன் உறவாகி பலரது நினைவைச் சுமந்து வந்த போதும் புகழேந்தி மறக்க முடியாத சிலருள் ஒருவனாய்....!

விடைபெறும் நேரம் „'அக்கா எனக்கொரு உதவி செய்வீங்களா ?' சொல்லுங்கோ ! என்றதும் தனது இருப்பிடத்திற்குப் போயிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் ஒரு நாட்குறிப்போடு திரும்பி வந்தான்.
நீலம் சிவப்பு கரையிடப்பட்ட ஒரு கடித உறையில் பலமடிப்புகள் கண்ட ஒரு கடிதத்தை வெளியே எடுத்தான். பலமுறை வாசித்து வாசித்து அந்தக் கடிதம் அவனுக்கு மனப்பாடமாகியிருந்தது. கொஞ்ச வருடங்கள் முதல் அந்தக்கடிதம் அவனுக்கு யேர்மனியிலிருந்து போயிருக்கிறது.

இதக்கா என்ரை தம்பியின்ரை கடிதம் கனவரியம் முதல் யேர்மனி போனவன். கொஞ்சநாள் கடிதம் போட்டவன் இப்ப 2வரியமா தொடர்பொண்டுமில்லை கடிதங்களும் வாறேல்ல....! ஒருக்கா இந்த விலாசத்தைக் கொண்டு போய் தேடிப்பாருங்கோ....அவனைக் கண்டீங்களெண்டா சொல்லுங்கோ அம்மாவைப் பாக்கச் சொல்லி அம்மாக்கு உதவி செய்யச் சொல்லி...! நானும் காயம்பட்டு ஏலாதெண்டு சொல்லுங்கோ.....!

தலையில் ஏற்பட்ட காயத்தின் தன்மை சிலவேளை அவன் கதைத்துக் கொண்டிருக்கும் போது மறந்துவிடும்....! பின்னர் அவன் விட்ட கதையைச் சொன்னால் தொடர்ந்து பேசுவான். தலையில காயம் பட்டனான்தானேயக்கா அதுதான் சிலவேளை இப்பிடி....! வெயில் பட்டா தாங்கேலாம இருக்குமக்கா....!
அவன் கேட்டதற்கிணங்க யேர்மனி வந்து அவன் தந்த விலாசத்துக்கு கடிதம் போட்ட போதும் எவ்வித பதிலும் வரவில்லை. தொலைபேசியிலக்கம் தேடி அது கிடைக்கவில்லை. அவன் தனது அம்மாவுக்கு உதவுவான் என நம்பியிருந்த தம்பியின் நிலமையை அறியவே முடியாது போனது.

அக்கா ! நான் கேட்ட விசயம் அறிஞ்சீங்களே ? ஒருவருடத்தின் பின்னர் நேரில் சந்திக்கும் வரையும் அவன் காத்திருந்திருக்கிறான். எந்தப்பதிலும் அந்த முகவரியிலிருந்து வரவில்லையென்றதை சொன்ன போது அவனது முகம் மாறிப்போனது.

அம்மான்ரை தொடர்பை தாங்கோவன் நான் ஏதாவது செய்யிறன் ? இல்லையக்கா பாப்பம்...என சமாளித்தான். அவன் விரும்பினால் இயக்கம் அவனது குடும்பத்தை கவனிக்கும் ஆனால் தனது குடும்ப நிலமையைச் சொல்லாமல் தனக்குள்ளே அழுது கொள்வான் போல.

000                000            000
அங்கே பாடல் பயிற்சியில் பாடிக்கொண்டிருந்தவர்களின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு பெரிய இசைக்கச்சேரியே நடந்து கொண்டிருந்தது.

அப்போது பாடிக்கொண்டிருந்த இருகண்களையும் இழந்த பெண் போராளியைப் பற்றியும் புகழேந்திதான் சொன்னான். அந்தப்பிள்ளையக்கா தீச்சுவாலைச் சண்டையில காயம்பட்டுத்தான் கண் ரெண்டும் தெரியாமப்போனது நல்ல கெட்டிக்காரி நல்லாப்பாடுவா கவிதை எழுதுவா எனச் சொன்னான்.

பாடல் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவனே அறிமுகப்படுத்தினான். அவளையும் அறிமுகப்படுத்தினான். அவள் எழுதிய கவிதைகளையும் கதைகளையும் எடுத்து வந்து தந்தாள். வாசிச்சிட்டு அனுப்பிவிடச் சொன்னாள். ஒரு சிறிய நேயர் விரும்பம் நிகழ்ச்சியையும் ஆளாளுக்கு செய்து முடித்தார்கள்.

அங்கேதான் இன்னொரு பாடகனும் அறிமுகமானான். அவன் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போராளி. ஒலிப்பதிவு செய்யப்படுவதற்காக ஒத்திகை பார்க்கப்பட்ட பாடலொன்றை அவன் பாடினான். அந்தப்பாட்டை ஒலிப்பதிவு செய்யுமாறும் கூறினான். இசையில்லாத அவனது குரலில் ஒலித்த „' நாட்காட்டி நாளெல்லாம் எம் வீரவரலாறு குறிகாட்டும் இலக்கெல்லாம் எம் ஈழம் தனிநாடு'' பாடல் இன்றுவரை அந்தத் தம்பியின் ஞாபகமாய்.....!

பதிவேறமுன்னர் பாடித்தந்த போராளியின் நினைவாக அவன் பாடிய பாடல் :-http://nesakkaram.org/ta/wp-content/uploads/thanaa.mp3

அங்கிருந்தவர்கள் எல்லோருமே ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் ஆனால் சிலர் மட்டும் நிரந்தரமாக மனசில் இடம்பிடித்துக் கொண்டார்கள். புகழேந்தி உட்பட சிலரது பெயர்களையும் அவர்களது கையெழுத்துக்கள் நினைவுவாசகங்களையும் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

பின்னர் 2004இல் ஐரோப்பாவிற்கு வருகை தந்திருந்த கலைக்கோன் மாஸ்ரரிடம் எல்லோரைப்பற்றியும் விசாரித்ததன் பின்னர் அவ்வப்போது வருகிற சில கடிதங்களில் நவம் அறிவுக்கூடத்துப் போராளிகள் பற்றியும் வரும்.

2009 யுத்தத்தின் இறுதி நாட்களில் உனமுற்றவர்ளெல்லாம் இறந்து போய்விட்டார்களென்ற கதைகள் வந்தது. நாட்கள் செல்லச் செல்ல நவம் அறிவுக்கூடம் , அருமை புலனாய்வுப்பள்ளி , மயுpரி இல்லங்களில் இருந்த பலர் உயிருடன் இருப்பதாய் செய்திகள் வந்து எங்கிருந்தோவெல்லாம் அழைப்புக்கள் வந்தது.

அக்கா அருமையில இருந்த....! அக்கா நான் நவம் அறிவுக்கூடத்தில இருந்த....! என வந்த குரல்களில் பலரது தொடர்புகள் மீளவந்தது. அப்போது வந்தவர்களிடமெல்லாம் புகழேந்தி பற்றி விசாரித்தேன். யாரும் தொடர்பில் அவனில்லையென்றார்கள்.

ஒருவன் சொன்னான். இறுதியுத்தத்தில் புகழேந்தியின் குழந்தை இறந்ததாக , குழந்தையின் இறப்பின் பின்  புகழேந்தி தற்கொலை செய்ததாக....! புகழேந்தி பற்றிய பல்வேறு கதைகள் புகழேந்தி உயிரோடில்லையென்று தான் வந்தது.
02.05.2013 அன்று தொலைபேசியில் ஒருத்தி அழைத்திருந்தாள். அக்கா நான் ம..... நவம் அறிவுக்கூடத்துக்கு நீங்க வந்த நேரம்....! அவள் தன்னை யாரென அடையாளப்படுத்தி முடிய முதல் தொடர்பறுந்தது. திரும்ப அழைத்தவள் சொன்னாள். அக்கா காசில்லை ஒருக்கா எடுங்கோ.

அன்று மாலை அவளை அழைத்த போது2009இன் பின்னர் அவள் படுகிற துன்பங்கள் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

கடைசீல எங்களை ஆமிதானக்கா உள்ளை கொண்டு போனது. நாங்கள் பட்ட கேவலத்தை இப்ப நினைச்சாலும் தாங்கேலாதக்கா.....! 2வருசம் தடுப்பிலயிருந்துதானக்கா வெளியில வந்தனான். 2011இல வீட்டை வந்தனான். ரெண்டு கண்ணும் தெரியாத என்னைக் கவனிக்க என்ரை வீட்டுக்காறராலை ஏலாதுதானேக்கா....!

மொத்தம் 6பெண்பிள்ளைகள் அவள் வீட்டில். அவள் வீட்டில் 5வது பிள்ளை. 4சகோதரிகளும் திருமணம் முடித்துவிட்டார்கள். கடைசித் தங்கை பிறப்பில் ஊனமடைந்தவள். அவளோடு கண்ணிரண்டையும் இழந்த இவளையும் பெற்றோரால் கவனிக்கக்கூடிய வசதியில்லை. தெரிந்தவர்களிடமெல்லாம் தங்கள் பெண்பிள்ளைகள் இருவரினதும் நிலமையைச் சொல்லி சின்னச் சின்ன உதவிகளைப் பெற்று 2நேர சோற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வெளிநாடுகளிலிருந்து உதவிகள் பலருக்கு கிடைப்பதாக அறிந்து பலரிடம் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றும் எந்தவித வழியும் கிடைக்கவில்லை. ஊரில் இயங்கிய நிறுவனங்களுக்கு வெண்கம்பைக் கொண்டு பெற்றோருடன் திரிந்தாள். அவளைப் நிழற்படமும் ஒளிப்படமும் எடுத்தார்கள் பலர்.

வாக்குறுதி கொடுத்துவிட்டுப் போனவர்கள் திரும்பி எந்த உதவியையும் கொண்டு வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. வயதான தந்தை கூலிக்கு போனால் மட்டுமே அந்த வீட்டில் அடுப்பெரியும் நிலமையில் குடும்ப வறுமை.

2011அவளைக் காதலித்தவன் தடுப்பு முகாமொன்றில் இருப்பதாக அவளுக்கு கடிதம் போட்டான். விரைவில் விடுதலையாகி வந்து விடுவதாயும் அவளைத் திருமணம் செய்வதாகவும் தகவல் அனுப்பியிருந்தான். கண்ணில்லாத அவளுக்குக் கண்ணாயிருப்பேனென சில வருடங்கள் முன்னர் சொல்லிக் கொண்டிருந்தவனின் தொடர்புகள் இல்லாது போய் அவன் உயிரோடிருப்பதாக வந்த செய்தி ஆறுதலைக் கொடுத்தது.

2012இல் விடுதலையானவன் பெற்றோரின் விருப்போடு அவளைத் திருமணம் செய்து கொண்டான். தன்னை வருத்தி கூலிவேலை செய்து கண்ணில்லாத அவளையும் காத்து தறப்பாள் ஒன்றில் வாழ்வை ஆரம்பித்தார்கள். வேலையின் கடினம் அவன் நோயுற்றான். பலமுறை காயங்களுக்கு உள்ளானதில் உடலெங்கும் இரும்புச் சிதறல்கள்.

திடீரென எழுந்திருக்க முடியாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தலையிலும் , முள்ளந்தண்டுப் பகுதியில் ஓரிடத்தில் பெரிய செல்துண்டொன்று உள்ளதாகவும் அந்தத் துண்டுகள் நகர்வதாகவும்; வலியேற்பட்டு இயங்க முடியாதுள்ளதாகவும் சொன்னார்கள்.

அந்த இரும்புத் துண்டுகளை வெளியில் எடுப்பது மிகவும் ஆபத்து எனவும் சொன்னார்கள். நிரந்தரமாக முள்ளந்தண்டு வடம் பாதிப்படையும் நிலமையே 90சதவிகிதம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. கடுமையான வேலைகள் செய்யக்கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

வாழ்க்கையின் ஆரம்பமே இடைஞ்சலாக வருமானமில்லாது போனது. அவர்களுக்கு இப்போதைய வருமானம் அரசாங்கம் மாதாந்தம் வழங்கும் பிச்சைச்சம்பளம் 150ரூபாய்தான். இருவருக்குமான பிச்சைச்சம்பளத்தை பெறுவதற்கு போய்வரும் போக்குவரத்தில் பாதி போய்விடும்.

பாதிநாள் அவனது வீட்டாருடனும் , பாதிநாள் அவளது பெற்றோரின் வீட்டிற்குமென அலைந்தார்கள். அன்றாடச் சாப்பாடு இரண்டு வீட்டிலிருந்தும் பங்கு பிரிக்கப்பட்டது. வீட்டில் கிடைக்கிறதை வைத்து அவர்களுக்கும் பங்கிட்டார்கள்.

ஊனமுற்றவர்களை இயக்கம் இருந்த போது பராமரித்த பராமரிப்பும் கவனிப்பும் மனசுக்குள் அடிக்கடி வந்து போகும் நேரமெல்லாம் ஆளையாள் சொல்லி அழுது ஆறுதற்படுவதைத் தவிர வேறெதையும் பெற முடியவில்லை.

மீண்டும் அவன் உடல் இயலாமல் போன போது மருத்துவமனையொன்றிற்கு போனார்கள். தலைமை மருத்துவரிடம் தங்கள் இயலாமையை அன்றாட வாழ்வுப் போராட்டத்தைச் சொன்னார்கள். தலைமை மருத்துவர் ஒரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்து அந்த இலக்கத்துக்கு உரிய பெயரைச் சொல்லி உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் இல்லது நான் தந்ததெண்டு சொல்லிக் கதையுங்கோ எனக் கொடுத்தார்.

கனநாள் உங்கடை நம்பர் தேடினான். ஆனா கிடைக்கேல்லயக்கா டொக்ரர் சொன்னோடனும் எவ்வளவக்கா சந்தோசப்பட்டனாங்கள் தெரியுமேக்கா ? அழுதாள். சாப்பாட்டுப் பாடே பெரிய பிரச்சனையாக் கிடக்குதக்கா....!

அரையேக்கர் காணிதானக்கா சொத்து அதிலயொரு தறப்பாள் போட்டிட்டு இருக்கிறமக்கா. ரொய்லெட் இல்லை கிணறில்லை வேறையாக்களின்ரை வளவுக்குத் தானக்கா போறனாங்கள். ரெண்டு பேற்றை குடும்பங்களும் வசதியில்லை. அவையளும் எல்லாத்தையும் இழந்திட்டு இருக்கினம் அவை தந்தாத் தானக்கா சாப்பாடு.

பெரிசா அதைத்தாங்கோ இதைத் தாங்கோண்டு உங்களைக் கேக்கேலாதக்கா.....! ரெண்டு கண்ணும் தெரியாமல் என்னாலை ஒரு வேலையும் செய்யேலாது அதோடை காலொண்டும் ஏலாது. மாதத்துக்கு ஒரு ஆறாயிரம் ஏழாயிரம் ரூபா ஒழுங்கு செய்து தந்தீங்களெண்டா பெரிய உதவியா இருக்குமக்கா. எங்கள் ரெண்டு பேருக்கும் சாப்பாட்டை சமாளிக்க காணுமக்கா.

000                    000                        000

புகழேந்தியின்ரை தொடர்பிருக்கோ ? கேட்ட போது சொன்னாள். அவர் கடைசிநேரம் இல்லையக்கா....! புகழேந்தி பற்றி கடைசி உறுதிப்படுத்தலாக அவளும் புகழேந்தி உயிரோடில்லையென்பதை உறுதிப்படுத்திச் சொன்னாள்.
ஞாபகத்தில் புகழேந்தியின் கடைசிக் கதைகளும் சிரிப்பும் கண்ணுக்குள் வந்து போனது....! அவள் புகழேந்தி பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் கையோடு கொண்டு திரிந்த நீல உறை போட்ட நாட்குறிப்பையும் காவிக்கொண்டு தாண்டித் தாண்டி நடந்து வருவது போலிருந்தது.....!

கிழக்குமாகணத்தைச் சேர்ந்த புகழேந்தியின் நண்பன் எனக்கு கடைசியாக நாட்காட்டி பாடலைப் பாடிப் பதிவு செய்து தந்த போராளிப்பாடகனை விசாரித்தேன். நீங்கள் ஒருத்தரையும் மறக்கேல்ல என்னக்கா....! என்றாள். எங்கையிருக்கினமெண்டு தெரியேல்லயக்கா....! தொடர்பு கிடைச்சா தாங்கோ என்றேன். ஓமக்கா....! என்றாள்.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் முடிகிற இந்த நாட்களில் யுத்த உச்சத்தின் இழப்புகள் பலரது நினைவுகள் அவர்களது கடைசிக் கடிதங்கள் , கவிதைகள் , பாடல்கள்......என பலரது ஞாபகங்களைத் தந்து மனசை அலைக்கிறது இந்த மேமாத நாட்கள்....!

18.05.2013

(கண்கள் இரண்டையும் இழந்த பெண்போராளிக்கு தண்ணீர்; வசதிக்கு ஒரு கிணறு தேவை. கிணற்றிக்கு ஒரு லட்ச ரூபாய் தேவை. மலசலகூடம் ஒன்றுக்கு அறுபத்தைந்தாயிரம் ரூபாய் தேவை. இவ்விரண்டும் இல்லாமல் கண்ணிரண்டையும் இழந்த இந்தப் பெண்ணால் தொடர்ந்து அலைந்து திரிய முடியாத துயர நிலமையைப் புரிந்து உதவக்கூடியவர்கள் இவ்வுதவியைச் செய்து கொடுங்கள்)
இவர்களுக்கு கிணறு மலசலகூடம் அமைக்க தேவையான உதவி – 165000.00ரூபா(அண்ணளவாக 1025€)



Tuesday, April 23, 2013

அன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி


அவன் ஒரு கரும்புலி. ஒரு காலம் அவனின் தேவையும் சேவையும் தேவையாக இருந்தது. 15வயதில் இயக்கத்திற்குப் போனபோது இப்படியொரு கரும்புலிக் கனவை அவன் கண்டதேயில்லை. ஆனால் காலம் அவனை ஒரு புலனாய்வுப் போராளியாக்கியது புலனாய்வின் தொடர் எதிரியின் கோட்டைக்குள் பணியமைந்து தானாகவே கரும்புலிக்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டு பிறந்த கிளிநொச்சியை விட்டு சமாதான காலத்தில் வெளியேறினான். குடும்பத்தில் தம்பியும் அக்காவும் போராளிகளானார்கள்.

எல்லாக் கரும்புலிகள் போல அவனும் குடும்பம் , உறவு என்ற வட்டத்தைத் தாண்டி தாயகக்கனவோடு சாவினைத் தழுவ அவன் தனக்கான சந்தர்ப்பத்தை தேர்ந்து வெளிக்கிட்ட போது இலட்சியக்கனவை நிறைவேற்றி தன்னினம் வாழ வேண்டுமென்றதை மட்டுமே நினைத்திருந்தான்.

போகும்போது அவன் சொத்தென்று கொண்டுபோனது சில உடுப்புக்கள் மட்டுமே. முற்றிலும் மாறுபட்ட கொழும்பைக் கற்று முடிக்கச் சிலமாதங்கள் எடுத்தது. கடையொன்றில் பகல்நேர வேலையாளாகவும் , அதிகாலையில் இராணுவ மையமொன்றிலும் பணியாளனாக மாறினான்.

நாடு லட்சங்களை இந்த லட்சிய வீரர்களுக்காகக் கொடுக்கத் தயாராக இருந்த போதும் தங்கள் உழைப்பிலே தங்கள் செலவையும் தங்கள் தேவையை கவனித்து சரித்திரங்களான பல வேர்கள் போலவே இவனும் பணியில் இணைந்தான்.

இலக்கின் எல்லையைத் தேடியே விழிகள் எப்போதும் புலனாயும். அணியும் சேட்டில் மறைக்கப்பட்ட சயனைட் மட்டுமே அவனுக்கான பாதுகாப்பு. ஆள ஊடுருவி வன்னியை நிலை குலைக்கும் கனவோடு காரியத்தில் இறங்கி வன்னிக்குள் அச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான் எதிரி. 

ஏதிரியின் பகுதிக்குள் ஊடுருவி அவர்களது கோட்டைக்குள்ளிருந்து இழப்பைக் கொடுத்து ஈழ விடியலை நோக்கிய வீச்சுக்கு வெளிச்சமாகும் கனவோடு கரைந்த வெளியில் வராத எரிமலைகள் போலவே அவனும் கனவோடலைந்தான். கொழும்பின் இயல்புக்கு ஏற்ப அவனும் மாறி இலக்கையடையும் நாளொன்றில் விடியலுக்குத் தயாராகினான்.

அன்றோடு அவன் ஒரு பெயரற்ற கல்லறைக்கும் அவனைப் புரிந்தவர்களின் இதயத்தில் மட்டும் அடையாளம் காணப்படுபவனாக மாறிவிடும் வேகத்தில் ஒருநாள் விடியற்காலை தயாராகினான். அவனது தயார்நிலையை முந்திக் கொண்டு விதியாய் வந்தது எதிரியின் புலனாய்வு. அதிகாலை தட்டப்பட்ட கதவு அவனது கட்டுப்பாட்டை மீறி உடைக்கப்பட்டு உள்நுளைந்தவர்களால் கைது செய்யப்பட்டான். உறங்காத அந்த விழிகள் உள்புகுந்தவர்களால் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டான்.

யாருமறியாத இருட்டறைகளில் வதையிடங்களில் சிறையிடப்பட்டு தொடர் சித்திரவதைகள் உறுதியோடு தயாராயிருந்த கரும்புலியின் இறுதி நாட்களையே அறிய விடாது நாட்கணக்கில் நினைவிழந்து போயிருந்தான். ஆள்மாறி ஆள்மாறி விசாரணையென்ற பெயரால் உயிரறும் உச்ச வதைகள் எல்லாவற்றையும் தாங்கினான். விடுதலையின் வெளிச்சம் புலருமொரு நாளில் அவன் வீழ்ந்தானென்ற சொல்லோடு போய்விடவே காத்திருந்தான்.

2வருடங்கள் அடையாளம் சொல்லப்படாத இடங்களில் வைத்து வதைக்கப்பட்டான். அனுப்பியவர்களும் தொடர்பு கொள்ளவோ தேடிப்பார்க்கவோ அவகாசமின்றி களநிலமை நிலையிழந்து கொண்டிருந்தது.

2009 எல்லாம் முடிந்து ஆயிரக்கணக்கில் போராளிகள் சரணடைந்தார்கள் என்ற செய்தியை அவனும் கேள்விப்பட்டான். கிளிநொச்சியில் வாழ்ந்த குடும்பத்தைப் பற்றிய கவலை அவர்கள் யாராவது மிஞ்சியிருப்பார்களாக அல்லது இறந்து போனார்களா என்ற தகவலும் தெரியாது.

அவன் அடைபட்டிருந்த இடத்திற்கு சரணடைந்த பலரும் கொண்டு வரப்பட்டார்கள். ஏன் ? எப்படி ? காவலாளிகளின் கண்காணிப்புகளையும் தாண்டி சங்கேத மொழியால் கேட்டுக் கொள்வான். என்ன வதையானாலும் அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் சிறைவாசத்தை சாதாரணமாக ஏற்றுக் கொண்ட பலரது நெஞ்சில் வீழ்ந்த இடியாக மாறிய நிலமையால் ஏற்பட்ட ஏமாற்றம் அவனுக்கும்.

000          000             000

2010இல் அவன் நிரந்தரமாக சிறைக்கம்பிகளின் பின்னால் அடைக்கப்பட்டான். இப்போது முன்பு போல அடிக்கடி வந்து வந்து ஆளாளுக்கு அடியுதையில்லை. ஆனால் ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசிகள் , போத்தல்கள் உடலில் ஏற்பட்ட தாக்கங்கள் அவனால் இயங்க முடியாத நிலமைக்கு ஆளாக்கியது. சிறைச்சாலையின் உணவு மட்டுமே. அது தவிர சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தரப்படும் சில மருந்துகள். அதுவும் ஏனோ தானோ என சாட்டுக்கு வழங்கப்படும்.

இறுதியுத்தத்தில் இருந்து வந்தவர்களைப் பார்க்க உறவுகள் வருவார்கள். நெருங்கிய கம்பிக்கட்டுக்கு மறுமுனையில் நின்று சில நிமிடங்கள் தங்கள் உறவுகளைப் பார்த்துவிட்டு கண்ணீரோடு பிரிந்து போய்விடுவார்கள். அப்படி வந்தவர்கள் மூலம் கூடவிருந்தவர்களின் உதவியில் தனது குடும்பத்தைத் தேடினான்.

வலைஞர் மடத்தில் இடம்பெயர்ந்து இருந்த போது விழுந்த எறிகணையில் குடும்பமாக காயமுற்று தங்கை காலிழந்து , மைச்சினனும் காயமுற்று ,மருமக்களும் காயங்களோடு உயிர் தப்பி அப்பா நோயாளியாகி அவன் எங்கோ வெடித்து காவியமாகிவிட்டதாக நம்பிய அம்மா மனநலம் பாதிப்புற்று தம்பி வீரச்சாவடைந்து போனதாகவும்; செய்தி வந்தது.

கடைசிவரை வன்னியில் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்தின் இழப்பு போல அவனும் தனது குடும்பத்திலிருந்து இழந்தது திரும்ப ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவனைப் பார்க்கவோ அல்லது அவன் எப்படியிருக்கிறான் என்பதனை அறியவோ அவனது குடும்பத்திலிருந்து ஒருவரும் சிறைக்குச் செல்வதில்லை.

குடும்பத்தின் மொத்த பொருளாதாரமும் சிதைந்து இன்றைய அவர்களது வாழ்வு அன்றாடமே அவதியாக. அவனைப் பார்க்க ஒருமுறை பயணிக்க தேவைப்படும் பெரும் தொகை பணமற்று மிகவும் அடிநிலைக்குப் போய்விட்டார்கள். அடிப்படைத் தேவைகளைக் கூட அவனுக்கு அனுப்பவோ அல்லது யாரிடமேனும் கொடுத்துவிடவோ அந்தக் குடும்பத்திடம் வசதியில்லை. கூடவிருப்போர் தங்களால் இயன்றதை கொடுத்தாலே தவிர வேறெதுவும் இல்லை.

இறுதியாக 2006 இல் பார்த்த அவன் இப்போது தனது வயதையும் மீறிய தோற்றமும் கண்டறியப்படாத நோயாய் சொல்லப்பட்ட நோய் புற்றுநோயென மருத்துவர்களின் அறிக்கைகள் சொல்கிறது. உடலை வருத்தும் நோயின் வலியும் துயரமும் அவனது குடும்பத்தால் அறிய முடியாத கதைகள்.

தனது ஆடைகளைத் துவைக்கவோ தண்ணீர் அள்ளவோ களைத்துச் சோருகிற உடல் சோர்வும் வலியும் இன்று படுக்கைக்குப் போனால் நாளை எழுவானோ என்றதே தெரியாத வாழ்வு. சுமத்தப்பட்ட வழக்கு எவ்வித முடிவுமின்றி அதுவும் காலம் நீட்டப்பட்டு முடிவற்ற தொடராய்.....!


சிலவேளைகளில் நல்ல உணவைச் சாப்பிட வேணும் போலிருக்கும் சிலநாட்களில் குடும்பத்தினருடன் பேச வேணும் போலிருக்கும் எதற்குமே பணமிருந்தால் மட்டுமே முடியும். அவனிடம் பணமுமில்லை சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற பணம் கொடுக்கவும் யாருமில்லை.

அவனது குடும்பத்து வறுமை அவனையும் கிட்டத்தட்ட மறந்த நிலமையே இப்போது. 8வருடங்கள் முதல் பார்த்த அம்மாவை ,அப்பாவை , தங்கையை , மருமக்களையெல்லாம் பார்க்க வேண்டும் போல சிலவேளைகளில் மனசு துடிக்கும் ஆனால் யாருக்கும் தெரியாமல் தனது ஆசைகளை மறைத்து தனித்து அழுதுவிட்டு மற்றவர்கள் முன்னால் சிரிக்கிற வல்லமையைக் கற்றுக் கொண்டுவிட்டான்.

ஒரு காலத்தின் கரும்புலி , பெரு வெற்றியின் ஏணி , 15வயதில் தேசக்கனவோடு போய் இன்று 37வயது மனிதன். தனது சாவின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். மரணம் எத்தனை விரைவாய் அழைக்குமே அத்தனை விரைவாய் அழைத்துக் கொண்டு போனாலே போதுமென்ற மனநிலையில் நீண்ட சிறைவாழ்க்கை வெறுப்பைத் தருகிறது.

ஆனாலும் நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளை அனுபவிக்க வேண்டும் போலவும் ஆசைப்பட்டவற்றையெல்லூம் சாப்பிட வேண்டும் போலவும் மனசு அலையும் நேரங்களில் தன்னைத் தானே கட்டுப்படுத்தி என்றாவது தனக்கும் விடுதலை வருமென்று நம்புகிறான்.

21.04.2013 அவன் அழைத்தான். கிட்டத்தட்ட ஒருவருடங்களின் பின்னர் வந்த அழைப்பு அது.

அக்கா ! நான்********* ! எப்பிடியிருக்கிறீங்கள் ?
கிடைத்த 2நிமிடத்திலும் அவன் சொல்ல விரும்பிய யாவற்றையும் சொல்லிவிடும் ஆவலில் கதைக்கத் தொடங்கினான்.

வீட்டுக்காறர் வாறவையோ ? கேட்ட போது சொன்னான்.

அவையளை 8வருசமா பாக்கேல்லயக்கா....எல்லாருக்கும் விசிற் வருமக்கா எனக்கு ஒருத்தரும் வாறேல்ல...! முந்தி கொஞ்ச நாள் உங்கடை உதவி கிடைச்சது. பிறகு நீங்களும் விட்டிட்டீங்கள்.

எங்கை தொடர்புகள் விடுபட்டுப் போச்செல்லோ அதுதான் விடுபட்டுப் போச்சு.
தொடர்ந்து ஆளாளுக்கு உதவி உதவியென்று அழைக்கிற அழைப்புக்களில் யாருக்கு முதலிடம் கொடுக்க யாரை தொடர்ந்து கவனிக்க ?

ஒவ்வொருவருக்குமான உதவியை எங்கிருந்து பெற்றுக் கொள்ள ? என்ற பாரத்தை இவனுக்குச் சொல்ல முடியவில்லை.
இப்ப வருத்தமெல்லாம் என்னமாதிரி ?
மாற்றமில்லையக்கா....!

இப்ப துப்புரவா உடம்பு முடியுதில்லை.
சரியான களைப்பும் வலியும் சிறுநீரகத்திலயும் பிரச்சனையாம்....!
எனக்கு மாதம்மாதம் ஏதுமொரு சின்ன உதவி செய்யேலுமெண்டா செய்யுங்கோ அக்கா....!

23.04.2013


(இந்த இளைஞன் எத்தனை காலம் உயிர்வாழ்வானோ தெரியாது. வாழும்வரை அவனுக்கானதொரு சின்ன உதவி மாதம் இலங்கை ரூபா (அண்ணளவாக 20€) என்றாலும் கொடுக்க வேண்டும். 

யாராவது இந்த மனிதனுக்கு உதவ விரும்பின் தொடர்புகளுக்கு :-
Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany
Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418
nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh
www.nesakkaram.org

Saturday, April 20, 2013

3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.

ஐயாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள் அடங்கிவிட்டது. 3ஆண்பிள்ளைகளும் 3பெண் பிள்ளைகளுமாக ஆறுபிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த காலத்தை எண்ணினால் அது பெரும் துயர் சூழ்ந்த காலம் தான். இப்போது தானொரு சுமையாகிப் போனேன் என்ற இயலாமைதான் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது.

ஐயா ஒரு கடற்தொழிலாளி. ஊரில் ஐயாவும் கடற்தொழிலால் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு காலம் அள்ளிக் கொடுக்கும் கையாகத்தான் இருந்தார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்வு ஐயாவின் குடும்பம் அனுபவித்ததும் ஒரு காலம்.

ஐயாவின் மூத்த ஆண்மகனை கடலில் வைத்து இலங்கை இராணுவ கடற்படை என்று சுட்டுக் கொன்றதோ அன்று விழுந்த இடி ஐயாவின் குடும்பத்தின் பாதையை திசைமாற்றி திசைக்கொன்றாய் அள்ளியெறிந்தது. ஐயாவும் விபத்தொன்றில் கையொன்று இயங்காமல் போக உடைந்து போனார்.

அண்ணனை கடற்படை கொன்றுவிட தம்பிகள் போராளிகள் ஆனார்கள். ஒருவன் புலனாய்வுப்போராளியாகவும் மற்றையவன் கடற்புலியானான். கடைசித் தங்கையும் புலியாகினாள். மிஞ்சிய இரு பெண் பிள்ளைகளும் திருமணம் முடித்து குடும்பமாகினர்.

பிள்ளைகளின் பிரிவு அம்மாவை நிரந்தர நோயாளியாக்கி 2005இல் மரணித்துப் போனதோடு ஐயாவின் நம்பிக்கையும் பறிபோனது. கடைசிமகள் சமரொன்றில் காயமுற்று ஊனமாகினாள். தொடர்ந்தும் தனது தேசத்துக்கான பணியைச் செய்து கொண்டிருந்தாள்.

2006இல் கடற்புலிப் போராளியொருவனைக் காதலித்துத் திருமணம் செய்தாள். ஐயாவுக்கும் ஆறுதலாயிருந்தவள் அவள். திருமணம் முடிந்த கையோடு  ஐயாவையும் அந்த மகள் தன்னோடு கொண்டு போனாள். போராளியான மகளும் போராளியான மருமகனும் தங்கள் கடமைகளில் உறைந்துவிட்டாலும் அவர்களுடன் வாழ்வது ஐயாவுக்குப் பிடித்திருந்தது. தனது ஊனமுற்ற கையோடு வீட்டுக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துவிட்டு மகளுக்காகவும் மருமகனுக்காகவும் காத்திருப்பார்.

2008இல் அந்த மகள் ஒரு ஆண் குழுந்தைக்குத் தாயானாள். பேரக்குழந்தை ஐயாவின் உலகத்தை மகிழ்ச்சியால் நிரப்பியது. குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் கடமைக்காக வீட்டைவிட்டு மருமகன் போய்விட மகளுக்கும் பேரப்பிள்ளைக்கும் ஐயாதான் உறுதுணை. காலையில் வீட்டிலிருந்து தனது பணிக்காக போகிற மகள் இரவு திரும்பும் வரை ஐயாவே அந்தக் குழந்தையின் ஆதாரம்.

யுத்தம் தொடர் இடப்பெயர்வு  ஐயாவைச் சோர வைத்துவிட்டது. ஆனால் மகளோடு ஒவ்வொரு ஊராக இடம் பெயர்ந்து 2009மேமாதம் 9ம் திகதிவரை ஐயாவின் அலைச்சலும் துயரமும் ஆயிரம் காலத்துக்கும் மாறாத துயரங்கள். ஏற்கனவே ஊனமுற்றிருந்தும் திரும்பவும் தனது தேசக்கடமை முடிக்கச் சென்ற மருமகன் காயமுற்றதாக செய்தி வந்தது.

இயலாத காயத்தோடு அவனைக் களத்தில் வைத்திருக்காமல் சக போராளிகள் அவனது குடும்பத்தோடு போயிருக்க அனுப்பினர். முள்ளிவாய்க்காலில் அவர்கள் இருப்பதை அறிந்து தகவல் கொடுத்த போராளி சொன்ன அடையாளத்தை வைத்துத் தேடி அவனைக் குடும்பத்தோடு இணைத்தான் சக போராளி.

ஐயாவின் மூத்த மகள் குடும்பமும் ஒரேயிடத்தில் இருந்தார்கள். காயத்தோடு திரும்பிய மருமகனுக்கு ஐயாவே வைத்தியனாய் கவனம் பார்த்தார். அவன் ஐயாவின் மருமகனான நாள் முதல் அவனை ஐயா ஒரு போதும் மருமகனாய் நினைத்ததுமில்லை அழைத்ததுமில்லை. எப்போதும் ஐயாவுக்கு அவன் மகனாகவே வாழ்ந்தான். ஐயா மூச்சுக்கு முன்னூறுமுறை மகன் மகன் என்றுதான் அவனில் அன்பைச் சொரிந்தார்.

எல்லாரும் போயினம் மகன் நாங்களும் போவம்....! பெரிய மருமகன் நல்லா சிங்களம் கதைப்பார் நாங்களும் அவையோடை வெளிக்கிட்டா அவர் கதைச்சு எங்களையும் காப்பாற்றிடுவர்....!

ஐயாவின் சொல்லை முதல் முறையாக மறுத்த மருமகன் வேண்டுமானால் தங்கள் குழந்தையை அவர்களைக் காப்பாற்ற முடியுமென்றால் கொண்டு போகச் சொன்னான்.

நாங்கள் கடைசி மட்டும் நிக்கப்போறம் நடக்கிறத இஞ்சையே காணுவம்...! என பிடிவாதமாய் நின்றான். ஐயாவும் அவர்களோடு நிற்பதாக மூத்த மகள் குடும்பத்துக்குச் சொல்லிவிட்டு அவர்களோடு தங்கினார்.

17.05.2009 கடைசி முடிவெடுக்க வேண்டிய நிலமையில் ஐயா மருமகன் மகளின் முடிவையே தானும் ஏற்றுக்கொண்டு காலகாலமாய் வாழ்ந்த நேசித்த மண்ணைவிட்டு எதிரியிடம் சரண் புகுந்தார்கள். அந்தக் கொடிய நாட்களை வதைகளைத் தாங்கிய லட்சக்கணக்கானவர்களுடன் ஐயாவும் மகள் மருமகன் பேரக்குழந்தையும்....

2010இல் ஊனமுற்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட போது ஐயாவின் மருமகனும் விடுதலையாகி மீளவும் ஒன்றிணைந்த போது ஐயா இன்றைப் போலொரு துயரம் தனக்கு வருமென்று நினைக்கவேயில்லை.
விடுதலை செய்யப்பட்ட மருமகனும் மகளும் தொடர் விசாரணைகள் என்ற பெயரால் மீளவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வெளிவராத குரல்களின் மௌனங்கள் உலகின் செவிகளுக்கு கேட்காது நடந்த அந்தக் கொடுமைகளால் இனி ஊரில் வாழ முடியாத நிலமை உருவாகியது.

கருவுற்றிருந்த மகள் கடத்தப்பட்டு வதைக்கப்பட்டாள். தொழில் தேடி யாழ் சென்ற மருமகன் வரும்வரை அவளை விடுதலை செய்யாமல் வைத்துத் துன்புறுத்தினார்கள். ஊர் மீண்டு மனைவியைக் காத்து தினம் தினம் அச்சம் நிறைந்த இரவுகள். எவரது கண்ணையும் நம்ப முடியாத அந்தரத்தின் கொடிய பொழுதுகளைத் தாங்க முடியாது ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

000          000              000

வாழ்வு அல்லது மரணம் என்ற முடிவோடு 2011இல் நாட்டைவிட்டு வெளியேறி அயல்நாடு போனார்கள். ஐயாவையும் அழைத்துப் போக முடியாத அந்தரம். ஐயா நாங்கள் கொஞ்சநாளில நிலமை சரிவந்தா திரும்பி வந்திடுவம் அதுமட்டும் அக்காவோடை இருங்கோ....! மருமகன் சொன்னபோது ஐயாவும் ஓமென்றுதான் சொன்னார். ஐயா மகனாய் நேசித்த மருமகனும் மகளும் ஐயாவின் ஆறுதலாயிருந்த பேரனும் நாட்டைவிட்டு வெளியேற அவசர அவரசமாய் இருந்த காணிகளை விற்றுக் கொடுத்தார் ஐயா.

காலம் எப்போதும் நம்பிக்கைக்கு எதிரியாய் மாறிவிடுவதுபோல ஐயாவின் நம்பிக்கையும் பொய்யாகியது. பிரிந்து போன மகளும் மருமகனும் பேரனும் ஐயாவிலிருந்து பிரிக்க முடியாத அங்கமாகி அவர்கள் நினைவில் ஐயா தன் இயல்பை இழந்து போனார்.

ஐயா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். உயிர் இதோ அதோ என இருந்த நேரம் மருமகனின் நண்பர் மூலம் மருத்துவத்திற்கு சேர்க்கப்பட்டு சத்திரசிகிச்சை வரை போய் உயிர் மீண்டார். ஐயாவிற்கு அப்போதைய ஆறுதலாக இருந்த இரண்டாவது மகள் 4பிள்ளைகளோடும் வீட்டு வறுமையை சமாளிப்பதா ஐயாவை கவனிப்பதா என்ற நிலமையில் வறுமையே அந்த வீட்டில் நிரந்தரமாகத் தங்கியது.

பரம்பரையாகச் செய்து வந்த கடற்தொழிலைச் செய்ய வசதியில்லாது போனதால் இரண்டாவது மகளின் கணவன் ஐயாவின் இரண்டாவது மருமகன் ஏதாவதொரு தொழில் செய்ய வேண்டுமென்றதே இறுதித் தேர்வாகியது. கையில் முதலின்றி சுயதொழிலைத் தொடங்க முடியாது போக மேசன் வேலைக்குப் போய் வந்த மருமகனின் உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரம்.

இக்காலப் பொருளாதார இறுக்கம் பிள்ளைகளின் கல்வி செலவுகள் உணவுத் தேவைகள் வருமானத்துக்கு மேலாகியது. ஐயாவுக்கான மருந்து தேவைகளையும் மருமகனின் உழைப்பே நிவர்த்தி செய்ய வேண்டியிருந்தது. ஐயாவால் சதாரணமாக உணவை உட்கொள்ள முடியாது போனது. தண்ணீர் வகைகளும் , பால்மா , தேனீர் , பழம் மட்டுமே அவரால் உண்ண முடிந்தது. பால்மாக்கள் விற்கிற விலையில் அதனை வாங்கிக் கொடுக்க அந்தக் குடும்பத்திடம் வசதியில்லை. கிடைக்கிற உழைப்பில் ஐயாவுக்கும் எதையாவது கொடுத்து 6மாதங்கள் கடந்த போது அந்தக் குடும்பத்தின் துயரில் மேலுமொரு இடி.

மேசன் வேலைக்குப் போன மருமகன் கட்டடமொன்றிலிருந்து தவறி வீழ்ந்து கோமாநிலமைக்குப் போயிருந்தார். 'பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்ற பழமொழி ஐயாவின் குடும்பத்திற்கு நிகழ்ந்தது. உழைக்கவிருந்த ஒரு மருமகனும் சிலமாதங்கள் கோமாநிலமையிலிருந்து நினைவுகள் மறந்து ஒரு குழந்தையின் வடிவாமாக வீடு வந்து சேர்ந்தார்.

இரு நோயாளிகளைப் பராமரிப்பு , 16,14,12,9 வயதுகளிலிருக்கும் பிள்ளைகளை கவனிப்பது எல்லாவற்றுக்கும் மேலாக வருமானமேயின்றிய வாழ்வு ஐயாவின் மகளுக்கு. ஒரு நேரமேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு கொடுக்கவேனும் உழைக்க வேண்டிய பொறுப்பும் 36வயதான ஐயாவின் மகளின் தலையில்.

அழுதாலும் தீராத துயரம் அந்தக் குடும்பத்தின் விதியாகி 75வயதான ஐயா தன்னை மரணம் கொண்டு போகமலிருக்கும் விதியை எண்ணி கட்டிலிலேயே கண்ணீரோடு கழிக்கிறார். 3ஆண்பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் நாட்டுக்குக் கொடுத்துவிட்டு அனாதையான தனது வாழ்வு மீது ஐயாவுக்கு வெறுப்பாயே இருக்கிறது. ஐயாவிடம் விரைவில் வருவார்கள் என ஐயா நம்பியிருந்த இளைய போராளி மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் ஆசிய நாடொன்றில் பயண முகவரால் ஏமாற்றப்பட்டுச் சிறையொன்றில்....!

நேற்று 19.04.2013 ஐயாவுடன் தொடர்பு கொண்டேன்.

அம்மா....! எப்பிடியம்மா இருக்கிறியள் ? இருக்கிறமய்யா...!  எப்பிடி ஐயா சுகமா இருக்கிறியளே ? கேட்ட எனக்கு ஐயாவின் அழுகை மட்டுமே பதிலாய் வெளி வந்தது. என்னை ஏனம்மா கடவுள் இப்பிடி சோதிக்கிறான் ? 3ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்திட்டு இண்டைக்கு என்ரை பொம்பிளைப் பிள்ளைக்கு பாரமா இருக்கிறனம்மா....! எல்லாம் போச்சம்மா....!

அப்பாவிற்கு நிகரான ஐயாவின் கண்ணீர் கதைகள் இதயத்தில் சுமையாகிறது. ஐயா உயிர் வாழும் வரையில் ஐயாவிற்கு உணவு வேண்டும். அதற்கான ஒரு வழி வேண்டும்....!

ஈழவிடுதலைப் போராட்டம் நடைபெற்ற சமகாலத்தில் ஆதரவற்ற மாவீரர்களின் பெற்றோர்கள் வாழ அவர்களுக்கான இல்லம் ஒருகாலம் இருந்தது....! ஆளில்லையென்று சொல்ல ஆளில்லாமல் அவர்களுக்கான நல் வாழ்விருந்தது....இன்று....! எத்தனையோ மாவீரர்களின் பெற்றோர்கள் ஒருநேர உணவுக்கு ஒரு தலையிடி மருந்துக்காகவும் ஏங்குகிற இந்த ஏழைப் மாவீரர்களின் பெற்றோர்களுக்காக எங்கிருந்தாவது ஒரு நேசக்கரம் நீளுமென்ற நம்பிக்கையில்.....!


20.04.2013 (இந்த ஐயாவிற்கு யாராவது ஒரு கருணையுள்ளம் உதவ முன் வர வேண்டும். ஐயாவின் ஆதரவற்றுப் போன மகளின் 4 பிள்ளைகளின் படிப்புக்கும் ஒரு சிறு தொழிலுக்கும் ஆதரவு தேவை. அவர்கள் மீள எழ ஒரு சந்தர்ப்பத்தை புலம்பெயர் வாழ் உறவுகள் வழங்குங்கள்)

ஐயாவிற்கு மாதம் 5ஆயிரம் ரூபா (அண்ணளவாக 30€) வாழும் நாட்கள் கொஞ்சம் அதுவரை உணவு வேண்டும்.
ஐயாவின் மகள் சிறு பெட்டிக்கடையொன்றை நடாத்த விரும்புகிறார் - 50000,00ரூபா (அண்ணளவாக 315€)


4பிள்ளைகளுக்கும் ஒரு மாதம் ஒரு பிள்ளைக்கு ஆயிரம் ரூபா கல்வியுதவி. (தாய் தனது பெட்டிக்கழைட வியாபாரத்தில் மீள எழ இந்த ஒருவருட கல்வியுதவி பேராதாரமாக இருக்கும்) எங்கள் வாழ்க்கை
க்கு தங்கள் குடும்ப உறவை உயிரைத் தந்த இந்தக் குடும்பத்திற்கு உதவுங்கள்.

Friday, April 12, 2013

ஆபிரிக்காவில் பசியிருக்கும் ஈழப்போராளியின் குழந்தைகள்.

அவன் ஒரு கடற்புலிப்போராளி. அவனொரு திறமையான சண்டைக்காரன். அவனொரு சிறந்த படகோட்டி , அவனொரு சிறந்த கலைஞன் , நடிகன்....! இப்படித்தான் அவனைப்பற்றிய அறிதல் இருந்தது.

2009 முடிவுகளின் பின்னர் நாட்டைவிட்டுத் தப்பிவிட ஆயிரக்கணக்கில் நேசித்த தாயகத்தைவிட்டு வெளியேறவும் அவர்களது குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா , இந்தோனேசியா ,மலேசியா என கடல்கடக்கத் துணிந்தார்கள்.

எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமென புதிய புதிய வெளிநாடனுப்பும் முகவர்கள் பாதிக்கப்பட்ட போராளிகளை அணுகினார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பல அழைப்புக்கள். துறைசார்ந்த நட்புகள் தொடக்கம் பல அழைப்புகள் தெரிந்த அறிந்த பழகியவர்களென நாடிவரத் தொடங்கிய 2010இன் ஆரம்பம்....!

இந்தியா வந்துவிடு இந்தோனேசியா வந்துவிடு மலேசியா வந்துவிடு ஐரோப்பா , அவுஸ்ரேலியா , கனடாவிற்கு அழைக்க முடியுமென்ற ஆசை வார்த்தைகளும் வாக்குறுதிகளும் கொடுத்த உற்சாகத்தில் பலர் ஒளித்தொழித்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் தான் அவனும் இனிமேல் வாழ முடியாதென்ற முடிவில் இருந்தவற்றையெல்லாம் விற்று தெரிந்தவர்களிடமும் உதவி பெற்று ஒன்பதரை லட்சரூபாவை சேகரித்து பயணமுகவராக அறிமுகமானவர்களிடம் பணத்தையும் கொடுத்து 2பிள்ளைகள் மனைவியோடு நாட்டைவிட்டு வெளியேறினான். 

கனடா போகலாம் என 2011இல் கப்பல் ஏறினான். நன்றாய் துளிர்த்து வளர்ந்த செடியொன்றை இடையில் பிடுங்கியெறிவது போன்ற வலியை மனசு அனுபவித்தாலும் தனது குடும்பத்திற்கான தனது குழந்தைகளுக்கான நல்வாழ்வொன்று வெளிநாட்டில் காத்திருப்பதாக நம்பி எல்லாத் துயர்களையும் தாங்கினான்.

கனடாக்கனவறுந்து தென்னாபிரிக்காவின் நாடொன்றில் கரை சேர்ந்தார்கள். நம்பிக்கை கொடுத்து காசை வாங்கியவர்கள் கைவிரித்தார்கள். வாழ்வா சாவா நிலமையில் அன்றாடத் தேவைகள் , பசி , அடுத்த கட்ட வாழ்வுக்கான வழி எதுவும் தெரியாது போனது.

ஐஆழு நிறுவனம் நாடுதிரும்ப விரும்புகிறவர்களை திருப்பியனுப்ப உதவுவதாகச் சொன்னார்கள். நாடுதிரும்பி இனி வாழவும் முடியாத நிலமை. நாடு திரும்பினால் நேரடியாக சிறையே நிரந்தரமாகும். ஏற்கனவே நடந்த இராணுவ தொந்தரவுகள் திரும்பவும் குடும்பம் மீது பாயும் என்ற அச்சம். கையில் இருந்ததெல்லாம் கரைந்து பிள்ளைகளுக்கு சோறு கொடுக்கவும் வழியற்றுப்போய்விட்டது.

எல்லாம் இழந்து இனி வழியேதுமற்ற நிலமையில் தெரிந்த அறிந்த எல்லாரையும் நாடி உதவி கோரினான். அப்படி அவன் தேடி வரும் வரை எனக்கு அவன் பற்றி தெரிந்தது இவ்வளவும் தான்.

000             000             000

உதவியென அழைக்கிற பல குரல்கள் போலவே அவனது குரலும். ஸ்கைப்பில் ஒருநாள் அழைத்தான். எனது தொடர்பைக் கொடுத்த ஒரு போராளியின் பெயரைச் சொல்லி அறிமுகமானான்.

அக்கா எனக்கேதாவது உதவி செய்யுங்கோ.....! என்னாலை ஊருக்கும் போகேலாது....இங்கை ஏதும் வேலை தேடிச் செய்யலாமெண்டு முயற்சி செய்யிறன் ஆனால் கிடைக்குதில்லை. பிள்ளைகள் சோளம் களிதான் சாப்பிடுதுகள்....! அப்பா சோறு வேணுமெண்டு கேக்குதுகளக்கா....! என்ரை பிள்ளையளுக்கு சோறு சமைச்சுக்குடுக்க ஏதாவது உதவுங்கோ அக்கா....!

உடனடியாக எதுவித வாக்குறுதியையும் கொடுக்க முடியாதிருந்தது. சில மணித்துளிகள் மட்டுமே அவனால் ஸ்கைபில் பேச முடிந்தது. தனது தொடர்புக்கான தொலைபேசியிலக்கத்தை எழுதிவிட்டுச் சொன்னான்....!

ஸ்கைப் காசு முடியுதக்கா நேரம் கிடைச்சா ஒருக்கா ரெலிபோனெடுங்கோக்கா....!

உங்கடை நாட்டுக்கு சரியான காசு போகும் ரெலிபோனுக்கு....! நெற்கபே வரேலுமெண்டா ஸ்கைப்பில இலவசமா கதைக்கலாம். எனச்சொன்ன எனக்குச் சொன்னான்...,

அக்கா நெற்கபேக்கு நான் இருக்கிற இடத்திலயிருந்து வாறதுக்கு ஒரு மணித்தியாலம் செல்லும். முச்சக்கரவண்டியில வாறதெண்டா காசு அதாலை நான் நடந்துதான் வந்து கதைக்க வேணும். என்னாலை வேகமா நடக்கேலாது நீங்கள் அப்பிடியெண்டா மிஸ்கோல் விடுங்கோ ஒருமணித்தியாலத்தில வந்திருவன். அன்று போய்விட்டான்.

அதோ இதோ என்ற கொடையாளர்கள் சிலரிடம் அவனுக்காக உதவி வேண்டி தொடர்பு கொண்ட போது எல்லாத்தரப்பும் கழுவும் நீரில் நழுவும் மீன்களாக ஆரவாரமில்லாமல் ஒளிக்கத் தொடங்கினார்கள். ஒரு போராளி மட்டும் அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற முயற்சியில் இணைந்து தனது தொடர்புகளுக்கால் உதவியைத் தேடிக்கொண்டிருந்தான். அதுவும் கைகூடவில்லை.

அவனுக்கு உதவியை எங்காவது பெற்று வழங்க வேண்டுமென்ற முயற்சியில் இணைந்த போராளியே எனக்கு அவன் நடித்த குறும்படம் பற்றிச் சொன்னான். அவனுடன் கதைத்தபடி Youtubeஇல் அந்தக்குறும்படத்தைத் தேடியெடுத்தேன்.

ஏற்கனவே 4தடவை பார்த்த அந்தப்படம் அதில் நடித்தவர்கள் பற்றித் தெரியாதிருந்த போது ஒரு கரும்புலியின் வாழ்வு பற்றிய உண்மை மட்டுமே அறிந்திருந்தேன். அந்தப் பாத்திரமாகவே அவன் வாழ்ந்து நடித்திருந்தான். நடிப்போடு மட்டுமன்றி விடுதலைப்பாதையில் அவனும் இறுதி வரை பயணித்திருந்தான் என்ற உண்மை அவன் மீதான மதிப்பை உயர்த்தியது.

மறுநாள் ஸ்கைப் வந்தான். அக்கா நேற்று உங்களுடன் பேசியதாக வீட்டில் சொன்னேன் பிள்ளைகள் கேட்டார்கள் நாளைக்கு நாங்கள் சோறு சாப்பிடலாமா என்று. கடந்த ஒரு கிழமையாக சோளன் களிதான் சாப்பிடுகிறார்கள். மகளுக்கு சத்துக்குறைவு அதாலை ஒரே வருத்தம் மகன் பறவாயில்லை இருக்கிறான் எனக்கு அவசர உதவியாக என்ரை பிள்ளையளுக்கு சோறு குடுக்க ஏதாவது செய்வீங்களோ அக்கா ?

யாரிடமாவது உதவி பெற்று தனது குழந்தைகளின் பசி போக்க விரும்பும் தந்தையாக அவன் குரல் உடைகிறது. புலரிடம் தனது குழந்தைகளுக்காக உதவி கோரி நொந்து நம்பிக்கையிழந்து போன பின்னால் கடைசி முயற்சியாக வந்திருப்பதாகச் சொன்னான். முதலில் தனது பிள்ளைகளின் முகத்தை ஸ்கைப்பில் போட்டான். பின்னர் தனது முகத்தையும் போட்டுக் காட்டினான்.

பட்டினியால் நலிவுற்ற ஆபிரிக்கநாடுகளின் குழந்தைகள் மனிதர்களை தொலைக்காட்சி பத்திரிகைகளில் பார்த்த நினைவுதான் அவனது குழந்தைகளின் முகங்களையும் அவனது முகத்தையும் பார்த்த போது நினைவு வந்தது. இன்னும் கண்ணுக்குள் அந்த முகங்களும் அந்தக் கண்களில் நிரம்பியிருந்த வெறுமையும் மட்டுமே நினைவில் நிற்கிறது.

10.04.2013 மதியம் ஸ்கைப் வந்திருந்தான். அக்கா யாராவது உதவ முன்வந்தினமா ? பிள்ளைகளின்ரை சாப்பாடுதான் பெரிய பிரச்சனையா இருக்கு.....! எந்த முயற்சியும் பயனளிக்கவில்லையென்ற உண்மையைச் சொல்ல வேண்டி வந்துவிட்டது கைவிரித்த யாவரையும் சொன்னேன்.

கடைசி  முயற்சி உங்கட நிலமையை ஒரு பதிவாக எழுதட்டோ ? கட்டாயம் வாசிக்கிற ஒரு கருணையுள்ள மனமாவது உங்கடை பிள்ளையளுக்கு சோறுதர உதவலாம். முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடெதுக்கெண்டு நினைச்சானோ என்னவோ சொன்னான். எழுதுங்கோ பிரச்சனையில்லை.
அன்று தன்னைப்பற்றிய முழுமையான விபரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

15வயதில் இயக்கத்தில் இணைந்தவன். 29வயது வரை போராளியாக வாழ்ந்திருக்கிறான். 98இல் சமரொன்றில் காயமடைந்து ஒரு கால் ஊனமுற்று காயம் ஆறி மீளவும் களவாழ்வு. 2005இல் நீதி நிர்வாகத்துறையில் இணைக்கப்பட்டு நீதிநிர்வாகம் கற்று சட்டத்தரணியாகி 2008வரையும் சட்டத்துறையில் பணியாற்றினான்.

இறுதிக்களம் உக்கிரமடைந்ததோடு மீண்டும் சண்டையில் போய் நின்றான். நாட்டுக்காய் புறப்பட்ட போது எடுத்துக் கொண்ட சத்தியத்தைக் காக்க சண்டையில் நின்றவன் 2009இல் மீண்டும் காயமடைந்தான். 98இல் காயமடைந்த அதேகால் மீண்டும் காயமடைந்து கடுமையாகப் பாதிப்புற்றான்.

பட்டகாலிலே படும் என்ற பழமொழி அவனுக்குச் சரியாகவே பொருந்தியது.
கடைசிவரை நேசித்த மண்ணுக்குள் நின்று அந்த மண் மீளும் என்ற கனவோடு புதைந்தவர்களின் கனவுகளைச் சுமந்து களமாடி ஊனமாகி எல்லாம் இழந்து ஒரேநாளில் மயானமாகிய முள்ளிவாய்க்காலைவிட்டு எதிரியிடம் கையுயர்த்திச் சரணடைந்தவர்களோடு அவனும் அவனது குடும்பமும் சரணாகதியாகி.....!

காலம் கைவிட்டு கடவுள்களும் கைவிட்டு அனாதையான வன்னிமண்ணும் 3லட்சத்துக்கு மேலான மக்களும் இறுதிவரை போராடிச் சரணடைந்த 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் அனாதைகளாகினர்.

000                 000               000

11.04.2013 தொடர்பு கொண்டேன். அவன் இருக்கும் நாட்டில் இரவு 12மணி. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வறுமையால் வாடும் அந்த நாட்டில் வேலை தேடுவதே வளமையென்றான். அன்று யாரோ ஒருவரோடு சேர்ந்து ஒரு பாண்தயாரிக்கும் வெதுப்பகம் போனான். காலையிலிருந்து மாலைவரை அந்த வெதுப்பகத்திற்குத் தேவையான விறகு கொத்திக் கொடுத்தானாம். இரவு அந்த நாட்டுப்பணம் 2ஆயிரம் கிடைத்திருக்கிறது. ஒரு கிலோ அரிசியின் விலை அந்தநாட்டுக்காசு ஆயிரம் ரூபா விற்கிறது. வீட்டிற்கு 2கிலோ அரிசி வாங்கிக் கொண்டு போயிருக்கிறான். பிள்ளைகள் இரண்டும் ஏங்கும் சோற்றைக் கொடுக்க அன்றைய பணம் உதவியிருக்கிறது.

புpள்ளைகள் பள்ளிக்கூடம் போறேல்லயா ? அதுக்கெல்லாம் லச்சக்கணக்கில வேணுமக்கா....! இப்போதைக்கு என்ரை பிள்ளையளுக்கு சாப்பாடு வேணுமக்கா. அவன் வார்த்தைகளில் தெறித்த இயலாமையும் வறுமையும் முகத்தில் உமிழ்வது போல உறைத்தது. பாடசாலை போகும் வயதில் இருக்கும் பிள்ளைகள் இருவருக்கும் அவனே ஆசான்.

எனது பிள்ளைகள் படித்து பெரிய முன்னேற்றமடைய வேண்டும். ஒரு விஞ்ஞானியாக , ஒரு விமான ஓட்டியாக , ஒரு விண்வெளி ஆராட்சியாளராக இப்படி எனக்கு உள்ள எல்லாக் கனவுகளும் அவனுக்கும் அவனது மனைவிக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் அன்றாட உணவே போராட்டமாக உள்ள போது அவனது கனவுகள் ?????

பிள்ளையள் ரெண்டும் இல்லையெண்டா நானும் மனைவியும் செத்திடுவமக்கா....! இண்டைக்கு எல்லாத்தையும் இழந்திட்டு நடுத்தெருவில நிக்கிற நிலமையும் இருந்திருக்காது....! இப்பிடி அவமானப்பட்டுக் கொண்டு வாழவும் தேவையில்லையக்கா....! அவன் வெறுப்பின் உச்சத்தில் கதைத்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் கறந்த ஒன்பதரை லச்சத்தையும் வேண்டி விழுங்கீட்டு எதுவுமே நடவாதது போல வாழும் முகவரால் எப்படித்தான் நிம்மதியாக உறங்க உண்ண உலாவ முடிகிறதோ ?

இல்லாதவன் பொல்லாதவானாகிறான் என்பது ஊர் மொழியொன்று. அவன் பொல்லாதவானாகாமல் இன்னும் பொறுமையோடிருப்பதே அதிசயமாயிருந்தது. அவனது பொறுமையின் ஆதாரம் அவனது இரு குழந்தைகளுமே.

கண்ணதாசன் எழுதிய பாடலொன்றில் வரும் வாசகங்கள் :- „'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது'.

உயர்ந்தவர்களாய் மான மறவர்களாய் ஒருகாலம் உலகத்தாலும் எங்கள் இனத்தாலும் உச்சத்தில் ஏற்றி வைக்கப்பட்டவர்களின் நிலமை 2009இல் மாறியது. அவர்களை அவர்களது நிழல் மட்டுமில்லை அவர்கள் நிழல்களாய் வருவோம் என்று சபதம் செய்து வீரராய் மதித்த தமிழரே இன்று வீதியில் விட்டெறிந்து நல்ல வீணைகளை நலங்கெட புழுதியில் எறிந்து...!

'தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம்' எழுதிவிட்டுப் போனான் மீசைக்கவிஞன் பாரதி. இந்திய தேசத்தின் எழுச்சியின் குறியீடாகினான் பாரதி. எல்லா இலக்கண வரையறைகளுக்கும் உதாரணமாயும் உயர்வாயுமிருந்த என் சக உறவின் குழந்தைகளின் பசி போக்க நாங்கள் இந்த ஜெகத்தை எரிக்கவா முடியும் ?

பசியால் அழும் குழந்தைகளின் அழுகையில் உயிரை வதைக்கும் கொடுமை இனியுலகில் எந்தப் போராளிக்கும் வரவே கூடாது. ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் சாப்பிடும் போதும் அவன் தனது பிள்ளைகள் பற்றிச் சொன்னதே நினைவில் வருகிறது. அந்தக் குழந்தைகளின் அழுகையாக அவனது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

அவன் நடிப்பில் வெளியாகிய குறும்படத்தை மீளவும் பார்க்கிறேன். தற்கொடையாளனாய் தன்னினத்தை மட்டுமே நேசித்து குடும்பம் அம்மா அக்கா சக தோழர்கள் யாவரையும் பிரிந்து போன அந்தக்கரும்புலியின் மறுவடிவமாகிய அவன் ஒரு காலத்தின் குறியீடாக....!

அவனது சிரிப்பு பேச்சு இன்று ஆபிரிக்க நாடுகளின் அடையாளமாக உருமாறிப் போன தோற்றமும் கண்ணீராய் வழிகிறது. யாருக்கென்று அழுவதென்று தெரியாது ஆனால் அவனது குழந்தைகளுக்காக இன்று அழுகிறேன். அவர்கள் சாக எங்கள் உயிர்காத்துப் புலம் பெயர்ந்து வாழும் இந்த வாழ்வைத் தந்த அவர்களுக்காய் அழுகிறேன்.

12.04.2013 இரவு அவனை அழைத்தேன். ஆறாத ரணமாக அவனது பிள்ளைகளின் பசியைத்தான் சொல்லி வருந்தினான். கையில் எதுவுமில்லை கடனும் வாழ்வின் சுமையும் அழுத்துகிற அவலத்தை அவனுக்குச் சொல்லி தப்பித்துப் போக முடியவில்லை. மாதத்தின் நடுப்பகுதி எல்லாம் முடிந்து கடனட்டையில் மிஞ்சியிருக்கும் 110€. அடுத்தமாதத் தொடக்கம் வரையில் அவசர தேவைகளுக்காக இருக்கிற 110€ அவன் வாழும் ஆபிரிக்க நாட்டுப்பெறுமதியில் 61600வரும்.

அடுத்த கிழமை என்னாலை முடிஞ்ச சின்ன உதவியொண்டை அனுப்புறன். யாராவது உங்களுக்கு உதவ வருவினம். அதுவரை பொறுத்திருங்கோ. சொன்ன எனக்குச் சொன்னான். நன்றியக்கா....! மாதம் ஒரு 30€ யாராவது உதவினால் ஒரு காலத்தின் பெறுமதியான அவனின் குழந்தைகள் பசியாறும்.....!

13.04.2013 (எழுதப்பட்ட நேரம் அதிகாலை 02.26)
பிற்குறிப்பு :- இந்தக் குடும்பத்துக்கு யாராவது உதவ விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் வீட்டின் பிள்ளைகளின் பசிபோலவே அந்தக் குழந்தைகளுக்கும் பசிக்கிறது. அவர்கள் பசியாற்ற கருணையுள்ளம் படைத்தவர்களே உதவுங்கள்.