Wednesday, August 31, 2011

என் மகளே செங்கொடி....!


*செங்கொடி*
நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து
மானிட விடுதலையை
வென்றிருக்க வேண்டிய வித்து நீ.
ஏனடி பெண்ணே…?
எரிந்தாய் நெருப்பில்….?

அவசரப்பட்டு விட்டாய் மகளே..…!
அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ
அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற
வலியல்லவா உனது தீ….!
நீ வாழ்ந்திருக்க வேண்டியவள்
வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ.
ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….?

உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள்
இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..!
மாற்றங்கள் நிகழ உன்போன்ற
மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….!

அரசியல் புலிகளும் நரிகளும்
உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி
வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்னை மறந்திடுவர்……
நாளை அல்லது இன்னொரு நாளில்
குருத்தொன்றை மூட்டத்
தீப்பெட்டியும் பெற்றோலும் விநியோகம் செய்யும்
முகவர்களின் நண்பர்களாவார்கள்…..

மொழிக்கு மொழி முத்துக்குமாரனையும்
செங்கொடியையும் சொற்களால் உயர்த்திச்
சுயநலச்சாக்கடை வியாபாரம் செய்வார்கள்.
சிந்திக்கத் தெரிந்த உம்போன்ற செடிகளைத்
தீயெரிக்கத் தீயெரிக்க உணர்ச்சித் தீயெடுத்து
உங்கள் சிதைகளுக்கு வீரத் தீமூட்டுவார்கள்…
அத்தோடு அவர்கள் கதை முடிந்துவிடும்....

முத்துக்குமாரன் முடிந்தான் தமிழகத்தில் என்ன
பாலும் தேனுமா பாய்கிறது…?
செங்கொடி நீ முடிந்தாய் என்ன தமிழகத்தை
செல்வச்செளிப்பாயா மாற்றப்போகிறார்கள்…?
இல்லையடி மகளே உங்கள் உயிர்களை
விதைத்து அரசியல் வியாபாரிகள் பைகள் தான் நிரம்புகிறது.

போதும் பிள்ளைகளே…!
உங்கள் பெறுதற்கரிய உயிர்களை
வெறும் தீக்கிரையாக்கி
வீணடிக்காதீர் விழுதுகளே…..!
உயிர்களை ஆயிரமாயிரமாய் இழந்த வலியின்னும்
ஆறாமல் துடிக்கிற எங்களால் உங்கள்
இழப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நீங்கள் வாழ வேண்டும்
இவ்வுலகம் வாழ உங்கள் விலையற்ற உயிர்களை
வீணாயெரிக்காமல் வரலாறு படைக்க வேண்டும்.
அதுவே எங்களுக்குக் கிடைக்கின்ற பெருவெற்றி.

போய்வா மகளேயென்று வீரவணக்கம் சொல்லியுன்னைப்
பொய்யுரைத்து வணங்கமாட்டேன்.
மீள வராத உனக்காய்
கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன்.
ஒற்றைக் கவிதையால் அஞ்சலித்து
இனியொரு தீக்குளிப்பை எதிர்க்கிறேன்…..
என் மகளே செங்கொடி
எனது கண்ணீர் வணக்கங்களோடு விடைபெறுகிறேன்……


31.08.2011 (ஓகஸ்ட் 28.2011 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றோரின் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி தன்னைத் தீமூட்டியெரித்த 27வயதான செங்கொடி என்ற இளம் பெண்ணின் நினைவாய் எழுதிய வரிகள் இவை)

Friday, August 19, 2011

தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம்.


(முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நிறைந்து கிடக்கிறது. இதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வியுதவிக்கான வேண்டுதல்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் இயங்குகின்ற முகாம்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது.

செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இம்மாணவர்களுக்குத் தேவையான கற்கை உபகரணங்களான கொப்பி பேனா போன்றவையே மிகுந்த தட்டுப்பாடாக உள்ளது. இவற்றைத் தமக்கு வழங்கமாறு அம்மாணவர்கள் வேண்டுகின்றனர்.

வாழும் முகாமில் அடிப்படை வசதிகள் பெறுதலே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இருக்க கற்றலை வளப்படுத்த இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். வெளியில் இருந்து இயங்கும் நிறுவனங்களும் சரி தமிழர்களின் வாக்குகளை வென்றவர்களும் சரி இம்மாணவர்களைத் திரும்பியும் பார்க்காதுள்ளனர். சில பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கேட்கப்பட்டும் இன்னும் முன்னேற்றம் எதனையும் காணாத நிலையே.

17.08.2011 அன்று மட்டக்களப்பில் த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். தற்போதைய பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள மர்ம மனிதர்களின் தொல்லைகள் தொடர்பாக இந்நிகழ்வு நிகழ்ந்திருந்தது.

இந்நிகழ்வுக்கு கலந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு CRகொப்பியும் பேனாவும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது. யோகேஸ்வரன் அவர்களின் அலுவலக வட்டாரங்களிலிருந்து கிடைத்த தரவுகளின் படியும் நேரடியாகப் பார்த்தவர்களின் தரவுகளின்படியும் 8000ஆயிரம் (எண்ணாயிரம் CRகொப்பிகள்) பெட்டிகள் உடைக்கப்படாமல் உறங்குகின்றது.

ஒரு கொப்பியின் விலை 135ரூபா 135,00/= X 8000 = 1080000,00/=

அண்ணளவாக ஒருமில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான கொப்பிகள் யோகேஸ்வரன் அவர்கள் அலுவலகத்தில் உறங்குகின்றன. இத்தொகையை வழங்கிய உறவுகள் மக்களுக்குப் பயன்படத்தானே உதவினார்கள். ஆனால் பொலித்தீன் கழற்றப்படாத கட்டுகளில் உறங்கும் கொப்பிகள் அடுத்த தேர்தல் வரை அப்படியே யோகேஸ்வரனின் அலுவலக அறையில் உறங்கப்போகின்றனவா ? அடுத்த தேர்தலுக்கிடையில் கொப்பிகள் கறையான் அரித்து மண்ணுக்குப் போக முன்னர் ஏன் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமிமுகாம் மாணவர்களுக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்று மீள்குடியேறிய ஊர்களில் கல்வி கற்கும் வசதிகளற்ற மாணவர்களுக்கு வழங்கக்கூடாது ?

மெனிக்பாம் முகாமிற்கு இப்போது சென்றுவரக்கூடிய அனுமதியிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான அனுமதியினைப் பெற்றுச் சென்று கூட அந்த மாணவர்களுக்குக் கறையானுக்கு இரையாகப்போகிற கொப்பிகளை வழங்கலாமே…..?

ஆனந்தகுமாரசாமி முகாமில்வதியும்குடும்பமற்றும்மாணவர்களின்மொத்தஎண்ணிக்கை:-

மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153)
மாணவர்கள்: 5வயதிலிருந்து 10வயதுவரை = 837 (ஆண்கள்: 369, பெண்கள் : 468)
11வயதிலிருந்து 18வயதுவரை = 1194 (ஆண்கள்: 587, பெண்கள் : 607) மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 2031.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியுதவியை எதிர்பார்க்கும் சில இடங்கள் பற்றி:

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர் இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து பல மாதங்களுக்குப் பின் மீண்டும் குடியேறினர்.

இப்பிரதேசத்தில் உள்ள மக்களில் அனேகமானோர் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணம் கற்றலுக்கான வளங்கள் இங்கு குறைவாகக் காணப்படுவதும் மக்களின் வறுமை நிலையுமேயாகும்.

மண்முனைதென்மேற்குபிரதேசசெயலாளர்பிரிவு.

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 15500
மொத்தச் சனத்தொகை – 23988 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 24

போரதீவுப்பற்றுபிரதேசசெயலாளர்பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 18000
மொத்தச் சனத்தொகை – 38282 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 43

இப்பகுதிகள் யோகேஸ்வரன் அவர்கள் எவரினதும் அனுமதியின்றியே போய் உதவக்கூடிய ஊர்கள்.

எங்களுக்காக எஞ்சிய சொத்து கல்வி மட்டுமே. எங்கள் இனத்தின் நம்பிக்கையும் உயிர்ப்பும் அதுவே. அக்கல்வியை வளப்படுத்த யோகேஸ்வரன் அவர்கள் கருணை காட்டுவாராக. தமிழர்களின் வாக்குகளை வென்ற தமிழ் அரசியல்வாதி நீங்கள் என்ற உரிமையோடு கேட்கிறோம் உங்களிடம் உறங்கும் கொப்பிகளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குங்கள்.

இன்னும் மக்களுக்குப் பகிரப்பட வேண்டியவை நிறையவே உங்களிடம் இருக்கிறது. அதையெல்லாம் தோண்டியெடுத்து உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் நோக்கமில்லை. மனிதாபிமானத் தேவைகளைப் புரிந்து உரிவர்களுக்கானதை வழங்குங்கள். இம்மக்களின் சேவையே உங்களை அடுத்து வருகிற தேர்தல்களிலும் தொடர்ந்து வாழ வைக்கப் போகிறது.

(படம்- தினக்கதிர் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)

Sunday, August 14, 2011

கே.பி , கருணான்ரை ஆளை கலியாணம் கட்டாதை…!

அவன் ஒரு நாத்திகன். கடவுளை நம்பாதவன். இயல்பிலேயே சம்பிரதாயம் , சாத்திரம் , சாதி , வேற்றுமை எல்லாவற்றிற்கும் எதிரானவன். வீட்டில் வணங்கும் சாமிகளின் உருவங்களை இவன் கண்ணிலிருந்து மறைத்து வைத்தது ஒருகாலம். 9பிள்ளைகளிலும் அம்மா அப்பாவிற்கும் அண்ணன் அக்காக்களுக்கும் வில்லங்கம் பிடித்த இளைய பிள்ளையவன்.

இயல்பிலேயே அவன் வாசிப்புப்பழக்கம் மொழிகளைக் கற்றுக்கொள்தல் அவனுக்குக் கொடையாயிருந்தது. பைபிள் , பகவத்கீதை , குரான் அடங்கலாக இராமாயணம் முதல் உலகப்புரட்சியாளர்கள் வரை படித்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் அவனிடம் மாற்றுக்கருத்து இருந்து கொண்டேயிருக்கும். வீட்டில் எல்லாரும் சொல்வார்கள் “அவன் ஒரு கலகக்காரன்“ என்று.

1984ம் ஆண்டு தனது 20வது வயதில் கல்வியை இடைநிறுத்திவிட்டு ஈழவிடுதலைக்கனவோடு ஊரிலிருந்து காணாமற்போனவன். தனது சுயவிருப்போடு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டான். இந்தியாவில் பயிற்சி முடித்துத் திரும்பி வந்தவன் அவன் பிறந்த மாவட்டத்திற்கே பணிக்காய் அனுப்பப்பட்டவன்.

25வருட போராட்ட வாழ்வு. அரசியல்துறை , புலனாய்வுத்துறை , பொருண்மியம் , வெளியகப்பணி , வெளிநாட்டுக்கல்வி , வெளிநாட்டு ஆயுதப்பயிற்சியென ஐரோப்பா ஆசியா ஆபிரிக்காவெல்லாம் அலைந்து தாய்நாட்டுக்கான பணிகளில் தன்னை அர்ப்பணித்தவன்.
அவனோடு வெளிநாடு வந்த பலர் வந்த இடங்களில் நின்றுவிட்ட பின்னரும்….., நாடு நாடுதந்த கல்வி , உயர்வு அதையெல்லாம் இன்னொரு நாட்டில் முதலீடு செய்ய விரும்பாமல் தாயகத்திற்கே திரும்பிய உன்னதபோராளி.

கடைசி யுத்தமுனையிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு காடுகளால் சென்ற அணியோடு கிழக்கிற்குச் சென்றவன். கிழக்கில் கனவோடு இவர்கள் கள நிலமைகளை எதிர்பார்த்திருக்க 2009 மே 18 நினைத்தவையெல்லாம் தவிடுபொடியாகி அவனும் அவனோடு பலரும் தனித்துப் போனார்கள்.

அவன் நம்பிய தலைமை அவன் நேசித்த தோழமைகள் அவன் தோழோடு தோழ் நின்ற பலரை யுத்தம் விழுங்கியிருந்தது. இனி வாழ்வா சாவா என்ற நிலமையில் பிரமை பிடித்தாற்போலக் கழிந்த நாட்கள் அவை. அடுத்த கட்டம் என்ன செய்வதென்று அறியாத நிலமை…..தன்கூட இருந்தவர்களை நண்பர்களின் உதவிகளை நாடி மத்தியகிழக்கு நாடுகள் அயல்நாடென அனுப்பிவிட்டான்.

அன்று தன்னால் செய்ய முடிந்தவற்றையெல்லாம் செய்து மிஞ்சியவர்களுக்கான பாதையொன்றை அமைத்துவிட்டு தனது கடைசி முடிவைத் தேடிக்கொண்டிருந்த நேரம்….அவனது சில நண்பர்கள் நாட்டைவிட்டு வெளியில் வருமாறு அழைத்தார்கள்.
எல்லாம் முடிஞ்சுது…..இனி நானென்னத்தைச் சாதிக்கப்போறன்…..இங்கினை ஏதாவது முடிவைப்பாப்பம்……எனச் சலித்தவனைச் சில நண்பர்களின் தொடர் முயற்சி நாட்டைவிட்டு வெளியேறும் முடிவை அவனுக்குள் விதைத்தது.

கடைசிச்சரணடைவு பல்லாயிரம் பேரைச் சிறைகள் தாங்கிக்கொள்ள கொழும்பிற்குள் நுளைந்தான். அவசர அவசரமாக ஏற்பாடுகள் முடிந்து கட்டுநாயக்காவில் காலடி வைத்த நேரம் சாவின் முடிவு எழுதப்பட்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தான். கடும் சோதனைகள் , விசாரணைகள் தாண்டியும் ஏனோ தானோ இனி என்ன நடந்தாலென்ன என்ற வெறுப்போடு தான் விமானம் ஏறினான்.

போயிறங்கிய நாடும் ஐரோப்பாவுமில்லை , அமெரிக்காவுமில்லை ஆசியநாடொன்றுதான். செத்துப்போய்விட்டதாக நம்பிய பலர் அங்கே அவன் சந்தித்தான். எல்லோரும் ஏதோ இருக்கிறார்களே ஒளிய ஒருவரும் உண்மையான நிம்மதியுடனில்லையென்பதை உணர்ந்தான்.

வந்த ஆரம்பம் பழைய நண்பர்கள் பலர் அவனைத்தேடித் தேடி தொலைபேசியில் அழைத்தார்கள். என்னமாதிரி மச்சான்….? என்ன நடந்தது…? என்ன மச்சான் ஏமாத்திப் போட்டியள்….? ஒண்டையும் விடமாட்டியள் நிலமையை மாத்தீடுவியளெண்டு நினைச்சம்….ஏன்….? கடைசி நிலவரத்தை அறியும் ஆவல் பல அழைப்புகளில் இருந்தது. சில உண்மைகளை அவனும் சொல்லித்தான் விட்டான்.

அண்ணையென்னமாதிரி…? இருக்கிறாரோ…? பலர் கேட்டார்கள். அவனது பதில் எல்லோரையும் போல வருவார் அல்லது வரலாம் , அல்லது அவருக்கு மரணமில்லையென்று இல்லாமல் 25வருடம் தனது அனுபவங்களையெல்லாம் திரட்டிச் சொன்ன பதிலோடு பலர் அவனைத் தொடர்பிலிருந்து அறுத்துவிட்டார்கள். பொய் சொல்ல மனம் வரவில்லை ஆகையால் பல உண்மைகளை அவன் தனது பழைய நண்பர்களுக்கு மறைக்காமல் சொன்னான். அவனது அரிச்சந்திர நேர்மை அவனைப் பல நண்பர்கள் கேணைப்பயலெண்டும் சொன்னார்கள்.

இவனுக்கென்ன தெரியும் லூசுப்பயல்…..உண்மை சொல்றாராம்……சமாதான காலத்தில் அவர்கள் அழைத்த போது கூட போக மறுத்து 2தசாப்தங்களைக் கழித்தவர்களே அவன் சொன்ன யாவும் பொய்யென்றார்கள். பலநேரங்களில் அதையெல்லாம் நினைத்து அழுததும் உண்டு சிலநேரம் தனது நண்பர்களை நினைத்துச் சிரித்ததுமுண்டு.

மெல்ல மெல்ல நண்பர்களின் தொடர்புகள் விடுபட்டு ஒருவரும் அவனை இப்போது நினைப்பதேயில்லையென்ற அளவுக்கு விட்டுவிட்டார்கள். வறுமை அவனையும் அன்னியத் தெருவில் கோவில்களிலும் யாராவது ஏதாவது கொடுத்தால் தான் அன்றாட உணவென்ற நிலமைக்கு நிலமை அடித்துக் கொண்டு போய் ஒதுக்கியிருக்கிறது.

இளமை சுருங்கி 47வயதில் தனித்துப் போயிருக்கிறான். அவனுக்கென்று குடும்பம் இல்லை குழந்தைகள் இல்லை நோய் வந்து சுருண்டாலும் தானே தனக்காக உடல் நொந்து வலித்தாலும் எல்லாமும் தானாக விரக்தியின் விளிம்பில் வாழ்கிற ஒரு 25வருட அனுபவம் மிக்க சொத்து அவன்.

இன்னும் அறுபடாத தொடர்போடு ஒரு தோழி அவனோடு தொடர்பில் இருக்கிறாள். அவனுக்கான இப்போதைய சின்ன ஆறுதலாக அவள் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து அவனது சுகநலன்களை விசாரிப்பாள். அள்ளிக் கொடுத்து அவனை மாளிகையில் வாழ வைக்க வசதியற்ற அவளால் சில தடவைகள் சிறிய சிறிய உதவிகளை மட்டுமே செய்ய முடிந்தது.

ஏன் கலியாணம் கட்டாமல் இருந்தீங்கள்…..?

கட்டியிருந்தா இப்ப என்ரை பிள்ளையளும் உங்களிட்டை கையேந்தியிருக்கும்….நீங்கள் மாவீரர் குடும்ப லிஸ்டிலை என்னை வைச்சு விளக்குக் கொழுத்தியிருப்பியள்…..அது நடக்கேல்லயெண்டது கவலைபோல….

அப்ப நீங்க ஒருதரையும் காதலிக்கேல்லயா….? கனபேரைக்காதலிச்சிருக்கிறேன்…..கனபேரா…? அப்ப ஒருத்தியும் சரிவரேல்லயா….? சொல்லி முடிக்க விடுபிள்ளை…..முதல் நான் காதலிச்சது எனக்குப்படிப்பிச்ச ரீச்சரை…..பிறகு காற்சட்டை போட்ட காலத்தில நடிகை சிறீதேவியை…..சிறீதேவி போனிகபூரை கட்டாமலிருந்திருந்தா முயற்சி செய்து பாத்திருப்பன்…..

அவன் தனது அந்த நாள் ஞாபகங்களையெல்லாம் சுவையோடு சொல்லிச் சிரிப்பான்.
அப்படித்தான் கதை வாக்கில் ஒருநாள் அவன் தோழி கேட்டாள்…,

இங்கினை ஒரு சிறீதேவியைப் பாப்பமோ….? பாருங்க இனியென்னேயிறது…..பகிடி பகிடியாகக் கதைச்சது உண்மையாக அவனுக்கொரு சிறீதேவியை அவன் வாழும் ஏழைநாட்டில் சந்தித்தான்.

தமிழ் முகத்தைப் பார்த்த சிறீதேவி அவனோடு பேசினாள். சுவிற்சலாந்திலிருந்து அங்கே வந்திருப்பதாகவும் யாரோ சாத்திரக்காரனை அங்கே சந்தித்து பரிகாரம் செய்ய வந்ததாகவும் சொன்னாள். 47வயதில் காதலென்ன கவிதையென்ன என்றிருந்தவனின் தலைக்குப் பின்னால் பிரகாஸ்ராஜ்ஜிற்கு லைற் எரிஞ்சமாதிரி லைற் எரிஞ்சுது…..சிறீதேவியும் தனிக்கட்டை காதலிச்ச மச்சான் கைவிட்டதாலை சிறீதேவி பிரமச்சாரியம் காப்பதாகவும் சொன்னாள்.

அவனைப்பற்றி அறிஞ்சதும் சிறீதேவிக்கு அவன்மீது காதலாம். பொருத்தம் பாக்க வேணுமெண்டு அவனது பிறந்த திகதி நட்சத்திரம் கேட்டாள் சிறீதேவி. 3ம் 4ம் 5ம் 6ம் வீடுகளில் ராகு , கேது , வியாழன் , புதன் என கனக்க சிறீதேவி சொன்னாள்.

அவன் இருக்கிறதுக்கு முன்னால் வீட்டில் தெலுங்கன் , பின்னால் வீட்டில் கன்னடன் ,அயல் வீட்டில் இலங்கையன் தான் இருந்தார்கள். ஆனால் சிறீதேவி கன வீடுகள் அவன் சாதகத்தில் இருப்பதாகச் சொன்னாள். அவனைவிட ஒருவன் தனக்கு கிடைக்கமாட்டானென்று 5சாத்திரிகள் சொன்னதாகச் சொன்னாள். ஆனாலும் அவனுக்கு சில தோசங்கள் நீங்கள் பரிகாரங்கள் செய்ய வேண்டுமென்றாள்.

வந்த சனியன் நிண்ட சனியனையும் சேத்துக்கட்டினது இதுதானோ…..? காலைப்பாம்பு சுற்றினமாதிரியிருந்தது சிறீதேவியின் கடவுள்களும் சாத்திரமும். தப்ப வழிவிடாமல் சிறீதேவி அவனைச் சுற்றிக் கொண்டது. சிறீதேவிக்குத் தான் ஒரு நாத்திகன் கடவுளை நம்பாதவன் சாத்திரங்களை நம்பாதவன் என்றெல்லாம் தனது அருமை பெருமைகளைச் சொன்னான். சிறீதேவி விடுவதாயில்லை.

வாழ அந்த நரகத்திலிருந்து தப்ப வேறு வழியில்லை…..நம்பிய நண்பர்களும் அவனைத் தெருவில் விட்டுவிட்டார்கள்….அன்றாடச் சீவியத்துக்கு அல்லாட்டமான நேரம் கொள்கையும் இலட்சியமும் என்னத்தைக் கொண்டு வந்து தரும்…..? கடைசியில் சிறீதேவியிடம் சரணடைந்தான்.

தனது தலைக்குப் பின்னால் எரிந்த சிறீதேவி லைற்றைப் பற்றித் தோழிக்குச் சொன்னான். அவளுக்கு அவனது மாற்றத்தில் நம்பிக்கையில்லை….உண்மையாவா…? ஓம்…..! இப்பிடியே போனா ஒருநாளைக்கு என்ரை பிணமும் அனாதையாய் போயிடும்….! எங்கினையும் போயிடலாமெண்டுதான் அவாவுக்கு ஓமெண்டு சொன்னனான்…..அதுவும் ஒரு அப்பாவியா இருக்குது…..84ம் ஆண்டு சுவிஸ் வந்தவவாம்…..நாடு பிரச்சனை சாவு அதுகளைப்பற்றி ஒண்டும் ஆளுக்கு விளக்கமில்லை…கடவுள் சாத்திரம்…அதோடை இருக்கிறா…..அதான்….

தனக்குள்ளிருந்த தனது வாழ்வு மீதான கனவுகள் கற்பனைகள் எதிர்பார்ப்புகள்…..தனக்கு வர வேண்டிய துணை பற்றிய ஒருகாலத்து எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் தனது இயலாமைக்குள் புதைத்துக் கொண்டு சிறீதேவிக்குச் சம்மதம் தெரிவித்தான். சிறீதேவி சுவிஸ் போய் அவனை சுவிஸ் எடுப்பதாகச் சொல்லிவிட்டுப் போனாள். காதல் கலியாணம் உன்னோடு தான் என்ற சிறீதேவி அவனுக்காக ஒரு சதத்தையும் கொடுக்கவுமில்லை உதவவுமில்லை. நாளுக்கு 10முறை காதலோடு கதைபேச சுவிசிலிருந்து தொடர்பு கொள்வாள்.

பசியோடு அவனிருக்க சிறீதேவி தான் செய்த உணவுகள் பற்றி வணங்கும் சாமிகளுக்காக செலவளிக்கும் பணம் பற்றியெல்லாம் சொல்லுவாள். சிறீதேவி தொலைபேச அவன் கண்ணீரோடு தனது வறுமை பற்றி நினைத்து வருந்துவான்.

அன்றைக்கொரு வெள்ளிக்கிழமை. இரவு 2.45மணி. சிறீதேவி தொலைபேச அழைத்தாள். என்னைக் குறைநினைக்கப்படாது…..ஆர் கே.பி , ஆர் கருணா…? அவன் கே.பி. யார் , கருணா யாரென்றெல்லாம் விளங்கப்படுத்தினான்.

நான் இண்டைக்கொரு நெல்லியடிச் சாத்திரியிட்டைப் போனனான்….. என்ரை அண்ணியும் நானும் தான் அங்கை நிண்டனாங்கள்…..அவர் என்ரை கடந்த காலம் உங்களைச் சந்திச்சதெல்லாம் அண்ணீட்டைக் கேட்டிட்டு பூதக்கண்ணாடியாலையெல்லாம் பாத்திட்டு நல்லாத் தான் சொன்னவர்…திடீரெண்டு சோபாவில இருந்த மனிசன் எழும்பி ஆட வெளிக்கிட்டுட்டார்…… அவருக்கு வளமையா கலை வாறதில்லை…..இண்டைக்கு என்ரை குறிப்பைப் பாத்தவுடனும் கலைவந்திட்டுது…அப்பதான் சொன்னார் நீங்கள் துரோகியாம் கருணா கே.பியின்ரை ஆளாம் உங்களைக் கலியாணம் கட்ட வேண்டாமாம்…உங்களைக் கட்டினா நான் கெதியில விதவையாகீடுவனாம்…..அண்ணாவும் அண்ணியும் சொல்லீட்டினம் கருணான்ரை கே.பீன்ரை ஆளெண்டா சரிவராதாம்……

சிறீதேவி அவனது தலைக்குப் பின்னால் பிரகாசித்த லைற்றை ஒரேயடியாய் அடிச்சு நூத்துப்போட்டு தொலைபேசியை அடித்து வைத்துவிட்டாள்.

அவனுக்கு ஒரே குழப்பம். நெல்லிடியச்சாத்திரிக்கு என்னெண்டு உருவந்தது….? எப்பிடி அவனை கே.பி,கருணா துரோகக்குழு என்று சாத்திரம் சொல்ல முடிஞ்சது…? அதுவும் அவன் ஓடியொழிச்சு வந்து இருக்கிற அன்னியநாட்டில ஒரு அரசியலும் செய்யவுமில்லை அறிக்கைகள் எழுதவுமில்லை….அன்றாடச் சோற்றுக்கு சிங்கியடிக்கிற நிலமையில் இருந்தவனைத் தேடி வந்த சிறீதேவியை தட்டிப்பறிச்சுக் கொண்டு போன நெல்லியடிச் சாத்திரிக்குத் தன்மேல் என்ன கோபம் என்பது விளங்கவேயில்லை….!!! நினைக்கச் சிரிப்பும் வந்தது.

தோழிக்கு மிஸ்கோல் விட்டான். நித்திரை வரவேயில்லை. கையிலிருந்த சில்லறையும் காலியாகிவிட்டிருந்தது. இடம் கொடுத்தவர்களுக்கு 2மாத வாடகையும் கொடுக்கவில்லை. சிறீதேவி மூலம் தனக்கொரு வாழ்வு வருமென்று நம்பியது போய்……கண்முன்னால் ஒரு வனாந்தரம் அவனைச் சூழ்ந்து கொண்டது.

என்ன பிள்ளை மறந்திட்டீயளா ? எங்கை ஒரே வேலை….அதானண்ணை…...சிறீதேவி என்னவாம்….எப்ப சுவிஸ் வாறியள்….? தோழி கேள்விகளை அடுக்கினாள்….
லைற் நூந்து போச்சுது பிள்ளை…. சிறீதேவி சந்திச்ச நெல்லியடிச் சாத்திரக்காரனைப்பற்றிச் சொன்னான். அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை…..

இதென்ன கறுமாந்திரம் பிடிச்சது…! சாத்திரிமாரும் இப்ப கே.பின்ரை ஆள் கருணான்ரை ஆளெல்லாம் சாத்திரத்திலயும் சொல்லத் துவங்கீட்டினமோண்ணை….???

சுவிஸ் சிறீதேவி கட் ஆராவது ஒரு சிறீதேவியைப் பாருங்கோ பிள்ளை….இப்பிடியே இருக்கேலாது….. தலையிடிக்குது….போற போக்கு தெருவில பிச்சையெடுக்கிற நிலமையா இருக்கு…..சினேதன்மாரும் எல்லாரும் கைவிட்டிட்டாங்கள்….உண்மையாத்தான் சொல்றன் என்னாலை சமாளிக்கேலாதாம்…..அங்கையெ அப்ப செத்திருக்கலாம்…..வா வாவெண்டு கூப்பிட்டவங்களும் உண்மையைச் சொன்னதுக்காக கைவிட்டிட்டாங்கள்…..

என்ரை கடைசிக்கனவொண்டிருக்குப் பிள்ளை….நான் சாக முதல் 25வருச அனுபவமெல்லாத்தையும் ஒரு புத்தகமா எழுத வேணும்….இஞ்சித் தேத்தண்ணி ஒராள் இடைக்கிடை போட்டுத்தர குடிச்சுக்குடிச்சு நான் எழுத வேணும்……

எனக்கு விளங்குது இஞ்சித் தேத்தண்ணிக்கேன் இன்னொராள் தேத்தண்ணிக் கடையில போயிருந்து எழுதெண்டு நினைக்கிறீங்கள் பிள்ளை….சீரியசாகச் சொல்லீட்டு இடையில ஒரு வடிவேல் பகிடியும் விடடான். உள்ளுக்குள் ஊசிமுனை கொண்டு குற்றிய வலியையும் தனது வறுமையையும் நினைக்கப் பயமாயிருந்தது…..

சிலவேளை நான் செத்துக்கித்துப்போனாலும் நான் சொல்றதுகளை ஒரு குறிப்பெழுதி வையுங்கோ பிள்ளை…..விவேக்கின் ஸ்ரைலில் அதையும் சொல்லி வைத்தான்…….

விரைவில் தெருவிற்கு வரவிருக்கும் தனது வாழ்வுக்கு சிறீதேவி கைகொடுப்பாளென்ற நம்பிக்கையும் போய் 47வயதை ஞாபகப்படுத்தியது நரைமுடிகள்…….தனது அனுபவங்களை தனது போராட்ட காலங்களையெல்லாம் ஒரு நூலாக எழுதும் கனவோடு ஆற்றங்கரைகளிலும் அடைக்கலம் புகுந்த ஆள்நெரிசல் கூடிய இடங்களிலும் இருந்து தனக்குள்ளான 25வருட வாழ்வை மீளமீள ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

கிடைத்த எத்தனையோ வசதிகள் கோடிக்கணக்கில் இயக்கம் கொடுத்த பணம் யாவையும் நாட்டுக்கானதாகவே வழங்கி இன்று ஒற்றையாய் தனியனாய் எல்லாம் இழந்து போன நிலமையை எண்ணிப்பார்க்க அழுகையோடு கூடிய வெறுப்புத்தான் வந்தது.

தொடர்பில் வந்த தோழி சொன்னாள்….அவன் வாழும் நாட்டில் வந்திருந்த அவன்போன்ற ஒரு முன்னாள் போராளி தூக்கில் தொங்கி இறந்ததாக….தூக்கில் தொங்கியவன் தனது மரணத்திற்கு தானே பொறுப்பென்று எழுதி வைத்தானாம்…..சாகும் போதும் தனது சாவு மற்றவரை அலைக்கக்கூடாதென்று தனது மரணசாசனத்தை எழுதியிருக்கிறான் போல…..

தனக்கும் ஒரு தூக்குக்கயிறு அல்லது ஏதாவதொரு மாற்று தன்னையும் நெருங்குவதை உள் மனம் உணர்த்துவதாக உணர்ந்தான்…..வீரர்களாய் களத்தில் வீழுவோம் விடுதலையின் வேர்களாய் முளைவிடுவோம் என்று தோழர்களை வழியனுப்பிய துணிச்சல் தற்போது அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் போவதாக உணர்ந்தான். தனது இப்போதைய மாற்றங்களைத் தோழிக்குச் சொல்லத் தொடங்கினான்…..

10.07.2011

Sunday, July 31, 2011

போரால் பாதிக்கப்பட்ட படுவான்கரையின் இன்றைய கல்வி நிலமை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து பல மாதங்களுக்குப் பின் மீண்டும் குடியேறினர்.

இப்பிரதேசத்தில் உள்ள மக்களில் அனேகமானோர் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணம் கற்றலுக்கான வளங்கள் இங்கு குறைவாகக் காணப்படுவதும் மக்களின் வறுமை நிலையுமேயாகும்.

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 15500
மொத்தச் சனத்தொகை – 23988 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 24

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 18000
மொத்தச் சனத்தொகை – 38282 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 43

இவர்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள:-
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
இணையத்தளம் : www.nesakkaram.org

Friday, June 24, 2011

என்ர நிலமையை முதலாவதா எழுது…

XXXXஅக்காவும் XXXXXXஅண்ணையும் இங்காலை வாங்கோ….
உங்களைத்தான் இங்காலை வாங்கோ….

அத்தனைபேருக்குள்ளும் அவளையும் அவனையும் இனம்காட்டி அழைத்தவன் எதிரியின் இனத்தைச் சேர்ந்தவனில்லை. இவர்கள் பணியாற்றி அரசியல் பிரிவில் அவனும் பணியாற்றியவன். தூXXன் என்ற பெயரைக் கொண்டவன். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவன்.

யுத்தம் முடிந்து நிராயுதபாணிகளாய் நிரையில் நின்றவர்களில் பலரை புலிகள் என்பதை இனங்காட்டி மக்களிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டிருந்தான் அவன். எதிரியின் இதயக்கூட்டையே தொட்டுத்திரும்பிய விடுதலையமைப்பின் பலம் நம்பிக்கை யாவும் இன்று தவிடுபொடியாய்…..புலியே புலியைக்காட்டிக் கொடுக்கும் நிலமைக்கு வரக்காரணமானது எது….? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் பெயர்களைச் சொல்லிக்கூப்பிடக்கூப்பிட அவன் சொல்லுமிடத்தை நோக்கிப் பலர் போய்க் கொண்டிருந்தார்கள்.
XXXXஅக்கா XXXXXXஅண்ணை உங்களைத்தான் கூப்பிட்டனான்…. அவன் திருப்பியும் அழைத்தான்.

தொண்டைக்குழியில் மிதிச்சமாதிரியிருந்தது அவனது அழைப்பு. அந்த இடத்தில் நின்ற அனைவரும் அவனையும் அவளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். இருவரும் சுருக்குக்கயிறு கழுத்தில் சுற்றுவதை உணர்ந்தார்கள்.

கணவனின் கையிலிருந்த குழந்தையைத் தான் வாங்கிக் கொண்டாள். தூறிக்கொண்டிருந்த மழைத்தூறலில் குழந்தையை நனையாது கையில் கொண்டு வந்த துவாயினால் போர்த்தினாள்.

நடவுங்கோ……

என சற்று அழுத்தமான தொனியில் சொன்னான் அவன். மாற்று வழியின்றி அவன் பின்னே சென்று கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த மறைப்பிற்குள் செல்லுமாறு கையைக் காட்டினான்.

உள்ளே போனவர்களை விசாரணை செய்ய 4பேர் இருந்தனர். அதிகம் கடவுளர்களை நம்பாதவள் அந்த நிமிடத்தில் எல்லாக்கடவுளர்களின் பெயர்களையும் உச்சரித்தாள். உள்ளுக்குள் ஆயிரம் வேண்டுதல்கள் செய்தாள். இந்தக் கைகளிடமிருந்து தப்பினால் தான் அழைத்த கடவுளர்க்கெல்லாம் நேர்த்திகள் செய்வேனென்று நினைத்துக் கொண்டாள்.
அங்கே அவர்களை விசாரிக்கவெனத் தமிழ் தெரிந்த அதிகாரியும் ஒருவன் இருந்தான். அவன் முஸ்லீம் இனத்தவனாக இருக்க வேண்டும். அவனது தமிழ் வித்தியாசமாக இருந்தது.
வட்டுவாகல் தாண்டி வரும்போது அந்த அதிகாரியைச் சிவிலுடையில் இவர்கள் கண்டார்கள். அவன் சரணடைய வந்தவர்களைத் திட்டிய திட்டுகளை இவளும் கேட்டுக்கொண்டுதான் நடந்தாள். அவன் முகத்தைப் பார்க்கவே பயமாயிருந்தது. அங்கே பேசிய தூசணத்தால் இங்கே பேசாமல் இவர்களது விபரங்களைப் பதிவு செய்து கொண்டான்.

தூXXன் உள்ளே வந்தான் அவர்களைத் தன்னோடு வரச்சொல்லி அழைத்தான்…..அவளது அவனைத் தூXXனைக் கூட்டிப்போகச் சொன்னான்….அவளைத் தான் விசாரிக்கப் போவதாகச் சொன்னான்.

வட்டுவாகலில் சயனைட்டை அடிப்போம் அல்லது குண்டைக்கட்டி வெடிப்போமென்று கேட்டவளுக்கு….எல்லாரும் தான் போயினம் நாங்கள் ஏன் சாவான்….வா போவம்….எல்லாருக்கும் ஒத்ததுதான……என்றவன் மீது எரிந்து விழுந்தாள்.

அப்ப எங்கடை கொள்கையெண்டு நாங்க கத்தினதெல்லாம் ஆருக்காக…..?

எடியம்மா நீ அரசியல் செய்தனியடி….உன்னோடை கதைக்கேலாது……இந்தக் குழந்தையை என்ன செய்யிறது….? உன்ரை கையாலை உன்னாலை கொல்லேலுமே….? அதைச் செய் நான் நீ சொல்ற குப்பியை அடிக்கிறன் அல்லது குண்டைக்கட்டிறன்…..

அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. குழந்தை பிறந்து 7வது மாதமே காவலரணில் கடமையில் இருந்தவள். தான் இறந்து போனால் இயக்கம் தனது குழந்தையை வாழ வைக்குமென்ற தைரியத்தில் சென்ற மாதம் வரை ஒரு அணியை வழிநடத்திக் கொண்டிருந்தவள்.

கட்டாய ஆட்பிடியை எதிர்த்துக் குரல் கொடுத்து அரசியல்பிரிவினரிடம் எதிர்ப்புகளை வாங்கிய பின்னும்…, கடைசி முயற்சியாக ஸ்பீக்கரைச் சுமந்து பதுங்குகுளிகளிலும் குடும்பங்களுடனும் போய் ஒளிந்து கொண்ட தளபதிகள் போராளிகளையெல்லாம் இறுதி யுத்தம் செய்ய வாருங்கள் என அழைத்தாள்.

ஆனால் எதுவித அசுமாத்தமுமின்றிச் சுயநலமாய் பதுங்கியவர்கள் கட்டாயப்பிடியில் அகப்பட்ட பிள்ளைகளைப் பலிக்கு அனுப்பிவிட்டு ஒளிந்திருக்கும் உண்மையை அறிந்த போதுதான் கணவனையும் அழைத்துக் கொண்டு தானும் ஒதுங்கினாள்.

எல்லோரும் நம்புவது போல வெளிநாடுகள் வரும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு குழந்தையையும் கணவனையுமே காப்பாற்றத் துணிந்தவளால் அந்தக் குழந்தையைத் தன்கையால் அழிக்கத் தைரியம் வரவில்லை. அழுதாள் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுதாள்.
000 000 000

வீட்டில் அவளோடு கூடப்பிறந்த 3அண்ணன்களும் அடுத்தடுத்து மாவீரர்கள் ஆனார்கள். அம்மா அப்பாவுக்கு மிஞ்சிய அவளும் கரும்புலியாக கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்த காலங்களில்…..,விதையாய் வீழ்ந்து போன 3 அண்ணன்களையும் விதைத்த துயிலும் இல்லங்களில் போயிருந்து அவர்களது கனவுகளை நனவாக்குவேனெனச் சத்தியம் செய்வாள். தானில்லாது போனால் அன்புச்சோலை மூதாளர் பேணலகம் தனது தாயாரையும் தந்தையையும் காப்பாற்றுமென்று நம்பினாள்.

கரும்புலியாகும் நாளுக்காக் காத்திருந்தாள். ஆனால் கரும்புலியாய் அவள் போகும் விருப்பை மாற்றிக் கொள்ளுமாறு தலைவவரிடமிருந்து பதில் வந்தது. வீட்டிலிருந்து 3வீரர்களைத் தந்த குடும்பத்திற்காக அவள் களப்பணிகளிலிருந்து விலகி காலம் முழுவதும் அரசியல்பணி செய்ய வேண்டுமென்ற அறவித்தலும் அவளுக்கான விசேட அன்பளிப்பு ஒன்றும் தலைவரால் வழங்கப்பட்டிருந்தது.

தலைவனின் சொல்லைத் தட்ட முடியாது அரசியல் களத்தில் ஊருராய் இறங்கிப் பணி செய்யத் தொடங்கினாள். பெண்கள் மட்டத்தில் பல வேலைகளை முன்னெடுத்துச் செய்து கொண்டிருந்தாள். தனது செயல்கள் தன்னைப்போலவே தூய்மையானதாயிருக்க வேண்டுமென்பதில் எப்போதுமே கவனத்துடன் இயங்கினாள். அவளது நேர்மையும் தைரியமும் பல தடவைகள் சோதனையாகவும் மாறிய அனுபவங்கள் நிறையவே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அவள் நேசிக்கும் தூயதலைவன் உள்ளவரை யாவையும் வென்றுவிடுவேன் என்ற தைரியத்தோடு கடமையில் கவனமாக இருந்தாள்.

திருமணப்பேச்சு எழுந்த போது அதிகம் அக்கறைகாட்டவில்லை. ஊனமுற்றவர்களோடும் சமூகத்து ஊனங்களைச் சுமந்து வாழும் பெண்களுடனும் தனது வாழ்வை முடித்துவிடவே விரும்பினாள். ஆனால் அவளை ஒருவன் அவள் பணியாற்றிய பிரிவிலிருந்து காதலித்தான். அவனும் களத்தில் காயமடைந்து ஊனமுற்றிருந்தான். அவனோடு பேசும் வாய்ப்புகள் கிடைத்து அவளும் அவனை நேசித்தாள். ஒருநாள் பெரியவர்கள் முன்னிலையில் அவளுக்கும் அவனுக்கும் திருமணம் நிகழ்ந்தது.

ஒருமாதம் கிடைத்த விடுமுறையை இருவரும் மறுத்துத் தங்கள் வேலைகளில் கவனமாயிருந்தார்கள். காலையில் இருவரும் வீட்டை விட்டு வெளிக்கிட்டால் இரவுதான் திரும்பியும் வருவார்கள். சிலவேளைகளில் யாராவது ஒருவர் வீட்டுக்கு வருவதுகூட இல்லை. கடமைக்குப் போன இடத்திலிருந்து தகவலை அனுப்பிவிட்டு வாரக்கணக்ககாகக்கூட நின்று விடுவார்கள்.

எங்கே போனாலும் அவள் அந்த ஊர்களின் மகளாகிவிடுவாள். ஊரில் மிஞ்சியிருக்கும் ஆச்சிமாருடன் அடுப்படியில் போயிருந்து அவர்களது கடந்த காலங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாள். பல கிராமங்களில் அவள் செல்லப்பிள்ளை. அவளுக்காக கோவிலில் அரிச்சனை விபூதியென்று அவளுக்காக அனுப்புவார்கள். ஒரு அரசியல் போராளி எப்படி இயங்க வேண்டுமென்பதற்கு அவள்தாள் சிறந்த உதாரணம். சமாதான காலத்தில் ஊர்பார்க்கப் போன பலர் அவளிடமே சொல்லியிருக்கிறார்கள்.

சமாதானகாலத்தில் கிடைத்த வசதிகள் வாய்ப்புகளைப் பலர் பலவாறாகப் பயன்படுத்தினார்கள். காணிகள் வாங்கினார்கள் , வீடுகள் கட்டினார்கள் , வசதியான வாழ்க்கையை வாழ்ந்தர்கள் , வீடுகளில் வேலைக்கு ஆட்களைக்கூட வைத்திருந்தார்கள். ஆனால் அவளும் அவனும் திருமணமான போது போட்டுக் கொண்ட மண்வீட்டைத்தவிர எதையும் தங்களுக்காகச் சேர்க்கவில்லை. அவர்களுக்காகக் கிடைக்கவிருந்த வசதிகளையெல்லாம் தங்கள் இலட்சியத்திற்காகவே அர்ப்பணித்து அவர்கள் காணும் தாயகக்கனவுக்காகவே வாழ்ந்தார்கள்.

இயக்கக்காசிலிருந்து ஒரு சதம்கூட வீணாகக்கூடாதென்று கவனமாயிருப்பாள் அவள். மாதாந்தம் கைச்செலவுக்காகக் கிடைக்கும் 500ரூபாவைக்கூட அவள் சேமித்து ஆதரவற்ற குழந்தைகள் பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறாள்.

கைச்செலவுக்காசு தவிர மேலதிக கணக்கெழுதி வரும் கணக்குகளை உரிய சான்றுகளைத் தேடி கடைகளெல்லாம் ஏறியிறங்குவாள். இயக்கம் இத்தனை வளர்ச்சிகாண தாம் உழைத்த உழைப்பு அர்ப்பணிப்புகளைப் பற்றி மூத்த போராளிகள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஒரு துப்பாக்கிக்காக ஒரு தோட்டாவுக்காக ஒரு நேர உணவுக்காக என எத்தனையோ கட்டுப்பாடுகள் சேமிப்புகள் செய்து இன்று இலகுவாய் வசதிகளைப் பெறும் நிலைக்கு இயக்கத்தை வளர்த்து விட்டவர்களைப் பற்றிப் பிள்ளைகளுக்கு வகுப்பெடுக்கும் நேரங்களில் சொல்லுவாள். ஒரு சதம்கூட வீணாகாக்கூடாது என்பதனை அடிக்கடி நினைவுபடுத்துவாள்.

ஒருத்தி அடிக்கடி மேலதிகமாகக் கணக்கு அனுப்புவாள். அவள் ஒரு பெண்கள் இல்லத்திற்காக செலவு செய்ததாகக் கணக்குக் கொடுப்பாள். அந்தத் தோழி தனது பிறந்தநாளுக்கு கேக்செய்வித்து மற்றையவர்களுக்குக் கொடுத்ததாக அறிந்தாள். அவ்விடயத்தை ஆராய்ந்தபோது குறித்த இல்லத்தின் பிள்ளைகளுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் பிள்ளைகளுக்கு வழங்கப்படாமல் தனது பிறந்தநாளுக்கு கேக்குக்கு பயன்படுத்தியிருக்கிறாள் என்ற உண்மையை அறிந்த போது தோழியை எச்சரித்து விட்டாள்.

ஆனால் அந்தத்தோழி தனக்குள்ள அதிகாரத்தை வைத்துத் தொடர்ந்தும் பணவிடயத்தில் தவறுகள் செய்து வந்ததைப் பொறுக்காமல் ஒருநாள் உரியவளை அலுவலகத்தில் வைத்து அடித்துத் துரத்திவிட்டாள். அதற்கான தண்டனையைப் பொறுப்பாளர் கொடுத்தபோது சத்தமின்றிப் பெற்றுக் கொண்டாள். ஆனால் தவறுகள் நடப்பதனை மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

ஒருமுறை ஒருபெரியவரின் தவறுகளை ஒருவர் மூலம் ஒளிப்பதிவு செய்து தலைவருக்குக் கொடுக்குமாறு அனுப்பினாள். ஆனால் அவள் அனுப்பிய விடயத்தை கொண்டு சென்றவன் தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் கொடுத்துவிட்டான். தமிழ்ச்செல்வனின் அன்புக்குரிய அந்த நபரே இவளிடம் வந்து சொன்னார்.
நல்ல பேட்டிதான் குடுத்திருக்கிறீர்…..! ஆர் பிழை செய்தாலும் பிழைதான்…. எனச் சொன்னவர் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவுமில்லை…..அதனைத் தலைவருக்குச் செல்லவும் விடவில்லை. அவள் சொல்லவிரும்பிய விடயங்கள் எதுவும் தலைமைக்குப் போகாது இடையில் தங்கிவிட்டதோடு சற்றுச் சோர்ந்து தான் போனாள். ஆனாலும் கடைசிவரையும் தனது கடமைகளைச் சரியாகவே செய்தாள்.

2009ம் ஆண்டு தொடக்கத்தோடு ஓய்ந்து போனாள். கட்டாயப்பிடியை எதிர்த்தவர்களுள் அவளும் முக்கியமானவளாக இருந்தாள். மக்களுக்கான போராட்டம் மக்களிடமிருந்து தனித்துவிடக்கூடாதென்று விரும்பிய பலரைப்போல அவளும் அவ்விடயத்தில் அவதானமாக இருந்தாள். ஆனால் எது நடக்கக்கூடாதென்று கடைசிவரையும் கவனமாயிருந்தாளோ அது நடந்து கொண்டிருந்தது. மனசால் அவள் நொந்து போனாள். தனது காதல் கணவனுடன் அதுபற்றியெல்லாம் வாதிடத்தொடங்கினாள். ஒவ்வொரு விடயங்களையும் காணுகின்ற நேரங்களில் எல்லாம் அவளுக்குள் பொங்குகிற எரிமலையைக் கட்டுப்படுத்தி மெளனமாகினாள். அவர்கள் இருவராலும் மாற்றிவிட முடியாத மாற்றங்கள் அங்கு நடைபெறத் தொடங்கியது.

அண்ணை பாவம்….அவனுக்குச் சொல்லியழுவாள்……அவளுடன் சேர்ந்து அவனும் தான் அழுவான். அதைவிட எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. ஏப்றல்மாதம் எல்லாக் கனவுகளையும் தனக்குள் புதைத்துக் கொண்டாள். தனது குழந்தையை மட்டும் காப்பாற்ற விரும்பியவள் தாயாருடன் அனுப்பிய குழந்தையைத் தன்னுடன் கூட்டிவந்தாள். மனவுளைச்சல் ஏமாற்றம் பதுங்குகுளி வாழ்க்கை இருக்கும் வரை இருந்துவிட்டுப் போவோமென்ற விரக்தி எல்லாம் சேர்ந்து அவளது அந்தநாள் துணிச்சல் வீரம் எல்லாம் தொலைந்து போய்விட்டது.
000 000 000

பிணங்களாலும் இரத்தத்தாலும் நிறைந்த மண்ணலிருந்து அவரவர் தங்கள் உயிர்களை மட்டும் காத்துக் கொண்டு அந்தக் கடைசி நிமிடம் வரை எதிர்த்தவர்கள் முன்னால் சரணாகதியாக வேண்டிய நிலமைக்கு ஆளானார்கள். வசதியிருந்தவர்கள் கடலால் புறப்பட்டார்கள்…..வசதியற்றவர்கள் வேறு வழியின்றி தரையால் சரணடையும் செய்தி இவர்கள் காதிலும் எட்டியது. அவளோடு வாழ்ந்தவர்கள் பலர் தங்களைத் தாங்கள் அழித்துக் கொண்டதையறிந்தாள். எதிரியிடம் சரணடைந்து சாவதிலும் பார்க்க தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வது மேலெனக்கருதியவள் தனது முடிவைக் கணவனிடம் சொன்னாள்.

எல்லோரும் உயிருடன் போக நாங்கள் மட்டும் சாக வேண்டுமா என்றவனுடன் 2நாள் போராடினாள். கடைசியில் தான் பெற்ற குழந்தையைக் கொன்றுவிடு சாகிறேன் என்றவனின் வார்த்தைகளோடு அதையும் கைவிட்டாள்.

அன்றுவரை எதிரியாயிருந்தவர்களிடம் அவளும் அவனும் சரணடையும் முடிவோடு பதுங்குகுளியைவிட்டு வெளியேறினார்கள். எங்கும் சனக்கூட்டம் காணவில்லையென்றவர்கள் கூட வரிசைகட்டிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

எங்கையிருந்தடா வாறியள் பே….பூ…..மக்களே… உவ்வளவு பேரும் சேந்து கல்லாலை எறிஞ்சிருந்தாக்கூட நாங்க ஓடியிருப்பம்…. என்ன பூ…..போராட்டம் நடத்தினியள்…….உள்ளை போய் சாகப்போறியள் போங்கோ…..

அந்த அதிகாரி தூசணத்தால் பேசிக்கொண்டிருந்தான். அவன் அக்கறையுடன் சொன்னானா இல்லையா என்பது தெரியாது. ஆனால் ஏதோவொரு ஆதங்கம் அவனுக்குள்ளும் இருப்பது போலிருந்தது. அவன் சொன்னது போல இவ்வளவு பேரும் களத்தில் இறங்கியிருந்தால் கதை மாறியிருக்கும்…..அவளும் நினைத்தாள்……
000 000 000

அவர்கள் இறக்கிவிட்ட இடத்தில் சனங்களுடன் அவளும் அவனும் காவலிருந்தார்கள். போராளிகள் தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் குழந்தையோடு பொதுவானவர்கள் வரிசையில் போயிருந்தார்கள்…..மக்களுடன் அதிகம் பணிசெய்தவளை மக்களே தங்களுடன் வைத்திருக்க கொள்கையோடு போராளியாக இருந்தவன் அவளையும் அவனையும் இனங்காட்டி பெயர் சொல்லியழைத்து இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான்.

அவளை அந்த அதிகாரியுடன் விட்டுவிட்டு தூXXன் அவளது அவனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனான்.

பிள்ளை கவனம்…..நான் விசாரணை முடியாத் திரும்பி வருவேன்……சொல்லிவிட்டு அவன் போனான்.

அந்த அதிகாரி அவளையும் குழந்தையையும் போராளிகளின் பதிவில் பதியாமல் சாதாரணமானவளாப் பதிவு செய்தான். என்னாலை உங்களுக்காக இதத்தான் தங்கைச்சி செய்ய முடியும்….மன்னிச்சுக் கொள்ளுங்கோ….சொல்லிவிட்டு அவளையும் அவளது குழந்தையையும் அனுப்பினான். அவன் செய்த அந்த உதவிக்குத் தனது கண்ணீரால் நன்றி சொல்லிவிட்டுப் போனாள்.

வேற்று இனத்தவன் ஒருவன் அவளைக்காப்பாற்றச் செய்த உதவியையும்……., அவளோடு ஒரே இலட்சியத்தைச் சுமந்து திரிந்த ஒருவனால் அவளுக்காகச் செய்ய முடியாது காட்டிக் கொடுக்கப்பட்டதையும் நினைத்துப் பார்த்தாள்.

தாயகத்துக்காக உயிர் விட்ட தனது 3அண்ணன்களையும் நினைத்துப் பார்க்க அடக்கமுடியாத அழுகை வந்தது. அவளது அண்ணன்களைப் போல எத்தனையோ அண்ணன்களை , தம்பிகளை , தங்கைகளை , தோழிகளைத் தோழில் சுமந்து போய் விதைத்திருக்கிறாள். அப்போதெல்லாம் ஏற்பட்ட ஓர்மமும் எழுச்சியும் இன்று வீணாய்விட்டதாய் உணர்ந்தாள்……எத்தனைபேரின் தியாகங்கள் கொடைகள் யாவும் அவர்கள் கண்ட கனவுகள் போலவே கனவாய்ப் போய்……அவளிடம் மிஞ்சிய இன்றைய சொத்த அவளது குழந்தை மட்டும் தான்……
000 000 000

முகாமிலிருந்து விடுதலையாகி ஊருக்குப் போனாள். அவளுக்கு ஆறுதலாய் இருப்பார்கள் என நம்பிய அம்மா அப்பா இருவரையும் தேடினாள். கடைசியாய் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் போன வழியில் அம்மா இறந்துவிட்டதாகவும்…...அவர்களே ஓரிடத்தில் புதைத்துவிட்டுப் போனதாகச் சொன்னாள் பெரியம்மாவின் சின்னவள். அப்பா வவுனியாவில் முதியோர் இல்லமொன்றில் இருப்பதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரியம்மா சொன்னா.

எல்லாம் வெறுமை…..வாழ்ந்த வீடு அவள் இலட்சியம் சுமந்து திரிந்த தெருக்கள் யாவும் மாறிப்போயிருந்தது…..இலட்சியங்களுடன் அவளுடன் வாழ்ந்த பலரை வீதிகளில் சந்தித்தாள். யாரும் யாருடனும் பேசாது போனார்கள். ஆளையாள் தற்காத்துக் கொள்ளும் அவசரத்தை அவர்களது பார்வைகள் விளக்கியது. அவர்கள் விலகுவது போல அவளும் விலகிப்போனாள்…..எல்லாவற்றையும் மறந்துவிடுவோமென முயற்சிக்கிறாள். எதைத்தான் மறப்பது…? எல்லாம் நேற்றுப்போலவும் இன்று போலவும் கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கிறது.

அவள் கண் முன்னே கொண்டு செல்லப்பட்ட அவளது கணவனை 2வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறாள். அவனைப்பற்றி மனிதவுரிமை அமைப்புகள் செஞ்சிலுவைச் சங்கம் என எல்லா இடங்களிலும் பதிவுகள் செய்து தேடிக்கொண்டிருக்கிறாள். அவன் இருப்பானென்ற நம்பிக்கை விடுபட்டுப் போகிறது……மனிதவுரிமைக்குழுவின் முன்னால் சாட்சியம் கொடுத்தால் சிலவேளை அவன் இருக்கும் இடத்தை அறியலாம் என்றார்கள்….விசாரணைக்குழுவின் நேர்மை பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்ததிலிருந்து அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டாள்.

இன்றைய அவளது பிரச்சனை வறுமை. வாழ எதுவுமற்ற வெறுமை. அன்றாடம் தனது குழந்தைக்கான உணவைக் கொடுக்கவே முடியாத தனது நிலமையை மாற்ற உதவிகளைத் தேடி நிறுவனங்களை நாடுகிறாள்…..

சுயதொழில் ஒன்றைச் செய்ய வேண்டும் தன்னை மட்டும் சொந்தமாய் நம்பியிருக்கும் தனது பிள்ளைக்கான ஒரு வாழ்வைக் கொடுக்க வேண்டுமென்ற கனவோடு உதவிகள் செய்வோரையெல்லாம் தொடர்பு கொள்கிறாள்.
000 000 000

அண்மையில் ஊனமுற்ற தனது கைமூட்டில் ஏற்படும் வலிக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தாள். அவளோடிருந்த இன்னொருத்தியைச் சந்தித்தாள்.
எப்பிடியக்கா இருக்கிறீங்கள்……? அவள் கேட்டாள். கண்ணீர் தான் முந்திக் கொண்டு வந்தது. அழுதாள். அங்கே சந்தித்தவளும் அழுதாள். விடைபெறும் போது ஒரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்துச் சொன்னாள்.

இந்த நம்பருக்கு எடுத்துக்கதை ஒரு அக்கா கதைப்பா….ஒராள் மூலம் தொடர்பு கிடைச்சுக் கதைச்சனான். அவையள் ஒரு நிறுவனம் நடத்துகினமாம்…..எங்களைமாதிரியாக்களுக்கு உதவுகினம்….வெளியில உள்ள ஆக்கள் ஆரையாவது உனக்கு ஒழுங்குபடுத்தித்தருவா….எனக்கு சுயதொழிலுக்கு உதவி செய்தவை…..உனக்கும் ஏதாவது செய்வினம்….கேட்டுப்பார்….

வீட்டுக்கு வந்ததும் முதல் அலுவலாக அந்தத் தொலைபேசியிலக்கத்துக்கு அழைத்தாள்.

அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்கோ….

சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள். அடுத்த 5நிமிடத்தில் அவளை அழைத்தது தொலைபேசி. எதிர்முனையில் பெண்குரல். அவளை யாரென விசாரித்தது. அவள் தனது சொந்தப்பெயரைச் சொல்லி அறிமுகம் செய்தாள். தனது தற்போதைய நிலமைகளை விபரித்தாள். அரைமணித்தியால உரையாடலின் பின்னர் பலரைப்பற்றி அந்தக் குரல் விசாரித்தது. அந்தப்பெயர்களில் அவளது இயக்கப்பெயரையும் விசாரித்தாள் மறுமுனையில் பேசியவள். அந்தப் பெயருக்கு உரியவள் தான் தான் என்பதனைக் கூறினாள்.
அடியே நீ இருக்கிறியா…உயிரோடை……முறுமுனையிலிருந்து கேட்டவள் அழுதாள்…..நீ செத்திட்டியெண்டு கேள்விப்பட்டனான்….கனபேரிட்டைக் கேட்டனான்…..ஒருதரும் இல்லையெண்டு சொல்லிச்சினம்….. என்றாள் அவள்.

இருமுனையிலிருந்தும் அழுகையொலிதான்….. சில நிமிடங்கள்…..வார்த்தைகள் வரவில்லை……நாங்க நினைச்சது என்னவோ நடந்து முடிஞ்சது என்னவோ…..எல்லாம் போச்சு…..என மறுமுனையிலிருந்து அழுதவளுக்குச் சொன்னாள்…..

வேலுப்பிள்ளையற்றை மகனாலை முடியாதது இனி ஒருத்தராலும் முடியாதடி….அந்தாள் பேசாம தானும் தன்ரை குடும்பமுமெண்டு வாழ்ந்திருக்கலாம்…..சுயநலமில்லாமல் வாழ்ந்தது தான் அந்தாள் செய்த முதல் தப்பு…..முடிஞ்சா மிஞ்சினவையை வாழ வையுங்கோ…..

தெருவில் விடப்பட்ட தங்களது வாழ்வுபற்றிச் சொன்னாள்…..வன்னிக்குள் மலிந்து கிடக்கும் எல்லா அசெளகரியங்கள் சீர்கேடுகள் பற்றிச் சொன்னாள். அண்மையில் வீதியில் சென்ற போது அவளது உள்ளாடை பற்றி கிண்டலடித்து அவளது பின்சட்டையில் இழுத்த இளைஞர்கள் பற்றிச் சொன்னாள். அவளது மோட்டார் சயிக்கிள் வருவதை அறிந்தாலே ஒதுங்கியோடிய பலர் இன்று அவளைப் பாலியல் ரீதியாக இம்சிப்பதையெல்லாம் சொன்னாள்…..எல்லாம் முடிஞ்சுது….இப்ப என்ரை கனவு என்ரை குழந்தைதான்…..என்னைமாதிரியிருக்கிற கனபேரின்ரை கனவு இப்ப இதுதான்…..

நாளைக்கு நாங்கள் இல்லாமல் போனால் எங்கடை கனவுகளைச் சுமந்து எங்கடை இலட்சியத்தைக் நிறைவேற்ற எங்கடை குழந்தைகள் முன்வருங்களெண்டும் கனபேர் 4,5 பிள்ளைகளைப் பெத்தவையும் இருக்கினம்…..இண்டைக்கு அந்தப்பிள்ளையளுக்கு ஒரு நேரச்சோறு குடுக்க வழியில்லாமல் அந்தரிக்கிற கனபோராளியளெல்லாம் இஞ்சை வாழ்ந்து கொண்டிருக்கினம்….. எங்கை திரும்பினாலும் வறுமைதான் இப்போதைய எங்கடை பிரச்சனையாக்கிடக்கு….. ஏன் நான்கூட என்ர பிள்ளைக்காகத் தான் கையேந்தி நிக்கிறேன்…….

21வருசம் போராளியா இருந்தனான் இண்டைக்கு என்ரை நிலமையைப் பார்…..எல்லாம் இருக்கேக்கதான் இழந்தாப்பிறகு ஒருதரும் பாக்காயினம்…..அவள் தனது துயரங்களையெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

உண்மையளை எழுதித்தாவன்…..வெளியில போடுறன்……அவள் சிரித்தாள். இனி உண்மையைச் சொல்லி எங்களுக்கென்ன தங்கப்பதக்கமே கிடைக்குமெண்டு நினைக்கிறாய்…..வெளிநாட்டில இருக்கிற உனக்கு இங்கத்தைய உண்மைகளைச் சொல்லிப் புரியுமோ…? நான் எழுதிற நிலமையில இல்லையடி வேணுமெண்டா நான் சொல்றன் நீ எழுது…..என்ர நிலமையை முதலாவதா எழுது….எனக்காக யாரும் கருணை காட்டினாச் சொல்லு…..என்ரை பிள்ளையை வாழவைக்க ஒரு வழிசெய்து தா…..விம்மலுடன் கேட்டாள்……..

02.06.2011

Tuesday, February 15, 2011

அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக

பதிவுகள் விசாரணைகள் என்று அவள் ஏறாத படிகளில்லை. இன்று கடைசி முயற்சியாக இதையும் செய்து முடிப்பதென்ற முடிவோடு காத்திருக்கிறாள். அம்மா அப்பா வருவாரோ ? அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மகனை….ஓமய்யா பேசாம இருங்கோ என அடக்கினாள். ஒன்றரை வருடங்கள் போய்விட்டது அவன் எங்காவது இருப்பானென்ற நம்பிக்கை வலுத்துக் கொண்டேயிருக்கிறது.

அது அவளது முறை. நீதி மன்றத்தில் இருப்பது போலிருந்தது. அவர்கள் முன் சாட்சியம் கொடுத்தவர்களின் துயரங்களால் நிறைந்தது அந்த மண்டபம். உள்ளே சென்று வெளிவருகிற ஒவ்வொருவரும் அழுது சிவந்த கண்களுடனே வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நிச்சயம் அவனைக் கொண்டு வந்து தருவோர் போலிருந்தது அவர்களது கவனிப்பு. தேய்ந்து போன நம்பிக்கை துளிர்விட்டுச் செளித்து மதாளித்து வேர்பரப்புவது போல அவர்கள் மிகுந்த அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனது கடைசி நாட்களை அவள் சொல்லத் தொடங்கினாள்…..

°°° °°° °°°

நான் குப்பியடிக்கிறன் நீ பிள்ளையைக் கொண்டு போம்மா….எங்கடை பிள்ளை வாழ வேணும்…அவனைக் கொண்டு போ…..

அவளது இறுகப்பற்றிய கைகளிலிருந்து தனது கைகளை விலக்க முயன்றான்.

வேண்டாம் நானுங்களைச் சாகவிடமாட்டேன்…..எவ்வளவு பேர் போயிட்டினம்….நீங்க மட்டுமேன் சாக வேணும்…..?

அவளது கண்களிலிருந்து வடிந்த கண்ணீரின் கனம் நெருப்பிருந்தால் இவள் அவனுக்காக கண்ணகியாய் மாறுவாள் போலிருந்தது. தங்களது கணவர்களை இழந்த பெண்கள் பலர் அவர்களைத் தேடித்தேடி அழுத முகங்கள் இவன் முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தது.

அவளது மறு கையில் நின்ற குழந்தையைப் பார்த்தான். அவன் முகமெங்கும் ஆயிரம் காலத்துத் துயரங்கள் அப்பியிருந்தது. தந்தையர்களை இழந்த பிள்ளைகளின் முகங்களில் நிறைந்திருக்கும் ஏக்கம் தனது குழந்தையின் முகத்திலும் நிரந்தரமாய்விட்டது போலிருந்தது.

அவன் தனது கதையை முடித்துக் கொள்ள வைத்திருந்தது பழுதடைந்ததாய் சொல்லப்பட்ட ஒரு குப்பியை மட்டும் தான். அதனையும் அவளுக்காக அவனது குழந்தைக்காக கழற்றி எறிந்தான். எல்லாம் இழந்த வெறுமை எல்லாரையும் இழந்து விட்ட துயரம் இனி எதுவும் இயலாதென்ற நிலமையில் நடப்பது எதுவாயினும் ஏற்றுக் கொள்வதே விதியென்று நினைத்துக் கொண்டான்.

அவர்கள் வாழ்ந்த அவர்கள் போராடிய மண்ணைக் கடந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடியாய் மண்ணைப் பாதம் தொடுகின்ற நொடியிலும் ஆயிரம் கத்திகள் நடுவில் நடப்பது போலிருந்jது உணர்வு. இரத்தமும் சதையுமாய் போரின் எச்சம் சாவுகளால் நிறைந்து கிடந்தது. ஏன்….? எப்படி….? எதற்கு….? எதற்கும் விடை தெரியாத மர்மமாய் எல்லாம்…..

எத்தனையோ தோழர்கள் இரத்தம் சிந்திய நிலம். எத்தனையோ மக்களின் உழைப்பால் உயர்ந்த நிலம் நெருப்பெரிந்து முடிந்த சாம்பல் மேடாய்……அவனது ஞாபகங்கள் யாவும் ஒவ்வொரு நினைவுகளையும் மீள மீள இழுத்து வந்து அவனது கண்ணுக்குள் புதைத்துக் கொண்டிருந்தது.

என்னையும் என்னையுமென காயமடைந்தவர்களின் கெஞ்சுதல்கள் கடைசிச் சொட்டு உயிரைக் காக்க யாராவது வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புகளோடு குருதியில் குறையுயிரில் கிடந்த உயிர்கள் மனசை அரித்து உயிரைக் குடித்த வலியால் இதயம் துடித்தது.

°°° °°° °°°
அவர்களை நிராயுதபாணிகளாய் நிறுத்தி வைத்து ஆள்பிடி ஆரம்பித்தது. அவன் அவளைப் பார்த்தான். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவனையும் அழைத்தார்கள்.

என்னையங்கை சாகவிடாமல் இஞ்சை குடுத்திட்டுப் போறீங்களே….? நானந்த மண்ணுக்கை போயிருப்பன் என்னை வா வாழ வேணுமெண்டீங்கள்….? இனி நான் வரவேமாட்டன்….என்னைத் தேடித்தேடியழப்போறீங்களம்மா….சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் தோழைப்பிடித்து ஒரு கை தள்ளியது. ஒரு உலகத்திலிருந்து வேற்றுலகம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். அவளது அழுகையொலி மட்டும் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. அவளால் காப்பாற்ற முடியாமல் அவன் அவளுக்குத் தெரியாத இடம் கொண்டு செல்லப்பட்டுவிட்டான்.

அவன் விரும்பியது போல் அன்று செத்துப்போவென்று விட்டிருந்தால் கூட அவனுக்கு நிம்மதியான மரணத்தையாவது கொடுத்திருக்கலாமென நினைத்தாள். குற்றமிழைத்தது போல மனச்சாட்சி அவளைக் கொன்று கொண்டிருந்தது.

ஆழிப்பேரலையின் கூத்து முடிந்த நிசப்பத்தால் நிறைந்தது பொழுது. அவர்கள் முன்னால் அவள் சாட்சியம் சொல்லி முடித்துவிட்டு வெளியில் வந்தாள்.

சுனாமி அடித்து ஓய்ந்த போது கரையோரம் முழுவதும் கேட்ட அவல ஒலிகளும் உறவுகளைத் தேடுவோரின் அழுகையொலிகளும் திரும்பி வருவது போலிருந்தது. தன்னையும் இழப்பின் வலி அழுத்துவதை உணர்ந்தாள். கையில் அவளது குழந்தை மட்டும் மிஞ்சி நின்றான். காணமற்போன அவனது அப்பாவை அம்மா கொண்டு வருவாளென்ற நம்பிக்கையை அழித்துவிட்டது போல் அவனை ஒற்றைக்கையால் இழுத்துக் கொண்டு நடந்தாள்.

°°° °°° °°°

தணலாய் கொழுத்திய வெயிலில் இருந்து சற்று ஆற வீதிக்கு மறுபுறமாய் அமைந்திருந்த குளிர்பானக்கடைக்குள் போனாள். குழந்தை விரும்பிக் கேட்ட ஐஸ்கிறீமையும் தனக்காக ஒரு சோடாவையும் வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியிருந்த இருக்கையில் குழந்தையும் அவளும் இருந்தார்கள்.

மகன் சிரித்துக் கொண்டு கடவாயில் ஐஸ்கிறீமைப் பிரட்டிப் பிரட்டிச் சாப்பிட்டான். அவனது மறுபிறவி போலிருந்தது மகனின் சிரிப்பு. குழந்தையின் தலையைத் தடவிவிட்டாள். இவனைப்பற்றி அவனும் எவ்வளவு கனவுகளைத் தனக்குள்ளே புதைத்திருப்பான்….? ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தது. கற்கள் இரும்பாய் திரண்டு தொண்டைக்குளிக்குள் புகுந்து நெஞ்சுக்கூட்டைப் பிழப்பது போல வலித்தது.

மகனை சயிக்கிளின் பின்புறம் ஏற்றிக் கொண்டு சயிக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். எப்பம்மா அப்பா வருவார்…? அவன் கேட்கத் தொடங்கினான். கெதியிலை வருவரய்யா…..பிள்ளையை சமாதானப்படுத்தினாள். எங்கம்மா அப்பா இருக்கிறார்….? தெரியேல்லயடா செல்லம்….அம்மா தெரிஞ்சா போய் கூட்டி வந்திடுவனெல்லோ…..இப்படித்தான் தருணங்கள் அறியாமல் அப்பாவைத் தேடும் குழந்தையை சமாளிக்க அவளுக்கு பொறுமையே செத்துவிடும்.

°°° °°° °°°

அவன் செத்துப்போயிருப்பான்…..இனிமே வரமாட்டான்…..என்னைக் கலியாணங்கட்டினா உனக்கான எல்லாத்தையும் தருவன்…முடிவைச் சொல்லுவியா….? 6வது நபராக அவளது முடிவை எதிர்பார்த்திருக்கும் அயல் ஊரவன் அருகாய் சயிக்கிளை மிதித்துக் கொண்டு வந்தான்.

ஆரம்பத்தில் இந்த முடிவு கேட்கும் முகங்கள் மீது கோபமும் எரிச்சலும் தான் வந்தது. இப்போது அதுவும் பழகிப்போயிற்று. புலியில்லா இடத்தில் நரிகள்.... அவளை அச்சுறுத்தியது….அவஸ்தைப்படுத்தியது. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். அவளை மட்டுமே உறவாய் நம்பியிருக்கும் தனது மகனுக்காக.

அடுத்த தெருவின் திருப்பத்தில் அயல் ஊரவன் திரும்பினான். இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தான். திரும்பவும் வருவேன் என்பது போல அவனது பார்வையும் சிரிப்பும் அவளைக் கலவரப்படுத்தியது.

ஊரவங்கள் காட்டான்களெண்டு யாழ்ப்பாணியைக் கட்டி அதுவும் யாழ்ப்பாணத்துப் புலியைக் கட்டி அதான் அந்தத்திமிர்தான் இப்ப உன்னை இஞ்சை கொண்டு வந்து விட்டிருக்கு….அதுவும் எங்கடை கண்ணுக்கு முன்னை நீ இருக்க வேண்டிய விதியைத் தந்திருக்கு….. அடுத்தொருவன் ஏளனமாய் சொன்னது அதற்கடுத்துக் கேட்டது.

அவமானத்தால் கூனியது மனசு. எண்டாலும் எங்களுக்குப் பெரிய மனசு மறுவாழ்வு தரத்தயாராயிருக்கிறோம்….சொல்லியபடி இரண்டாமவன் அவளை விலத்திக் கொண்டு போனான். ஒரு நரகத்தின் வாயிலுக்குள் மாட்டுப்பட்ட நிலமையில் அவனது ஏளனம் திரும்பத்திரும்ப புது வடிவங்களாய் துரத்திக் கொண்டிருந்தது.

வீட்டுப் படலையை விலத்திக் கொண்டு மகனை இறக்கிவிட்டாள். நான்கு பக்கக் கப்பின் துணையோடு உக்கிய கூரையால் காப்பிடப்பட்ட செத்துப்போன குடிசைக்குள் போனாள். அம்மா ஒரு ஓரமாய்க் கிடந்தாள். என்ன மகள்…? ஏதேன்….? கண்ணீர் தான் முன்னுக்கு வந்து விழுந்தது. அம்மா தனது நோயின் வலியோடு மகளுக்காக அழுதாள். அம்மா ஏதேதோ சொன்னாள். அம்மாவின் கண்ணீர் எப்போதும் போல அவளுக்கானதாயிருந்தது.

வெளியில் கிடந்த சுள்ளிகளை முறித்துக் கொண்டு வந்து அடுப்பை மூட்டி கேற்றிலை அடுப்பில் ஏற்றனாள். மகன் புதிதாய் வாங்கிக்கொடுத்த சித்திரக்கொப்பியை பாயில் விரித்து வைத்துக் கீறிக்கொண்டிருந்தான். அடுப்பு புகையத் தொடங்கியது. தலைக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் ஏதோ உருண்டு திரண்டு உலைத்துக் கொண்டிருந்தது மனசு. சொற்களால் வெளிப்படுத்திவிட முடியாதளவு துயரம் அடுப்பிலிருந்து நெளிந்து பரவிப்போகும் புகைக்குள்ளால் அவளை இழுத்துக் கொண்டிருந்தது.

°°° °°° °°°

2மாதங்களின்பின்னர்……

ஒரு வெள்ளிக்கிழமை மாலை அம்மா தனது கடைசி மூச்சினை தனது மகளிடமிருந்தும் இந்த உலகிலிருந்தும் விடுவித்துக் கொண்டு போய்விட்டாள். 1990இல் அப்பாவை ஆமியின் துப்பாக்கிகள் பிரித்துக் கொண்டு போய் பிணமாய்ப் போட்டது. வீட்டின் செல்லப்பிள்ளை ஒற்றைப்பிள்ளையவள் 1990ஆனிமாதம் அம்மாவைத் தனிக்கவிட்டுக் கொள்ளையோடு காடுகளில் கடுந்தவம் புரிந்து பாரதிகண்ட புதுமையின் அவதாரமாய் நாட்டுக்குள் உலவிய பெண்களோடு அவளும் போனாள்.

19வருடப்போராட்ட வாழ்வு. அதற்குள் எத்தனையோ மாற்றங்கள்….ஒன்றாய் களப்பணி செய்த கட்டத்தில் கொள்கையால் ஒன்றுபட்ட காதலில் அவனும் அவளும் காதலர்களாகி……அவர்கள் தாயினும் மேலாய் நேசித்தவர்களின் முன்னால் நடைபெற்றது திருமணம். இருவராய் சந்தித்தவர்கள் இன்னும் ஒரு உயிரை நேசிக்க வைத்த குழந்தையின் வரவு எல்லாம் இனிமையான அனுபவங்கள்.

இனிமைகள் தொலைந்து நினைப்புகளுக்கு மாறாய் நிகழ்வுகள் முடிந்து அவளுக்காய் அவளது குழந்தைக்காய் குப்பியை எறிந்துவிட்டுக் கூட வந்தவனும் போய்…. உறவென்று கொண்டாட உயிர்வாழ்ந்த அம்மாவையும் புற்றுநோய் கொன்று அம்மாவின் வரலாறு அந்த வெள்ளி முடிந்து போனது.

எத்தனையோ அர்த்தங்கள் குறிக்கப்பட்ட அவளது துணிச்சல் துடினம் இயல்பு எல்லாவற்றையும் இழந்துவிட்டாள். அவளுக்குள் இருப்பதாய் அவள் நம்பிய புரட்சிக்காரியைக் காணவில்லை. குழந்தைகளுக்காக வாழ்கிறோம் என்கிற பெண்களின் குரல்கள் அவளுக்குள்ளும் குடிகொண்டது. மிஞ்சிய பிள்ளைக்காக அவனது எதிர்காலம் நல்லவிதமாய் அமைய வேண்டுமென்ற ஒரு அம்மாவின் இயல்பு அவளுக்குள் தானாயே வந்து சேர்ந்தது.

அம்மாவின் முதிசம் அவளுக்காகவே விட்டுச் செல்லப்பட்டுள்ள குடிசையும் வேலியில்லாத ஒன்றரைப்பரப்பு வளவும் மிஞ்சிக்கிடந்தது. இரவுகள் இப்போது நிம்மதியாயில்லை. பகல்கள் இப்போது பசுமையாய் இல்லை. பயங்கரம் மிக்கதாய் எல்லாப் பொழுதுகளும் அவள் சிங்கத்தின் குகைக்குள் அடைக்கலம் புகுந்த மான்குட்டியின் நிலமையில்……சிங்கங்கள் பல அவளைத் துரத்திக் கொண்டிருக்கிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கூடிய துணிச்சல் மிக்க ஒரு மனிசியாய் கூட நிமிர முடியாது சோர்ந்து போனாள்.

அவள் தோழில் கையிரண்டையும் இறுக்கி அப்பாவைப் பற்றிக் கேள்விகளால் குடையும் குழந்தைக்கான பதில்களைத் தேடுகிறாள். வெடியோசைகள் நின்றுபோன மண்ணிலிருந்து அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக……

05.02.2011

Friday, February 4, 2011

அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.

அம்மா அழுது கொண்டேயிருந்தாள். யுகங்களுக்கும் ஆறாத துரங்களும் வலிகளும் அம்மாவின் நெஞ்சுக்குளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

மூத்தவன் பற்றி இளையவன் பற்றி நடுவிலான் பற்றி அம்மா ஆயிரம் கதைகளைத் தனது ஞாகபச்சேமிப்பிலிருந்து மீட்டுக் கண்ணீரால் வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.

ஒண்டெண்டாலும் மிஞ்சியிருந்தா நான் எப்பன் நிம்மதியா இருந்தருப்பனெல்லோம்மா….? உழைக்கிற வயதுப்பிள்ளையளை சாகக்குடுத்திட்டு நானிப்ப தனிச்சுப் போனன் தாயே….! என்ரை சின்னப்பிள்ளையும் நானும் கடைசியானெண்டாலும் வருவனெண்டுதான் காத்திருந்தமம்மா….! என்ர குஞ்சு அவனும் வரேல்ல….! நானென்ன செய்வன் இந்தப்பிள்ளைக்கும் நஞ்சைக்குடுத்து நானும் சாவமெண்டு கூட ஒருதரம் நினைச்சனான். ஆனால் இந்தப் பிஞ்சின்ரை முகத்தைப் பாக்க அதுவும் ஏலேல்ல…..
ஒரு சமுத்திரத்தின் அலைகள் குமுறுமாப்போல அம்மா குமுறிக்கொண்டிருந்தாள். அவளது நம்பிக்கைகள் பொய்யாகி அவள் தனித்துப் போன துயரம் அவளை ஆறவிடாமல் அழ வைத்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் திருமணம் கூட அம்மாவுக்கு விருப்பமாயில்லாமல் கட்டாயமாகத்தான் நடந்தது. குடிகாரக்கணவன் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்காத சோம்பேறிக் கணவனுக்காகவும் அம்மாதான் உழைக்க வேண்டிய நிலமையில் திருமண முடிச்சு அம்மாவுக்கு இயமனின் கயிறாக முடிச்சிடப்பட்டது.

மூத்தவன் பிறந்த நேரம் ஒரு நேரப்பத்தியச்சோற்றுக்காகவும் அம்மாதான் உறவினர்களை நாடியிருந்தாள். தனது விதி இதுதானென்று தனக்குள் சமாதானமாகி 4 பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டாள். மூத்த 3பேரும் ஆண்பிள்ளைகளாகவும் கடைசிச் செல்லம் இன்று மிஞ்சிய 9வயதுப் பெண் குழந்தையாகவும் போக அம்மாவின் நம்பிக்கை பிள்ளைகள் தான். ஊரில் உள்ள வீடுகளில் வேலை செய்து கிடைக்கிற மீத நேரங்களில் எல்லாம் பலகாரம் சுட்டு விற்று பிள்ளைகளைப் படிப்பித்து குடிகாரனுக்கும் சோறு போட்டுக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகள் தன்னிலும் பெரியவர்களாய் வளர்ந்த பின்னும் பிள்ளைகளை அடிப்பது வாயில் வரும் தூசணங்களால் திட்டுவது அம்மாவின் குடிகாரக் கணவனுக்கு மாற்ற முடியாத குணங்களாகிப் போனது. அப்படித்தான் ஒருநாள் மூத்தவன் ஏ.எல் வரை படித்து பல்கலைக்கழகம் தெரிவாகியிருந்த நேரம் குடிச்சுப்போட்டு மகனை அடித்தான். இரவிரவாய் அழுத பிள்ளை சில நாட்களில் காணாமல் போய்விட்டான்.

அம்மாவின் முதல் நம்பிக்கை அவளை விட்டுப்போனது. தனது சுமைகள் நீங்கப்போகிறதென்ற கனவில் இருந்தவளின் கனவுகள் நொருங்கி அவள் கூலிக்காரியாய் தொடர்ந்தும் அலையத் தொடங்கினாள்.

சற்றுக்காலம் கழித்து வீடு திரும்பிய மகன் அம்மா அறிந்திராத பல கதைகளைச் சொன்னான். இலட்சியம் வெற்றியென்றெல்லாம் புதிதுபுதிதாய் ஒரு ஞானிபோல் அம்மா முன் வந்திருந்தான். உன்னைப்போல ஆயிரமாயிரம் அம்மாக்கள் எனக்கு இருக்கின்றார்களென்றான். என்னைப்போல் ஆயிரமாயிரம் மகன்கள் அம்மாவுக்கு இருக்கின்றனர் என்றான். இனத்தைக் காக்கும் அடையாளம் இதுவென தன்னோடு கொண்டு வந்திருந்த ஆயுதத்தைக் காட்டினான். தனது சகோதரர்களுக்கும் தனது வழியில் அவர்களும் பயணப்பட வேண்டுமென்று கதைகள் சொன்னான். ஏதோவொரு பாடலை அடிக்கடி தனக்குள் உச்சரித்துக் கொண்டேயிருந்தான். ஒரு வாரம் கழிய விடைபெற்றுக் கொண்டு போனான்.
சிலவருடங்கள் கழித்து மீண்டும் வந்தான். சீருடையில்லாமல் சாதாரண உடையோடு வந்தான். ஊரில் தான் இயக்கத்திலிருந்து விலகிவந்திருப்பாகச் சொன்னான். ஊருக்குள் பழையபடி உலவித்திரிந்தான். ஊரில் தொல்லை கொடுத்த அதிரடிப்படையினர்கள் பலர் அழிந்து போக அவன் காரணமாயிருந்தான். யாருக்கும் அவன் மீது சந்தேகம் வரவில்லை.
அவன் அம்மாவின் மகனாக அம்மாவுக்காக உழைக்கக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். தனது உழைப்பில் சேமித்து அம்மாவுக்குச் சங்கிலி வாங்கிக் கொடுத்தான் தங்கைக்கு சட்டைகள் வாங்கிக் கொடுத்தான் தம்பிகளுக்கு சயிக்கிள் வாங்கிக் கொடுத்தான். மாதம் முடிய அம்மாவிடம் தான் வேலைக்குச் சென்று வந்து சம்பளத்தைக் கொடுத்தான். அம்மாவின் கையால் சாப்பாடு சாப்பிட்டான். மாலை நேரங்களில் அம்மாவின் மடியில் கிடந்து தம்பிகளுடன் சண்டையிடுவான்.

அம்மாவுக்குள் இன்னும் மறக்க முடியாத அவனது பல்கலைக்கழகக்கல்வியை அவன் தொடர விரும்பினாள். அதை அவனிடமும் தெரிவித்தாள். இனி அம்மாவை தான் உழைத்துப் பார்க்கப்போவதாகச் சொல்லி அந்தக் கதைக்கு முற்று வைத்தான். பிள்ளை திரும்பி வந்ததில் மகிழ்ந்தாலும் அவனுக்கு காலம் முழுவதும் நன்மை கொடுக்கக்கூடிய கல்வியை அவன் தொடராமை அம்மாவுக்கு வருத்தம்தான்.

ஒரு விடுமுறை நாள். அவன் நெடுநேரம் நித்திரையில் கிடந்தான். திடீரென வீட்டுக்குள் புகுந்த அதிரடிப்படையினருடன் அவனது குடிகார அப்பாவும் வந்திருந்தார். அவன் படுத்திருந்த அறையை அவனது தந்தையே திறந்துவிட்டு அவன் தான் அது என அடையாளமும் காட்டப்பட்டான்.

நெடுநேரம் நித்திரை கொள்கிற பிள்ளைக்காகவும் மற்றைய பிள்ளைகளுக்காகவும் சமைத்துக் கொண்டிருந்த அம்மாவை அவன் கூப்பிட்டான். அம்மாவின் மகன் அம்மாவுக்கு முன்னால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டான்.

கையில் விலங்கிடப்பட்டு அவன் அவர்களால் அம்மாவின் முன்னால் அடித்து உதைக்கப்பட்டு இறுதியில் விலங்கிடப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுக்காகச் சமைக்கப்பட்ட உணவு அவனது குருதித்துளிகளால் சிவந்தது. அம்மாவின் நம்பிக்கை அவன், அம்மா முன்னே துடித்துத் துடித்து இறந்து போனான்.

கண்முன்னால் அம்மாவின் பிள்ளை கொல்லப்பட அவளது கணவன் நிறைவெறியில் கூத்தாடினான். சொந்தப்பிள்ளைக் கொலைஞர்கள் கொல்ல குடியில் மட்டும் கவனமாயிருந்தவனுடன் அன்றோடு அம்மா உறவை அறுத்துக் கொண்டு தனித்து வாழத் தொடங்கினாள்.

மூத்தவனை இழந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாது போனது. அவன் துடித்துத் துடித்து இறந்த காட்சி அம்மாவை அவனது சகோதரர்களை அங்கே வாழ விடவில்லை. மிஞ்சிய பிள்ளைகளுக்காக அம்மா வன்னிக்குக் குடிபெயர்ந்தாள். தனது பிள்ளையுடன் வாழ்ந்த பிள்ளைகளையெல்லாம் தேடித்தேடிச் சந்தித்தாள். அவன் சொன்னது போல அவர்களுக்குள் அவன் வாழ்வதாக நம்பினாள்.

அண்ணாவை அழிச்சவையை விடப்படாதம்மா….அடிக்கடி சொல்லிக்கொள்வான் இரண்டாவது மகன். அவனுக்கு நிகராக கடைசியும் சொல்லுவான். அம்மாவால் அவர்களை இழக்க முடியாது. அவர்கள் தன்னைவிட்டுப் போகக்கூடாதென்பதில் அதிகம் அக்கறை செலுத்தினாள். ஆனால் ஒருநாள் அம்மாவின் இரண்டாவதும் மூன்றாவதும் மகன்களும் போராடப்போனார்கள். அம்மாவிற்காக மிஞ்சியது மகள் மட்டும் தான்.

இரண்டாவது மகன் கடற்புலியாகி களத்தில் நின்றான். நீலவரியுடுத்தி அம்மாவைப் பார்க்க வந்தான். கடைசிமகன் பச்சைவரியுடுத்தி வந்தான். தமிழீழம் பிடிச்சு வருவமெண்டு சொல்லிக் கொண்டே போவார்கள். அம்மாவும் நம்பினாள்.

யுத்தம் அகோரமடையத் தொடங்கியது. அம்மாவின் பிள்ளைகள் அம்மாவிடம் வருவதேயில்லை. அம்மா நம்பிய சாமிகளிடம்தான் தனது பிள்ளைகளுக்காக இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.

2008இன் இறுதிப்பகுதியது. அம்மாவுக்கும் மகன்களுக்கும் இடையிலான தொடர்பாக வானொலி மட்டும்தான். அயலவர்கள் வாங்கும் ஈழநாதம் பத்திரிகையையும் விடாமல் பார்ப்பாள். ஊருக்குள் வாழ்ந்த பிள்ளைகள் வீரச்சாவாகி வீடுகளுக்கு வருகின்றதை அறிந்தால் அம்மா ஓடிப்போய் பார்த்துவிடுவாள். தனது மகன்களும் அப்படி வந்துவிடுவார்களோ என்ற பயத்தில். இரவுகளில் நிம்தியற்ற தூக்கம் எப்போது எங்கே யாரை எறிகணை எடுக்குமோ என்ற அச்சம் அத்தனைக்குள்ளும் தனது மிஞ்சிய மகளை பதுங்குகுளிக்குள்ளேயே பாதுகாத்து வந்தாள்.

ஒருநாள் பதுங்குகுளிக்குள்ளிருந்த மகள் அம்மா என அழுது கொண்டு எழும்பி வந்தாள். அம்மா அண்ணா வீரச்சாவடைஞ்சி…..அவள் தொண்டைக்குள்ளால் சொற்கள் வெளிவராமல் அந்தரித்தாள். எங்கம்மா கேட்டனீ….அம்மா மகளை உலுக்கினாள். அவள் கையிலிருந்து வானொலிப்பெட்டியைக் காட்டி அழுதாள்.

அம்மாவின் இரண்டாவது நம்பிக்கை சரிந்தது. எந்தச் செய்தியைக் கேட்கக்கூடாதென்று இருந்தாளோ அந்தச் செய்தியை அம்மா கேட்டாயிற்று. அம்மாவின் பிள்ளை வீட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. கடலில் அவன் காவியமாய் போனான்.

2009 வருட ஆரம்பத்தில் அண்ணனின் செய்தியறிந்து 3வது மகன் அம்மாவிடம் வந்தான். தனது கண்ணீரால் தனது கடைசி மகனைக் கட்டியழுதாள். அழுவதற்காகக் இனி ஈரமில்லாதவரை அவனைக் கண்ணீரால் நனைத்தாள். அவனைத் தங்களோடு வந்துவிடும்படி கெஞ்சினாள் அவனது ஒற்றைத் தங்கை. தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாய் சொன்னான். வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு வருவதாய் விடைபெற்றுக் கொண்டு அவனும் போனான்.

அம்மா நொந்து போனாள். இழப்பதற்கு எதுவும் அவளிடம் இல்லாது போனது. இருந்த இடங்களை விட்டு ஒவ்வொரு இடமாய் அம்மாவும் அம்மாவின் ஒற்றை மகளும் இடம்பெயரத் தொடங்கினர். புதுமாத்தளன் வரை போனவர்களை ஒருநாள் மீட்பர்கள் என அழைத்தவர்கள் சுற்றிக் கொண்டனர்.

அம்மா தனது மூன்றாவது மகன் புதுமாத்தளனில் காயமடைந்து இருப்பதாக யாரோ சொன்னதை நம்பி அந்த இடத்தை விட்டுப் போகமாட்டேனென அடம்பிடித்துக் குழறினாள். அம்மாவின் பிள்ளையை அவர்கள் காப்பாற்றியிருப்பதாகச் சொன்னார்கள். அந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அம்மா புதுமாத்தளனில் மனிதர்களின் தலைதெரிந்த எல்லோருக்குள்ளும் தனது மகனைத் தேடினாள்.

இறுதியில் அம்மாவும் அவளது மகளும் முகாமில் சென்று சேர்ந்தனர். தனது கடைசி நம்பிக்கை தனது கடைசிகால நம்பிக்கையாக தனது மகனைத் தேடத் தொடங்கினாள். எல்லோரிடமும் தனது மகனைப்பற்றி விசாரித்தாள் பதிவுகள் கொடுத்தாள். எதுவித பதிலும் கிட்டவில்லை.

முகாமில் உள்ளவர்கள் மனநலப் பாதிப்புகளிலிருந்து மீட்கவென நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்வுகளில் அம்மாவின் ஒற்றை மகள் பாடல்கள் பாடினாள் , நடனங்கள் ஆடினாள். எங்கே நிகழ்வுகள் நடக்கிறதோ அங்கெல்லாம் அம்மாவையும் கூட்டிக் கொண்டு போய்விடுவாள். அந்த நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்வோரிடமெல்லாம் சொல்லுவாள் எங்கடை அண்ணா இதைப்பாக்கக் காட்டுங்கோ….நாங்கள் இருக்கிறம் அண்ணாவை எங்களிட்டை வரச்சொல்லுங்கோ…என்ற கோரிக்கைகளை வைப்பாள். அவளது வேண்டுதல்களைக் கேட்டு அழுகின்ற அம்மாவுக்கு அவளே ஆறுதல் சொல்வாள்.

எங்கையும் தடுப்பில அண்ணா இருப்பான் என்னைப் பாப்பான் எங்களிட்டை வருவானம்மா…..அந்தச் சின்னவளின் நம்பிக்கை அம்மாவின் நம்பிக்கை எல்லாம் பொய்யாகும்படி ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் அம்மாவின் மகன் பற்றி எதுவித தகவலும் இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் மனிதவுரிமைகள் ஆணையகம் தொண்டர் நிறுவனங்கள் என எல்லாரிடமும் தனது மகனைத்தேடி விண்ணப்பங்கள் அனுப்புகிறாள் அம்மா. சாட்சியங்களை வழங்கிக் கொண்டிருக்கிறாள். அம்மாவின் பிள்ளை இன்னும் வரவில்லை. எங்கும் இருப்பதற்கான அடையாளங்களும் இல்லை. ஆனாலும் அம்மா காத்திருக்கிறாள்.
தனது மகன் வருவான் தன்னையும் தனது மகளையும் உழைத்துக் காப்பாற்றுவான். என்ற நம்பிக்கையை இன்னும் கைவிடவில்லை. காணாமற்போன பிள்ளைகள் வருவார்கள் என்று நம்புகிற அம்மாக்களின் வரிசையில் அம்மாவும் காத்திருக்கிறாள்.

மரணித்த தனது இரண்டு பிள்ளைகள் போல் தனது கடைசி மகன் மரணித்துப் போகவில்லையென நம்புகிற அம்மா எங்களிடமும் தனது கடைசி மகனின் விபரங்களைத் தந்து வைத்திருக்கிறாள். தனது மகன்கள் வாழ்ந்த மண்ணில் மீண்டும் குடியேறியிருக்கிற அம்மா தனது பிள்ளைகளின் கனவுகள் பற்றிக் கதைகள் சொல்கிறாள். ஆயிரமாயிரமாய் புதைக்கப்பட்ட பிள்ளைகள் வாழ்ந்த மண்ணுக்குள் மிஞ்சிய வரலாறுகளாக வாழும் அம்மா போன்ற ஆயிரக்கணக்கான உறவுகளின் துயரங்களால் நிறைந்து கிடக்கிறது நிலம்.

அம்மாவின் வேண்டுகைக்காக நாங்களும் அம்மாவின் மகனைத் தேடுகிறோம். அவன் வரமாட்டான் அல்லது அவன் இல்லையென்று சொல்லும் தைரியமில்லை. அம்மாவின் பிள்ளைகள் வரமாட்டார்கள் இப்போதல்ல இனி எப்போதுமே வரப்போவதில்லை…ஆனாலும் அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.
24.12.10