(முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது)
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நிறைந்து கிடக்கிறது. இதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வியுதவிக்கான வேண்டுதல்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் இயங்குகின்ற முகாம்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது.
செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இம்மாணவர்களுக்குத் தேவையான கற்கை உபகரணங்களான கொப்பி பேனா போன்றவையே மிகுந்த தட்டுப்பாடாக உள்ளது. இவற்றைத் தமக்கு வழங்கமாறு அம்மாணவர்கள் வேண்டுகின்றனர்.
வாழும் முகாமில் அடிப்படை வசதிகள் பெறுதலே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இருக்க கற்றலை வளப்படுத்த இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். வெளியில் இருந்து இயங்கும் நிறுவனங்களும் சரி தமிழர்களின் வாக்குகளை வென்றவர்களும் சரி இம்மாணவர்களைத் திரும்பியும் பார்க்காதுள்ளனர். சில பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கேட்கப்பட்டும் இன்னும் முன்னேற்றம் எதனையும் காணாத நிலையே.
17.08.2011 அன்று மட்டக்களப்பில் த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். தற்போதைய பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள மர்ம மனிதர்களின் தொல்லைகள் தொடர்பாக இந்நிகழ்வு நிகழ்ந்திருந்தது.
இந்நிகழ்வுக்கு கலந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு CRகொப்பியும் பேனாவும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது. யோகேஸ்வரன் அவர்களின் அலுவலக வட்டாரங்களிலிருந்து கிடைத்த தரவுகளின் படியும் நேரடியாகப் பார்த்தவர்களின் தரவுகளின்படியும் 8000ஆயிரம் (எண்ணாயிரம் CRகொப்பிகள்) பெட்டிகள் உடைக்கப்படாமல் உறங்குகின்றது.
ஒரு கொப்பியின் விலை 135ரூபா 135,00/= X 8000 = 1080000,00/=
அண்ணளவாக ஒருமில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான கொப்பிகள் யோகேஸ்வரன் அவர்கள் அலுவலகத்தில் உறங்குகின்றன. இத்தொகையை வழங்கிய உறவுகள் மக்களுக்குப் பயன்படத்தானே உதவினார்கள். ஆனால் பொலித்தீன் கழற்றப்படாத கட்டுகளில் உறங்கும் கொப்பிகள் அடுத்த தேர்தல் வரை அப்படியே யோகேஸ்வரனின் அலுவலக அறையில் உறங்கப்போகின்றனவா ? அடுத்த தேர்தலுக்கிடையில் கொப்பிகள் கறையான் அரித்து மண்ணுக்குப் போக முன்னர் ஏன் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமிமுகாம் மாணவர்களுக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்று மீள்குடியேறிய ஊர்களில் கல்வி கற்கும் வசதிகளற்ற மாணவர்களுக்கு வழங்கக்கூடாது ?
மெனிக்பாம் முகாமிற்கு இப்போது சென்றுவரக்கூடிய அனுமதியிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான அனுமதியினைப் பெற்றுச் சென்று கூட அந்த மாணவர்களுக்குக் கறையானுக்கு இரையாகப்போகிற கொப்பிகளை வழங்கலாமே…..?
ஆனந்தகுமாரசாமி முகாமில்வதியும்குடும்பமற்றும்மாணவர்களின்மொத்தஎண்ணிக்கை:-
மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153)
மாணவர்கள்: 5வயதிலிருந்து 10வயதுவரை = 837 (ஆண்கள்: 369, பெண்கள் : 468)
11வயதிலிருந்து 18வயதுவரை = 1194 (ஆண்கள்: 587, பெண்கள் : 607) மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 2031.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியுதவியை எதிர்பார்க்கும் சில இடங்கள் பற்றி:
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும்.
இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர் இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து பல மாதங்களுக்குப் பின் மீண்டும் குடியேறினர்.
இப்பிரதேசத்தில் உள்ள மக்களில் அனேகமானோர் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணம் கற்றலுக்கான வளங்கள் இங்கு குறைவாகக் காணப்படுவதும் மக்களின் வறுமை நிலையுமேயாகும்.
மண்முனைதென்மேற்குபிரதேசசெயலாளர்பிரிவு.
மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 15500
மொத்தச் சனத்தொகை – 23988 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 24
போரதீவுப்பற்றுபிரதேசசெயலாளர்பிரிவு
மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 18000
மொத்தச் சனத்தொகை – 38282 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 43
இப்பகுதிகள் யோகேஸ்வரன் அவர்கள் எவரினதும் அனுமதியின்றியே போய் உதவக்கூடிய ஊர்கள்.
எங்களுக்காக எஞ்சிய சொத்து கல்வி மட்டுமே. எங்கள் இனத்தின் நம்பிக்கையும் உயிர்ப்பும் அதுவே. அக்கல்வியை வளப்படுத்த யோகேஸ்வரன் அவர்கள் கருணை காட்டுவாராக. தமிழர்களின் வாக்குகளை வென்ற தமிழ் அரசியல்வாதி நீங்கள் என்ற உரிமையோடு கேட்கிறோம் உங்களிடம் உறங்கும் கொப்பிகளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குங்கள்.
இன்னும் மக்களுக்குப் பகிரப்பட வேண்டியவை நிறையவே உங்களிடம் இருக்கிறது. அதையெல்லாம் தோண்டியெடுத்து உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் நோக்கமில்லை. மனிதாபிமானத் தேவைகளைப் புரிந்து உரிவர்களுக்கானதை வழங்குங்கள். இம்மக்களின் சேவையே உங்களை அடுத்து வருகிற தேர்தல்களிலும் தொடர்ந்து வாழ வைக்கப் போகிறது.
(படம்- தினக்கதிர் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)
No comments:
Post a Comment