Saturday, April 6, 2013

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.

அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்களன்....!

28.03.2013 முதல் ஒரு தொலைபேசியழைப்பு ஒருமுறை ஒலிப்பதும் பின்னர் தொடர்பு அறுபடுவதுமாக 03.04.2013 மதியம் வரை இந்த அழைப்பு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. கடந்த ஏழுநாட்களில் அதிகாலையில் எழுப்பும் அழைப்பும் இதுவாகவே இருந்தது.

இப்போதெல்லாம் ஒரு அழைப்பு வந்தால் முன்பு போல அடித்துப்பிடித்து உடனடியாக எடுப்பதில்லை. தொடர்ந்து துயர்களைக் கேட்கிற தாங்கு சக்தி இப்போது இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. அதுவோ என்னவோ புதிய அழைப்புகள் என்றால் பயம் தொற்றிவிடுகிறது. கையில் எதுவும் இல்லாமல் உதவிகள் என்று வருகிறவர்களுக்கான மாற்று வழியைச் செய்ய வகையும் தெரியவில்லை.

03.04.2013 மதியம் 12.27இற்கு அந்த இலக்கத்திலிருந்து வந்த குரல் ஒரு பெண்ணுடையது.

ஏன்னக்கா உங்களுக்கு இரக்கமே வராதா ? எத்தின தரமமக்கா மிஸ்கோல் விட்டனான் ? உங்கடை பிள்ளை தானக்கா நானும்....நீங்கள் தானக்கா எங்களுக்கு உதவ வேணும்....! எனக்கொரு கையும் கண்ணும் இல்லை நான் காயப்பட்டிருக்கேக்க நீங்கள் வந்து பாத்தனீங்களக்கா....! அழுதழுது தனது கதைகளைச் சொல்லிக் கொண்டு போனவளின் தொடர்பு அறுபட்டது.

அடுத்து அரைமணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் அழைத்தாள். அக்கா காசு முடிஞ்சுது ஒருக்கா எடுங்கோ...! சரி நீங்க கட்பண்ணுங்கோ நானொரு 2மணித்தியாலம் கழிச்சு எடுக்கிறன். காத்திருப்பன் கட்டாயம் எடுங்கோ அக்கா....! சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். உரிமையோடும் அதிகாரத்தோடுமான அவளது குரல் ஞாபகத்தில் எங்காவது பதியமாகியிருக்கிறாளா ? அவள் யார் ?  தேடத் தொடங்கியது மனசு.
அடுத்த 3மணித்தியாலத்தின் பின் அவள் அழைத்த இலக்கத்திற்கு அழைத்தேன்.

உங்கடை பேரென்ன ? சங்கீதத்துடன் சேர்ந்த ஒரு இராகத்தின் பெயரைச் சொல்லித் தன்னை அடையாளப்படுத்தினாள். அவளும் அவளது கணவனோடு வீரச்சாவடைந்துவிட்டதாகவே 2009 முடிவுகளின் பின்னால் கிடைத்த செய்தி. ஆனால் 2013இல் அவள் தான் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை நம்புவதற்கு சிரமமாகவே இருந்தது.

000            000               000

1990களில் அவள் போராளியானவள். அந்த நாட்களில் விடுதலைப்பாதையில் அணிவகுத்தவர்களுள் அவளும் ஒருத்தியாய் மாங்குளத்தில் முதல் சண்டையனுபவத்தைப் பெற்றுக் கொண்டாள். அதற்குப் பின் 1991ஆனையிறவுச் சமரில் ஒரு கண்ணை இழந்தாள். யாழ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று மீண்டும் பணியில் இணைந்து 1992இல் துறைசார் பயிற்சியொன்றில் இணைக்கப்பட்டாள். அவளது சாதனையும் ஒவ்வொர வீரமிகு விழுதுகளின் கதைபோல 2001 வரையும் எழுதிவிட முடியாத வீரம் படைதோரின் பெயர்களுள் அவளும் ஒருத்தியாய்....!

2001இல் தீச்சுவாலை நடவடிக்கையில் கையையும் காதையும் இழந்தாள். அவள் பணியாற்றிய துறையைச் சேர்ந்தவொரு வீரன் அவளைக்காதலித்தான். 2002இல் அவனுக்கும் அவளுக்கும் திருமணம் முடிந்தது. 2004இல் ஒரு குழந்தைக்கு அம்மாவானாள். பணியின் நிமித்தம் வீடு குடும்பம் பலருக்கு மறந்து போகிற விடயம். அதுபோல அவளது காதல் கணவனும் வீட்டை மறந்து பணியில்....! காற்றுப்புகா இடங்களில் கடமை முடிக்க அவன் வீட்டை மறந்து போயிருந்தான்.

நம்பிய சமாதானம் இரத்தகளமாய் மாறிக்கொண்டிருந்த தருணத்தில் வன்னிக்கள முனையில் கணவனும் மனைவியும் கடமையில் மூழ்கினர். பிள்ளையுடன் கூட நேரம் செலவளிக்க முடியாது பணியில் ஊறிக்கிடந்தனர்.
யுத்தம் வன்னியை இறுக்கிய காலம். 2009ஏப்றல் மாதத்தின் தொடக்கம். புதிய வழியொன்றின் திறவுகோலாக நம்பிய ஆனந்தபுரம் சமர்க்களத்தில் அவளது காதல் கணவனும் களத்தில் நின்றான்.

வெற்றிவரும் ஒரு பெரும் மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் அவளும் அவள் போன்ற பலரும் தங்கள் கணவர்களை , சக தோழ தோழிகளின் வெற்றிச் செய்திக்காய் காத்திருந்தார்கள்.

சமரின் உக்கிரம் எதிர்பாராத பேரிடியாய்.....ஈழவிடுதலைப்பாதையின் விடிவெள்ளிகளான  முதல் நிலைத்தளபதிகள் பலரையும் இழந்து களம் மாறியது. ஏல்லோருடைய கனவுகளும் நம்பிக்கைகளும் கரைந்து போனது. அவளது கணவனும் அந்தச் சமரில் வீரச்சாவடைந்து விட்டதாய் செய்தி மட்டும் வந்தடைந்தது.

நெஞ்சில் விழுந்த பேரிடியைத் தாங்கும் வலுவை இழந்தாலும் குழந்தைக்காக அவள் உயிர் மீண்டாக வேண்டிய கட்டாயம். மணவாழ்வில் அவனோடு கரைந்த பொழுதுகளின் நினைவோடு வழியும் கண்ணீரின் கடைசிச்சொட்டு காயும் வரை அவனுக்காய் அழுதாள். ஊலகத்தின் மூலையெங்கும் எழுச்சி கொண்டிருந்த உலகத்தமிழரின் பேரெழுச்சி மூலம் மாற்றமொன்று துளிர்க்குமென நம்பிய ஆயிரமாயிரம் பேரைப்போல அவளும் நம்பியிருந்தாள்.

கால நேரம் பாராமல் வெடிக்கும் குண்டுகளின் சத்தமும் சாவுகளின் குரல்களுமான பொழுதொன்றில்; விழுந்த எறிகணையில் வயிற்றில் காயமடைந்தாள். சாவின் கடைசித்துளி வரை போனது நிலமை. இடையில் செத்துப்போய்விடாமல் தன்னுயிர் மீள வேண்டுமென அவள் இயன்றவரை முயன்று மருத்துவம் பெற்றாள்.

000         000           000

நினைத்தவை எல்லாம் மாறி நிலமையும் மாறியது. 2009மே 17கால் போன போக்கில் எதிரியின் எல்லைக்குள் குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள். களையெடுப்பில் அவளும் கைநீட்டப்பட்டு சிறையில் அடைபட்டு வெளியுலகை வெளியுலக மனிதர்களையெல்லாம் மறந்த காலங்கள் அவை. சூனியத்தின் வாயில் சிதைந்து போனது குரல்கள். அவளது குரலும் 4ம் மாடிவரை போய் மீண்டு சிறையொன்றில் அடைக்கப்பட்டாள்.
வாழ்வுக்கும் சாவுக்குமான மரண வேதனையை அந்த நாட்களில் அனுபவித்தாள். துயரமே அவளைத் தின்று தொலைத்தது. ஒரு புறம் ஊனத்தின் வலி....மறுபுறம் குழந்தையின் எதிர்காலம்.....இன்னொரு புறம் சிறைவாழ்வின் நீளம்....? இரவுகள் நித்திரை தொலைக்க மன அழுத்தம் பயங்கரம் மிக்க கனவுகள் இதுவே நிரந்தரமானது.

எல்லா இழப்பின் இறுதியிலும் எல்லோரும் இனி கடவுளே எல்லாம் என நம்புகிற ஒரு நிலமை இவளுக்கும். 2011இல் சிறைவாழ்வு முடிந்து குழந்தையுடன் இணைந்தாள். வருமானமில்லை வாழ்வுக்கான ஆதாரமில்லை.

அப்போது சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு உள்ளுரில் இயங்கிய நிறுவனமொன்று 10ஆயிரம் ரூபா பண உதவி கொடுத்தது. அந்தப் பத்தாயிரம் ரூபாவோடு இரவல் காணியில் தறப்பாளைக்கட்டிக் கொண்டு அவளுக்கு மிஞ்சிய உறவான அம்மாவும் வன்னியில் ஒரு ஊரில் குடியேறினார்கள்.
அன்றாடப் பொழுதைக் கழிக்கவே பேரவலம் மிக்க கொடுமையை தினம் தினம் அனுபவிக்க வேண்டிய துயரம். உதவிகள் தேடி யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாத அச்சம். வெளிநாடுகளிலிருந்து முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் செய்கிறார்கள் என ஆட்கள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனால் யாரிடம் தொடர்பு கொண்டு யாரிடம் கேட்பது ? இன்னொருவரிடம் கையேந்த சுயகௌரவமும் இடங்கொடுக்காத மனநிலை....!

அண்மையில் ஊனமுற்ற முன்னாள் போராளியொருவனின் மரணவீட்டுக்குப் போயிருந்தாள். வந்திருந்த பலரும் ஆளையாள் கண்டதும் அழுது தங்களை ஞாபகம் கொண்டனர். மரண வீட்டில் வந்திருந்த ஒரு ஊனமுற்ற முன்னாள் சக தோழன் தான் அவளுக்கொரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்தான். இலக்கம் கிடைத்தும் எப்படி அறிமுகமாவது எப்படி உதவி கேட்பதென்ற குழப்பம் மீண்டும் அந்தத் தோழனே நம்பிக்கை கொடுத்தான்.

எடுத்துக் கதையுங்கோ அவையின்ரை கடமைதானே எங்களுக்கு உதவிறது ? இதிலையென்ன பயப்பிடக்கிடக்கு ? பயப்பிடாமல் கேளுங்கோ... யோசிக்காமல் உரிமையோடை கேளுங்கோ.....! என்ற அவனது வார்த்தைகளோடு கொஞ்சம் தெம்பு வந்தது.

000         000            000

பேச ஆரம்பித்து ஒரு மணித்தியாலமும் 23நிமிடங்களும் கரைந்து போனது. ஆயிரமாயிரம் கதைகளை அவளது வாழ்வு சுமந்து துடிப்பதை அவள் விளக்கிக் கொண்டு போனாள்.

என்னாலை வேலையொண்டும் செய்யேலாதக்கா பிள்ளையின்ரை படிப்பு , வயது போன அம்மா இதோடை இந்த ஊனத்தோடை இந்த சமூகத்தோடை சண்டை போட்டு சமாளிக்கேலாமல் இருக்குதக்கா...! எங்களைக் கண்டாலே சனம் ஒரு மாதிரியாத்தானக்கா பாக்குது...! றோட்டில போனா ஒவ்வொருதற்றை பார்வையும் ஏதோ நாங்கள் தீண்டத்தகாத மாதிரித்தானக்கா பாக்கினம்....அந்த நேரம் செத்துப் போகாமல் ஏன் வாழ்றமெண்ட வெறுப்புத்தான்....என்னேயிறதெண்டே தெரியாமல் தானிருக்கிறன்.

நீங்களும் நான் கனதரம் மிஸ்கோல் விட எடுக்காமல் விட்டது சரியான கோவமாக் கிடந்தது அதுதான் கோவமாக் கதைச்சுப்போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோக்கா. நாங்கள் இருந்த நிலமையும் வாழ்ந்த வாழ்க்கையும் பாருங்கோ இப்ப என்ன நிலமையெண்டு ? ஏனடா இயக்கத்துக்கு போனமெண்டும் சிலவேளை நினைக்கிறது தான்.  

அழுகை மாறி அவள் அந்தநாள் கதைகள் முதல் ஆயிரமாயிரம் நினைவுகளை மீளவும் தந்தாள். இறந்து போனதாய் நம்பிய பலர் உயிருடன் வாழும் கதைகளையெல்லாம் சொன்னாள்.

அக்கா அமுதினியைத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரியுமெல்லோ அவளுக்கு காலில்லை கையும் ஏலாதுதானே...! அவளை ஒருவர் பிரான்சிலையிருந்து வந்து கலியாணங்கட்டி ஒரு குழந்தையும் பிறந்திருக்கு தெரியுமே ?

அமுதினியாரைக்கட்டினாள் ?

அது பெரிய கதையக்கா....அவளுக்கு 35வயது. குடும்பம் சரியான கஸ்ரம் கடையொண்டில வேலை செய்து கொண்டிருந்தவள். பிரான்சிலயிருந்து ஒருவர் இஞ்சை வந்து நிண்டு ஆக்களுக்கு உதவி செய்தவர். அவருக்கு இப்ப வயது 66. தான் கலியாணங்கட்டிறனெண்டு உங்கை கனபேரைக் கேட்டவர். அமுதினி வேலை செய்த இடத்திற்கு நெடுகப்போய் வந்திருக்கிறார்.
இஞ்சை எங்கடை சனம் தெரியும்தானேக்கா தனிய எங்களை வாழ விடாதுகள்.....! அவளுக்கும் வேறை வழியில்லை இவர் வெளிநாடு எடுக்கிறனெண்டு சொல்லி கலியாணங்கட்டீட்டார். பிறகு வெளிநாடும் எடுக்கேல்ல வருசத்துக்கு ஒருக்கா வந்து 3மாதம் நிண்டிட்டுப் போறார். ஒரு கடையும் போட்டுக்குடுத்து ஓட்டோ ஒண்டும் எடுத்துக் குடுத்திருக்கிறார். பிள்ளைக்கும் இப்ப 2வயதாகீட்டுது. அவர் வெளிநாடு கொண்டு போறது கஸ்ரமெண்டு சொல்றாராம்.

அவரது பெயர் விபரத்தை விசாரித்தேன். அவள் சொன்ன போது எனக்கு யாரோ மூஞ்சியைப் பொத்தி அடிச்சது மாதிரியிருந்தது. 2010ம் ஆண்டு நான் வானொலியொன்றில் நேசக்கரம் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது ஒருவர் தொடர்பு கொண்டு விதவைகளுக்கு உதவ விரும்புவதாகக் கேட்டிருந்தார். நானும் வயதான ஒருவர் தன் பிள்ளையைப் போலொருத்திக்கு உதவுவார் என நம்பி கதைத்த போது அவர் ஒரு போரால் பாதிக்கப்பட்ட விதவையை தான் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னார்.
எனக்கு அறுவது தாண்டீட்டுது மனிசி செத்துப்போட்டா 4பிள்ளையள் அவையெல்லாம் கலியாணம் கட்டீட்டினம் நான் நல்லா வேலை செய்தனான்...இப்ப பென்சன் வருது....நான் செத்துப் போனா என்ரை பென்சன் வீண்தானே.....ஆரும் ஒரு பிள்ளையை கலியாணம் கட்டினா அந்தப்பிள்ளைக்கு என்ரை காசும் பிரியோசனப்படுமெல்லே ?

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் அந்த அறுபது தாண்டிய ஐயாவின் இரக்கத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஐயா நீங்கள் கலியாணம் கட்டாமல் உங்கடை பென்சனில பத்துப்பிள்ளையளைப் படிப்பிச்சு விடுங்கோவன் ? எங்கடை பிள்ளையின்ரை வறுமையை நீங்கள் ஒரு தமிழன் இப்பிடி பயன்படுத்த நினைக்கிறது சரியோ ?

ஐயாவுக்கு கடும் கோவம் வந்திட்டுது. நான் ஊரில போனால் ஆளாளுக்கு வயது வித்தியாசம் பாக்காமல் வந்து நிக்குங்கள். இப்பத்தைய நிலமையில வெளிநாடு வாறதெண்டா உந்த வயது வடிவு ஒண்டும் பாக்காமல் வெளிக்கிடுங்கள் தெரியுமே ?

அதுக்கு மேல் அவரோடு முரண்பட்டு வாதிட விரும்பாமல்.....சரி உங்கடை விருப்பப்படி செய்யுங்கோ ஆனால் தயவு செய்து எனக்கு ரெலிபோனெடுக்காதையுங்கோ என்னிட்டை இப்பிடி கலியாணங்கட்ட பெண் கேட்காதையுங்கோ.....! சொல்லிவிட்டுத் தொடர்பை நானே அறுத்தேன்.
அதன் பின் பல தடவை அந்த ஐயா தொடர்பு கொண்டு ஒரே தொல்லையான போது இனிமேல் என்னுடன் இத்தகைய கதையோடு வந்தால் பெயர் விலாசம் யாவற்றோடும் ஊடகங்களில் அம்பலப்படுத்திவிடுவேன் எனச் சொன்னபோது „' நீ பாரன் நான் ஊருக்குப் போய்....அடுத்த வார்த்தைகள் தமிழில் உள்ள கெட்டவார்த்தைகளாக தொடர்பைத் துண்டித்து அந்த இலக்கத்தையும் தொலைபேசியில் நிறுத்தி விட்டேன்.

அன்று சவால்விட்டு  இதோ பார் என்ற அதே நபர் அமுதினியைத் திருமணம் செய்துள்ளதை மனசால் ஏற்க முடியாது போனது. இந்த நிலமைக்கு இட்டுச் சென்ற எல்லார் மீதும் கோபமே வந்தது.

அக்கா இஞ்சையிப்ப கனபேர் வெளிநாட்டிலயிருந்து வருகினம் இப்பிடி கன கலியாணம் நடந்திருக்கு. அவள் மேலும் 4பேரின் கலியாணக்கதையையும் சொன்னாள்.

அக்கா என்னை பிழையாய் நினைக்கக்கூடாது இப்பிடியான வயது போன யாரும் இருந்தா எனக்கும் ஒண்டைக்கட்டித்தாங்கோக்கா நானும் என்ரை பிள்ளையை ஒரு நல்ல நிலமைக்கு கொண்டு வந்திருவன்...!

உமக்கென்ன விசரோ ? பைத்தியம் மாதிரி....! (தணிக்கை...) எனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனது கட்டுப்பாட்டை இழந்து அவள் மீது கோபமாக மாறியது. அவள் அழத்தொடங்கினாள்.

அக்கா இஞ்சை நாங்கள் தினம் தினம் படுற வேதனையை அனுபவிச்சாத்தான் தெரியும்....பிள்ளையைப் பாக்க வேணும் இந்தச் சனத்தின்ரை வாயுக்காலை தப்ப வேணும்....எல்லாத்துக்கும் மேலாலை பசி அண்டண்டைக்கு சாப்பிடவே படுற சிரமம் இதெல்லாம் உங்கை இருக்கிற உங்களுக்கு விளங்காது....!
சாமானுகள் விக்கிற விலையில சாதாரணமா வாழிறதெண்டாலே நாளுக்கு ஐநூறு ரூவாய் வேணும்....மாதத்துக்கு 15ஆயிரம் ரூவாய் அதுகும் என்னைமாதிரியான ஊனங்களுக்கு மருந்து அதிதெண்டு எவ்வளவு தேவையள்...! ஆரிப்ப எங்களை மதிக்கினம் சொல்லுங்கோ பாப்பம் ?
அறுவது வயதோ எழுவது வயதோ இருக்கிற வரையும் ஏதோ வாழ்ந்திட்டுப் போக ஆராவது வெளிநாட்டு ஆம்பிளையள் முன் வந்தா நான் கட்டுவனக்கா....! ஏனெண்டா எனக்கு என்ரை பிள்ளையின்ரை வாழ்க்கை முக்கியம்....! அவள் அழுதழுது சொல்லிக் கொண்டு போனாள்....

என்னால் அவளது முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தொலைபேசியை நிறுத்தினேன். அவளது கதைகள் தான் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அவள் ஊனமென்றதை தெரிந்தே முன்வந்து காதலித்து அவளை அவளது கணவன் திருமணம் செய்தான். அவளது ஊனத்தை அவன் ஒரு போதும் சுமையாகவே எண்ணியதில்லை. கண்ணுக்குள் வைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். இன்று அவன் ஒரு வேளை உயிரோடிருந்து இந்த முடிவினைக் கேட்க நேரின்....???

அண்மையில் பீபீசியில் பேட்டி கொடுத்திருந்த போராளிப்பெண்களின் குரல்களில் ஒரு குரல் போலவே இவளது குரல் எனக்குள் வந்து வந்து போனது....! இந்த அவலங்களுக்கெல்லாம் காரணமான நானும் என்போன்ற தமிழர்களும் இவர்களது வாழ்வை மாற்ற என்ன செய்யப்போகிறோம் ?????
05.04.2013 அதிகாலை தொடக்கம் மதியம் வரையும் 11தடவைகள் மிஸ்கோல் விட்டிருந்தாள். 2குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தாள்.

05.04.2013 மாலை 15.57இற்கு அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் இப்படித்தான் எழுதியிருந்தாள்:-

அக்கா மன்னிச்சுக் கொள்ளுங்கோ....உங்கடை தொடர்பு வந்த போது என்னுறவை மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தேன். எனது இயலாமையையே உங்களிடம் சொன்னேன். நான் கதைத்தது பிடிக்காமல் கட் பண்ணீட்டீங்கள். அக்கா உங்களை நம்புகிறேன் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் எதிர்பார்த்திருக்கிறேன்.

06.04.2013 (இரவு 00.45மணி)

Tuesday, February 12, 2013

கப்டன் ரவி காலம் எழுதிய வரிகளில்...!

இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது.

1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர்.

ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை அலட்டலில்லை. அத்திபூத்தாற்போல ஏதாவது பகிடிகள் அப்படித்தான் அவரது சுபாவம். எப்போதுமே எதையோ கடுமையாய் யோசிக்கிறவர் போலவே இருப்பார். தனக்கு ஏதாவது தேவையென்றாலும் உடனே கேட்கிற பழக்கமில்லை. சாப்பாடென்றாலென்ன தேனீரென்றாலென்ன கையில் கொடுத்தால் மட்டுமே வாங்குவார்.

அமைதியான அந்த முகமும் மெல்லவே கதைக்கிற அந்தக் குரலும் ஒரு வித்தியாசமான போராளியை எங்கள் ஊரில் உலாவ வைத்தது. அமைதியே உருவான அந்த உருவம் கருணையே வடிவான அந்தக் கண்கள் எப்போதும் தனது இலட்சியக்கனவையும் ஈழத்தின் விடியலையுமே கண்களில் சுமந்து திரிந்தது.

சிலரை வருடக்கணக்காகச் சந்தித்திருப்போம் பழகுவோம். ஆனால் அவர்கள் மீதான கரிசனை அல்லது பாசம் ஒரு வழிப்போக்கரை சந்தித்தது போலவே இருக்கும். சிலர் காரணம் சொல்ல முடியாதபடி அவர்களுடனான பரிச்சயம் , உறவு சிலநாளாகவோ அல்லது சிலகாலங்களாகவோ இருக்கும்  ஆனால் நெஞ்சுக்குள் நிரந்தரமாய் இடம்பிடித்து விடுவார்கள். எங்கள் வாழ்வின் நீளத்தில் அவர்களது நினைவும் அன்பும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதுபோலவே றவியண்ணாவின் அமைதியும் எதையும் தனக்காக கேட்டுப் பெறாத குணமும் எல்லோரையும்விட றவியண்ணா மீதான அன்பை அதிகமாயிருந்தது.

வீட்டில் சமைக்கப்படுகிற சிறப்பான  உணவுப்பண்டம் வரை ஒரு பங்கு றவியண்ணாவுக்காகக் காத்திருக்கும். அந்த அமைதியான மனிதனைக் காலம் பிரித்துவிடாதிருக்க சாமியிடம் பிரார்த்தனை  சத்தமில்லாத் தொடராய்.....! ஒருநாள் றவியண்ணா வராது போனாலும் றவியண்ணாவைத் தேடும் கண்கள். ரவியண்ணா எப்போதும் சாய்ந்திருக்கும் இலுப்பைமரம் கூட அந்த இலட்சிய வீரனை இதயத்தில் சுமந்திருந்தது. அந்து வீரன் எல்லா உயிர்களிடத்தும் செலுத்திய அன்பின் சாட்சியாய் இயற்கை கூட றவியண்ணாவுக்காய் காத்திருந்தது.

ஓவ்வொரு போராளியும் ஏதாவதொரு பொருளை அல்லது தனது நினைவை மறக்காதிருக்க ஏதாவதொன்றை விட்டுச் சென்றது போல றவியண்ணாவும் விட்டுச் சென்ற ஞாபகங்கள் ஏராளம். அதில் ஒன்று றவியண்ணா எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல் 'ஓ மரணித்த வீரனே'. இந்தப்பாடல் தியாகி.திலீபன் அவர்கள் மரணித்த நல்லூர் வீதியில் தியாகி திலீபன் அவர்களது அஞ்சலி நிகழ்வில் அதிகம் ஒலிக்கவிடப்பட்ட பாடல். அதையே றவியண்ணாவும் அடிக்கடி விரும்பிக் கேட்பார். சிறப்பான காரணம் ஏதாவது உண்டா என்பதை றவியண்ணா யாரோடும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதைக் கேட்டாலும் ஒரு புன்னகையால் சொல்லிவிடுகிற அல்லது மறைத்துவிடுகிற வல்லமையைக் கொண்டிருந்த அந்த விழுதின் நினைவுகளை எழுதிவிட சொல்லிவிட காலத்தாலும் முடியாத கதைகளை அந்த அமைதியான மனிதன் கொண்டிருந்தது அதிசயம்தான்.

வோக்கி ரோக்கியையும் தனது துப்பாக்கியையும் எங்கேயிருந்தாலும் கழற்றியதையே காணவில்லை. வோக்கி ரோக்கி இரைச்சலோடு குரல்கள் வரும். மாமரத்தில் அல்லது ஏதாவதொரு உயரத்தில் ஏறிநின்று கதைக்கிற போது மட்டுமே வோக்கியை கையில் எடுப்பார்.

துவக்குத் தவறி வெடிச்சா என்ன செய்வீங்கள் ? ஒருநாள் கேட்ட போது அந்த ஆயுதத்தின் பெறுமதியையும் அதன் தேவையையும் வளமை போல அமைதியான சிரிப்போடு ஒரு கதையாகவே சொல்லி முடித்தார். ஒரு ரவையும் ஒரு கைக்குண்டும் எத்தனை பெறுமதியானவை என்பதனை றவியண்ணா சொல்லும் வரை அறிந்திருக்கவில்லை. அப்படி எல்லாவற்றிலும் நிதானமும் கவனமும் மிக்க ஒரு அற்புத மனிதன்.

தனது சொத்துக்களாக வைத்திருந்த சில உடுப்புக்களோடு ஒரு நாட்குறிப்புப் புத்தகம் சிவப்பு, நீலம் றொனோட் பேனாக்கள் , சில புத்தகங்கள் , சில ஒலிநாடாக்கள். சின்னம்மான் வளவுப் பெரிய பெரியபுளிமரத்தடியில் அந்தப்புத்தகங்களில் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார்.

சக போராளிகள் ஆளாளுக்கு அடிபட்டு கும்மாளமடிப்பார்கள் அமைதியாகச் சிரித்தபடி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். சிலர் பகிடிச்சண்டைகளில் கோபித்து ஆளையாய் பார்க்காமல் பேசாமல் இருந்ததைக் கண்டிருக்கிறேன் ஆனால் றவியண்ணா அப்படி யாருடனும் கோபித்துக் கதைக்காமல் இருந்ததைக் கண்டதே நினைவில் இல்லை.

ஒரு மழைநாள்.  பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து பஞ்சுமாமா வீடுவரை வெள்ளம். பெஞ்சன் வடலிப் பற்றைகளில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பு வெள்ளத்தில் இருக்கிறதென்று வதனிமாமி சொல்லியிருந்தா. ரியூசன் முடிஞ்சு பிள்ளையார் கோவில் மடத்தடி வரையும் போய் அதனைத் தாண்டிப்போகப் பயத்தில் கொஞ்சம் முன்னே போவதும் பின்னே நிற்பதுமாக நிற்க ஜீன்சை முளங்காலளவு மடித்துவிட்டு நடந்து வந்தார் றவியண்ணா. என்ன பாம்பு வருமாமோ ? எல்லா வீரமும் போய் பாம்புதான் காலைச்சுற்றும் போலிருக்க அந்தப் புலிவீரன் அதெல்லாம் சும்மா வாங்கோ நான் வாறன் என வந்தது இன்றும் நினைவில் நிற்கிறது.

வதனிமாமி சொன்ன கொம்பேறிமூக்கன் பாம்பு பின்னர் ஒருநாள்; நல்லாரப்பாவால் அடிக்கப்பட்டு ஒன்றரை மீற்றர் நீளமான பெரிய உருப்படியான அந்தப் பாம்பை பெஞ்சன் வடலி இலுப்பைக்கு மேற்கு வேலிக்கரையை அண்டியிருந்த முட்கிழுவையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த வீதியால் நடந்து வந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமெடுக்கிற ஓட்டத்தையும் சயிக்கிளையும் பார்த்து அதேயிடத்தால் எந்தப்பயமும் இல்லாமல் சென்று வரும் றவியண்ணா சொல்லுவார். செத்தபாம்பு உயிர்க்காது....!

இப்படிப் பல நினைவுகள் றவியண்ணா பற்றி....! பயத்தையகற்றிய பாரதியாய் தன் பார்வையால் , சிரிப்பால் , தன் பேச்சால் தந்த துணிச்சலை என்றும் மறக்க முடியாத மனிதனாய் எங்கள் ஊருக்குள் உலவிய றவியண்ணாவும் அவரது தோழர்களும் ஒருநாள் எங்கள் ஊரைவிட்டுப் போனார்கள்.

போகும் போது ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த நினைவுப் பொருட்களில் ஒன்று றவியண்ணா போட்டிருந்த கறுப்பு பிளாஸ்டிக்காப்பு. எல்லோரோடும் அமைதியாகவே போனார் றவியண்ணா. சொல்லில் வடிக்க முடியாத துயரை அந்தப்பிரிவு தந்து போனது. ஊரே வெறிச்சுப் போனது போல அதற்குப் பிறகு வந்த நாட்கள் அவர்களில்லாமல் கலகலப்பை இழந்த உணர்வு.

திரும்பி வருவேன் எனச்சொல்லிப் போனவர்களுள் சிலர் மட்டுமே வந்து போனார்கள். றவியண்ணா எங்களிடம் வரவில்லை. 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலமது. காற்றில் பறந்துவிடுமாப்போல அந்த மெல்லிய உருவம் அணிகிற சேட்டிற்குள் ஆயிரம் கிலோ காற்றை அடைத்துவிட்டது போல காற்றள்ளி நிற்க , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் வீதியில் சில தடவைகள் வேகமாய் ஓடும் மோட்டார் சயிக்கிளின் சாரதியாய் யாரோ ஒரு போராளியை ஏற்றியபடி அல்லது தனியாகப் போனதைக் கண்டிருக்கிறேன். இன்னும் உங்களையெல்லாம் மறக்கவில்லையென்பதைச் சொல்லுமாப் போல ஒரு பன்னகை , ஒரு கையசைப்பு அதுவே றவியண்ணாவின் அன்பின் வெளிப்பாடாக அமையும்.

அப்போதெல்லாம் புலனாய்வுப்பிரிவு என்பதன் அர்த்தமே புரியாது. ஆனால் றவியண்ணா ஒரு புலனாய்வுப்போராளியென்றும் அவர் புலனாய்வுப்பணியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

புலனாய்வாளனுக்குரிய அனைத்துத் திறமைகளையும் அந்த வீரன் தனக்குள் ஒளித்து வைத்திருந்த திறமைகளை வெளியார் யாருமே காணாது காத்து ரவியண்ணா படைத்த வெற்றிகளை சாதனைகள் பலவென்று சொல்வார்கள். சாதனைப்புலியொன்று சத்தமில்லாமல் எங்களோடு வாழ்ந்து எங்கள் ஊரோடு உறவாடி எங்களைப் பிரிந்து போனது ஒரு பொழுது.....!

காற்றள்ளிக் கொண்டு போகும் வேகத்தில் போகும் றவியண்ணாவின் மோட்டார் சயிக்கிளில் றவியண்ணாவைக் கொண்டு போன காலத்தின் சதி நடந்த தினம் 02.09.1990. அன்று றவியண்ணாவின் கதையை அவர் ஓடித்திரிந்த மோட்டார் சயிக்கிளில் வந்தே காலன் முடித்து வைத்தான். கப்டன்.ரவியாக எங்கள் ரவியண்ணா இரத்தத்தில் தோய்ந்து மரணித்துப் போனார்.

றவியண்ணாவின் போராளித் தோழனொருவனே அந்தத்துயரச் சேதியைச் சொல்லிவிட்டுப் போனான். சாவின் வலியை எங்களின் குடும்பத்தில் ஒரு உறவாய் அண்ணாவென்றழைக்கும் உரிமையைத் தந்த அந்த மாமனிதனை இழந்த துயரத்தை கண்ணீரால் கரைத்த துயரம் இன்றும் அந்த மாவீரனை மனக்கண் முன்னே நிறுத்தி வைத்திருக்கிறது.

தாயகக்கனவோடு தமிழின விடுதலைக்காகவே ஓயாது உழைத்த அமைதியே உருவான றவியண்ணாவின் மூச்சுக்காற்று அதே கனவோடு எங்கள் மனங்களிலும் தாயக மண்ணோடும் கலந்து போனது.

தையிட்டி மண்ணில் திரு.திருமதி.மாசிலாமணி தம்பதிகளின் மடியில் தவழ்ந்த ரவீந்திரன் என்ற குழந்தையை ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு புலனாய்வுப்போராளியாய் ஒரு சிறந்த போராளியாய் எமக்குத் தந்து ஈழவரலாற்றில் கப்டன் ரவி என்ற கௌரவத்தோடு பதிவு செய்து கொண்டது.

2003இல் ஊர் போன போது றவியண்ணா அதிகம் நடந்த எங்கள் பிள்ளையார் கோவில் மேற்கு வீதியால் நடந்து நான் பிறந்த வீட்டைப் பார்க்கப் போனேன். பெரிய வாகனம் போகும் அளவு பெரிய வீதி ஒன்றையடிப் பாதையாய் ஒடுங்கியிருந்தது. றவியண்ணா  , றோயண்ணா , நெல்சம்மான் ,  அப்பாண்ணாவென பல போராளிகள் உலாவிய அந்தத் தெரு பற்றைகளாலும் மதிவெடிகளாலும் நிறைந்திருந்தது.

கனவுகளில் பிள்ளையார் மேற்குவீதி கண்ணில் தெரிகிற போது றவியண்ணாவும் அந்த வீதியில் வருவது போலவே பலமுறை கனவுகள் வந்திருக்கிறது. காலம் எங்கள் றவியண்ணாவையும் மறக்காமல் தன்னோடு கொண்டு செல்வதை அந்த வீதியில் மிஞ்சியிருந்த எச்சங்கள் நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

காலம் 2003...,ஆடிமாதம்.....,
வன்னியில் மாவீரர்களின் நிழற்படங்கள் அவர்களது ஞாபகங்கள் தரும் பொக்கிசங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் காப்பகத்திற்குச் சென்ற போது பலரது படங்கள் கேட்டிருந்தேன். நெடுநாள் தேடிய கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசம் போல ஒரு போராளியிடமிருந்து ஒரு தொகை மாவீரர்களின் படங்கள் கிடைத்தது. 1981 – 2002 வரையில் புலனாய்வுத்துறையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் படங்கள் யாவையும் ஆவணப்படுத்துமாறு ஒரு போராளித் தோழன் இறுவட்டுக்களில் பதிவு செய்து தந்தான்.

கிடைத்த படங்களை ஒருமுறை பார்த்துவிடும் ஆவலில் சிலவேளை நான் தேடுகிற படங்கள் அதில் பதிவாகியிருக்கலாமென்ற நம்பிக்கையில் அந்தத் தோழனின் மடிக்கணணியை வாங்கி அதில் ஆண்டுவாரியாகத் தேடினேன். நம்பிக்கை பொய்க்காது றவியண்ணாவின் படமும் அந்த இறுவட்டில் பதிவாகியிருந்தது. மீண்டும் றவியண்ணாவை கண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளில் றவியண்ணா மீண்டும் பிறந்து வந்திருப்பது போல ஓர் சந்தோசம்....!

வருடாவருடம் றவியண்ணாவின் பிறந்தநாள் , நினைவுநாள் ,மாவீரர்நாள் நாட்களில் நினைவுகளைத் தந்து சென்ற பலரது படங்களோடு றவியண்ணாவின் படத்தின் முன்னாலும் ஒரு மெழுகுவர்த்தி எரிந்தபடியிருக்கிறது.

27.11.2012

Monday, December 31, 2012

கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....!

"ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே....இசைநெஞ்சே"  இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும்.

அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :-
'வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா'

இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில்  விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது.

பனைமரக்கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.

இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே.

அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சயிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடிமறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள்.

ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதிகோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள்.

அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20பேர்வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.

திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள்.
பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3போராளிகள். 2பேர் மலேரியாக்காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது.

காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா.  அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி.

அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார்.

அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார்.

அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த றோயல் என்ற போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார்.

தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார்.

அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும்.

றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன்.

கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது.

முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான்.

இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய.
அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:-
குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது.

கோட்டார்மனைக்கால் சொக்கர்வளவுப்பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்தியகல்யாணி மரமொன்றே.
கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.

இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப்பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும்  கொடுத்து அனுப்பி வைத்தார்.

எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப்புலகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை , மல்லாகம் , சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே.

அப்போது யாழ்நகர் பகுதி , கோண்டாவில் ,திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப்போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள். ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

'அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.' அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே.
எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப்போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது.

அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார்.
நான் சரியும் மண்ணில் நாளை
பூ மலர்ந்து ஆடக் கூடும்
தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்
தேடி வந்து பாடக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க் கூடுமோ?

நாளை தமிழ் ஈழ மண்ணில்
நாங்கள் அரங்கேறக் கூடும்
மாலை கொடியோடு எங்கள் மன்னன்
சபை ஏறக் கூடும்
இந்த நிலை வந்து சேருமோ-அதை
எந்தன் விழி காணக் கூடுமோ.....
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க கூடுமோ?

அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப்பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன்.

அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும்போதும் எப்போதும் பாடுகிற „'வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „'பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு....!

அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள்.

மீண்டும் றோயண்ணா வசாவிளான் , கட்டுவன் ,குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும்.

இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக....1990 தீபாவழி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்குகுளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

றோய்க்கு காயமாம்....செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது.

நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது.

அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார்.

வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது.
அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது.

பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா. றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா.

5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.

31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோய்
வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி.....

இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்....ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின்  நினைவுகள் சுமந்து 22வருடங்களைக் காலம் கவுரவப்படுத்தியிருக்கிறது.

றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார்.

அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன்.

இன்று றோயண்ணா இல்லாது போய் 22ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது.
எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 22வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்....

வணங்குகிறேன்....காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்...றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்....உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்..... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா.
31.12.2012

Wednesday, December 19, 2012

ஈழப்போராளிகளின் காதலும் குழந்தைகளும்

இன மத மொழி பேதங்கள் தாண்டிய எங்கேயெல்லாமோ வாழ்கிற ஆயிரமாயிரமானவர்களின் தமிழ் ஈழக்கனவோடும் தாம் நேசித்தவர்களின் கனவுகளோடும் வாழ்கிற மனிதர்களோடு அவளும் ஒருத்திதான். உலகத்துப் பெண்களின் அம்மாக்களின் பிரதியாய் அவள் தனது குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தவே இப்போது உழைக்கிறாள். 4வயதில் ஆறுவயதெனப் பதிவுசெய்து ஆங்கிலப்பள்ளியில் அப்பா சேர்த்துவிட்டு அவளை வேகமாக முன்னேற வேண்டுமெனவே சொல்லியனுப்பினார். அன்று 2வயதால் மூப்படைய வைத்து முன்னேறென்று சொன்ன அப்பா இன்று இருந்தால் அவளுக்காக தற்கொலையே செய்து கொண்டிருப்பார். 4வயதில் முன்னே ஓட வெளிக்கிட்டவள் இன்று 36வயதாகியும் ஓட்டம் நிற்கவில்லையென்றே அலுத்துக் கொள்கிறாள்.

அவள் காதலின் பரிசாய் 3 குழந்தைகளும் அவள் கணவனின் ஞாபகமாய் அவனது சில நிழற்படங்களுமே இப்போது அவளுக்கான சொத்துக்கள். ஒரு பெரும் அமைப்பின் முக்கியமான சொத்தாயிருந்த அவனது மரணம் அவளோடும் அவளுடன் கூடிய சில பேருடன் 2வருடங்களின் முன்னர் அன்னிய நாடொன்றில் அவன் வேறொரு மதத்தின் பிள்ளையாய் அன்னிய மதசம்பிரதாய முறைப்படி நிகழ்ந்து முடிந்தது.

அவன் இறப்பதற்குச் சிலமாதங்கள் முன் வரையும் அவனாலேயே வாழ்ந்த உறவுகள் , நட்புகள் எவருமே அவனது மரணத்திலும் கலக்கவில்லை. அப்படியொருவன் இருந்ததையும் மறந்து போனார்கள். எல்லாத் தொடர்புகளும் அற்றுப்போய் மரணத்தின் வாசலில் நின்றபோதும் தன்னைப்பற்றி தனது பூர்வீகம் தனது சொந்தப்பெயரைக்கூட அவளுக்குச் சொல்லாமலே மௌனமாகினான்.

தேவையின் நிமித்தம் அவன் வாயில் ஒருகாலம் பொய்யைத்தவிர எதுவும் வந்ததில்லை. அவளுக்குக்கூட அவனொரு கணணித்துறை நுட்பவியலாளனாய்தான் அறிமுகமானான். கடமையின் கனம் போன இடத்தில் ஒரு காதலை ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டியிருந்தது. எல்லாம் தேசத்திற்காகவென்றே எல்லாவற்றையும் செய்தான்.

எல்லா முடிவுகளின் பின்னால் ஏதோவொரு நம்பிக்கை அவனில் ஒட்டியே இருந்தது. மீண்டும் துளிர்க்கும் ஈழக்கனவென்று நம்பியே இயங்கினான். ஒருநாள் அவனது கையிலிருந்து எல்லாவற்றையும் காலம் பறிக்க கைதியாகி அவனது காதல்துணையும் அவனைப் பிரிந்து சிறுகுழந்தைகளோடு அவள் மொழிதெரியாத ஊரொன்றில் ஒதுங்கினாள்.

சிலகாலங்களில் அவளும் கைதாகினாள். நீண்ட அலைவு துயரங்களின் பின்னர் இருவரும் இணைந்து கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்கியது. அவன் பற்றிய மர்மங்களை அவன் அப்போதும் சொல்லவேயில்லை. உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தவன் சோர்ந்து போகத்தொடங்கினான்.  இறுதியில் அவன் உயிர்கொல்லும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாய் மருத்துவர்கள் சொன்னார்கள்.

எல்லாம் இழந்த பின்னர் மனங்களை ஆற்றுப்படுத்தும் நிவாரணி இறுதியில் கடவுள் என்றாவது வளமை. அவன் கர்த்தரை துதிக்கத் தொடங்கினான். கர்த்தரின் மீட்பர்களே அவனைக் கடைசியில் கையிலேந்தியவர்கள். நாட்கள் ஒவ்வொன்றும் ஓட ஓட அவன் உயிர் சொட்டுச் சொட்டாய் பிரியத்தொடங்கியது.  அவனது உயிர் மீள்தலுக்காக அவள் அலைந்த அலைச்சலும் பட்ட துயரங்களும் அவனை மிகவும் வருத்தியது. அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளுக்கான காரணங்களைச் சொல்ல முடியாத நிலமைக்குப் போயிருந்தான்.

அவளுக்காக அவன் அப்போது அழுதிருக்கக்கூடும் அனாதரவாகிவிடப் போகிற தனது குழந்தைகளுக்காக அதிகம் அந்தரித்திருக்கக்கூடும். எங்காவது தன்னோடிருந்த ஒரு நட்பெனினும் கைகொடுக்குமென்ற நம்பிக்கையோடு ஒரேயொரு தொலைபேசியிலக்கத்தை மட்டும் அவளிடம் ஒருநாள் எழுதிக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் கைகள் பேனாவைப் பிடித்ததில்லை. கடைசியில் அவன் பைபிளை படித்தபடியே மனிதர்கள் பிரார்த்திக்க மரணித்துப் போனான்.

000                          000                        000

எல்லாம் முடிந்து போனபின்னரே அவளை வறுமை துரத்தத் தொடங்கியது. சொந்த உறவுகள் பிறந்த ஊர் அவளை ஏதோ தப்பானவளாகவே கருதியது. தந்தையின் பெயர் தெரியாத பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தாயாகவே அவளைப் பரிகசித்தது. அவளைப் பாவத்தின் மிச்சமாகவே ஒதுக்கியது.

பிள்ளைகளில் ஒன்றுக்கு  உலக விஞ்ஞானி ஒருவரின் பெயரையும் , மற்றைய இரு பிள்ளைகளுக்கும் கரும்புலி வீரர்களின் பெயரையும் வைத்திருந்தான். போகிற இடமெல்லாம் பிள்ளைகளின் பெயரை வைத்தே பெரிய உபத்திரவமாகியது. ஒரு சமயம் போதகர் ஒருவர் தங்கள் சமய முறைப்படியொரு பெயரை மாற்றுமாறு வேண்டினார்கள். அவன் வைத்த பெயர்களை மாற்ற விரும்பாமல் ஊரைவிட்டே விலகினாள். எல்லோரையும் விட்டு துரமாக ஒதுங்கினாள்.

அவனது இரத்த உறவுகளைத் தேடியழைத்தாள். எவரும் கைகொடுக்காமல் அவளை விலத்திக் கொண்டார்கள். ஆடைதுவைக்கும் நிலையமொன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். மாதாந்தம் கிடைக்கிற சம்பளம் 10நாட்களுக்கு மேல் நகர முடியாத இறுக்கத்தைத் தந்தது. அயலில் கடனும் அதிகமாகியது.

செத்துப்போய்விட வேண்டும் போலிருந்த நேரங்களில் அவன் கண்ணுக்குள் வந்து நின்று காதுக்குள் கேட்கிற அவனது குரல் கண்ணீரோடு எல்லா நினைப்பையும் அழித்துச் செல்லும்.

அப்பாவைப் பற்றிக் கேட்கிற குழந்தைகளுக்கு அப்பா வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாள். வெளிநாட்டில் உள்ள அப்பாக்களின் பிள்ளைகள் போல அவர்களால் எதனையும் அனுபவிக்க முடியவில்லை. போன ஊரில் அறிமுகமான ஒரு அக்காவிடம் குழந்தைகளைக் கொடுத்துவிட்டு நிரந்தரமாக வேலை செய்யத் தொடங்கினாள். சனிக்கிழமை மாலை வீடு வந்து ஞாயிறு மட்டும் குழந்தைகளோடு பொழுதைக் கழித்து மீண்டும் வேலை.

அம்மாவும் அருகிலில்லாமல் அப்பாவும் அருகிலில்லாமல் இன்னொருவரை அம்மாவாக்கிய அம்மா வரும் வார இறுதிநாளுக்காக காத்திருக்கிற 5,4 ,3 வயதுப்பிள்ளைகளின் குழந்தைக் கனவுகளில் வெளிநாட்டிலிருக்கிற அப்பா அத்தைவீட்டில் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதாய் நம்புகிறார்கள்.

ஒருவிடுறையில் வீடு வந்த போது மகள் கேட்டாள். அத்தைக்குப் போன் போட்டுக் கேளுங்கம்மா அப்பாவை பேசச்சொல்லி....எங்களையும் வெளிநாட்டுக்கு கூப்பிடச்சொல்லி....!

அன்று ஏதோ அலுவலாக அவன் கையெடுத்துடனான டயறியைத் திறந்த போது ஒரு பக்கத்தில் அவன் எழுதிய சிலவரிகளும் ஒருநாள் அவன் எழுதி வைத்த தொலைபேசியிலக்கமொன்றும் கண்ணில்பட்டது.

தான் இல்லாது போகிற காலத்தில் அந்த இலக்கத்தோடு தொடர்பைப் பேணுமாறு அவன் எழுதியிருந்த அந்த இலக்கத்தை எடுத்தாள். தொடர்பு கொள்ளவா விடவா என்ற குழப்பமாயிருந்தது.

இரத்த உறவுகளே ஒதுக்கியிருக்க எங்கோ முகம் தெரியாத அவனது நட்பொன்று மட்டும் இவளுக்கு கைகொடுக்குமா என்ற சந்தேகத்தோடே ஒருநாள் அந்த இலக்கத்தை அழைத்தாள்.

அவள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக மறுமுனையில் கேட்ட குரல். புது உறவு துளிர்த்ததாய் நம்பினாள். அவனைத் தேடிய அந்தத் தோழமை அவன் எங்கோ வாழ்வதாயே அன்றுவரை நம்பியிருந்தது. அவள் சொல்லிழயழுத கதைகள் அவனை அந்த நிலமையில் இட்டுச் சென்ற விதியையே நோக வைத்தது.

எனக்கு உதவி செய்யாட்டிலும் பறவாயில்லை....நீங்க கதைச்சாலே போதும்.....அவள்  தனது துயரங்களைச் சொல்லிச் சொல்லியழுதாள்.

உயிருடன் இருந்த போது ஒருநாள் அவன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவன் உயிரைக் காத்திருக்கும் வாய்ப்புக்கூட வந்திருக்கலாம். குறைந்த பட்சம் அவனை மட்டுமே நம்பிய அவளுக்கும் குழந்தைகளுக்குமான ஒரு வாழ்வையேனும் கொடுத்திருக்கலாம். எல்லாம் முடிந்து அவன் அநாதையாய் முடியும் வரையில் ஏனோ நட்பையும் அழைக்காமல் விட்டிருந்தான் என்பது தெரியாது.

வரவிருக்கிற நத்தார் தினத்தில் அப்பா வருவார் என நம்புகிற குழந்தைகளுக்கு இம்முறையும் அப்பா வரமாட்டார் வேலைகூடவென்று சொன்னாள். அப்பா வெளிநாட்டிலிருந்து அனுப்பியதாக கடந்தமுறை அவள் தானே ஒரு பாசலை தனது முகவரிக்கு அனுப்பி அப்பாவின் நத்தார் பரிசென்று பிள்ளைகளுக்குக் கொடுத்தாள். இம்முறையும் உடுப்புகளும் இனிப்புப்பண்டங்களையும் தயாரித்து வைத்திருக்கிறாள் நத்தார் பரிசு.

அப்பாவின் மரணத்தை இன்றும் அறியாத குழந்தைகளுக்காக அப்பா பற்றிச் சொல்ல ஆயிரமாயிரம் வரலாறுகளை அவன் விட்டுச் சென்றிருக்கிறான் எனினும் எதையும் அவளால் வெளிப்படுத்தவோ வரலாறு ஆக்கவோ முடியாது அவன் மரணமும் அவனது வாழ்வும் மர்மமாகவும் மௌனமாகவுமே புதைந்து போயிருக்கிறது.

நினைவுகள் தருகிற வலிகளை மறக்கவோ அவற்றை அழிக்கவோ இந்தக்கால விஞ்ஞானம் எதையாவது கண்டு பிடித்திருக்கலாம் போல.  பழைய நினைவுகளில் மனசு கனக்கிற போதெல்லாம் இப்படித்தான் நினைப்பாள்.

தமிழ் ஈழம் தமிழர்களின் கனவாய் மட்டுமன்றி ஈழப்போராளிகள் பணிசெய்த நாடுகளில் அவர்களது காதலிகளாய் காதலர்களாய் வாழ்கிற பலரது கனவாகவும் ஆகிவிட்ட தமிழீழம் ஒருநாள் வருமென்று நம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அவளும் ஒருத்தியாக....அவனது குழந்தைகளுக்கு அவனது தாயகத்தைப் பற்றிச் சொல்லும் நாளுக்காகவும் காத்திருக்கிறாள்.

19.12.2012

Monday, December 10, 2012

அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ?

"இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாக புலிகள் பயன்படுத்தினார்கள். கட்டாய ஆட்சேர்ப்பை நடாத்தினார்கள். கட்டாயமாக களத்தில் கொலை செய்தார்கள் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தினார்கள்.இப்படியான மனிதகுலத்துக்கு எதிரான காரியங்களை புலிகள் செய்தார்கள்.அதனால் அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அந்த அமைப்பில் இருந்ததற்காக இவை எதிலும் அவன் சம்மந்தப்பட்டது கூறப்பட்ட குற்றங்கள் ஒன்றுகூட நிரூபிக்கப்படாதிருந்தும் அந்த இளைஞன் ஜனநாயகத்தின் வாசலான நாடு ஒன்றில் அகதித்தஞ்சம் கோரியபோது போர்க்குற்றவாளியாக்கப்பட்டு அகதியாக ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்டில் இவனுக்கு மருத்துவம் இல்லை , உணவுக்கான உதவியில்லை  , தொழில் செய்ய முடியாது வீட்டுக்காவலில் இருப்பதுபோல நிலமை. இன்றோ நாளையோ என்றோ திருப்பியனுப்பப்படும் நிலமையில் உள்ள மகனை நினைத்து ஊரிலிருந்து தினமும் ஏங்குகிற பெற்றோர்களின் துயர் மட்டுமன்றி ஏற்கனவே களத்தில் காயமுற்ற உடல்வலி மனவலியும் கூட தினம் தினம் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஓர் இளம் போராளியின் நிலமையே கீழ் வரும் உண்மை"

இவன் தனது சிறு வயதில் புலிகள் அமைப்பில் இணைந்து இறுதி வரையும் வன்னிக்கள முனையிலே இருந்தவன். விடுதலைப்புலிகளின் பல முக்கியமான படைப்பிரிவுகளில் அவன் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய பணியென்பது விடுதலைப்பாதையில் வரலாறுகளாய் பதியப்பட வேண்டிய ஆயிரமாயிரம் கதைகளைக் கொண்டவை. இவனுடைய போராட்ட வாழ்க்கையில் இவன் சந்தித்தவை துன்பங்களும் துயரங்களும் மட்டும்தான். ஆனால் எல்லாவற்றையும் அவன் சவாலாகச் சந்தித்து முறியடித்து அத்தகைய பெரும் ஆபத்துகளிலிருந்தும் அவன் வெளியேறிய பாங்கு வியப்புக்குரியது.

இவனது ஆழுமை ஆற்றல் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. ஆயுதங்களோடு சமராடிக்கொண்டிருந்தவனை கல்வி கற்க வைத்து இன்றைய உலகம் எதிர்பார்க்கிற கல்வியையும் அவன் கற்க வேண்டுமென்று அவனை வளர்த்த தளபதியின் விருப்பத்தையும் நிறைவேற்றி கல்வியையும் கற்றான். பல முக்கிய இராணுவ நகர்வுகளில் இவனது பங்கும் வெற்றியும் வரலாற்றில் எங்கும் பதியப்படாதவை.

2008 இறுதிப்போர் கிளிநொச்சியை அண்மித்த வேளையில் தலைவரின் விசேட பணிப்பிற்கமைய 100பேர் கொண்ட அணியொன்றை எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவி பின்புறமாக வழிநடத்தியபடி முன்னேறிக்கொண்டிருந்த போது எதிரியின் எதிர்த்தாக்குதலில் காயமுற்றான். உடலின் பாகங்களில் கணிசமானவை பாதிப்புற்று பிணங்களோடு அடுக்கப்பட்டவன்.

பின்பு தனது வாழும் கணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது எதிர்பாராத அதிசயமாக மருத்துவர் ஒருவரின் கவனமும்  கடவுளின் கருணையாலும் அவனின் தன்னம்பிக்கையும் இவனைக் காத்து இன்றுவரையும் வாழ வைத்துள்ளது.

காயமடைந்ததும் அனேகம் போராளிகள் குப்பியடிக்கவே முயற்சிப்பார்கள் இதன் காரணமாக முற்கூட்டியே அருகில் நிற்பவர் முதல் பணியாக குப்பியை அறுத்தெடுத்துவிடுவது வளமை. இவனும் காயத்தின் தாக்கம் உயிர் தப்புவது சிரமம் என்ற நிலமையில் குப்பியைத் தருமாறு தோழர்களிடம் வேண்டினான். காயமடைந்த களத்திலிருந்து அகற்றி மருத்துவத்துக்காகக் கொண்டு செல்ல 13மணித்தியாலங்கள் வரையும் காத்து போராடி இவனைக் காக்க வேண்டுமென்று முயற்சித்தவர்கள் குப்பியை கொடுக்கவேயில்லை.

அப்ப குப்பிடியச்சிருந்தா இப்ப தினம் தினம் சாக வேண்டி வந்திராது. இப்படித்தான் இப்போது அடிக்கடி சொல்லிக் கொள்கிறான். இப்போது அந்தக் குப்பியைத் தராத தோழர்கள் மீது கோபம் வருகிறது. தாயகம் என்ற கனவோடு கல்வியை நல்வாழ்வை குடும்ப உறவுகளை வெறுத்த தாயகக்கனவுக்கு இந்தக்காலமும் இந்தக்கால மனிதர்களும் கொடுத்துள்ள தண்டனையை நினைக்கும் போதெல்லாம் வெளியிட முடியாது வெறுப்பும் கோபமும் மிஞ்சுகிறது....!

2009 மே 17 அன்று கடும்காயத்தோடு சரணடைந்து முகாம் வாழ்வு அன்றாட உணவுக்கு வரிசையில் நின்று மயங்கிவீழ்ந்து மீண்டும் காயம் கடுமையாகி இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பலமுறை கிழித்து சீர் செய்யப்பட்ட வயிற்றுக்காயம் உறவுகளை எங்கேயென்று தேட முடியாத அவலத்திலும் ஏதோ வளியாய் குடும்ப உறவுகளின் தொடர்பு கிடைத்தது. சிறைக்கு கொண்டு செல்லப்பட இருந்த வேளையில் ஒரு சிங்களமருத்துவத்தாதியின் மனிதநேய உள்ளத்தால் காப்பாற்றப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற உதவி கிடைத்தது.

பிணங்களோடு குறையுயிரில் புதைக்கப்படாது காப்பாற்றப்பட்டவனை பெற்றோரும் வெளிநாட்டில் இருந்த உறவொன்றின் மூலம் ஐரோப்பா அனுப்பி வைத்தனர். ஐரோப்பியநாடு அமைதியையும் பாதுகாப்பையும் தருமென்ற நம்பிக்கையோடு அகதி விண்ணப்பம் நிரப்பினான்.

ஐரோப்பாவில் வழக்கு நடத்துவதில் தற்போது தமிழ் சட்டத்தரணிகள் நிறைய நிறுவனங்களாக இயங்குகின்றன. தமிழ் சட்ட வல்லுனர்களால் மட்டுமே தன்னைக்காப்பாற்ற முடியுமென்று நம்பிய இந்த இளைஞன் தமிழ்சட்ட வல்லுனர் ஒருவரிடம் தனது வழக்கை தாக்கல் செய்ய ஆதரவை நாடினான். அந்தத் தமிழ்சட்ட வல்லுனர் தானே வழக்கை எழுதி இவனுக்கான வாழ்வு வருமென்று நம்பிக்கை கொடுத்தார். அந்த நாட்டில் அவன் தடைசெய்யப்படும் வரை தனது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் பயன்படுத்தி மேற்படிப்பை தொடர்ந்தான். தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை உருவாக்கினான். ஆனால் காலம் அவனை விடாமல் கலைத்தது.

வலுவற்ற உடலின் காய வலியும் இரவுகளைத் துரத்துகிற பயங்கரம் மிக்க கனவுகளும் மன அழுத்தத்தைக் கொடுத்து ஓய்ந்து உறங்க முடியாத அவலத்தோடு அல்லப்பட்டுக் கொண்டிருந்தவன் போர்க்குற்றவாளி என அவன் வாழ்கிற நாடு தீர்ப்பு வழங்கியது.

வந்தநாள் முதல் இன்று வரை சமூக உதவிக் கொடுப்பனவும் இல்லை மருத்துவம் இல்லை வேலைசெய்ய முடியாத தடை இப்படி எல்லா வழிகளையும் ஜனநாயக நாடொன்று மறுத்து இவனைப் பயங்கரவாதியாய் பட்டியலிட்டு வைத்திருக்கிறது.

இப்போது மறுமுறையீடு நிராகரிக்கப்பட்டு தினம் தினம் நாடுகடத்தப்படுவேனோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவன் ஒரு போர்க்குற்றவாளியாக கருதப்பட்டு(ஆனால் நிரூபிக்கவில்லை) அடிப்படை மனிதவுரிமைகளும் மீறப்பட்டு மருத்துவமும் கிடைக்காது அவதிக்குள்ளாகியுள்ளான்.

இந்த இனத்தை நம்பி இந்த இனத்துக்காக போராடிய பலரது வாழ்வு இன்று ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளால் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுகிறது. தாயகக்கனவோடு போன எங்களுக்கு உலகமும் எங்களினமும் கொடுத்திருக்கிற வாழ்வின் கொடுமையை அனுபவிக்கிற ஒவ்வொரு போராளிக்கும் தினம் தினம் மரண வேதனையாகவே கழிகிறது.

எங்களுக்கென்றொரு நாடு வேண்டி தங்கள் காலத்தை தந்தவர்கள் எங்கள் கண்முன்னால் எதுவுமேயற்றுத் தவிக்கிறார்கள். புலம்பெயர்ந்து பயங்கரவாதிகள் எனப்படுகிற முன்னாள் போராளிகளுக்கான ஆதரவை வழங்க எங்கள் மனக்கதவைத் திறப்போமா ?

Monday, November 26, 2012

மாவீரர்களுக்கு இதய அஞ்சலிகள்.

தாயக விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு இதய அஞ்சலிகள்.

Saturday, November 3, 2012

காலச்சூரியன்களும் சிறைக்கம்பிகளும்

சூரியனின் பெயர்களின் ஒன்று அவனுக்கானது. பெயருக்கு ஏற்ப சூரியனின் வேராகவே அவனிருந்தான். 1995 சூரியக்கதிர் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் இடம்பெயர அவனும் வன்னிக்கு வீட்டோடு இடம்பெயர்ந்தான். சொந்த ஊரைப்பிரிந்த துயரும் அவனும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்தை அக்கால வீதிநாடகங்களும் பரப்புரைக்கூட்டங்களும் உணர்த்தியது. 14வயதில் அவன் ஆயுதமேந்தி விடுதலைப் போராளியானான்.

அடிப்படைப்பயிற்சி முடித்து சமர்க்களம் போனவனின் ஆற்றலும் திறமையும் அவனைப் புலனாய்வுப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்தது. பகைகுகையில் இறங்கிப் பணி செய்ய அவனுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வரியுடை மாற்றி சிவிலுடைக்கு மாற்றப்பட்டான். சீரியசான போராளி சிரித்துச் சமாளித்து சாதிக்கும் வல்லமையை அவனது வசீகரம் மிக்க கதையும் அவனை நிரந்தரமாக வன்னியைவிட்டுப் பிரித்து பகைகுகையில் நிரந்தரமாக்கியது.

சாகசங்கள் செய்வது போல சாதனைகள் செய்தான். லட்ச லட்சமாய் குறையாத பணவளம் வசதிகள் யாவையும் அமைப்பு அவனுக்கு வழங்கியது. தாய்மண்மீதான பற்று பணிகளுக்காக மட்டுமே நாட்டுக்காசைப் பயன்படுத்துவான் தனது தேவைகளுக்கும் தனது பணியைச் சந்தேகமின்றியும் சாதுரியமாகவும் வெல்ல கடைகளில் பணியாளனாய் விடுதிகளின் வேலைக்காரனாய் அவன் எடுத்த அவதாரங்கள் ஆயிரத்தையும் தாண்டும்.

பொறுப்பானவர்களைச் சந்திக்க இடையிடை தாண்டிக்குளம் தாண்டி ஓமந்தை சோதனைச்சாவடியில் அவனும் சாதாரணமானவனாகவே வரிசையில் நின்று அங்கே கடமையிலிருக்கிற காவல்துறையினர் சிலரின் பொறுப்பற்ற தன்மைகளையும் போட்டுக்குடுத்து திருத்தியிருக்கிறான். இறுக்கம் மிகுந்த சோதனைச்சாவடிக்காலும் உரியவர்களுக்கு வழங்க வேண்டியவற்றையும் ஏதோ வழியாக கொண்டு போய்ச் சேர்ப்பான்.

பணியின் கனம் அவனுக்கு அதிகரிக்கப்பட்டது. பகை இனத்திலேயே அவனை யாரையாவது காதலிக்குமாறு சொல்லப்பட்டது. வேலையாளாய் நின்ற விடுதியிலேயே வந்து போன ஒரு குடும்பத்தை நட்பாக்கி அவர்களது வீட்டுக்கு இவன் விருந்தாளியாய் ஏற்கப்பட்டான். அங்கே ஒரு அழகியிருந்தாள். அவன் வெல்ல அவனது இலட்சியம் வெல்ல அந்த அழகியை அவன் காதலித்தான். காதல் நெருக்கமாகி அவனில்லையென்றால் அவளில்லையென்ற நிலைக்கு அந்த அழகி வந்துவிட்டாள்.

அவனது பணியிடத்தில் அவன் நிரந்தரமான இருப்பிட அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள அவளைத் திருமணம் செய்து கொண்டான். வேகவேகமாய் அவன் படைத்த வெற்றிகளின் தடயங்களையும் வெளித்தெரியாமல் மறைத்துவிடுகிற விவேகத்தையும் அவன் கற்று வந்த கற்பித்தலைவிட அதிவிசேடமாகவே செய்தான். அவனுக்கு மேலே இருந்தவர்களையும் மிஞ்சிய ஆற்றலும் ஆழுமையும் அவனை வசப்படுத்தி வைத்திருப்பதாக கடைசியாகப் புதுக்குடியிருப்புக்கு போய் திரும்பிய போது அவனது துறைக்குப் பொறுப்பானவர் தோழில் தட்டிச் சொன்னதைப் பலமுறை நினைத்துத் தன்மீதே பெருமைப்பட்டிருக்கிறான்.

ஒருபுறம் அவன் குடும்பத்தலைவன். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாயும் ஆகினான். மறுபுறம் அவனது தேசக்கனவை நனவாக்கும் பாதையில் தடைகள் அகற்றும் தடையகற்றியாக இயங்கிக் கொண்டிருந்தான். ஒருநாள் தானும் காற்றாகும் கனவோடு கடமையில் கலந்தான்.

ஒரு பெரும் தடையை அகற்ற அழிக்க அவனுக்கு கட்டளை வந்தது. காற்றும் அந்தத்தடையைத் தாண்டுவதானால் ஒன்றுக்குப் பலமுறை பரிசோதனை செய்யப்படும் குகையது. ஆயினும் அவனது சாதுரியமும் கெட்டித்தனமும் அந்தக் குகையை உள்ளடைந்து வேவுபார்த்து இலக்கையடைய உயிராயுதத்தையும் தயார்படுத்தி அந்த இலக்கையடையும் நாளுக்காக காத்திருந்து எல்லா ஒழுங்கும் முடித்து தடையுடைக்கும் பொழுதுக்காய் காத்திருந்தான்.

அந்தக்கடைசி நாள் அவனே எல்லாவற்றையும் இரவுபகலாய் கவனித்து உயிராயுதத்தையும் தயார் செய்து கடைசி ஒத்திகையும் முடித்து வழியனுப்பிவிட்டு போகிற ஆயுதம் பிழைத்தால் அடுத்து தன்னையும் தணலாக்க தயார்படுத்திக் கொண்டு போயிருந்தான்.

வரிசையாக வந்து கொண்டிருந்த வாகன நெருக்கத்தில் உரிய இலக்கை அவன் தயார்படுத்தியனுப்பிய உயிராயுதம் சிதறடிக்கும் கனவோடு அந்தக் கண்ணில் தெரிந்த பிரகாசம் அன்றைய சூரியக்கதிர் ஒளியையும் மிஞ்சியது போலிருந்தது அவனுக்கு. அவனுக்கு தொலைவாய் நின்ற உயிராயுதம் அவன் கண்முன்னே தீயாகித் தணலாகிப் பெருநெருப்பாகியெரிந்தது. அகற்ற நினைத்த தடையும் தொலைந்ததென்றே நினைத்தான். ஒரு கணம் எல்லாம் ஸ்தம்பித்து தீப்பிழம்பே அவனது கண்களையும் மறைத்தது.

அடைய நினைத்த வெற்றியும் அழிக்க நினைத்த தடையும் அன்று அழியவில்லை. அந்த வெற்றியை எதிர்பார்த்திருந்தவர்கள் அவன் மீது கோபமாயிருந்தனர். அவனது கவனக்குறைவே அந்தத் தோல்வியின் காரணம் எனப்;பட்டது. உலகெங்கும் அந்தச் செய்தி பரவியது. உலக ஊடகங்களில் அவன் தயார்படுத்தியனுப்பிய உயிராயுதத்தின் உடற்கூறுகளை ஐரோப்பிய நிபுணர் குழு பரிசோதனை செய்யப் போவதாகவும் குற்றவாளிகள் மீது கடும் விமர்சனத்தையும் வைத்து பயங்கரவாதத் தாக்குதல் அதுவென்றும் சொல்லப்பட்டது.

பயங்கரமானவர்களாக நாங்கள் மாற யார் காரணமான பயங்கரவாதிகள் என்பதனை ஏனிந்த உலகம் புரிந்து கொள்ளாதிருக்கிறது. அவனும் வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்தான். அந்த நெருப்பை அந்த இலக்கைச் சென்றடைய அவன் பட்ட வலிகள் கண்ணீராய் பெருகியது. அவனது அழகி சந்தேகப்படாதிருக்க சாதாரணமானவனாய் காட்டிக் கொண்டான். இரவுகளில் தூக்கத்தைத் தொலைத்தான். அடைய முடியாது போன இலக்கை இனித்தானே அழிப்பதென்ற ஓர்மத்தை நெஞ்சில் விதைத்தான். அந்தத் தோல்வியின் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்த அவனது ஆட்களுக்குத் தகவல் சொன்னான். அந்த இலக்கை நான் அடைவேன்.

ஒருநாளில் நெருப்புப்பற்றிய தெருவும் வாகனங்களும் அன்றைய பகைக்கான இழப்புக்களையும் எண்ணியெண்ணி அதன் காரணமானவர்களைத் தேடும் நடவடிக்கையை பகைவன் தொடர்ந்து கொண்டிருந்தான்.

000              000                    000

ஒருநாள் அவனது வீடு முற்றுகைக்கு உள்ளானது. ஏப்போதுமே தடயங்களை விட்டு வைக்காமல் அழித்துவிடுகிறவனின் வீட்டைச் சூழ்ந்தவர்கள் அவனையும் அவனது மனைவியையும் மகளையும் மாமியாரையும் கைது செய்தனர். அவனைக் காதலித்து அவனில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் அவனை நம்பியவளுக்கம் அவளது குடும்பத்திற்கும் இருண்டது விடிஞ்சது எதுவும் தெரியாது. ஏதோ தங்கள் இனத்தவர் அவனை வீணாக சந்தேகித்துத்தான் அவனையும் தங்களையும் கைது செய்கின்றனர் எனவே நினைத்தார்கள்.

நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடமொன்றை எட்டியபோதுதான் அவன் ஒரு விடுதலைப்போராளியென்றது தெரிய வந்தது. அவனைக் கொன்று போட்டுவிடும் கோபம் அவளுக்கு.

சட்டத்தின் முன் அவளும் அவளது குடும்பமும் அவன் தங்களை ஏமாற்றியது தமக்கும் நடந்து முடிந்த சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று வாதாடினார்கள். இருந்த வசதிகளையெல்லாம் விற்று அவளும் அவளது குடும்பமும் விடுதலையானது. 3வயதில் பச்சைக் குழந்தையாக சிறையில் அவலப்பட்ட அவனது குழந்தை மீதும் அவளுக்கு வெறுப்பு அதிகமாகியது. அவனை உரித்து ஒட்டியது போலவே தமிழும் சிங்களமும் கலந்த பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தையில் ஓடும் தமிழ் இரத்தம் அவளுக்கு எரிச்சலையும் வெறுப்பையுமே அதிகரித்தது.

000            000               000

என்றாவது ஒருநாள் எங்காவது தெருவிலோ வாகனநெரிசலிலோ காற்றாய்விடுகிறவனே தானென்று நினைத்திருந்தவனுக்கு தனது குழந்தையின் மேல் சொல்லியளவிட முடியாத அன்பு. அவளோடு கழிகிற பொழுதுகளை அவன் அதிகம் விரும்பிய தருணங்கள் நிறைய. குழந்தை எதையெல்லாம் விரும்பும் என்பதனையெல்லாம் தானாகவே முடிவு செய்து வாங்கிக் கொடுப்பான். இரவுகளில் உறங்கப்போனால் குழந்தை நித்திரையாகும் வரை அவளோடிருப்பான் கதைகள் சொல்லுவான். எல்லோரும் உறங்கிய பின்னர் உறங்கச் செல்வான்.

பின்னிரவில் உறங்கப் போகிறவன் எல்லோருக்கும் முன்னம் முதல் ஆளாய் எழும்பிவிடுவான். காலை எழுந்ததும் யோகாசனம் முதல் உடற்பயற்சிகள் செய்து காலையுணவை மகளுக்கும் மனைவிக்கும் தயார் செய்து கொடுத்துவிட்டே வீட்டைவிட்டு வெளியேறுவான். அவனது நடமாட்டம் ஒவ்வொன்றும் இலக்குகள் தேடியதாகவே அமையும்.

ஓன்றாயிருந்து களமாடி உறங்கிப்போன ஒவ்வொருவரின் இறுதிக் கணங்களையும் திரும்பத்திரும்ப நினைவு கொள்ளும் அவனது மனசுக்குள் மூண்டெரியும் தீயில் அவனது பணிகளை விரைவுபடுத்துவான். பெயர் , புகழ் , முகம் , முகவரி எதுவுமற்று ஒருநாள் எரிந்து போவதற்காயே அவன் கனவோடலைந்தான்.

கம்பிகளின் பின்னால் அடைபடக் காரணமாயிருந்த தாக்குதலைத் திட்டமிட்டு முடிக்க அவன் பட்ட சிரமங்கள் யாவையும் ஒரு தடயம் அழித்து இன்று அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் முடக்கி சிறையில் அடைத்திருப்பது பற்றி அதிகம் சிந்தித்திருக்கிறான். எனினும் எல்லாம் விடுதலைக்கே என்ற நினைப்பில் கொடும் சித்திரவதைகளையும் மின்பாச்சிகளின் இரக்கமற்ற தாக்குதல் வரை அவன் அனுபவித்த சித்திரவதைகள் மாதக்கணக்காய் அவனைப் பிணமாய் போட்டது. எனினும் இலட்சிய நெருப்பு நெஞ்சுக்குள் சூரிய நெருப்பாய் கனன்று கொண்டேயிருந்தது.

000               000                   000

காலம் 2009மே. நம்பியவர்களும் அவன் நேசித்தவர்களும் துடைத்தளிக்கப்பட்டு அவன் அடைக்கப்பட்ட சிறையில் கடைசிக்களமாடியவர்கள் பலர்; வந்தடைந்தனர். இழப்பதற்கு இனியெதுவுமே இல்லை உயிர்கள் தப்பினால் போதுமென்றதாக வந்திருந்தவர்கள் சொன்ன கதைகள் அவனையும் கலங்க வைத்தது.

தனியே போயிருந்து யோசித்துக் கொண்டிருப்பான். விடுதலையாகிப் போன மனைவி அவனைப் பார்க்க வருவதில்லை. அவள் அவனால் ஏமாந்து போன கோபம் அவன் வெளியில் வந்தால் தன்கையாலேயே அவனுக்கான சாவு எழுதப்படுமென்று மிரட்டிக் கொண்டிருந்தாள். அவனது குழந்தையை அவனது உயிரை அவள் வேண்டாமென்று வெறுத்தாள். அவனைக்காண வருகிற அவன் அம்மா அவனது குழந்தை பற்றிச் சொல்லியழுவாள்.

வெளிநாட்டில் 3உணவகங்களுக்குச் சொந்தமாயிருக்கிற வசதி படைத்த உடன்பிறப்புடன் தொடர்பு கொண்டான். தனது பிள்ளைக்கும் தாய்க்கும் ஏதாவது உதவுமாறு கேட்டான். உடன்பிறந்தவளோ அவனது மைத்துனனோ அவனது குழந்தை சிங்களக் குழந்தையென்றும் அதற்கு தங்களால் எதுவும் செய்ய இயலாதென்று மறுத்தார்கள்.

நாடுமில்லை நாடென்று வாழ்ந்தவர்களுமில்லை. அவனுக்காக யாருமில்லை. இருண்டுபோனது அவன் வாழ்வு மட்டுமல்ல அவனது கனவுகளும்தான். முடிவற்று இழுபட்டுக் கொண்டிருந்த வழக்கு உள்நீதி மன்றுக்கு 4வாரம் ஒருமுறை போய் வந்து கொண்டிருந்தவனின் வழக்கு உயர்நீதிமன்றம் வந்த போது மீண்டும் உடன்பிறந்த உறவுடன் தொடர்பு கொண்டான்.

பணம் கொடுத்து சட்டத்தரணியை வைத்து அவனது வழக்கை வாதாடுவதென்றால் அதற்கான பணச்செலவு அதிகம். எதுவுமற்று எவருமற்றுப் போனவனைக் கட்டாயம் உடன்பிறப்பு காக்குமென்று நம்பிய அவனது நம்பிக்கையில் விழுந்தது பேரிடி.

சரி என்ரை பிள்ளைக்கெண்டாலும் மாதம் ஒரு ஆயிரம் ரூபா குடுத்தீங்களெண்டா அவள் படிக்க உதவியா இருக்கும். கடைசியாக தனது பிள்ளைக்கான கல்வியுதவியையாவது செய்யுமாறு கேட்டான். எதுவும் தம்மால் முடியாது இனிமேல் இப்படி தொடர்பு கொண்டு தம்மை தொந்தரவு பண்ணக் கூடாதென்று எச்சரித்து விட்டார்கள்.

அவனது இரத்தத்தை அவனது கனவின் தேவைதையை அவனது குழந்தையை அவனது காதல் மனைவி உதறிவிட்டாள். அவனது வயதான அம்மாவே தன்னால் இயன்றதைக் கொடுத்து அவனது மகளை வளர்க்கும் பொறுப்பை எடுத்தார். இலட்சியம் தோற்று சிறையில் அடைபட்டு வாழ்வு இனி இருளெண்டு ஆகியது.

000            000                000

அப்போதுதான் நேசக்கரம் அமைப்பின் தொடர்பு அவனுக்கு இன்னொரு சிறையிருக்கும் அவனோடு கூடவிருந்த தோழன் ஒருவனால் கிடைத்தது. ஒருநாள் இரவு அவனுடன் தொடர்பு கொண்டேன். நீண்டகாலம் அவன் சேர்த்து வைத்திருந்த சோகங்களை அன்று ஒன்றரை மணித்தியாலங்கள் அவனோடு கதைக்கக் கதைக்க கொட்டித் தீர்த்தான். கதைவாக்கில் கேட்டேன்.
எந்த ஊர் நீங்கள் ?

அவன் தனது ஊரைச் சொன்னான். அவனது ஊரில் அவனது ஒழுங்கையில் எனது சயிக்கிள் ஓடியிருக்கிறது. அவனது உறவுகள் எனது நட்புகள் ஆகியிருக்கின்றனர். அவன் சொல்லச் சொல்ல சிறுவனாய் பார்த்த அவனது முகம் மெல்ல மெல்ல மங்கலாய் ஞாபகம் வந்தது. எவனோ ஒருவனாய் அறிமுகமானவன் என்னோடு உறவான அவனது வீதியும் வீடும் அவனையும் என் குடும்பத்தில் ஒருவனாய் நிறுத்தியது.

சிறைக்கு வந்த பின்னர் தான் காணாத தனது மகளின் எதிர்காலம் அவளது வாழ்வ பற்றியே அவனுக்குள்ளிருந்த கற்பனைகளையெல்லாம் சொன்னான். ஒரு அப்பாவாக அவன் ஆசைகள் கனவுகள் அவனது மகள் பற்றியே எழுப்பியிருக்கிற கோட்டையில் ஒரு சதம் சேமிப்பும் இல்லாமல் மிகவும் பெரியதாய் உயர்ந்திருந்தது.

என்ரை மகளுக்கு ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் படிப்பு உதவியாக உதவினீங்களெண்டா அது பெரிய உதவியா இருக்கும். நான் ஒருநாள் வெளியில வருவன் எனக்கு நம்பிக்கையிருக்கு.....எனக்கு உதவமாட்டமெண்ட என்ர சகோதரத்தின்ரை கண்ணுக்கு முன்னாலை நானும் உழைச்சு முன்னுக்கு வந்து காட்டுவன் என அன்று சபதமுரைத்தான்.

அவன் கேட்டது போல அவனது மகளுக்கு மாதாந்தம் கல்வியுதவியாக 1500ரூபாய் ஒழுங்கு செய்து அந்த உதவி மாதம் போய்க் கொண்டிருக்கிறது. ஒருமுறை மகளின் படமும் தனது படமும்  ஒருவர் மூலம் அனுப்பியிருந்தான். இடையிடை பேசக்கிடைக்கிற போது தொடர்பு கொண்டு கதைப்பேன். வழக்கின் நிலமைபற்றி நல்ல முடிவொன்று கிடைக்குமென்றுதான் சொல்லுவான். தன் வசதிக்கு ஏற்ப இலவச சட்டத்தரணியொருவரையே அவனது வழக்கை வாதாட வைத்திருந்தான்.
000          000             000

கடந்த ஆறுமாதங்கள் அவனோடு பேசவும் முடியவில்லை. வழக்கு பற்றிய தகவல்களையும் அறியவில்லை. தொடர்பில் உள்ளவர்களுடன் கதைக்கிற போது வழக்கு நடக்கிறது என்றே சொல்லிருந்தார்கள்.

அவனுடன் கூடவிருந்த ஒரு நண்பன் யாழ் சிறைக்குச் சென்றிருந்தான். அவனிடம் கதைத்த போது கேட்டேன்.

அவன் என்னமாதிரியிருக்கிறான் ? வழக்குத் தெரியும் தான இலவச சட்டத்தரணியை வைச்சிருக்கு....ஆனால் அவன் நம்பிறான் தனக்கு நல்ல முடிவு கிடைக்குமெண்டு.....போன கிழமை வழக்கிற்காக ஏத்தீட்டாங்கள். என அந்த நண்பன் சொன்னான். தனது வழக்குக்கும் எவ்வித ஆதரவுமில்லாமல் இருப்பதாக அந்த நண்பன் வேதனைப்பட்டான்.

000              000               000

கனவுகளோடலைந்தவனுக்கு 35வருடகடும் சிறைத்தண்டனையென்பதை அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தியொன்று எல்லா இணையங்களையும் நிறைத்தது. தான் விடுதலையாவேன் உழைத்து முன்னேறிக்காட்டுவேன் என்றவனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நம்பவே முடியவில்லை.

இன்னும் அவன்மீது 129 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. மீதக்குற்றச் சாட்டுகளுக்கும் தீர்ப்புகள் கொடுக்கப்பட்டால் அவன் காலம்....! ஆயுள் முழுவதும் கொடுஞ்சிறையாகவே போகப்போகிறது. செய்திகள் அவனை இப்போது மறந்து விட்டது.

சில நாட்கள் முன் வந்த அழைப்பொன்று அவனைப் பற்றி விசாரித்த போது சொன்ன சேதி.
பாவம் சரியா உடைஞ்சு போயிருக்கிறான். காசிருந்திருந்தா அவனுக்கொரு நல்ல சட்டத்தரணியைப் பிடிச்சிருக்கலாம்.....எங்கை காசில்லாததில இப்பிடியே கிடக்கப்போறம்....! ஒருக்கா கதையுங்கோ அவனோடை ஆறுதல் சொல்லுங்கோ.....!

அவனது 35வருட தண்டனைக்காக வேதனைப்பட்டு தகவலைச் சொன்னவனுக்கு இம்மாதம் இறுதியில் வழக்குத் தவணை வருகிறது. சில லட்சங்கள் இருந்தால் இவன் வெளியில் வருவதற்கான விதி மாற்றம் இருக்கிறது. இவனுக்கும் இத்தகையதொரு கொடிய தீர்ப்பு வந்துவிடக்கூடாதென்று விதியைத் தான் வேண்டுகிறேன். ஆனால் விதியை மாற்ற எதிர்பார்க்கிய லட்சங்களை என்னால் வழங்க முடியாதுள்ளது.

இள வயதில் தங்கள் வாழ்வைத் தந்தவர்கள் சிறைகளின் பின்னால் ஒளியிழந்த சூரியன்களாய் தங்களது விடுதலைக்கான நாளை எதிர்பார்த்தபடியிருக்கிறார்கள். தங்கள் விடுதலைக்கான கதவுகள் திறபட காசுக்கடவுளர்களைத் தேடுகிறார்கள்  காசுக்கடவுளர்களின் கண்கள் இவர்களுக்காய் திறக்காதா ?

28.10.2012