Monday, March 26, 2012

இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு.....!


(குறிப்பு :- இவ்வாக்கம் சுயசரிதமில்லை. விடுதலைக்காக வாழ்ந்த ஒருவரின் நிலமையைப் புரிந்து கொள்ளாமல் கிடைக்கவிருந்த உதவியைத் தடுத்தாட்கொண்ட ஒரு குழுவின் போக்கினைப் பதியவும் , தனித்தே இயங்குகிற நேசக்கரம் அமைப்பினை எவரோ இயக்குவதாக பொய்யுரைக்கும் பொய்யர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கவுமே எழுதியுள்ளேன். ஸ்கைப்பிலும் தொலைபேசியிலும் சிலருக்குள் நடைபெறுகிற உரையாடல் பக்கசார்பற்ற உதவிகளையும் கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பொய்யான நம்பிக்கைகளையும் விதைத்துவிடுகிறது. ஆயிரம் வார்த்தைகள் பேசி பெரிய தலைகளின் விமர்சனத்தை வாங்குவதிலும் பார்க்க பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களின் வாழ்வுக்கு உதவிபுரிகிற மனிதநேயர்களும் உண்மையைப் புரிந்து கொள்ளவே இதனை எழுதியுள்ளேன்)

**** அண்ணையை தெரியுமா ? கேட்டான் லீமா. அவனது நிறம் உயரம் முதல் அவன் பற்றிய அடையாளங்களை லீமா ஞாபகப்படுத்தினான். அந்தப் பெயரை நினைவுகள் எட்டும் வரையும் தேடியும் பிடிபடவில்லை.

உங்களுக்குத் தெரியுமக்கா....இதுதான் நம்பர் எழுதுங்கோ....ஒருக்கா எடுத்துக் கதையுங்கோ.....
லீமாவிடமிருந்து பெற்ற இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தினேன். எதிர்முனையில் கதைத்த நபருக்கு நான் கதைக்க வேண்டிய ஆளைக் கேட்டேன். பொறுங்கோக்கா.....சொல்லிவிட்டு அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டான்.

கலோ....அண்ணை நான் யேர்மனியில இருந்து***.
ஓம் நான் **** சொல்லுங்கோ....குரல் திக்கித்திக்கி வந்தது. சுகமாயிருக்கிறியளே ? ஒவ்வொரு சொல்லை உச்சரிக்கும் முன்னம் சில வினாடிகள் திக்கித்திக்கியே கதை வந்தது. தன்னை அடையாளம் சொல்லவே சில நிமிடங்கள் எடுத்தது.

லீமா சொல்லியிருப்பான் தான என்னைப்பற்றி....? வடிவாக் கதைக்கேல்ல....உங்களோரைட கதைக்கச் சொன்னவர். என்னை மறந்து போனீங்கள் போல....எனச் சிரித்தான். இல்ல....என்ற எனது இழுவையைப் புரிந்தானோ என்னவோ.....தன்னைப்பற்றி சொல்லத் தொடங்கினான்.

நம்பவே முடியாதிருந்தது....கடைசிச்சண்டை நேரம் காயம்பட்டிருந்து அவன் இறந்துவிட்டதாகவே தகவல் இருந்தது. இப்போது உயிருடன்....!

2009 தைமாதம் காயம்பட்டனான். 2மாதத்துக்குக்கிட்ட கோமாவில இருந்தனான்....பிறகு ஏப்றல் மாதம் பிள்ளையளும் மனிசியும் கொஸ்பிற்றலுக்கு பாக்க வந்ததுகள்.....என்னைப்பாக்க வந்து அதுகளும் காயம்பட்டிட்டுதுகள்....அதோடை பிள்ளையளை றெட்குறோஸ் கப்பலில ஏத்தினவை....அந்த நேரம் நானும் திரும்பியும் காயம்பட்டிட்டன்....எனக்கொண்டும் தெரியாது திரும்பியும் கோமாவுக்குப் போட்டன்....பிறகு நான் கண் முளிச்ச நேரம் புல்மோட்டையில இருந்தன்.....அப்ப ஒருநாள் ரீஐடிக்காறர் வந்து விசாரணையெண்டு 4ம்மாடியில இருந்து எல்லா இடமும் ஏத்தியிறக்கி.....இந்தா நான் பரலைசா இருக்கிறன்.....முள்ளந்தண்டு வடம் பாதிச்சு இடுப்புக்கு கீழ உணர்வில்ல....நடக்கவும் மாட்டன்....ஆரேன் எழுப்பிவிட்டுக் கையில தடியைத் தந்தாத்தான் தெண்டித் தெண்டி ஒரு பத்து மீற்றர் நடப்பன்.....அதுக்குப் பிறகு கால் விறைப்புமாதிரியாகீடும்....உணர்வொண்டும் தெரியாமல் அப்பிடியே விழுத்தீடும்.....அழுகையின் ஒலியை உணர்த்தியது அவனது குரல்.

துலைக்காயத்தால தான் உடனும் சொல்லுகள் சொல்ல வராது....அதுதான் திக்குவாயாப் போச்சு....யோசிப்பீங்கள் இவனென்னடா இப்பிடிக் ககைத்கிறானெண்டு....அப்பிடியொண்டும் நான் நினைக்கேல்லண்ணை.....

எனக்கென்ன கவலையெண்டா.....என்ர மகள் அம்மாதான வச்சுப்பாத்தவ....நவம்பர்மாதம் அம்மாவும் கான்சரில செத்துப்போட்டா அப்ப பிள்ளையை சொந்தக்காறாக்கள் ஒரு அனாதையில்லத்தில விட்டிட்டினம்....புள்ளை பாவம் தனிச்சுப்போனாள்....ரெண்டுதரம் ரெலிபோனில கதைச்சனான்.....அது சின்னன் தான எப்பவப்பா வருவீங்களெண்டு அழுகுது....

ஏத்தின வயசு மகளுக்கு...? 8வயது. அக்கா எங்கையிருக்கிறா ? அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லைப் போல.... அவளும் என்னை வந்து பாக்கிறேல்ல....என்னால அவளுக்கும் ரீஐடி சரியா கஸ்ரப்படுத்தீட்டாங்கள்.....மூத்தவன் காயம்பட்டு கப்பல்ல ஏத்தினவங்கள் அவனைக்காணேல்லயாம்....பிள்ளையையும் இழந்த கவலை அவளும் என்னேயிறது....என்னை வேண்டாமெண்டிட்டாள்....மகளைத்தான் நினைக்க கவலையா இருக்கு....குரல் மாறி அழுகிறான் என்பதனை உணர்ந்தேன்.

ஏன்ன செய்யிறது....? ஆர் நினைச்சம் இப்பிடியெல்லாம் வருமெண்டு....? யோசிக்காதையுங்கோ....ஏதாவது செய்வம்....!

அம்மா கடைசியா வந்து பாக்கேக்க சொல்லீட்டுப் போனவ...தான் சாக முன்னம் என்னை வந்து பாப்பனெண்டு...அவாவும் கடைசீல என்னப்பாக்காமல் செத்துப்போட்டா....அம்மா இருந்தா என்ர புள்ள அனாதையாகீருக்கமாட்டுது.....

தாயைச்சாகும் நேரம் காணாத துயரம் தன் 8வயது மகள் அனாதையான துயரம் ஒரு தாயின் மகனாகவும் ஒரு மகளின் அப்பாவாகவும் அவன் மனசை அரித்துக் கொல்கிற துயரங்கள் கண்ணீராகிக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு கதையையும் சொல்லச் சொல்ல அழுகைதான் வந்தது. தனது துயரைச் சொல்லியழுகிறவனுடன் சேர்ந்து அழ முடியவில்லை.

என்னெண்டா எனக்கு அடுத்தமாதம் வழக்கு வந்திருக்கு....! லோயருக்கு காசுகட்ட வேணும்....ஒருதரும் எனக்கில்ல... அதான்.... நான் வெளிய வந்திட்டா உழைச்சுத்தருவன்.... என்ரை பிள்ளையையும் பாப்பன்..... திக்கித் திக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

நீங்க யோசிக்காதையுங்கோ.....! ஏதுமெண்டா கேளுங்கோ.....பாப்பம்.....!

000 000 000

தொடர்பு அறுபட்டு நெடுநேரமாகியும் மனம் சஞ்சலமாகவே இருந்தது. எப்படி வாழ்ந்த மனிதன்...இன்று தனக்கு உதவுமாறு கெஞ்ச வைத்தது எது.....?

2002 தான் முதல் முதலில் அவனைச் சந்தித்தேன். பெரும் பொறுப்புக்கு உரிய கடமையுணர்வோடும் அதேயளவு மக்களுடனான தொடர்பாடலும் கொண்ட ஒரு கடமை வீரனையே அந்தப் பிரமனாலங்குளத்தில் பார்த்தேன். அவனைப்பற்றிப் பின்னர் பல கதைகள் சொன்னார்கள். அவன் நிற்கிறானென்றால் எதிரி எவ்வளவு பீதியடைவான் என்றெல்லாம்; அந்தக் கறுத்த நெடிய முறுக்கேறிய உடலும் நிமிர்வும் சொன்ன கதைகள் பல்லாயிரம். அவை ஒவ்வொன்றும் ஒருகாலம் பதிய வேணுமென ஒருநாள் இரவு தோழியொருத்தி கதையோடு கதையாய்ச் சொன்னாள்.

பின்னர் புதுக்குடியிருப்பில் கிளிநொச்சியில் பரந்தனில் மன்னாரில் என அந்த மனிதனின் ஆழுமை ஆற்றல் என அவனது பன்முகத்திறமைகளையெல்லாம் பலரது வாயிலிருந்து கேட்டிருக்கிறேன். அவனது பிரிவின் பொறுப்பாளர் ஒரு சந்திப்பில் மற்றவர்களுக்கு அவன் பற்றி ஒரு உதாரணம் சொன்னார். அத்தகையளவு எல்லாராலும் நேசிக்கப்பட்ட ஒருவன் இன்று...??? நினைக்கவே முடியவில்லை.

இது விதியா ? இல்லை தமிழன் செய்த ஊழ்வினையா ? எதுவென்று பிரித்தறிய முடியவில்லை.
அன்றைய தொலைபேசியழைப்பும் அவனது கண்ணீர் முட்டிய கதைகளும் தான் நெஞ்சு முட்டிக்கனத்துக் கொண்டிருந்தது. நினைக்க நினைக்க அழுகைதான் வந்தது. கத்தியழுதால் தான் மனம் ஆறும்போல அந்தரமாயிருந்தது.

தாங்க முடியாத வேதனைகளை கொட்டித்தீர்க்கும் இடமாக நிலக்கீழ் அறையொன்றுதான் இருக்கிறது. உடுப்புகள் தோய்க்கப்போட்டு வருவதாக பிள்ளைகளுக்குச் சொல்லிவிட்டு உடுப்புக் கூடையைத் தூக்கிக்கொண்டு நிலக்கீழ் அறைக்குப் போனேன். உடுப்புத்தோய்க்கும் மெசினில் உடுப்புக்களைப் போட்டு சவர்க்காரப்பவுடரைப் போட்டு மெசினை இயக்கிவிட்டேன். மெசின் சுழல ஆரம்பித்தது. கதவைச் சாத்தினேன். நெஞ்சுக்குள் குவிந்திருந்த துயர் கண்ணீராய் வழிந்தது. வெளியில் சத்தம் போகாத நிலக்கீழ் அறையின் ஒவ்வொரு அணுவும் எனது கண்ணீரைத் தாங்கிக் கொண்டது. எப்படியோ எல்லாம் வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று....ஏதிலிகளாகவும் ஊனமாகவும் முடமாகிக்கிடக்க எங்கள் புலத்து அரசியல் புடுங்குப்பாடுகளும் இடுங்குப்பாடுகளுமாகியிருப்பதன் மர்மம் புரியவேயில்லை.

அந்தநாள் மட்டுமல்ல அடுத்து வந்த சில நாட்கள் வரை அண்ணையின் ஞாபமும் அவரது நிலமையும் தான் நிம்மதியைப் பறித்திருந்தது.

இரண்டாவது நாள்.....

அம்மா...அம்மா......மகள் கூப்பிட்டாள். என்னம்மாச்சி...? உங்களுக்கு ரெலிபோன்....மகள் ரெலிபோனைக் கையில் தந்தாள். லீமாதான் அழைத்திருந்தான். ஒருக்கா எடுங்கோ....சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான்.
அக்கா அண்ணைக்கு லோயருக்கு ஒரு ஒழுங்கு செய்ய வேணும்....காசு கட்டாட்டி எங்கடை லோயர்மார் கோட்டுக்கு போகமாட்டினம்.....அண்ணேன்ரை நிலமை ஆள் சொன்னவர்தான....ஒரு லச்சம் தயார்பண்ண வேணும்....ஏற்கனவே அவனுக்கு வழக்குக்கு உதவுவதாக வாய்மொழி நம்பிக்கை கொடுத்தவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது பற்றி தயக்கத்துடன் சொன்னான்.
2கிழமையில காசு றெடிபண்ணினாத்தானக்கா....

ஏற்கனவே அவனுக்கு உதவுவதாக வாக்குறுதியளித்த லண்டனில் இருந்து இயங்கும் நிறுவனத்தின் பங்காளி போன தவணைக்கு காசு கொடுட்பதாகச் சொல்லிவிட்டு தொடர்பில்லாமல் போனது போல இம்முறையும் பிசகினால் சட்டத்தரணியைச் சமாளிக்கேலாதென்ற உண்மையையும் லீமா சொன்னான்.

ஏன்னெண்டாலும் ஒரு ஒழுங்கு செய்வம்...சொல்லிவிட்டு லீமாவின் தொடர்பைத் துண்டிக்கிறேன். அவசரத்துக்கு ஆதரவு வழங்குகிற லண்டனில் வாழும் ஒரு அன்பரைத் தொடர்பு கொண்டு நிலமையைச் சொன்னேன். பெயரை வெளியில் சொல்லி உதவி கோரமுடியாத நிலமையையும் விளக்கினேன்.

பிள்ளை...நான் ஒருலட்சம் அனுப்பிவிடுறன் விபரத்தை தாங்கோ....அந்த அன்பர் பணம் அனுப்புவதற்கான விபரத்தை என்னிடம் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே உதவுவதாக கடைசியில் தொடர்பையறுத்தவரும் இவரும் தத்தமது தொழில் சார்ந்து உறவு இருப்பதால் ஏற்கனவே வாக்குறுதியழித்து ஏமாற்றப்பட்ட விபரத்தையும் சொன்னேன். அவரிடம் இதுபற்றி விளக்கம் கேட்பதாகவும் அந்த அன்பர் சொன்னார்.

ஒருவழியாய் உதவி ஒழுங்கானதில் நிம்மதியாகியது மனசு. அடுத்த 20நிமிடம் கழித்து உதவுவதாக விபரம் பெற்றவர் அழைத்தார். பணம் அனுப்பிய விபரம் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விழுந்தது இடி.

பிள்ளை என்னெண்டா நான் அவரிட்டைக் கதைச்சனான்....அவர் சொல்றார் தான் குறைஞ்ச காசிலை இந்த வழக்கைச் செய்ய தன்னிட்டை ஆளிருக்கெண்டு....தான் இவற்றை வழக்குக்கு காசு குடுப்பராமெண்டு.....ஒரு கிழமை பாருங்கோ அவர் செய்யாட்டி சொல்லுங்கோ...நான் தாறன்....

உதவ முன்வந்த மனிதனையும் குழப்பிய அந்த மொட்டந்தலை உபகாரியை ஸ்கைப்பில் அழைத்தேன்.
என்னெண்டா ழூழூழூ நான் ஒரு லோயரை வைச்சிருக்கிறன் அவருக்கொரு ஐயாயிரம் ரூபா குடுத்தா ஒரு தவணைக்கு கோட்டுக்குப் போவார்.....நீங்களேன் ஒரு லட்சத்தை வீணாக்கிறியள்...மிச்சத்தை வைச்சிருந்து நாங்கள் அவர் வெளீல வர ஒரு கடைபோட்டுக் குடுத்தமெண்டா அவருக்கொரு வேலையுமாகீடுடெல்லோ....?

அவற்றை குற்றப்பத்திரிகை என்னமாதிரியெண்டது தெரியுமோ ? கேட்ட எனக்குச் சொன்னார் அது கஸ்ரமானது தான் ஆனால் என்ரை லோயர் முடிச்சுத் தருவார். அவர் விளக்கங்களை நீட்டிக்கொண்டு போனார். அவரது விளக்கங்களிலிருந்து அண்ணைக்கு அவர் பெரிதாய் எதையும் செய்யப்போவதில்லையென்றதை உணர முடிந்தது. அதற்கு மேல் அவருடன் கதைப்பதில் எவ்வித பலனுமில்லையென்பது புரிந்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.

லீமாவை அழைத்தேன்.....ஐயாயிரத்தோடு அவனை வெளியில் எடுக்கலாம் என்ற லண்டன் உபகாரியின்; கதையில் அவனுக்கும் நம்பிக்கையில்லை என்பதை அவன் ஏற்கவே ஊகித்திருந்ததை அப்போது சொன்னான். அப்போதுதான் லீமா அண்ணை மீதான வழக்குகள் பற்றிச் சொன்னான்.

லண்டன் உபகாரி நினைப்பது போல அந்த வழக்கு இலகுவாக முடிகிற வழக்கில்லையென்பது புரிந்தது. அவைக்கு இப்போதைக்கு ஒண்டையும் வெளிப்படுத்தாதையுங்கோ லீமா எங்கடை பக்கத்தாலை லோயருக்கான காசை ஒழுங்கு பண்ணுவம்.... ஆளையனுப்பி முதல் அட்வான்சை குடுப்பிப்பம்.... ஓமக்கா அதான் சரியெண்டுபடுது...

நம்பிக்கையானவர்கள் பலரைத் தொடர்பு கொண்டு எல்லாம் இழந்து இன்று ஊனமாகி திக்குவாயாகிப் போன அண்ணனுக்கு உதவி கோரத்தொடங்கினேன். கடைசியில் கனடாவிலுள்ள நண்பர் ஒருவர்தான் மிச்சமாக இருந்தார்.

இரவு கனடா நேரம் 9.40இற்கு அந்த நண்பரை அழைத்து விடயத்தைச் சொன்னதும் கொடுத்த விபரத்துக்கு மறுநாள் ஒரு லட்சத்தை போட்டுவிட்டு வெஸ்ரேன் யூனியன் பணம் பெறும் 10 இலக்கங்களை குறுஞ்செய்தியிட்டிருந்தார். முகம் காட்டாமல் அவ்வப்போது அவசரங்களுக்கு உதவுகிற அந்த உறவு ஒருகாலம் நாட்டுக்காக இயங்கிய இதயம். சிறைகளில் எல்லாம் இருந்த அனுபவம் நிறைந்த அந்த மனிதர் தன்போன்ற இன்னொரு போராளியின் சிறையின் வதையைப் புரிந்து உதவியது.

கோடி நன்றிகள் அண்ணா...! என்ற மின்னஞ்சல் மட்டுமே அப்போதைய எனது பதில் நன்றியானது.

000 000 000

குறித்த திகதிக்கு முன்னர் 25ஆயிரம் சட்டத்தரணிக்கு கட்டி அந்த நாள் விடிந்தது. வழக்கிறஞரின் தொலைபேசி அன்று உறங்க முடியாது தொடர்ந்து எனக்காக ஒலித்துக் கொண்டிருந்தது. எதிர்பார்த்தைவிடவும் ஒரு விடிவுக்கான பாதையை 25ஆயிரம் செய்திருந்தது. அடுத்த 50ஆயிரத்துக்கு அலுவல்கள் நிறைய வழக்கறிஞர் தரப்பிலிரந்து தரப்பட்டது. இன்னும் ஒரு லட்சம் கேட்டாலும் அதையும் செலுத்தி அந்த வீரனை வெளியில் எடுக்க வேண்டுமென்ற வைராக்கியம் மனசுக்குள் இறுக்கமாகியது.

ஐயாயிரத்தோடு ஏதோ அல்வா விற்கலாம் போல ஆலோசனை சொல்லி ஏமாற்றிய மொட்டந்தலைக்கு அந்த அண்ணனின் விடுதலையைச் சொல்ல வேண்டுமென்ற ஆவல். தவணைகள் குறிக்கப்பட்டு எங்களுக்காக தனக்கான குடும்பம் வாழ்வு சந்தோசம் எல்லாவற்றையும் இழந்த அண்ணனுக்கு ஒளி கிடைக்கும் வாய்ப்பொன்று கிட்டவுள்ள செய்தியை அண்மையில் லீமா தந்திருந்தான்.

ஐயாயிரத்தோடு ஆளை வெளியில எடுத்து கடைபோட்டுக் குடுப்பம்....என்றவர் இன்று வரையும் அந்த அண்ணனின் வழக்குப்பற்றியோ அவனது விடுதலைக்கான முயற்சி பற்றியோ எதையுமே கதைக்கவுமில்லை. அதற்காக ஒரு சதத்தையும் கொடுக்கவுமில்லை.

அண்மையில் ஒருவர் லண்டனிலிருந்து பேசியபோது....லண்டன் உபகாரி பற்றிக் கதைத்தார். அவங்கள் கனபேரை வெளியில எடுத்து விட்டிருக்கிறாங்களாம்....உங்களையும் அவங்கள் தானாம் காசைத் தந்து இயக்கிறாங்கள்....நீங்கள் றேடியோவுக்கு வந்துதானாம் அவேடை சனத்தை உங்கடை பக்கம் எடுத்திட்டியளாம்....என்றார்.

வாயில் கெட்டவார்த்தைகள் தான் வந்து குவிந்தது. யாரோ வலிப்பட்டு துயரப்பட்டு யாரிடமோ எல்லாம் கெஞ்சி பிச்சையெடுத்துக் கொடுக்கிறதையும் தங்கள் சுய அரசியல் வியாபாரத்துக்கு விளம்பரப்படுத்துகிற இந்த வியாபாரிகளை இன்னும் நம்புகிற மனிதர்களும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

அண்ணை நான் ஒரு தனிமனிசி றேடியோவில போய் நிண்டு உதவுங்கொ உதவுங்கோண்டு கத்தியும் இன்ரநெட்டில ஆளாளுக்கு திட்டிற திட்டெல்லாத்தையும் வாங்கிக் கொண்டு தான் இந்தளவு உதவியளையும் ஒழுங்கு செய்திருக்கிறன்....இதைச் சொன்னாலும் விலாசமெடுக்கிறனெண்டு சொல்லுவினமண்ணை....ஆனா உந்தக் நாட்டைக் கடந்தவையும் புதுச்செயலகத்தைத் திறந்தவையும் இல்லாமத்தானண்ணை இவ்வளவு உதவியும் போகுது....

அட அப்பிடியே....? ஈலிங் அம்மனுக்குப் போன கிழமை போனனான்....அங்கை அவங்கடை அவங்கடை ஆக்களைக் கண்டனான்....அவை அப்பிடித்தான் கதைக்கினம்....எனக்கும் உங்களில சந்தேகம்தான்....அதெப்பிடி உங்களுக்கு உவ்வளவு தொடர்புகளும் வந்தது...? சந்தேகம் சந்தேகமெனப் பல கேள்விகள் கேட்டவர் கடைசியில் சொன்னார். கோவிக்காதையுங்கோ கனபேர் உப்பிடித்தான் கதைக்கினம் அதத்தான் கேட்டனான்... கோவிக்காதையுங்கோ என்ன....சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். இப்படித்தான் சந்தேகங்களும் கேள்விகளும் நம்பிக்கைகளை உடைத்து நொருக்கிவிடுகிறது.

கடந்த 5மாதங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப நலனுக்காகவும் சட்ட உதவிகளுக்காகவும் நேசக்கரம் ஒருங்கமைத்துக் கொடுத்த உதவிகளின் தொகையை 4நாட்கள் தேடித்தொகுத்து 15.03.2012 கணக்கெடுத்த போது நம்ப முடியாதிருந்தது. ஐந்து மில்லியன் ரூபாவுக்கு மேலாக (5328517,50 ரூபா) உதவிகள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வருகிற விமர்சனங்கள் வரட்டுமென்ற முடிவோடு கைதிகள் நலன் கணக்கறி க்கையை தயார் செய்தேன்.

அன்று லீமாவுடன் பேசுவதற்கு தொடர்பெடுத்து லீமாவுக்கு விடயத்தைச் சொல்ல லீமா மிகவும் வேதனைப்பட்டான். நாங்க இஞ்சைபடுற துயரம் ஒருதருக்கும் விளங்காதக்கா....இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு ஏதாவது செய்வமெண்ட சிந்தனை உங்கை வராது போல....

16.03.2012


தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய 5மில்லியன் ரூபா உதவி கணக்கறிக்கை விபரத்தினை பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்:-


http://tamilnews24.com/nesakkaram/ta/?p=1381

Monday, March 19, 2012

எங்கள் விடுதலையின் பொருளறியும்


கண்முன் விரிந்து
கனவுவெளியெங்கும்
விதைந்து கிடக்கிற
எங்கள் மீதான வன்மங்கள்
ஒருநாள்
ஓர்மமாய் எழும்.
அன்று எங்கள் தீ விரல்கள்
இப்பூமியெங்கும் தணலேற்றும்…..
தமிழச்சிகளின் மார்பையறுத்தவனும்
பிறப்புறுப்பை மிதித்தவனும்
மரணத்தின் வலியறியும் விதியெழுதும்
நாளின் பொழுதறியும் - எங்கள்
விடுதலையின் பொருளறியும்....
12.03.2012

 (நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பார்த்த வலியின் வெளிப்பாடாய் இக்கவிதை)

Saturday, March 10, 2012

யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி

அக்கா...! அவ்வப்போது தொலைந்து போகிறவன் இடையிடை இப்படித்தான் அழைப்பான். கிட்டத்தட்ட 3மாதங்கள் தொடர்பறுந்து போனவன் நேற்று மீண்டும் அழைத்திருந்தான்.

எங்கைசாமீ ஒளிச்சிருந்தனீங்கள்...? ஒரு எஸ்எம்எஸ் கூடப்போட நேரம் கிடைக்கேல்லயோ ?
நாய்க்கென்ன வேலை அது ஓடிக்கொண்டுதானேயக்கா இருக்கும்....

அப்ப நாய் வாழ்க்கை இன்னும் முடியேல்லெயெண்றீங்களோ...? அதெங்கக்கா முடியுறது....?
எவ்வளவோ துயரங்களையும் வலிகளையும் மனசுமுட்டச் சுமந்து கொண்டிருந்தாலும் தொடர்பில் வருகிற நேரங்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டவன் போல கதைக்க ஆரம்பித்துவிடுவான்.

வளமையான சுகநல விசாரிப்புகள்....குடும்பம் குழந்தைகளில் ஆரம்பித்து வளமைபோல நேற்றும் தாயகத்தில் போய் நின்றது.

நேற்றைய நமது கதையில் பவி பற்றிய கதை எப்படி வந்ததென்று தெரியாமல் வந்துவிட்டது. நினைச்சா நெஞ்சு வெடிச்சிடும் மாதிரியிருக்கு....கடைசியா அந்தாள் என்னிட்டை கேட்டது ஒண்டு தான்....தன்ரை பிள்ளையள் மூண்டையும் படிப்பிச்சு விடச்சொன்னது மட்டும்தானக்கா.....

அவன் பவியின் கணவனான ஒரு தளபதியின் கடைசி ஆசையைப் பற்றி கிட்டத்தட்ட 47 நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் அவனது இயலாமை அவனைக் குற்றவாளியாய் வரைந்து அவனை வருத்திக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

என்ன செய்றது....? யார் நினைச்சம் இப்பிடியெல்லாம் வருமெண்டு....

என்னக்கா சொல்றியள்....இந்தக் கட்டமைப்புகள் செயலகங்கள் நினைச்சிருந்தா எல்லாருக்கும் எல்லாம் செய்திருக்கலாமக்கா....நாங்கெல்லாம் ஊரிலை நிக்கேக்க இங்கை அரசியல்வேலை நல்லா நடக்குது எங்களுக்குத் தான் வெற்றியெண்டு சாவுக்கை நிண்டம்....இஞ்சை வந்தப்பிறகு தான தெரியுது நாங்கெல்லாம் முட்டாளுகளா இருந்திட்டமெண்டது....இவனுகளின்ரை வெளிநாட்டரசியலின்ரை விறுத்தத்தை சத்தியமா இஞ்சை வந்தப்பிறகு தானக்கா முழுசாப்புரிஞ்சன்.....ஒருநாள் கூட களமறியாதவனெல்லாம் இப்ப கடைசீல நடந்ததென்னெண்டு கதைவிடுறாங்கள்....அது போதாதைக்கு நம்மையெல்லாம் துரோகியுமெல்லோ ஆக்கீட்டாங்கள்......22வருசம் இந்த இனத்துக்காக எல்லாத்தையும் இழந்து இண்டைக்கு சொந்தக் குடும்பத்தையே காண முடியாம கடைசியில 22வருசம் போராடின குற்றத்துக்கு துரோகிப்பட்டமும் தந்திட்டாங்கள்.....இந்த விதியை நினைச்சாத்தான் வலிக்குதக்கா....

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அவனது கதைகளுக்கு நடுவில் சின்னச் சின்னப் பகிடிகள் விட்டு அவனை அந்தச் சில நிமிடங்கள் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது.

000 000 000
16வயதில் தனது சுயவிருப்போடு விடுதலைப்புலியானவன். எத்தனையோ சமர்கள் களங்கள் அவனது கள அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு. ஜெயந்தன் படையணியின் சிறந்த சண்டைக்காரர்களில் அவனும் ஒருவன். ஜெயசிக்குறுவே அவனது கடைசிக்களமாக தொடர் காயங்கள் கால்களையும் கைவிரல்களையும் ஊனமாக்கும் வரை அவன் ஒரு சிறந்த சண்டைக்காரனாகவே திகழ்ந்தான்.

சிறந்த சண்டைக்காரனே சிறந்த அரசியல்காரனாகுவான் என்பது அவன் விடயத்தில் உண்மையாக அவன் களத்திலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட அரசியல் பொறுப்பைத் தலைமை வழங்கியது. அரசியல் பிரிவுக்காரர்கள் ஆடைமடிப்புக்கலங்காமல் பணிசெய்யும் இலகுப்பணிக்காரர்கள் என்ற களப்போராளிகள் பலரது கருத்தே இவனுக்கும் இருந்தது. தானும் அரசியல் பிரிவில் அதுவும் மாவட்டங்களை கட்டி நிர்வகிக்கும் பொறுப்பு வரும்வரை அரசியல் பிரிவில் உள்ள கடினங்களை அறிந்து கொள்ளவேயில்லை.

சண்டையில நிண்டு கொண்டு அரசியல்காறரை ஏதோ பெரிய வாழ்க்கை வாழிறாங்களெண்டு கதைச்ச கதைக்குத்தான் காலமெனக்கு இந்தத் தண்டனையைத் தந்திருக்கெண்டு நினைப்பான்.
சண்டைக்களங்களில் இருந்த முகம்போய் அரசியல் பிரிவுக்குரிய முகத்தை வரவழைத்துக் கொண்டான். மக்கள் தொடர்பு முதல் அனைத்தையும் செய்யத் தொடங்கிய போது வரியுடைக்கு ஓய்வு கொடுத்து பொது உடைக்கு மாறினான். விளையாட்டுத்தனங்கள் போய் சீரியசான அரசியல் போராளியாய் பொறுப்பு மிக்கவனாகிப் போனான். ஆயினும் பலமுறை களம்காண விரும்பும் தனது கனவைத் தலைமையைச் சந்திக்கிற போதுகளில் சொல்லி வைக்கத் தவறுவதில்லை. ஏதோ இனி அரசியல் பணியே உனது பணியென்பது போல தலைமையின் பதில் சிரிப்போடும் கண்டிப்போடும் வருகிற போது வாய்மூடிவிடுவான்.

கடைசிக்கள நிலமை மாறிப்போய் வன்னியை விட்டு விலகி நின்ற வெளிமாவட்டப் போராளிகள் நிலமை துடுப்பிழந்து போகுமென்று கனவில் கூட எண்ணாமல் தனக்குப் பணியாகத் தரப்பட்ட மாவட்டத்திலிருந்து பணிகளோடு கவனமாகினான்.

வாழ்வும் மரணமும் முள்ளிவாய்க்காலில் எழுதப்பட்டுக் கொண்டிருக்க அங்கே சென்றுவிட இவனும் இவனது மாவட்டத்திலிருந்த பலரும் முயற்சித்த முயற்சியும் தோற்றுவிட்ட போது முடிவுகள் அவரவரின் சுய விருப்பங்களாகியது.

எவ்வவோ குழப்பங்கள் விரக்தியின் மத்தியில் தான் நாட்டைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்தான். அவனது ஆயுளின் நீளமோ அல்லது அதிஸ்டமோ தெரியாது ஐரோப்பிய நாடொன்றில் வந்திறங்கச் சிலர் உதவி செய்து ஐரோப்பாவில் வந்திறங்கினான். வந்த பின்னர் தான் ஐரொப்பாவின் தாயகம் தேசியம் தன்னாட்சி குழுமோதல் முதல் புரிந்து கொண்டான்.

தன்கையால் மண்போட்டு விதைத்தவர்களை தன்கையால் வளர்ந்தவர்களை களத்தில் இழந்தவர்களை தன்னோடு ஒன்றாய் உறவாடி வாழ்ந்து ஒரே களத்தில் மடிந்தவர்களின் தியாககங்கள் ஆளாளுக்கு கூறுபோட்டு மாவீரர்களின் தியாகங்கள் துண்டாடப்படுவதனை எதிர்த்து ஒற்றுமைப்பாடொன்றை உருவாக்குமாறு எங்கும் வேண்டினான்.

ஒற்றுமையை வேண்டியதற்கான பலன் அவன் பெரிதுரோகியாக்கப்பட்டு இணையங்களில் கிழித்தெறியப்பட்டான். எத்தனையோ நாட்கள் தனக்குக் கிடைத்த துரோகிப்பட்டத்தை நினைத்து அழுதிருக்கிறான். 22வருடம் தமிழினத்துக்காக வாழ்ந்தவனை அவன் போராட்ட வாழ்க்கையின் வயதுகூட இல்லாததெல்லாம் அவனைத் துரோகியாக்கி தேசியம் பேசியது கூடப் பொறுக்க முடிந்தது. ஆனால் அவன் பிறந்த மாவட்டமே துரோகிகளின் மாவட்டமென்று பிரதேசப்பாகுபாட்டை புலத்தில் வளர்ப்பது போன்ற பெரிய கனவான்களின் பிரிவினைவாதக் கருத்துக்கள் எழுத்துக்களை மட்டும் அவனால் தாங்கவே முடியவில்லை.

வெளியில் வெளிக்கிட்டால் துரோகி மாவீர் நாளுக்குப் போனால் துரோகி....எங்கும் துரோகி எதிலும் துரோகி....இப்போது எங்கும் போவதில்லை. ஒரு அறைக்குள் வாழ்க்கையாகிப் போய்விட்டது. வாரத்தில் 3நாள் மிகவும் குறைந்த சம்பளத்திற்குச் செய்யும் வேலையைக்கூடச் செய்ய முடியாது போனது.

உணர்விழந்த வலக்கையின் 3விரல்களையும் பார்த்த மக்டோனால்ஸ் முதலாளி அவனால் வேகமாக வேலைசெய்ய முடியாதென்று வேலையை நிறுத்திவிட புதிய றெஸ்ரோரண்ட் ஒன்றில் கிடைத்த 5நாள் வேலையிலும் சம்பளம் மிகக்குறைவு. ஆனாலும் அரச வேதனத்தில் இருப்பதை விரும்பாமல் தனது சுய உழைப்பில் வாழ வேண்டுமென்ற வைராக்கியம் 12கிலோமீற்றர் தினமும் வேலைக்கு நடந்து போய்வருகிறான். கேட்டால் இதென்ன கஸ்ரமக்கா...? ஏன சிரிக்கிற அவன் மனசுக்குள் எரிகிற துயரத்தீயையும் துரோகமாக்கிவிடுகிற தியாகிகள் நடுவில் அவனுக்காக ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே சொல்ல முடிகிறது.

மற்றவர்களுக்காக வாழ்ந்தவன் இப்போதும் தன்னுடன் வாழ்ந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வை உயர்த்த ஏதாவது செய்துவிட வேண்டுமென்ற ஆவலில் தனது உழைப்பில் முடிந்ததைச் செய்கிறதோடு நின்றுவிடாமல் என்னிடமும் பல குடும்பங்களின் தொடர்புகளைத் தந்து அவர்களுக்கு உதவும்படி அடிக்கடி அன்புத் தொல்லை தந்து கொண்டிருப்பான். அந்த வரிசையில் தான் பவிபற்றி இன்று சொல்லத் தொடங்கினான்.

000 000 000

பவிக்கு ஏதும் ஒழுங்கு செய்யேலுமேயக்கா ? பாவம் சரியாக் கஸ்ரப்படுறாளாமக்கா...பிள்ளையளும் அதோடை அவளும் சண்டையில காயப்பட்டு காலொண்டும் ஏலாதவள்....எங்கினையோ வீடொண்டில வேலை செய்யிறாளாம்....பெரிசா செய்யேலாட்டிலும் அந்தப்பிள்ளையளுக்கு படிக்க மாதnமொரு ரெண்டாயிரம் குடுத்தாலும் அது பெரிய உதவியா இருக்குமக்கா....

சரி நம்பறைத் தாங்கோ....என பவியின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன். பவியைக் கண்டிருந்த காலங்களில் ஒரு தளபதியின் மனைவி ஒரு போர்க்களத்தின் போராளியென்ற மதிப்பும் சின்னப் பயமும் இருந்தது. அதனால் சந்தித்த காலங்களில் புன்னகையால் மட்டுமே பவியுடன் விடைபெற்றிருக்கிறேன். இப்போ அவளுடன் கதைக்க வேண்டி வந்தது சற்று சங்கடமாகவே இருந்தது.

08.03.2012 மதியம் அவளை அழைத்தேன்.

சொல்லுங்கக்கா...! ஏன ஆரம்பித்தவள் சொன்ன கதைகளைக் கேட்கக் கேட்க ஐயோ எனக்கத்த வேணும்போலிருந்தது.

பிள்ளையள் எப்பிடியிருக்கினம்....? இருக்கினமக்கா மூத்தவன் என்னோடை இல்லக்கா....சின்னவை ரெண்டு பேரும் தான் என்னோடை அதுவும் மகள் மட்டும் தான் இப்ப என்னோடை ரெண்டாவது அம்மா வைச்சிருக்கிறா...

மூத்தவனுக்கு இருதய வருத்தம் தெரியும் தானேயக்கா.....கடைசிநேரம் முகாமுக்கு வந்தாப்போல பிள்ளைக்கும் சரியா ஏலாமப்போட்டுது....அவனை ஒரு தெரிஞ்சாக்கள் தாங்கள் பாக்கிறமெண்டு கேட்டினம்....எனக்கும் அந்த நேரம் வேறை வழி தெரியேல்ல பிள்ளையை அவேட்டைக் குடுத்திட்டன்....இந்தச் சமூகத்தோடை எப்பிடி ஒட்டி வாழப்போறனெண்ட பயம் ஒருபக்கம்.... பிள்ளையெண்டாலும் எங்கினையும் வாழட்டுமெண்டு குடுத்திட்டனக்கா....மகனின் கதையைச் சொல்லிக் கொண்டிந்தவள் இப்போது அழ ஆரம்பித்தாள்.

ஊருக்கை வந்தா ஒருத்தரும் மதிக்கினமில்லை. அம்மா மட்டும்தான் ஆறுதல். அவற்றையாக்களிட்டையும் போய்ப்பாத்தன் ஒருதரும் என்னையோ என்ர பிள்ளையளையோ பாக்கிறமாதிரியில்லை....எங்கினையுமொரு வேலையைத் தேடுவமெண்டா எங்கை போனாலும் குறைஞ்சது ஓலெவல் தகுதி கேக்கினம்....15இயக்கத்துக்குப் போனநானெங்கை ஓலெவல் படிச்சனக்கா....அதுவும் புலியில இருந்து வந்துமெண்டா வாசலோடை வெளியில விடாத குறையா கதைக்கிறாங்களக்கா....

கடைசியா ஒரு வீட்டில வேலைக்கு ஆள் தேடினாங்கள் அதையாவது செய்து இந்த ரெண்டையும் பாப்பமெண்டு இந்த வீட்டு வேலையைச் செய்ய வந்திருக்கிறன். மகளையும் என்னோடை வைச்சிருக்கக் கேட்டன் அவை ஓமெண்டினம்....தனியவெண்டா மாதம் 5ஆயிரம் ரூபா தாறமெண்டினம்....இப்ப பிள்ளையுமெண்டதும் 4ஆயிரம்தான் தருவினமாம்.....சாப்பாடு தருகினம்....அப்ப ஓமெண்டிட்டன்....

எனக்கு யெகோவா ஆண்டவர்தான் துணையக்கா அவரைத்தான் இப்ப நம்பிறன்....ஆனால் யெகோவாக்காறரெண்டா பெரீசா ஏதோ அள்ளித்தருவினமெண்டு எங்கடையாக்கள் சொல்லுவினமக்கா....எனக்கு பணம் பொருள் ஒண்டையும் யெகோவா சபை தரேல்லயக்கா.....ஆனால் என்ரை மனதை வழிப்படுத்தி செத்துப்போற நிலமையில இருந்த என்னை வாழ வைச்சிருக்கு யொகோவா ஆண்டவர்.....வெளியில காணேக்க எங்கடையாக்கள் நக்கலடிக்கினமக்கா யெகொவாக்காறர் எனக்கு வசதியைத் தந்திருக்கினமெண்டு....சத்தியமா நான் யெகோவா திருச்சபையிட்ட ஒரு சதத்தையும் வாங்கேல்லயக்கா....

முகாமிலயிருந்து ஊருக்கை வரேக்க நான் ஒரு பிணம்மாதிரித்தானக்கா வந்தனான்....கடைசீல அவர் சொல்லிவிட்டது எங்கடை பி;ள்ளையளைக் கைவிட்டிராத எண்டதுதான்.....ஆனா என்னாலை ஒண்டுமே செய்யேலாமப் போச்சக்கா.....மனநலம் பாதிக்கிற நிலமையிலதானக்கா இருந்தனான்....அப்பதானக்கா யெகோவா ஆண்டவரிட்டைப் போனனான். நானிப்ப ஓரளவு மனத்தைரியத்தோடை வாழுறனெண்டா நான் தேடின யெகோவா ஆண்டவற்றை கிருபைதான் காரணமக்கா....

அவள் யெகோவா ஆண்டவர் பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தாள். யெகோவா ஆண்டவர் பற்றிய புத்தங்களோடு வந்து வாசலைத் தட்டுகிற எல்லாரையும் துரத்திவிடுகிற என்னால் பவியைத் தொடர்பறுக்க முடியவில்லை. அவளது தேர்வு பிழையென்று வாதாட எனக்கு எவ்வித தகுதியும் இல்லையென்பதனை மனசார ஒப்புக் கொண்டேன். வாழ வழியற்றுப்போன நேரம் அவளை ஆற்றுப்படுத்தியது யெகோவா ஆண்டவரென்று அவள் நம்பியதால் இன்று தனது பிள்ளைகளுக்காக வாழும் தைரியத்தைப் பெற்றிருக்கிறவளோடு விவாதித்து எனது பெருமையை வெளிப்படுத்தவில்லை.

எனக்கு ஆடம்பரமா வாழ வேணும்....சம்பாரிக்க வேணும்....பகட்டா திரிய வேணுமெண்டெல்லாம் ஆசையில்லையக்கா...!என்ரை பிள்ளையள் படிக்க வேணும் அது போதுமக்கா....என்றவள் உறுதியாய் சொன்னது இதுதான்:-

தன்னை வழிப்படுத்திய ஆண்டவருக்கு ஊழியம் செய்கிற பிள்ளைகளாகத் தனது பிள்ளைகளை ஆன்மீகக் குழந்தைகளாக வளர்க்க வேணுமெண்டதே தனது கனவென்றாள்.

உங்களுக்கு உங்களை ஆற்றுப்படுத்த என்ன வழி சரியெண்டு நினைக்கிறீங்களோ அதை நீங்கள் தெரிவு செய்ததில பிழையில்லை.....அது உங்கடை சுதந்திரம்.....என அவளது யெகோவா ஆண்டவரின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

அவர் கடைசியா ஆசைப்பட்டது பிள்ளையளை கவனமாப்படிப்பிக்க வேணுமெண்டதுதானக்கா....என்ரை பிள்ளையள் படிக்க ஏதாவது உதவ ஏலுமெண்டா பாருங்கோக்கா....உங்காளலை உதவேலாமல் போனாலும் பறவாயில்லை....இடைக்கிடை எடுத்துக் கதையுங்கோக்கா....அதே எனக்கு பெரிய ஆறுதலா இருக்குமக்கா....இஞ்சை எங்கடை முகத்தைப் பாக்க எங்களோடை கதைக்கவே சனம் தயாரில்லையக்கா.....நாட்டைவிட்டுத் தூரத்தில இருந்தாலும் ஞாபகம் வைச்சு எடுத்திருக்கிறீங்களக்கா....அதுக்கு நன்றியென்றாள்.

அவளோடு கதைக்கச் சொல்லி தொடர்பைத் தந்த தோழனைப் பற்றிச் சொன்னேன். அவனுக்கே இந்த நன்றிகளைச் சொல்லச் சொன்னேன். அவள் அழுதாள்....அண்ணனிட்டைச் சொல்லுங்கக்கா நாங்கள் உங்களை மறக்கேல்லயெண்டு....எங்கேயெண்டாலும் அண்ணன் நல்லாயிருக்கட்டுமென்று வாழ்த்தினாள்.

பவியின் கண்ணீர் தன்னை மேலும் துன்புறுத்தும் என்ற பயத்திலேயே அவளுடன் தொடர்பெடுக்க மறுத்திருக்கிற தோழனின் இக்கட்டை அவளுக்குச் சொல்ல முடியவில்லை. நான் சொல்றன் எடுத்துக் கதைக்கச் சொல்லி....என்றேன். சொல்லுங்கக்கா நாங்களிஞ்சை செல்லாக்காசுகளாப் போனமெண்டு....அவள் அழுது கொண்டிருந்தாள்.

சரி பவி நான் ஆறுதலா இன்னொரு நாள் கதைக்கிறனே....! என்ரை நம்பர் இதுதான் எழுதுங்கோ....என்றேன். பவி அழுதழுது எனக்கு விடை தந்தாள்.

பவியின் வாழ்வுக்கு ஏதாவதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேணும்...ஆற்றை காலைப்பிடிச்செண்டாலும் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் ஏதாவது செய்தாக வேணுமென்ற சிந்தனை மனசுக்குள் வலம்வருகிறது.

அவள் சொன்ன யாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்ற முடிவில் புவியின் தொடர்பைத் தந்த தோழனின் தொலைபேசியிலக்கங்களை அழுத்துகிறேன்....

08.03.2012