Wednesday, November 3, 2010

மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு……

ஈரம் காயாத உனது குருதிச்
சுவடுகளின் மீதேறிச் சென்று கொண்டிருக்கிறது
வன்மங்களின் வெறியடங்கிய மெளனம்……
உறைந்து போன கனவுகளை அள்ளியபடி
அலைகிறது உனது உயிரின் காற்று……

நீ நேசித்த நிலவும் நிசப்தம் நிறைந்த இரவும்
உனது ஆத்ம அலைவின் எச்சமாய்
இரவெல்லாம் காய்ந்து
பகலில் பயங்களோடு தேய்கிறது…..

கடைசிச் சாட்சியங்களுடன்
கடல் கடந்திருப்பாயென்ற எங்களது நம்பிக்கையை
கடைசிவரை உன்னோடிருந்து காலொன்றையிழந்து
கடைசியாய் மீண்ட தோழனின் சாட்சியங்களுடன்
நீயில்லையென்பதை நிரந்தரமாக நம்புகிறோம்….

கண்முன் இறந்த குழந்தைகளுக்காய் நீயழுததும்
களத்தில் கூட நின்ற தோழர்களுக்காய் நீ வாழ்ந்ததும்
கடைசிவரையும் நீ நேசித்த எதையுமே தப்பிக்க விடாமல்
சாம்பராக்கிச் சாம்பலாக
நின் கனவுகள் மெய்க்குமென்றுதான் நம்பினாய்…..
மெளனமாகிறேன்…..உனக்காக…..உன்போன்றோருக்காக…..

‘‘நானில்லாட்டி…என்ரை ஞாபகமாய்‘‘
நீயனுப்பிய பொக்கிசமாய் மிஞ்சிச் சிரிக்கும்
உனது நிழற்படங்களை சாமிகளோடு
சமன்படுத்துகிறேன்…..
சேமிக்கப்பட்ட உனது நினைவுகளுடனும்
நெஞ்சுக்குள் கனக்கும் உனது கனவுகளுடனும்
காலக்கொலைஞரின் கண்களின் முன்னால்
மறைக்கப்பட்ட உங்களது வாழ்வைச் செதுக்குகிறேன்…..
மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு……

17.10.10 (மே 2009 கனவுகளுக்காக தன்னையும் தனது கணணியையும் தன்னோடு எஞ்சிய யாவையும் எரித்துச் சாவை எய்தியதாய் அவனோடிருந்து பின்னர் சரணடைந்து வந்த ஒருவனின் உறுதிப்படுத்தலின் பின்னால் எழுதப்படுகிறது இவ்வரிகள். எப்போதாவது சந்திப்போமென்ற நம்பிக்கை போய் இனி எப்போதுமில்லைச் சந்திப்பென்று ஸ்கைபில் விடைபெற்றுப் போன தோழன் நினைவுகளோடு பிறந்த வரிகளை அவனுக்காக.....)

Thursday, October 21, 2010

அற்புதம் அம்மாவின் பேரறிவாளனுக்காகக் காத்திருக்கிறோம்.

தலையின் மேல் தொங்கும்
தூக்குக் கயிற்றின் கீழிருக்கும்
துயரம் அவன்…..
பெயருக்குள் பேரறிவைத் தாங்கிய
தமிழின உணர்வின் ஊற்று அவன்….

சாவின் நிணம்
அவன் நாசிக்குள் முட்டிக் கிடக்க
சாவுமின்றி வாழ்வுமின்றி
சந்தேகத்தின் பெயரால்
இன்னும் செத்துக் கொண்டிருக்கிறான்…..

வசந்தம் துளிர்த்த வயதில்
வாழும் ஆசைகளுடன் போனவன்
மரணம் கொல் இருளில் மன உழைச்சலும்
மனப்பாரமிறக்க முடியா வலிகளுடன்
பாழும் உயிரும் பாரமாய் பழியுடன்
நீதி செத்துக் கிடக்கிற காந்திய மண்ணில்
இன்னும் நீதிக்காய் காத்திருக்கும் ஏழை……

19வருடச் சிலுவையின் பாரம்
குருதியழுத்த நோயாளியாய்
வாழ்வின் காலங்கள்
நோயின் கோரங்களோடு கழிய
காற்றணைத்த ஒளியில்
கருகிக் கொண்டிருக்கிற
திரியின் துணியாய் காத்திருக்கிறான்…..

இதயத்தை அவனுக்காகவே இயக்கிக் கொண்டிருக்கும்
அற்புதம் அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவேனும்
அவன் வர வேண்டும்…..
இரும்புகளின் காவல் உடைந்து அவன்
நரம்புகளின் இயக்கம் நிற்க முன்னம்
விடுதலையென்ற ஒற்றைச் சொல்லைக் கேட்கவேனும்
பேரறிவாளன் பொதுமன்னிப்போடு வர வேண்டும்.

தோழனே,
உனக்காக நீ நம்பாத கடவுள்களை மட்டுமே இறைஞ்சுகிறோம்
வேறெந்த முயற்சியும் முடியாது நண்பனே !
மன்னித்துக் கொள் உனக்காய்
எதையுமே செய்ய எம்மால் இயலாது.
எனினும் நீ வருவாயென்ற நம்பிக்கையோடு
நாங்களும் அற்புதம் அம்மாவின்
கனவின் குழந்தைக்காக காத்திருக்கிறோம்.

22.10.10(இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, தனது 19 வயது முதல், கடந்த 19 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் பேரறிவாளன் பற்றிய செய்தியொன்று படித்த போது அவனுக்காக எழுதிய வரிகள் இவை)

Monday, October 11, 2010

அவனுக்காக.... இது கவிதையில்லை....

எல்லோரையும் போல அவனுக்கும்
வாழ்வு மீதான பிரியங்களும்
தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன…..
பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும்
அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்……

கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப்
பேரலையொன்று விழுங்குமாப்போல
குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில்
தொலைந்து போக
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்……
ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய்
ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்…..

காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள்
போரும் அவலமும் புகுந்து கொண்ட போது
போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன்
சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு
வீட்டுப் படியேறி வந்தவனை வேண்டாமென்றா ஒதுக்க முடியும்…?

போன உயிர் புதுப்பிறவியெடுத்தது போலக் கொண்டாடிய
அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவும் அவன் வாழவேயில்லை……
வரலாற்றையும் அதற்காக வாழ்ந்தோரையுமே வழிகாட்டியென்பான்
வழிநெடுகத் தன்கூட வாழ்ந்து மடிந்துபோன வரலாற்றுப்
பிள்ளைகளையே உச்சரிப்பான்…..
என்ன பிள்ளையடா நீ எங்களின் வாழ்வடா….?
அம்மாவின் அழுத கண்ணீர் துடைத்து
அவன் சொன்ன கதைகள் ஆயிரம்….
உயிர் பிரிந்து அம்மா நான் உனைப்பிரிந்து போனாலும்
உங்களைக் காக்க ஆயிரம் மகன்கள் வருவார்கள்…..
அவர்களுக்காக வாழ்ந்திரு
சத்தியம் செய்தான் சபதமாகவே…..

கண்களில் ஏந்திய கனவுகள் தாங்கிய
களமொன்றில் காயமடைந்தவன்
கடைசியாய் உணர்வு நரம்புகள் அறுபட்டுக்
கையில் 3விரல்களும் கழுத்தின் மேலாயும்
உயிர்ப்புடன் திரும்பினான்…..
எல்லாம் போயிற்றென்று புலம்பிய அம்மாவுக்கு
எல்லாரும் எனக்காகவே நம்பியிரு தாயே….
நம்பிக்கை கொடுத்தான்…..

வாரம் ஒரு தரம் மாதம் ஒருதரமாகி
அவனைக் காணும் நாட்கள் தூரமாகிப்போனது
கண்ணீரில் அவனைக் கனவுகளில் காணுதலே அரிதாகி
அவன் மே 2009 காணாமலே போய்விட்டான்…..
அம்மாவும் அப்பாவும் அவனைக்
காணாதோர் பட்டியலில் வைத்துக்
காத்துக் கொண்டிருக்க
அவன் காணாமல் போயிருக்கிறான்……

கலந்து வைத்த வண்ணங்களைக்
காற்றடித்துச் சிதைத்தது போல்
அவனது கனவுகள் சிதைக்கப்பட்டது….
சாகவிடாமல் அவனையும்
அள்ளிக்கொண்டு போனார்கள்….
தடுப்பும் கம்பியும்
அவனையும் அவனது தோழர்களையும்
கம்பியிட்டுக் காவலர்கள் மத்தியில்
அழுக்குகளும் நாற்றமும்
அவர்களுக்கு உணவாக……போயிற்று எல்லாம்…..

நாங்களிருக்கிறோம் நம்பிக்கையின் தூண்களிருக்கிறோம்
என்றொலித்த குரல்கள்
மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று…..
எவரையும் காணவில்லை எங்கிருந்தோவெல்லாம்
வந்து போனவர்கள் ஞாபகப்படம் பிடித்தவர்கள்
ஒருவரையும் காணவில்லை…..

சோறும் நீருமா சுதந்திரம் இல்லை
வீரம் என்றுமே
விலையானதில்லையென்றோரால் மறக்கப்பட்டு
மரணம் கூட அண்டாத பிண்டங்களாய்ப்
போன துயரைச் சொல்லியழ
ஆழுமின்றி அனாதரவானவர்கள் வரிசையில்
அவனும் அனாதரவாகிக் கிடக்கிறான்…..

மூன்று விரலுக்குள் கரண்டியைச் செருகிச் சோற்றுக் கோப்பையை
வைத்துவிட்டுப் போகின்ற உறவுக்கு நன்றி சொல்லி
கிடைக்கின்ற சோற்றுக்குள்ளே அவனது சுதந்திரக் கனவுகள்
சிதைந்து போவதாய் நினைக்கையில் நெஞ்சுக்குள்
சோகம் அப்பிக் கொள்வதில்லை கோபமே வருகிறது…..

அம்மாவும் வேண்டாம் அப்பாவும் வேண்டாம்
அவர்களுக்கு என் துயர் இனியும் வேண்டாம்
வெறுப்புகளாலும் வேதனைகளாலும் சூழப்பட்டுள்ளான்…..
கந்தக வாசனை கடந்தகாலக் கனவுகளின் வேதனை
எல்லாவற்றின் மீதும் அவன் நம்பிக்கையற்றுப் போயிருக்கிறான்……
அனாதையாய் போனதாய் அலட்டிக் கொள்கிறான்
ஆருமற்றுப்போனதாய் தனக்குள் அழுது தொலைகிறான்…..

எவரது வார்த்தைகளும்
தன்னைக் காப்பாற்றாது என்பதை மட்டும் நம்புகிறான்…..

வாழும் ஆசையும் வருங்காலக் கனவுகளும்
சிறுவயதில் கட்டிய மண்வீடு போலக் கரைகிறது
அவனது கண்ணீராயும் அவனது கனவுகளாயும்……
மிஞ்சிக் கிடக்கும் காலம் அவனையும் தன்னோடு
இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது……
ஓரினத்தின் கனவுகளைச் சுமந்தவன்
ஒன்றுக்கும் பயனில்லாத சடமாகிக் கிடக்கிறான்
சாவுக்காய் காத்துக் கிடக்கிறான்……
11.10.10



இந்த இணைப்பில் உள்ளவனுக்காக இந்த வரிகள். இது கவிதையல்ல....

Saturday, October 9, 2010

உறவென்று யாருமில்லாதவன் கழுத்துக்குக் கீழ் உணர்வுகள் அற்ற நிலையில் உதவிக்கும் ஆளின்றித் துடிக்கிறான்

உறவு என்று சொல்லிக் கொள்ளவோ உறவினர் என்றோ இவனுக்கு யாருமேயில்லை. கழுத்துக்குக் கீழ் உணர்வற்று உயிரோடு வாழும் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தானெனத் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு முன்னாள் போராளி இவன். வீட்டின் ஒற்றைப்பிள்ளை அம்மாவினதும் அப்பாவினதும் கனவுகளின் இராசகுமாரன் அவர்களது நம்பிக்கையின் அவர்களது வாழ்வின் விடிவெள்ளியென எத்தனையோ அவர்களது ஆசையின் குழந்தையானவன். இன்று தான் இருக்கும் இடத்தை தனது நிலமையை அவர்களுக்கே சொல்லாமல் வைத்திருக்கிறான். வயதான அம்மாவும் அப்பாவும் இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை இந்த நிலையில் பார்த்து அவர்கள் துயரமுறுவதையோ கண்ணீர் விடுவதையோ விரும்பாத இவன் தனக்குள் தினமும் அழுவதை யாருக்கும் வெளிப்படுத்தாது தனக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான். தனது ஒவ்வொரு தேவைகளுக்கும் யாராவது ஒருவர் வந்து நிறைவேற்றினால்தான் எல்லாம் என்ற நிலமையில் இருக்கின்ற எதுவுமே இயலாத தன்னை அழித்துக்கொள்ளவே இயலாத பாவமாகத் தானிருப்பதைச் சொல்லித் துயருறும் இவனோடு பேசுகின்ற ஒவ்வொரு வினாடிகளும் உயிர் வலிக்கிறது. இவன் செய்தது ஒன்றுதான். தனது வாழ்வை எங்களுக்காகத் தரத்துணிந்ததுதான். நாங்கள் கனவுகாண எங்கள் கனவுகளின் வடிவமாகித் தங்களை அழித்துக் கொண்ட இவர்கள் இன்று சாவுகூடத் தங்களை ஏற்காதுள்ளதாகத் துயருறுகிறார்கள். காலம் இவர்களை வஞ்சித்துத் தன் காலடியில் இம் மனங்களை வைத்து மகிழ்கிறது. ஒரு தேசத்தின் விடுதலையை நேசித்தவர்களை இன்று நாங்கள் சாகடித்துக் கொண்டிருக்கின்றோம். உதவுகிறோம் என்று இவர்களின் படங்களை விபரங்களைச் சேர்த்தவர்கள் யாவரும் கைவிட்ட நிலமையில் உதவிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் இழந்து உயிரை மட்டும் வைத்திருக்கும் இளையோர்கள் இவர்கள். இவர்கள் இப்படியாகிப்போக இவர்கள் இப்படித் துயரங்களோடு சாக விரக்தியோடு வாழக் காரணமாகிப்போன எம்மீது கோபம் மட்டுமே வருகிறது. இவர்களுக்கான குறைந்தபட்சம் இவர்கள் வாழும் நாட்கள் வரையிலுமாவது ஏதாவது ஒரு நேரக்கஞ்சியாயினும் கொடுக்க ஒரு வழியைச் செய்ய வேண்டிய மாபெரும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்குமே உள்ளது. மாற்றங்களை விரும்பும் ஒவ்வொருவரும் இவர்களோடு பேசுங்கள். அதன் பின்னால் முடிவெடுங்கள் இப்போதைய தேவையென்ன என்பதை. எங்கள் கனவுகளின் விலாசங்களாகவும் எங்கள் மகிழ்ச்சிகளின் வெற்றியாளர்களாகவும் வாழ்ந்த மனிதக் கடவுளர்கள் இவர்கள். இவர்கள் வாழும் வரையான உதவிகளை நேசக்கரம் ஊடாக வேண்டுகிறோம். மீளவும் மீளவும் உங்களிடமே கையேந்துகிறோம். இதோ பேசக்கூட விரும்பாத கழுத்துக்குக் கீழ் இயக்கம் இல்லாது போன இந்த இளைஞனின் குரலிலிருந்து…..

Thursday, October 7, 2010

வெளிநாட்டில இருக்கிற அவனைத் தேடிக்கொண்டிருக்கிறம்

அக்கா கேக்குத….ஓம் கேக்குது சொல்லுங்கோ…..அவள் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டாள். ஞாபமிருக்கோ…? தன்னைப்பற்றி இன்னும் நினைவு கொள்ள வைக்கும்படியான நாட்களை ஞாபகப்படுத்தினாள்.

அக்கா….நான் முகாமிலயிருந்து வெளிய வந்திட்டன்….அவரைத்தானக்கா காணேல்ல…..தேடலாமெண்டு சொல்லீனமாக்கள்…ஆனா நான் எல்லா இடத்திலயும் தேடீட்டன் ஒரு தொடர்புமில்லை….இஞ்சை ஆக்கள் சொல்லீனமக்கா கனபேர் வெளிநாட்டிலை இருக்கினமாமெண்டு….இவரும் உங்கினேக்கை எங்கையும் இருப்பரோண்டு தேடேலுமேக்கா…..?
அவளது அப்பாவித்தனமான கேள்விக்கு எந்தப்பதிலைச் சொல்ல…..? ஆரிட்டையும் விசாரிச்சுப் பாப்பம்….அப்ப ஆரோடை இப்ப இருக்கிறீங்கள்……? எத்தினை பிள்ளையள் ? ஒரு தோட்டக்காணியில என்ரை பாவத்தைப்பாத்து ஒரு கொட்டிலொண்டு போட்டு ஒராக்கள் தந்திருக்கினம் அதிலதானிருக்கிறன்…..4பிள்ளையள்…..வீட்டாக்களின்ரை தொடர்புகளும் ஒண்டுமில்லை….இவற்றை தமக்கையும் நானும் தான் இதில பிள்ளையளோடை இருக்கிறோம்……அவாக்கு ஆரோ சொன்னவையாம் வெளிநாடுகளுக்கு கனபேர் போயிருக்கினமாமெண்டு…..இவரும் வெளிநாட்டுக்குப் போயிருப்பரெண்டு சொல்றா….உங்களுக்குப் புண்ணியம் கிடைக்குமக்கா ஒருக்கா தேடிப்பாருங்கோ…..என்ரை பிள்ளையளும் நானும் சரியா கஸ்ரப்படுறமக்கா….அவள் அழத்தொடங்கினாள்…..

எங்கே எந்தப் பெயரைச் சொல்லித் தேடுவது ? அவள் கண்ணீரின் கனம் மறுமுனையில் என் கண்களால் வடிந்தது. எத்தனையோ பேரின் கனவும் வாழ்வும் தியாகங்களும் ஒரு கனவின் விழித்தல் போல எல்லாம் முடிந்து போயிற்று. கனவுகள் தாங்கிக் களங்களில் நின்றவர்கள் ஆயிரமாயிரமாய் காணாமலும் தடைமுகாம்களிலும் தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடும் வரை எல்லாம் எல்லாரும் எங்கிருந்தார்கள்…..?

அவள் அவன் இருப்பானென்ற நம்பிக்கையில் அவனைப்பற்றிச் சொல்லியது மட்டும்தான் அவன் பற்றிய தற்போதைய அடையாளம். அவள் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.
இயக்கத்தில் இணைந்த ஆரம்பமே அவனுக்குக் கள அனுபவமாகவே அமைந்தது. களங்களில் அனுபவம் காரியமாற்றலில் அவனுக்கிருந்த அசாத்தியம் எல்லாம் ஒருங்குசேர்ந்து அவன் புலனாய்வுப்பிரிவில் ஒரு பொறுப்பாளனாய் நியமனம் பெற்றான். அவன் பொறுப்பில் அவனது ஆழுமையில் பலநூறு புலனாய்வுப்போராளிகள் உருவாகினார்கள். ஒரு புலனாய்வாளனுக்குரிய எல்லாத்தகுதிகளும் அவனுக்கு வாய்த்திருந்தது. இந்த ஆழுமை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் இலகுவாய் சென்று வென்று வரும் வல்லமை வாய்த்தது.

வெளிவேலையில் இருந்த காலங்களில் அவனுக்கு ஆதரவாயிருந்த அவளது குடும்பத்துடன் அவனுக்குப் பரிச்சயமாகியது. அவன் மீது அந்தக்குடும்பம் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும் அவளது பெற்றோரின் விருப்போடு அவளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

ஆர்ப்பாட்டமில்லாமல் நடைபெற்று முடிந்த திருமணத்தில் உறவினர்களுக்கு பெரியளவு மகிழ்ச்சியைக் கொடுக்காதது ஒரு குறையென்றே இல்லாத அளவு அவள் அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். முதல் குழந்தைபிறந்து நான்காவது மாதம் அவன் உள்ளே திரும்பியும் போகவேண்டிய வேளை வந்தது. அவனோடு அவளும் வன்னிக்குள் போய்ச்சேர்ந்தாள்.

2008 மூன்றாவது குழந்தையும் பிறந்தது. குழந்தைகளோடு அவள்….அவன் தனது கடமைகளோடு…..சில நேரங்களில் வீட்டுக்கும் வராமல் நின்றுவிடுவான். விரும்பி ஏற்ற வாழ்வு அவனுடனானது…அதில் முரண்பட அவளுக்கு எதுவுமிருக்கவில்லை. அவனுக்கு முரண்பாடு மிக்க கடவுள் நம்பிக்கை சாத்திர சம்பிரதாயங்கள் யாவையும் அவள் வீட்டிலிருந்து வரும்போதே தன்னோடு கூட்டிவந்தது பற்றி தெளிவுபடுத்தப் பலதரம் முயன்றும் தோற்றுப்போனான். அதற்குமேல் அது அவளது சொந்த விருப்பு வெறுப்பு என அவற்றில் தன் தலையை உடைக்காமல் தப்பித்தான்.

வெள்ளி செவ்வாய் தவறாது அவளது விரதங்கள் கெளரிநோன்பு கந்தசஷ்டி முதல் வருடத்தில் என்னென்ன விரத நாட்கள் இருக்கிறதோ அத்தனையும் அவள் பின்பற்றிவரும் விரதங்களாகியது. தனது கடவுள்களும் விரதங்களும்தான் அவனை வாழ்விப்பதாக அவளது நம்பிக்கை.

போரின் உக்கிரம் தினம் தினம் சாவும் அழுகையும் நிறைந்த நாட்களால் வன்னிமண் சூழப்பட்ட போது ஒருநாள் அவனிடம் கேட்டாள்….எல்லாத்தையும் விட்டிட்டு அம்மாவேட்டைப் போவமோ…..? வன்னியை விட்டு வெளியேறிவிடுவோமென்று விடாப்பிடியாய் நின்றாள். அவனது கொள்கைக்குள் அவளது கண்ணீரும் பிள்ளைகளின் வாழ்வும் அமிழ்ந்து போய்விட வாழும்வரை வன்னி மண்ணுக்குள்ளேயே வாழ்வு முடியுமென்று முடிவாகக் கூறியிருந்தான். அந்தச் சொல்லுக்குப்பின் அவளால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென்பது முடிவாகியது.

இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இனி இடம்பெயர முடியாது முள்ளிவாய்க்காலில் போய்ச் சேர்ந்தவர்களோடு அவளும் குழந்தைகளுமாக ஓர் மூலைக்குள் ஒதுங்கிக் கொண்டாள். அவன் அவளையோ பிள்ளைகளையோ பார்க்கவும் வராமல் களங்களில் காவலிருந்தான்.

எழமுடியாத எறிகணைக்குள்ளும் அவனைத் தனது சாமிகள் தான் காக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் நம்பிய சாமிகளைத்தான் நம்பிக் கொண்டிருந்தாள். தன்னோடு கூடவே கொண்டு வந்த கந்தசஸ்டி கவசப்புத்தகத்தை இரவும் பகலும் பதுங்குகுளிக்குள்ளும் ஓதிக்கொண்டேயிருந்தாள்.

அதுவொரு வெள்ளிக்கிழமை. விடியப்பறம் வீட்டுக்கு வந்திருந்தான். நன்றாக மெலிந்திருந்தான். நித்திரை இழந்த கண்களும் , வெட்டப்படாத தலைமுடியும் , சேவிங் செய்யப்படாத தாடியும் மீசையும் அவனைப் பார்க்கவே ஏதோ போலிருந்தது. கனநாட்கள் வராமலிருந்தவன் அதிசயமாய் வந்திருந்ததை அவதானித்தவள்….. உதென்ன வேட்டைக்கு வளத்தமாதிரி தாடியும் மீசையும்….புறுபுறுத்தாள்…..இத்தினை அவலத்துக்கையும் இப்ப இதுதான முக்கியம் சொல்ல எழுந்த சொற்களை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டான்.
பிள்ளையளையெண்டாலும் கொண்டுபோயிருக்கலாம்…..எங்கை நான் சொல்றதில எதுதான் விளங்கியிருக்கு……சாவெண்டா சா சண்டையெண்டா சண்டையெண்டவைக்கு எங்கை புரியப்போகுது இதெல்லாம்…..உங்கா உந்தப் புள்ளையள் எத்தினைநாளா பங்கருக்கை கிடக்குதுகள்….வளமையாக அவள் வாய் திறக்க முதல் ஆயிரம் கதைசொல்லிச் சமாளித்து விடுகின்றவன் அன்று வாயே திறக்கவில்லை.

எல்லாரும் வெளியில போறதில நிக்கிறாங்கள்…. நானும் கடலால போகலாமெண்டு நினைக்கிறேன்…. சரணடையப்போறதா பொடியள் கதைக்கிறாங்கள்….தொடர்புகள் எல்லாம் விடுபட்டுப் போச்சுது….அரைவாசிச்சனம் போயிட்டுதுகள்….எங்கடை பக்கத்தாலையும் கனபேர் போயிட்டினம்….நீயும் பிள்ளையளைக் கொண்டு போ நான் கடலாலை பக்கத்து நாட்டுக்குள்ளை போகலாமெண்டு யோசிக்கிறேன்….போறதுக்கு காசு வேணும்…

அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளைப் பார்க்கும் தைரியம் துணிவு எதுவுமே அவனிடம் இருக்கவில்லை. ஒண்டுமில்லாம வெறுங்கையோடை நிக்கிறம்…இதில என்னண்டு காசு….? அவள் கேட்டாள். உம்மடை தாலிக்கொடியைத் தந்தா சமாளிப்பன்….தாலிக்கொடி….? ஏதோ உலகம் இடிந்து போனதைப்போல உறைந்து போனாள். வார்த்தைகள் வரவில்லை…..

சாமிகளும் சமயமும் மூச்சென வாழ்கின்றவளிடம் தாலிக்கொடியென்றதும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினாள். வெள்ளிக்கிழமையில தாலி கழட்டினா தரித்திரமெண்டது தெரியாதோ…? உமக்குத் தாலி முக்கியமோ உயிர் முக்கியமோ….? கடுமையாகத்தான் கேட்டான். நான் சொன்னதை எப்ப கேட்டிருக்கிறியள்…?அழுதாள்….. வெள்ளிக்கிழமை தாலி கழற்றுவது பற்றித்தான் பக்கவீட்டிலும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. உயிரைக் கழற்றிக் கொடுப்பது போல கழுத்திலிருந்த தாலியைக் கழற்றிக் கொடுத்தாள். கையில் வாங்கிய அவனது கண்ணிலிருந்தும் கண்ணீர்ச் சொட்டுக்கள்…..அவளுக்காக எதையுமே செய்திருக்காது அவளது சாமி நம்பிக்கையில் ஒருநாளும் தலையிடாதவன் இன்று அவளது மனம் சஞ்சலப்படும்படி நடந்து கொள்வது வேதனையாகத்தானிருந்தது. எல்லாம் கைமீறிப்போன நிலமையில் இந்த மூடநம்பிக்கையையெல்லாம் பார்த்து என்ன பயனென்று நினைத்தவன் அவள் அறியாமல் கண்ணீரைத் துடைத்தான். பிள்ளையள் கவனம் கவனமா போ….அக்கா வாறனெண்டவா…..அவவோடை சேந்து போ….கடலுக்காலை கடந்திட்டா எப்பிடியும் நாங்கள் சந்திக்கலாம்…..சொல்லிவிட்டுப் போனான்.

அவளது அழுகையும் குழந்தைகளின் முகமும் கண்ணுக்குள் வந்து கொண்டிருந்தது. கடற்பயணத்துக்காக தயாரானவர்களோடு அவனும்….
உயிர்கள் பறிபோய்க் கொண்டிருந்த அந்தக் கடைசிநேரத்திலும் பணமே எங்கும் எல்லாவற்றுக்கும் முன்னணியில் நின்றது…பணமில்லாதவன் பிணமென்ற யதார்த்தம் நிறைந்த உண்மையை அந்தக்கணங்களில்தான் அவன் உணர்ந்து கொண்டான். கேட்கப்பட்ட பணத்தோடு சென்றவர்கள் மட்டும் கடல்கடக்கும் பயணத்தில் தெரிவாக….இவனும் இவன்போன்ற ஏழைகளும் கண்ணீரோடு திரும்பினார்கள்…..

இந்த மண்ணுக்காகத்தான நாங்கள் இருவது முப்பது வருசமா எல்லாத்தையும் விட்டுக்கிடந்தம் எங்களுக்கே இந்த நிலையெண்டா…..சாதாரண சனங்களின்ரை நிலமை….அவனோடு கடைசிவரையும் நின்றிருந்த ஒருதோழன் சொன்னான்….அவனது வார்த்தைகளின் உண்மையை அங்கே யாவரும் மெளமனமாக உணர்ந்து கொண்டார்கள். போனப்போகுது இந்த உயிர்தானே போகட்டும் என்ற அந்தத்தோழன் கழுத்தில் கட்டியிருந்த குப்பியைக் கையில் எடுத்தான்…..இது கூட எங்களைக் காப்பாற்றத்தான்…..அந்தக்குப்பியை அவன் மென்று கொண்டான்….அவன் தனது உயிரை மாய்த்துக்கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் தடுக்கவேயில்லை.

காலையில் அவனது மனைவியும் இவனது மனைவிபோலவே 4குழந்தைகளோடு தாலியைக்கழற்ற அடம்பிடித்து அழுதது ஞாபகம் வந்தது. குப்பி கடித்தவனைக் காப்பாற்ற மருத்துவமும் இல்லை மனிதர்களும் இல்லை….கூவிவந்த எறிகணை நடுவில் அந்தத் தோழனின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. இவனால் தன்னை அழிக்கவும் தைரியமில்லாது தளர்ந்தது மனம். கழற்றிய அவளது தாலியைக் கொடுத்துவிட்டு இனிச் சாகும்வரை அவளோடும் பிள்ளைகளோடும் இருப்போமென்ற நினைவோடு இருள் பரவிய மைம்மலில் வீட்டுக்குப் போனான்….

அவனது மூத்தக்காவும் அவனது பிள்ளைகளும் பதுங்குகுளிக்குள் படுத்திருந்தனர். அவள் பதுங்குகுளி வாசலில் மெழுகுதிரியில் கந்தசஸ்டி கவசம் உச்சரித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளது பெயரைக் கூப்பிடும் வரைக்கும் அவன் வரவைக்கூட அவதானிக்காது கந்தசஸ்டி கவசத்திலேயே கவனமாயிருந்தாள். அவளிடமிருந்து எதுவித சொற்களும் எழவில்லை…..

என்ன ? போகேல்லயா ? அவளுக்கு அவன் பயணம் தடைப்பட்டது பற்றிச் சொல்லத் தொடங்கினான். அவன் தடைகளின்றி கடல் கடக்க வேண்டுமென்று கந்தசஸ்டி கவசம் உச்சரித்து முருகனை வேண்டியவளின் நம்பிக்கையில் முதலாவது தோல்வி….அதுவரையும் தனது கடவுள்களால் அவன் காப்பாற்றப்பட்டானென்ற நம்பிக்கைகூட பொய்த்துப்போனது போலிருந்தது…..

செத்துப்போகலாம் போலையிருக்கு…..அங்கையே செத்திருப்பன்….ஆனால் நான் இருக்கிறதும் தெரியாமல் இல்லாததும் தெரியாம நீ கவலைப்பட்டுக் கொண்டிருப்பாயெண்டுதான் திரும்பி வந்தனான்….முதல் முறையாக அவளிடம் மன்னிப்புக் கோரினான்….நாங்கள் நினைச்சது நாங்கள் நேசிச்சது எல்லாம் சுயநலங்களுக்குப் பலியாகீட்டுது….
சனத்தோடை சனமா அவனிட்டைப்போவம்…..என்னைச் சிலவேளை அடையாளங்கண்டாலும் தனித்தனியாவே போவம்….வாழ விதியிருந்தா பாப்பம்….
கனக்க அவளுடன் கதைக்க வேணும் போலிருந்தது….அவள் தனக்காகக் காத்திருந்த காலங்களையெல்லாம் மறந்து இலட்சியங்களுக்காக வாழ்ந்ததும்…..இன்று நம்பிய இலட்சியம் கனவு யாவையும் யாரோவெல்லாம் கொள்ளையிட்டு எல்லாம் கையைவிட்டுப்போன நிலமையில் நிற்கின்ற துயரத்தைச் சொல்லியழ வேணும்போலிருந்த இன்றைய விருப்பங்களையெல்லாம் தனக்குள்ளே புதைத்துக் கொண்டான்.

சாவின் கணங்களாகவே ஒவ்வொரு கணமும் கழிந்து கொண்டிருந்தது. எல்லாம் எல்லாரும் மறந்து இப்போ அவரவரைக் காக்கும் அவசரத்தில் ஆளாளுக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலை நெருப்பு மண்டலாமாகவும் புகையால் அழிந்த இடங்களாகவும் இருந்த நிலத்திலிருந்து கடைசிக் கனவுகள் தீய்ந்து கொண்டிருந்தது.
அவளது கைகளைப்பற்றியபடி பிள்ளைகள் , அவனும் அவர்களோடு நடக்கத் தொடங்கினான். காயங்களும் அழுகையும் பிணங்களும் நிறைந்த இடங்கள் தாண்டி அவர்கள் வந்தடைந்த போது அந்தப் பெருநிலம் ஆயுத ஓசைகளிலிருந்து விடபட்டு அச்சத்தால் சூழப்பட்டிருந்தது.

வரிசையில் நின்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனித்தனியாக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லாம் பழகிய முகங்களும் கடைசிவரை தங்கள் காலங்களை களங்களில் கழித்தவர்களுமாக தரம்பிரிக்கப்பட்டு ஏற்றப்பட்டார்கள். உறவுகளின் அழுகுரல்களும் பிரிவின் கதறல்களும் நிறைந்த அந்தக்கணங்களின் நிகழ்வுகளை நினைவுக்குள்ளிருந்து தூக்கியெறிய முடியாதபடி ஒவ்வொரு மனதிலும் ஓராயிரம் துயரம்.....ஆளையாள் நிமிர்ந்து பார்க்கவே அச்சப்பட்ட வினாடிகள் அவை…..
ஒரு இளம் சந்ததி தனது தாய்களுக்காகவும் தந்தைகளுக்காகவும் உறவுகள் தங்கள் சொந்தங்களுக்காகவும் கதறக்கதற பிரிப்பும் ஏற்றலும் நிகழ்ந்து கொண்டிருக்க அவனும் தனியே அழைக்கப்பட்டான். அவன் கொண்டு செல்லப்படுவதைக் கண்டவள் பெருங்குரலெடுத்து அழுதாள்…. அவனது பிஞ்சுக் குழந்தைகள் பயத்தில் உறைந்து போயினர்….வாகனமொன்றில் அவனும் அவன்போன்ற பலரும் அள்ளிச் செல்லப்பட்டார்கள்.

அவனில்லாது தனித்து அவள் முகாமிற்குச் சென்று அவனைத் தேடி பதிவுகள் தேடல்கள் என எத்தனையோ முயற்சிகள் எதுவும் பயனில்லாமல்…. அவன் எங்கே….எப்படி….இருக்கிறானா…இல்லையா… எதுவித முடிவுகளும் இல்லாத தொடர்கதையாய் அவன் அவளால் தேடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தான் யாரோ அவன் வெளிநாடு போயிருக்கலாமென்று சொன்னதை நம்பிக் கொண்டிருக்கிறாள்.

சில ஆயிரங்கள் இல்லாமையால் கடல்கடக்க முடியாது ஏமாந்து திரும்பியவனை வெளிநாட்டிற்கு யார் அழைத்திருப்பார்கள்…..? ஆயிரமாயிரமாய் அடையாளமில்லாமல் அழிக்கப்பட்டவர்களோடு அவனும் அழிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் தகவலை அவளுக்கு யாரால் சொல்ல முடியும்….? அல்லது அவன் வெளிநாட்டில் வாழ்வதாகவும் கடமையின் நிமித்தம் தொடர்பில்லாமல் இருப்பதாகவும் அவளுக்குச் சொல்லப்பட்ட கதைகளை நம்பியிருக்கும் அவளது நம்பிக்கையைச் சிதைப்பதா….? எங்கேனும் இருந்தால் வருவானென்ற நம்பிக்கையோடு.....நாங்களும் அவனைத் தேடிக்கொண்டேயிருக்கிறோம்…..

02.09.10

Tuesday, October 5, 2010

வெற்றிடமாய் கிடக்கிறது ஓர் சந்ததியின் வாழ்வு…


புழுதியப்பிய தெருக்களின் முனைகளில்
அழுதபடி குழந்தைகளும்
அனாதைகளான அவர்களுமாக
தெருக்கள் இப்போது
துயரங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது.

எல்லோரையும் எல்லாவற்றையும்
அழித்துச் சென்றவர்களின் முகங்களால்
நிறைந்து கிடக்கிறது நிலம்.
நீதியின் சாட்சிகளாய் அலைகின்றவர்களின்
முகங்களில் பயமும் வறுமையும்
பதியமிடப்பட்டிருக்கிறது…..

ஆணிவேருடன் ஒரு சந்ததியும்
அதன் குருத்துக்களும் கனவுகளும்
அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட
அடையாளங்களை அழிக்க
யார்யாரோ வருகிறார்கள்
அறிக்கைகள் எழுதுகிறார்கள்
எல்லாம் வளமைபோல்
அவர்கள் போய்விடுகிறார்கள்….

இரவுகளில் தனித்துறங்கும் பயத்தில்
ஊரில் குடும்பங்கள் ஓரிடத்தில் கூட
அச்சமுறு இரவுகளோடு குழந்தைகளையும்
குமரிகளையும் காப்பதற்காகவே
காவலிருக்கும் கண்களுக்குள்
பேய்களின் காலடிகள்
பேரோசைகளுடன் உதைக்கிறது…..

சிதைவுகளால் மூடுண்டுள்ள நிலத்தில்
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……

பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.

காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..

வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..
01.09.10

Tuesday, August 31, 2010

நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…!

வேரோடு பிடுங்கி விசங்களால் நிறைக்கப்பட்ட
நிலத்தில் அவலமுறும் உயிர்களுக்காய்
போராட்டம் நிகழ்கிறது….!
நீதி கேட்க ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிய வாசலெங்கும்
நிலம்விட்டகன்று போனவர்கள் நீதி கேட்கின்றோம்…..

ஆழுக்கொரு கொள்கை அத்தோடில்லாம் அடிதடி
துரோகம் அநியாயம் வசைபாடல்
நாடுகடந்த கடக்காத பேரவைகளின் கால்களில்
போராடியோர் குரல்களும் உயிர்களும்
நசுங்கிக் கொண்டிருக்க
நீதிக்கான போராட்டம் நித்தமும் நடக்கிறது.

செய்திகளும் அறிக்கைகளும்
கர்த்தருக்காகவும் கருணையுளம் கொண்ட
உயிர்களின் விலைகளுக்காகவும் சமர்ப்பணமாக….
எப்போதும் போல விசிலடித்து வீரம் விளைவிக்கும்
புதிய கர்த்தர்களாலும் பழைய கடவுகள்களின்
பெயர்களாலும் நீதிக்கான போராட்டம் நடக்கிறது.

ஆழுக்காள் கொத்துப்பட்டு கொழுவுப்பட்டு
தீராவஞ்சப் பிணியகலா மனங்களோடு
யாருக்காய் போராடி யாருக்காய்
வெற்றியை நமதாக்கி
யாருக்காக இதுவெல்லாம்….?

சாவோடும் நோயோடும்
உயிர் கொல்லும் பசியோடும்
தினம் சாகின்ற உயிர்களுக்கு
சங்கூதும் முடிவோடு
அறிக்கைகளின் பெயராலும்
அடிக்கடி முளைக்கும் புது
அவதாரர் பெயராலும்
ஆணிகள் அறையப்படுவதை
யார்தான் நினைப்பார்…..?

ஓ….
மண்ணுக்குள் மரணத்துள்
வாழ்கின்றவர்களே…!
போராடுவோம் நீங்கள்
சாகும்வரை போராடுவோம்.
நீங்கள் கவரிமான்கள் *மயிர் நீர்ப்பின் உயிர்வாழா மானிடங்கள்*
நீங்கள் உயிர் நீர்ப்பினும்
ஓயாது எங்கள் போராட்டம்
ஏனெனில் நாங்கள் கவரிங் மான்கள்.

ஓயமாட்டோம் உங்களை ஒரு வழி பண்ணிக்
கொல்லும் வரை ஓயமாட்டோம்.
வீழமாட்டோம் நீங்கள் வீழ்ந்து மடியும் வரை
நாங்கள் வீழமாட்டோம்.

கோடைவிடுமுறையைக்
கீரிமலையிலும் திருமலையிலும்
நல்லூரிலும் நயினை
நாகம்மை வாசலிலும்
கு(டி)ழித்துக் கழிக்க
எங்களுக்கொரு நிலம் வேண்டும்.

சோற்றுக்காய் பிள்ளைக்குப் பால்மாவுக்காய்
ஆமியிடமும் அகப்படும் யாவரிடமும்
எங்கள் பெண்களும் குழந்தைகளும்
விலையாகிப்போயழிந்து போனாலும்
நாங்கள் ஓயமாட்டோம்.
போராடுவோம் உங்களுக்காக….

போராட்டம் புலத்தார் கைகளில்
தரப்பட்டிருக்கிறது.
இத்தத்துவம் புரியாத (என்போன்ற) மக்குகளை
மண்டையிலை போடாதது பிழையென்று உசுப்புவோம்
இன்னும் கனவுகளில் வாழும் அப்பாவிகளுக்கு
ஓதுவோம் துரோகிகள் இப்படித்தான்
ஒளிந்திருக்கிறார்கள்.
அரிச்சந்திரர்களை அழைத்து
இந்த மக்குகளை
மண்டையிலை போடுவிப்போம்.

போராடுவோம்…..!
இன்னும் மிஞ்சியிருக்கும் உயிர்களே...!
நோயிலும் பசியிலும் நீங்கள்
சாகும் வரை நாங்கள் போராடுவோம்.

31.08.10 (பகல் 11.10)