Sunday, December 16, 2018

விடுதலைப் புலிகள் பெயரில் நடைபெறும் ஏமாற்றுக்களும் அறிக்கைகளும்.

விடுதலைப் புலிகள் பெயரில் நடைபெறும் ஏமாற்றுக்களும் அறிக்கைகளும். 
___________________________________________

01.12.2018 அன்று விடுதலைப்புலிகளின் அரசில்துறை பிரதிநிதி  குரபரன் குருசாமி மற்றும் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கள் இருவரும் கையொப்பமிட்ட அறிக்கையொன்று வெளியாகியிருந்தது.

(தமக்குத்தாமே லதன் , குரபரன் சூட்டிக்கொண்ட பதவிகளே மேற்படி பதவி நிலைகள்)

அவ்வறிக்கையானது விடுதலைப்புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வமான  கடிதத்தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

'ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமது கையொப்பங்களோடு ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தனர்.

குருபரன் , லதன் ஆகியோரை நியமதித்தோர் விடுதலைப்புலிகள் எனவும் ஒளியூடகம் ஒன்றில் குருபரன் செவ்வியொன்றினையும் வழங்கியிருந்தார்.

இன்னும் இயங்கு நிலையில் விடுதலைப்புலகள் இயக்கம் இருப்பதாகவும் தெரிவித்திருந்த குருபரன் பற்றிய வரலாறு அவர் மீதான கேள்விகளுமே இப்பதிவை எழுத வைத்துள்ளது.

குருபரன் யார் ?

2002ஆண்டின் பின்னர் சகோதரன் ஒருவரின் அனுசரணையில் டென்மார்க் நாட்டிற்கு வந்து பின்னர் சுவிஸ் நாட்டின் அகதி அந்தஸ்தைப் பெற்றிருப்பவர். (இவைபற்றிய தகவல்கள் தேவைப்படும் போது விரிவாக எழுதப்படும்)

சுவிஸ்நாட்டில் இயங்கும் அனைத்துலக செயலகத்தில் ஆதரவாளராக இணைந்த குருபரன் இளையோர் அமைப்பில் அங்கத்தவராக இயங்கினார்.

 2009 யுத்த முடிவின் பின்னர் ஈழத்தமிழர் மக்களவையின் அங்கத்தவரானார். மக்களவையோடும் முரண்பாடு வந்து மக்களவையால் நீக்கப்பட்ட போது இடிந்து போனார் குருபரன்.

இக்காலப்பகுதியில் சுவிஸ் குடியுரிமை பெற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனது சொந்த பொருளாதார பலத்தை உயர்த்தத் தொடங்கினார். (தனிமனித வாழ்வை அவரவர் மேம்படுத்துதல் தவறான வியடம் அல்ல. அது அவசியமானதும் கூட)


2018 'தமிழர் இயக்கம்' என்ற ஒரு அமைப்பை உத்தியோக பூர்வமாக அறிவித்து இயங்கத் தொடங்கினார். 2009 காலத்திலிருந்து 2018 காலப்பகுதிக்குள் அங்குமிங்கும் அலைபாயும் ஒருவராகவே இருந்து வந்துள்ளார்.

தனக்கான பதவி இல்லையென்றதும் கட்சிதாவும் அரசியல்வாதிகள் போல் தாவித்திரியும் குருபரனின் இலக்கற்ற செயற்பாடாகவே அவரது தமிழர் இயக்கம் அமைகிறது.

இவரது தமிழீழ தேசத்தின் விடுதலையை நோக்கிய செயற்பாடு என்பதும் கேள்விக்கு உள்ளாகிறது. தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற வார்த்தைகளை தனது பேச்சுகளில் பயன்படுத்திக் கொள்வது கூட வாய்ச் சொல்லாகவே இருக்கிறது.

10.01.2018 அன்று 20min எனும் சுவிஸ் பத்திரிகை குருபரனிடம் செவ்வியொன்றை எடுத்திருந்தது. குருபரனுக்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம் அது. அச்சந்தர்ப்பதை தனது தெளிவான கொள்ளையில்லாத தாவும் மனப்போக்கால் தவறவிட்டிருந்தார்.

பத்திரிகையாளர் (கேள்வி):- நீங்கள் தமிழர் அமைப்பின் தலைவராக இருக்கிறீர்கள். உங்களின் உந்துசக்தி என்ன ?

குருபரன் (பதில்):-
என்னுடைய அப்பா ஒரு விவசாயி. யாழ்ப்பாணத்திற்கு அருகில் விடுதலைப்புலிகளிற்கு தன்னுடைய காணிக்குள்  அடைக்கலம் கொடுத்தவர். நான் வயிற்றில் இருந்த போது சிறீலங்கா இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டார். என்னைக் காப்பாற்றுவதற்காக எனது அம்மா ஏஜென்சி மூலம் எனது 9வது வயதில் ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தார். இப்பொழுது என்னுடைய அப்பா விரும்பிய தமிழீழத்திற்கான பேராட்டத்தினை நான் முன்னெடுக்கிறேன்.

அப்பத்திரிகையின் இன்னொரு கேள்வி :- தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தால் நீங்கள் அங்கே சென்று வாழ்வீர்களா ?

புதில் : (குரபரன்):-
இப்பொழுது நான் ஒரு சுவிஸ் தமிழ் பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன். எனவே நான் திரும்பிப்போவேன் என்று நான் நினைக்கவில்லை.

தந்தையின் கனவை நிறைவேற்ற குருபரன் போராடுவது இலங்கையின் வடகிழக்குப் பிரதேசமான தமிழீழம். ஆனால் தேசம் கிடைத்தால் தாயகம் திரும்புவதற்கு தயாரில்லை.

இவர் பெற்றுத்தரப் போகின்ற தமிழீழம் யாருக்காக ?

வெளிநாட்டு வாழ்வின் சொகுசை சுகத்தை விட்டுப் போகமாட்டேன். ஆனால் தமிழீழத்திற்காக போராடுவேன். என்பவரின் கருத்தும் கொள்கையும் சுயநலம் என்பதைவிட வேறெந்தச் சொல்லாலும் சரி செய்ய முடியாது.

ஆனால் குரபரன் தன்னை விடுதலைப்புலகளின் அரசியல்துறை பிரதிநிதியாக பிரகடனப்படுத்தி ஊடகங்களில் கருத்துச் சொல்லும் கருத்துக்களும் மீண்டும் மீண்டும் தெளிவற்ற இலக்கற்றவர் என்பதையே சுட்டிக்கொண்டு இருக்கிறது.

சரி இவை ஒருபுறமிருக்கட்டும்.

2002ம் ஆண்டு குருபரன் பதின்ம வயதினை அடையாத சிறுவன். 2002ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப்புலிகள் அமைப்பும் இலங்கையரசும் சமாதான உடன்படிக்கை செய்து அரசியல் பேச்சுவார்தைகளை ஆரம்பித்தகாலம்.

ஆக குருபரனை அரசியல்துறை பிரதிநிதியாக நியமிக்கும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் குழந்தைப் போராளியாக குருபரனை விடுதலைப்புலிகள் அமைப்பு உள்வாங்கவில்லை. உள்ளே எடுக்கவும் இல்லை.

அப்படியாயின் குருபரன் எப்படி விடுதலைப்புலிகள் அரசியல்துறை பிரதிநிதியானார் ? எனும் கேள்வி சாமான்ய மக்களாகிய எங்களிடம் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

அதுமட்டுமன்றி 10.01.2018 அன்று குரபரன் சுவிஸ்நாட்டிலிருந்து வெளியாகும் „' 20min ' பத்திரிகையில் வழங்கிய செவ்வியில் அப்பத்திரிகையானது அப்போது குருபரனின் வயது 26என குறிப்பிட்டிருந்தது.

20min பத்திரிகையானது குறிப்பிட்ட அடிப்படையில் பார்த்தால் குருபரன் வெளிநாடு வரும் போது குருபரனின் வயது பத்து. 2009 விடுதலைப்புலிகள் வீழ்ச்சிகாணும் போது குரபரனின் வயது பதினேழு.

அப்படியானால் 18வயதிற்கு குறைந்த சிறுவர்களை புலிகள் அமைப்பு படையில் இணைத்தார்கள் என உலகம் சுமத்தும் குற்றச்சாட்டினை குருபரனே மெய்யாக்குகிறாரா ?

இது விடுதலைப்புலிகளின் பெயரையே அனைத்துலக
சமூகம் கேள்விக்கு உட்படுத்தும் தவறல்லவா ?

இன்னொரு உண்மையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு தள்ளப்படுகிறேன்.

சமாதானப்பேச்சுக்கள் தோல்வியுற்று விடுதலைப் புலிகள் யுத்தமென்று முடிவெடுத்த போது வன்னியில் நாட்டுக்கான பணியைச் செய்ய இளையோர் அனைவரையும் விடுதலைப்புலிகள் இயக்கம் போராட அழைத்தது.

அப்போது  குருபரனின் அக்காவையும் விடுதலைப்புலிகள் அழைத்திருந்தனர். இதையறிந்த குருபரன் அனைத்துலக செயலகத்தின் திரு.கஸ்ரோ அவர்களோடு கடிதப்போர் செய்தார் , தோலைபேசியில் முரண்பட்டார்.
 சுவிசில் இருந்து நான் தமிழீழத்திற்காக போராடுகிறேன் எனது அக்காவை விடுமாறு கோரிக்கொண்டிருந்தார். 

அவரது தாயார் விடுதலைப்புகளின் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து குருபரனின் சகோதரியைக் கடத்தி மறைத்து வைத்திருந்தார்.

 2009மே மாதத்தை அண்டிய காலம் இரவோடு இரவாக குருபரனின் தாயார் குருபரனின் சகோதரியை அழைத்துக் கொண்டு இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுளைந்தார். வுவனியா நலன்புரி நிலையத்தில் அடைக்கலமானார்கள்.

வெளிநாட்டிலிருந்து பணம் கொடுத்து தனது தாயாரையும் சகோதரியையும் இந்தியா அழைத்து பாதுகாத்தார் குருபரன்.

இவரது தாயார் மகளைக் காத்தது தாய்மை. சகோதரனாக குருபரன் இந்தியா அழைத்தது சகோதரபாசம்.

அரசு மீள்குடியேற்றம் செய்யத் தொடங்கிய போது வெளிநாட்டுப்பணத்தையும் கொடுத்து கொள்வனவு செய்த காணிகளையும் அரச சலுகைகளையும் பெற்று தனது குடும்பத்திற்கான வசதிகளைச் செய்து கொடுத்துக் கொண்டு சுவிசிலிருந்து தமழீழம் யாருக்கு வாங்கித் தரப்போகிறார் குருபரன் ?

பணம் உள்ளவர்கள் தப்பிக்க ஏழைகளும் விடுதலைப் போராட்டத்திற்காக தங்கள் வாழ்வைக் கொடுத்த போராளிகளும் இலங்கையரசால் சிறையிடப்பட்டது சித்திரவதை செய்தது இன்னும் தொடர்வது முற்றாத கதைகள்.

எனக்கு நடந்தால் துயரம் மற்றவருக்கு நடந்தால் போராட்டம் . இதுவா குருபரனின் அரசியல் நிலைப்பாடு ? தமிழீழத்திற்காக போராடும் வீரம் ?

குருபரனிடம் மேலும் சில கேள்விகள் :-

2002 ஆரம்பித்த சமாதான காலத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல இளையோர்கள் தாயகம் சென்றார்கள். ஆயுதப்யிற்சியும் எடுத்தார்கள். களங்களும் கண்டார்கள். இறுதியில் காணாமலும் போயிருக்கிறார்கள். 

ஆனால் நீங்கள் ஏன் தாயகத்திற்குப் போகவில்லை ? ஆயுதம்  ஏந்திப் போராடவில்லை ?

உங்கள் அக்காவை விடுதலைப்புலிகள் போராட்டத்தில் இணைத்த போது போராட விடவில்லை?  ஏன் பணம் கொடுத்து நாடுகடத்தினீர்கள் ?

நாடு கிடைத்தால் தாயகம் திரும்பமாட்டேன் என சுவிஸ் பத்திரிகையிலேயே பதிவு  செய்தது ஏன் ?

ராஜீவ் காந்தி மரணம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயங்குநிலையில் இருந்த போது அதுவொரு துன்பியல் சம்பவமென சொல்லியிருந்தார்கள். 1991 தளபதி கிட்டு மறுத்த விடயத்தை 2002 ஊடகமகாநாட்டில் தெளிவாக 'அதுவொரு துன்பியல்' சம்பவமென தலைவரே ஏற்றுக் கொண்டார்.

நீங்களும் லதன் சுந்தரலிங்களும் தற்போது புலிகளின் பிரதிநிதிகளாக புல(கிழ)ம்பியிருப்பது எவருக்கான வால்பிடிப்பு ?

ராஜீவ் மரணத்தில் சரி பிழைகளுக்கு அப்பால் தங்களைத் தியாகம் செய்தவர்களை இரட்டை முகவர்களாக நீங்கள் சித்தரிப்பதன் நோக்கம் என்ன ?
அந்தத் தியாகத்தை துரோகமெனச் சித்தரிக்க நீங்கள் யார்?
நீங்கள் எவரிடம் கூலிவாங்கும் முகவர்கள் ?

இந்தியாவுக்கு ஒரு சுப்பிரமணியசுவாமி போல ஈழத்தமிழர்களுக்கு குருசாமி மகன் குருபரனா ?


2009 ஆயதங்களை மௌனிக்கிறோம் என அறிவித்துக் கொண்ட போதே விடுதலைப்புலிகள் இயக்கமானது தனது இயங்குதலையும் இழந்து போனது.

 தற்போது  மிஞசியிருப்போர்  விடுதலைப்புலிகள் அமைப்பில் போராடிய உறுப்பினர்களே. அரசியல்  நீரோட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டிய உரிமையும் பொறுப்பும் அவர்களுக்கானதே.

நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையை நம்பி இந்தியாவும் உலகமும் விடுதலைப்பலிகளின் தடையை நீக்குமென குழந்தைத்தனமாக நம்புவது என்ன வகையான பம்பாத்து ?

பிற்குறிப்பு :-

குருபரனின் செம்பொன்று என்னிடம் தொடர்பு கொண்டு சொன்னது யாதெனில் :-

விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகள் அனைவரும் ஒன்றுபட்டே குருபரன் , லதனை நியமித்ததாகக் கூறியிருந்தது. 

இதுபற்றி கேள்வி கேட்ட பலரை அடக்கிவிட்டோம் நீர் எதற்காக எதிர்த்து வருகிறீர் என கொடுக்குக் கட்டிக் கொண்டு வந்து தொலைபேசினார். (இவர் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்ததாய் வரலாற்றில் எந்த பதிவும் இல்லை.சுதந்திரமாய் இலங்கை சென்று வரக்கூடிய வசதியையும் வாய்ப்பையும் பெற்ற தேசியவாதி)
குருபரன் குருசாமி , லதன் சுந்தரலிங்கம் ஆகியோரின் அறிக்கை தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த பல மூத்த இளநிலைப் போராளிகளிடம் இது குறித்துக் கேட்ட போது அவர்கள் தந்த பதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த தமக்கும் இவ்வறிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதே.

நான் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. விடுதலைப்புலிகளை நேசிக்கும் அவர்களது தியாகங்களை மதிக்கும் ஒரு ஆதரவாளர். குருபரன் ,லதன் ஆகியோரின் அறிக்கை மீதான எனது அதிர்வே இக்கட்டுரையாகும்.

தாயகம் கிடைத்தால் ஊரில் போய் வாழுவாயா ? என்னிடம் யாரும் கேட்டால் எனது பதில். 
ஓம் போவேன். 
எனது மண்ணில் வாழ்வேன். 

ஆனால் எனது வாழ்வுக்காக இன்னொருவரின் உயிரைக் கொடு என்று கேட்கமாட்டேன். அவர்கள் வாழ்வை மேம்படுத்த இப்போதைக்கு என்னால் இயன்ற பணிகளை மட்டுமே அதுவும் வெளிநாட்டில் இருந்தபடியே செய்ய முடியும்.

ஏனெனில் யாரோ எனக்காக போராட நான் வெளிநாட்டு வாழ்வை வாழ்ந்தேன் என்ற குற்றவுணர்வு இனிமேலும் இன்னொருவரை போராடு எனச்சொல்லும் தைரியத்தை தரவில்லை.

இன்னும் வளரும்.... (சாந்தி நேசக்கரம்)
15. 12. 2018

No comments: