Sunday, June 17, 2018

நூறாய் பெருகும் நினைவு


நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., 
ஓமோம்... சொல்லியும்

நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., 
ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை

அப்ப ஊரில எந்த இடம்?

சிலருக்கு பூராயம் ஆராயாமல்  பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன்.

அதையும் மீறி வரும் கேள்வி இது :...., 
அப்ப வெளிநாடு வந்து கனகாலமோ?  
இங்கை இப்ப எங்க  இருக்கிறியள்?  

சிலர் மேலும் விபரம் அறியும் ஆர்வத்தை இப்படியும் கேட்டு வழிமறிப்பார்கள்

நீண்ட காலம் வாழ்ந்த இடத்தை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள்  தொலைவாக ஒதுங்கியது...., 

 பழைய நினைவுகளைத் தொலைத்து புதிய நினைவுகளைச் சேமித்து மீள வேண்டும் என்பதும் பிரதான காரணம்

அத்தோடு அதிகமாக தமிழர்கள் அல்லாத இடத்தை தேர்வு செய்தது யாருக்கும் என் தற்கால இருப்புப் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே

புதிய இடத்தில் வேலை. பெரும் நிறுவனம். 350பேருக்கு மேற்பட்டோரோடு வேலை செய்யும் சூழல். பணியில் சந்திக்கும் தருணங்களில் பொதுவான வணக்கம் நலவிசாரிப்பு அதோடு போகிறது முகங்கள். எந்த முகத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அவசியம் இல்லை. எனக்கான பணியை செய்து கொள்வதே பணி.

அதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.

இடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.
நீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.

நெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.

தொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன்

பலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம்
அவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை

தவிர்க்க முடியாத சந்திப்புக்களை இயன்றவரை தற்கால இருப்பிடம் அடையாளம் சொல்லாமல் தவிர்த்துக் கொள்கிறேன்

சிலர் எனது அன்னியமாதல் புரிந்து எனக்கேற்ப பேசப்பழகியுள்ளார்கள்.  அதிகம் கேள்விகள் கேட்டு சங்கடம் தராமல் நாகரீகம் காக்கும் சிலரோடான தொடர்பாடலை மட்டும் பேணிக்கொள்கிறேன்

யாரையும் பார்க்க பேசும் மனநிலையை ஏனோ இந்த நாட்கள் தருவதில்லை

அதிக நேசிப்பு நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு துரோகம் ஏமாற்று. இவற்றைத் தந்து பொய்யாகிப் போனவர்களை அடிக்கடி ஞாபகவோடை இழுத்து வருகிறது

உறவுச் சேர்ப்பில் கண்ணீரை விதைத்து மனவழுத்தத்தைக் கூட்டிக் கொண்டது தவிர வேறு பயனில்லை

மறந்துவிட நினைக்கும் முகங்களும் அவர் தம் துரோகங்களும் மனவோடையை ரணமாக்கிய காயம் அவ்வளவு இலகுவாய் ஆறிவிடக்கூடியதல்ல

இதுவும் கடந்து போகட்டும் இப்படித்தான் என்னை ஆற்றுகிறேன்

தனிமையின் முழுமையான அழுத்தத்தை அணுவணுவாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன்

இந்தக்காலம் என்னை முழுதாக மாற்றிப் புதிதாக்குமென்ற நம்பிக்கையில் ஒதுங்கிப் போகிறேன்

ஆறாய் ஓடிவரும் கண்ணீருக்கு 
அணைகட்டி ஓயத்தெரியாது. நூறாய் பெருகும் நினைவுகளைத் தூர எறியவும் முடியாது கடக்கிறது காலம்


02. 05. 18

No comments: