Tuesday, January 11, 2011

வெள்ளம் அள்ளுகிறது கிழக்குமாகாணத்தை கண்களையும் கையினையும் இழந்த ஒருவனின் குரல்.

காலம் 09.01.2011 அதிகாலை 3.40மணி.

அக்கா அவசரமாக் கதைக்க வேணும் ஒருக்கா எடுங்கக்கா….! சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான். அக்கா செய்தியள் அறிஞ்சிருப்பியள் தானே…..! எங்கடை ஊரே தண்ணியில மூழ்கீட்டுது…வளவெல்லாம் தண்ணிதான் நிண்டது…வீட்டுக்கை வராதெண்டுதான் நம்பினமக்கா….ராத்திரி நாங்கள் சுத்தி எழுப்பின மண்சுவர் தண்ணீல கரைஞ்சு தகரங்கள் தடியள் எங்களுக்கு மேலை விழுந்து ஒண்டுமில்லையக்கா….. குழந்தைக்குப் பால்மாகூட இல்லை…..
இடுப்பளவு தண்ணீக்கால வெளிய வந்து இப்ப ஊர்ப்பள்ளிக் கூடத்தில வந்திருக்கிறம்….. ஏதாவது உதவிசெய்வியளோண்டு கேப்பமெண்டுதான் எடுத்தனான்….. எங்களோடை 300பேர் இருக்கினம்….குழந்தையளின்டை நிலமை சரியான மோசமாக் கிடக்குது. வெளிக்கிடேக்க இந்த ரெலிபோனைத்தான் எடுத்துக் கொண்டு வந்தனாங்கள். போட உடுப்புக்கூடக் கொண்டு வரேல்லயக்கா….

நேசக்கரத்தால பயனடைஞ்ச குடும்பங்கள் கனபேர் இதில இருக்கினமக்கா அவையளுக்காகவேனும் ஏதாவது செய்யுங்கோக்கா……சண்டையிலயும் நாங்கள் தான் துயரப்பட்டம் இப்ப வெள்ளமும் எங்களைத்தான் அழிக்குது…..நாங்கள் சாவுமில்லாமல் வாழ்வுமில்லாமல் இருக்கிறமக்கா……

எங்களை ஏனக்கா தண்டிக்கிறீங்கள்….? தயவு செய்து திரும்பி இயங்குங்கோக்கா…..அரசியல் செய்யிற எங்கடை அரசியல் கள்ளன்களுக்கு எங்கடை அவலங்கள் விளங்காதக்கா…..அவங்களெல்லாம் எங்கடை கண்ணீரை மாடிவீடுகளிலயிருந்து ரீவியிலயும் கணினியிலயும் பாத்துக் கொண்டிருக்கிறாங்கள்….. எங்கடை குழந்தையள் சாகக்கிடக்குதுகள்….உங்கடை மற்றாக்களோடை கதையுங்கோ எங்கடை நிலமையைச் சொல்லுங்கோ…..எங்களுக்கு உதவச் சொல்லுங்கோக்கா……

அவன் கண்ணிரண்டையும் ஒற்றைக்கையையும் 13வயதில் நாட்டுக்காகக் கொடுத்து கடைசிக்கள முடிவுவரை வன்னிக்குள் வாழ்ந்து 20வருடம் கழித்து தான் பிறந்த மட்டக்களப்புக்குச் சென்று ஓராண்டாகிறது. அவனது துணைவிதான் அவனுக்கு எல்லாம். குடிதண்ணீர் எடுக்கவும் குளிக்கவும் தினமும் 4கிலோமீற்றர் தூரம் சென்றுதான் வருவார்கள். கண்ணில்லாத அவனையும் குழந்தையையும் கையிரண்டிலும் பிடித்துக் கொண்டு அவனது அவள்தான் எல்லாவற்றையும் கவனித்தாள்.
அவர்களுக்கான நேசக்கரம் நீட்டிய உறவுகளால் மீளவும் உயிர்த்ததாய் நம்பிய குடும்பம் செய்த சுயதொழில் விவசாயம் நவம்பர் மாத மழையில் அழிந்து போனது. வளர்த்த கோழிகள் டிசம்பர் மாதம் செத்துப்போக வீதிகளில் தேங்காய்கள் விற்றுக் கொண்டிருந்தவனோடு வீதிவீதியாய் அலைந்தவள். உதவிய புலத்து உறவுகளுக்குத் தயக்கத்தோடு தங்கள் நிலமையைச் சொல்லி சிறு கொடுப்பனவினைப் பெற்றார்கள். ஆனால் இன்று கிடைத்ததும் இல்லாமல் மீண்டும் அகதியாகிப் போய் ஓர் பாடசாலையில் ஒதுங்கியிருக்கிற பலநூறுக்குள் இவர்களும்…..

அக்கா யோசியுங்கோ….சிலவேளை இந்தத்தண்ணி பெருத்து நாங்க செத்துப்போறமோ தெரியாதக்கா…. அடுத்தொருத்தி புலம்பினாள். அவள் கணவன் 2007 மாவீராகிவிட்டான். 3 குழந்தைகளுடன் ஒரு சிறுகடையை ஆரம்பித்திருந்தவள். அதுவும் மழையடித்து மண்ணோடு மண்ணாய் கரைந்து போய்விட்டதாம்.
அக்கா என்ரை கொட்டிலெல்லாம் வெள்ளத்தில போயிச்சு….நீங்கள் உதவினதெல்லாத்தையும் வெள்ளம் கொண்டு போட்டுதக்கா சொல்லியழுதாள் 32வயதான அவள்.சில நல்லிதயங்களின் ஆதரவில் அவள் ஆட்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து உழைக்க வாங்கிக்கொடுத்த பொருட்கள் யாவும் அவளது குடிசையோடு அடிபட்டுப்போயிற்றாம். அவளுக்கும் 3பெண் குழந்தைகள் முள்ளிவாய்க்காலில் அவளது கணவனும் மாவீரர்.
5குடும்பங்களின் துயரக்கதையள் அடுத்தடுத்து எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கினாலும் ஒதுங்க முடியாது துரத்துகிறது துயரங்கள். எம்மை முடக்கியவனுக்கும் தடைவிழுத்திய அவனது தொண்டர்களுக்கும் இது 3ம் சாமமாயிருக்கும். அவர்கள் மூக்குமுட்ட எல்லாவகைகளையும் தின்றுவிட்டுச் சுகமாய் அடுத்த தேர்தல் கனவில் மிதப்பார்கள்.

காலம் 09.01.2011 காலை6.12மணி. அக்கா என்ன முடிவு…?
காலம் 09.01.2011 காலை 6.19மணி.
காலம் 09.01.2011 காலை 15.27 மணி வரை 15தடவைகள் ஒரே குரல் ஒரே விடயம்.

காலம் 10.01.2011 காலை 6.05மணி. கடைசியாக வந்த அழைப்பு. அக்கா ரெலிபோனில சாச் இல்லை. எலெக்றிக் கம்பங்களெல்லாம் இங்காலை அறுந்து விழுகுது. இனிக்கதைக்கிறது கஸ்ரமக்கா. திரும்பியும் சொல்லறமக்கா உங்கடை முடிவுகளை மாத்துங்கோ நாங்க தண்ணீல சாகப்போறம்…..எங்கடை குழந்தையளையும் எங்களையும் தண்ணி இழுத்துக் கொண்டு போப்போகுது. நான் போட்டுத்திரிஞ்ச ஒரு செருப்பும் தண்ணீல போட்டுது…..அவனது தொடர்பு அறுபடுகிறது.

காலம் 11.01.2011 மாலை 15.30 முதல் 11.01.2011 காலை 8.52 மணிவரையும் இரவிரவாகப் பலதரம் அவனை அழைக்க முயற்சித்தாயிற்று தொலைபேசியழைப்பு தற்போது இயலாதென எயாரெல் குரல் சொல்கிறது. அவனோடிருந்த 5குடும்பத் தொலைபேசிகளும் ஒரேமாதிரித்தான் சொல்கிறது.

எழுதப்பட்ட காலம் 11.01.2011 காலை 08.55.

No comments: