Tuesday, June 26, 2012

நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது.


அண்ணை இப்பத்தான் அண்மையில தடுப்பிலயிருந்து வெளியில வந்தவர். 25வரியம் இயக்கத்தில இருந்தவர். ஒரு நல்ல களமுனைச்சண்டைக்காரனும் கூட. அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் சுடுகலனும் , கனரகமும் அதுகளை இயக்கிற வகையளுமே.

ஆயுதங்களோடை அண்ணை காடுகளெல்லாம் நடந்து திரிஞ்சவர். தாயகக்கனவை நெஞ்சில சுமந்தபடி அண்ணை உருவாக்கிய போராளிகள் அண்ணையின் கையிலை வீரச்சாவான நேரங்களிலயெல்லாம் அண்ணை தன்ரை கண்ணீரை மறைச்சு இலட்சியத்தை இறுக்கமாவே வரிச்சுக் கொண்டு இயங்கின மனிசன்.

2006மாவிலாற்றில சண்டை துவங்கினோடனும் மாவிலாற்றில சண்டைக்களத்தில நிண்டார். பிறகு சம்பூர் , மூதூர் , கொக்கட்டிச்சோலை , தொப்பிகல எண்டு கிழக்க மாகாணத்தில அண்ணை நிக்காக களங்களில்லை. அண்ணைக்குப் பின்னாலை அவற்றை மனைவியும் , குழந்தையும் அலைச்சல்தான் அவைக்கும்.

கிழக்கை படைகள் கைப்பற்றி முடிய கிழக்கின்ரை இழப்புகளில அண்ணையும் இழந்தது நிறைய. களத்தில காயங்களாகியும் மனசில ஈ(வீ)ரம் காயமால் தான் விதைச்ச தான் வளத்த போராளிகள் மாவீரர்களைத்தான் நினைச்சு நினைச்சு உழைச்சவர். ஒரு நாளும் குடும்பம் குழந்தை வீட்டைப்பற்றி நினைச்சதேயில்லை. அவற்றை மனசைப்புரிஞ்ச மனைவி அவரோடை வாழக்கிடைச்சதுக்காக பெருமைப்பட்ட காலங்கள் அது.

கிழக்கை இழந்தப்பிறகு வடக்கிற்கு அண்ணையின்ரை அணி காடுகள் கடந்து நீண்ட நடைப்பயணம் செய்து வன்னிக்களமுனைக்குப் போய்ச்சினம். தான் போன வன்னிக்கு தன்ரை குடும்பத்தையும் இடம்பெயர வைச்சு அவையளுக்கும் தொடர் அகதி வாழ்வையே குடுத்த மனிசன். இப்ப கேட்டாலும் அது குற்றமெண்டு ஒத்துக் கொள்ளமாட்டார். கடினங்களோடை வாழப்பழகின தன்னை காதலிச்ச மனைவி அதையெல்லாம் அனுபவிச்சது பிழையில்லையெண்டு நாண்டுபிடிப்பார்.

கடைசியில 2009 அண்ணையும் சரணடைஞ்சார். இப்பவும் அதெல்லாம் ஒரு கனவுமாதிரியே அவருக்கு கனவுகளில வருகிறது. எந்த நம்பிக்கையில சரணடைஞ்சாரெண்டது இப்பவும் ஞாபகத்தில வருதில்லை. ஆனால் சரணடைஞ்சு சித்திரவதையள் அனுபவிச்சு நோஞ்சானாகி விடுதலையாகியிருக்கிற மனிசன் இன்றும் நல்லவனவாகவும் , நேர்மையானவனாகவும் வாழ நினைச்சு கஸ்ரப்படுறதைப் பாக்கிற ஊர்ச்சனம் இப்பிடித்தான் சொல்லுது...

'உலகத்தோடை ஒத்துவாழப்பழகுங்கோ'.
யாரிட்டையும் உதவி கேப்பம் எத்தினை நாளைக்கு இப்பிடி கஞ்சியும் வறுமையும் எங்களை வாழ வைக்கப்போகுது...? ஏன்று சலிக்கிற மனைவிக்கு ‚'வா நஞ்சைக்குடிச்சுச் செத்துப்போவம்'' எண்டு சொல்லி வாயை மூடப்பண்ணீடுவர்.

எத்தினை பேரை வாழ வைச்ச மனிசன் எத்தினையோ பேருக்கு வாழ வழிசெய்த மனிசன் தினக்கூலி வேலைக்கும் உரிய ஊதியம் கிடைக்காமற்போயும் வரம்பு கட்டியும் கரைவலைக்குப்போயும் தான் குடும்பச் சீவியத்தைக் காவாந்து பண்ணிக் கொண்டிருக்கிறார்.

எத்தனையோ வலிகளும் கடினங்களும் தாங்கிய உடல் வதைகளால் பாதிப்புற்று வலிமையும் இழந்து போய் இப்ப ஒரு நோயாளி. ரெண்டுநாள் வேலை மூண்டாம் நாள் படுக்கையிலென இதுதான் இப்ப மனிசன்ரை வாழ்க்கை.

வாழிறதுக்கு சொந்த வீடில்லை தகரக்குடில் அதுதான் அண்ணையின்ரை வசந்தமாளிகை. வெப்பத்தைச் சேகரிச்து வைச்சிருக்கிற தகரக்குடிலின் வெப்பியாரம் தாங்காமல்....,

‚'எப்பப்பா நாங்க வீடு கட்டுவம் ?'' என அழுகிற மகனுக்கு....என்ரை குஞ்சுக்குத்தான இந்த வீட்டை எழுதித்தாறது'' எனச் சொல்லுவார். 8வயசுப்பிள்ளையும் ஏதோ அப்பா பெரிய வில்லாவைத் தனக்கு முதிசமாத்தரப்போறாரெண்டு வில்லாக்கனவில் இருக்கிறான்.

வரப்புகட்டப்போறதிலும் வருவாயில்லாமல் போய்விட இப்ப ஆத்தில மீன் பிடிக்க இரவலுக்கு வலைவேண்டி மீன் பிடிக்கப்போய்வாறார். இப்ப மீன்படுற காலமாம் அதிலை ஏதும் முன்னேறிடலாமெண்ட கனவில பின்னேரம் 5மணிக்கு வீட்டைவிட்டு வெளிக்கிட்டுவிடுவார். மறுநாள் மதியம் ஒரு மணிக்குத்தான் வீட்டை வருவார். சிலநேரம் நித்திரை முளிப்புக்கும் 10மயில் சயிக்கிள் ஓடிப்போனதுக்கும் பயனில்லாமல் வெறுங்கையோடு திரும்பி வருவார். இப்போது தண்ணீர் வற்றுக்காலம் என்பதால் முதலைகள் அவர்கள் மீன்பிடிக்கும் ஆற்றில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள காலமிது. 
மீன்கள்பட்டதும் முதலைகள் வலைகளை அறுத்துவிடுகிறது. அறுபட்ட வலையை மீளக்கட்டி மீண்டும் தொழிலுக்குத் தயாராக கிடைக்கிற கொஞ்ச ஓய்வும் போய்விடுகிறது. முதலைகளைத் துரத்த இரவிரவாய் நித்திரை முளித்துக் ஆற்றங்கரையில் காவலிருக்கிறதே இப்போது வாழ்வாகிப் போயிருக்கிறது.

வலையும் சொந்தமாயில்லை ஆளம் மிகுந்த ஆற்றில் தொழில் செய்ய தோணியும் இல்லை. இந்த மீன்படும் காலத்தைப் பயன்படுத்த விரும்புகிற மனிசனுக்கு 40ஆயிரம் ரூபா கையிலிருந்தால் இருண்ட வாழ்க்கையை வெளிச்சமாக்க முடியுமென்ற நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது.
„'உங்கடை கவுரவமும் நீங்களும் போங்கோ...' என்று அண்ணையின் கவுரவத்தை விட்டிட்டு  அண்ணையின் மனைவி காயத்திரியக்கா எழுதிய கடிதம் அவர்களுக்காக எதையாவது செய்துவிட வேண்டுமென்றதைச்  சொல்கிறது.



காயத்திரியக்காவின் கடிதம் இது கருணையாளர்களிடம் விட்டுவிடுகிறேன்:-

26.06.2012

Saturday, June 23, 2012

லெப்.கேணல்.அருணன் (சந்திரன்)

லெப்.கேணல்.அருணன் (சந்திரன்)
சர்வதேச தொலைத்தொடர்புசேவையின் பணிப்பாளர்.

Thursday, June 21, 2012

புன்னகையின் காரணமாயிருந்தவளுக்குப் புற்றுநோய்

பதின்மக்கனவுகள்
பிணங்களும் அழுகையும்
பிணியகலாப் பொழுதின்
விடியலைத் தேடிய வீரரின் தடங்களில்
13வயது அவளுக்குக் காட்டிய வாசல்
களமுனை கைத்துப்பாக்கி
கனரக ஆயுதக் கையாள்கை.....

வெற்றியே அவளது வெறிக்கனவு
விடுதலையே அவளது விழிக்கனவு
விளக்கி முடியுமுன் கொடுத்திடும் காரியம்
முடித்திடும் தைரியம்
அவளைப் பிடித்தது எல்லோர்க்கும்....

அசாத்தியத் துணிவும் ஆழுமையும்
பகையின் வீட்டுக் குகைக்குள் பணி....
சிறைகளும் , சித்திரவதைக் கூடங்களும்
அவளுக்கு வலித்ததில்லை
வலிமையை விதைத்து வீரமாய் உரமாக்கி
கறுப்பாய் வெடிக்கும் களம் தேடிக்
கனவுகள் விரிந்தது....
கனவுகள் பலித்திடக் கைத்துப்பாக்கியும்
கணத்திலே வெடித்திடும் அங்கியும்
கழுத்தில் குப்பியும்.....

அவள் தலைமையேற்றுக்
கடமை முடித்த வெற்றிகள்
வெளியில் வராத கதைகளின் வேர் அவள்.
ஏத்தனையோ சாதனை சில சறுக்கல்கள்
சறுக்கலின் காரணம் தண்டனைகள்
பச்சைமட்டையடிகள் பற்கள் உடைவு
ஆயினும் தின்ற சோற்றுக்கு நன்றியாய்
அனுபவம் யாவும் கனவு வெளியில்
காத்திருத்தல் வெற்றிக்காய்
அவள் ஒரு கரும்புலியாய்.....

000

அழகென்றால் அப்போதைய அசின் அவள்
காதல் அவளையும் கவர்ந்து
காதலுக்காய் 10பச்சைமட்டையடி
கரும்புலிக்குக் காதல் கூடாது
கடும் எச்சரிப்பு கொடும் தண்டனை
ஆயினும் தின்ற சோற்றின் நன்றியையும்
தானே கரியாக்கிய காவியங்களையும்
ஏப்போதும் மறந்ததில்லை....

000

இரட்டை வாழ்வை முடித்து
மீளவும் பணிகள் முள்ளிவாய்க்கால் வரையிலும்...
காதலித்தவன் அவளுக்காய் காத்திருப்பதை
நினைவுபடுத்திய காதல் திருமணத்தில் முடிந்த போது
அங்கியணிவித்து அவளேயனுப்பிக் காற்றாய் கரைந்த
ஒரு காவியத்தின் குழந்தைக்கும் அவளே தாயானாள்.

களமொன்றில் உயிர் நீத்த அவள் நேசித்த தோழியின்
குழந்தைக்கும் தாயாகி
தை2009 குழந்தைகள் இரண்டின் அம்மாவாகி
3ம் குழந்தையை 2011 காதலுக்காய் பெற்றெடுத்து
அவள் வாழ்வது அன்றுமுதல் இன்றுவரை
அவளுக்காயில்லை.....

யாருக்கும் சொல்லாத
யாராலும் புரிந்து கொள்ள முடியாதவளாய்
அக்காவென்று ஆறுதல் தேடிவந்து
யாரையும் நம்பாத இயல்பை மாற்றி
எல்லாத்துயர்களையும்; இறக்கிவிட்டு
ஓய்ந்து போன போது
இரு சிறுநீரகமும் செயலிழந்து
வாழ்வின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்க
அண்மையில் இடியாய் அடுத்த மருத்துவ அறிக்கை
ஒற்றைச் சிறுநீரகத்தில் அவளுக்குப் புற்றுநோயாம்....

என்றுமே கலங்காத இரும்பாயிருந்த இதயம்
இடையில் போகப்போகிற உயிரைப் பிடித்து நிறுத்த
இறைஞ்சி நிற்க எல்லாம் பணமே உயிரும் பணமாய்
உயிரை எடுக்க சொல்லாமல் கொள்ளாமல்
தன் சோகங்களை மறைக்கவா இல்லை
தன் சாவை மறைக்கவா தொடர்பறுத்துப் போய்விட்டாள்....

கண்ணுக்குள் இப்போதும் அவளது புன்னகை
காதுக்குள் எப்போதும் 'அக்கா' என்ற அன்பின் இளை
கடைசியாய் அவள் காட்டிய குழந்தைகள் மூன்றின் முகம்
இதயத்தில் ஈரமாய் இமைக்குள் பாரமாய்.....

000

05.06.2012 அக்கா இருக்கிறேன்
ஏனக்காய் நீங்களும் எனது நேசிப்புக்குரியோரும்
பட்டதுயர் போதும் குறுஞ்செய்தியனுப்பிவிட்டுத்
மீண்டும் மறைந்து போனவளே....!
ஒருமுறை சொல்லிவிடு ஏன் தொடர்பறுத்துப் போனாய்....?

மற்றவர்களுக்காய் வாழ்ந்து மனிதநேயம் மாறாதவளாய்
மற்றோரைச் சிரிக்க வைத்து நீ மெழுகாகிக்
கரைகிற கண்ணீரை மறைத்தெங்கள்
புன்னகையின் காரணங்களாயிருந்தவளே.....!

உன்னை நம்பிய குழந்தைகளைப்
பிரியப்போகிற துயரோடும்
யுத்தம் தின்ற குழந்தைக்கனவுகளை குழந்தைகளை
உன் உழைப்பால் உயிர் வாழ்விக்க
கூலித்தொழிலாளியாய் குறைந்த சம்பளத்தோடும்
நிறைந்த மகிழ்வோடு பணியாற்றியவளே....!

உனக்காய் ஒரு சிறுநீரகம் என்னிடம் இருக்கிறது
அதைப்பெற்றுக் கொள்.....
அக்காவென்று உறவான உனக்காய்
என் ஒரு சிறுநீரகத்தைத் தந்துவிடுகிறேன்
தங்கையே தொடர்பு கொள்.....
16.06.2012

(13வயதில் விடுதலைப்போராளியாகி 30வயதிற்குள் பட்டறிவின் ஞானியாய் களம் முதல் மனிதநேயம் வரை கற்றுத்தேறி 3குழந்தைகளின் உயிர்தரும் அம்மாவாய் மனைவியாய் ஆனவள். கைகளில் லட்சங்கள் புரண்ட காலங்களில் கடமை முடிந்ததும் ஒரு சதமும் தனக்காய் கரைக்காமல் நாட்டின் சொத்தை நாட்டிற்கே திருப்பிக் கொடுத்தவள். இரு சிறுநீரகமும் இழந்து இப்போது ஒரு சிறுநீரகம் புற்றுநோயாகி வாழ்வின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற ஒரு போராளித் தங்கைக்காக இக்கவிதை)

Sunday, June 3, 2012

இது கதையில்லை

அக்கா வணக்கம் ! நான் இந்தியாவிலயிருந்து கதைக்கிறன். ஆதவன் உங்களோடை கதைக்கச் சொன்னவர்....என்னெண்டா அக்கா இங்கை ஒருத்தர் கால்காயம் பிரச்சினையாகி ராமச்சந்திராவில ஒப்பிறேசன் செய்திருக்கிறார்....லண்டனிலயிருந்து ஒராள் உதவி செய்யிறனெண்டு கனமுறை கதைச்சு ஒப்பிறேசனை செய்யுங்கோ காசனுப்பிறனெண்டு சொன்னதை நம்பி ஆளும் செய்திட்டார்.

உதவிறனெண்டவர் ஒளிச்சிட்டாரக்கா....ஒரு தொடர்புமில்லை....பாவம் இந்தாள் படுக்கையில கிடக்குது.....தெரிஞ்சாக்களிட்டை கடன்வாங்கி காசைக்கட்டீட்டு வீட்டை வந்து கிடக்கிறார்.....கடன் குடுத்தவை பொலிசில குடுத்திருவமெண்டு நிக்கினமக்கா....ஏதும் உதவேலுமோக்கா.....?

வியாழமாற்றம் எனக்கும் சரியில்லப்போல.... கடந்த 4நாளா இப்படித்தான் ஆசுப்பத்திரி மருந்தெண்டு வந்த அழைப்புகளில 16வது அழைப்பு இது. முகம் தெரியாத அந்தத் தம்பி உடனடியாக உதவி தேவைப்படுகிற போராளியின் மருத்துவச்சான்றிதழ் , செலுத்தப்பட்ட பணத்திற்கான ரசீதுகள்  அத்தோடு இரத்தம் கசிந்தபடி அவனது கால்கள் பஞ்சையும் சிவப்பாக்கியிருந்த பஞ்சுகளால் சுற்றப்பட்ட அந்தப்போராளியின் படம் , சத்திரசிகிச்சை உடையோடு ஒரு பொம்மைபோல கட்டிலில் கிடக்கிற கோலத்தை படம் பிடித்து  எல்லாவற்றையும் மின்னஞ்சல் செய்திருந்தான்.

அக்கா அவன் இந்தியாவில தண்ணீர் விநியோகம் செய்யிற வேலைதான் செய்தவன்...அன்றாட கூலிதான் குடும்பத்திற்கான வருமானம்....2பிள்ளைகள் மனைவியும் இவனைத்தான் நம்பியிருக்கினம் கடைசி முயற்சியென்ற வரையும் முயன்றுவிட்டோம். ஆளைப்பாக்கேலாம இருக்குதக்கா என்று அடிக்குறிப்பும் இட்டிருந்தான்.

60ஆயிரம் ரூபா இந்தியப்பணம் கிட்டத்தட்ட 900€. யாரிட்டையும் உடனடியாகத் திரட்ட முடியாது என்பதனை அவனுக்கு அஞ்சலிட்ட கையோடு ஸ்கைப்பில் ஓடிவந்தான் அவன். ஏதாவது முயற்சி செய்யுங்கோக்கா....சரியான பாவமாயிருக்கு....கடன் குடுக்காட்டி பொலிஸில குடுத்திருவாங்களக்கா....வெளிநாட்டு உதவியளோ சொந்தங்களோ ஒருதருமில்லையக்கா.....கெஞ்சினான் அவன். சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கட்டிலில் சுருண்டு போனவனின் மனைவியின் தொலைபேசியிலக்கத்தையும் எழுதிவிட்டு ஒருக்கா எடுத்துக் கதையுங்கோ என அவர்களுக்காக மன்றாடினான் தொடர்பில் வந்த சக போராளி.

சிகிச்சை முடிந்து இரத்தக்கறையோடு கிடந்த அந்தத் தம்பியின் மருத்துவச் சான்றிதழை பிறிண்ட் எடுத்தேன். 32வயது அவனுக்கு. செய்யப்பட்ட சிகிச்சைக்கான ஒவ்வொரு செலவுகளும் அட்டவணைப்படுத்தப்பட்டு கணக்கு போடப்பட்டிருந்தது. அவனது படத்தை பார்க்க அந்தரமாயிருந்தது.  அவனது முகத்தைப் பார்த்த பின்னர் எதுவும் செய்ய முடியாதென்று ஒதுங்கவும் முடியாமல் அவன் கண்ணுக்குள் நின்றான்.

அவனது மனைவியின் தொலைபேசியை அழைத்தேன். சொல்லுங்க அக்கா....அவள் அழ ஆரம்பித்தாள். நாங்கள் எங்களுக்கெண்டு ஒண்டையும் கொண்டு வரேல்லையக்கா....ஏதோ உயிரைக்காப்பாற்றுவமெண்டு மட்டும்தான் நினைச்சு இந்தியா வந்தனாங்கள்....இவர் கடைசியாத்தான் காயம்பட்டவர்.....வந்தோடனும் ஒரு வேலையும் கிடைக்கேல்ல...தண்ணி சப்ளை வேலையும் வீடுகளுக்கு பெயின்ற் அடிக்கிற வேலையும் தெரிஞ்சாக்களை பிடிச்சு எடுத்தவர். டொக்ரர்மார் சொன்னவை....கனக்க நடக்கப்படாது நிக்கப்படாதெண்டு ஆனா அப்பிடியிருந்தா பிள்ளையளுக்கு ஒரு நேரச்சோறும் குடுக்கேலாதெண்டு வேதவனையோடைதானக்கா வேலைக்குப் போனவர்....கால் ஏலாம வந்தப்பிறகுதான் வெளிநாட்டுக்காறாள் ஒருதரின்ரை தொடர்பு கிடைச்சோடணும் ஒப்பிறேசனுக்கு உதவி கேட்டம்....ஓமெண்டு நம்ப வைச்சிட்டு இப்ப எங்களை ஏமாத்தீட்டினமக்கா....அவள் அழுதாள்.

உதவி செய்வேனென வாக்குறுதி கொடுத்தவரின் இலக்கத்தை வாங்கி அழைத்தேன். அது லைகா இலக்கம். தொடர்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அழைக்க வொயிஸ் மெயிலுக்குப் போய்க் கொண்டிருந்தது. பல லைகா இலக்கங்கள் ஏற்கனவே உதவுகிறோம் என பொழுது போக்காட்டிய அனுபவம் போல இதுவுமொரு லைகா போல.....

இந்தியா , இந்தோனேசியா , தாய்லாந்து , பர்மா , நேபாளம் ,ஆபிரிக்கா வரை எத்தனையோ போராளிகள் தெருத்தெருவாய் ஊனங்களோடும் உயிர்வாழ முடியாத வறுமையோடும் அவதிப்பட அந்த உயிர்களுக்கு உதவுகிறோம் என்று நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவதில் என்ன நிம்மதியைப் பலர் காண்கிறார்களோ தெரியவில்லை....?
 தன்னுடைய இனத்தை நம்பி தன்னுடைய வாழ்வையும் இழந்து ஊனமாக அன்னிய நாடுகளில் அலைகிற போராளிகளுக்கு மறுவாழ்வை அல்லது மன நிம்மதியை யார் கொடுக்கப்போகிறோம்...?

விழுந்தவர்களை எழ தோழ் கொடுக்காமல் விடுதலையை யாருக்காக வெல்லப்போகிறோம்....?
(இது கதையில்லை ஒருவனின் அந்தரம் மிக்க வாழ்வின் துயர்)
03.06.2012

Friday, June 1, 2012

நீங்கேனம்மா இயக்கமானீங்க ?

அம்மோய்....எப்பம்மா உடுப்பு வாங்குவீங்க ? மூத்தவன் நச்சரித்துக் கொண்டிருந்தான்.

அம்மாட்டைக் காசில்லத்தம்பி....! கொஞ்சம் பொறய்யா அம்மாக்கு வேலைகிடைச்சதும் வாங்கித்தாறன்....!

நீங்க பொய் சொல்றீங்க....சிணுங்கினான்;.
இப்படித்தான் தீபாவழிக்கும் சொல்லிச் சமாளித்தாள். தீபாவழி போகட்டும் புதுவருசத்துக்கு என்ற வாக்குறுதியும் பொய்யாகி இன்று சின்னவனும் அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.

கத்தியழுதாலும் காயம் ஆறாத வலியாகப் பிள்ளையின் கெஞ்சல் அவளைக் கொன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நேரச்சோற்றுக்கும் அந்தரிக்கிற அவலத்தை எப்படித்தான் புரிவிப்பதோ என்ற பெரிய துயர் அவளுக்கு.

எல்லாம் உங்களாலையும் அம்மாவாலையும் தான்....! நீங்க மட்டுமேன் இயக்கமானீங்க...? நாங்க அனாதையாகவா...? நீங்க வேண்டாமெங்களுக்கு....! மாலையோடு அந்தக் குடிசையில் தொங்கிய தகப்பனின் படத்தை எடுத்து முற்றத்தில் எறிந்தாள் மகள் காவியா.

மகனைச் சமாளிப்பதில் கவனமாயிருந்தவளுக்கு ஏதோ உடைகிற சத்தம் கேட்டு முற்றத்திற்கு வந்த போது மூச்சே நின்றது போலிருந்தது.
மகள் என்னம்மா செய்றீங்க ? அப்பான்ரை படமெல்லம்மா....! எங்கட்டை மிஞ்சியிருக்கிறது இதுமட்டுமெல்ல மகள்....! அவள் அழுதபடி உடைந்த கண்ணாடித் துண்டுகளை விலக்கி தனது மாவீரனான கணவனின் படத்தைக் கையில் எடுத்தாள்.

நீங்கேனம்மா இயக்கமானீங்க ? அப்பா ஏனம்மா இயக்கமானவர் ? நீங்க ரெண்டு பேரும் இயக்கமாகாட்டிக்கி நாங்க நல்லாயிருந்திருப்பம்....! 12வயதான அந்தக் குழந்தையின் கேள்விகளுக்கும் கோபத்துக்கும் அவளால் எதையும் சொல்ல முடியாது போனது.

அம்மாவும் அப்பாமாதிரிச் செத்துப்போறன் நீங்க இருங்கோ.....அழுதழுது கணவனின் படத்தை சாமிப்படங்களோடு வைத்து மாலையையும் கொழுவிவிட்டு முற்றத்தில் வந்திருந்து அழுதாள்.

கடவுளே சாமி உனக்குக்கூட கண்ணில்லையா....? விழுந்த செல்லொண்டு என்ரை தலையிலயும் விழுந்திருக்காம ஏன் உயிரோடை வாழ வைச்சியோ.....? முள்ளிவாய்க்காலில எத்தினை உயிருகள் போச்சுது எங்களையும் அதில சாகடிக்காம ஏன் கடவுளே என்னை வாழ வைச்சா.....?
சின்னவன் ஓடிவந்து அவளோடு ஒட்டிக்கொண்டான். மூத்தவனும் மகளும் திண்ணையில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கண்களுக்குள் கூடுகட்டிய நீர்த்துளிகளை சின்னவன் துடைத்துவிட்டான். அவளின் கண்ணீரையும் கடவுளர்கள் மீதான கோபத்தையும் புரிந்து கொள்ள முடியாத 3வயதுக் குழந்தையான அவனின் கைகளே அவளை அப்போது ஆறுதல்படுத்திய பெரிய கையாகியது. அவளைப் பார்ப்பதும் அண்ணனையும் அக்காளையும் முறைப்பதுமாக அவனது சின்ன விழிகளையும் கோபம் முட்டிக்கொண்டது. அம்மாவின் கண்ணீருக்கு முழுக்காரணமும் அவர்கள் போல அவர்கள் மீதான தனது கோபத்தையும் தனது பார்வையால் தெரிவித்தான்.

000                 000                000

13வயதில் பருவமடையும் முன்னமே போராளியாகிப் போனவள். பயிற்சிக் களத்திலிருந்து பயிற்சி முடித்து சண்டைக்களம் போனது முதல் பொறுப்பாளர்கள் வரையும் சின்னவளென்ற அடைமொழியோடு நேசிக்கப்பட்டவள். அவளுக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்களை நேரே கொண்டு போய் பொறுப்பாளரிடம் கொடுத்துவிடுகிற அவளது நேர்மையை நம்பிய பொறுப்பாளர்களுக்கும் சக போராளிகளுக்கும் அவள் மீதான நம்பிக்கையையும் மதிப்பையும் உயர்த்தியது.

அப்போது அவளுக்கு 17வயது நடந்து கொண்டிருந்தது. அவளுக்கெல்லாம் காதல் வராதென்று ஆழமாகவே நம்பினார்கள். அந்த நம்பிக்கையில் அவளே முன்னுக்கு எல்லா வேலைகளுக்கும் அனுப்பப்படுவது வளமை.

அதுவரையில் அவளுக்காக எழுதப்பட்ட கடிதங்களையெல்லாம் பொறுப்பாளரிடம் கொண்டு போய்க்கொடுத்த அசட்டுப்பிள்ளையான அவளுக்கு பயிற்சியாசிரியனாயிருந்த ஒரு போராளி அவள் மீதான தனது காதலைக் கடிதமாக்கி எழுதிக் கொடுத்தான். அந்தப்பதினேழாவது வயதில் அவளுக்கு எழுதப்பட்ட அந்த ஒரு கடிதத்தை அவள் மறைத்தேவி;ட்டாள்.

உங்கடை விருப்பத்தைச் சொல்லுங்கோ பிரச்சனையில்லை நான் பொறுப்பாளரோடை கதைக்கிறன்....பச்சைமட்டையடி விழுந்தா....அப்பிடியொண்டும் நடவாது என்னை நம்புங்கோ...என்ற அவனது வாக்கில் நம்பிக்கை வைத்து கடிதத்தோடு தனது சம்மதத்தையும் தெரிவித்தாள்.

அண்ணையாக்களுக்கு பச்சைமட்டையடி விழுறேல்லயோ ? கேட்டவளுக்குச் சொன்னான். உங்கடை அக்காக்கள் போல எங்கடை அண்ணாக்கள் பொல்லாதவங்களில்லை.....அப்ப எனக்கு அடிவிழாதுதான.... இல்ல...நானிருக்கிறன்....என்றவனில் நம்பிக்கை வைத்து அவனைக் கனவுகளில் ஏற்றிக் கொண்டாள்.

அவளது விருப்பத்தை அறிந்து கொண்டவன் மேலிடத்திற்குத் தனது விருப்பையறிவித்தான். இவளது பொறுப்பாளருக்கு விடயம் அறிவிக்கப்பட்டு இவள் பொறுப்பாளர் அக்காவின் முன் அழைக்கப்பட்டாள்.
காதலோ ? ஓமக்கா...? அவர்தான் கடிதம்...சொல்லி முடிக்க முதல் வாயைப்பொத்தி விழுந்த அடியில் மீதிச் சொற்கள் வரவேயில்லை. காதலுக்கான தண்டனைகள் ஏற்கனவே அறிந்திருந்தும் அந்த நிமிடம் வரை அதன் வலியை அவள் உணரவேயில்லை.

காதலுக்காக 10 பச்சைப்பனம் மட்டைகள் முறியும் வரை பொறுப்பாளர் அக்கா அடித்த அடிக்காயம் ஆறமுதல் காதலித்த குற்றத்திற்காக களமுனைக்கு அனுப்பப்பட்டாள். அவள் களத்திற்குச் செல்லப்பின்னடிக்காமல் தானாகவே போகிறேன் எனப் போனாள். களமுனை போன 4வது நாளில் காலொன்றில் காயமடைந்து பதுங்குகுளி வாசலில் விழுந்து கிடந்தது மட்டுமே ஞாபகம். பின்னர் கண்விழித்த போது மருத்துவமனையில் இருந்தாள்.

ஒரு வெள்ளிக்கிழமை அவளுக்கு காதல் சொல்லி பச்சைமட்டையடி வாங்க வைத்தவன் வந்திருந்தான். விழுந்த பச்சைமட்டையடிதான் நினைவுக்கு வந்தது. வாங்கிய அடிகூட அவனைக்கண்ட போது வலிக்கவில்லைப் போல சிரித்தாள்.

ஐயோ திரும்பியும் 10பச்சைமட்டையடி வாங்க என்னாலை ஏலாது...இடத்தைக் காலிபண்ணுங்கோ பனம்மட்டையைக் கண்டாலே காச்சல் வரும்போலையிருக்கு....இனியப்பிடியெல்லாம் நடக்காது ஆனா ஒரு சின்ன மாற்றம்...என இழுத்தான்.

என்ன...? உங்களுக்கு அரசியல் வகுப்பெடுத்த ஆளைத் தெரியுமா ? ஓம் புகழண்ணா...ம்..அவன் உங்களைக் கனநாளா விரும்பியிருக்கிறான்.... நான் அவனுக்கு உங்களை விட்டுக்குடுக்கிறன்.... அவனைக் கலியாணம் செய்யுங்கோ....நல்ல பெடியன்....என இன்னொருவனுக்கு சான்றிதழ் வழங்கிச் சிரித்தான்.

என்ன நான் சின்னப்பிள்ளையெண்டோடனும் ஆளாளுக்கு விளையாடுறீங்களா ? உண்மையிலேயே கோபித்தாள். நான் உங்களைத்தான் விரும்பினான்....புகழண்ணாட்டை போய்ச் சொல்லுங்கோ....எனச் சினந்தாள். அவன் சொல்ல முயற்சித்த சமாதானமெல்லாவற்றையும் மறுத்து முகத்தை மூடிக்கொண்டு படுத்தாள்.

என்னடா இது....வில்லங்கத்துக்கு காதலெண்டாங்கள் பிறகு இன்னொருத்தனுக்காக விட்டுக் குடுக்கிறதெண்டு....சிலவேளை அவன் விளையாட்டாகத்தான் தன்னைக் காதலித்தானோ என நினைத்தாள். கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது.

அன்றைய பின்னேரமே புகழ் வந்திருந்தான். புகழோடு அவள் காதலித்து காதலித்ததற்காக பச்சைமட்டயைடி வாங்க காரணமாயிருந்த பயிற்சியாசிரியனும் அவளது பொறுப்பாளரும் வந்திருந்தார்கள். புகழை அவள் திருமணம் செய்வதே பொருத்தமென தீர்ப்பு இறுதி முடிவாகியது.
நான் மாட்டன் என்னாலை ஏலாது....மறுத்தாள். இறுதி முயற்சியாக புகழ் அவளோடு தனியே கதைக்க வழிவிட்டு இருவரும் ஒதுங்கினார்கள். போதகர்களின் ஓதல் போல புகழின் பேச்சு... அவள் மீதான தனது காதலை வெளிப்படுத்த அவன் எடுத்த முயற்சிகள் பற்றியெல்லாம் புகழ் கதைகளாய் சொன்னான். ஆனால் அவளது முடிவு புகழ் வேண்டாமென்றதாகவே அமைந்தது.

000       000      000

அவள் நேசித்தவன் அவளை ஒருதரம் சந்தித்த போது சொன்னான்.
புகழை நீங்க கட்டாட்டி நானும் கட்டமாட்டன்....!
அப்ப நீங்கள் முடிவெடுத்திட்டீங்களா ? ஓம்....புகழ் பாவம்....அவனும் நானும் பயிற்சியெடுத்தது இயக்கத்துக்கு வந்தது எல்லாம் ஒண்டாத்தான்....அவனுக்காக இல்லாட்டியும் எனக்காக ஓமெண்டு சொல்லுங்கோ.....கடைசி முயற்சியாக இப்படித்தான் சொல்லிவிட்டுப் போனவன் பிறகு அவளைச் சந்திக்கவில்லை.

சிலமாதங்கள் இடைவெளி முடிந்து காயம் மாறி திரும்பியும் சண்டைக்குப் போகப்போவதாக அடம்பிடித்து பொறுப்பாளரின் முன் போய் நின்றாள். அவளைச் சந்திப்பதற்கான காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு அவளது இடத்திற்கு புகழ் போய்வரத் தொடங்கினாள். களமுனைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு அரசியல் பணிக்கு அனுபப்பட்டாள்.

மெல்லெனப்பாயும் நதியாய் புகழ் கல்லாயிருந்த அவளைக் கரையச் செய்தான். ஒருவருட முடிவில் புகழுக்கும் அவளுக்கும் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அவள் நேசித்தவனும் வந்திருந்தான். எதுவும் நடக்காதமாதிரியே அவனது கதைகள் இருந்தது. அவனைக் கண்டதும் நெஞ்சுக்குள் ஒரு வலி அவளைத் தாக்கிச் சென்றது பொய்யில்லை.
எனக்குக் கலியாணம் பேச வேணும் ரெண்டு பேரும் தான்....புதிய குண்டொன்றை இருவருக்கும் போட்டுவிட்டுப் போனான் அவள் முதல் நேசிப்புக்கு உரியவன்.

000         000        000

புகழோடு வாழத்தொடங்கி 1வது குழந்தை பிறந்திருந்த நேரம் குழந்தையைப் பார்க்க அவன் போயிருந்தான். அவனே எதிர்பார்க்காத ஆச்சரியம் அவனுக்காக புகழும் அவளும் செய்திருந்தார்கள். முதற்குழந்தை ஆண் குழந்தையாகியதால் அவனது பெயரையே பிள்ளைக்கும் சூட்டியிருந்தனர்.
எனக்கு கலியாணம் பேசுகினம்...! சொன்னான். பிடிச்சா சொல்லுங்கோ கட்டிறன்....என அவனுக்காக கேட்டுவந்த பெண்போராளியின் படத்தை அவளிடம் நீட்டினான். மறுநாள் வரை அவகாசம் கொடுத்துவிட்டுப் போனான். அவள் முடிவுக்காக.

மறுநாள் பின்னேரம் போனான். என்ன பிடிச்சுதோ ? நீங்க சொன்னா கட்டிறன்....அந்தப்பிள்ளைக்கு உங்களை விரும்பமோ ? கேட்டாள். வாழ்ந்தா நானெண்டு பிள்ளை நிக்குது....எனச் சிரித்தான். எனக்கும் பிடிச்சிருக்கு கட்டுங்கோ.....

அவனது திருமணத்திற்கு இவளும் புகழும் குழந்தையும் போயிருந்தார்கள். தனது மனைவிக்கு அவளைப்பற்றி எல்லாமே சொல்லியிருந்தான். அவளே அவளைத் தெரிவு செய்தாகவும் சொல்லியிருந்தான்.

காதல் பிரிவு இன்னொருவருக்காக விட்டுக்கொடுத்தமையென அவையெல்லாம் பெரிய பிரச்சனையாக இல்லாமல் இரு குடும்பத்திற்குள்ளும் நல்ல நட்பும் வளர்ந்திருந்தது.

நாட்டுநிலமையின் மாற்றம் களமாகியபோது இரண்டு வீட்டு ஆண்களும் களத்தில் நின்றார்கள். 2008இல் அவள் காதலித்தவன் வீரச்சாவென வானொலியில் செய்தியும் ஈழநாதத்தில் அஞ்சலியும் வந்திருந்தது. இவர்கள் இருந்த இடத்திலிருந்து அஞ்சலி நிகழ்ந்த இடத்திற்குப் போக முடியாத தூரமும் அவள் 3வது குழந்தையைக் கருவில் சுமந்து கொண்டிருந்தாள்.

2009மாசிமாதம் ஒருநாள் நிகழ்ந்த எறிகணைத் தாக்குதல் அவர்கள் வாழ்ந்த தறப்பாளின் அருகருகாயும் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தது. பதுங்குகுளிக்குள் இறங்கும் அவசரத்தில் 7வது மாதக்கற்பிணியாய் இருந்த அவளை யாரோ அவசரத்தில் தள்ளிவிட பதுங்குகுளியில் விழுந்துவிட்டாள். என்ன நடந்ததோ அன்றே அவள்; குழந்தையைப் பெற்றுக்கொண்டாள்.
ஒருவகையாக அவளது குழந்தை உயிர்காக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் போய்ச் சேர்ந்தார்கள். புகழ் களத்தில் அவள் 3குழந்தைகளோடும் பதுங்குகுளியும் பட்டினியுமாக எல்லோரோடும் போய்க்கொண்டிருந்தாள். கடைசிக்குழந்தையின் உயிர் போய்விடும்போன்ற நிலமையிலும் நம்பிக்கையோடு குழந்தையை காப்பாற்றிக் கொண்டு போனாள்.

மேமாதம் 12ம் திகதி புகழ் அவள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்திருந்தான். அவனைக் கண்ட நேரம் அழுகையாலே அவனை வரவேற்றாள். வந்தவன் சரணடையும் முடிவைச் சொன்னான். கடைசியாய் கழத்திலிருந்து குப்பியையும் எறிந்துவிட்டதாகச் சொன்னான். அவரவர் தங்களது முடிவுகளைத் தேடிக்கொள்ள புகழும் அவளும் 3பிள்ளைகளோடும் மே16ம் திகதி எதிரியிடம் சரணடைந்தார்கள். அவள் போராளியென்றது மறைக்கப்பட்டு அவன் மட்டுமே போராளியென அடையாளம் காட்டப்பட்டான்.

அவளும் பிள்ளைகளும் முகாமுக்குப் போக அவன் தனியாகக் கொண்டு செல்லப்பட்டான். பிள்ளைகளோடு முகாமில் அவள் பட்ட வலிகள் சொல்ல வார்த்தைகளில்லை. ஒருநாள் உணவுக்கு வரிசையில் நின்ற போது எதிர்பாராத வகையில் அவள் காதலித்தவனின் மனைவியைக் கண்டாள். இவளைக் கண்டதும் அவள் அழுதாள். கையில் ஒரு பெண் குழந்தையோடு வரிசையில் நின்றாள். இவளும் அழுதாள். பின்னர் இருவரும் சுகநலம் விசாரித்தார்கள் எல்லோருக்கும் பொதுவான கண்ணீரும் துயரமும் இருவரிடமும் சொல்ல முடியாத துயங்கள் நிறைந்திருந்தது.

000         000          000

மீள்குடியேற்றம் என்ற போது வன்னிக்குள் போயிருக்க அவளுக்கு யாருமில்லாது போனதால் தனது ஊருக்குப் போக பதிவு செய்தாள். சட்டம் பதிவு விசாரணையென எல்லாக் கதவுகளையும் தாண்டி ஊருக்குப் போய் உடன் தாயிடம் தான் போனாள்.

எல்லாவற்றையும் இழந்து போய் வருகிற மகளை அம்மாவும் சகோதரர்களும் ஓடிவந்து அணைப்பார்கள் என்று நம்பியவளுக்கு எல்லாம் தலைகீழாக நிகழ்ந்தது. அவள் சொத்தாக கொண்டு வந்த சில உடுப்புகளையும் அள்ளியெறிந்தாள் அம்மா.

எங்க வாறா இப்ப....? எங்களை விட்டிட்டு பதிமூணு வயசில போகேக்க அம்மா அப்பா தெரியேல்ல இப்ப வாறாவாம்....தாயின் வாயில் வந்த பேச்சும் அண்ணன்களின் அண்ணிமாரின் ஆற்ற முடியாத திட்டும் அவளைத் தெருவில் நிறுத்தியது.

தன்னோடு கூடவிருந்த ஒரு போராளியின் வீட்டில் போய் தனது ஏமாற்றம் இயலாமை அழுகை எல்லாவற்றையும் கொட்டியழுதாள். சுpலநாட்கள் அந்தப் போராளியே இவளுக்கான தங்குமிடம் உணவு யாவற்றையும் கொடுத்து அடைக்கலமாதாவானாள்.

தனது காணியில் இவளுக்கொரு துண்டை எழுதியும் கொடுத்தாள். வரும் போது மிஞ்சிய மகளின் தோடும் ஒரு சங்கிலியையும் விற்று பிள்ளைகளுக்காகவும் தனக்காகவும் 30ஆயிரம் ரூபாவிற்கு ஒரு குடிசை போட்டாள். இயலாத தனது காலோடு தானே எல்லாவற்றையும் செய்து குடிசையை அமைத்தாள்.

உதவி வேண்டி அந்த மாவட்டத்திலிருந்த பல நிறுவனங்களுக்கு ஏறியிறங்கினாள். தனது பிள்ளைகளுக்குப் படிப்பையேனும் வழங்க உதவிகள் வேண்டினாள். எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக கிறிஸ்தவ திருச்சபையொன்றில் போய் தனது கவலைகளையெல்லாம் மதகுரு ஒருவரிடம் கொட்டியழுதாள்.

என்னாலை படிக்க முடியாமப்போட்டுது....என்னாலை இப்ப ஒரு தொழிலையும் செய்ய முடியாம இருக்கு என்ரை பிள்ளையளைத் தத்தெடுங்கோ பாதர்....என மண்டியிட்டு அழுதாள். அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லாத பிள்ளைகளைத் தானம்மா நாங்க பொறுப்பெடுக்கலாம் அம்மா நீங்கள் உயிரோடை இருக்க அதை நாங்க செய்யேலாதம்மா....அப்ப நான் செத்துப்போறன் பாதர் என்ரை பிள்ளையளை எடுங்கோ...என்ரை பிள்ளையளை படிப்பிச்சு விடுங்கோ பாதர்.....என அழுதவள் அந்த மதகுருவின் காலில் விழுந்து கெஞ்சினாள்.

அவ்வளவு நேர மன்றாட்டையும் விட அவள் காலில் விழுந்தது அந்த மதுகுருவையும் கரைத்து விட்டதோ என்னவோ பிள்ளைகளை மாணவர் விடுதியொன்றில் சேர்த்து விடுவதாக ஒத்துக் கொண்டார். ஆனால் பிள்ளைகளுக்கான சவர்க்காரம் , உடுப்பு , கல்வியுபகரணங்கள் யாவும் இவள் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு மூத்தவனையும் மகளையும் அந்த மதகுருவிடம் பொறுப்புக் கொடுத்தாள்.
தன் சிறிய பிள்ளைகள் இரண்டையும் பிரிய மனமில்லாத வேதனை ஒளித்துக் கொண்டு பிள்ளைகள் இரண்டும் அழஅழ மாணவர் விடுதியில் விட்டுப் போனாள். மாதம் ஒருமுறை போய்ப் பார்த்துவருவாள். பிள்ளைகள் இரண்டும் வீட்டுக்கு கொண்டு போகச் சொல்லி ஒவ்வொரு முறையும் அழுகிற கண்ணீரை தாங்க முடியாது வீட்டில் வந்து தன்னை நெருப்பால் சுட்டு அழுது ஆற்ற முடியாத துயரில் கரைவாள்.

பிள்ளைகளின் பிரிவு அவளாலும் தாங்க முடியாத கட்டம் வந்த போது மாதத்தில்  இரண்டு வார இறுதி நாட்களில் பிள்ளைகளை வீட்டுக்கு கொண்டு வந்து திங்கள் திருப்பியனுப்புவாள். வீட்டுக்கு வந்து திரும்புகிற ஒவ்வொரு முறையும் வீடு மரண வீடுபோலிருக்கும். 13வயதில் தாயை உறவுகளைப் பிரிந்த பாவமோ தன்னையும் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கக் காரணமோ எனவும் கனதரம் யோசித்திருக்கிறாள்.
பிள்ளைகளைப் பிரிதல் துயராயினும் அவர்கள் படித்து முன்னேறிவிட வேண்டுமென்ற கனவில் பிரிவின் துயரையும் வெளிக்காட்டாமல் மனசைக் கல்லாக்கினாள். மாதம் இருமுறை பிள்ளைகளை கொண்டு வந்து திருப்பியனுப்பும் போதும் அவர்களுக்குத் தேவையான சவர்க்காரம் முதற்கொண்டு யாவும் வாங்கிக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் நிறைவேற்ற பணமே முன்னுக்கு தேவை. கிடைத்த நிவாரணத்தை விற்றும் தெரிந்தவர்களிடம் கையேந்தியும் சமுர்த்தி வேலைக்குப் போய் கிடைக்கிற அரிசி, மா , சீனியை விற்றும் சமாளித்தாள்.

அப்போதுதான் வெளிநாட்டுத் தொடர்பொன்று கிடைத்தது. தொடர்பில் வந்தவன் அக்கா அக்காவென தினமும் இலங்கைநேரம் 6மணிக்கு அவளைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வான். அவளுக்கு சுயதொழிலாக கடையொன்று போட்டுத் தருவதாகவும் சயிக்கிள் எடுத்துத் தருவதாகவும் பிள்ளைகளின் கல்விக்கு உதவவுதாகவும் வாக்குறுதி கொடுத்தான். 3வாரம் கதைத்து முடிய 5ஆயிரம் ரூபா அவளது வங்கிக்கு அனுப்பி வைத்தான்.

5ஆயிரம் ரூபா அனுப்பிவிட்டு தினமும் தொலைபேசியில் பேசி நம்பிக்கையை விதைத்தான். 2மாதம் தொடர்ந்து அழைப்பதும் இதோ கடை திறப்பதற்கு ஒரு லட்சரூபா வருகிறதென கதைசொல்லிக் கொண்டிருந்தவன் தொடர்பையறுத்துக் கொண்டான். அவன் கொடுத்த தொலைபேசியிலக்கத்திற்கு அழைத்தும் பதிலில்லை. 4மாதம் முடிந்தது. தொலைபேசியும் இல்லை உதவியும் இல்லை. உதவுகிறேன் என வந்தவனும் பொழுது போக கதைத்திருக்கிறான் போல. ஒரு கட்டத்தில் சலிப்பும் வெறுப்பும் ஒன்றாகி ஏனடா வாழ்க்கையென்ற நிலமையாகிவிட்டது.

கையில் முதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாத நிலமை. நாளுக்கு நாள் ஏறிப்போகிற விலைவாசியில் சம்பலும் சோறும் கொடுக்கவே பெரிய திண்டாட்டமாக வாழ்க்கையை எப்படிக் கொண்டு போவதென்ற சொல்ல முடியாத துயரை இந்தப்பிள்ளைகளுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று தெரியவில்லை. ஒன்றாய் பிள்ளைகளையும் அழித்துத் தானும் செத்துப்போய்விட வேணும் போலவுமிருந்தது.

01.06.2012