Tuesday, February 15, 2011

அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக

பதிவுகள் விசாரணைகள் என்று அவள் ஏறாத படிகளில்லை. இன்று கடைசி முயற்சியாக இதையும் செய்து முடிப்பதென்ற முடிவோடு காத்திருக்கிறாள். அம்மா அப்பா வருவாரோ ? அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மகனை….ஓமய்யா பேசாம இருங்கோ என அடக்கினாள். ஒன்றரை வருடங்கள் போய்விட்டது அவன் எங்காவது இருப்பானென்ற நம்பிக்கை வலுத்துக் கொண்டேயிருக்கிறது.

அது அவளது முறை. நீதி மன்றத்தில் இருப்பது போலிருந்தது. அவர்கள் முன் சாட்சியம் கொடுத்தவர்களின் துயரங்களால் நிறைந்தது அந்த மண்டபம். உள்ளே சென்று வெளிவருகிற ஒவ்வொருவரும் அழுது சிவந்த கண்களுடனே வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நிச்சயம் அவனைக் கொண்டு வந்து தருவோர் போலிருந்தது அவர்களது கவனிப்பு. தேய்ந்து போன நம்பிக்கை துளிர்விட்டுச் செளித்து மதாளித்து வேர்பரப்புவது போல அவர்கள் மிகுந்த அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனது கடைசி நாட்களை அவள் சொல்லத் தொடங்கினாள்…..

°°° °°° °°°

நான் குப்பியடிக்கிறன் நீ பிள்ளையைக் கொண்டு போம்மா….எங்கடை பிள்ளை வாழ வேணும்…அவனைக் கொண்டு போ…..

அவளது இறுகப்பற்றிய கைகளிலிருந்து தனது கைகளை விலக்க முயன்றான்.

வேண்டாம் நானுங்களைச் சாகவிடமாட்டேன்…..எவ்வளவு பேர் போயிட்டினம்….நீங்க மட்டுமேன் சாக வேணும்…..?

அவளது கண்களிலிருந்து வடிந்த கண்ணீரின் கனம் நெருப்பிருந்தால் இவள் அவனுக்காக கண்ணகியாய் மாறுவாள் போலிருந்தது. தங்களது கணவர்களை இழந்த பெண்கள் பலர் அவர்களைத் தேடித்தேடி அழுத முகங்கள் இவன் முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தது.

அவளது மறு கையில் நின்ற குழந்தையைப் பார்த்தான். அவன் முகமெங்கும் ஆயிரம் காலத்துத் துயரங்கள் அப்பியிருந்தது. தந்தையர்களை இழந்த பிள்ளைகளின் முகங்களில் நிறைந்திருக்கும் ஏக்கம் தனது குழந்தையின் முகத்திலும் நிரந்தரமாய்விட்டது போலிருந்தது.

அவன் தனது கதையை முடித்துக் கொள்ள வைத்திருந்தது பழுதடைந்ததாய் சொல்லப்பட்ட ஒரு குப்பியை மட்டும் தான். அதனையும் அவளுக்காக அவனது குழந்தைக்காக கழற்றி எறிந்தான். எல்லாம் இழந்த வெறுமை எல்லாரையும் இழந்து விட்ட துயரம் இனி எதுவும் இயலாதென்ற நிலமையில் நடப்பது எதுவாயினும் ஏற்றுக் கொள்வதே விதியென்று நினைத்துக் கொண்டான்.

அவர்கள் வாழ்ந்த அவர்கள் போராடிய மண்ணைக் கடந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடியாய் மண்ணைப் பாதம் தொடுகின்ற நொடியிலும் ஆயிரம் கத்திகள் நடுவில் நடப்பது போலிருந்jது உணர்வு. இரத்தமும் சதையுமாய் போரின் எச்சம் சாவுகளால் நிறைந்து கிடந்தது. ஏன்….? எப்படி….? எதற்கு….? எதற்கும் விடை தெரியாத மர்மமாய் எல்லாம்…..

எத்தனையோ தோழர்கள் இரத்தம் சிந்திய நிலம். எத்தனையோ மக்களின் உழைப்பால் உயர்ந்த நிலம் நெருப்பெரிந்து முடிந்த சாம்பல் மேடாய்……அவனது ஞாபகங்கள் யாவும் ஒவ்வொரு நினைவுகளையும் மீள மீள இழுத்து வந்து அவனது கண்ணுக்குள் புதைத்துக் கொண்டிருந்தது.

என்னையும் என்னையுமென காயமடைந்தவர்களின் கெஞ்சுதல்கள் கடைசிச் சொட்டு உயிரைக் காக்க யாராவது வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புகளோடு குருதியில் குறையுயிரில் கிடந்த உயிர்கள் மனசை அரித்து உயிரைக் குடித்த வலியால் இதயம் துடித்தது.

°°° °°° °°°
அவர்களை நிராயுதபாணிகளாய் நிறுத்தி வைத்து ஆள்பிடி ஆரம்பித்தது. அவன் அவளைப் பார்த்தான். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவனையும் அழைத்தார்கள்.

என்னையங்கை சாகவிடாமல் இஞ்சை குடுத்திட்டுப் போறீங்களே….? நானந்த மண்ணுக்கை போயிருப்பன் என்னை வா வாழ வேணுமெண்டீங்கள்….? இனி நான் வரவேமாட்டன்….என்னைத் தேடித்தேடியழப்போறீங்களம்மா….சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் தோழைப்பிடித்து ஒரு கை தள்ளியது. ஒரு உலகத்திலிருந்து வேற்றுலகம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். அவளது அழுகையொலி மட்டும் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. அவளால் காப்பாற்ற முடியாமல் அவன் அவளுக்குத் தெரியாத இடம் கொண்டு செல்லப்பட்டுவிட்டான்.

அவன் விரும்பியது போல் அன்று செத்துப்போவென்று விட்டிருந்தால் கூட அவனுக்கு நிம்மதியான மரணத்தையாவது கொடுத்திருக்கலாமென நினைத்தாள். குற்றமிழைத்தது போல மனச்சாட்சி அவளைக் கொன்று கொண்டிருந்தது.

ஆழிப்பேரலையின் கூத்து முடிந்த நிசப்பத்தால் நிறைந்தது பொழுது. அவர்கள் முன்னால் அவள் சாட்சியம் சொல்லி முடித்துவிட்டு வெளியில் வந்தாள்.

சுனாமி அடித்து ஓய்ந்த போது கரையோரம் முழுவதும் கேட்ட அவல ஒலிகளும் உறவுகளைத் தேடுவோரின் அழுகையொலிகளும் திரும்பி வருவது போலிருந்தது. தன்னையும் இழப்பின் வலி அழுத்துவதை உணர்ந்தாள். கையில் அவளது குழந்தை மட்டும் மிஞ்சி நின்றான். காணமற்போன அவனது அப்பாவை அம்மா கொண்டு வருவாளென்ற நம்பிக்கையை அழித்துவிட்டது போல் அவனை ஒற்றைக்கையால் இழுத்துக் கொண்டு நடந்தாள்.

°°° °°° °°°

தணலாய் கொழுத்திய வெயிலில் இருந்து சற்று ஆற வீதிக்கு மறுபுறமாய் அமைந்திருந்த குளிர்பானக்கடைக்குள் போனாள். குழந்தை விரும்பிக் கேட்ட ஐஸ்கிறீமையும் தனக்காக ஒரு சோடாவையும் வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியிருந்த இருக்கையில் குழந்தையும் அவளும் இருந்தார்கள்.

மகன் சிரித்துக் கொண்டு கடவாயில் ஐஸ்கிறீமைப் பிரட்டிப் பிரட்டிச் சாப்பிட்டான். அவனது மறுபிறவி போலிருந்தது மகனின் சிரிப்பு. குழந்தையின் தலையைத் தடவிவிட்டாள். இவனைப்பற்றி அவனும் எவ்வளவு கனவுகளைத் தனக்குள்ளே புதைத்திருப்பான்….? ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தது. கற்கள் இரும்பாய் திரண்டு தொண்டைக்குளிக்குள் புகுந்து நெஞ்சுக்கூட்டைப் பிழப்பது போல வலித்தது.

மகனை சயிக்கிளின் பின்புறம் ஏற்றிக் கொண்டு சயிக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். எப்பம்மா அப்பா வருவார்…? அவன் கேட்கத் தொடங்கினான். கெதியிலை வருவரய்யா…..பிள்ளையை சமாதானப்படுத்தினாள். எங்கம்மா அப்பா இருக்கிறார்….? தெரியேல்லயடா செல்லம்….அம்மா தெரிஞ்சா போய் கூட்டி வந்திடுவனெல்லோ…..இப்படித்தான் தருணங்கள் அறியாமல் அப்பாவைத் தேடும் குழந்தையை சமாளிக்க அவளுக்கு பொறுமையே செத்துவிடும்.

°°° °°° °°°

அவன் செத்துப்போயிருப்பான்…..இனிமே வரமாட்டான்…..என்னைக் கலியாணங்கட்டினா உனக்கான எல்லாத்தையும் தருவன்…முடிவைச் சொல்லுவியா….? 6வது நபராக அவளது முடிவை எதிர்பார்த்திருக்கும் அயல் ஊரவன் அருகாய் சயிக்கிளை மிதித்துக் கொண்டு வந்தான்.

ஆரம்பத்தில் இந்த முடிவு கேட்கும் முகங்கள் மீது கோபமும் எரிச்சலும் தான் வந்தது. இப்போது அதுவும் பழகிப்போயிற்று. புலியில்லா இடத்தில் நரிகள்.... அவளை அச்சுறுத்தியது….அவஸ்தைப்படுத்தியது. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். அவளை மட்டுமே உறவாய் நம்பியிருக்கும் தனது மகனுக்காக.

அடுத்த தெருவின் திருப்பத்தில் அயல் ஊரவன் திரும்பினான். இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தான். திரும்பவும் வருவேன் என்பது போல அவனது பார்வையும் சிரிப்பும் அவளைக் கலவரப்படுத்தியது.

ஊரவங்கள் காட்டான்களெண்டு யாழ்ப்பாணியைக் கட்டி அதுவும் யாழ்ப்பாணத்துப் புலியைக் கட்டி அதான் அந்தத்திமிர்தான் இப்ப உன்னை இஞ்சை கொண்டு வந்து விட்டிருக்கு….அதுவும் எங்கடை கண்ணுக்கு முன்னை நீ இருக்க வேண்டிய விதியைத் தந்திருக்கு….. அடுத்தொருவன் ஏளனமாய் சொன்னது அதற்கடுத்துக் கேட்டது.

அவமானத்தால் கூனியது மனசு. எண்டாலும் எங்களுக்குப் பெரிய மனசு மறுவாழ்வு தரத்தயாராயிருக்கிறோம்….சொல்லியபடி இரண்டாமவன் அவளை விலத்திக் கொண்டு போனான். ஒரு நரகத்தின் வாயிலுக்குள் மாட்டுப்பட்ட நிலமையில் அவனது ஏளனம் திரும்பத்திரும்ப புது வடிவங்களாய் துரத்திக் கொண்டிருந்தது.

வீட்டுப் படலையை விலத்திக் கொண்டு மகனை இறக்கிவிட்டாள். நான்கு பக்கக் கப்பின் துணையோடு உக்கிய கூரையால் காப்பிடப்பட்ட செத்துப்போன குடிசைக்குள் போனாள். அம்மா ஒரு ஓரமாய்க் கிடந்தாள். என்ன மகள்…? ஏதேன்….? கண்ணீர் தான் முன்னுக்கு வந்து விழுந்தது. அம்மா தனது நோயின் வலியோடு மகளுக்காக அழுதாள். அம்மா ஏதேதோ சொன்னாள். அம்மாவின் கண்ணீர் எப்போதும் போல அவளுக்கானதாயிருந்தது.

வெளியில் கிடந்த சுள்ளிகளை முறித்துக் கொண்டு வந்து அடுப்பை மூட்டி கேற்றிலை அடுப்பில் ஏற்றனாள். மகன் புதிதாய் வாங்கிக்கொடுத்த சித்திரக்கொப்பியை பாயில் விரித்து வைத்துக் கீறிக்கொண்டிருந்தான். அடுப்பு புகையத் தொடங்கியது. தலைக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் ஏதோ உருண்டு திரண்டு உலைத்துக் கொண்டிருந்தது மனசு. சொற்களால் வெளிப்படுத்திவிட முடியாதளவு துயரம் அடுப்பிலிருந்து நெளிந்து பரவிப்போகும் புகைக்குள்ளால் அவளை இழுத்துக் கொண்டிருந்தது.

°°° °°° °°°

2மாதங்களின்பின்னர்……

ஒரு வெள்ளிக்கிழமை மாலை அம்மா தனது கடைசி மூச்சினை தனது மகளிடமிருந்தும் இந்த உலகிலிருந்தும் விடுவித்துக் கொண்டு போய்விட்டாள். 1990இல் அப்பாவை ஆமியின் துப்பாக்கிகள் பிரித்துக் கொண்டு போய் பிணமாய்ப் போட்டது. வீட்டின் செல்லப்பிள்ளை ஒற்றைப்பிள்ளையவள் 1990ஆனிமாதம் அம்மாவைத் தனிக்கவிட்டுக் கொள்ளையோடு காடுகளில் கடுந்தவம் புரிந்து பாரதிகண்ட புதுமையின் அவதாரமாய் நாட்டுக்குள் உலவிய பெண்களோடு அவளும் போனாள்.

19வருடப்போராட்ட வாழ்வு. அதற்குள் எத்தனையோ மாற்றங்கள்….ஒன்றாய் களப்பணி செய்த கட்டத்தில் கொள்கையால் ஒன்றுபட்ட காதலில் அவனும் அவளும் காதலர்களாகி……அவர்கள் தாயினும் மேலாய் நேசித்தவர்களின் முன்னால் நடைபெற்றது திருமணம். இருவராய் சந்தித்தவர்கள் இன்னும் ஒரு உயிரை நேசிக்க வைத்த குழந்தையின் வரவு எல்லாம் இனிமையான அனுபவங்கள்.

இனிமைகள் தொலைந்து நினைப்புகளுக்கு மாறாய் நிகழ்வுகள் முடிந்து அவளுக்காய் அவளது குழந்தைக்காய் குப்பியை எறிந்துவிட்டுக் கூட வந்தவனும் போய்…. உறவென்று கொண்டாட உயிர்வாழ்ந்த அம்மாவையும் புற்றுநோய் கொன்று அம்மாவின் வரலாறு அந்த வெள்ளி முடிந்து போனது.

எத்தனையோ அர்த்தங்கள் குறிக்கப்பட்ட அவளது துணிச்சல் துடினம் இயல்பு எல்லாவற்றையும் இழந்துவிட்டாள். அவளுக்குள் இருப்பதாய் அவள் நம்பிய புரட்சிக்காரியைக் காணவில்லை. குழந்தைகளுக்காக வாழ்கிறோம் என்கிற பெண்களின் குரல்கள் அவளுக்குள்ளும் குடிகொண்டது. மிஞ்சிய பிள்ளைக்காக அவனது எதிர்காலம் நல்லவிதமாய் அமைய வேண்டுமென்ற ஒரு அம்மாவின் இயல்பு அவளுக்குள் தானாயே வந்து சேர்ந்தது.

அம்மாவின் முதிசம் அவளுக்காகவே விட்டுச் செல்லப்பட்டுள்ள குடிசையும் வேலியில்லாத ஒன்றரைப்பரப்பு வளவும் மிஞ்சிக்கிடந்தது. இரவுகள் இப்போது நிம்மதியாயில்லை. பகல்கள் இப்போது பசுமையாய் இல்லை. பயங்கரம் மிக்கதாய் எல்லாப் பொழுதுகளும் அவள் சிங்கத்தின் குகைக்குள் அடைக்கலம் புகுந்த மான்குட்டியின் நிலமையில்……சிங்கங்கள் பல அவளைத் துரத்திக் கொண்டிருக்கிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கூடிய துணிச்சல் மிக்க ஒரு மனிசியாய் கூட நிமிர முடியாது சோர்ந்து போனாள்.

அவள் தோழில் கையிரண்டையும் இறுக்கி அப்பாவைப் பற்றிக் கேள்விகளால் குடையும் குழந்தைக்கான பதில்களைத் தேடுகிறாள். வெடியோசைகள் நின்றுபோன மண்ணிலிருந்து அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக……

05.02.2011

Friday, February 4, 2011

அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.

அம்மா அழுது கொண்டேயிருந்தாள். யுகங்களுக்கும் ஆறாத துரங்களும் வலிகளும் அம்மாவின் நெஞ்சுக்குளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

மூத்தவன் பற்றி இளையவன் பற்றி நடுவிலான் பற்றி அம்மா ஆயிரம் கதைகளைத் தனது ஞாகபச்சேமிப்பிலிருந்து மீட்டுக் கண்ணீரால் வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.

ஒண்டெண்டாலும் மிஞ்சியிருந்தா நான் எப்பன் நிம்மதியா இருந்தருப்பனெல்லோம்மா….? உழைக்கிற வயதுப்பிள்ளையளை சாகக்குடுத்திட்டு நானிப்ப தனிச்சுப் போனன் தாயே….! என்ரை சின்னப்பிள்ளையும் நானும் கடைசியானெண்டாலும் வருவனெண்டுதான் காத்திருந்தமம்மா….! என்ர குஞ்சு அவனும் வரேல்ல….! நானென்ன செய்வன் இந்தப்பிள்ளைக்கும் நஞ்சைக்குடுத்து நானும் சாவமெண்டு கூட ஒருதரம் நினைச்சனான். ஆனால் இந்தப் பிஞ்சின்ரை முகத்தைப் பாக்க அதுவும் ஏலேல்ல…..
ஒரு சமுத்திரத்தின் அலைகள் குமுறுமாப்போல அம்மா குமுறிக்கொண்டிருந்தாள். அவளது நம்பிக்கைகள் பொய்யாகி அவள் தனித்துப் போன துயரம் அவளை ஆறவிடாமல் அழ வைத்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் திருமணம் கூட அம்மாவுக்கு விருப்பமாயில்லாமல் கட்டாயமாகத்தான் நடந்தது. குடிகாரக்கணவன் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்காத சோம்பேறிக் கணவனுக்காகவும் அம்மாதான் உழைக்க வேண்டிய நிலமையில் திருமண முடிச்சு அம்மாவுக்கு இயமனின் கயிறாக முடிச்சிடப்பட்டது.

மூத்தவன் பிறந்த நேரம் ஒரு நேரப்பத்தியச்சோற்றுக்காகவும் அம்மாதான் உறவினர்களை நாடியிருந்தாள். தனது விதி இதுதானென்று தனக்குள் சமாதானமாகி 4 பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டாள். மூத்த 3பேரும் ஆண்பிள்ளைகளாகவும் கடைசிச் செல்லம் இன்று மிஞ்சிய 9வயதுப் பெண் குழந்தையாகவும் போக அம்மாவின் நம்பிக்கை பிள்ளைகள் தான். ஊரில் உள்ள வீடுகளில் வேலை செய்து கிடைக்கிற மீத நேரங்களில் எல்லாம் பலகாரம் சுட்டு விற்று பிள்ளைகளைப் படிப்பித்து குடிகாரனுக்கும் சோறு போட்டுக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகள் தன்னிலும் பெரியவர்களாய் வளர்ந்த பின்னும் பிள்ளைகளை அடிப்பது வாயில் வரும் தூசணங்களால் திட்டுவது அம்மாவின் குடிகாரக் கணவனுக்கு மாற்ற முடியாத குணங்களாகிப் போனது. அப்படித்தான் ஒருநாள் மூத்தவன் ஏ.எல் வரை படித்து பல்கலைக்கழகம் தெரிவாகியிருந்த நேரம் குடிச்சுப்போட்டு மகனை அடித்தான். இரவிரவாய் அழுத பிள்ளை சில நாட்களில் காணாமல் போய்விட்டான்.

அம்மாவின் முதல் நம்பிக்கை அவளை விட்டுப்போனது. தனது சுமைகள் நீங்கப்போகிறதென்ற கனவில் இருந்தவளின் கனவுகள் நொருங்கி அவள் கூலிக்காரியாய் தொடர்ந்தும் அலையத் தொடங்கினாள்.

சற்றுக்காலம் கழித்து வீடு திரும்பிய மகன் அம்மா அறிந்திராத பல கதைகளைச் சொன்னான். இலட்சியம் வெற்றியென்றெல்லாம் புதிதுபுதிதாய் ஒரு ஞானிபோல் அம்மா முன் வந்திருந்தான். உன்னைப்போல ஆயிரமாயிரம் அம்மாக்கள் எனக்கு இருக்கின்றார்களென்றான். என்னைப்போல் ஆயிரமாயிரம் மகன்கள் அம்மாவுக்கு இருக்கின்றனர் என்றான். இனத்தைக் காக்கும் அடையாளம் இதுவென தன்னோடு கொண்டு வந்திருந்த ஆயுதத்தைக் காட்டினான். தனது சகோதரர்களுக்கும் தனது வழியில் அவர்களும் பயணப்பட வேண்டுமென்று கதைகள் சொன்னான். ஏதோவொரு பாடலை அடிக்கடி தனக்குள் உச்சரித்துக் கொண்டேயிருந்தான். ஒரு வாரம் கழிய விடைபெற்றுக் கொண்டு போனான்.
சிலவருடங்கள் கழித்து மீண்டும் வந்தான். சீருடையில்லாமல் சாதாரண உடையோடு வந்தான். ஊரில் தான் இயக்கத்திலிருந்து விலகிவந்திருப்பாகச் சொன்னான். ஊருக்குள் பழையபடி உலவித்திரிந்தான். ஊரில் தொல்லை கொடுத்த அதிரடிப்படையினர்கள் பலர் அழிந்து போக அவன் காரணமாயிருந்தான். யாருக்கும் அவன் மீது சந்தேகம் வரவில்லை.
அவன் அம்மாவின் மகனாக அம்மாவுக்காக உழைக்கக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். தனது உழைப்பில் சேமித்து அம்மாவுக்குச் சங்கிலி வாங்கிக் கொடுத்தான் தங்கைக்கு சட்டைகள் வாங்கிக் கொடுத்தான் தம்பிகளுக்கு சயிக்கிள் வாங்கிக் கொடுத்தான். மாதம் முடிய அம்மாவிடம் தான் வேலைக்குச் சென்று வந்து சம்பளத்தைக் கொடுத்தான். அம்மாவின் கையால் சாப்பாடு சாப்பிட்டான். மாலை நேரங்களில் அம்மாவின் மடியில் கிடந்து தம்பிகளுடன் சண்டையிடுவான்.

அம்மாவுக்குள் இன்னும் மறக்க முடியாத அவனது பல்கலைக்கழகக்கல்வியை அவன் தொடர விரும்பினாள். அதை அவனிடமும் தெரிவித்தாள். இனி அம்மாவை தான் உழைத்துப் பார்க்கப்போவதாகச் சொல்லி அந்தக் கதைக்கு முற்று வைத்தான். பிள்ளை திரும்பி வந்ததில் மகிழ்ந்தாலும் அவனுக்கு காலம் முழுவதும் நன்மை கொடுக்கக்கூடிய கல்வியை அவன் தொடராமை அம்மாவுக்கு வருத்தம்தான்.

ஒரு விடுமுறை நாள். அவன் நெடுநேரம் நித்திரையில் கிடந்தான். திடீரென வீட்டுக்குள் புகுந்த அதிரடிப்படையினருடன் அவனது குடிகார அப்பாவும் வந்திருந்தார். அவன் படுத்திருந்த அறையை அவனது தந்தையே திறந்துவிட்டு அவன் தான் அது என அடையாளமும் காட்டப்பட்டான்.

நெடுநேரம் நித்திரை கொள்கிற பிள்ளைக்காகவும் மற்றைய பிள்ளைகளுக்காகவும் சமைத்துக் கொண்டிருந்த அம்மாவை அவன் கூப்பிட்டான். அம்மாவின் மகன் அம்மாவுக்கு முன்னால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டான்.

கையில் விலங்கிடப்பட்டு அவன் அவர்களால் அம்மாவின் முன்னால் அடித்து உதைக்கப்பட்டு இறுதியில் விலங்கிடப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுக்காகச் சமைக்கப்பட்ட உணவு அவனது குருதித்துளிகளால் சிவந்தது. அம்மாவின் நம்பிக்கை அவன், அம்மா முன்னே துடித்துத் துடித்து இறந்து போனான்.

கண்முன்னால் அம்மாவின் பிள்ளை கொல்லப்பட அவளது கணவன் நிறைவெறியில் கூத்தாடினான். சொந்தப்பிள்ளைக் கொலைஞர்கள் கொல்ல குடியில் மட்டும் கவனமாயிருந்தவனுடன் அன்றோடு அம்மா உறவை அறுத்துக் கொண்டு தனித்து வாழத் தொடங்கினாள்.

மூத்தவனை இழந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாது போனது. அவன் துடித்துத் துடித்து இறந்த காட்சி அம்மாவை அவனது சகோதரர்களை அங்கே வாழ விடவில்லை. மிஞ்சிய பிள்ளைகளுக்காக அம்மா வன்னிக்குக் குடிபெயர்ந்தாள். தனது பிள்ளையுடன் வாழ்ந்த பிள்ளைகளையெல்லாம் தேடித்தேடிச் சந்தித்தாள். அவன் சொன்னது போல அவர்களுக்குள் அவன் வாழ்வதாக நம்பினாள்.

அண்ணாவை அழிச்சவையை விடப்படாதம்மா….அடிக்கடி சொல்லிக்கொள்வான் இரண்டாவது மகன். அவனுக்கு நிகராக கடைசியும் சொல்லுவான். அம்மாவால் அவர்களை இழக்க முடியாது. அவர்கள் தன்னைவிட்டுப் போகக்கூடாதென்பதில் அதிகம் அக்கறை செலுத்தினாள். ஆனால் ஒருநாள் அம்மாவின் இரண்டாவதும் மூன்றாவதும் மகன்களும் போராடப்போனார்கள். அம்மாவிற்காக மிஞ்சியது மகள் மட்டும் தான்.

இரண்டாவது மகன் கடற்புலியாகி களத்தில் நின்றான். நீலவரியுடுத்தி அம்மாவைப் பார்க்க வந்தான். கடைசிமகன் பச்சைவரியுடுத்தி வந்தான். தமிழீழம் பிடிச்சு வருவமெண்டு சொல்லிக் கொண்டே போவார்கள். அம்மாவும் நம்பினாள்.

யுத்தம் அகோரமடையத் தொடங்கியது. அம்மாவின் பிள்ளைகள் அம்மாவிடம் வருவதேயில்லை. அம்மா நம்பிய சாமிகளிடம்தான் தனது பிள்ளைகளுக்காக இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.

2008இன் இறுதிப்பகுதியது. அம்மாவுக்கும் மகன்களுக்கும் இடையிலான தொடர்பாக வானொலி மட்டும்தான். அயலவர்கள் வாங்கும் ஈழநாதம் பத்திரிகையையும் விடாமல் பார்ப்பாள். ஊருக்குள் வாழ்ந்த பிள்ளைகள் வீரச்சாவாகி வீடுகளுக்கு வருகின்றதை அறிந்தால் அம்மா ஓடிப்போய் பார்த்துவிடுவாள். தனது மகன்களும் அப்படி வந்துவிடுவார்களோ என்ற பயத்தில். இரவுகளில் நிம்தியற்ற தூக்கம் எப்போது எங்கே யாரை எறிகணை எடுக்குமோ என்ற அச்சம் அத்தனைக்குள்ளும் தனது மிஞ்சிய மகளை பதுங்குகுளிக்குள்ளேயே பாதுகாத்து வந்தாள்.

ஒருநாள் பதுங்குகுளிக்குள்ளிருந்த மகள் அம்மா என அழுது கொண்டு எழும்பி வந்தாள். அம்மா அண்ணா வீரச்சாவடைஞ்சி…..அவள் தொண்டைக்குள்ளால் சொற்கள் வெளிவராமல் அந்தரித்தாள். எங்கம்மா கேட்டனீ….அம்மா மகளை உலுக்கினாள். அவள் கையிலிருந்து வானொலிப்பெட்டியைக் காட்டி அழுதாள்.

அம்மாவின் இரண்டாவது நம்பிக்கை சரிந்தது. எந்தச் செய்தியைக் கேட்கக்கூடாதென்று இருந்தாளோ அந்தச் செய்தியை அம்மா கேட்டாயிற்று. அம்மாவின் பிள்ளை வீட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. கடலில் அவன் காவியமாய் போனான்.

2009 வருட ஆரம்பத்தில் அண்ணனின் செய்தியறிந்து 3வது மகன் அம்மாவிடம் வந்தான். தனது கண்ணீரால் தனது கடைசி மகனைக் கட்டியழுதாள். அழுவதற்காகக் இனி ஈரமில்லாதவரை அவனைக் கண்ணீரால் நனைத்தாள். அவனைத் தங்களோடு வந்துவிடும்படி கெஞ்சினாள் அவனது ஒற்றைத் தங்கை. தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாய் சொன்னான். வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு வருவதாய் விடைபெற்றுக் கொண்டு அவனும் போனான்.

அம்மா நொந்து போனாள். இழப்பதற்கு எதுவும் அவளிடம் இல்லாது போனது. இருந்த இடங்களை விட்டு ஒவ்வொரு இடமாய் அம்மாவும் அம்மாவின் ஒற்றை மகளும் இடம்பெயரத் தொடங்கினர். புதுமாத்தளன் வரை போனவர்களை ஒருநாள் மீட்பர்கள் என அழைத்தவர்கள் சுற்றிக் கொண்டனர்.

அம்மா தனது மூன்றாவது மகன் புதுமாத்தளனில் காயமடைந்து இருப்பதாக யாரோ சொன்னதை நம்பி அந்த இடத்தை விட்டுப் போகமாட்டேனென அடம்பிடித்துக் குழறினாள். அம்மாவின் பிள்ளையை அவர்கள் காப்பாற்றியிருப்பதாகச் சொன்னார்கள். அந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அம்மா புதுமாத்தளனில் மனிதர்களின் தலைதெரிந்த எல்லோருக்குள்ளும் தனது மகனைத் தேடினாள்.

இறுதியில் அம்மாவும் அவளது மகளும் முகாமில் சென்று சேர்ந்தனர். தனது கடைசி நம்பிக்கை தனது கடைசிகால நம்பிக்கையாக தனது மகனைத் தேடத் தொடங்கினாள். எல்லோரிடமும் தனது மகனைப்பற்றி விசாரித்தாள் பதிவுகள் கொடுத்தாள். எதுவித பதிலும் கிட்டவில்லை.

முகாமில் உள்ளவர்கள் மனநலப் பாதிப்புகளிலிருந்து மீட்கவென நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்வுகளில் அம்மாவின் ஒற்றை மகள் பாடல்கள் பாடினாள் , நடனங்கள் ஆடினாள். எங்கே நிகழ்வுகள் நடக்கிறதோ அங்கெல்லாம் அம்மாவையும் கூட்டிக் கொண்டு போய்விடுவாள். அந்த நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்வோரிடமெல்லாம் சொல்லுவாள் எங்கடை அண்ணா இதைப்பாக்கக் காட்டுங்கோ….நாங்கள் இருக்கிறம் அண்ணாவை எங்களிட்டை வரச்சொல்லுங்கோ…என்ற கோரிக்கைகளை வைப்பாள். அவளது வேண்டுதல்களைக் கேட்டு அழுகின்ற அம்மாவுக்கு அவளே ஆறுதல் சொல்வாள்.

எங்கையும் தடுப்பில அண்ணா இருப்பான் என்னைப் பாப்பான் எங்களிட்டை வருவானம்மா…..அந்தச் சின்னவளின் நம்பிக்கை அம்மாவின் நம்பிக்கை எல்லாம் பொய்யாகும்படி ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் அம்மாவின் மகன் பற்றி எதுவித தகவலும் இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் மனிதவுரிமைகள் ஆணையகம் தொண்டர் நிறுவனங்கள் என எல்லாரிடமும் தனது மகனைத்தேடி விண்ணப்பங்கள் அனுப்புகிறாள் அம்மா. சாட்சியங்களை வழங்கிக் கொண்டிருக்கிறாள். அம்மாவின் பிள்ளை இன்னும் வரவில்லை. எங்கும் இருப்பதற்கான அடையாளங்களும் இல்லை. ஆனாலும் அம்மா காத்திருக்கிறாள்.
தனது மகன் வருவான் தன்னையும் தனது மகளையும் உழைத்துக் காப்பாற்றுவான். என்ற நம்பிக்கையை இன்னும் கைவிடவில்லை. காணாமற்போன பிள்ளைகள் வருவார்கள் என்று நம்புகிற அம்மாக்களின் வரிசையில் அம்மாவும் காத்திருக்கிறாள்.

மரணித்த தனது இரண்டு பிள்ளைகள் போல் தனது கடைசி மகன் மரணித்துப் போகவில்லையென நம்புகிற அம்மா எங்களிடமும் தனது கடைசி மகனின் விபரங்களைத் தந்து வைத்திருக்கிறாள். தனது மகன்கள் வாழ்ந்த மண்ணில் மீண்டும் குடியேறியிருக்கிற அம்மா தனது பிள்ளைகளின் கனவுகள் பற்றிக் கதைகள் சொல்கிறாள். ஆயிரமாயிரமாய் புதைக்கப்பட்ட பிள்ளைகள் வாழ்ந்த மண்ணுக்குள் மிஞ்சிய வரலாறுகளாக வாழும் அம்மா போன்ற ஆயிரக்கணக்கான உறவுகளின் துயரங்களால் நிறைந்து கிடக்கிறது நிலம்.

அம்மாவின் வேண்டுகைக்காக நாங்களும் அம்மாவின் மகனைத் தேடுகிறோம். அவன் வரமாட்டான் அல்லது அவன் இல்லையென்று சொல்லும் தைரியமில்லை. அம்மாவின் பிள்ளைகள் வரமாட்டார்கள் இப்போதல்ல இனி எப்போதுமே வரப்போவதில்லை…ஆனாலும் அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.
24.12.10

Monday, January 31, 2011

எயிட்ஸ் தமிழரை, வன்னியை , யாழ்மண்ணை அழிக்குமா….?


எங்கள் இன்றைய கனவு போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மீளவும் அவர்கள் தங்கள் வாழ்விடத்தில் வாழ ஒரு வழி. இதைத்தான் மே2009இன் பின்னர் அதிகம் சிந்திக்கின்றோம். எம்மை வந்தடைகிற செய்திகள் தொடர்புகள் யாவும் வறுமை நசுக்கும் எமது மக்களின் துயரம் நிறைந்த கதைகளையே கொண்டு வருகிறது.

ஆயினும் அண்மையில் சில பரபரப்பான செய்திகள் எம்மை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒருதரம் எரிச்சல்பட அல்லது இப்படியுமா என யோசிக்கவும் வைத்தது. போர் நடந்து முடிந்த ஊர்களில் விபச்சாரம் , பதின்மவயதினரின் பாலியல் நடத்தைப் பிறள்வு , மாணவர்கள் போதைப்போருள் பாவனை, 76பேருடன் பாலியல் உறவுகொண்ட 17வயதுப்பள்ளி மாணவியென எங்களை வந்தடைந்த செய்திகள் சற்று அதிகமாகத்தானிருந்தது.

மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் எமது ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் தொடர்புபட்டவர்களை விமர்சித்து பதின்மவயதினரைக் குற்றம் சுமத்தி கிட்டத்தட்ட ஒரு சினிமாக்கதையை திரையில் பார்த்தது போலவே வெளியிட்டிருந்தது. செய்தியின் சூடு அடங்க அவ்விடயங்களின் தொடர்ந்த தாக்கம் அது தரப்போகிற அழிவு எதிர்காலச் சந்ததியின் பாதிப்பு எதையுமே சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஊடகம் ஊடகர்கள் ஒரு இனத்தின் காவலர்கள் என்ற நிலமை போய் இனத்தின் எதிர்காலம் எப்படியும் போகட்டும் என்ற கணக்கில் பல ஊடகர்கள் பணத்துக்காக எதையும் எப்படியும் எழுதுவோம் என்ற அளவில் எழுதுவதையே அவதானிக்க முடிகிறது.

மேற்படி விடயங்களில் ஒன்றான எயிட்ஸ் உயிர்கொல்லி நோய்பற்றித் தேடியதில் பல திடுக்கிடும் உண்மைகளை அறிய முடிந்தது. இந்நோய் சார்ந்து சிந்திக்கின்ற, எம்மினம் இந்நோயால் அழிந்து போகப்போகிற அபாயம் பற்றிய பயங்கரத்தை , நாங்கள் சிந்திக்க மறந்த உண்மையை , சில சமூக அக்கறை மிக்க மருத்துவர்களை அணுகிய போது அறிய முடிந்தது.
போர் முடிவின் பின்னர் எம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரமாக எயிட்ஸ் தொற்று எங்கள் தாயகத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கும் உண்மையை பல தொடர்பாடல்கள் ஊடாக உணர முடிந்தது. இந்நோயிலிருந்து எம்மினத்தைக் காக்க என்ன செய்யலாம் என்ற எண்ணமே கடந்த சில வாரங்களாக தலையைக்குடையும் விடயமாக உள்ளது.

பயங்கரம் மிக்க நோய் எமது சந்ததியை நிரந்தர அழிவுக்கு இட்டுச்செல்லவுள்ள உண்மையை மக்கள் பிரதிநிதிகளான சில அரசியல்வாதிகள் வரையும் விளக்கப்பட்டும் எவரும் அக்கறையெடுக்கவில்லை. உலகெங்கும் உள்ள நோய்தானே இதில் என்ன பயம் என்கிற அசமந்தமான பதில்களைத்தான் திரும்பப்பெற முடிந்தது.

இளம் பெண்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அதிரடியாக வெள்ளைவேட்டி அரசியல்வாதிகள் கண்டுபிடித்தனர் என்றெல்லாம் செய்தியெழுதும் செயலாளர்களும் ஊடகங்களும் பல வெள்ளைவேட்டிகளும் விபரச்சாரத்தை ஊக்குவிக்கின்ற முகவர்களாக உள்ள உண்மையை ஏன் எழுத மறந்தன ? (இப்ப நீ மட்டுமென்ன அப்பிடியானவர்களை இனங்காட்டுகிறாயா இல்லையே என்றுதான் கேட்கப்படும்)

மக்களுடன் உறவாடும் பல வெள்ளைவேட்டி அரசியலாளர்கள் கூட விதவைகளை நாடுவதும் சலுகைகைளைக் காட்டி அவர்களை தம்மோடு உறவுகொள்ள நிர்ப்பந்திப்பது இம்சிப்பது சத்தமில்லாமல் வன்னிக்குள்ளும் யாழ்மண்ணுக்குள்ளும் நடப்பது வெளிவராத உண்மைகள். சாதாரண கிராமசேவகர் முதல் அரசியல்வாதிகள் வரை நொந்துபோன பெண்களையும் சிறுமிகளையும் அவர்கள் அறியாமல் பாலியல் தொழிலாளர்களாக்கியுள்ளார்கள்.

இப்போதைய யாழ், வன்னிப் பகுதியில் நிலவரம்:-

தனது சொந்தக்காணியை திரும்பப்பெற , காணாமல் போன கணவனைத்தேட , வறுமையைத் தாங்க முடியாத நிலமையில் வாழ்வாதார உதவியைத் தேட , குடும்பத்தில் ஆண்துணையை இழந்த பாரம் அழுத்தும் சகல சமூக அக்கிரமங்களை எதிர்கொள்ள , அல்லது குறைந்த பட்ச நிவாரணச் சலுகையைப்பெறுவதற்கே அரசியல்வாதியையும் அரச உத்தியோகத்திலுள்ள ஆண்களையும் நாட வேண்டியுள்ள நிலமையில் பெண்கள் சிறுவர்கள் இளைஞர்களின் நிலமை இருக்கிறது.

நல்லவர்களென சமூகம் உலவ அனுமதித்துள்ள வெள்ளைவேட்டிகளை அல்லது காற்சட்டைகளை நம்பி சொல்ல முடியாதளவு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பிள்ளைகள் பெண்கள் இன்னும் தமிழ் கலாசாரப்பற்றைக் கடந்து வெளியில் வர முடியாதுள்ளார்கள். ஆனால் எயிட்ஸ் எனும் கொல்லி இத்தகைய பலரை துணிச்சலுடன் தின்று கொண்டிருக்கிறது.

பரபரப்பாகப் பேசப்பட்ட 17வயது மாணவி 76பேருடன் உடலுறவு கொண்டாள் என எழுதிய ஊடகங்கள் அவளை முதலில் உடலுறவில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியவன் ஒரு ஆசிரியன் என்ற உண்மையை ஏன் எழுத மறந்தது ? கடவுளுக்கு அடுத்ததாய் நேசிக்கப்படுகிற ஆசிரிய சமூகம் ஏன் இத்தகையவர்களைக் கவனிக்க மறந்தது ? தன்னால் பாலியல் உறவில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியை மீதி 75ஆண்களுக்கும் முகவராக இருந்து பதின்மவயதுச் சிறுமியை நிரந்தர பழியாக்கிய ஆசிரியனை யார் தண்டிப்பார்கள் ?

தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்கள் ,நெற்கபேகளில் காலம் கடத்தும் இளையோரிடம் போதைப்பொருள் பாவனை மலிந்துள்ளதை அதனை விநியோகிப்பவர்கள் யாரென அறிந்தும் பேசாமல் இருக்கிற ஆசிரிய சமூகத்தை யார் தட்டிக்கேட்பார்கள் ?
இந்த மாணவர்களை நாசம் செய்கிற முகவர்களில் நாம் நம்புகிற அரசியல் தலைகளும் உண்டென்ற உண்மையை எங்குபோய் உரைத்தாலும் யாரும் நம்பப்போவதில்லை. பல விடயங்களில் இது பட்டறிந்த உண்மை.

போலிவெள்ளை வேட்டிகளை அம்பலப்படுத்துவதில் கவனத்தைச் செலுத்தி சத்தியசோதனையில் இறங்குகிற முட்டாள்தனத்தை விடவும் , எம்மினத்தை அழிக்க உள்நுளைக்கப்பட்ட எயிட்சின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என முன் வந்துள்ள அக்கறைமிக்கவர்களுடன் கைகோர்த்துக் கொள்வதே இன்றைய அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிற நேரம், இம்முயற்சியில் இறங்கியுள்ள மருத்துவர் குழுவினருடன் இணைந்து எயிட்ஸ் கொல்லிபற்றி கல்வியறிவு ஊடகஅறிதல் குறைந்த இடங்களுக்குள்ளும் கொண்டு செல்ல என்னையும் இணைத்துக் கொள்கிறேன். இம்முயற்சியில் அனைவரையும் வரவேற்றுக் கொள்கிறோம் வாருங்கள்.

தமிழ் மருத்துவசமூகமே உங்களிடமும் ஒரு வேண்டுகோள் :-
ஒரு நோயாளியை கடவுளின் மறுபிறப்பாக காக்கும் வல்லமை மிக்கவர்கள் நீங்கள். காசுக்காக உயிர்களை விலையெடுக்கும் பலியெடுப்பை விட்டு எங்கள் இனத்தைக் காக்க முன்வாருங்கள்.

எயிட்சால் பாதிக்கப்பட்ட 17வயதுச் சிறுமியை பலருக்கு முன்னால் அவமானப்படுத்தி அந்த நோயாளிப் பெண்ணை மனரீதியாகவும் பாதிக்க வைத்த மருத்துவர் போல் நோயாளிகளை நிரந்தரமாய் மனநலப்பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள். அப் 17வயதுச்சிறுமியை ‘எயிட்ஸ் நோய் வந்த பெண் நீயா‘ என சம்பந்தப்பட்ட மருத்துவர் அழைத்து அவளை அவமரியாதைப்படுத்தி வார்த்தைகளால் வதைத்த சம்பவத்தை நேரில் கண்டு வந்து சொன்னவளின் பெயரை இங்கு தவிர்க்கிறேன். அன்றைய தினம் அந்த மருத்துவமனையில் அச்சம்பவத்தை கேட்ட பார்த்த பலர் தம்மை இனங்காட்டி தலையை இழக்க விரும்பவில்லை.

ஒருத்திக்கு எயிட்ஸ் அவளோடு இது முடிந்து போகப்போவதில்லை இன்னும் எத்தனையோ பேரை இந்நோய் கொல்லப்போகிறது. இரண்டாம் பெருங்குடித் தமிழினம் இலங்கையில் 3ம்குடி நிலமைக்கு வரப்போகிற அபாயத்தை கட்டுப்படுத்த அல்லது காப்பாற்ற வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு மருத்தவருக்கும் உள்ளது. உங்களை சாமிகளாக நம்பியே மனிதர்கள் உங்களிடம் வருகிறார்கள். அவர்களைக் காக்கும் கடவுள்கள் நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா ?

தமிழர்களைக் குறிவைத்துள்ள எயிட்ஸ் இன்னும் சில வருடங்களில் சிங்களவர்களையும் அழிக்கப்போகிறது. யுத்தம் முடிந்து முகாம்களிலும் ஊர்களிலும் நடமாடும் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் எயிட்சை வாங்கிக் காவத்தொடங்கிவிட்டார்கள். அவர்களாலும் எமது அறியாமையினாலும் லட்சக்கணக்கில் அழிந்து ஒரு சந்ததியின் வெற்றிடம் நிறைக்கப்படாத எங்கள் இனம் எயிட்சால் அழிந்து போக வேண்டுமா ?

இனி என்ன செய்யலாம்:-
அதிகம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளும் நிறைந்து கிடக்கிறது. நாங்கள் ஒவ்வொருவரும் நமது ஊர்களுக்கு ஊரில் உள்ள கல்விமான்களுக்கு மாணவர்களுக்கு பெண்களுக்கு எயிட்ஸ் உயிர்கொல்லி பற்றி தெரிவிப்போம். அது அன்றாட தொலைபேசி உரையாடல் ஊடாக அல்லது பேஸ்புக் போன்ற சமூகத்தளங்கள் ஊடாக , கிடைக்கிற சகல வழிகளாலும் தெரிவிப்போம்.

எப்போதாவது ஒரு கருத்தரங்கு அல்லது எயிட்ஸ் தினத்தில் அதுபற்றி நினைக்காமல் ஒவ்வொரு நாளும் எங்கள் இனத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்போம். யுத்தத்தால் அழிந்த சந்ததியின் மிச்சம் எயிட்சால் அழிந்து போகப்போகிற அபாயத்தை அறிவிப்போம். அழிவு தமிழரை இப்போது எயிட்ஸ் வடிவில் கொன்று போடும் உண்மையை உணர வைப்போம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாங்கள் அல்லது எங்கள் பிள்ளைகள் தாயகத்துக்குத் திரும்பி அந்த மண்ணை ஆழப்போகிறவர்கள் அல்ல. அந்த மண்ணில் வாழ்கின்றவர்களே அம்மண்ணின் அனைத்தையும் தாங்கி ஆழப்போகிறவர்கள். அவர்களது சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எங்களுக்கானது.

தனது பிள்ளைகளுக்காக விபச்சாரியான அம்மாக்களை , தனது வாழ்வுக்கான பாதுகாப்பாக விபச்சாரியாக்கப்பட்ட தங்கைகளை , தனது உயிரைக் காத்துக் கொள்ள தடுப்பரண்களில் ஓரினச்சேர்க்கையில் சகிப்போடு சாகும் தம்பிகளை , பதின்ம வயதுக் குணங்களுக்குரிய மிடுக்கோடு தனது எதிர்காலம் அழிக்கப்படுவதை உணராத எங்கள் இளையோரை எயிட்சிலிருந்து காப்பாற்றுவோம்.

பிற்குறிப்பு :- எயிட்ஸ் பற்றி தமிழ் யாழ் வன்னி மருத்துவ சமூகத்திடமிருந்து ஏதாவது குறிப்புகள் செய்திகள் உள்ளனவா என கூகிழில் தேடியதில் கிடைத்தது கீழ் வரும் இணைப்பு. http://sivaajihealthwings.blogspot.com/ பல விடயங்கள் எயிட்ஸ் பற்றி சமகாலத்தில் சிந்திக்கின்ற ஒரு மருத்துவரின் எழுத்துக்கள் மேற்படி இணைப்பில் உள்ளதை அறிய முடிந்தது. இன்னும் மனிதம் சாகவில்லை என்பதற்கு அடையாளமாக இத்தகைய மருத்துவர்களும் உள்ளார்கள் என்பதை இந்தத்தளம் சொல்கிறது. சென்று பாருங்கள். எயிட்ஸ் கொல்லியை இப்போதே உணர்விப்போம்

28.01.2011

Thursday, January 20, 2011

துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…?

புனிதம் என்ற சொல்லுக்கு
அர்த்தம் தந்தவன் நீ.
அடர்வனப் புதர்களோடும்
ஆயுதங்களோடும்
ஆறாத்தவம் செய்த அற்புதம் நீ.

பெயர்கள் யாருக்கோ பதியப்பட நீ
பெயரின்றிப் புகழின்றிக்
கடமையை மட்டும் கவனித்த
களமாண்ட கடவுள் நீ.

ஆயிரங்களாய் புதிய புதிய அவதாரங்களைச்
சிருஸ்டித்த சிற்பி நீ.
ஆயுதங்கள் மெளனித்து அனைத்தும்
ஒரு கனவின் கணங்கள் போல
காய்ந்து போனது களவாசம்.
நீ இன்னும் கனவுகளுக்காகக்
கரைந்து கொண்டிருக்கிறாய்.

உன்னைத் தேடும் முகங்களுக்குள் நீ
மூழ்கடிக்கப்படுகிறாய்.
உனது மனிதம் மிக்க இதயத்தை
அவர்கள் மிருகத்தனமாய் மிதிப்பதைக் கூடப்
புரிந்து கொள்ளாத ஒரு குழந்தையின்
இதயம் உனக்குப் படைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் உன்னை விட்டொதுங்க முடியாது
உன்னையே சுற்ற வைக்கிறது.
சண்டைக்கோழியாய் நின்றுன்னைக் காக்க
தாய்க்கோழியாய் தவமியற்றச் செய்கிறது.
தர்மமுரைக்கச் சொல்கிறது.
இதையும் தர்க்கித்து உடைத்தெறியத்
தரகர்கள் பலவாய்…..!

உனக்கு ஒரு முகமும்
எனக்கு மறு முகமும் மாற்றி
உன்னை முகமிழக்கச் செய்கின்ற
துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…….?

புன்னகைத்து உன்னைப் பகைக்காமல்
முதுகில் குற்றும் முகங்களே
உன்னைச் சுற்றி நிற்கின்ற
உண்மைகளைச் சொல்ல எழுகிற சொற்களைக் கூட
விழுங்கிக் கொள்கிறேன்….
என்னையும் எதிரியாக்கி உன்னை
அன்னியப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில்
எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வெள்ளையென்று இன்னும் நம்பும் உன்
கள்ளமற்ற குணத்தை என்ன செய்ய….?
நீ நம்புகிற எதுவும் எவரும்
உன்னை நம்பவில்லையென்கிற உண்மையை
எப்படியுனக்குப் புரிவிக்க….?

எங்கோ உதிர்கின்ற தளிர்களுக்காய்
இன்னும் இர(ய)ங்குகின்ற ஈரநிலமே
இயங்குவிசையே
பூச்சில்லை உன்னை மறைக்க
புகழ் இல்லையுன்னைப் புதுப்பிக்க
இகழ்வோரே உன்னைச் சுற்றியோர்
இதையாவது புரிந்து கொள்.

20.01.2011 (காலை 10.10) இலட்சியங்களுக்காக 26 வருடம் வனங்களில் வாசம் செய்த ஒரு மூத்த முதுநிலைப் போராளிக்காக இது)

Sunday, January 16, 2011

வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான உதவிகள் தாருங்கள்

www.nesakkaram.org
இயற்கையின் சீற்றத்தால் தற்போது இலங்கையின் கிழக்குமாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தப்பகுதிகளில் வாழும் மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வேண்டுகிறோம்.

உறவுகளே உங்களால் இயன்ற சிறுதுளியும் தண்ணீரில் அள்ளுண்டு அவலப்படும் மக்களுக்கான பேருதவியே.

உதவி செய்ய விரும்பும் உறவுகள் உதவ வேண்டிய விபரங்கள்.

தொடர்புகளுக்கு

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
Sri France – 0033 611149470

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

பேபால் ஊடாக உதவ விரும்புவோர் – nesakkaram@gmail.com

வங்கியூடாக உதவ விரும்புவோர் –
NESAKKARAM e.V
Account Number : 0404446706,
Bank code 60010070,
Postbank, Stuttgart, Germany.
IBAN : DE31 6001 0070 0404 4467 06.
SWIFT CODE : PBNKDEFF.

நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது.


அன்பான உறவுகளே

06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம்.

ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர்.

நமது இடைநிறுத்தம் பயனாளிகள் பலரைச் சங்கடப்படுத்தியது. எனினும் எமது நடைமுறைச் சிக்கல்கள் நாம் எதிர்கொள்ளும் அரசியல் தலையீடுகளை விளங்கப்படுத்தியதன் பின்னர் மெனளமானாலும் அது அவர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாயிருந்ததை உணர்ந்தோம்.

தொடர் மனப்போராட்டம் எம்மை நசுக்கும் சவால்களைத் தாண்டி இயங்குவதில் உள்ள தடைகள் யாவற்றையும் விட்டு ஒதுங்குவதே சரியென ஒதுங்கிக் கொண்டோம்.

ஆனால் நேசக்கரத்தினை நிறுத்த முடிவெடுத்தபின்னர் இயற்கையின் சீற்றம் கிழக்கு மாகாணத்தினை மிக மோசமாக பாதித்துள்ளது. நேசக்கரம் ஊடாக சுயதொழில் உதவிகளிற்கான பயன்களை பெற்று மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் சிறிது சிறிதாய் உழைத்து முன்னேறியவர்களின் சிறு தொழிற்கூடங்கள் சிறு பண்ணைகள் என்பனவும் தற்போதைய கடும் வெள்ளத்தில் அள்ளுண்டு போயும் அழிந்து போயும் உள்ள நிலையில் "ஜயோ கடவுளிற்கே நாங்கள் நல்லாய் வாழ்வது பிடிக்கவில்லையா" என அழுகைக்குரல்களாய் தமக்கான உதவிகளையும் வேண்டி நிற்கும் தொடர் தொலைபேசியழைப்புக்கள் அவர்களது அவசர வேண்டுதல்கலை ஒதுக்கி நம்மால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

அதே நேரம் புலம்பெயர் உறவுகளும் தங்களது ஆதரவினையும் உதவிகளையும் தொடர்ந்து தருவோம் எத்தனை பெரிய பிரச்சனைகள் வந்தாலும் நேசக்கரத்திற்கு தங்கள் ஆதரவுக்கரம் நிச்சயம் இருக்கும் தங்கள் உதவிகளைப் பாதிக்கப்பட்டவர்களிடம் கொண்டு சென்று சேருங்கள் என தொடரும் நம்பிக்கை வார்த்தைகளும் எம்மை எத்தனை அரசியல் சிக்கல்கள் வந்தாலும் அதனையும் தாண்டி எமது மக்களிற்கான சேவையை தொடரும் மனஉறுதியை தந்துள்ளது.

எனவே இயற்கை கொடுத்திருக்கும் அழிவால் தண்ணீரில் மிதக்கும் எமது உறவுகளுக்கு முன்னாலும் உதவ உதவிக்கரம் நீட்டும் எமது உறவுகளிற்கு முன்னாலும் நாம் மீண்டும் தோற்றுப்போனோம். அவர்களுக்காக மீண்டும் எங்கள் உதவிகளை கொண்டு சேர்க்க எமது செயற்பாட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு எம்மால் இயன்ற வெள்ள நிவாரணத்தை எமது மக்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.

வெள்ள அனர்த்தத்தில் தத்தளிக்கும் ஒங்கள் உறவுகளை மீட்டெடுக்க எங்கள் முயற்சிக்கு ஆதரவும் பலமும் தந்த புலம்பெயர் உறவுகளே உங்கள் உதவிகளை அவசரமாக வேண்டுகிறோம். விரைந்து உதவிகளை வேண்டுகிறோம்.

நன்றிகள்

- நேசக்கரம் செயற்பாட்டாளர்கள் -

Tuesday, January 11, 2011

வெள்ளம் அள்ளுகிறது கிழக்குமாகாணத்தை கண்களையும் கையினையும் இழந்த ஒருவனின் குரல்.

காலம் 09.01.2011 அதிகாலை 3.40மணி.

அக்கா அவசரமாக் கதைக்க வேணும் ஒருக்கா எடுங்கக்கா….! சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான். அக்கா செய்தியள் அறிஞ்சிருப்பியள் தானே…..! எங்கடை ஊரே தண்ணியில மூழ்கீட்டுது…வளவெல்லாம் தண்ணிதான் நிண்டது…வீட்டுக்கை வராதெண்டுதான் நம்பினமக்கா….ராத்திரி நாங்கள் சுத்தி எழுப்பின மண்சுவர் தண்ணீல கரைஞ்சு தகரங்கள் தடியள் எங்களுக்கு மேலை விழுந்து ஒண்டுமில்லையக்கா….. குழந்தைக்குப் பால்மாகூட இல்லை…..
இடுப்பளவு தண்ணீக்கால வெளிய வந்து இப்ப ஊர்ப்பள்ளிக் கூடத்தில வந்திருக்கிறம்….. ஏதாவது உதவிசெய்வியளோண்டு கேப்பமெண்டுதான் எடுத்தனான்….. எங்களோடை 300பேர் இருக்கினம்….குழந்தையளின்டை நிலமை சரியான மோசமாக் கிடக்குது. வெளிக்கிடேக்க இந்த ரெலிபோனைத்தான் எடுத்துக் கொண்டு வந்தனாங்கள். போட உடுப்புக்கூடக் கொண்டு வரேல்லயக்கா….

நேசக்கரத்தால பயனடைஞ்ச குடும்பங்கள் கனபேர் இதில இருக்கினமக்கா அவையளுக்காகவேனும் ஏதாவது செய்யுங்கோக்கா……சண்டையிலயும் நாங்கள் தான் துயரப்பட்டம் இப்ப வெள்ளமும் எங்களைத்தான் அழிக்குது…..நாங்கள் சாவுமில்லாமல் வாழ்வுமில்லாமல் இருக்கிறமக்கா……

எங்களை ஏனக்கா தண்டிக்கிறீங்கள்….? தயவு செய்து திரும்பி இயங்குங்கோக்கா…..அரசியல் செய்யிற எங்கடை அரசியல் கள்ளன்களுக்கு எங்கடை அவலங்கள் விளங்காதக்கா…..அவங்களெல்லாம் எங்கடை கண்ணீரை மாடிவீடுகளிலயிருந்து ரீவியிலயும் கணினியிலயும் பாத்துக் கொண்டிருக்கிறாங்கள்….. எங்கடை குழந்தையள் சாகக்கிடக்குதுகள்….உங்கடை மற்றாக்களோடை கதையுங்கோ எங்கடை நிலமையைச் சொல்லுங்கோ…..எங்களுக்கு உதவச் சொல்லுங்கோக்கா……

அவன் கண்ணிரண்டையும் ஒற்றைக்கையையும் 13வயதில் நாட்டுக்காகக் கொடுத்து கடைசிக்கள முடிவுவரை வன்னிக்குள் வாழ்ந்து 20வருடம் கழித்து தான் பிறந்த மட்டக்களப்புக்குச் சென்று ஓராண்டாகிறது. அவனது துணைவிதான் அவனுக்கு எல்லாம். குடிதண்ணீர் எடுக்கவும் குளிக்கவும் தினமும் 4கிலோமீற்றர் தூரம் சென்றுதான் வருவார்கள். கண்ணில்லாத அவனையும் குழந்தையையும் கையிரண்டிலும் பிடித்துக் கொண்டு அவனது அவள்தான் எல்லாவற்றையும் கவனித்தாள்.
அவர்களுக்கான நேசக்கரம் நீட்டிய உறவுகளால் மீளவும் உயிர்த்ததாய் நம்பிய குடும்பம் செய்த சுயதொழில் விவசாயம் நவம்பர் மாத மழையில் அழிந்து போனது. வளர்த்த கோழிகள் டிசம்பர் மாதம் செத்துப்போக வீதிகளில் தேங்காய்கள் விற்றுக் கொண்டிருந்தவனோடு வீதிவீதியாய் அலைந்தவள். உதவிய புலத்து உறவுகளுக்குத் தயக்கத்தோடு தங்கள் நிலமையைச் சொல்லி சிறு கொடுப்பனவினைப் பெற்றார்கள். ஆனால் இன்று கிடைத்ததும் இல்லாமல் மீண்டும் அகதியாகிப் போய் ஓர் பாடசாலையில் ஒதுங்கியிருக்கிற பலநூறுக்குள் இவர்களும்…..

அக்கா யோசியுங்கோ….சிலவேளை இந்தத்தண்ணி பெருத்து நாங்க செத்துப்போறமோ தெரியாதக்கா…. அடுத்தொருத்தி புலம்பினாள். அவள் கணவன் 2007 மாவீராகிவிட்டான். 3 குழந்தைகளுடன் ஒரு சிறுகடையை ஆரம்பித்திருந்தவள். அதுவும் மழையடித்து மண்ணோடு மண்ணாய் கரைந்து போய்விட்டதாம்.
அக்கா என்ரை கொட்டிலெல்லாம் வெள்ளத்தில போயிச்சு….நீங்கள் உதவினதெல்லாத்தையும் வெள்ளம் கொண்டு போட்டுதக்கா சொல்லியழுதாள் 32வயதான அவள்.சில நல்லிதயங்களின் ஆதரவில் அவள் ஆட்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து உழைக்க வாங்கிக்கொடுத்த பொருட்கள் யாவும் அவளது குடிசையோடு அடிபட்டுப்போயிற்றாம். அவளுக்கும் 3பெண் குழந்தைகள் முள்ளிவாய்க்காலில் அவளது கணவனும் மாவீரர்.
5குடும்பங்களின் துயரக்கதையள் அடுத்தடுத்து எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கினாலும் ஒதுங்க முடியாது துரத்துகிறது துயரங்கள். எம்மை முடக்கியவனுக்கும் தடைவிழுத்திய அவனது தொண்டர்களுக்கும் இது 3ம் சாமமாயிருக்கும். அவர்கள் மூக்குமுட்ட எல்லாவகைகளையும் தின்றுவிட்டுச் சுகமாய் அடுத்த தேர்தல் கனவில் மிதப்பார்கள்.

காலம் 09.01.2011 காலை6.12மணி. அக்கா என்ன முடிவு…?
காலம் 09.01.2011 காலை 6.19மணி.
காலம் 09.01.2011 காலை 15.27 மணி வரை 15தடவைகள் ஒரே குரல் ஒரே விடயம்.

காலம் 10.01.2011 காலை 6.05மணி. கடைசியாக வந்த அழைப்பு. அக்கா ரெலிபோனில சாச் இல்லை. எலெக்றிக் கம்பங்களெல்லாம் இங்காலை அறுந்து விழுகுது. இனிக்கதைக்கிறது கஸ்ரமக்கா. திரும்பியும் சொல்லறமக்கா உங்கடை முடிவுகளை மாத்துங்கோ நாங்க தண்ணீல சாகப்போறம்…..எங்கடை குழந்தையளையும் எங்களையும் தண்ணி இழுத்துக் கொண்டு போப்போகுது. நான் போட்டுத்திரிஞ்ச ஒரு செருப்பும் தண்ணீல போட்டுது…..அவனது தொடர்பு அறுபடுகிறது.

காலம் 11.01.2011 மாலை 15.30 முதல் 11.01.2011 காலை 8.52 மணிவரையும் இரவிரவாகப் பலதரம் அவனை அழைக்க முயற்சித்தாயிற்று தொலைபேசியழைப்பு தற்போது இயலாதென எயாரெல் குரல் சொல்கிறது. அவனோடிருந்த 5குடும்பத் தொலைபேசிகளும் ஒரேமாதிரித்தான் சொல்கிறது.

எழுதப்பட்ட காலம் 11.01.2011 காலை 08.55.