Friday, July 2, 2021

செல்வச்சந்திரன் மரணமும் நினைவுகளும்

 https://youtu.be/2oeotNpiNwY



வணக்கம் சாந்தி, இன்று காலை சிறையில் இருந்து மீண்ட 16பேர் பற்றியும் இன்னும் விடுதலைக்கான நாளை எதிர்பார்த்திருக்கும் எல்லோர் பற்றியும் பேசினோம். நீண்ட நாட்களின் பின் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எங்கட செல்வச்சந்திரன்  இறந்துவிட்டான்.

 அவன் இன்று மதியம் குளிக்க கிணத்தடிக்கு போன நேரம் மயங்கி விழுந்து இறந்து போனான்.

அவனுக்கு ஆதரவு தேவைப்பட்ட காலம் நீங்கள் செய்த மருத்துவ உதவிகள் ஆதரவு பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். 

நம் ஒவ்வொருவரின் வாழ்வும் இப்படித்தான் முடியப் போகிறது. நாங்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளின் தாக்கம் அதனால் எம் உடல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எங்களை இப்படித்தான் கொல்லப் போகிறது. 

சிறையில் நடந்த சித்திரவதைகள் பற்றி என்னால் விளங்கப்படுத்த முடியாது. நாளை இதுபோலவே நானும் இறந்து போகலாம். 

இரவு 12.25 வீட்டுக்குள் போனதும் தொலைபேசியில் வந்திருந்த 

குரல் வழியான குறுஞ்செய்தியில் செல்வச்சந்திரனின்  மரணச் செய்தியை சிறையில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு விடுதலையான நண்பர் ஒருவர் குரல் பதிவிட்டிருந்தார். 

செல்வச்சந்திரன்...,

2011ம் ஆண்டு தைமாதம் எனக்கு அறிமுகமானான். 

செல்வச்சந்திரன்...., 

அக்கா அக்கா என அவன் சொன்ன கதைகள் அவன் சிரிப்பு..., ஞாபகங்களில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. 



தான் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். எனினும் தன் மரணம் பற்றிப் பேசியது இல்லை. வாழ்வேன் எனும் நம்பிக்கை தான் அவனோடு பேசிய பொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன். 

கல்வி கற்க வேண்டிய காலத்தில் அவன் பாதை மாறியது நீண்ட இலட்சிய ஓட்டத்தில் அவனும் ஒருவனாகினான். காலக்கடனைத் தீர்க்க செல்வச்சந்திரன் தன்னை ஒப்படைத்தான். 

காலநதி அவனைச் சிறையில் அடைத்து அவன் உயிர்நதியை இடையறுத்து நோயாளியாக்கியது. ஆனால் ஒருநாள் சிறையிலிருந்து விடுதலை பெறுவேன் என்ற அவனது நம்பிக்கை நிறைவேறி ஒன்றரை வருடத்தில் இறந்துவிட்டான். 

25.06.21 அன்று மதியம் குளிக்க கிணத்தடிக்குப் போன செல்வச்சந்திரன் மயங்கி விழுந்தான். மருத்துவம் கிடைக்க முன்னே அவன் உயிர் பிரிந்துவிட்டது. 


செல்வச்சந்திரனுக்கு என்ன நடந்தது? 

2வது தடவையாக மாரடைப்பு வந்து இறந்து போனான். சொல்கிறது மருத்துவ அறிக்கை. 

வாழும் கனவுகளோடு வாழத்தொடங்கியவன் இவ்வுலகிலிருந்தும் எங்களிடமிருந்தும் பிரிந்து விட்டான். 

2011 காலம் நேசக்கரம் ஊடாக செல்வச்சந்திரனின் குடும்பத்தினருக்கு தொழில் முயற்சி உதவியை வழங்கியும். கொஞ்சக்காலம் மருத்துவ உதவிக் கொடுப்பனவினை வழங்கியவர்களுக்கும் நன்றி. 

26.06.21 

சாந்தி நேசக்கரம்

No comments: