Wednesday, September 5, 2012

எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..!

காலம் எழுதிய வெற்றிகளில்
நெருப்பாய் இயங்கிய வரலாறு.
இருளும் கடினமும் இயற்கையின் சீற்றமும்
அசையாத இரும்பின் இருதயம்
உனக்காய் படைக்கப்பட்டிருந்தது.

ஒருகாலம் உனக்கான விலை
உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி.
கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த
காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில்
ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன்.

‘செயலின் பின் சொல்’
அதிகாரியாய் , பணியாளனாய்
இலட்சியப் போராளியாய் – நீ
இயங்கிய தளங்கள் தந்த அனுபவங்களிலிருந்து
இன்னோர் உலகின் மூலத்தைக் கண்ட முழுமுதலான்.

தடைகளகற்றித் தனிதேசம் அமைக்க
ஓயாதலைந்த பெருநெருப்பு.
எமக்காகவே எரியும் நாள் தேடியலைந்த எரிமலை.
ஏற்றிருந்த இலட்சியக் கனவோடலைந்த இரும்பு
வழியனுப்பியோர் கனவில் விளைந்த                                                                                                                                                                       வெற்றிகளை அள்ளித் தந்து
விலாசங்கள் விசிலடிக்க                                                                                                                                                                                           வழிகாட்டிய வெளிவராத அதிசயம்…..

23.08.2012 ,
கடைசியாய் கதைபேசி
கண்ணீரோடு விடைபெற்ற போதும்
மீண்டும் கனவுகள் விதைத்துத்தானே
கண்ணுறங்கிப் போனாய் !

வாழ்ந்த போது உனக்கு விலையில்லை
வரலாறுகள் நீ படைத்த போதுன்
பெயருக்கு விலாசமில்லை….!

அன்றைய வீரன் !
காய்ந்து போன உதட்டின் உணர்வையோ
உயிரின் வலியையோ உணர முடியாப் பிணமாய்
இன்று வீழ்ந்து கிடக்கிறாய்
விழிகளில் ஈரம் எதையோ சொல்லத் துடிக்கிறது
விளங்கிக் கொள்ள முடியவில்லை……!

‘வீழ்வதெல்லாம் எழுவதற்கே’
இன்னும் வீரமாய் உன்னை விற்பனைக்கா(சா)ட்சியாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறது தேசிய உணர்வு….!
நீ செத்துக் கொண்டிருக்கிறாய்.

அப்பாவின் குரலுக்காய் சாகித்யன்
கணவனின் மீட்சிக்காய் கவிதா
தோழனின் உயிர்காப்புக்காய் நாங்கள்
உன்னைக் காக்க மட்டுமே இறைஞ்சுகிறோம்….!

கண்ணில் தெரியாக்கடவுளே
முன்னால் வாழ்கிற தமிழர்களே
எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..!                                                                                                                                                           எந்நாளும் உங்களுக்கு நன்றியுடனிருப்போம்.
01.09.2012

No comments: