Wednesday, July 11, 2012

மீள் நினைவு கொள்வோம்.

கால விதிகளின் கட்டறுத்தெறிந்த
வீரத்தின் விலாசங்களோடு
வனவாசம் போனவர்களுடன்
ஆழுமையின் வீச்சாய்
அடையாளம் காட்டப்பட்டவள் நீ.

பெண் விதியின் முழுமைகளை
நீ பேசிய மேடைகள்
பதிவு செய்து கொண்டதோடு
நீயொரு பெண்ணியவாதியாய்
பெருமை கொள்ளப்பட்டவள்.

உன்னையும் உனது ஆழுமைகளையும்
உச்சத்தில் ஏற்றி எழுதியோரும்
உன் குரலில் பதிவு செய்தோரும்
எண்ணிலடங்காதவவை....

எழுச்சியின் காலங்களை இப்படித்தான்
காலம் கௌரவப்படுத்துவது வரலாறு.
வீழ்ச்சியின் பின்னரே யாவும்
விழித்துக் கொள்கிறது.
அதுவே உனக்கும்
உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது.

000

2009 மே,
காலச் சூரியனின் கைகளிலிருந்து
தவறிப்போனவளாக
வரலாறு உன்னைப் பதிவுசெய்தது....

பணியாத வீரங்களெல்லாம் கைதூக்கிய சரணாகதி
உன்னையும் தோல்வியின் கைகளில் கொடுத்துவிட
காலத்தால் கைவிடப்பட்டவர்கள் வரிசையில் நீயும்
தோற்றப்போன ஒரு முன்னாள் பெண் போராளி.

திட்டும் சபித்தல்களும்
உன்மீது சொரிந்த வேளையில்
எல்லோர் போலவும்
நானும் கோபித்ததும் உன்னை சந்;தேகித்ததும்
நீயறியாத இரகசியங்கள்....

கழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்
கடைசிநேர நிலவரம் பற்றியும்
உங்களைத்தான் விழுங்கியது
எங்களது பேரங்கள்.

இருள் நிறைந்த கம்பிகளின் பின்னால் - நீ
இருளோடு கரைந்த கதைகள்
அறிந்த போது
எல்லாக் கோபமும் போய்
தோழமை வென்றது.
தோழியே உனக்காய் கண்ணீரில் கரைந்த
பொழுதுகள் கனத்தது....

கோபம் மறந்து உன்னோடு கதைத்து
உனது கண்ணீரைப் பங்கிட்ட போது
நெஞ்சுக்குள் உறுத்தும்
உன் மீதான எனது கோபங்கள்
அர்த்தமற்றுப் போய்விட்டன....

துயரங்கள் தின்ற உனது நாட்களை
நினைவுகொள் நேரமெல்லாம்
கரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்
துயர் கரைக்கும் அந்தரத்தில்
உனக்கான ஒளிவட்டமொன்றைக் கீறிக்கொள்வதாய்
உனது கண்ணீரைப் புன்னகையாக்கிய
வெற்றியை யாரிடமும் சொல்லாமல்
அழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....

கம்பிகள் உன்னை விடுவிக்கப் போகும் நாளுக்காய்
உன் அம்மாபோல நானும் காத்திருந்த நாட்களில்
உனது விடுதலையின் செய்தி
நெஞ்சுக்குள் பொங்கிய மகிழ்வை
நீ வரும் வரை
பொக்கிசமாய் பத்திரமாய் வைத்திருக்கிறேன்....
வா நாங்கள் மீண்டும் பேசிக் கோபித்து விவாதித்து
மிஞ்சிய பொழுதுகளையேனும் மீள் நினைவு கொள்வோம்.

22.06.2012


No comments: