Friday, November 26, 2010

நீங்கள் பிறந்த இந்நாள்


மெளனங்களாய்
உங்கள் நினைவேந்திக்
கரைகிறது இந்நாள்…..

முப்பதாண்டுத் தவம்
முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு
மூச்சறுந்த நிலையில் எல்லாம்
உறைந்து போய்க் கிடக்கிறது……

வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம்
வரலாறாய் பதித்துவிட்டு
வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே
வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில்
இந்த மெளனங்களும் ஊகங்களும்
வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது…..

உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில்
இப்போ நல்ல மழை பெய்கிறது…..
நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை
உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்…..

உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு
உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு
உயிர் கொடுக்கப் போனவர்கள்
தவிர்க்க முடியா நிலையில் தடம்மாறிப் போனதில்
பிழைகாணும் வீர(ண)ர்கள்
இடுகின்ற ஊழைகளில் உண்மையும்
நீதியும் உயிர் சிதைகிறது….

உண்மையாய் வாழ்ந்தோரை
இந்த ஊனக்கண்களும்
உக்கிய வாய்களும்
ஈவிரக்கமின்றிச் சப்பித் தின்கிறது…..
நீங்களாய் மாற நிறையவே நரிகள்
பந்தயமிடுகிறது அங்கும் நீங்களே பொன்வாத்து….

நீங்கள் பிறந்த இந்நாள்
வருடாவருடம் வந்து போன
நாட்கள் போலில்லை…..
என்றுமே உணர்ந்திராத
வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

பொங்கிடும் எண்ணங்கள் பெருக்கெடுக்க
உங்கள் சிரித்த முகம் தாங்கிய ஒளிப்படம் முன்
மெளனக்கண்ணீர் வடிய மெளனமாகிறோம்…..
26.11.10

No comments: