Thursday, December 30, 2010

ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்

சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும்
அவள் அணிந்த ஆடைகளையும்
அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள்
படம்காட்டி செய்தியாய் செவ்வியாய்
செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்…..

இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி
76பேருடன் உடலுறவு கொண்டாளாம்…..
அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி…..
ஆளாளுக்கு விளக்கங்கள்
அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான்.

மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம்
அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும்
பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட
விட்டு வைக்காத இனம் நாங்கள்.
நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான்.

விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க
சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி
ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்
கொடுமைக்கு யாரிங்கு குரல் கொடுப்பர்……?

கெளரவம் கவரிமான் சாதியாய்
தன்னையே பெருமைகொள் தமிழினம்
உயர்ந்த பண்பிலும் வரலாற்றிலும்
வனையப்பட்ட சித்திரமென்ற கதைகளை
இனியாவது நிறுத்திக் கொள்வோம் தமிழர்களே…!
எங்கள் வீட்டின் மகளை இப்படியா ஏலம் விடுவோம்…?
மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்…..!
இதுவா மனிதப் பண்பு…?
இதுவா சீர்திருத்தம்…..?
இதுவா தமிழினப் பெருமை….?
ஒன்று முடிய ஒன்றாய் தமிழச்சிகள்
தமிழர்களால் விற்கப்படும் வியாபாரம்
இன்றோடு நிறுத்துவோமா…..?

31.12.10

(28.12.10 அன்று இணையங்களில் வெளிவந்த செய்தியின் தலைப்பிது:-17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! இச்செய்தியின் நாயகி ஒரு 17வயதுச் சிறுமி. அவளை ஆளுக்காள் அவரவர் திறமைக்கேற்ப விமர்சனங்களால் வியாபாரம் செய்கின்றனர். இசைப்பிரியாவின் நிர்வாண உடலைக் காட்டி ஊடகவிபச்சாரம் செய்த ஊடகர்களும் ஊடகங்களும் இன்று இந்தப் 17வயதுச் சிறுமியைத் தண்டிப்பதாய் நினைத்து ஒவ்வொரு தமிழ்ச்சிறுமியையும் தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் பரபரக்க பலியிடப்படும் உயிர்கள் வரிசையில் இன்று பேசப்படும் சிறுமிக்கு அவள் போல ஆயிரமாயிரமாய் காயங்களுடன் வாழும் பெண்களை அவமதிக்கும் ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்)

Thursday, December 9, 2010

உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு


அக்கிரமம் இறுதியில்
பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம்
அதற்கு நீயும் விலக்கில்லாமல்
ஆழ்கடல் நுனிமட்டும்
அலைகிறதுன் ஆத்ம ஓலம்……

கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும்
கதைசொல்லும் பொன்முகமும்
பூவினும் இனியதாய்
பொலிந்த உன் பெண்மையும்
நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்……

நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ
சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை
அலங்கோலமாய் அணுவணுவாய்
படம்பிடித்து மகிழும் காட்சியாய்
நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம்
நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது……

தீயெரித்த கண்ணகியின் கோபத்தை
கதைகளில் தான் படித்தோம்.
ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை
சமகாலத்தில் தானே கற்றோம்.
ஆயினும் ஊமைகளாய்…..!

சாமிகளாய் நம்பிய சரித்திரங்கள் யாவையும்
சாவிட்டு முடித்துச் சாம்பரும் கரைத்துச்
சாவின் மீதுலவும் பூதங்களாய்
பயம்தருகின்ற பொழுதுகளில் உழலுகிறோம்.

சுடலைகளாய் நீழ்கிற தெருக்களில்
கண்ணகைகளாய் எழவும் முடியவில்லை
கண்ணீர் விட்டு அழவும் முடியவில்லை
கொப்பளிக்கும் கோபத்தை துயரத்தை
இப்படித்தான் கொட்ட முடிகிறது.

தங்கையே !
நீ தமிழுக்கும் தமிழனத்துக்கும் கிடைத்த
சொத்துக்களில் ஒரு முத்து.
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
உன்போல் ஆயிரமாயிரம்
தங்கைகளை அக்காக்களை
தின்னக் கொடுத்துவிட்டு நாங்கள் தின்கிறோம்
உடுக்கிறோம் உழைக்கிறோம்
உயிர்வாழ்கிறோம் இது துரோகம்தான்.
ஆனாலும் உயிர்வாழ்கிறோம்.

யாரும் யாருக்காகவும் உரிமைகோர முடியாத
பூட்டுக்களால் பிணைக்கப்பட்ட
சடங்களாயான எங்கள்
சமகாலவிதியை இப்படித்தான்
ஏற்றுக்கொள்கிறோம்.

பாளங்கள் பிழந்து
வடிந்தொழுகும் சுமைகள்
உன்மீதிறங்கி உன்னைக்
குலைத்துச் சிதைத்துச்
சொன்ன சேதி……!!! :icon_idea:

08.12.10 (கொடுமையாய் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் நினைவாக இப்பதிவு. இசைப்பிரியா ஒரு கலைஞராக வாழ்ந்து காத்திரம் மிகுந்த படைப்புகளையும் தந்து எங்கள் காலத்தில் வாழ்ந்த போராளி. அவள் நிர்வாணப்படுத்தப்பட்டு நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்)