Tuesday, August 31, 2010

நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…!

வேரோடு பிடுங்கி விசங்களால் நிறைக்கப்பட்ட
நிலத்தில் அவலமுறும் உயிர்களுக்காய்
போராட்டம் நிகழ்கிறது….!
நீதி கேட்க ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிய வாசலெங்கும்
நிலம்விட்டகன்று போனவர்கள் நீதி கேட்கின்றோம்…..

ஆழுக்கொரு கொள்கை அத்தோடில்லாம் அடிதடி
துரோகம் அநியாயம் வசைபாடல்
நாடுகடந்த கடக்காத பேரவைகளின் கால்களில்
போராடியோர் குரல்களும் உயிர்களும்
நசுங்கிக் கொண்டிருக்க
நீதிக்கான போராட்டம் நித்தமும் நடக்கிறது.

செய்திகளும் அறிக்கைகளும்
கர்த்தருக்காகவும் கருணையுளம் கொண்ட
உயிர்களின் விலைகளுக்காகவும் சமர்ப்பணமாக….
எப்போதும் போல விசிலடித்து வீரம் விளைவிக்கும்
புதிய கர்த்தர்களாலும் பழைய கடவுகள்களின்
பெயர்களாலும் நீதிக்கான போராட்டம் நடக்கிறது.

ஆழுக்காள் கொத்துப்பட்டு கொழுவுப்பட்டு
தீராவஞ்சப் பிணியகலா மனங்களோடு
யாருக்காய் போராடி யாருக்காய்
வெற்றியை நமதாக்கி
யாருக்காக இதுவெல்லாம்….?

சாவோடும் நோயோடும்
உயிர் கொல்லும் பசியோடும்
தினம் சாகின்ற உயிர்களுக்கு
சங்கூதும் முடிவோடு
அறிக்கைகளின் பெயராலும்
அடிக்கடி முளைக்கும் புது
அவதாரர் பெயராலும்
ஆணிகள் அறையப்படுவதை
யார்தான் நினைப்பார்…..?

ஓ….
மண்ணுக்குள் மரணத்துள்
வாழ்கின்றவர்களே…!
போராடுவோம் நீங்கள்
சாகும்வரை போராடுவோம்.
நீங்கள் கவரிமான்கள் *மயிர் நீர்ப்பின் உயிர்வாழா மானிடங்கள்*
நீங்கள் உயிர் நீர்ப்பினும்
ஓயாது எங்கள் போராட்டம்
ஏனெனில் நாங்கள் கவரிங் மான்கள்.

ஓயமாட்டோம் உங்களை ஒரு வழி பண்ணிக்
கொல்லும் வரை ஓயமாட்டோம்.
வீழமாட்டோம் நீங்கள் வீழ்ந்து மடியும் வரை
நாங்கள் வீழமாட்டோம்.

கோடைவிடுமுறையைக்
கீரிமலையிலும் திருமலையிலும்
நல்லூரிலும் நயினை
நாகம்மை வாசலிலும்
கு(டி)ழித்துக் கழிக்க
எங்களுக்கொரு நிலம் வேண்டும்.

சோற்றுக்காய் பிள்ளைக்குப் பால்மாவுக்காய்
ஆமியிடமும் அகப்படும் யாவரிடமும்
எங்கள் பெண்களும் குழந்தைகளும்
விலையாகிப்போயழிந்து போனாலும்
நாங்கள் ஓயமாட்டோம்.
போராடுவோம் உங்களுக்காக….

போராட்டம் புலத்தார் கைகளில்
தரப்பட்டிருக்கிறது.
இத்தத்துவம் புரியாத (என்போன்ற) மக்குகளை
மண்டையிலை போடாதது பிழையென்று உசுப்புவோம்
இன்னும் கனவுகளில் வாழும் அப்பாவிகளுக்கு
ஓதுவோம் துரோகிகள் இப்படித்தான்
ஒளிந்திருக்கிறார்கள்.
அரிச்சந்திரர்களை அழைத்து
இந்த மக்குகளை
மண்டையிலை போடுவிப்போம்.

போராடுவோம்…..!
இன்னும் மிஞ்சியிருக்கும் உயிர்களே...!
நோயிலும் பசியிலும் நீங்கள்
சாகும் வரை நாங்கள் போராடுவோம்.

31.08.10 (பகல் 11.10)