Monday, August 28, 2017

தோழமையின் ஆழுமையே பாடல்

நல்ல தோழமை கிடைத்த அனைவருக்குமான பாடல் இது. இருவர் எழுதிய பாடல் உலகில் வாழும் அனைத்து தோழமைகளுக்கும் சமர்ப்பணம்.

நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் இரா.சேகர் அவர்களின் இசையில் துளசிச்செல்வன், சாந்தி நேசக்கரம் வரிகளுக்கு உயிரூட்டிய தர்சினி , நிரோஜன் ஆகியோரின் குரலில் தோழமையின் ஆழுமையைச் சொல்லம் பாடல் இது. பிடித்தவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பாடலை கேளுங்கள்.

Thursday, August 17, 2017

என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும்.


_____________________________________________________


2007ம் ஆண்டு சித்திரை மாதம் இனிமேல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லையென்ற முடிவை எடுத்த போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமென்ற எண்ணம் வந்தது. 


என் கண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்தது. 

என்னையும் எனது ஏற்றத்தையும் உழக்கி வீழ்த்தக் காத்திருந்தவர்கள் முன் தலைகுனியும் தைரியம் இல்லாது போனது. 

2008ஆம் ஆண்டிலிருந்து ஒரே வீட்டில் மேல்மாடியில் நானும் பிள்ளைகளும் , கீழ்மாடியில் அவனும் பிரிந்து வாழத் தொடங்கினோம். 

காலம் காயங்களை ஆற்றும் சிலவேளை மனங்களும் மாறக்கூடும் என்று தான் நம்பினேன்.

வாழ்வு மீதான ஒரே பிடிமானம் மகன் பார்த்திபனும் வவுனீத்தாவும் தான். மகன் 12வயதையும் மகள் 10 வயதையும் அடைந்திருந்தார்கள். வீட்டுக்குள் நடக்கும் நிலமையைப் புரிந்து கொள்ளும் வயசில்லை. அம்மா விவாகரத்து எடுங்கோ என அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். 

 பிள்ளைகளை மனரீதியாக பாதிகக்கூடாதென்பதில் கவனமாக நான் இருப்பதை தனக்குச் சாதகமாக்கிக் கொணடான்.  பிள்ளைகள் முன் தன் கோரக்குரலையும் உயர்த்திக் கதைப்பதும்  என்பற்றி பிள்ளைகளுக்கே மோசமாகச் சொல்லுவான்.

இயன்றவரை அவன் வீட்டில் நிற்கும் நேரங்களில் அவனைச் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டேன். பிள்ளைகள் வீட்டில் நிற்கும் நேரங்களில் மட்டுமே வீட்டுக்கு வருவேன்.

வேலை தவிர்ந்த நேரங்களில் அவன் வீட்டில் நின்றால் கார் போகும் திசையில் போயலையத் தொடங்கினேன். யாருடனும் எதையும் பேசும் நிலையில் மனசில்லை.

பிள்ளைகளுக்காக என்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தேன். செத்துவிடு என மனம் உந்தும். பிள்ளைகள் இருவரும் கண்ணுக்குள் வந்து கண்ணீராய் எனைக் கரைப்பார்கள். 

பிள்ளைகளையும் அழித்து போய்விடுவோமோ என எண்ணிய தருணங்களும் வந்து போயிருக்கின்றன. 

எப்போதும் மதுபோதையில் வரும்  அவன் தரும் தொல்லைகளையும் சகித்து இன்னொரு பத்துவருடத்தை கடத்துவதென்ற என் எண்ணத்தில் உறுதியானேன். 

தாயகத்துடனான தொடர்புகள் தாயகக்கடமைகள் நிறைந்த காலம் அது. என் நமபிக்கைக்கு உரிய போராளி ஒருவருக்கு நிலமையைச் சொன்னேன். என்னோடு கூடப்பிறக்காதவன் எனக்கு மிகுந்த ஆறுதலாயிருந்தான்.

எந்த நேரமும் என் அழைப்பை ஏற்று என்னோடு பேசக்கூடியவன். அவன் மட்டுமே என்னை நம்பிய முதல் ஆள். 

2009 முள்ளிவாய்க்கால் முடிவில் எங்கள் விடுதலைப் போராட்டம் தோற்றது. என்போன்ற பலரது வாழ்வும அவர்கள் இல்லாது தெருவில் எறியப்பட்டது. ஏதாவது சிக்கலெனில் கேட்க அவர்களும் இல்லாத போது அவன் தொல்லைகள் அதிகமாகியது.
 
2009 யுத்த முடிவின் பிறகு என்னால் இயங்க முடியாதிருந்தது. எனக்காக இருந்த அனைவரையும் போர் தின்று நான் தனித்துப் போயிருந்தேன். 

யாழ் இணையம் ஊடான நேசக்கரம் பணிகளில் சிறிதாக இயங்கிக் கொண்டிருந்த பணிகளும் இடைநிற்கும் நிலை வந்தது. 

இறந்து போனார்கள் என நினைத்த பலர் உயிரோடு இருப்பது உறுதியானது. தொலைபேசி வழியாக முகாம்கள் சிறைகளில் இருந்து தொடர்பில் வந்தார்கள்.

நேசக்கரத்தை பதிவு செய்து தாயகத்தில் வாழும் மக்களுக்கான பணிகளைச் செய்ய காலம் அழைத்தது. 

நேசக்கரம் தொண்டு நிறுவனத்தை உலகத் தரத்தில் உயர்த்த வேண்டும் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பதே 24மணிநேர கனவாகியது. 

பிள்ளைகள் சிறுவர்கள் ஆயினும் அவர்களுக்குத் தெரிவித்த போது எனக்கு பெரும் ஆதரவாக நின்றார்கள். சந்திப்புகளுக்கு செல்லும் போதெல்லாம் கூட வருவார்கள். நேசக்கரமும் எனது பிள்ளைகளுமே என உலகாகியது.

நேசக்கரம் அங்கத்தவர்கள் தேவைப்பட்ட போது தானும் வருவதாக சொன்னான். மற்றவர்களுக்கு உதவுவதில் இணைந்தால் அவன் மனமும் மாறுமென்ற என் நினைவு கனவாகவே போனது. 

நேசக்கரத்தை முடக்குவதிலேயே தொடர்ந்து தொல்லைகள் தரத்தொடங்கினான். நேசக்கரத்தை அழிப்பதில் அவனுக்கு ஆதரவாக பிரான்சில் இருந்த அவன் நண்பன் சாத்திரி என்பவன் அவனைத் தூண்டிக் கொண்டிருந்தான். 

வெளியரங்குகளிற்கு போகும் போது இனிமேல் எனக்கு பிரச்சனைகள் தரமாட்டேனென்று வருவான் ஆனால் பழையகுருடி கதவைத்திற நிலமையே மீண்டும் நிகழும். 

மேடைகளுக்கு செல்லும் போது கடைசி நேரத்தில் ஏதாவது சொல்லி அமைதியைக் குலைத்துவிட்டு எதுவும் அறியாதவன் போல முன்னிருக்கையில் வந்து இருப்பான். 

ஒருநாள் அவனது இயல்புகள் மாறும் என்ற சின்ன நம்பிக்கை இருந்து கொண்டேயிருந்தது. 

எனது முயற்சிகளுக்கு அவனே பேராதரவு தருவதாக மேடைகளில் பொய் சொல்லத் தொடங்கினேன். எல்லா இடங்களிலும் அவனை முன்னிலைப்படுத்தியே எனது பணிகளைச் செய்தேன். 

எனது கவிதைப்புத்தகங்கள் வெளியிட்ட ஒவ்வொரு மேடையிலும் அவனையே நூலை வெளியிட்டு வைக்க அழைப்பேன். அவனுக்கு நன்றி சொல்லி அவனைத்தான் பெருமைப்படுத்தினேன். 

ஏனெனில் அவனை நான் அந்தளவு நேசித்தேன். ஆனால் அவனோ என்னைப் பழிவாங்கிக் கொண்டேயிருந்தான்.

2011இல் ப...னி என்று ஒருத்தி என் வீட்டுக்கு வந்தாள். அவனது பள்ளிக்கால நண்பியென்று அறிமுகமானாள். நட்பு என்றால் என்ன நட்புக்கான எல்லை எதுவரை என்பதை நான் புரிந்து வைத்திருந்தமைக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்கும் நிறைய வித்தியாசம். 

ஆரம்பத்தில் சங்டமாக இருந்தாலும் நான் பிரிந்து வாழ்வதால் அவர்களது உறவு பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவும் தோன்றவில்லை.
 
000           000             000

உயிர் தப்பிய பல போராளிகள் வெளிநாடு வர உதவினேன். பல குடும்பங்கள் மாணவர்களுக்கு உளவள ஆற்றுகைகளும் செய்து கொண்டிருந்தேன். பலர் தங்களுக்கு வீசா கிடைத்ததும் என்னை முதலில் சந்திப்போம் எனச் சொன்னார்கள்.அப்படி பலர் வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டுக்கு வருவோர் யாவருக்கும் அவன் உலகிலேயே சிறந்த ஒரு துணையென்பது போலவே அவர்களுக்கெல்லாம் அவனை அறிமுகம் செய்தேன். என்னைப் பார்க்க வந்து போன அனைவரும் சொன்னது இதுதான் :-
அக்காவுக்கு நல்ல துணை கிடைச்சிருக்கு.
உள்ளே தீயும் வெளியே புன்னகையுமே எனது வாழ்வு என்பதை யாரும் காணாமல் மறைத்துக் கொண்டேன். 

வீட்டுக்கு வந்து போகும் போராளித் தோழமைகள் ஒவ்வொருவரும் அவனைப் போல ஒருவன் எனக்கு வாழ்வில் இல்லையென்றே மற்றையவர்களுக்குச் சொல்வார்கள்.

ஆனால் அவர்கள் வந்து போன பிறகு அவர்கள் ஒவ்வொருவரோடும் என்னைத் தொடர்புபடுத்தி படுகேவலமாகக் கதைசொல்வான்.

 என்னிடம் வந்து போன அனைத்து நண்பர்களையும் படுக்கையில் தொடர்புபடுத்தி தன் சார்ந்தவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். 

அனைவருமே என்னை அக்கா , அம்மா , தங்கைச்சி , மருமகள் இப்படித்தான் உறவோடு அழைப்பார்கள். பழகினார்கள். ஆனால் அவன் மட்டும் என்னையொரு விபரச்சாரி போலவே கதைபரப்பிக் கொண்டிருந்தான்.

அதற்குத் துணையாக அவனது பள்ளிக்காலத் தோழியென்று வந்தவளும் ஆதரவு கொடுத்தாள். பள்ளித்தோழியென்பவள் அவனது அறையில் தான் வரும் போதெல்லாம் தங்குவாள். ஒரே கட்டிலில் பள்ளித்தோழி படுத்து எழும்பும் வரையில் தான் அவர்களது நட்பு இருந்தது. 

அவளே எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனைகள் தோன்ற காரணமானாள். எனக்கு ஆதரவு தருவது போல அவள் நடித்ததையும் நான் நம்பியது ஒருகாலம்.

அவனது ஒன்றுவிட்ட தங்கைகளில் 
ஒருத்தியான றோ..னியுடன் பிரச்சனைகளைப் பேசினேன். அவளும் அவனது அரியண்டத்தை பார்த்த பிறகு என்னை பிரிந்து போ இவன் திருந்தான் எனச் சொன்னாள். 

இன்று அவளும் அவனது கள்ளத்தனங்களுக்கு சாட்சியாய் நிற்பது வேறுகதை.

இனி சமாளித்தல் இயலாதென 2012 விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடிவெடுத்தேன். 

அவன் செத்துப்போவேன் என்றான். என்னால் தான் சாகப்போவதாக மிரட்டத் தொடங்கினான். உறவினர்கள் சிலர் தலையிட்டு இனி முடிதென்று கைவிட்டார்கள்.

2013ஏப்றல் கனடாவில் இருந்து அவனது அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அவர்களது வருகை எங்களுக்குள் இருந்த பிரச்சனைக்கு தீர்வாகும் எனவே நம்பினேன். 

இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் அடித்துப்போன கதையாய் அவன் அம்மாவும் அப்பாவும் தங்கள் மகன் மட்டுமே சொல்வது சரி என்னில் தான் தவறென்றார்கள். 

எனக்காக என்பக்கம் எனது பிள்ளைகள் தவிர யாருமில்லை.

தன்மகனுக்கு விவாகரத்துக் கொடுத்து அவனை வேறு வாழ்வை வாழ அனுமதியென்றாள் அவனது அம்மா. 

மாமியார் தொல்லையென்பதை அவர்கள் வந்து நின்ற ஒருமாதத்தில் உணர்ந்து கொண்டேன். இருந்த கடைசி நம்பிக்கையும் போய்விட்டது.

கோபம் அழுகை என்ன செய்வதென்றே தெரியாத இயலாமை. என் பிரச்சனைகளை புரிந்து கொண்ட போராளி அண்ணன் ஒருவன் ஐரோப்பிய நாடொன்றில் இருந்தான். அவனிடம் மட்டுமே எல்லாவற்றையும் சொல்லியழுதேன். 

பேசாமல் விட்டிட்டு பிள்ளைகளோடு சந்தோசமா இருங்கோ எதுக்கு உந்தச் சனியனோடை வாழ ஆசைப்படுறீங்கள் ?

அவனோடு ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருந்தவளும் வந்தாள். அவளும் அவர்களது பக்கமே நின்றாள். 

எனது நகரில் வாழ்ந்த இத்தாலிய நண்பியைத் தேடிப்போனேன். அவள் ஏற்கனவே எனது பிரச்சனைகளை அறிந்தவள். 

எனக்கும் பிள்ளைகளுக்கும் 10வருடங்களுக்கு மேலாக ஆதரவாக இருந்தவள். அவளும் அவளது கணவனும் தாங்கள் பேசிப்பார்ப்பதாக சொல்லி அவனிடம் கதைத்தார்கள். 

இறுதியில் இத்தாலிய நண்பியின் கணவனோடு எனக்குக் கள்ளத் தொடர்பென்று கதைசொன்னான்.

எனக்கு கள்ளத்தொடர்பென்று அவன் சொன்ன அனைத்து ஆண்களோடும் நான் போவதென்றால் வருடங்களே போதாது. 

எனது முகநூல் நண்பர்களையெல்லாம் தேடித்தேடி தொடர்பு கொண்டான். என்பற்றிய அவதூறுகளே சொல்லிக் கொண்டிருந்தான்.
 
000                     000                      000

என் பொறுமை என்னைவிட்டு விலகியது. விவாகரத்துக்குத் துணிந்தேன். பிள்ளைகளை ஒருநாள் பாடசாலையால் அழைத்துக் கொண்டு உணவகம் ஒன்றிற்குப் போனேன். 

அவனது பெற்றோர்களும் விவாகரத்து கொடுக்கச் சொல்வதைச் சொன்னேன். 

எங்களுக்கு வேண்டாம் உவரை விடுங்கோ. விவாகரத்து எடுங்கோ... என பிள்ளைகளும் சொன்னார்கள். 
அப்ப நாங்கள் எங்கை இனி இருக்கிறது ? மகள் கேட்டாள். 
வீடு எங்களுக்கும் பங்கிருக்கு நாங்கள் வீட்டில இருக்கலாம் மகன் சொன்னான்.

யேர்மனியப் பெண்களுக்கான ஆற்றுகை மையமொன்றின் சமூகப்பணிகளில் நானும் இயங்கிக் கொண்டிருந்தேன். 

எத்தனையோ பெண்களுக்கு உதவிய நான் எனக்கு உதவி கோரினேன். என் பிரச்சனைகளைக் கேட்டு அந்த நிறவனத்தின் தலைமையதிகாரியும் பணியாளர்களும் அடைந்த அதிர்ச்சியை இன்று நினைத்தாலும் கலவரமாக இருக்கிறது.

தலைமையதிகாரியும் துணையதிகாரியும் 2வாரங்கள் என்னோடு பேசினார்கள். 

விவாகரத்து என முடிவெடுத்தால் ஒரே முடிவாக இருக்க வேண்டும் இடையில் மாற்றம் வந்தால் சட்டச்சிக்கல்கள் வருமென்றார்கள். அதனால் நிதானமாக யோசிக்குமாறு ஆலோசனை தந்தார்கள்.

இனிமேல் அவனோ அல்லது அவனது பள்ளிக்காலக் காதலியோ இடையூறு செய்தால் காவல்துறையை அல்லது அந்நிறுவனத்தின் அவசர உதவியை அழைக்குமாறு கூறி வழக்கறிஞர் ஒருவரை அறிமுகம் செய்தார்கள். 

நாளுக்கு நாள் அவன் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவனது பள்ளிக்காலக் காதலி வருவாள். 

அவனும் ஒன்றுவிட்ட ஒருவார இறுதிநாட்களில் காதலியிடம் போய் வருவான். சிலவற்றை நானும் புரிந்து கொள்ளாதமாதிரி நடந்து கொண்டேன். 

இருவரும் நீச்சல் போவார்கள் சமைப்பார்கள் எல்லாம் செய்வார்கள் ஆனால் என் அமைதியும் பிள்ளைகளின் அமைதியும் தொலைந்து போனது. 

மகன் பாடசாலையில் பலதடவை மயங்கி வீழ்வதாக பாடசாலையில் இருந்து அழைப்பார்கள். 

மகளும் திடீரென அழுது படிக்க முடியாமல் அந்தரிப்பாள். மாறிமாறி பாடசாலையில் இருந்து அழைப்பார்கள். பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைக்கூட அவன் புரிந்து கொள்ளாது கொடியவனானான்.

வெளியில் போகும் நேரம் கைபேசி அழைத்தாலோ வீட்டில் நிற்கும் போது வீட்டு தொலைபேசி அழைத்தாலோ நெஞ்சு பதறும் பிள்ளைகளுக்கு என்ன ஆயிற்றோ என்று தான் அங்கலாய்க்கும் மனம்.

இரவில் திடீரென பிள்ளைகள் பயந்து எழுவார்கள் அழுவார்கள். 2013 ஏப்றல் தொடங்கி 2016 வரையும் அம்புலன்ஸ் தயாராக இருப்பது போல நானும் அந்தரிப்போடு இருக்கத் தொடங்கினேன். நிம்மதியாக கண்ணுறங்கியதில்லை.

பிள்ளைகளின் வகுப்பாசிரியர்கள் அழைத்தார்கள். விசாரித்தார்கள். உண்மையைச் சொன்னால் பிள்ளைகளை அரசு எடுத்துவிடும் என்ற பயத்தில் சமாளித்துக் கொண்டேன். 

2வருடங்கள் காத்திருந்தும் மாற்றங்கள் எதுவும் இல்லாமையால் சட்டத்தரணியோடு பிள்ளைகளின் நிலமைகளைப் பேசினேன். உனது கையில் தான் அவர்களது நிலை தங்கியுள்ளது. 

உன்னை ஒருநாளைக்கு கொலைசெய்திட்டு மனநோயெண்டு தப்பப்போறான். உன் முடிவில் தான் உன வாழ்வு என சட்டத்தரணி எனது இறுதி முடிவுக்காக காத்திருந்தார். 

2007 தொடக்கம் பிரிந்து வாழ்வதால் விவாகரத்துக்கான காலம் இனி இழுபடாது விரைவில் விவாகரத்து வருமென்றார் சட்டத்தரணி. 

2015 விவாகரத்துக்கான நோட்டீஸ் அவனுக்கு எனது சட்டத்தரணி அனுப்பியிருந்தார்.  என் உறவுகள் நண்பர்கள் யாவரையும் தேடித் தேடி தொலைபேசினான். 

நான் வேறு ஆண்களுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதால் தான் தன்னை விலக நிற்பதாக பொய்சொல்லத் தொடங்கினான். 

என் எதிரிகளுக்கு என்பற்றி , என்னோடு நட்பாயிருந்த போராளிகள் சிலரை தொடர்படுத்திச் சொன்னான். 

சமாதானம் பேச வருவதாக முன்வந்த யாவரோடும் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டேன்.

அவனது காதலி எனது பாதிப்பங்கான வீட்டை அவன் பெயருக்கு எழுதிக்கொடு என்றாள். சமூக உதவிக்கு விண்ணப்பித்தால் பணம் கிடைக்கும் அதனை அவனுக்குக் கொடு என்றாள்.

2007 இல் இருந்து எனக்கும் பிள்ளைகளுக்குமான உணவுச்செலவுகள் பிள்ளைகளின் தேவைகளை நானே 3வேலை செய்து சமாளித்துக் கொண்டிருந்தேன். 

அவன் பிள்ளைகளுக்கு உணவுக்கென வாங்கி வரும் சில பொருட்கள் தவிர அனைத்தும் எனது கடின உழைப்பின் ஊதியமே செலவாகிக் கொண்டிருந்தது.

2017 மகள் பல்கலைக்கழகம் போகும் வரை வீட்டில் இருக்கிறோம். மகள் வெளியேற நானும் வீட்டை எழுதித்தந்துவிட்டுப் போகிறேன் எனக் கேட்டுக் கொண்டேன். 

அவனது காதலி எங்களுக்குள்  தூதுவராய் இருந்தாள். 
ஏதாவது காரணம் சாட்டாக எடுத்து பிரச்சினை தருவான். பிறகு எனது நிம்மதியை பிள்ளைகளின் நிம்தியைப் பறித்துவிடுவான். 

குடித்துவிட்டு கதவுகளை உடைப்பது பாத்திரங்களை உடைப்பது என அவனது தொல்லைகள் எல்லைமீறிக் கொண்டிருந்தது.

பிள்ளையள் பள்ளிக்கூடத்தில ஏதும் கேட்டா ஒண்டும் சொல்லப்படாது. என அடிக்கடி சொல்லிக் கொள்வேன். 2015 - 2016 ஆண்டு பிள்ளைகளின் கல்வி இறுதியாண்டுத் தேர்வுக்காலம். 

மகள் மனச்சோர்வுற்றுப் போனாள். 2016 இறுதியாண்டுத் தேர்வில் தேற்றினால் தான் 2017 பல்கலைக்கழக நுளைவுத் தேர்வு எழுத முடியும். அவள் நானில்லாமல் தனியே இருக்கமாட்டாள். எப்போதுமே என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தாள். 

பிள்ளைகள் பரீட்சையில் தேறி வருவார்களோ எனும் அந்தரம் என் அமைதி நிம்மதி யாவையும் பறித்தது.

மகள் 2013 தொடக்கம் 2015 மாசிமாதம் வரை அவள் என்னோடு  தான் நித்திரை கொள்வாள். நித்திரையின்றி தவித்தாள். பயங்கரக் கனவுகள் வருவதாக அழுவாள். 

மகன் தனக்குள்ளே யாவையும் புதைத்தான். தங்கைச்சியையும் என்னையும் கவனம் பார்த்தான். 

எல்லாம் உங்கடை பிழை...அடிக்கடி அவன் சொல்வான். 

விவாகரத்துத்தான் இறுதி முடிவாக வேண்டும் என பிள்ளைகளும் விரும்பினார்கள்.

2015 நத்தார் வாரம் அவனது காதலியை அவளது வீட்டிற்கு போய் கூட்டி வந்தான். அவள் வந்ததிலிருந்து ஒரே பிரச்சனை. அழுகையும் அவலமும் தான். 

24.12.2015 அன்று இரவு மகளை அவளது சினேகிதியிடம் கொண்டு போய்விட்டேன். வருடாவருடம் அவர்களோடு அவள் நத்தாரை கொண்டாடுவாள். 

2016 தை நடக்கவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுக்கு மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்தான். 

000.       000.       000

இரவு 7மணிபோல் மகனுக்கு சமைத்துக் கொண்டிருந்தேன்.

 அவனது காதலி குசினிக்குள் வந்திருந்தாள். அவனும் வந்தான். நான் இருக்கும் இடத்திற்கு அவனை போகக்கூடாதென்ற சட்டத்தரணியின் முடிவையும் மீறி வந்தான். 

கதவை அடித்தான் கண்ணாடியை உடைத்தான். சமையல் பாத்திரங்களை எறிந்து கத்தினான்.

எதிர்பார்க்காத அந்த நிகழ்வு நானும் தடுமாறிப்போனேன். மேலே படித்துக் கொண்டிருந்த மகனுக்கு சத்தம் கேட்டுவிடக்கூடாதென்ற என் கவனத்தை அறிந்தவன் பிள்ளையைக் கூப்பிட்டு சத்தம் போட்டான். எனக்கும் அடித்தான். அவனது காதலி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

வருடம் தோறும் நத்தார் , எனது பிறந்தநாள் பிள்ளைகளின் பிறந்தநாள்களில் நாங்கள் அழுதபடியே அந்த நாட்கள் பிறக்கும். இம்முறையும் எங்கள் கண்ணீரோடு நத்தார் பிறந்தது.

மகனோடு நானும் போய் கதவைப்பூட்டினேன். அவனும் அவனது காதலியும் அவர்களது வீட்டுக்குள் போனார்கள். 

அவன் சத்தமிட்டு என்னைத்திட்டிக் கொண்டிருந்தான். தனது வீட்டுக் கணணாடியை கையால் குத்தி உடைத்தான். கையில்காயம். நான் தனக்கு அடித்ததாக காவல்துறைக்கு சொல்லப்போவதாக கத்தினான்.

மரண ஓலம் என் வீட்டில் அன்று. 

மகன் காவல்துறையை அழைத்து அவனை வெளியேற்றுமாறு சொன்னான். 

 மகள் நத்தார் முடித்து வரும்போது வீட்டில் நடந்த எதையும் அவள் அறியாமல் பார்க்க வேண்டும். 

நாளைக்கு பாப்பம் குஞ்சு. 

என மகனை சமாளித்தேன். 
 
மகளை அழைத்துவரப் போனேன். அதுவரை நடந்த பிரகண்டங்களை அவள் அறியாமல் அவள் முன் சிரித்து சமாளித்து மகளை வீட்டுக்கு கூட்டி வந்தேன். 

வாசலுக்குள் வந்த போது உடைந்திருந்த கண்ணாடித்துண்டுகளை கண்டாள். தடயங்களை மறைக்க மறந்து போனது உறைத்தது.


இதென்ன கண்ணாடியள் ? 
அதம்மா அவையளின்ரை பியர் போத்தலென்ற போது கதவுக்கண்ணாடி உடைந்ததைக் கவனித்தவள். 

பயந்து போனாள். அழுதாள்.

என்னம்மா நடந்தது ? 

இனி மறைக்க ஏலாது. 

நத்தார் கொண்டாடி கிடைத்த பரிசுகளோடு வீடு வந்தவள் அழுதாள். அவள் மகிழ்ச்சி தொலைந்தது. பிள்ளைகள் இருவரும் அழுதார்கள். 

காவல்துறையை அழைத்து அவனை வெளியேற்றுமாறு கூறினார்கள். 

மகன் தன்னால் அமைதியாக படிக்க முடியவில்லையென அழுதான். 
 
000                            000                                000

அவனது வீட்டுக்கு போனேன். பிள்ளையின் பரீட்சை முடியும்வரை நானும் பிள்ளைகளும் வீட்டில் இருக்கிறோம். அதுவரை குழப்ப வேண்டாமென அழுதேன். 

என் மன்றாட்டு கெஞ்சல் எதையும் அவர்கள் கேட்கவில்லை. 

உன்ரை பிள்ளைக்கு படிப்போடி முக்கியம் ? எங்க படிப்பிச்சுக்காட்டு பாப்பம் ? 

பரீட்சையில் தேற்றாது போனால் ஒருவருடம் கழித்தே பிள்ளை பரீட்சை எழுத முடியும்.

அவனை வெளியேற்றாது போனால் தான் வீட்டைவிட்டுப் போய்விடுவேன் என அழுதான் மகன்.

 18வயது வந்த பிள்ளையின் முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. அவன் தனது நண்பன் ஒருவனை அழைத்து வீட்டிலிருந்து வெளியேறினான். தனது தொலைபேசியையும் நிறுத்திக் கொண்டு போனான்.

பிள்ளை வெளியேறியதோடு அவர்கள் இருவரையும் வெளியேறுமாறு எச்சரித்தேன். 

நாளை மதியத்துக்கிடையில் அவனும் அவளும் வீட்டை விட்டு வெளியேறாது போனால் காவல்துறையை அழைப்பேன் என்றேன். 

இது என்ரை வீடு நாங்க போகமாட்டம். செய்றதை செய். என்றான் அவன். 

இரவிரவாய் என் எதிரிகள் சிலருக்கு இருவரும் தொலைபேசி முகநூலில் அழைத்தார்கள். 

பிரான்சில் வாழும் அவன் நண்பன் சாத்திரி என்பவனைத் தொடர்பு கொண்டான். சாத்திரி என்பவன் ஏற்கனவே நேசக்கரம் பணிகளில் முரண்பட்டு என்பற்றி பொய்கள் எழுதியவன்.

தன்காதலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்பற்றி சாத்திரிக்குப் பொய்கள் சொன்னான். 

என்னால் அவன் சாகப்போவதாகவும் நான் வேறொரு நபரோடு வாழ்வதாகவும் ஒரு போராளியின் பெயரைம் கூறினான். தனது இறுதி மரண வாக்கு மூலம் தருவதாகவும் அதனை ஒலிப்பதிவு செய்து உலகத்திற்கு அறிவிக்குமாறும் சாத்திரிக்கு  கூறினான்.

சாத்திரி எனது முகநூல் உள்பெட்டியில் என்பற்றி எழுதப்போவதாக எழுதினான். 

காவல்துறையை அழைத்து நிலமையைச் சொன்னேன். சாத்திரி அனுப்பிய தகவலையும் படமெடுத்து மொழிபெயர்த்து காவல்துறையிடம் கொடுத்தேன். 

காவல்துறை அவனையும் அவளையும் வீட்டிலிருந்து வெளியேற்றினார்கள். வீட்டுக்கு எதிர்க்கதவு காவல்துறை என்பதால் பயப்பிடாமல் பிள்ளைகளையும் என்னையும் இருக்குமாறு கூறி வழக்கு பதிவு செய்தார்கள்.

ஒருமாதம் ஆயிரம் மீற்றர் சுற்றளவுக்குள் அவன் வரக்கூடாதெனவும் அறிவித்தார்கள்.
அவன் தனது காதலியின் வீட்டிற்கு போனான்.

 அங்கிருந்து எனது நண்பர்கள் உறவினர்களை அழைத்து தன்னை வீட்டால் துரத்திவிட்டதாகவும் தற்கொலை செய்யப் போவதாகவும் சொன்னான். 

ஆளாளுக்கு தொலைபேசியெடுத்தார்கள். மானம் மரியாதை கௌரவம் என பல கதைகள்.

அவன் செத்துப் போனால் கூட நல்லமென்றது மனம். அந்தளவு வெறுத்துப் போனது. எல்லா தூதுவர்களின் அழைப்பையும் நிறுத்திக் கொண்டேன். 

மகன் படிக்க முடியாது அந்தரித்தான்.வீட்டு நிலமையை அறிந்த அவனது தோழ தோழிகள் அவனை தம்மோடு வருமாறு அழைத்தார்கள். 

மருத்துவப் பெற்றோர்களான அவனது தோழியொருத்தியின் பெற்றோர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். 

பரீட்சை முடியும் வரை மகனைத் தங்கள் வீட்டில் இருந்து படிக்க தங்கிடம் உணவு யாவும் கொடுப்போம் பிள்ளையை அனுப்பினால் போதுமென்றார்கள்.

பிள்ளையின் பிரிவு சாவுக்குச்சமானமான துயரம். அவனது நல்வாழ்வுக்காக அவனை வெளியில் அனுப்பினேன். தின்றது பாதி தின்னாதது பாதியாக பிள்ளையின் பிரிவுத்துயர். 

மகள் நிலமை மேலும் மோசமாகியது. அவள் மருத்துவம் பெற வேண்டி வந்தது. எல்லாம் இழந்து தனித்துப் போனேன். பழிசொல்லி பாவம் சொல்லி என்னை ஊரெங்கும் விபச்சரியாக சித்தரித்துக் கொண்டிருந்தான். 

அவனுக்கு ஆதரவாக எனது சித்தி சித்தப்பன் , என் அம்மாவும் சகோதரிகளும் அவன் சொல்வது யாவும் உண்மையென்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். 

எல்லோரும் கைவிட்ட நிலையில் வரும் பழிகளையும் சுமைகளையும் தாங்கி என் கண்ணீரை துயரை தாங்கினான் என் தோழன். 

எப்போதோ நான் செய்த உதவிக்கும் அவனைக் காத்ததற்கும் அவன் என்னை தோழ்தந்து காத்தான். 

15வருடம் போராட்ட வாழ்வு போரின் முடிவில் சிறைகளில் இருந்து மீண்டவன். அவனுக்கான பொறுப்புகள் குடும்பம் யாவும் இருந்தது. 

அப்போது நானிருந்த மனநிலையில் என்னை அழித்தோ அல்லது என்வாழ்வை சிதைத்தவனையும் சிதைத்தவளையும் கொன்று போட வேண்டுமென்ற கோபம். 

என்கோபத்தை ஆற்றுப்படுத்தி எனக்கும் பிள்ளைகளுக்கும் ஆதரவாக அவனே வந்தான். 

எனக்கு ஆதரவு தேவைப்பட்ட போது என்னைத் தாங்கிய தோழன் மீது சுமத்தப்பட்ட பழிகளையெல்லாம் அமைதியாகத் தாங்கினான்.
000             000             000

விவாகரத்து தீர்வுக்கான தவணைகள் 2016ம் ஆண்டு சித்திரை,ஆனி,ஆடி மாதமென மாறிக்கொண்டிருந்தது. 

வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவன் வீட்டை வங்கிக்கு கொடுக்கப்போவதாக தனது சட்டத்தரணி மூலம் கடிதம் எழுதுவித்தான்.

 அல்லது அவன் செலுத்த வேண்டிய கடன்களை நான் செலுத்தினால் வீட்டை எனது பெயருக்கு மாற்றுவதாக கேட்டிருந்தான்.

பிள்ளைகள் வெளியேறும் வரை எனக்கு வீடு தேவைப்பட்டது. எனது சட்டத்தரணியின் ஆலோசனைப்படி வீட்டை எனது பெயருக்கு மாற்றினேன். 

மகன் பல்கலைக்கழகம் தெரிவாகினான். பெரும் போராட்டத்தின் நடுவே அவன் சித்தியடைந்தான். கையில் எதுவும் இல்லை. 

எனக்காக உதவ இருந்த நண்பர்களை நாடி உதவிகளைப் பெற்று பிள்ளைகளுக்காக இருந்த நகைகளையெல்லாம் விற்று மகனை பல்கலைக்கழகப் படிப்புக்கு அனுப்பினேன்.

பிள்ளையின் பல்கலைக்கழக நுளைவுக்கு 4ஆயிரம் யூரோக்கள் கடனெடுத்துக் கொடுத்தேன். 

பிறகு மாதாந்தம் கிடைக்கும் கல்விக்கடனோடு எனது பங்காக 250யூரோ அவனுக்கு அனுப்ப வேண்டும். 

இடையில் பிள்ளைக்கான இதர தேவைகள் யாவுக்குமாக தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.

பிள்ளை என்ன படிக்கிறான் ? எந்த பல்கலைக்கழகம் எதுவுமே தெரியாது. பிள்ளைகளே இப்படியொருவனை எங்கள் வாழ்வில் சந்தித்ததாக நினைக்கக்கூடாதென்ற வைராக்கியத்தில் அவனது உதவியைத் தேடவில்லை. 

ஆனால் பிள்ளையின் கல்விக்கு தான் 15ஆயிரம் யூரோக்களை கொடுத்திருப்பதாக தனது ஊரவர்களை நம்ப வைத்திருக்கிறான். 

15சதம் கூட தராதவனையே எல்லோரும் நம்புகிறார்கள்.

17.08.2016 அன்று விவாகரத்து வந்தது. 

என்னைப்பீடித்த பீடை தொலைந்தது. பிள்ளைகளும் நானும் மீண்டோம். 

பழிசொல்லும் உலகினர் கதைகளில்  சிக்காமல்  எங்கள்  இலக்குகளில் உறுதியாக  இருந்தோம்.  

பிள்ளைகள் அவர்கள்  கனவை அடைந்தார்கள்.  முதற்பெயருக்கு மட்டுமே  உபயோகமான ஒருவனை அவர்கள் தங்கள் ஞாபகங்களிலிருந்து மறந்தார்கள்.

000.             000.          000.

அவன் பழையகாதலியையும் கைவிட்டான்.  
காலத்திற்கு காலம்  பெண்கள் உறவுகளை  நாடும்  அவன்  முகநூலில் ஒரு பெண்ணை பிடித்தான். காதலித்தான். அவளோடு  வாழத் தொடங்கியிருக்கிருக்கிறான்.


என்பற்றிய பழிசொல்தலை அவன் கைவிடவேயில்லை.

 2017 மகளும் பல்கலைக்கழகம் தேர்வாகி 01.10.2017 பல்கலைக்கழகம் போகப்போகிறாள். அவளது கல்விக்காக பத்தாயிரம் யூரோ கடனெடுத்துள்ளேன். 

 என்னால் எனது குழந்தைகளுக்காக எத்தனை ஆயிரங்களையும்  கொடுக்க முடியும்.எடுக்கும் கடனையும் செலுத்த உழைக்க முடியும். ஒளித்து ஓடமாட்டேன். என் குழந்தைகள் என் வரம்.அவர்களுக்காக வாழ்தல் தான் என்னை வாழ்விக்கும் ஊக்கி.

000.          000.              000      

அவன் எனது வீட்டு முகவரியைக் கொடுத்து பல வங்கிகளில் கடனட்டைகளுக்கு விண்ணப்பித்திருக்கிறான். 

உண்மை தெரியாத நான் கடிதங்கள் விலாசம் மாறி வருகிறதென  நினைத்து அவற்றையெல்லாம் அவனது முகவரிக்கு அனுப்பி வைத்தேன்.

கிடைத்து கடனட்டைகளில் பெருந்தொகை பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி பிரித்தானியாவில் புதிய மனைவியுடன் ஒளித்திருக்கிறான். 

இங்கே இருந்த வீட்டுக்கு வாடகை கட்டாமல் , வங்கிகளுக்கு பணம் செலுத்தாமல், வேலையிடத்தில் சொல்லாமல் வேலைக்கு போகாமல் ஒளித்தவனைத் தேடி வீட்டுக்கு விசாரணை வந்த போது தேடிய போதுதான் புதிய மனைவியுடன் வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தோடு வாழ்கிறான் என்ற உண்மை தெரிய வந்தது.

இருந்த போதும் தொல்லை இப்போது தொலைந்த போதும் தொல்லை தந்து விசாரணைகளுக்கு பதில் சொல்ல வைத்து ஒளித்திருப்பவனை முதுகெலும்பற்ற ஆணென்று சொல்வதைவிட வேறென்ன சொல்ல ?

இன்னும் இவனை நல்லவனென  நம்புகிவர்களுக்கும் அவன் என் மீது சுமத்திய பழிகளுக்கெல்லாம் காலம் தன் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்... ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்"

17.08.2017
 நேசக்கரம் சாந்தி

Wednesday, June 21, 2017

ஆனால் நீங்கள் துரோகிகள்.
(சாந்தி நேசக்கரம்)
-----------------------------------------
வீரமென்போம்
விடுதலை தாகமென்போம்.
போராடிக்களம் வென்ற
வேங்கைகள் கதைகள் சொல்வோம்.

 
ஓயாத எம் போர்க்குணத்தை
உலக அரங்கில் ஒலிக்கச் செய்வோம்.
நினைவு தினங்கள் ஒன்றையும்
மறக்க , தவற விடோம்.

கவனமாய் கவிபடித்துக்
கண்ணீர் வடித்து
தேசியத்தின் பொருளைரைப்போம்.

செல்பியெடுத்துச்
செல்லுலாபேசிக்குள்
சேமித்து முகங்களை
சமூகவலைகளிலே பகிர்ந்து
சத்தியம் செய்வோம்.

வெல்வோம்
வீரம் எங்கள் முகம்
போராட்டம்
எங்கள் பெருங்கொள்கை.
புலத்திலிருந்து போராடுவோம்.

குடியெல்லாம்
போர் தின்னக்கொடுத்து
கடன்பட்டு கப்பலேறி
புலம்பெயர்ந்த போரளிக்கு
பட்டங்கள் சூட்டுவோம்.

துரோகி
காட்டிக் கொடுத்திட்டு
வந்த கைக்கூலி,
றோவன்னா காவன்னாவென்று
கனக்க வகை.....!

அட நாசமாப்போறவங்களே.....!
இந்த இனத்துக்காகவோ
உங்களைத் தொலைத்தீர்கள்?

படிப்பு , வசதி , பணம்
பெருமைகள் பேசி
எதையாவது செய்யாமல்
ஏன் தொலைந்தீர்கள் ?

தினம் சாகும் பலன் பெற்ற சாபங்கள் நீங்கள்.
உங்கள் பெயரால் உங்கள் கதைகளால்
நாங்கள் பெரீய தேசிய விரும்பிகள்.

ஆனால் நீங்கள் துரோகிகள்.

(நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.)
22.06.2017

Saturday, April 22, 2017

தமிழினி. ஒருமுனை உரையாடல்.(சாந்தி நேசக்கரம்)

தமிழினி.ஒருமுனை உரையாடல்.

 முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது. உன்னோடு பேச விரும்பினாலும் மறுமுனையில் நீயில்லை.
தமிழினி !


ஒரு பெரும் கனவாகவே இருந்தவள் நீ. இரண்டாயிரமாம் ஆண்டு  தொடக்கத்தில் இலக்கியம் மூலம் அறிமுகமானாய். சமாதான காலத்தில் ஒரு இரவு இன்ப அதிர்ச்சி தந்து சந்தித்த போது என் கனவில் இருந்த தமிழினியாய் இல்லாமல் சாதாரணமானவளாய் கைகோர்த்தாய்.

தோழில் கைபோட்டுக் கதைபேசி அக்காவானாய். எனது எழுத்துக்களின் வாசகியாய் உன்னை அறிமுகம் செய்து நெருங்கிய தோழி நீ. அக்காவாய் அம்மாவாய் அன்பு தந்த ஆழுமை நீ.

உன்பற்றிய நான் வைத்திருந்த பெரும் விம்பங்கள் உடைந்து நீ; நெருங்கிய உறவாகினாய். இலக்கியம் அரசியல் என அனைத்தும் பேசிக்கொள்ளும் தருணங்களைத் தந்தது காலம்.

உனது பொறுப்புகள் கடமைகள் நடுவிலும் அவ்வப்போது ஏதோவொரு வழியில் தொடர்போடிருந்தாய். பலருக்கு உன்னைப் பிடிக்கும் சிலருக்கு உன்னை கசக்கும். பிடிக்காத சிலர் முன் உன்பற்றி உனக்காக வாதாடுவேன். உன்னைப் பிடிக்கும் பலர் முன்னால் மௌனமாகக் கடந்து செல்வேன்.

ஆயிரம் புத்தகங்களை வாசித்தறியும் அறிதல்களை உனக்குள் கொண்ட ஆற்றல் நீ. உன்னிடமிருந்து கற்றுக்கொண்டவை ஏராளம்.

செஞ்சோலை வளாக விமானக்குண்டு வீச்சில் ஏற்பட்ட இழப்பில் நீ குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட போது நீ உனக்குள் உருகினாய்.
000            000             000

உனது தலைமையில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கான தலைமைத்தவ கற்கைநெறி வழங்கப்பட்ட போது , இலங்கையரச விமானப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.

அந்த இழப்பின் முழுப்பொறுப்பும் உன்மீது சுமத்தப்பட்டது.
செஞ்சோலைப் படுகொலை பின்னர் உனது பதவி நீக்கம் பிறகும் நீ சோர்ந்து போகவில்லை.

வெற்றியை கொண்டாட கோடிகோடியாய் முன்வரும் யாரும் தோல்வியை அநாதையாகவே விட்டுவிடுவார்கள். நீயும் அப்படித்தான். அநாதைக் குழந்தையாய் தோற்றுப் போனாய். ஆனாலும் போராளியாகவே உன்னை உனது ஆற்றலை அடையாளப்படுத்தினாய்.

செய்யென்ற கட்டளைகளை கேள்வி கேட்காமல் செய்து கொண்டிருந்தாய். காலம் தந்த பணியில் புதிய போராளிகளை இணைக்கும் பணியில் உனக்கு பெரும் பங்கு இருந்தது. காலம் தந்த பணியில் விருப்பம் இல்லாது போனாலும் நிறைவேற்ற வேண்டிய விதி உனக்கு விதிக்கப்பட்டது.

புதிய போராளிகளை இணைக்கும் பணியில் நீயும் ஒரு ஆளாய் நின்றதற்காய் முதல் முதலாய் உன்னில் கோபம் வந்தது. நேரில் உன்னை சந்தித்தாலும் பேசவே கூடாதென்ற ஓர்மம் வந்தது. எனினும் உன் மீதான அன்பும் உன்னோடான நெருக்கமும் உன்னிலிருந்து பிரியாது உன்னை நேசிக்க வைத்தது.

அன்பு மட்டுமே உலகில் எல்லாக் குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் வலிமை மிக்கது. அந்த அன்பு தான் உனக்கும் எனக்குமான எல்லா வகையான முரண்களையும் தகர்த்து தோழமையை வளர்த்தது.

காலம் 2011 தை...,

2009 மேமாத முடிவுகளின் பின்னர் காணாமற்போன பலர் போல நீயும் காணாமல் போயிருந்தாய். திரும்பிவராதோர் பட்டியலில்; நீயும்....!

திடீரென ஒருநாள் விளக்கமறியல் சிறைச்சாலையில் நீயிருப்பதாய் தோழன் சதீஸ் (சிறையில் மரணமடைந்துவிட்டான்) அறியத்தந்தான். உன்னை அவன் மிகவும் கோபித்து திட்டியதாகவும் கூறினான்.

கொழும்பில் கைதாகும் போது குப்பிடியத்து தப்பியவன் சதீஸ். நீ குப்பிடியக்காமல் அல்லது உன்னை அழிக்காமல் எப்படி சரணடையலாம் என கோபித்தான்.

எந்த நேரமும் தன்னுயிரை இழக்கும் கனவோடு கொழும்பு வெளிமாவட்டங்களில் அலைந்தவன். அவன் கோபத்தில் அவனுக்கு நியாயமிருந்தது.

நீ ஏன் குப்படியித்து தப்பினாய் ? கேட்டதும் யோசிக்காமல் சொன்னான்.
அது ஆமி என்னை காப்பாற்றினான்....அல்லது நான் செத்திருப்பேன்....சாகத்தான் குப்பிடியச்சனான்.....என்றான் சதீஸ்.

சதீஸ் தன் வாதத்தில் பிடிவாதமாய் இருந்தான். நீயும் உன்போன்றவர்களின் சரணடைதலை அவன் ஏற்றுக் கொள்ளவேயில்லை. உங்களை நம்பி தங்கள் வாழ்வை சிறைகளில் கழிக்கும் போதெல்லாம் நீங்கள் களத்தில் இருக்கும் நம்பிக்கையே தன் சிறைவாழ்வைக் கூட பெரிதாக அலட்டவில்லையென்றான்.

அவன் சொன்ன கதைகளின் கனம் அவனது துயரின் வெளிப்பாடு உன் மீதான கோபமாக வெளியேறியது.

2011 தொடக்கத்தில் உன்னுடன் பேசுவதற்கான தொலைபேசியிலக்கம் தேடி சிறையில் இருக்கும் வேறொரு நண்பன் மூலம் பெற்றுக் கொண்டேன்.

அழைத்த நேரம் சாமம் தாண்டியிருந்தது. குரல் கேட்டதும் முதலில் அழுதாய். உன் கண்ணீரும் கலக்கமும் தீராமலே தொடர்ந்தது. நிமிடங்கள் கழிந்தது.

நான் யாரையும் காட்டிக் குடுக்கேல்ல. நானும் என்ரை கையால மண்போட்டு எத்தனை பேரை வழியனுப்பினான் ?
நானெப்பிடியம்மா காட்டிக் குடுப்பேன் சொல்லு ?

நீ கேட்ட கேள்விகள் எதற்கும் என்னிடம் பதில் இல்லை. உன் கண்ணீர் நீ சொன்ன கதைகள் உன் மீதிருந்த கோபத்தையும் கழுவிச் சென்றது.

சுகம் கேட்டு சுகம் சொல்லும் இடத்தில் நீயில்லை எனினும் கேட்டேன்.

எப்பிடியக்கா இருக்கிறீங்கள் ? வழக்கு என்ன மாதிரி ?
நீதிமன்றுக்கு போறன் வாறன். எந்த மாற்றமும் இல்லை.

நீங்களெப்பிடி இருக்கிறியள் ? பிள்ளையள் வளந்திருப்பினம் ? உன் விசாரிப்பில் பழைய தமிழினியின் கருணையும் அன்பும் கலந்தேயிருந்தது.

அன்றிலிருந்து உன்னோடு தினமும் இரவு தொலைபேசிக்கொள்வது கடமையானது. தினசரி வெளிச்செய்திகளை உனக்கு சொல்லுவேன். சிலவேளைகளில் கவிதைகள் கூட உனக்கு வாசிக்க வேண்டி வந்தது.

சிலவேளைகளில் உறங்க முடியாமல் இரவுகளில் அழுதபடி அழைப்பாய். உன்னோடு விடிய விடியவும் பல நாட்கள் பேச வேண்டியிருந்தது. மன அழுத்தத்தின் உச்சம் உன்னை ஆட்கொண்டிருந்தது. சரியான மருத்துவமோ மாற்றுச் சிகிச்சையோ எதுவும் இல்லாத காலம் அது. உன்னோடு கதைத்துக் கதைத்து உன் கண்ணீரை துடைக்கத் தொடங்கினேன்.

கதைகதையாய் நீ சொல்லும் ஒவ்வொரு கதையும் கண்ணீராலேயே நிரப்பப்பட்டு உன் துயரங்களையே என்னுள் நிரந்தரமாக்கிவிடும்.

சிறையில் வாழும் பெண்கள் அவர்களது தனிமை துயரம் கண்ணீர் யாவையும் நீயொருத்தியே மொழிபெயர்த்தவள். வரிசையில் நின்று உணவு பெறுதல் முதல் அடிபட்டு தண்ணீர் எடுப்பது காக்கா குளியல் வரையும் நீ சொல்லும் கதைகள் ஒவ்வொன்றும் சிறைக்கதவுகளின் பின்னால் புதைந்திருக்கும் கோரமான உலகின் அறிமுகத்தைத் தந்தது.

அடிக்கடி அம்மாவுக்காய் அழுவாய்....உன்னோடு வாழ்ந்து மடிந்தவர்களுக்காய் மனமுருகிக் கண்ணீர் விட்டழுவாய். உன்னை உயிரோடு தப்புவித்து பழிசுமக்க வைத்த காலத்தைச் சபிப்பாய். ஆறுதல் சொல்ல முடியாது மறுமுனையில் சேர்ந்து அழும் போது மீண்டும் ஆறுதல் தரும் அம்மாவாகிச் சிரிப்பாய்.

அந்தக் கொடிய நாட்களில் உன்னோடு துணையாய் வந்தது இரண்டு. ஒன்று பைபிள் மற்றது நானென்று உன் நன்றியை அடிக்கடி தெரிவிப்பாய்.

 இராணுவச் சீருடைதரித்து உலவிய தமிழினிக்கும் சேலையுடுத்தவும் பொட்டுவைக்கவும் பூவைத்து உலவவும் வாழ்வை ரசிக்கவும் வாழவும்  ஆசைப்பட்ட காலம் அது.

என்னமாதிரியக்கா ஒளிவட்டம் ஏதும் தெரியேல்லயோ ? போடியப்பா காய்க்காலம் போயிட்டுது இனியென்ன பழங்கள் தானே.

எங்களையெல்லாம் கலியாணம் கட்ட இனி எவனடி வரப்போறான்.

அக்காவின் பிடரியின் பின்னால் மொழி திரைப்படத்தில் பிரகாஸ்ராஜ்ஜிற்கு தெரிந்தது போல ஒரு ஒளிவட்டம் தோன்றும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.

உனக்குள் ஒரு ராஜகுமாரன் இருந்தான். உனக்குள்ளும் மௌனமாய் ஒரு காதல் கோட்டை இருந்தது. உனக்குள்ளே நீ வளர்த்த காதல்செடியில் கோடி மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.

அவரைத் தொடர்பு கொண்டு உன்பற்றிச் சொன்ன போது உன் ராஜகுமாரன் இருந்த நிலமை உன்னைப் பற்றி யோசிக்கும் நிலமையில் இல்லையென்பதை வருத்தத்தோடு அறியத்தந்தார். தனது தொடர்பு இல்லையென்று சொல்லச் சொன்னார்.

நீ அவரோடு பேச ஆசைப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அவர் உன்னுடன் பேச விரும்பவில்லை என்ற உண்மையை இறுதிவரை உனக்கு மறைக்க நான் சொன்ன பொய்களெல்லாம் ஒருநாள் பொய்யாகிப் போனது.

ஏன் பேச விருப்பமில்லையாமோ ?
 சீ அப்பிடியில்லை அவருக்கும் கனக்க பிரச்சனையள் தானே...கதைப்பார் கொஞ்சம் பொறுங்கோ.

சரி விடு ஆனால் எல்லாருக்கும் சொல்லிவிடு நான் யாரையும் காட்டிக் குடுக்கேல்ல...யாருக்கும் துரோகம் செய்யேல்ல.

அதற்குப் பிறகு உனது காதல் கோட்டை உன் கண்ணீரால் உடைந்து கரைந்தது.

உனக்குப் பயிற்சி தந்தவர்கள் உனக்கு பெயரிட்டவர்கள் உன்னோடு வாழ்ந்த பெரிய அக்காக்களில் பலர் வெளிநாடுகளில் இருந்தார்கள்.

உன்னைப்பற்றிய அவர்கள் பலரது கருத்து :- நீ காட்டிக் கொடுக்கிறாய்.
உனக்கு உதவாமல் தப்புவதற்காக அவர்கள் சொன்ன பழியே நீ துரோகியாகக் காரணம்.

நீ நேசித்தவர்களே உன்னை துரோகியாக எண்ணி ஊகங்களால் உன்னை காயப்படுத்திய கதைகள் ஏராளம். சிலரை விசாரித்தாய் அவர்களுடன் பேச ஆசைப்பட்டாய். உனக்காக அவர்களையெல்லாம் தேடித் தொடர்பு கொண்டேன்.

தொடர்பில் இருந்த பலர் தங்களுக்கும் எனக்கும் தொடர்பாடல் உண்டு என்பதை உனக்கு சொல்ல வேண்டாமென வேண்டிக் கொண்டார்கள். கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி வெளிநாடு வந்தவர்கள் உன்னை வெறுத்தார்கள்.  யாரும் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை.

நீ பேச ஆசைப்பட்டவர்கள் யாரும் உன்னோடு பேசவோ தொடர்பை ஏற்படுத்தவோ விரும்பவில்லை. உன்னை வேண்டாமென்றவர்கள் தொடர்பை நானும் துண்டித்துக் கொண்டேன். ஏனெனில் உனது கண்ணீரையும் துயரையும் தினம் தினம் கேட்டுக் கொண்டிருப்பவள் நான்.

இயக்கம் கலைத்துவிட்டவர்களும் தப்பியோடி வந்தவர்களும் பலர் உன்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். நீ அரசோடு சேர்ந்துவிட்டதாகவும் உன்னோடு நானும் அரசபுலனாய்வாளர்களின் ஆளெனவும் கதைகள் பரவத் தொடங்கியது.

தாங்கள் மட்டுமே தேசத்தின் காவலர்கள் எனும் கனவில் பலர் மிதந்தார்கள்.

நீ  அதிகாரத்தில் இருந்த காலங்களில் செய்த தவறுகள் என நீண்ட பட்டியல் ஒன்றை சொல்லத் தொடங்கினார்கள். பெரிதாய் நினைத்த பலரின் உண்மை முகம் வெளிவந்தது.

தவறுகளே செய்யாத மகாத்மாக்களாய் தங்களை நிறுவிய பலரின் தொடர்புகளை துண்டித்துக் கொண்டேன்.

நீ விடுதலையாகக் கூடாது என்பது பலரது எண்ணம். ஆனால் உன்னை மீட்க வேண்டும். பழிசொல்லும் இவர்கள் முன்னால் நீ வாழ்ந்து காட்ட வேண்டும்.

உன்னை மீட்கும் வழிகளைத் தேடத் தொடங்கினேன். உன் அம்மா , தங்கை யோகா யாவரும் உனது விடுதலைக்கான கதவுகளைத் தட்டத் தொடங்கினோம்.

அம்மாவின் அலைவுகளின் பயனாக சட்டத்தரணி ஒழுங்கானார். உனது வழக்கு நடக்க ஆரம்பித்தது. புனர்வாழ்வு கிடைக்கும் என்பது ஊகமாகி அது உண்மையாகும் தருணம் நெருங்கியது.

அம்மாவோடை இடைக்கிடை கதை. பாவம் மனிசி. நானொரு தேனீர் கூட மனிசிக்கு வைச்சுக் குடுத்ததில்லை. வெளியில போனதும் மனிசிக்கு உழைச்சுக் குடுக்க வேணும். மனிசியை நல்லா வைச்சுப் பாக்க வேணும். இனியெண்டாலும் என்ரை குடும்பத்தை நான் தாங்க வேணும்.

எப்பிடியெண்டாலும் என்னை வெளிநாடு எடுத்துவிடு நான் வந்து உழைச்சு கடனைத் தருவன். உன்னை  தான் நம்பிறன்.
இதுதான் உனது பெரிய கனவாக இருந்தது.

உனது விடுதலையின் பின்னர் அம்மாவுக்காகவும் உன் குடும்பத்தின் உயர்வுக்காகவும் வாழ ஆசைப்பட்டாய்.

அடிக்கடி உன்னை வருத்தும் வயிற்றுவலியும் உடற்சோர்வும், தொடர்ந்து வதைக்கும் ஊடகங்களின் செய்திகளும் உன்னை உன் நிம்மதியை நித்திரையைப் பறித்துக் கொண்டிருந்தது.

நீ நீதிமன்று போய் சிறைச்சாலைக்கு வந்துவிடுவாய். அன்றைய நீதிபதியின் முடிவை எதிர்பார்த்திருக்கும் எனக்கும் உன் அம்மாவுக்கும் பலதடவைகள் ஏமாற்றம் தான் மிஞ்சும். வெலிக்கடை சிறைக்கம்பிகளின் பின்னால் நீ அன்றைய முடிவோடு வந்து களைத்திருப்பாய்.

உனது பெயரையும் உனது படத்தையும் ஊடகங்கள் வைத்து செய்யும் வியாபாரம் மட்டும் லட்சக்கணக்கான வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கும். அந்தச் செய்திகளை உனக்கு வாசித்துக் காட்டும் போது நீ அழுவாய்.

ஊடகங்களாலும் உண்மை புரியாதவர்களாலும் நீ மனவுளைச்சல்படும் தருணங்களை யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது போனது.

இன்று நாளையென உனது விடுதலையின் நாட்கள் எண்ணப்பட்டு ஒருநாள் நீ புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட காலம் வந்தது. அந்தச்  செய்தியை நீயே அறியத்தந்தாய்.

வெளியில வந்ததும் என்னைக் கூப்பிடுற வழியைச் செய்ய வேணும். விதலையானதும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே உனது எண்ணம்.

000       000         000         

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு நீ அனுப்பப்படுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. முகம் பார்க்கவே முடியாத நெருக்கம் மிகுந்த கம்பிகளை விட்டு  வெளியேறும் நாளை எதிர்பார்த்திருந்தாய்.

உயர்ந்த மதில்களுக்குப் பின்னால் தொலைந்த இருள் நிறைந்த வாழ்விலிருந்து விடுதலையாகி பொதுவெளியில் உனது புனர்வாழ்வு அமையவிருந்தது.

புனர்வாழ்வுக்குச் செல்லவிருந்த உனக்கான அடிப்படை தேவைகளை அனுப்புவதற்கு தேவைப்பட்டது பதினெட்டாயிரம் ரூபாய்கள்.

அந்தப்பதினெட்டாயிரம் ரூபாய்களைப் பெறுவதற்கு சிலரிடம் உதவி கேட்ட போது நம்பியவர்களே மறுத்தார்கள். இறுதியில் அந்தப்பணத்தை நானே தயார் செய்து அனுப்பிய போது :-

உனக்கு எப்பிடி நான் இதையெல்லாம் திருப்பிச் செய்வன் ? என அழுதாய்.

வெலிக்கடைச்சிறையில் இருந்து வவுனியா கொண்டு செல்லப்படுவதற்கு முதல்நாள் மதியம் தங்கை யோகா தொடர்பு கொண்டாள்.

அக்கா நாளைக்கு வவுனியா போகப்போறா உங்களை ஒருக்கா கதைக்கச் சொல்லட்டாம்.

அன்றைய இரவு தொடர்பு கொண்டேன்.
நாளைக்கு நான் வவுனியா போயிடுவன்.
அங்கையிருந்து கதைக்க கிடைக்குமோ தெரியேல்ல.
அப்பிடிக் கிடைக்காட்டில் வெளியில வந்த பிறகுதான் கதைக்கலாம்.
அம்மவோடையும் யோகாவோடையும் தொடர்போடை இரு.
ஏதுமெண்டா அவை சொல்லுவினம்.

அன்று நீண்டநேரம் கதைத்தோம். விடிய 4மணிக்கு உன்னிடமிருந்து விடைபெற்ற போது..,

எனக்கொரு ஒளிவட்டத்தைக் கண்டுபிடி. சொல்லிக்கொண்டு சிரிப்போடு விடைபெற்றாய்.

000       000         000
26.06.2012 வவுனியாவிற்கு புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டாய். ஊடகங்கள் உன்னைப்பற்றி செய்திகளால் அந்த வாரத்தை தமதாக்கிக் கொண்டது.
அருகில் நின்று உன்னைப் பார்த்தது போல செய்திகள் எழுதினார்கள். அந்தச் செய்திகள் கேட்டு நீ எவ்வாறு துடித்தாய் என்பதை அறிவேன்.
இரக்கமே இல்லாமல் நீ செய்திகளாலும் ஊடகர்களாலும் பிய்த்தெறியப்பட்டாய்.

000         000          000

13.07.2012பிரித்தானியா போயிருந்த போது தம்பி அனுராஜ்ஜிடம் உன்னைப்பற்றி கதைத்திருந்தேன். விரைவில் நீ விடுதலையடைவாய். உனது நிலைபற்றிச் சொன்னேன். நீ திருமணம் செய்ய விரும்புவதையும் தெரிவித்தேன்.

அல்லது  ஸ்பொன்சர் செய்யக்கூடியவர்கள் இருந்தால் பணம் கொடுத்து உன்னை வெளியில் எடுப்போம் எனவும் கேட்டிருந்தேன்.

அன்று முதல் அனுராஜ் என்னோடு சேர்ந்து உனக்கு திருமணம் செய்வது அல்லது பணம் கொடுத்து யாரையாவது பிடித்து ஸ்போன்சர் செய்ய ஏற்பாடு செய்வதில் ஆட்களைத் தேடினோம்.

அனுராஜ் !
ஒரு போராளி. முள்ளிவாய்க்கால்வரை அவனும் போராடியவன். தாயகவிடுதலைக்காய் அவனும் தன்னை முழுதாய் இழந்தவன். ஏற்கனவே உன்னோடு அறிமுகமானவன். எங்களை நீ நம்பினாய். நாங்கள் உன்னை மீட்போம் என்ற நம்பிக்கையோடு புனர்வாழ்வு போனாய்.

பணத்தைத் தயார் பண்ணி வைப்பது நீ விடுதலையானதும் உன்னை வெளிநாடு எடுப்பது என்ற எங்கள் முயற்சியில் பலரை நாடினோம். தேசியம் தாயகம் சுதந்திரம் என பேசிய பலர் தந்த பதில்களில் உனக்காக ஒருசதத்தைத்தானும் தயார் செய்ய முடியவில்லை.

அம்மா உனக்கு திருமணம் செய்து வைக்கவே விரும்பினா.
நானும் போயிட்டா அக்கா தனிச்சுப்போடுவளம்மா. அவளுக்கு ஒரு
கலியாணம் பேசு பிள்ளை.

 அம்மா இதைத்தான் முடிவாய் சொன்னா.

உனது வயது உனது கடந்தகாலம் பற்றி கேட்கும் யாரும் உன்னை மணமுடிக்க முன்வரவில்லை. திருமணம் பேசும் தரகர்கள் சிலரை அணுகியபோது அவர்களும்...,

இயக்கத்தில இருந்துnவையெண்டா தெரியும்தானே...
நீங்கள் வேறையாரும் இருந்தா சொல்லுங்கோ என ஒரு திருமணத்தரகர் உனது படங்களைத் திருப்பியனுப்பினார்.

உனக்கான திருமணம் என்பது அவ்வளவு இலகுவில் நடக்கும் என்பது நம்பிக்கையற்றுப் போனது. உன்னை ஏதாவது மாற்றுவழி மூலம் வெளிநாடு எடுக்கும் முயற்சி மட்டுமே சரியென்று தோன்றியது.

முகநூல் மூலம் அறிமுகான ஜெயன்தேவாவோடு முகநூலில் அடிக்கடி சட்பண்ணிக்கொள்வேன். எனது எழுத்துக்களின் வாசகர் ஜெயன்தேவா. நேசக்கரம் சமூகப்பணிகளில் தனது ஆதரவையும் வழங்கியவர்.

பிரித்தானியா போன போது அனுராஜ்யும் நானும் ஜேயன்தேவாவை நேரில் சந்தித்தோம். ஏற்கனவே அனுராஜ் ஜெயன்தேவா அவர்களுடன் அறிமுகமாகியிருந்தான்.

ஜெயன்தேவா நேசக்கரம் பணிகள் பற்றி கதைத்த போது ஒரு போராளிப் பெண்ணுக்கு உதவி தேவையென்பதைத் தெரிவித்தேன். தன்னால் முடிந்த உதவியை தானும் செய்வதாக தெரிவித்தார்.

உனது வயதையும் தெரிவித்து திருமணம் செய்ய யாராவது முன்வந்தால் அந்த முயற்சியையும் மேற்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்தோம்.

ஜெயன்தேவா உதவ முன்வந்த போதும் அது தமிழினிக்குத் தான் உதவியென்றதை தெரிவிரிக்கவில்லை. எங்களோடு சேர்ந்து ஜெயன்தேவாவும் உனக்கான வழியொன்றை அமைக்க துணையாக நின்றார்.

04.08.2012 அன்று துளசி இல்லத்தில் நடைபெற்ற எனது கவிதைநூல் வெளியீட்டு விழாவிற்கு ஜெயன்தேவாவும் பேச்சாளராக வந்திருந்தார். அந்தச் சந்திப்பின் பின்னர் அடிக்கடி போராளிகள் உதவிகள் பற்றி ஜெயன்தேவா உரையாடுவது வழக்கம்.

நீ விடுதலையானதும் உன்னை ஸ்பொன்சர் செய்து வெளிநாடு எடுப்பது என்பதைத்தான் அப்போதைய முடிவாக எடுத்தோம்.

பிரித்தானியாவிலிருந்து யேர்மனி திரும்பிய பின்னர் அம்மாவுடன் பேசியபோது ஜெயன்தேவா பற்றி அம்மாவுக்குச் சொன்னேன்.

ஏன் பிள்ளை அவர் அக்காவை கலியாணம் கட்டுவரே ? இது அம்மா.
ஏன்னம்மா உங்களுக்கு விசரே அவருக்கும் அக்காவுக்கும் 13வயது கூட. அதெல்லாம் சரிவராது. இது நான்.

அவவை வெளிநாடு எடுக்கிறதுக்கான உதவிதான் அவர் செய்யலாம். தொடர்ந்த என்னை அம்மா மறித்தா.

பிள்ளை எனக்கும் அப்பாவுக்கும் 17வயது வித்தியாசம் நாங்களும் நல்லா வாழ்ந்தனாங்கள். வயதொண்டும் பிரச்சனையில்லை. மனம் ஒத்துப்போனால் சரி.

அம்மா உனக்கொரு திருமணம் செய்ய வேண்டுமென்றதில் பிடிவாதமாயிருந்தார். தாயின் ஆசையது. ஆனால் நடைமுறையில் இருந்த பிரச்சனைகள் அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வவுனியா புனர்வாழ்வு முகாமில் தொலைபேசும் வாய்ப்பு வந்தது. சனி , ஞாயிறுகளில் உன்னோடு தொலைபேசத் தொடங்கினேன். அந்தச் சில நிமிடங்களில் உன் குரலைக்கேட்டு நலவிசாரிப்போடு பேசவேண்டிய விடயங்களை அவசரமாக பேசி விடைபெறுவேன்.

உன்னை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அம்மாவுக்கு இருந்தது. அப்படியொரு சந்திப்புக்கு வந்த போது அம்மா ஜெயன்தேவா பற்றி உனக்குச் சொல்லியிருந்தா.

நீ அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லியனுப்பியிருந்தாய். வெளிநாடு வருவதற்காக பொய்யான திருமணம் ஒன்றைச் செய்வதில் உனக்கும் உடன்பாடு இல்லையென்பதையும் சொல்லியிருந்தாய்.

தங்கை யோகா தொலைபேசியில் அழைத்துச் சொன்னாள். அக்கா உங்களைக் கதைக்கட்டாம்.

ஒரு சனிக்கிழமை தொடர்பு கொண்டேன். 

ஏற்கனவே விவாகரத்து பெற்ற ஜெயன்தேவாவிற்கும் உனக்குமான வயது வித்தியாசம் , நீ கடந்து வந்த அரசியலிற்கு முரணான அரசியல் கொள்கைகளோடு உள்ள ஒருவருடன் உனக்கு ஒத்துவருமா ?

அப்படி அவரை நீ திருமணம் செய்தால் உன்னைத் துரோகியாக்கியவர்கள் எப்படி உன்னை தூற்றுவார்கள் ? இதுவே எனது நிம்மதியைத் தின்று கொண்டிருந்தது.

ஜெயன்தேவாவும் தனக்கும் உனக்குமான வயது வித்தியாசம் தனது கடந்தகால வாழ்வின் குறைகள் உன்னை பாதிக்கும் என்பதை தெரிவித்தார்.
தன்னைப்பற்றி வெளிப்படையாக தனது கடந்தகால வாழ்வு பற்றி எதையும் மறைக்காமல் தெரிவித்த மனிதரை நீ நேசிக்கத் தொடங்கினாய்.

ஓரு சனிக்கிழமை உன்னை தொலைபேசியில் அழைத்தேன். நீ ஜெயன்தேவாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை வெளிப்படையாய் சொன்னாய்.

உங்கள் இருவருக்குமான வயது வேறுபாடு இயல்புகளைப்பற்றிச் சொன்ன போதும் நீ எதற்கும் உடன்படவேயில்லை. இந்தத்திருமணத்தில் உடன்பட மறுத்த எனக்கு நீ சொன்ன காரணங்களுக்கும் கேட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லாது போனது.

வாழுறது கொஞ்சக்காலம் அதில வயசு வேறுபாடு அரசியல் பாத்து என்னத்தையம்மா சாதிச்சம் ? இருக்கிறமட்டும் நிம்மதியா வாழ்ந்திட்டு சாவம்.  இதுதான் நீ இறுதி முடிவாய் சொன்னது.

ஜெயன்தேவாவோடு பேச விரும்பினாய். அம்மாவோடு முதலில் பேசிய ஜெயன்தேவா அம்மாவுக்கு தன்னைப்பற்றி கூறினார். அம்மா அவரை உனக்கான வாழ்க்கைத்துணையாக அமைப்பதையே விரும்பினா.

நீயும் ஜெயன்தேவாவும் தொலைபேசத் தொடங்கினீர்கள். கடிதங்கள் எழுதினீர்கள். உனது மாற்றங்கள் பற்றி அம்மா சொல்வதை நானும் யோகாவும் ஆச்சரியமாய் கதைப்போம்.

உன்னைப்பார்க்க வந்து திரும்பும் ஒவ்வொரு முறையும் உனக்கான ஒளிவட்டம் பற்றி நீ சொல்லும் யாவையும் அம்மா அப்படியே வந்து சொல்லுவா.

விதி யாரையும் தன் கணக்கிலிருந்து விட்டுவைக்காது என்பதற்கு உனது வாழ்வு காலச்சான்றாகியது. எதிரெதிர் குணங்களோடான ஒருவரோடு சமரசம் செய்து வாழ்வதற்கு நீ தயாராகினாய். நீ ஜெயன்தேவாவைக் காதலித்தாய். உனது இயல்புகளோடும் தன்னை மாற்றி உன்னோடு வாழ ஜெயன்தேவாவும் தயாராகினார்.


000         000         000
நீ விடுதலையாகும் நாள் அறிவிக்கப்பட்டது. உனது விடுதலையை ஊடகங்கள் எப்படியெல்லாம் பலியெடுக்கும் என்பது அறிந்ததே. நாம் எதிர்பார்த்தது போல நீ விடுதலையாகும் நாள் விடிந்தது. அம்மாவிடம் நீ கையளிக்கப்பட்டாய்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல ஊடகங்கள் உன்னை மீண்டும் துரத்தத் தொடங்கியது. நீ உனது நிம்மதியை இழந்து போனாய். ஆளாளுக்குக் கதையெழுதினார்கள். பழி சொன்னார்கள்.

தமிழினியிடம் பேட்டியெடுக்க வேணும். உங்களோடை கதைக்கிறவாம் ? தீபச்செல்வன் தொடர்பெடுத்தான்.

நான் அவவோடை கதைக்கிறேல்ல.

நீயும் நானும் கோபம் என்பது போல அவனுக்கு நடிக்க வேண்டியிருந்தது.

உன்பற்றி தீபச்செல்வன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித பதிலையும் கொடுக்கும் நிலையிலும் அன்று நானில்லை. நீ எப்படி அந்தரிப்பாயோ என்பது தான் தொடர் கவலையைத் தந்துகொண்டிருந்தது.

நீ மகளீர் அரசியல்துறையின் பொறுப்பாளராயிருந்த காலத்தில் ஒருநாள்கூட உன்னோடு பேசி அறியாதவன். தனது தங்கையை இயக்கம் இறுதி யுத்தத்தின் போது போராளியாக்கியதற்காக நீயே காரணம் என்றான்.
தன் தங்கையைக் கொண்டு போனவர்களைக் கண்டித்து தனது வலைப்பூவில் கவிதை எழுதினான். தனக்கென்று வரும் போது தீபச்செல்வனின் தியாக முகம் கோரமாயிருந்தது.

உனது தொலைபேசியலக்கத்தை புனர்வாழ்வு முகாமில் இருந்து பெற்றுக் கொண்ட தீபச்செல்வன் அம்மாவை தொலைபேசியில் அழைத்தான்.
சக்தி தொலைக்காட்சியில் வேலைசெய்து கொண்டிருந்த தீபச்செல்வன் ரூபவாகினி தொலைக்காட்சியில் இருந்து பேசுவதாக அம்மாவின் தொலைபேசிக்க அழைத்தான்.

தமிழினியுடன் கதைக்க வேண்டுமென்றான் அப்படியொரு ஆள் இல்லையென்ற அம்மாவின் பதிலில் திருப்திப்படாதவன் சிவகாமியுடன் கதைக்கவென்றான் அப்படியும் ஒரு ஆளில்லையெனச் சொல்லி அம்மா தீபச்செல்வனை மட்டுமல்ல தொடர்பு கொண்ட எல்லோரின் தொடர்பையும் துண்டித்துக் கொண்டா.

அம்மாவிடம் கையளிக்கப்பட்ட நீ உனது ஊருக்குப் போகவில்லை. உனக்காக உனது துணைவனால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நீ வாழத்தொடங்கினாய். நீ விரும்பிய உனது காதல் துணையோடு உனக்கு பதிவுத்திருமணம் நடைபெற்றது.

நீ பிரித்தானியா வந்து சேரும்வரை யாருக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரியக்கூடாது என்பதில் யோகாவும், நானும் கவனமாயிருந்தோம்.
உன்னை வைத்து அரசியல் செய்யும் பலருக்கு நீ பேசுபொருளாயிருந்தாய். உனக்குள்ளும் ஒரு வாழ்வு பற்றிய கனவுகளும் ஆசைகளும் நிரம்பியிருந்ததை யாரும் அறியார். நீ விரும்பிய வாழ்வை நீ அமைத்துக் கொண்டாய்.


ஓளிவட்டத்தை கண்டவுடனும் எங்களை மறந்து போயிட்டியள் என்ன ?
திருமணம் முடிந்து சிலநாட்களில் கேட்ட போது...,
என்ரை வாழ்க்கையில உன்னை நான் எப்படி மறப்பேன் ?
குரல் உடைந்து சொன்னாய்.

ஜெயன்தேவா பற்றி நீ வைத்திருந்த மதிப்பும் நீ வாழ்ந்த வாழ்வையும் அடிக்கடி சொல்லி மகிழும் தருணங்களில் இப்படியொரு மனிதரை உனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றியென அடிக்கடி சொல்லிக் கொள்வாய்.

முகநூல் பல நல்லவர்களையும் நல்ல விடயங்களையும் தந்து கொண்டிருக்கிறது. உனது வாழ்வில் நீ மீண்டும் புதிதாய் பிறக்க உன் வாழ்க்கைத் துணையாய் அமைந்த ஜெயன்தேவாவையும் முகநூல் தான் பெற்றுத்தந்தது.

உன்னைப் பிரித்தானியா எடுப்பதற்கான முயற்சிகளில் இழுபறிகள் தொடங்கியது. அனுராஜ் சில உதவிகளை தானே முன்வந்து செய்தான். சட்ட ஆலோசனைகளை சட்டத்தரணி நண்பர் கீத்திடம் பெற்றுக் கொண்டு உனக்கான ஸ்பொன்சர் அலுவல்கள் தொடங்கியது.

பிரித்தானியா வந்ததும் உன்னை விமானநிலையத்தில் வரவேற்க நான் வர வேண்டுமென்றாய். நாங்கள் நிறையக் கதைக்க வேணும் என்றெல்லாம் கனக்கச் சொன்னாய்.

ஸ்கைப் ஊடாக தினமும் பேசிக்கொள்ளும் வசதி வந்தது. நிறையக் கதைகள் ஸ்கைப் மட்டுமே அறியும். சிரிப்பு , அழுகை , துயரம் எத்தனை கதைத்தோம்.
உன்னைச் சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தேன்.

000              000                        000

உனக்குள்ளேயே குறுகிப்போன உன்னை வெளியில் கொண்டுவர விரும்பிய ஜெயன்தேவா உனக்கு கணவனாய் மட்டுமன்றி உனக்கு நல்ல தோழனாகினார். ஜெயன்தேவாவுக்கு இறுதிவரை மனைவியாக வாழ்ந்து இறந்து போகவே நீ ஆசைப்பட்டாய்.

சமூகம் விடுதலை என நீ வகுத்த பாதைகள் யாவும் நடைமுறைக்கு சரியாகாதவையென நீ உனக்குள்ளே முடிவெடுத்து பலமுறை என்னோடு முரண்பட்டுக் கொண்டாய்.


சீருடையில் பார்த்துப் பழகிய தமிழினி முற்றிலும் மாறிப்போனாள். சேலைகட்டி பஞ்சாபி போட்டு உச்சி நெற்றி கழுத்தில் கும்குமம் வைத்து வாழ்வதில் மகிழ்ச்சியிருப்பதாய் நம்பினாய்.

ஆனால் சிறந்த எழுத்தாற்றல் கொண்ட தமிழினியை உலகத்திற்கு தர ஜெயன்தேவா ஆசைப்பட்டார். எழுத்தும் மன அழுத்தத்தை மாற்றும் மருந்து என்பதை நானும் உனக்கு அடிக்கடி வலியுறுத்தினேன்.

ஜெயன்தேவா உன்னை முகநூலில் எழுத ஊக்குவித்தார். ஜெயன்தேவா , சிவகாமி என்ற பெயரை சுருக்கி ஜெசியாக கவிதைகள் எழுதினாய். றொமீலாவாகவும் நிறைய எழுதினாய். பின்னர் தமிழினியாக வெளிப்பட்டாய்.

உனது உலகம் விரிந்தது. முகநூலுக்கு வந்து அரட்டையடிக்காமல் சிறந்த எழுத்தாளர்களோடு அறிமுகமானாய். கல்வியியலாளர்களோடு உனது கருத்துக்களை எழுத்துக்களைப் பகிரத் தொடங்கினாய்.

உனக்கு உதவி கோரியபோது உன்பற்றி விமர்சித்தவர்கள் கூட உனது வாசகர்களாகினர்.

நீ நிறைய எழுதினாய்.  ஸ்கைப்பில் உனது எழுத்துக்களை வாசித்துக்காட்டுவாய். வீடியோவில் முகம்காட்டி மணிக்கணக்காய் பேசுவாய். உன்னைப் பிடித்திருந்த இருட்காலம் அகல்கிறதென்பதை நம்பத் தொடங்கினாய்.

பழைய தமிழினியைக் கண்டெடுத்த ஜெயன்தேவாவிற்கு எத்தனை கோடிதடவைகள் நன்றி சொன்னாய்..., இப்போதும் நீ உன் துணைவர் பற்றி சொன்ன கதைகள் நிறைய இருக்கிறது.

உண்மையான அன்பு இப்படித் தானிருக்குமோ ? பலதடவை நானும் யோசித்ததுண்டு. நீ காதல் , நேசிப்பு பற்றி வகுப்பெடுக்கும் அளவு மாறிப்போனாய்.

உலகில் ஒரு பெண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணை கிடைத்தால் அவளால் உலகையே ஆழ முடியும் என்பதற்கு நீ அடையாளமாகினாய்.

அழுதழுதே சிறைக்கம்பிகளின் பின்னே காலம் போகப்போகிறதென நம்பிய நீ சிரிக்கத் தொடங்கினாய். வாழ ஆசைப்பட்டாய். வாழ்வை ரசிக்கத் தொடங்கிய உனக்கு வருடக்கணக்காய் அலைத்த வயிற்றுவலி அதிகரிக்தக் தொடங்கியது.

என்னாலை இருக்கேலாதாம் அசையேலாதாம்.., இப்படி நீ வலியில் துடித்து மருத்துவமனை சென்று வந்தாய். உனது நோய் கண்டுபிடிக்கப்படவில்லை.
கொழும்புக்குப் போய் ஒருக்கா ஸ்கான்பண்ணிப் பாருங்கோவன்..,
சொன்ன போது  சொன்னாய்.

போகப்பயமாயிருக்கடி..,
மற்ற வருத்தமோ தெரியேல்ல சொல்லியழுதாய்.

நீ சொன்ன மற்ற வருத்தம்  புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் இருந்தாலும் உன்னை தைரியப்படுத்தினேன்.

அப்பிடியெல்லாம் இருக்காது. இப்பதானே மருத்துவம் நிறைய இருக்கும் எந்த வருத்தத்தையும் மாத்தலாம். மனசை குழப்பாமல் போங்கோ.
ஓரவாரம் கழித்து ஒரு செவ்வாய்கிழமை ஸ்கைப்பில் வந்தாய்.

நாளைக்கு மெடிக்கல் றிப்போட் வரும் என்ன வருதோ தெரியேல்ல.
பழைய மகிழ்ச்சி அன்றைக்கு இல்லை. சோர்வோடு கதைத்தாய். ஸ்கைப்பில் முகம் காட்டினாய். அழுதாய்.

ஓண்டுமிருக்காது உங்களுக்கு இப்போதைக்கு வீசா இல்லை தெரியுமோ ?
80வயது தாண்டினாத்தான் உங்களுக்கு வீசா கண்டியளோ ? சொன்னேன. நீ சொல்றபடி கான்சர் வருத்தமில்லாமல் நாளைக்கு றிப்போட் வந்தால் நல்லம் தான்.

மறுநாள் மதியம் உன்னை தொலைபேசியில் அழைத்தேன்.
என்னவாமக்கா றிப்போட் வந்திட்டுதோ ? கேட்ட எனக்குச் சொன்னாய்.
ஓமம்மா கான்சராம்.

பேரிடியென்பதா இல்லை இதை பொதுவானதென்று ஏற்றுக்கொள்ளவா ?
சரியம்மா நான் ஸ்கைப்வாறன் இதில காசெல்லோ ?

தோலைபேசியைத் துண்டித்தேன். ஸ்கைப்வந்தாய்.
அம்மாக்குத் தெரியுமோக்கா கான்சரெண்டு ?
ஓ அம்மா ஒரே அழுகையா இருக்கிறா.
கான்சரெண்டா என்னக்கா இப்ப தானே நல்ல மருத்துவம் இருக்கு செய்யலாம்.

யோசிக்கப்படாது தைரியமா இருங்கோ.

பாதிவருத்தம் எங்கடை தைரியத்தில தான் மாறும்.

புற்றுநோயாளிகளுடன் பணியாற்றிய எனக்கு அவர்களின் முடிவு என்ன என்பது தெரியும். ஆனால் என் அக்கா உனக்குப் புற்றுநோயும் மாறும் எனவே நானும் நம்பினேன்.

இந்தியா சென்று மருத்துவம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் சில நண்பர்களின் ஆதரவோடு உன்னை இந்தியா அனுப்ப முயற்சித்தோம்.
நீ பயணம் செய்யும் வலுவை இழந்து கொண்டிருந்தாய்.

இந்தியாவில் தொடர்பில் இருந்த மருத்துவர் உனது ஆயுட்காலம் குறுகிவிட்டதை தெரிவித்தார்.

வாழ்வேன் என ஆசைப்பட்ட உனக்கு உன் ஆயுள் முடியப்போகிறது என்று சொல்ல முடியவில்லை.

கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினாய். போக்குவரத்து பயணங்கள் என பணம் மட்டுமே உனது எஞ்சிய நாட்களையும் தீர்மானித்திருந்தது.

உங்கடை பேரைச்சொல்லி உதவி கேட்கட்டே அக்கா ? உன்னிடம் கேட்டேன்.
ஏற்கனவே உனக்கு செய்த சிறு உதவிகளை லட்சக்கணக்கில் செய்ததாய் கதை பரப்பிய பலரது பொய்களால் உடைந்து போயிருந்தாய்.

உனது பெயரை வெளிப்படுத்தி யாரிடமும் இறைஞ்ச வேண்டாமென்று நிபந்தனை விதித்தாய்.

கண்ணெதிரே நீ இறந்து கொண்டிருக்க எப்படி ஒதுங்க முடியும் ? ஆனால் நீ யாரிடமும் உதவி கேட்க வேண்டாமென்ற பிடிவாதத்தை கைவிடவேயில்லை.

சிலரிடம் உன் நிலமை பற்றிச் சொன்ன போது பாவம் நீயென்ற பதில்கள் தான் வந்தது. பணம் தர முன்வரவில்லை.

உனது மரணம் உன்னை நெருங்குவதை நீயும் உணரத்தொடங்கினாய்.

உனது நோயுடனான போராட்டத்தை அறிந்த நோர்வே நாட்டு ஊடகவியலாளர் நோர்வே பெண்கள் அமைப்பினரிடம் உனது நிலையைக் கூறினார். உன்னை கவனிக்காத அவர்கள் மீது கோபித்தார்.

ஒருநாள் தொலைபேசியெடுத்த நீ நோர்வே மகளீர் அமைப்பினர் உன்னை நோர்வேக்கு ஸ்பொன்சர் செய்ய சம்மதித்தாக சொன்னாய். ஆனால் அவர்கள் உன்னிடம் வைத்த நிபந்தனையை என்ன சொல்ல ?

நோர்வே அழைப்பார்களாம் அதற்கு பதிலாக நீ முதற்களவீராங்கனை மாலதி அவர்களின் நினைவுநாளில் மேடையேறி பரிசில் வழங்கி உரையாற்ற வேண்டுமாம்.

ஏற்கனவே இலங்கைச்சிறை , நாலாம் ஆறாம் மாடிகளுக்குச் சென்று வந்த நீ மாலதி நினைவுநாளில் மேடையேறுதல் சாத்தியமா என்பதை குறித்தவர்கள் யோசிக்கவில்லை.அந்தப்பேரம் பேசலை நீ மறுத்தாய்.

காலம் உன்னை தன் கணக்கிலிருந்து கிழித்தெடுக்கத் தொடங்கியிருந்தது. நீ எழுதிக்கொண்டிருந்த உனது போராட்டகால வாழ்வை நூலாக்கும் முயற்சியும் இடையில் இழுபடத்தொடங்கியது.

வெளிப்படையாய் நீ எழுதிய பலவிடயங்கள் உன்மீது சேறடிக்கும் உன்னை துரோகியாக்கும் என்பதை சொன்ன போது சொன்னாய்.

இது என்ரை அனுபவம். இதில பொய்யில்லை. எதையும் குறைக்கவோ மாற்றவோ நீ சம்மதிக்கவில்லை. எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளும் தைரியத்தோடு இருந்தாய். உன் சுயசரிதை வெளியில் வரவேண்டும் என்பதை விரும்பினாய். உனக்கான ஆதரவைத் தருவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.

உன் எழுத்தின் நேர்மையை நேர்மையோடு எதிர்கொள்ளும் மனநிலையற்ற சமூகத்தின் பிரதிநிதியான இனத்தில் தான் நீயும் நானும் பிறந்திருந்தோம்.

நீ பிடிவாதக்காரி. உனது கருத்துக்களில் யாருக்கும் விட்டுக் கொடுக்காதவள். அந்தநாள் சீருடைத் தமிழினியை நினைவுபடுத்தினாய்.

நீ வாழும் போதே உனது நூலை வெளியிட ஜெயன்தேவா விரும்பினார். உனது ஆசையும் அதுவே.

உன் கடைசிநாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த மனிசனை விட்டிட்டுப் போகப்போறன் அதுதான் இப்ப என்ரை கவலையா இருக்கு.

பாவம் தனிக்கப்போகுது.

உன் இறுதிக்காலங்களில் நீ உன் துணை ஜெயன்தேவா பற்றியே அதிகம் யோசித்தாய். கலங்கினாய். காலத்திடம் உயிர்பிச்சையேந்தினாய்.

இன்னொரு 5வருசம் அந்தாளோட வாழக்கிடைச்சா காணுமெனக்கு.

உன் இறுதிக்காலங்கள் மருத்துவமனையோடு கரையத் தொடங்கியது.

ஆனாலும் நீ வாழப்போகும் நாட்கள் உனக்கான மருத்துவம் செய்ய பணத்தின் தேவை அதிகமாயிருந்தது.

நம்பிக்கை வேரறுபட்டு உன்னைப் பிரியப்போகும் நாட்கள் ஒவ்வொன்றாய் குறைந்து கொண்டிருந்தது. ஜெயன்தேவா வெளிப்படையாக சிலரைநாடி உதவிகோரினார்.

அவரது முயற்சியில் தடைபோடாமல் விடு என உன்னிடம் வேண்டினேன்.

இந்த மனிசனுக்கு விளங்கேல்ல நான் சாகப்போறனெண்டது. சரி அந்தாளின்ரை ஆசையையும் ஏன் தடுப்பான்.
என்று நீ உதவிகோர அனுமதித்தாய்.

000         000         000

நீ நினைவிழக்கத் தொடங்கினாய். பேசக்கூடிய தைரியத்தையும் இழந்து கொண்டிருந்தாய். என் வீட்டில் மரணத்தின் துயர் பரவியது.

என் தோழனும் நானும் உன்னைப்பற்றியே நாட்கணக்காய் கதைத்துக் கொணடிருந்தோம்.

என் அலைபேசிக்கு உனது அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. உன்னோடு பேசும் தைரியம் வரவில்லை.

சாகப்போகிறேன் என நீ சொல்லும் செய்தியைக் கேட்டுக் கொண்டு என்னால் இயங்க முடியவில்லை.

என்னெண்டு எடுத்து கதையன் அம்மாச்சி.
என் தோழன் சொன்னான்.

தைரியம் மிக்க என்  தமிழினி அக்கா மரணவாசலில் நிற்கிறாய். அந்தக் கடைசிக் குரலை எப்படிக் கேட்பது. உன் கடைசிக்குரலைக் கேட்கும் துணிச்சல் எனக்கு இல்லை. உன்னோடு பேசாமல் தவிர்த்தேன்.

யாழ் இணையத்தில் உனக்காக நிதி சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சிலர் என்னிடம் தொடர்பு கொண்டு உதவ முன்வந்தார்கள். கிடைத்த சிறு உதவிகளை அம்மாவின் வங்கிக்கு அனுப்பினேன்.

யாழிணையத்தில் உன் பற்றி வந்து கொண்டிருந்த செய்தியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலம் உனக்கு இறுதி அத்தியாத்தை எழுதத் தயாராகியது.  உன் உயிர் நாட்களிலிருந்து அழிபட்டு மணிக்கணக்காகி , நிமிடங்களில் வந்து நின்றது. எந்த நிமிடமும் உனது உயிர் பிரியும் தருணம்.

உனது ஞாபகங்கள் மட்டுமே அலைக்களித்த பொழுதுகள் அவை.
000          000         000

அம்மாச்சி அம்மாச்சி...,

நித்திரையில் கிடந்த என்னை வந்து எழுப்பினான் தோழன். அவன் தந்த தேனீரைக் குடித்து முடியச் சொன்னான்.

உங்கடை Viber இல் ஒரு செய்தி போட்டிருக்கிறேன் பாருங்கோ. சொன்னான்.

வளமையாக அவன் பார்க்கும் சிறப்பு விடயங்கள் எனக்கு வைபர் ஊடாக அனுப்புவான். அப்படியொரு செய்தியாகவே நினைத்து அவன் அனுப்பிய இணைப்பை அழுத்தினேன்.

அது உனது மரணச்செய்தி. எதிர்பார்த்த செய்தியாக இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலை இருக்கவில்லை.

அண்மைய நாட்களில் உன்பற்றி நாங்கள் இருவரும் நிறையக் கதைத்திருக்கிறோம். கண்முன்னே நீ பிணமாய் கிடப்பது போலிருந்தது உனது மரணப்படுக்கையின் நிழற்படங்கள்.

தங்கை யோகாவுக்குத்தான் தொலைபேசினேன். யோகா அழுதாள். அத்தான் பாவமக்கா.

யோகாவுக்கு எந்த ஆறுதலையும் சொல்ல முடியவில்லை. அவளது அழுகையைக் கேட்கக்கேட்க என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளிடமிருந்து விடைபெற்றேன்.

உலகமெல்லாம் உனக்கான அஞ்சலி நிகழ்வுகள் இராணுவ தகுதிநிலை வழங்கல் என ஆரவாரித்தது தமிழ் ஊடகங்கள்.
நீ வாழும் போது உதவாத பணம் உனது அஞ்சலி நிகழ்வாக கரைந்து கொண்டிருந்தது.

நானும் ஒரு பார்வையாளராய் உனது மரணத்தின் பிறகு அமைதியாயே இருந்தேன்.

உனது மரணத்தின் பிறகே பலருக்கு உனது துணை ஜெயன்தேவா என்பது அறிய வந்தது. ஜெயன்தேவா பற்றி பலரது விமர்சனங்கள் மாறிமாறி ஊடகங்களில் செய்திகளாகிக் கொண்டிருந்தது.

ஜெயன்தேவாவின் பல்கலைக்கழக நண்பன் என்று ஒருவர் பிரித்தானியாவிலிருந்து இவனா உனக்குக் கணவன் என எழுதினார்.

ஜெயன்தேவா பற்றி மேலும் சிலர் அப்படி இப்படி என கதைகள் எழுத ஆரம்பித்தனர்.

நீ ஜெயன்தேவாவுடன் ஆத்மார்த்தமாய் வாழ்ந்தாய் என்பதை எவரும் புரிந்து கொள்ளவில்லை.

நீ யாரைத் திருமணம் செய்ய வேண்டும் நீ யாருடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உன் மீதான அக்கறை மிகுந்தோர் என சொல்லப்பட்ட பல கள்வர்கள் எழுதினார்கள் , திட்டினார்கள் , சபித்தார்கள் இன்னும் நிறைய....!

ஒருவாரம் கழித்து ஜெயன்தேவாவுடன் தொலைபேசினேன். நீ அவரது கண்முன்னே இறந்து போனதை நீ துடித்ததை நீ அழுததை அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

நீங்கள் தானே சாந்தி அவளோடை கடைசிவரையும் தொடர்போடை இருந்தனீங்கள். உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே. அவள் வாழ ஆசைப்பட்டவள். காலம் பறிச்சிட்டுது. அவரது நம்பிக்கையாய் இருந்தவள் நீ. அவரது வாழ்வாய் இருந்தவள் நீ. உன்னை இழந்த துயரம் அவரது உறுதியை உடைத்துப் போட்டது.

நீ எழுதிய உனது போராட்ட அனுபவ நூலை வெளியிட வேண்டுமென்றார். உனது ஆசையும் அதுவே. நீ எழுதியபடியே நூலை வெளியிடப்போவதாகச் சொன்னார்.

உன்மீது பழியுரைத்தோர் , உன்னை தேசத்துரோகியாய் கதைசொன்னோர் என எல்லோருக்கும் பதிலாக உனது நூல் மட்டுமே இருந்தது.

000            000             000
உனது கூர்வாழின் நிழலில் நூல் வெளியானது. ஜெயன்தேவா தபாலில் அனுப்பி வைத்தார். நூலைப்படித்த பிறகு உன்னிலிருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.

சிறந்த எழுத்தாற்றல் மிக்க தமிழினி நூலில் நிமிர்ந்து நின்றாள்.

உனது நூலை வாசிக்கமாட்டோம் என சிலரும் வாசிக்காமலே பலரும் உனது நூலை நீ எழுதவில்லை ஜெயன்தேவா அரசகூலியாகி உனது தியாகத்தை விற்பதாய் இணையத்தளங்களில் நீயே பேசுபொருளாகினாய்.

தமிழினக்கு யார் திருமணம் செய்து வைத்தது ?

சாந்தி நேசக்கரமா ?

அவள் இலங்கையரசின் உளவாளியெல்லோ?

ஜெயன்தேவா இலங்கையரசின் விருந்தாளியெல்லோ?

சாந்தி நேசக்கரம் நீ எப்படி தமிழினிக்கு ஒரு துரோகியை திருமணம் செய்து வைத்தாய் ?

அரசகைக்கூலியே உனக்கு தமிழினியின் பெறுமதி தெரியுமா ?

என்மீது விழும் சொ(க)ற்கள் இவை.

என் வரையில் உனக்கு உண்மையான தோழியாய் இருந்திருக்கிறேன். உனக்கு ஆறுதல் தேவைப்பட்ட காலத்திலும் நீ அந்தரித்த காலத்திலும்  உன்னோடு கூட வந்திருக்கிறேன். நீ மீள நானும் சிறு அணிலாய் உன்னோடு பயணித்திருக்கிறேன்.

உனக்கு விசஊசி ஏற்றியே கொல்லப்பட்டாயாம். ஒருசாரார் சொல்கிறார்கள்.
நீ பாலியல் வல்லுறவுக்கு அதிகம் உட்படுத்தப்பட்டதனால் தான் உனக்கு புற்றுநோய் வந்ததாம்.

சாவின் பிறகும் உன் நிம்மதியைப் பறித்து தங்கள் விருப்பிற்கு ஏற்ப எழுதுகிறார்கள் பேசுகிறார்கள்.

நீ ஆதரவற்று அந்தரித்த போது ஒளித்தவர்களெல்லாம் கேட்கும் கேள்விகள் கோடிக்கணக்கு.

இந்த மனிதர்களை நீ பார்த்துவிட்டு இறந்திருக்க வேண்டும். ஆனால் காலம் தன் கணக்கிலிருந்து உன்னை விடுவித்துக் கொண்டு போய்விட்டது.

000        000         000
2009 இற்கு பிந்திய தமிழினியின் மாற்றம் தெளிவு 2009இற்கு முந்திய தமிழினியைக் காணாமற்போக வைத்தது.

எதிரியாய் இருந்த இனத்தையும் அதன் இராணுவத்தையும் நீ மதிக்கும் நிலைமை எப்படி வந்தது ?

18வருடம் எதிரியாக நீ கருதியவர்களை நீ நேசிக்கும்படியான காலமாற்றத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

கொன்றவர்களோடு கைகுலுக்கிக் கொள்ளும் மனநிலையை நீயும் உன்போன்ற பலரும் உணரும் நிலை எப்படி உருவானது ?

எதிரி எங்களை எப்படி வென்றான் ? என்னிடமுள்ள ஒரே பதில் :-

காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு தனக்கெதிராகப் போராடியவர்களின் உளவுரணை உடைக்கும் மனவலுவை எதிரி கொண்டிருந்த உண்மையை இன்னும் உணராதவர்களாய் , எங்களுக்குள் மல்லுக்கட்டுவதில் காலத்தைக் கழிக்கிறோம்.

'எல்லாப்பலத்திலும் ஒரு பலவீனம் நிச்சயம் உண்டு அந்தப்பலவீனத்தில் அடி'
சொன்ன தலைவனின் வேதத்தை எதிரி நன்றாகவே புரிந்து கொண்டுள்ளான்.

எதிரி எங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டே போகிறான். நாங்கள் இன்னுமின்னும் சிதிலங்களாகிக் கொண்டிருக்கிறோம்.
பல்லாயிரக்கணக்கில் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் இன்று சில ஆயிரங்கள் கூட சேர முடியாது போயுள்ளோம்.

இது ஆயுதங்களால் போராடும் காலமல்ல. தந்திரத்தால் மனபலத்தை தகர்க்கும் போராட்ட காலம். எதிரியின் நாடியில் துப்பாக்கியை வைப்பதற்கு திட்டமிடுவதை விடுத்து தோழில் கைபோட்டுக் கொண்டு வெல்லும் நவீனத்தை தேட வேண்டும்.

இதுவே உனக்கும் உன்போல நாங்கள் விலைகொடுத்த அனைவருக்குமான கைமாறாகும்.

சாந்தி நேசக்கரம்.
22.04.2017.

அன்புத் தோழி மறைந்த தமிழினி அவர்களுக்காக 22.06. 2012 எழுதிய கவிதை மீளும் நினைவு. வெலிக்கடை சிறைவாசம் முடித்து வவுனியா புனர்வாழ்வு முகாம் சென்ற சேதியை அவள் அறியத்ததந்து உரையாடிய போது அவளுக்காக எழுதிய கவிதை இது. பலதடவை வாசித்து தன் கண்ணீரால் பல கதைகள் சொன்னவள் நினைவோடு.....!
-----------------------------------------------------------

கால விதிகளின் கட்டறுத்தெறிந்த
வீரத்தின் விலாசங்களோடு
வனவாசம் போனவர்களுடன்
ஆழுமையின் வீச்சாய்
அடையாளம் காட்டப்பட்டவள் நீ.

பெண் விதியின் முழுமைகளை
நீ பேசிய மேடைகள்
பதிவு செய்து கொண்டதோடு
நீயொரு பெண்ணியவாதியாய்
பெருமை கொள்ளப்பட்டவள்.

உன்னையும் உனது ஆழுமைகளையும்
உச்சத்தில் ஏற்றி எழுதியோரும்
உன் குரலில் பதிவு செய்தோரும்
எண்ணிலடங்காதவவை....

எழுச்சியின் காலங்களை இப்படித்தான்
காலம் கௌரவப்படுத்துவது வரலாறு.
வீழ்ச்சியின் பின்னரே யாவும்
விழித்துக் கொள்கிறது.
அதுவே உனக்கும்
உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது.

000

2009 மே,
காலச் சூரியனின் கைகளிலிருந்து
தவறிப்போனவளாக
வரலாறு உன்னைப் பதிவுசெய்தது....

பணியாத வீரங்களெல்லாம் கைதூக்கிய சரணாகதி
உன்னையும் தோல்வியின் கைகளில் கொடுத்துவிட
காலத்தால் கைவிடப்பட்டவர்கள் வரிசையில் நீயும்
தோற்றப்போன ஒரு முன்னாள் பெண் போராளி.

திட்டும் சபித்தல்களும்
உன்மீது சொரிந்த வேளையில்
எல்லோர் போலவும்
நானும் கோபித்ததும் உன்னை சந்;தேகித்ததும்
நீயறியாத இரகசியங்கள்....

கழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்
கடைசிநேர நிலவரம் பற்றியும்
உங்களைத்தான் விழுங்கியது
எங்களது பேரங்கள்.

இருள் நிறைந்த கம்பிகளின் பின்னால் - நீ
இருளோடு கரைந்த கதைகள்
அறிந்த போது
எல்லாக் கோபமும் போய்
தோழமை வென்றது.
தோழியே உனக்காய் கண்ணீரில் கரைந்த
பொழுதுகள் கனத்தது....

கோபம் மறந்து உன்னோடு கதைத்து
உனது கண்ணீரைப் பங்கிட்ட போது
நெஞ்சுக்குள் உறுத்தும்
உன் மீதான எனது கோபங்கள்
அர்த்தமற்றுப் போய்விட்டன....

துயரங்கள் தின்ற உனது நாட்களை
நினைவுகொள் நேரமெல்லாம்
கரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்
துயர் கரைக்கும் அந்தரத்தில்
உனக்கான ஒளிவட்டமொன்றைக் கீறிக்கொள்வதாய்
உனது கண்ணீரைப் புன்னகையாக்கிய
வெற்றியை யாரிடமும் சொல்லாமல்
அழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....

கம்பிகள் உன்னை விடுவிக்கப் போகும் நாளுக்காய்
உன் அம்மாபோல நானும் காத்திருந்த நாட்களில்
உனது விடுதலையின் செய்தி
நெஞ்சுக்குள் பொங்கிய மகிழ்வை
நீ வரும் வரை
பொக்கிசமாய் பத்திரமாய் வைத்திருக்கிறேன்....

வா நாங்கள் மீண்டும் பேசிக் கோபித்து விவாதித்து
மிஞ்சிய பொழுதுகளையேனும் மீள் நினைவு கொள்வோம்.

22.06.2012
சாந்தி நேசக்கரம்.

Thursday, April 20, 2017

மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)


அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை.

உரையாடலில் ஒருநாள்.....,

நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது.
என்றான் அவன்.
முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ?
இது அவள்.

தெரியேல்ல...,

ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு.

நீங்கள் அப்பிடி உணரேல்லயோ அக்கா ?

அவனது கேள்விக்கு பதிலாய் எதைச் சொல்ல ?

அவள் யோசித்த போது அவனே பதிலையும் சொன்னான்.

அடுத்த பிறப்பில நான் உங்களுக்கு மகனாப்பிறப்பன். கனகாலம் வாழுவன்.






பணியொன்றின் தேவைக்காக எதிர்பாராத சமயமொன்றில் தான் அவன் அவளுக்கு அறிமுகமானான்.

பணிகளால் கடந்து போனவர்கள் போல அவன் போய்விடாமல் காலமெல்லாம் தொடரும் உறவாகிப்போனவன். 2009 முள்ளிவாய்க்காலோடு அடையாளமறியாமல் அவளுக்கும் சொல்லாமல் போய்விட்டான்.

அமைதியே அவனது இயல்பு. யாரோடும் இலகுவில் ஒட்டிக்கொள்ளாத சுபாவம். அவன் வகித்த பொறுப்பு , அவனுக்கான தேசப்பணிகளில் தவிர்க்க முடியாத அவசியம்.

அடிப்படைப்பயிற்சியின் பிறகு சில சமர்களில் பங்கேற்றவன். பின்னர் அதிகாரிகள் சிறப்புப் பயிற்சி முடித்து தலைவரிடமிருந்து பாராட்டுப் பெற்றவன்.

அரசியல்துறையில் அவன் பணியாற்ற அனுப்பப்பட்ட போது அரைமனதோடு தான் வழங்கப்பட்ட பொறுப்பையேற்றான். பிறகு வழங்கப்பட்ட பொறுப்பின் அவசியத்தை உணர்ந்து முழுமையான கவனத்தையும் அதிலே ஈடுபடுத்தினான்.

நெடிதுயர்ந்த அவனது தோற்றத்திற்குள் படிந்திருந்த துயரங்கள் வருடக்கணக்காய் தனியே தாங்கியவன்.

அவளோடு அறிமுகமான பிறகு அவனே மாறிப்போனதாய் சொல்வான். மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பான். மனசில் ஒளிந்திருந்த எல்லாக் கதைகளையும் அவளுக்குச் சொல்லத் தொடங்கினான்.

அக்கா என்ற அவனது அழைப்பில் சிறிதும் நடிப்பில்லை நம்பிக்கையே இருந்தது. அவனுக்காக பதிவு செய்து அவனோடு மட்டுமே பேசப்பயன்படுத்திய ஸ்கைப்பில் நதி என்ற பெயரையும் அவளையும் முழுமையாக அறிந்தவனும் அவனே.

உங்களைப் பாக்க வேணும் போலையிருக்கு. கமராவை போடுங்கோ.

06.04.2009 முகம்பார்த்துக் கடைசியாகக் கதைத்தான். ஆனந்தபுரத்தில் வீழ்ந்தவர்கள் பற்றியே கதைகதையாய் சொன்னான்.

எல்லாம் முடியப்போகுது...

உங்களை இனி பாக்க கதைக்க எல்லாம் வராதக்கா.

இப்ப கதைக்கிற இந்த நிமிசம் கூட சாவு என்னைத் தின்னலாம்.

எத்தினை உயிர்கள் எத்தினை கனவுகள் நினைக்காத எல்லாம் நடக்கப்போகுது.

வெல்வோம் என்றே முன்பெல்லாம் சொல்லுவான். அன்று  தோற்றுப்போகிறோம் என்ற உண்மையை அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.

அவனது கதைகளுக்கு நடுநடுவே கேட்டுக் கொண்டிருந்த வெடியோசைகள் ஒவ்வொன்றும் அவளது மனவெளிகளில் அவனை இழந்துவிடப் போகிறாய் என எச்சரித்துக் கொண்டேயிருந்தது.

அம்மாவோடை அடிக்கடி கதையுங்கோ.

அம்மா பாவம்.

எனக்காக மட்டுமே வாழுற சீவன் அம்மாவை கைவிட்டிராதைங்கோ அக்கா.

அம்மா பற்றி அவன் சொல்லிய போது வளமையைவிட அன்றைக்கு அதிகம் கலவரப்பட்டான்.

இதுவரையில் அம்மாவுக்கு அவன் பெண்களை அறிமுகப்படுத்தியதில்லை. அவளைத்தான் முதல் முதலில் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினான். அக்கா என அவளைச் சொல்லியும் அப்பாவி அம்மா அவளை அவனது காதலியென்றே கனனகாலம் நம்பினாள்.

ஒருநாள் கதையோடு கதையாக அம்மா அவள் குடும்பம் பற்றி விசாரித்த போது அவள் 2பிள்ளைகளின் அம்மா என்பதைச் சொல்லியும் அம்மா நம்பவில்லை.

அவள் சொல்வதையெல்லாம் அவன் செய்கிறான். அவள் பற்றி அதிகம்  அம்மாவோடு கதைக்கிறான். ஆக அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது தான் அம்மாவின் முடிவு.

எட லூசா அம்மாட்டை சொல்லடா ஒரு இழவும் இல்லையெண்டு.

மனிசிக்கு சொல்லீட்டன் மனிசி நம்பாதாம். ஆர் என்ன சொன்னாலும் எனக்கு நீங்கள் அக்கா தான்.

அன்று தான் இறுதியாக முகம்பார்த்துக் கதைத்தான். அதன் பிறகு பலதரம் கதைத்திருக்கிறான் ஆனால் முகம் காட்டியதில்லை. தனது படங்கள் நிறைய அனுப்பியிருந்தான்.

000        000      000

'நான் இல்லாட்டி எனக்காக அழுவியள்...என்னக்கா....'
என்றான் அவன்.

போடா விசரா நீ வருவாய் நான் நம்பிறன்டா.
என்றாள் அவள்.

பலரது மீள்வை எதிர்பார்த்திருந்தாலும் அவன் கட்டாயம் வருவான் என்பதை அவள் அதிகம் நம்பினாள். ஒவ்வொரு முறை கதைத்து விடைபெறும் போதும் அதுவே தன் இறுதிநாளாகவே சொல்லிச் செல்வான்.

அன்றைய நிலமை அப்படித்தானிருந்தது. உலகத்தால் கைவிடப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் லட்சம்பேரின் வாழ்வு முடங்கியிருந்தது.

வெளிநாடுகளில் தெருவில் இறங்கித் தமிழர்கள் போராடினர். எந்த நாடும்  கவனிக்கவில்லை. வல்லவன் வகுத்த விதி மே 17 2009 அன்றோடு தமிழர்களின் பெரும் சாம்ராஜ்ஜியம் கலைந்தது.

நந்திக்கடலில் கலந்த தமிழ் இரத்தம் வங்கக்கடலின் பேர(ய)லைகளோடு சேர்ந்து கரையொதுங்கிய உயிர்களை வெற்றுடல்களாக கடந்து போனது.

அவன் கட்டாயம் வருவான். எங்கோ உயிரோடு வாழ்கிறான் என நம்பும் அவன் அம்மாவின் நம்பிக்கையின் முன்னால் அவள் மௌனமாகிவிட்டாள்.

தன் மருமக்கள் என ஆசையாய் அவள் பிள்ளைகளுக்காக அவன் எழுதிய கடிதங்கள் அனுப்பிய பரிசுப் பொருட்கள் வடிவில் அவன் நினைவுகள் அடிக்கடி வந்து போகும்.

அழுகை வரும் ஆறுதல் தர யாருமற்று பொழுதெல்லாம் அவன் நினைவுகளும் கதையும் மனவெளியெங்கும் துயர் கனத்து சோர்ந்து போவாள்.

இரவில் வானத்தை பாருங்கள் அக்கா. வானத்தில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள் பெரும் நம்பிக்கை தரும்.

மனம் கனத்த ஒருபொழுதொன்றில் அவனுக்குத் தன் துயர் சொல்லி அழுத போது சொன்னான்.

கனத்த இருளில் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் அவன் நம்பிக்கையின் ஒளிப்பொட்டுக்களாய் ஒளிர்கிறான். இன்றைக்கும் அவன் ஞாபகத்தில் அடிக்கடி நிறைகிறான்.

ஏன் ? எதற்காக ?

துயர் படிந்த மாதத்தின் துயரமா ? இல்லை அவன் சொன்னது போல முற்பிறப்பின் உறவுத் தொடரா ? தெரியவில்லை. ஆனால் அவனைப் பார்க்க வேண்டுமென்ற உணர்வு மேலிடுகிறது.

உடல் நடுங்குகிறது. சுவாசத்துடிப்பு அதிகமாகிறது. அவன் நிழற்படத்தைக் கணணித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். காணாமற்போன அவன் வந்துவிட வேண்டும். கண்ணீரோடு கடவுளை மன்றாடுகிறாள்.

சாந்தி நேசக்கரம்


19.04.2017

Friday, January 13, 2017

கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு...,

அன்பு வாசகர்களுக்கு,

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன்.


பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. 

பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய....,

ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது.

இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். 


 கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு...,



என்னிலும் ஒருவயதால் மூத்தவன் அவன். நான் அவனை அண்ணாவென்றும் அவன் என்னை அக்காச்சியென்றும் அழைத்துக் கொள்வோம். என்னோடு கூடப்பிறக்காதவன். ஆனால் அதிகம் என்னை நேசித்தவர்களுள் அவனும் ஒருவன். அண்ணா என்ற சொல்லை எனக்கு அர்த்தப்படுத்தியவன்.

ஓரு காலத்தின் பெருவீரம் அவன். அவனுக்கான பாதுகாவலர் தொடக்கம் களங்கள் சமர்கள் அவனை அடையாளப்படுத்திய காலங்களில் அவன் பெயர் அறிமுகமாகியது. பின்னர் அவனே உறவாகினான் அண்ணாவாக.

காலங்கள் போக கடமைகள் பணிகள் அவனோடும் பயணிக்கத் தொடங்கிய போது தினசரி பேசவும் விடயங்களைப் பகிரவும் வழியமைத்தது காலம்.

எதையும் ஒளிவுமறைவின்றி பேசக்கூடிய நெருக்கத்தை காலம் தந்தது. மணிக்கணக்காய் தொலைபேசவும் சேர்ந்து பிடித்த பாடல்கள் கேட்கவும் தொடங்கினோம். நாம் வௌ;வேறு நாடுகளில் இருந்தாலும் இணையம் தொலைபேசி இவையே எங்களது உறவுப்பாலம்.

நேரில் சந்தித்துக் கொள்ளவோ அடிக்கடி புகைப்படங்கள் பரிமாறிக் கொள்ளவோ எதையும் நாம் செய்து கொண்டதில்லை. காலை மாலை மதியம் இரவு என பேச வேண்டிய தருணங்களில் பேசிக்கொள்வோம்.

காலம் எங்களையும் நெருப்பில் போட்டு சோதித்த காலங்களையும் நாங்கள் சந்தித்தோம். அப்போதெல்லாம் ஆளாளுக்கு துயர் பகிரவும் கண்ணீர் விட்டு அழவும் காற்றலைகளே எங்களுக்கு கைக்குட்டையாகியது.

ஆறுதல் சொல்லி என்னை அமைதிப்படுத்திய நம்பிக்கைகளில் அவனுக்கு பெரும்பங்குண்டு.

அக்காச்சி நீங்கள் அழப்படாது. நீங்கள் சாதனைப்பெண். நீங்கள் செய்ய ஆயிரக்கணக்கில பணிகள் இருக்கு. உங்களைப் புரிந்து வாழத் தெரியாத ஒருவரால் உலகில் யாரோடும் வாழ முடியாது.

இப்படித்தான் என் அழுகையின் நிமிடங்களை ஆற்றுப்படுத்திய அண்ணா அவன்.

என் வாழ்வைத் தெருவில் இழுத்து வைத்து காலம் பங்கிடத் தொடங்கிய போது  அவன் அருகில் இருக்கவில்லை. தொலைபேசி வழியாக தினம் தினம் என்னை தைரியப்படுத்திய அவனது வார்த்தைகளும் அவன் அனுப்பும் பாடல்களும் இன்றும் என் ஞாபகங்களில் பத்திரமாய்.

எல்லோருமே ஒரு கட்டத்தில் தற்கொலை பற்றி யோசித்திருப்போம். அப்படி பலமுறை நானும் எண்ணியதுண்டு. என் மனநிலையைத் தானே புரிந்து கொண்டு பலமுறை சொல்லியிருக்கிறான்.

அக்காச்சி என்ன பிரச்சனையும் வரட்டும் அதை தாண்டி நாங்கள் தான் வர வேணும். எந்தவிதமான அவசர முடிவுகளும் எடுக்கப்படாது. உங்களுக்கு எந்த நேரம் என்ன தேவையெண்டாலும் என்னோடை கதையுங்கோ நானிருக்கிறேன். ஓண்டுக்கும் யோசிக்கப்படாது. நல்லா சாப்பிடுங்கோ நித்திரை கொள்ளுங்கோ இதுவும் கடந்து போகும்.

பலருக்கு நான் சொன்ன அறிவுரைகள் தைரியமூட்டல்களை அவன் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

என்ன சமையல் ? சாப்பிட்டீங்களோ ? தினசரி அவனது அக்கறையும் விசாரிப்புமே பல தருணங்களில் எனக்கு உணவின் சுவையை ஞாபகப்படுத்தியிருக்கிறது.

தன் வாழ்வின் கடந்து வந்த பயங்கரங்களை துயரங்களை ஏமாற்றங்களைச் சொல்லிச் சொல்லி என்னை தைரியப்படுத்திய நம்பிக்கை அவன். நான் மனம் குழம்பிய தருணங்களை அவன் உணர்ந்து கொண்டிருக்கிறான். 

என்னாலை ஏலாதாமண்ணா வரவர தொல்லை கூடுது. செத்திடலாம் போல. பிரிஞ்சு போறதுதான் இனி வேறை முடிவு எனக்கு தெரியேல்ல.

இரத்த உறவுகள் கூட பழிசொல்லி ஊரெங்கும் என்பற்றி எழுதப்பட்ட பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுவைக்க வேண்டிய தேவையை 2012ம் ஏப்றல் மாதம் எடுத்த போது முழுமையாக என்னைப்புரிந்து கொண்ட முதலாம் ஆள் அவன்தான்.

பழிசொன்னவர்கள் எல்லோரும் என் இரத்த உறவுகள் , காணும் போதெல்லாம் கைநீட்டி அணைத்த நண்பர்கள் பலரும் இருந்தார்கள். யாருமே துணைக்கு வராமல் நான் தனித்து நின்ற போது..,

நான் உங்களை நம்பிறன்..நீங்கள் யோசிக்கப்படாது.

ஒவ்வொரு வார்த்தையிலும் என்மீதான தனது நம்பிக்கையை அன்பை அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருப்பான்.

உது சரிவராது பேசாமல் விடுங்கோ. நீங்கள் தனிய வாழலாம். பதினேழு வருசத் தொல்லைக்கு முடிவு கட்ட அவன் தந்த முதல் அனுமதி. இனி யாரும் ஆலோசனை ஆதரவு தர வேண்டாமென்றிருந்தது அவன் தந்த ஆறுதல் தன்னம்பிக்கை.

நீ இரும்புப்பெண் நீ நெருப்பு நீ வீரம் என அடிக்கடி என்னை ஊதிஊதி  அணையாமல் காத்தவன்.

கவனமாயிருங்கோ. வெளியில போக வர உங்களை பின்தொடரும் ஆக்கள் எல்லாரையும் அவதானியுங்கோ. காசைக்குடுத்தா ஆபிரிக்கனோ எவனோ எதுவும் செய்ய முடியும். எங்கடை இனத்துக்கு நீங்கள் வேணும். உங்களால எத்தனையோ பேர் வாழுகினம் அவைக்காக நீங்கள் வாழ வேணும்.

மனம் அமைதியைத் தொலைத்து அந்தரிக்கும் நேரங்களில் அவன் என் அந்தரிப்பை ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்டு அழைப்பான்.

வீட்டுக்குள்ளிருந்து என்னை மரணம் துரத்துவதை கொலைஞன் என்னை கொல்லும் கனவோடிருப்பதை அண்ணாவின் அன்போடும் பாதுகாப்பாளனின் அவதானங்களோடும் அடிக்கடி உணர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

ஓருநாள் விடியற்காலை 5.30இற்கு அழைத்தான். அக்காச்சி எனக்கு இரவிரவா நித்திரையில்லை. உங்களைக் கனவு கண்டனான். கவனம். உங்களுக்கு பெரும் சிக்கல் வரப்போகுது. வுpடியட்டுமெண்டுதான் இரவு எடுக்கேல்ல. இரத்தக்காயம் காணப்போறமாதிரியிருக்கு. அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது.

அன்றைக்கு எனக்கும் ஏதோ மனம் அமைதி தொலைந்து போயிருந்தது. அன்று பலமுறை அவன் அழைத்தான். அடிக்கடி கவனம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அன்றைக்குப் பின்னேரம்....>

எனது மன அமைதி நிம்மதி குலைத்து அதில் மகிழும் என்வாழ்வை ஊரூராய் விற்கும் எமன் என் வீட்டுக்கதவை உடைத்தான். நான் நிதானிக்க முதல் என்னை மரணம் நெருங்கியிருந்தது.

முதல் உங்களைப் பாதுகாக்க கையில எது கிடைக்குதோ அதை கையில எடுங்கோ. அவன் அடிக்கடி சொல்வது போல என்னை பாதுகாக்க நான் வைத்திருந்த கோடரி அன்று என்னை பாதுகாத்தது.

மறுநாள் என் அண்ணாவை அழைத்தேன். அவன் எச்சரித்தது போல அன்று எனது உயிர் போக இருந்ததைச் சொன்ன போது.., நான் வரட்டே அக்காச்சி ? ஏன் அந்தரிப்பை அழுகையை கேட்டவன் உடனே யேர்மனி வருவதாக நின்றான்.

இல்லை நான் சமாளிக்கிறன் நில்லுங்கோ பாப்பம்.

உடனடியாக ஒரு பணயம் வெளிக்கிடுவதில் உள்ள சிக்கலை நானும் அறிவேன். அவனது வேலை இன்னொரு நாட்டிலிருந்து வந்து போவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து அவனை வர வேண்டாமென்றேன்.

ஆனால் யாராவது அருகில் இருந்தால் மனம் அமைதி பெறும் போலிருந்தது. அன்றைய அந்தரத்தை அவன் தொலைபேசியூடாக கதைத்துக் கதைத்து என்னை ஆற்றினான்.

ஓவ்வொரு வார்த்தையும் என்னைப் பாதுகாப்பதில் தான் இருந்தது.

நானெல்லாம் இந்த உலகத்துக்குப் பெரிய ஆளில்லையண்ணா. சொல்லும் போதெல்லாம் உங்கடை பலம் உங்களுக்கு விளங்கேல்ல. சொல்லிச் சொல்லிப் பலம் தந்தான்.

புதினேழு வருடப்பிணியிடமிருந்து விலகிக்கொள்ளுமாறு பிள்ளைகளும் வலியுறுத்திய போது 'இனியென்ன யோசிக்கப் போறியள்' விட்டுத்துலையுங்கோ. அவனும் தந்த துணிச்சலோடு என் முடிவை நிரந்தரமாய் மாற்றிக் கொண்டேன்.

இனி கருணையில்லை இரக்கமில்லை மன்னிப்பில்லை. ஓரே முடிவு. என் முடிவை எடுத்த போது..,

இனித்தான் நீங்கள் கவனமா இயங்க வேண்டிய தருணம். உங்களைக் கோபப்படுத்த வேணுமெண்டு பிரச்சனையளைத் தருவினம். உங்கடை மன அமைதியை குழப்பி  மனம் சமநிலையில்லாமல் அந்தரிக்க வைப்பினம் , எதையும் யோசிக்கப்படாது உங்கடை இலக்கு அது மட்டும் தான் இப்ப உங்கடை கண்ணில கனவில நினைவில. சுரியோ.

தினமும் தொலைபேசுவோம். சட்டத்தை நாடி என் காலத்தை மாற்றும் தருணத்துக்காக ஓடிக்கொண்டிருந்தேன்.

அவனது இருபது வருடக்காதல் கைகூடி வந்த தருணம் அது. அவனது மகிழ்ச்சிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இப்போது நான் அவனுக்கு ஆலோசகராகியிருந்தேன்.

என்ர வாழ்க்கையில எல்லா தருணங்களிலயும் நீங்களும் இருந்திருக்கிறியள் அக்காச்சி. நான் சோர்ந்த நேரங்களில அழுத நேரங்களில நீங்கள் தந்த ஆறுதல் ஆற்றுப்படுத்தல் எவ்வளவு பெரிய நம்பிக்கை தந்தனீங்கள். வாழ்க்கையில நான் மறக்க முடியாதவர் நீங்கள்.

மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்திட்டு செத்திட்டாலும் அதுதான் மகிழ்சியண்ணா. உங்கடை வாழ்க்கையை நீங்கள் வாழுங்கோ. இடையில வாறவையளை விலத்திக் கொண்டு நடவுங்கோ. அடடு;தவைக்காகவே வாழ்ந்த என்னால இண்டைக்கு என்னத்தை சாதிக்க முடிஞ்சது?

உங்களுக்குப் பசிச்சா இந்தக் கதைசொல்றவை யாரும் உங்களுக்காக சாப்பிடமாட்டினம். உங்களுக்கு நித்திரை வந்தா உங்களுக்காக யாரும் நித்திரை கொள்ளமாட்டினம்.

ஏன் உங்களுக்கு ஒருயூரோ அவசர தேவையெண்டால் கூட தரமாட்டினம். கைதர வேண்டிய நேரத்தில  கைவிட்டு ஓடுற ஆக்கள் தானனண்ணா இந்த உறவுகள்.

நான் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவன் அன்றைக்குத் தான் இறுதியாய் நிறைய நேரம் கதைத்தான். வுpடியற்காலை 3மணிவரையும் பேசிவிட்டு உறங்கப் போனான்.

இன்னொருவருக்கு இலகுவாய் ஆற்றுப்படுத்தல் செய்யும் நம்மால் நம்மை ஆற்றுப்படுத்த இன்னொருவரையே நம்புகிறோம். நாங்கள் இருவரும் ஆளாளுக்கு நம்பிக்கையாயிருந்து நமது துயர்களை தடைகளைத் தாண்டிக் கொண்டிருந்தோம்.

தனது காதலியை அறிமுகம் செய்தான். என்பற்றி அவளுக்கும் நிறையச் சொல்லியிருக்கிறான் என்பதை அவனது காதலி பேசுகிற தருணங்களில் பகிர்ந்து கொள்வாள்.

நாம் பேசிக்கொள்ளும் நேரங்கள் குறைந்தது. அவனாக எடுத்தாலன்றி நான் அவனை தொல்லைப்படுத்த விரும்பியதில்லை. தனக்குப் பிடித்த வாழ்வை அவன் வாழத் தொடங்கினான்.

ஒருநாள் அழைத்தான். கலியாணம் செய்யப்போறன். நீங்கள் வரவேணும். திருமணநாள் குறித்ததும் முதலில் எனக்குத் தான் அறிவித்தான். திருமண அழைப்பிதழ் அனுப்பினான்.

அவனது திருமணவிழாவுக்கு போக வேண்டுமென நினைத்திருந்தும் அந்த சந்தர்ப்பம் தவறியது. கோவிக்கவில்லை என் நிலையை புரிந்து கொண்டான்.

சரி பிள்ளைக்கு பிறந்தநாளுக்கு சொல்லுங்கோ வாறன். பின்ன அக்காச்சிக்குச் சொல்லாமல்? சிரித்தான்.

அவ்வப்போது குறுஞ்செய்தியனுப்புவான் சுகநலன்களைக் கேட்டுக் கொள்வான். எப்போதாவது தொலைபேசுவான். பழைய பாடல்கள் பகிடிகள் கதைகள் பற்றியும் பரிமாறிக் கொள்வோம்.

2016 அவனது பிறந்தநாளன்று குறுஞ்செய்தியனுப்பினேன். வருடம் வருடம் தொலைபேசியில் வாழ்த்தும் நான் குறுஞ்செய்தியனுப்பிய போது நன்றியென்று பதிலிட்டான். மறுநாள் தொலைபேசியில் அழைத்தான்.

எனக்கும் சட்டப்படி தொல்லை நீங்கீட்டுதண்ணா. சொன்ன போது இனி நீங்கள் நிம்மதியா இருங்கோ. இருப்பியள். இதயம் நிறைய வாழ்த்தினான். மனம் நிறைந்த அவனது வாழ்த்து மீண்டும் தைரியம் தந்தது.

2016 கிறிஸ்மஸ் வந்தது அவன் வாழ்த்து வரவில்லை. புதுவருடம் வந்தது அன்றும் வாழ்த்து வரவில்லை. அந்த நாட்களில் அவனது வாழ்த்தை எதிர்பார்த்திருந்தேன்.

என்ர அண்ணாச்சி என்னை மறந்து போயிட்டார். நண்பனுக்குச் சொன்னேன்.

இந்தமுறை அவரும் நீங்கள் வாழ்த்தேல்லயெண்டு நினைச்சிருக்கக்கூடுமெல்லோ ? நீங்கள் புதவருட வாழ்த்து அனுப்புங்கோ.

நண்பன் சொன்ன போது எனக்கும் அது சரிதானெனப்பட்டது.

அவனது மனைவியின் இலக்கத்திற்கு புதவருட வாழ்த்து அனுப்பினேன்.

அக்காச்சி எப்பிடி சுகம் ? ஏன் தொடர்பில்லை ? என்ன செய்றியள் ? மறந்திட்டியளோ எங்களை ? எப்ப இங்காலை வாறியள்? மறுமுனையில் இருந்து வந்த அக்கறையும் அன்பும் மீண்டும் எங்களது பழைய நாட்களை நினைவுபடுத்தியது.

நண்பன் சொன்னது போல அவர்களும் எனது வாழ்த்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள்.

அக்கா நாங்கள் அம்மா அப்பா ஆகப்போறம். நான் சொன்னது போல அவர்களது குழந்தையின் பிறந்தநாளுக்கு போக வேணும் மனதுக்குள் குறித்துக் கொண்டேன்.

10.01.2017 இன்று கொஞ்சம் மனச்சோர்வாக இருக்கிறது. அவன் நினைவுகளில் நீண்ட நேரம் வந்து போகிறான். கதைக்க வேண்டும் போலிருந்தது. அவனும் நானும் சேர்ந்து கேட்ட பாடல்களை யூரியூப்பில் கேட்கத் தொடங்கினேன்.

ரிதம் படத்தில் வரும் 'நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே' என்ற பாடல் பற்றி ஒருமுறை அதிகம் பேசிக்கொண்டோம். இன்றைக்கு நதியே நதியே பாடல் 30வது தடவை தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

என்னை ஒருகாலம் தாங்கி என் நம்பிக்கையாய் நின்று என்னை உயிர்ப்பித்தவன் தந்த நம்பிக்கைகள் நினைவுகளாகி அடிக்கடி சோர்கிற போது புத்துயிர் தந்து கொண்டேயிருந்தது.

என்மீது அவன் கொண்ட நம்பிக்கை தந்த ஆற்றுப்படுத்தல் அன்புக்காக கைமாறாக கூலி வாங்காத கூலி கேட்காத சுயநலமில்லாத தூயவன். இவன் என்னோடு கூடிப்பிறந்திருக்கலாம். காலம் அந்த வாய்ப்பைத் தரவில்லை.

கடந்து வந்த தடங்களில் ஏத்தனையோ பேர் வந்தார்கள் போனார்கள் பணிகளோடு கடமைகளோடு. அத்தனைபேரிலும் பலரை மறந்து போயிற்று. நினைவுகளில் அவர்கள் முகங்கள் கூட சரியாக நினைவுவருவதில்லை.

சிலர் காலமும் காவிவரும் புனிதமானவர்களாகி என்னோடு பயணிக்கிறார்கள். என்னோடு தொடரும் உறவுகளில் அவனும் சக பயணியாக வந்து கொண்டேயிருக்கிறான்.

சாந்தி நேசக்கரம்
10.01.2017