Thursday, April 24, 2014

காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....!

ஆளரவம் தொலைத்த
அடர் வனங்கள்
அன்றைக்கு மௌனித்து
மயானம் பூண்டு
ஆட்களற்றுப் போனது.

ஆழகான புற்தரைகளின் பச்சையம்
ஆட்களற்றுத் தனித்த
பனித்துளியின் ஈரம்
குருதித் துளியாகிக்
காயத் தொடங்கியது.

நீங்களும் வெடியாகி இடியாகி
வெளியில் வராத ஒளியாகிப்
போனீரென்றுதான் காலமழுதது.
எனினும் போரின் கறைகள் காயாமல்
கண்ணீரின் ஈரம் தோயாமல்
நீங்களெல்லாம் வனமளப்பதான
வதந்திகளையெல்லாம்
மௌனங்கள் காடேற்றிக்
கடந்தது காலநதி.

உங்கள் நிழலைக் கூடத்
தொட்டறியாத பேயெல்லாம்
உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது
அங்கென்றும் இங்கென்றும்
அறிக்கைகள் கொடுத்தது.

சொல்லியழ முடியாத் துயர்
கண்ணில் நிறைந்தாலும்
வெளியில் சொல்லியழும் தைரியமின்றி
தனிமையில் தொலைந்த நாட்கள்....!

தட்டச்சு விசைப்பலகை வீரரின்
வீணாய்ப் போன கதைக்கெல்லாம்
வாயடைத்து மௌனித்து
காலம் வருமென்றெண்ணிக்
காத்திருந்த காலமொன்றில்
கருவிழி நிறைந்த இருள்.

காலம் மீண்டும் கண்ணீரை
விழியெங்கும் நிரப்புகிறது.
மீண்டும் இருள் நிரம்பி உறைகிறது
வனங்களும் எங்கள் மனங்களும்
மேலும் இருள்கிறது.

காடறியும் பனித்துளியில் - உங்கள்
காற்தடங்கள் கரைகிறது.
ஊரறிய ஒப்பாரி வைத்து
நாடழுத காலங்கள் போய்
மீண்டும் காலமறியாக் கற்பூரங்களாய்
காடுகளில் நடந்தவரே....!

காலமும்மைக் கைபற்றி
வருமொருநாள்
அதுவரையும் காலமறியாக்
கடவுளர் அறியாத காலத்தின்
சுடர்களாய் வாழும் தெய்வமாய்
வாழ்ந்திடுவீர்.

20.04.2014
சாந்தி நேசக்கரம்

Saturday, April 19, 2014

சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர்.

சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது.

ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை.

இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் நம்பியிருக்கும் கணவனுக்கு மறைக்க அவள் பட்ட துயரங்களை வார்த்தைகளில் கோர்த்துவிட முடியாது.

அக்காவுக்கும் , அவள் கணவனுக்கும் 2009வரையிலும் அவர்களுக்காக அவர்களது உயிர் காக்கவும் ஆட்கள் இருந்தார்கள். ஆறுதல் தருவதற்கே ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். 2009மே மாதத்தோடு எல்லாம் போனது. ஏனென்று கேட்க நாதியற்றுப் போன பல்லாயிரக்கணக்கானவர்களுள் அவர்களும் அடக்கமாயினர்.

20வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையில் உடலெங்கும் இரும்புத்துகள்களும் நஞ்சூறிய கந்தகக்காற்றையும் சுவாசித்தே வாழ்ந்தார்கள். ஓடியோடி கடமையும் களமும் என வாழ்ந்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. அவளுக்குப் பொருத்தமான துணையாக வந்த கணவனின் துணையோடு அவர்கள் மூச்சு விடுதலைக்காகவே சுவாசித்துக் கொண்டிருந்தது.

ஒருகாலம் தங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது உறவென்று சொல்லிக் கொள்ளவோ ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தைரியத்தையும் உடல் பலத்தையும் கூட களத்தில் தான் அக்கா இழந்தாள். அதற்காக அவர்கள் ஒருநாளும் கலங்கியதுமில்லை கவலைப்பட்டதுமில்லை. இன்று அத்தகையதொரு குழந்தையொன்று இல்லாது போனதற்காய் அதிகம் கவலைப்படுகிறாள் அக்கா.

அந்தரிக்கும் உயிருக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றவே ஆளில்லாது வாழ்நாள் நோயாளியாகிப் போன அவர்களுக்கு உறவென்று சொல்லிக் கொள்ளும் அளவில் ஊரில் யாருமில்லை. ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்தவர்களுக்காக அவர்களது பாதையை நேசித்து அவர்களோடு வாழ்ந்த சிலரின் சின்ன ஆறுதல் மட்டுமே அவர்களை ஏதோ வாழ வைத்துக் கொண்டிருந்தது.

ஏற்கனவே பலதடவைகள் காயங்களுக்கு உள்ளாகிய அண்ணை திடீரென ஒருநாள் மயங்கி விழுந்து நினைவிழந்தார். அக்கா துடித்துப் போனாள். அடுத்தநாள் விடிந்ததும் யாழ்ப்பாணம் மருத்தவத்திற்கு அண்ணையை அழைத்துப் போனாள். உடனே தலையில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென்றார்கள். ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படக்கூடிய சத்திரசிச்சையை தனியார் மருத்துவமனையில் தான் செய்ய முடியுமென்றார்கள் இலவச மருத்தவமனையில் சம்பளம் பெறும் மருத்துவர்.

யாருக்கும் தொல்லை கொடுத்து சிரமப்படுத்தக் கூடாதென்று வாழ்ந்த அக்கா வெளிநாட்டிலிருந்து அவளுக்கு அவ்வப்போது சின்னச் சின்ன உதவிகளை வழங்கிய அக்காவோடு ஒருகாலம் களமாடியவளைத் தான் தொடர்பு கொண்டு அண்ணையின் நிலமையைத் தெரிவித்து அழுதாள்.
அண்ணைக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய அக்கா தன் மகளாய் நேசிக்கும் ஒருத்தியே உதவினாள்.

சத்திரசிகிச்சை முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து மருத்துவத்திற்கான மருந்துக்கான செலவுகள் அவர்களை நிம்மதியாய் விடவில்லை. இயன்றவரை கிடைத்த சின்னச் சின்ன உதவிகள் மூலம் அண்ணையின் உயிர் போராடிக் கொண்டிருந்தது.

வெயிலில் நின்று வேலை செய்யவோ அல்லது பாரமொன்றைத் தூக்கி சுமக்கவோ ஒரு கூலிவேலையைத் தன்னும் செய்யும் பலத்தை இழந்து போனது அண்ணையின் ஆரோக்கியம். அக்காதான் தன் இயலாத நிலமையோடும் அண்ணையைக் காத்தாள். மருந்தின்றேல் அண்ணையால் இயங்க முடியாத நிலமையாகியது.

திடீரென அக்கா சுவாசிக்கச் சிரமப்பட்டாள். மூச்செடுக்க அவளுக்கு முடியாமல் போகத் தொடங்கியது. பணமில்லாதவர்களுக்காக இலவச மருத்துவமனைகள் தான் உயிர் தரும் இல்லங்கள்.

தன்னையே கொண்டு செல்ல முடியாத அண்ணை அக்காவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இலவச மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த மருத்துவர் பணம் கொடுத்தே அக்காவிற்கு உயிர்காக்க முடியுமென்று அறிவித்தார். கடவுளாகத் தெரிந்த மருத்துவர் காசுப் பிசாசாகி அக்காவின் உயிரைப் பலியெடுக்கும் காலனாகித் தெரிந்தார்கள். காசு இல்லாது போனால் அக்காவை வீட்டுக்குக் கொண்டு போகச் சொன்னார்கள்.

அண்ணையின் உலகம் , ஆறுதல் ,பலம் , நம்பிக்கை , வாழ்வு எல்லாமே அக்காதான். அவளில்லையென்றால் எதையும் சமாளித்து வாழக்கூடிய நிலமையே இல்லாத தனிமனிதன் அக்காவின் உயிர்காக்கப் போராடினார். ஆனால் பணம் தான் அக்கா உயிரைத் தரும் கடவுளாகியது.

அக்கா வாழும் வரையும் வாழ்ந்துவிட்டுப் போகிறேனென ஊர் திரும்பினாள். ஒரு மாதம் வரையிலும் எதுவோ சமாளித்துவிட்டாள். கடந்த வாரம் அவளால் உணவை உட்கொள்ளவோ எழுந்து நடக்கவோ முடியாது போனது. உயர் இரத்த அழுத்தம் அத்தோடு சுவாசிக்க முடியாது அவள் சாவின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அண்ணை அவளை யாழ்ப்பாணம் கொண்டு சென்றார். பணம் வை இல்லையேல் ஆளைக் கொண்டு போ...! இலவச மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். தெரிந்தவர்களின் வீட்டில் அக்காவை வைத்துக் கொண்டு அண்ணை கடைசி நம்பிக்கை கைவிடாதென நம்பி வெளிநாட்டுக்கு தொடர்பெடுத்தார்.

என்ரை புள்ள உங்களை விட்டா எங்களுக்கு ஒருத்தருமில்லை...அக்கா சாகப்போறாள்....காப்பாற்று....என்ற அண்ணையின் கண்ணீர் ஐரோப்பா வரையிலும் கசிந்தது. அந்தச் செய்தியைக் கொண்டு வந்தாள் ஒரு போராளித் தங்கை. என்ன செய்தெண்டாலும் அக்காவை காப்பாற்ற வேணும்.

முகநூல் , வலைப்பூ மூலம் அறிமுகமான மருத்துவர்கள் பலரது இலக்கங்களைத் தேடிய போது திருகோணமலையில் வாழும் வலைப்பூவில் அறிமுகமான மருத்துவர் தம்பியொருவரின் தொடர்பே கிடைத்தது. அவசர மருத்துவ சேவையில் நின்ற அந்தத் தம்பி தனது அவசர நிலமைக்கு மத்தியிலும் உடனடியாக தொடர்பில் வந்து அக்காவை காப்பாற்ற வேண்டிய ஆதரவைத் தர முன்வந்தார். காசுக்காயே மருத்துவம் செய்யும் காசுப் பிசாசுகள் மத்தியில் அந்த மருத்துவர் தம்பி சத்தியமாய் என் கண்ணில் கடவுளாயே தெரிந்தார்.

17.04.2014 அன்று வேகவேகமாக அக்காவின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி 18.04.2014 ஏதாவது ஒரு வழியைக் காணும் வேகத்தில் தொடங்கிய முயற்சி. 18ம் திகதி அக்காவை மருத்துவமனையில் எதிர்பாராமல் ஒருவர் சந்தித்ததை கடவுள் அருளென்பதா ? இல்லை விதியென்பதா ?

1991இல் அக்காவோடு களமாடி வரலாற்றுச் சமரொன்றில் காயமடைந்து அவள் உயிர் போய்விட்டதென நம்பினார்கள். ஆனால் அக்கா மட்டுமே அவளுக்கு உயிர் இருப்பதை நம்பித் தன் தோழில் நீண்ட தூரம் காவிச் சென்று பிணமாகிக் கிடந்தவளுக்கு உயிர் கொடுத்திருந்தாள். அந்தத் தோழி பின்னர் குடும்பமாகி போராட்ட வாழ்வை விட்டு விலகியிருந்தாள். நீண்ட காலம் தொடர்புகள் எதுவும் இல்லாது போனது. அப்படியொரு உயிரைக் காத்ததைக் கூட அக்கா மறந்து போனாள்.

1991இல் அக்காவால் உயிர் காக்கப்பட்டவள் அக்காவின் நிலமையைக் கேட்டாள். அன்றைக்கு அக்கா தந்த உயிரே இன்று அவளை அந்த இடத்தில் உயிரோடு நிறுத்தியிருந்ததையும் நினைவுபடுத்தி அக்காவுக்கு உயிரைக் கொடுத்தேனும் உதவுவேன் என முன்வந்தாள்.

எங்கள் ஏற்பாடுகளின் நடுவில் அக்காவுக்கு கிடைத்த அந்தத் தோழி தனது உறவினர்கள் மூலம் அக்காவுக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய ஏற்பாட்டைச் செய்து இரவோடிரவாக கொழும்பு கொண்டு செல்லப்பட்டாள்.
சிகிச்சை முடிந்தால் ஆறுமாதங்கள் வரையில் அக்காவை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும். அதற்கான செலவை கட்டாயம் கருணையுள்ளம் படைத்தோர் யாராவது செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் குடும்பம் அக்காவுக்கான சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்துள்ளார்கள்.

தனது மனைவியின் அருகில் போயிருக்கத் தேவையான பணமில்லாததால் அண்ணை ஊரில் போயிருந்து தனியே அக்காவிற்காக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். உலகில் யாருக்கும் வரக்கூடாத துயரம் அண்ணைக்கு.
18ம் திகதி வீடு சென்ற அண்ணை திடீரென மயங்கி வீழ்ந்தார். ஏன் எதற்கு ?
காரணம் எதுவும் புரியவில்லை. தனித்தே வாழும் அந்த மனிதனுக்கு சுடுதண்ணீர் கொடுக்கக்கூட ஆளின்றி படுக்கையிலிருந்து எழ முடியாது போனது. தனது நிலமையை அக்கா அறிந்தால் வேதனைப்படுவாள் என யோசித்து தான் சுகமாய் இருப்பதாய் பொய் சொல்லிவிட்டு அக்காவின் வரவிற்காய் காத்திருக்கிறார்.

19ம் திகதி காலை 9மணிக்கு சிகிச்சை நடக்குமென்றார்கள். 18.04.2014 மாலை அக்காவை அழைத்தேன். அவள் கதைக்கவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு சொல்லை அவள் சொல்லும் போதும் நிமிடக்கணக்கில் அந்தரிக்கிறாள்.

ஆச்சி என்னால ஏலாதமணை....அண்ணையோடை கதையுங்கோ....அவர் பாவம்....நானில்லாட்டில் அவர் தனிச்சுப் போவர்....உங்கை யேர்மனியிலயும் எனக்கு சொந்தக்காறர் ரெண்டு பேர் இருக்கினம். அவைக்கெல்லாம் ரெலிபோன் எடுத்துப் பாத்தனான்...ஒருத்தரும் உதவமாட்டமெண்டிட்டினம்....அம்மாச்சி என்ரை செல்லம் கடவுள் தான் உங்களையெல்லாம் எனக்குக் காட்டியிருக்கிறான்.

நேற்றைக்கு மட்டும் இனியெனக்கு சாவுதான் தப்பமாட்டனெண்டுதானணை நினைச்சனான்....ஆனால்....அக்காவால் பேச முடியாது குரல் மிகவும் சோர்ந்து போய்க்கொண்டிருந்தது. அண்ணையோடை எடுத்துக் கதையணை....அவர் பாவம் என்னோடை ஏலாதத்தோடை அலைஞ்சவர்....பாவம் இப்ப தனிச்சு கிடக்கிறார்....!

அக்கா நீங்க யோசிக்காமல் படுங்கோ...நாளைக்கு எல்லாம் நல்லா முடிஞ்சு நீங்கள் திரும்பி வருவீங்கள்....உங்களுக்கு உதவிறதுக்கு இங்கை கனபேர் இருக்கினம் எல்லாரிட்டையும் கேட்பம்....உங்களை நாங்க கைவிடமாட்டம்....நிம்மதியா படுங்கோ....சொன்ன போது அக்கா அழுதாள்...
என்ரையம்மா என்னாலை ஏலாதாம் நான் படுக்கட்டே....அக்கா விடைபெற்ற போது இலங்கை நேரம் இரவு 9.40ஆகியிருந்தது. நீ வருவாய் எங்கள் அக்காவாய் உனக்கான உதவியை புலம்பெயர்ந்து வாழும் கருணையாளர்கள் தருவார்கள் நிம்மதியாய் இரு என்று சொல்லிக் கொண்டு தொடர்பை துண்டிக்கிறேன்.

அவளது குரலும் அவள் மூச்செடுக்க சிரமப்படுவதும் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. நேற்றைய இரவு விடியும் வரையும் அக்காவின் சிகிச்சை முடிவு பற்றிய செய்தியையே கைபேசி எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

பொறுமை கடந்து அண்ணைக்கு தொடர்பெடுத்த போது....ஓம் பிள்ளை சொல்லணை என்ற தீனக்குரலில் அழைத்தார். அக்காவுக்கு என்னமாதிரியண்ணை எல்லாம் முடிஞ்சுதே ? இல்லையம்மா அவவுக்கு பிறசர் சரியா கூடீட்டுதாம் பிறசர் குறையத்தானாம் செய்வினம்....!

தனது தனிமை , தனது இயலாமை , தனது நோயின் வலி பற்றியெல்லாம் அண்ணை சொல்லிக் கொண்டிருந்தார். 21ம் திகதி அண்ணைக்கான அடுத்த மருத்துவ சோதனைக்குப் போக வேணும். ஆனால் போவதற்கு கையில் எதுவும் இல்லாது இருக்கிறார். ஏதாவது வழி செய்வமண்ணை நாளைண்டைக்கு போங்கோ என்ற போது சொன்னார். எனக்கு உதவாட்டில் காரியமில்லை மகள் அக்காவைக் காப்பாற்றுங்கோ....அக்காவுக்கு உதவுங்கோ....!

அண்ணையின் குரல் அழுகையாகி விக்கலெடுத்துத் தேம்பினார். பணமே எல்லாவற்றையும் எல்லாரையும் வாழ வைக்கும் பலமாகிய விதியை நினைக்க கோபம் இயலாமை விரக்தியென ஏதோதோ உணர்வுகள் கண்ணிலிருந்து கண்ணீராய் வழிகிறது.

யோசிக்காதையுங்கோ அண்ணை....அக்கா சுகமாகி கெதியில வருவா....காசுதானே இந்த உலகத்தில எத்தினை பேர் இருக்கினம்....இன்னும் மனிதமும் மனிதர்களும் சாகேல்லயண்ணை திங்கள் விடியக் கிடையில உங்களுக்கு மருந்துக்கு காசு வரும்....! சொன்ன போதும் அண்ணை அக்காவைத் தான் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அக்காவைக் காக்க அக்காவைத் தவிர யாருமில்லாத அண்ணையைக் காக்க கருணையுள்ளம் படைத்தவர்களே உங்களிடமெல்லாம் கையேந்துகிறோம். எங்களுக்காக வாழ்ந்த இரு சீவன்கள் உயிர்காக்க உங்களால் மட்டுமே முடியும்.

19.04.2014 (இந்த உயிர்கள் இரண்டையும் காப்பாற்ற உதவுங்கள். உதவக் கூடியவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை வழங்கி உயிர்காத்துத் தாருங்கள்)

தொடர்புகளுக்கு :-
நேசக்கரம்
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418
nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh



Wednesday, April 9, 2014

காணாமற்போனவர்கள் இனி வர வேண்டாம்

நீலக்கோடுகள் அடர்த்தியாய் வரையப்பட்ட சாரமும்  வெள்ளைச் சேட்டும் அணிந்திருந்தான். சன நெரிசலை விலக்கி வந்து கொண்டிருந்தவன் தனது நடையின் வேகத்தைக் கூட்டி ஓடிவரத் தொடங்கினான். கையில் ஒரு பை அதனுள் எதையோ வைத்துக் காவிக்கொண்டு ஓடிவந்தான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். கையில் இருந்த பையிலிருந்து ஒரு அழகான பெட்டியை அவளிடம் நீட்டினான். இது உன்னுடைய மகனுக்காக நான் எடுத்து வைச்சிருந்தனான். இத அவனிட்டைக் குடு மாமா தந்தனெண்டு....!

அவன் கொடுத்த பெட்டி தவறி கீழே விழுந்தது. அதனுள் சில்லறைக்காசுகள். நிலத்தில் சிதறிய காசுகளைப் பொறுக்கிப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். பச்சையுடையுடுத்த சட்டித் தொப்பியணிந்தவர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.  பாதணி அணியப்படாத வெறும் காலோடு சகதி நிறைந்த ஆற்றுநீரில் இறங்கினான். ஆற்று நீர் அவனை தன் மெல்லிய கால்களோடு இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தது.

அவன் பெயரைச் சொல்லிக் கத்தியழுதாள். சிரித்தபடி அவளிடம் வந்தவன் இரத்தம் வழிய ஆற்றோடு அடிபட்டு இழுபட்டுப் போய்க்கொண்டிருந்தான். மெல்லென ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில் அவனது குருதியும் கலந்தோடியது. ஆற்றோடு இழுபடும் அவனை நோக்கிக் கைகளை நீட்டியழுதாள் அவன் கண்ணிலிருந்து விடுபட்டுத் தொலைவாகிக் கொண்டிருந்தான்.....!

அவசரமாக எழுந்தாள். சே...கனவு....! உறங்கிக் கொண்டிருந்த மகனின் அறையைத் திறந்து மின் விளக்கைப் போட்டாள். என்னம்மா...! நித்திரைத் தூக்கத்தில் கேட்டான் மகன். சரி படுங்கோ செல்லம்....! சொல்லிவிட்டுத் தன் கட்டிலில் வந்து மீண்டும் சரிந்தாள். ஆனால் அந்தக் கனவில் சிரித்தபடி வந்தவன் இரத்தம் கலந்து ஆற்றோடு அடிபட்டுப் போனது மனசுக்குள் ஏதோ அந்தரிப்பாயிருந்தது. திரும்ப நித்திரை வர மறுத்தது. மனசுக்குள் ஏதோ அந்தரிப்பாயிருந்தது.

2009இன் பின்னர் அனேகமான கனவுகள் இப்படித்தான். காணாமற்போனோர் முகங்களும் கடைசியாய் சிரித்தபடி விடை தந்து போனோருமே நிறையும் கனவுகளாகியிருக்கிறது. அவர்கள் பிரிவும் , துயரங்களும் கனவுகளையும் நிம்மதியாய் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய கனவில் வந்தவனும் 2009இல் காணமற்போனவன். இந்த 5வருடத்தில் ஒருமுறையும் கனவில் வராதவன் இன்று வந்து போயிருக்கிறான். சிலவேளை எங்கேனும் இருப்பானோ ? கைபேசித் திரையைத் தட்டி இணையத்தில் உலாவத் தொடங்கினாள். அவனது பெயரை கூகிளில் அடித்துப் பார்த்தாள் ஏதாவது செய்திகள் அண்மையில் வந்ததோ என தேடினாள்.

அப்படியேதும் இருக்கவில்லை. ஆனால் நினைவுகளில் இருந்து மறந்து போனவன் ஏன் இன்று கனவில் வந்து சில்லறைக்காசுகளை அவளது மகனுக்காக கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான் பெரும் குழப்பமாகவே இருந்தது. கனவுகளுக்கு காரணங்கள் ஆய்வுகள் ஆயிரம் சொல்லப்பட்டாலும் இதுவரை கனவுகள் பற்றி எவரும் சரியான ஆய்வை காணாமல் இருப்பது பற்றி அந்த நேரம் யோசித்தாள்.

இப்போது கனவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. கனவுகளைப் பகிர்ந்து கொண்டால் அது பலிக்காதென்று சொல்வதை நம்பி பலமுறை தனது கனவுகளை பகிரப்போய் எல்லோரிடமும் நன்றாக வேண்டிக்கட்டியிருக்கிறாள்.

ஒண்டையே ஒரே நினைச்சுக் கொண்டிருந்தால் கனவும் அதுதான வரும்....! எல்லோரும் சொல்வார்கள். அதனால் கனவுகளை யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் அந்தக் கனவிலிருந்து விடுபடும் வரையும் அமைதியின்றி அலைவாள். மௌனமாய் நினைவுகளோடு கரைதலும் பின்னர் மீள எழுதலுமே வளமையாகிப் போனது.

000               000               000

அவனும் அவளும் ஒரே ஊரில் பிறந்திருந்தார்கள். அவன் அப்பா அவளது தாய்வழி உறவு. மாமா என்ற மதிப்போடு அவனது அப்பா அவள் வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் அவனைப் பற்றி ஏதாவது சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டேயிருப்பார். அவன் க.பொ.த.சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கணித பிரிவில் உயர்தரத்தை ஆரம்பித்திருந்தான். அவனிலும் 2 வயதால் இளைய அவள் அவனது கடைசித் தங்கையுடன் படித்துக் கொண்டிருந்தாள்.

ஆண்களும் பெண்களும் கலந்து படித்த பாடசாலைக்கு அவள் ஆறாம் வகுப்பில் இணைந்த போது அவனும் கூடவே வருவான். மதியம் பேயயுலவும் என்று நம்பிய புளியமரத்தடியை அவன் வரும் துணிவோடு பயமில்லாமல் கடந்து போவாள். பனைவடலிகளைத் தாண்டிப் போகும் போதெல்லாம் அவனே துணையாக வந்திருக்கிறான். பின்னர் அவனது கடைசித் தங்கையுடன் சேர்ந்து போகும் போது அவனும் கூடவே அவர்களோடு சயிக்கிளில் வருவான்.

அதிகம் கதைக்க வேண்டிய தேவைகள் இல்லாது போனாலும் அவன் தங்கைக்கு காவலனாய் வரும் போது அவளுக்கும் காவலாயே வருவான். வெள்ளி , செவ்வாய்க்கிழமைகளில் வயிரவர் கோவிலில் பஜனை பாடும் போதும் அவனும் வருவான். நெற்றியில் விபூதியும் சந்தனமும் வைத்து அமைதியாய் வைரவரை வழிபடுவான். சரஸ்வதி பூசைக்கு பேச்சுப்போட்டி , தேவார மனனப்போட்டி எல்லாவற்றிலும் அவனும் கலப்பான். ஆளாளுக்கு போட்டி போட்டு பரிசை வெல்வார்கள்.

எதுவென்று பிரித்தறிய முடியாத உறவிணைப்பு. அவன் வீட்டு வளவில் காய்க்கும் நெல்லிக்காய் , கொய்யாக்காயிலிருந்து எல்லாமே அவன் எல்லோருக்கும் பங்கிடுவான். சிறுவயது மகிழ்ச்சிக் காலங்களில் அவனோடு சேர்ந்து கிளிக்கோடு மறித்தது தொடக்கம் எட்டுப்பாத்தி , மாங்கோடு , கப்பல் கோடு வரையும் போட்டி எப்போதுமே அவனுடன் இருந்து கொண்டேயிருந்தது.

உயர்தரம் கணித பிரிவில் படிக்க ஆரம்பித்து சில மாதங்களில் அவன் ஊரிலிருந்து காணாமற்போனான். அது இந்திய இராணுவம் வெளியேற்ற காலம். அவனுடைய அப்பா அவள் வீட்டில் வந்து போகும் நேரமெல்லாம் கண்கள் பனிக்க அவனைப் பற்றிச் சொல்லுவார். என்ன குறைவிட்டனான் ? ஏன் இப்பிடிச் செய்திட்டுப் போனவன் ? அவரது கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவளது அம்மாவுக்குச் சொல்லுவார்....அவன் ஒரு பெரிய ஆளா வருவனெண்டு தான் படிப்பிச்சன்...ஆனால் அவருக்கு நாடு பெரிசெண்டு போயிட்டார்....!

அந்த அப்பாவின் வலியின் கொடுமை அவளுக்கு அப்போது புரிந்ததில்லை. ஆனால் அவனைப் பற்றி பெருமையாக இருந்தது. மனசில் சின்ன நெருடல் அவ்வப்போது இருந்தாலும் அவன் ஒருநாள் துவக்கோடு ஊரில் வந்து வரிச்சீருடையுடன் அவளையும் தாண்டி மோட்டார் சயிக்கிளில் போன போது ஏனோ இனம்புரியாத துயரம் மனசை நெருக்கியது.

அவனது உயிர் இன்று அல்லது நாளை போய்விடும் போல அவனது கடமை அமைந்து அவன் களத்தில் நின்றான். எங்காவது எதேச்சையாக காணும் நேரங்களில் ஒரு சிரிப்பு அவ்வளவுதான் அதற்கு மேல் எதுவுமில்லை. அவனை உறவென்று சொல்லிக் கொள்வதில் ஒருவகை பெருமிதம்.

1990 மேலும் ஊரிலிருந்து ஆண்கள் , பெண்கள் காணாமற்போனார்கள். அவன் போன கடுமையான பயணத்தில் பலர் இணைந்தார்கள். மீண்டும் இடப்பெயர்வு  , குண்டுச் சத்தங்கள் , மரணங்கள் அவலத்தின் பொழுதுகள் அவன் பிறகு காணாமற்போய்விட்டான். பொறுப்பாளராய் உயர்ந்து ஓமந்தையில் நிற்கிறான் எனச் சொன்னார்கள்.
.......,
காலநதியில் எழுதப்பட்ட கதைகள் பல அவை கண்ணீராலும் எழுதப்பட்டு கரைந்து கொண்டேயிருந்தது. அவள் நாட்டைவிட்டுப் பிரிந்தாள். திருமணம் குழந்தைகள் என வாழ்வு மாறிப்போனது. அவன் நடந்த களத்திலிருந்து தூரமாகினாள்.

இடையில் களங்கள் இறுகி தொடர்புகள் அறுந்து உறவுகள் அயல் எல்லாம் எங்கெங்கோ பிரிந்து போனார்கள். அவனும் நினைவுகளிலிருந்து மறந்து போகாமல் பல தோழர்களின் நினைவுகளோடு அவ்வப்போது நினைவுகளோடு வந்து போயிருக்கிறான். உறவொன்றைச் சந்தித்த போது அவனைப் பற்றி விசாரித்தாள். அவன் ஒரு தளபதியாக தகுதிநிலை உயர்ந்தானென்று தகவல் சொன்னார்கள். ஒரு பெண் போராளியை திருமணமும் செய்தானென்றும் சொன்னார்கள்.

காலம் 2002.....,மீண்டும் தாயகப்பயணம் போன போது அவனது கடைசித் தங்கையைத் தேடிப்பிடித்தாள். முல்லைத்தீவில் ஒரு அழகான தென்னந்தோப்பு வளவில் குடியிருந்தார்கள். அண்ணா என்ன செய்றான் ? கேட்ட போது அவனது சின்னத்தங்கை அவனைப் பற்றிச்  சொன்னாள். சந்திக்கக் கூடிய இடத்தில் அவன் அப்போது இல்லையென்றார்கள். மீண்டும் 2003இல் பிள்ளைகளோடு போன போது கிளிநொச்சியில் அவன் அரசியல் அலுவலகத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். அந்தக்கால அவசரங்களோடு அவனும் அலுவலாகியிருப்பதாக சொன்னார்கள்.

ஒருநாள் அறிவமுது புத்தகசாலையில் அவள் புத்தங்கள் வாங்கப் போயிருந்தாள். பலர் புத்தகக் கடைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவள் ஒவ்வொரு புத்ததங்களையும் பார்த்துப் பார்த்து அது வேணும் இது வேணும் என எடுத்துக் கொண்டிருந்தாள். என்னக்கா கடை போடப்போறியளோ ? புத்தகக் கடையில் நின்ற தம்பியொருவன் கேட்டான்.

மேலும் சிலர் வந்தார்கள். அவள் புத்தங்களை பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள். பலசரக்குக் கடைக்கு சீனிச்சரை சுத்தவோ உவ்வளவு புத்தகமும் ஒருவன் சொன்னது கேட்டது. திரும்பிப் பார்த்த போது அவன் தனது முகத்தைக் காட்டாமல் மறுபக்கம் திரும்பி நின்றான். இடுப்பில் பெலிற் கட்டி பிஸ்ரல் செருகிகியிருந்தான். பிஸ்ரல் கட்டிய ஒருவர் புத்தகங்கள் சீனிச்சரை சுத்தவோ புத்தகங்கள் என்றது சட்டென கோபத்தைக் கொடுத்தாலும் அதை வெளிக்காட்டாமல் புத்தகங்களை எடுத்தாள்.

பிள்ளைகள் வெளியில் ஐஸ்கிறீம் வாகனத்தைக் கண்டதும் ஜஸ்கிறீம் வேணுமென அடம்பிடித்தார்கள். பிள்ளைகளுடன் அவளுக்கு உதவியாய் வந்திருந்த தம்பியிடம் சொன்னாள். தம்பி ரெண்டு பேருக்கும் ஐஸ்கிறீம் வேண்டிக் குடுக்கிறீங்களே நான் புத்தகத்தை எடுத்திட்டு வாறன். ஓமக்கா....என்றவன் வாங்கோ நாங்க ஐஸ்கிறீம் வாங்குவம் என பிள்ளைகளை கூட்டிக் கொண்டு தெருவுக்குப் போனான்.

123புத்தகங்களை கொள்வனவு செய்து கொண்டு வெளியில் வந்தாள். பிள்ளைகள் ஜஸ்கிறீமும் கைகளில் விளையாட்டுப் பொருட்கள் சிலவற்றையும் வைத்துக் கொண்டு தம்பியுடன் நின்றார்கள். அரசியல்துறை அண்ணையொராள் வந்தவர் பிள்ளையளுக்கு ஜஸ்கிறீமும் விளையாட்டுச் சாமானுகளும் வாங்கிக் குடுத்திட்டு போறார் என்றான். உங்கடை ஊராம் உங்களைத் தெரியுமாமெண்டு சொன்னவர். பிள்ளையளுக்கு தான் மாமாவெண்டு சொல்லி உதெல்லாம் வேண்டிக் குடுத்தவர்.

தம்பி சொல்லியும் அது யாரென்பது புரியவில்லை. அவனை நினைவும் வரவில்லை. வீடு போன பின்னர் தம்பியிடம் அவனது பெயரை விசாரித்ததில் அவன் நினைவில் வந்தான். சமாதான செயலகத்தில சொல்லிவிட்டால் ஆளைப் பாக்கலாமக்கா...!

அண்மையாக சந்தித்தவன் பேசாமல் போனது கோபமாக இருந்தது. தம்பி சொன்ன பிறகும் கௌரவம் விடாமல் அவனைச் சந்திக்கும் முயற்சியை எடுக்கவில்லை. எங்கே நிற்கிறாள் யாருடன் நிற்கிறாள் என்பதெல்லாம் நிச்சயம் அறிந்திருப்பான். அப்படியிருக்க அருகில் வந்தும் பேசாமல் போனானென்றால்....திமிர் என தனக்குள் முணுமுணுத்தாள். ஆளாளுக்கு பிடிவாதத்தில் சந்திக்க முயற்சியெடுக்கவில்லை. அவள் ஐரோப்பா திரும்பிவிட்டாள்.

2006இல் இந்தியாவில் இருந்த அவனது சித்தி நோய்வாய்ப்பட்டு இருப்பதாக அறிந்து கதைக்க எடுத்த போது கதையோடு அவனது கதையும் வந்தது. நீயென்னடி 3மாதம் கிளிநொச்சியில் நிண்டியாம் தன்னை ஒருமுறை கூட பார்க்க வரேல்லயெண்டு சொன்னான். ஏனடியாத்தை ஒருக்கா பிள்ளையளையும் காட்டி பாத்திருக்கலாமெல்லே ?
புத்தகக்கடையில கண்டவர் ஏனன்ரி என்னோடை கதைச்சிருக்கலாம் தானே...! பிள்ளையளுக்கு விளையாட்டுச் சாமானுகளை வாங்கிக் குடுத்திட்டு போகத் தெரிஞ்சவர் கதைச்சா என்ன குறைஞ்சே போயிடுவர் ?
நீ தன்னை அடையாளம் பிடிக்கிறியோண்டு பாக்கத்தான் அவன் கடையில கண்டிட்டு கதைக்காமல் போயிருக்கிறான். சீனிச்சரை சுத்தவோ புத்தகமெண்டு சொன்னவனாம்....அப்ப பக்கத்தில தானே நிண்டவனாம்.....! சத்தியமா எனக்கு அடையாளம் தெரியேல்லயன்ரி...! ஏத்தின வரியம் இப்பத்தைய தோற்றத்தை என்னாலை அடையாளம் காண முடியேல்ல...வேணுமெண்டு தானே கதையாமல் போனவர்.....!

பழைய குரல் நினைவிருக்கலாம் என நினைத்தானோ என்னவோ...! அவன் கொஞ்சம் வீம்பு பிடித்தவன் என்பாள் அவளது தங்கை. அதற்காக அருகில் நின்றும் தன்னை அடையாளம் காட்டாமல் போனவன் மீது சொல்ல முடியாத கோபம். ஆளாளுக்கு பிடிவாதம் பிடித்து சந்திக்காமல் தொடர்பு கொள்ளாமல் விட்டு அதுவொரு சின்ன வயசு கால கோபம் போலவே போய்விட்டது.
அவனைப்பற்றி பலரும் கதைத்தார்கள். அவனது பதவிநிலை , பணிகள் , திறமை எல்லாவற்றையும் ஊரவர்கள் தொடக்கம் அவனது பெயரையும் காலம் உச்சரித்துக் கொண்டேயிருந்தது. அவனது அலுவலகத்தில் அவனுக்கு உதவியாளராயிருந்த அவனது துறைசார் போராளியொருவனுடன் ஒருமுறை அலுவல் ஒன்றிற்காக தொடர்பேற்படுத்திய போது அவனைப் பற்றி அடிக்கடி அறியக் கிடைத்தது. ஒருமுறை அவனது உதவியாளர் அவனது நிழற்படமொன்றை மின்னஞ்சலிட்டிருந்தான்.

சொல்லுங்கோ தம்பி அவர் கதைக்காட்டி நானும் கதைக்கமாட்டனாமெண்டு. ஐயோ கடவுளே இந்தக் குழந்தைப்பிள்ளையள் ரெண்டின்ரை தொல்லையும் எனக்கு பெருந்தொல்லையப்பா...! ஏன் அவ கதைக்கமாட்டாவோண்டு அவரும் இவ ஒராள் என் அவர் கதைக்கமாட்டாரோண்டு ....! தம்பி ஒருமுறை கதைத்த போது இப்படித்தான் அலுத்துக் கொண்டான்.

காலம் ஓடியது யுத்தம் மூண்டது. இரத்தமும் அவலமும் தோய்ந்த நாட்களாய் விடியத் தொடங்கியது. தொடர்பில் இருந்த அவனது உதவியாளர் தம்பி இடையிடை தொடர்பு கொள்வான் சுகம் விசாரிப்பான். அவனும் ஆனந்தபுரம் சண்டை முடிவோடு இல்லாமல் போய்விட்டான். சொல்லாமல் கொள்ளாமல் காணாமற் போயிருந்தான்.

மேமாதம் 2009 உலகம் பரபரத்தது தமிழர்கள் மட்டும் கண்ணீரோடும் துயரத்தோடும் அந்தப் பொழுதுகளை வரவேற்றுக் கொண்டார்கள். எல்லாம் மாறியது நினைக்காத சரணடைவு கனவிலும் பார்த்திராத அந்த நிகழ்வு நடந்து....எல்லாம் முடிந்து போனது....பலரின் முடிவு போல அவனும் இறுதியில் சரணடைந்தானா ? சாவை தனக்குத் தானே மூட்டினானா என எதுவும் தெரியாது.

தேடித்திரிந்தவர்களில் அவனும் ஒருவனாய் அவள் தேடினாள். அவனது குடும்பம் அவனது மனைவி , பிள்ளைகள் யாரையும் எங்கும் கண்டுபிடிக்கவில்லை. உறவுகள், நண்பர்கள் , தெரிந்தவர்கள் என காணாமற்போனவர்களின் பட்டியலில் அவனும் காணாமற்போயிருக்கிறான்.

இணையத்தில் செய்திகளைத் தேடுகிறாள். அவர் கைது , இவர் கடத்தல் என தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுகளும் , செய்திகளும் தூள்பறக்கும் அலசல்களால் நிறைகிறது தமிழ் இணையங்கள். அவனது பெயர் இதுவரை எங்குமே வரவில்லை. துரோகியாய் ஆராயப்பட்டு அவன் வாழ்ந்த வாழ்வை எவரும் இதுவரை கொச்சைப்படுத்தாதது ஆறுதலாக இருந்தது.

அவன் விரும்பியிருந்தால் வெளிநாடொன்றில் வசதியை அனுபவித்து தனது வாழ்நாளை கடத்தியிருக்கலாம். அவனது கணிதத்துறைக் கல்வியைத் தொடர்ந்து வென்றிருந்தால் ஒரு விஞ்ஞானியைக் கூட அவனது குடும்பமும் அவனது ஊரும் பெற்றிருக்கலாம். ஆனால் பதின்மம் மாறாத அந்த வயதில் தேசத்தை நேசித்துப் போனதால் அவன் காணாமல் போனான்.

எல்லோரையும் போல சுயநலமாய் இல்லாமல் பொதுநலமாய் யோசித்து தன்னை மறந்து தேசத்தை நேரித்த போராளிகளை மாவீரர்களை சமகால தமிழ்ச்சாதி கவனிக்கும் கவனிப்பையெல்லாம் பார்க்காமல் மறைந்தவரும் காணாமற்போனவரும் இனி வரவே வேண்டாமென நினைத்துக் கொண்டாள்.
ஒரு வேளை காணாமற்போனவர்கள் திரும்பி வந்து இந்த நிலமையைப் பார்த்தால் எதிரியிடம் பிடிபடாமல் இலட்சியத்தை வெல்ல அணிந்த சயனைட் வில்லைகளை இந்த சமூகத்தின் மீதான அவநம்பிக்கையை சகிக்க முடியாமல் தற்கொலைக்காக பயன்படுத்தக் கூடும். அவர்கள் வர வேண்டாம்...காணாமலேயே இருக்கட்டும்.

சின்னப்பிள்ளையள் மாதிரி ஆளாளுக்கு முரண்டு பிடித்து கதைக்காமல் தொடர்பு கொள்ளாமல் விட்டது இப்போது நெஞ்சுக்குள் வலியைத் தருகிறது. நீ முதல் கதைச்சாலென்ன என ஆளாளுக்கு அடம்பிடித்ததையும் ஒருகாலம் விளையாட்டாக ரசித்தது போல இப்போது ரசிக்க முடியவில்லை. இனி என்றுமே திரும்பக் கிடைக்காத அவனும் அவன் போன்றவர்களினதும் நினைவுகள் மட்டும் மீதமாக....!

08.04.2014 (அண்மைய நாட்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளைப் படித்த போது எழுந்த உணர்வும் ஒரு காலத்தின் ஞாபகமும் ஒரு கனவும் தந்த பாதிப்பிலிருந்து இக்கதை பிறந்திருக்கிறது)

Friday, April 4, 2014

ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...!

அந்த நாட்கள்
தீயின் நாக்குகளால்
தின்னப்பட்ட தீராத்துயர்
எங்கள் வீரத்தின்
விலாசங்களை
வெ(கொ)ன்ற நாட்கள்.


வெற்றிகள் தந்தெங்கள்
விடுதலைச் சுவடுகளில்
வீரம் எழுதிய
மகனாரும் , மகளாளும்
இறுதிச் சமர் புரிந்து
எரிந்து கரைந்த
5ம் ஆண்டு நினைவில்
ஆனந்தபுரம் அழியாத நினைவாக....!

பூக்களின் வாசனை கலந்த
பொன்னிதழ் விரியும்
புன்னகை முகங்கள்
பொசுங்கிக் கிடந்த நாளை
வசந்த கால மலர்வாசம் தரும்
ஏப்றல் மாதம் என்றென்றும்
எங்களில் எரியும் தீயாய்...!

இழப்பின் கதைசொல்லும்
என்றைக்கும் இதயம் நிரம்பிய
துயர் தருமாதம் நஞ்சு கலந்து
எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட
நிலத்தின் கதைசொல்லும்
நீங்காத் துயர் மாதம்.

04.04.2014 (2009 முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான நாள். உலகம் திரண்டு அழித்த ஈழவிடுதலைப்போரில் அன்று உலகின் கண்முன்னால் எங்கள் தளபதிகளும் போராளிகளும் எதிரிக்கு அதிகளவு இழப்பை ஏற்படுத்தி இறுதிவரை சமரிட்டு தங்கள் உயிர்களைத் தந்து போனவர்கள்)

Email - rameshsanthi@gmail.com