Thursday, May 10, 2012

காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள்

04.2000....,

ஆனையிறவு வெற்றி மேடையில் சந்தித்தோம்
அரியதொரு பொக்கிசத்தை அந்த நாள் தந்தது
அது உனது ஆழுமையின் வெளி....

பெயருக்கு ஏற்றாற்போல்
உனது எண்ணங்களும் பிரகாசமாக
மேதைகளை வென்ற தமிழின் வனப்பு உனது திறனாய்....

பேச்சுக்களும் எழுத்துக்களுமே எழுச்சியாக
வெற்றுப் பேச்சாளர்களால் நிறைந்த மேடையின்
நிறத்தையும் குணத்தையும் மாற்றியவன் நீ.....

பழமைவாதிகளாலும் பொறாமையாளர்களாலம்
குற்றப்பட்ட உனது திறனை
சிரித்தபடி சமாளித்துச் சிகரங்கள் தொட்டவன் நீ....

சமாதான காலக்கதவுகள் திறக்க
ஊர்காணப்போவதாய் விடைபெற்று
போராளியாய் ஆனவன்....

போர்முகம் சூடிப் போராடிய வன்னிக்குள்
ஊர்முகம் காக்க உழைத்தவருள் நீயுமாய்
காயாத ஈரமாய் உன் கடிதங்கள் பத்திரமாய்....

வாழ்கிறாயா இல்லை வன்னிமண்ணணைகளில் புதைந்தாயா...?
எவ்வித தகவலும் வராத காலமொன்றில்
மீண்டாய் மீண்டும் புலம்.....

நீயாய் சேர்த்த நட்புகளையெல்லாம்
நீயாக விடுவித்துக் கொண்டு ஊமையாய் ஆனாய்
உனது மௌனங்களின் மொழி எமக்கு இன்றுவரை புதிராய்.....

நீ வாழ்ந்தால் போதுமென்று வாய்மூடியிருக்கிறோம்
காரணம் சொல்லாத உனது மௌனம்
புரிந்து கொள்ள எக்கருவியும் எம்மிடமில்லை நண்பா....!

யாரோவாகவே இருந்துவிடாமல் ஏன்
எங்களுக்குள் நட்பாய் இறங்கி
நாட்டுப்பற்றாளனாய் உறவானாய்.....?

'தற்கொலைகள் முன்னாள் போராளிகள் மனநலபாதிப்புகள்'
செய்திகள் வந்தால் நீதான் ஞாபகம் நிறைகிறாய்
மயான வாசலில் உன் பற்றிய பயங்கNளூடு துடிக்கிறதெம் ஆன்மா.....

அழிவுகளின் வேர் நாங்களென்றா - இல்லை
அழிவு நிலம் நோக்கியுன்னை அனுப்பியோர்
நாங்களேயென்ற கோபமா....?

காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள்
கடைசிவரை வன்னியில் கரைந்த உனது நாட்கள் பற்றி
எதையுமே கேட்கமாட்டோம்.....

புழையபடி புன்னகையும் பழைய நினைவுகளையும் பேசுவோம் வா
நீண்ட மணித்துளிகள் விவாதிப்போம் கோபிப்போம்
மீண்டும் புதிதாய் உறவைப் புதுப்பிப்போம்.....

10.05.2012(புலமிருந்து நிலம் போய் போராளியாகி தாயகக்கனவோடு கடைசிவரை வன்னி மண்ணில் வாழ்ந்து புலம் மீண்டு தானாய் தேடிய நட்பெல்லாம் வெறுத்துத் தனிமையை நேசித்து தனிமையாய் போன தோழனுக்காய் இக்கவி.)

Saturday, May 5, 2012

முன்னாள் போராளிகளின் தற்கொலைகள் காரணம் நாங்களா ?


நேற்று (04.05.2012) பொலிகண்டியைச் சேர்ந்த 38வயதான சுகந்தி சிவலிங்கம் என்ற முன்னாள் பெண்போராளியின் தற்கொலை பற்றிய செய்தி இந்த நிடமிடம் வரை சூடு தணியாமல் நமது செய்திகளில் நிற்கிறது.

இந்தப் போராளியின் தற்கொலைக்கான இரங்கல்கள் , வீரவணக்கங்கள் , இவற்றையும் தாண்டிய அரசியல் சிந்தனைகள் என சுகந்தியின் மரணம் பல்வேறு வகையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இனிவரும் சிலநாட்களில் சுகந்தியின் தற்கொலை பற்றிய தமிழ் ஊடகப்புலனாய்வு பரபரப்புச் செய்திகளும் வரும். இன்னும் சில வாரங்களில் சுகந்தியென்ற ஒருத்தியையும் மறந்துவிடுவோம்.

எத்தனையோ மரணங்கள் மனித வலிகள் தந்த தந்துகொண்டிருக்கிற துயரங்களோடு ஒன்றாய் சுகந்தியின் சாவைத் தாண்டிப்போக முடியாது அவள் கண்ணுக்குள் நிற்கிறாள். சுகந்தியுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து இன்று கிடைத்த தகவல்...,

கடந்த சிலநாட்களாக புதிதாக போடப்பட்ட புண்ணால் வேதனைப்பட்டிருக்கிறாள் சுகந்தி. புண்ணால் ஏற்பட்ட வேதனைக்கு மருத்துவத்திற்கு போக கையில் பணமில்லாத கொடுமை. குடும்ப வறுமை உறவுகளால் கூடச் சரியாகக் கவனிக்க இயலாத நிலமையில் ஏற்பட்ட மனவெறுப்பினாலுமே சுகந்தி தன்னைத் தீமூட்டியெரிக்கத் தூண்டியிருக்கிறது.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை முழுவதும் மருந்தோடு வாழவேண்டிய துர்ப்பாக்கியம். இவர்களை பராமரிக்க தனியாக ஒருவர் தேவை. இவர்களுக்கு படுக்கைப்புண் இலகுவில் வரும். புண்ணிலிருந்து வருகிற மணத்தை தாங்கி அவர்களை பராமரிப்பதற்கென்றே பொறுமையும் கருணையும் உள்ளவர்கள் வேண்டும். மலசலம் கழிப்பதே இவர்கள் உணரமாட்டார்கள். தொடர்ந்து படுக்கையில் அல்லது கதிரைக்குள்தான் இவர்களது காலம் போகும்.

ஆனால் இவர்கள் உருவத்தில் மாற்றம் ஏதுமின்றி இருப்பார்கள். இவர்களுக்கான மருத்துவ தேவையே மிகப்பெரிய செலவு. சுகந்திபோன்ற பலர் வருடக்கணக்காக 2,3வருடங்களும் மருத்துவமனையில் இருந்த இருக்கிற சம்பவங்களும் நிறைய இருக்கிறது.

சுகந்தி முதல் அறிமுகமானது2010ம் ஆண்டு தொடக்கம்.
பாதுகாப்பமைச்சின் நேரடிக்கண்காணிப்பில் இருந்த வவுனியா பம்பைமடு ஆயுர்வேத மருத்துவமனையில் இருந்த 60இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளையும் ஆளுகு என்ற நெதர்லாந்து நாட்டு நிறுவனம் பராமரித்து வந்தது. காரணமின்றி வெளியார் யாரும் அனுமதிக்கப்படாத இறுக்கம் நிலவிய காலம் அது. குறித்த சில நிறுவனங்கள் மட்டும் உள்ளே சென்றுவரக்கூடிய அனுமதியே இருந்தது. அத்தகைய கட்டுப்பாடுகள் போடப்பட்ட மருத்துவமனையில் மருத்துவம் பெற்ற முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 60ற்கும் மேற்பட்டவர்களோடு சுகந்தியும் ஒருத்தியாக மருத்துவம் பெற்றுக் கொண்டிருந்தாள்.

இடுப்பின் கீழ் உணர்விழந்த ஒரு போராளியைத் தேட அனுப்பிய எமது தொடர்பாளர் ஒருவர் சுகந்தியையும் சந்தித்து வந்து தந்த அறிக்கையே பம்பைமடு என்றொரு மருத்துவமனையில் இடுப்பின் கீழ் நெஞ்சின் கீழ் கழுத்தின் கீழ் உணர்விழந்த முன்னாள் போராளிகள் பலர் வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்தது. அந்த நேரம் இவ்விடயம் பற்றி த.தே.கூ.பா.உறுப்பினர்களுக்குத் தெரிவித்தோம். அவர்களைச் சென்று பார்வையிடுமாறும் வேண்டினோம். ஆயினும் அறிக்கைகளை அள்ளித்தெளித்த தேசிய உணர்வு செறிந்த எந்த பாராளுமன்ற உறுப்பினரும் அந்த மருத்துவமனைக்குப் போக மறுத்துவிட்டார்கள்.

கவிரித்த அரசியல்வாதிகளை விட்டுவிட்டு இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் முடிந்தளவு செய்ய விரும்பி கருணையாளர்களிடம் உதவி கோரியிருந்தோம்.  தம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்த கருணையாளர்களின் உதவிகளை நாமும் மேற்கொண்டோம்.

அந்த நாளில் சுகந்தியும் தனக்காகவும் உதவி கோரியிருந்தாள். மாதம் இருமுறை அங்கு சென்றுவர காரணங்களை உருவாக்கிய எமது தொடர்பாளர் சுகந்தியையும் சுகந்திபோன்ற பலரையும் சந்தித்து அவர்களுக்காக நேசக்கரம் அனுப்புகிறவற்றையும் வழங்கி மனசால் உடைந்து வாழ்வே வெறுத்த பலருக்கான உளவலுவையும் கொடுத்துக் கொண்டு திரும்புவார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் துயரங்களைக் கொட்டியனுப்பும் குரல்களை தொலைபேசி மூலம் வந்து சேரும்.  உதவி கட்டாயம் தேவைப்படுவோரை தரம்பிரித்து குறித்த ஒரு சிறுதொகை போராளிகளுக்கான மாதாந்த உதவிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அவை அவர்களுக்குப் போய்க்கொண்டிருந்தது.

யாரும் உட்செல்ல முடியாத நிலமை மாறி 2010 நடுப்பகுதியில் யாரும் சென்றுவரக்கூடிய நிலமை வந்தது. அந்நேரம் வவுனியாவுக்குள் வாழ்கிற தமிழ் அரசியல்வாதி ஒருவர் திடீர்பயணமொன்றை மேற்கொண்டார். வாக்குறதிகளை அள்ளி வழங்கினார். இதோ உதவிகள் தருகிறேன் என நம்பிக்கையையும் கொடுத்தார்.  அந்த அரசியல்வாதியின் பயணத்தால் அதுவரை கிடைத்த சிறு உதவிகளையும் பலர் இழந்து போன துயரம் நிகழ்ந்தது. அதுபற்றிய அப்போதைய நிலமையை வாசிக்க கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பார்வையிடலாம்.
ஆளுகு நிறுவனம் தனது பணிகளை முடித்துக் கொண்டு வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டதோடு பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற பல முன்னாள் போராளிகள் வௌ;வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். வீடுகளுக்குச் செல்லக்கூடியவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். வீடுகளுக்குச் சென்றவர்கள் வரிசையில் சுகந்தியும் வீடு சென்றாள். புலம்பெயர் கருணையாளர்களால் வழங்கப்பட்டு வந்த சிறு கொடுப்பனவினை சுகந்தியும் பெற்றுக் கொண்டு வந்தாள். அத்தோடு அவளுடனான தொடர்புகளும் விடுபட்டுப்போனது.

4மாதங்கள் முன்னால் இடுப்பின் கீழ் உணர்விழந்த முன்னாள் போராளியொருவன் தொடர்பு கொண்டான். அக்கா எங்களுக்குக் கிடைச்ச உதவியள் எல்லாம் நிண்டு போச்சு....ஏதாவது செய்யுங்கோ என வேண்டினான். சிலரது விபரங்களையும் தந்தான். 

அவன் தந்த விபரங்களில் சிலருக்கான உதவிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அவை போய்க் கொண்டிருக்கிறது. சிலருக்கு உதவிய புலம்பெயர் உறவுகள் அவர்களைக் கைவிட்டுள்ளனர். காரணம் சில அரசியல்வாதிகள் இந்தப்பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு கடித உறைகளில் 5ஆயிரம் 10ஆயிரம் என ஒரு முறை கொடுத்துவிட்டு அவர்களது படங்கள் பெயர் விபரங்களை இணையங்களில் வெளியிட்டு தாம் உதவியுள்ளோம் என்ற செய்திகளைப் போட்டுவிடுகின்றனர்.

இவற்றைப் பார்வையிடும் உறவுகள் தாம் உதவிகள் கிடைக்கிறவர்களுக்கு வீணாக தொடர்ந்து உதவுகிறோம் என நினைத்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளால் ஒரிருமுறை வழங்கப்படும் 5ஆயிரம் 10ஆயிரம் நிரந்தரமானதில்லை என்பதனை பலர் புரிந்து கொள்ளவதில்லை.
பாதிக்கப்பட்டவர்களை சந்தேகிக்கின்றனர். இதனால் பல போராளிகளை தங்கள் கேள்வி விசாரணைகளால் மனவுளைச்சலுக்கும் ஆளாக்கியிருக்கின்றனர். இந்த விசாரணைகளின் குடைச்சல் தொல்லை தாங்காமல் உதவியே வேண்டாம் ஆளைவிடு சாமியென்று பலர் செத்தாலும் பறவாயில்லையென்ற நிலமையில் இருக்கிறார்கள்.

எப்படியேனும் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற அவாவில் எவர் கேட்டாலும் உதவுகிறோம் என்றாலும் தங்கள் விபரங்களை கொடுக்கிறார்கள். ஆனால் பலர் உதவிகள் கிடைக்காமல் ஏமாந்து போயிருக்கிறார்கள்.
ஆயினும் தாங்களும் வாழ வேண்டுமென்று கனவுகாண்கிற ஆயிரமாயிரம் போராளிகள் புலம்பெயர் தமிழர்கள் தங்களைக் காக்க கைதூக்கிவிடமாட்டார்களா என எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் நாமோ சிறையில் இருக்கிறவர்களுக்குச் சோறு கொடுப்பது தீர்வாகாது விடுதலைக்கான தீர்வு வேணுமென்று தத்துவம் உரைக்கிறோம். தத்துவங்களையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்குகிற நாங்கள் கொலைக்களத்தில் இல்லை. நல்ல பாதுகாப்பு நிம்மதியாய் உறங்க வசதி வாழ்வுரிமை எல்லாவற்றோடும் வாழ்கிறோம். ஆக நாம் விடுமுறைகாலம் தாயகம் காணவே தீர்வைக் கேட்கிறோம்.

நாங்கள் காணும் கனவு நனவாக நமக்காக வாழ்ந்தவர்களும் அவர்களது சந்ததியும் வறுமையிலிருந்து மீள வேண்டும். அவர்களது குழந்தைகள் சிறந்த கல்வியறிவைப்பெற வேண்டும். எங்களுக்காக கடந்த 30வருடம் போராடி நொந்து வாழ்விழந்து போயிருக்கிற சந்ததியே திரும்பவும் எங்கள் விருப்புகளை நிறைவேற்ற கடாக்களாக வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஆனால் அவர்களுக்கான வாழ்வைக் கொடுக்க எங்கள் பொருளாதாரத்தை வழங்குவதில் ஆயிரம் சந்தேகங்கள் கேள்விகள் கேட்கிறோம்...?

எத்தனையோ பெண்போராளி அம்மாக்கள் 50ரூபாவுக்கும் 100ரூபாவுக்கும் விலைபோகிற அநியாயம்  சத்தமின்றி நிகழ்கிறது. ஆடைத்தொழிற்சாலைகள் என்றும் அரச உத்தியோகங்கள் என்றும் முன்னாள் போராளிகள் பலரது வாழ்வும் உடலும் விற்பனையாகிறது. இன்னும் 5வருடம் இப்படியே போகுமாயின் தாய்லாந்தாகவும் பம்பாயாகவும் எங்கள் பெண்களின் நிலமை மாறிவிடுகிற அபாயத்தை நோக்கிப்போகிறது நிலம். எவராவது எங்களை விடுதலை செய்தால் போதும் அவர்களுக்கு ஆதரவாயிருப்போமென ஆதரவற்றுப்போன கைதிகள் பலரது எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வராதென்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

வெற்றிகளுக்காக அள்ளி வழங்கியும் வெற்றிச்சமர்களுக்காக விழாவெடுத்தும் பெருமிதம் கொண்ட எங்கள் வெற்றிகளுக்கு வேராக இருந்த முன்னாள் போராளிகளின் வாழ்வை இன்று நாம் மேம்படுத்தாது தவறுவோமாயின் சுகந்திபோன்ற தற்கொலைகள் மட்டுமல்ல தங்களை விற்கின்ற அவலமும் தாராளமாயே நடக்கப்போகிறது.
நாங்கள் இங்கு வாழ்கிற வாழ்க்கை எங்கள் பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கிற வாழ்வும் வசதியும் அங்கே ஒவ்வொருவரும் சிந்திய இரத்தத்தின் பரிசு. எங்களது உயிர் அந்த உறவுகள் தந்த பிச்சை. அவர்களது வாழ்வை மே;படுத்த ஒவ்வொருவரும் முன்வாருங்கள்.

சுகந்திக்கு இன்று செலுத்துகிற கண்ணீரஞ்சலியும் இரங்கலும் அவளது மனச்சுமையை அவளைத் தற்கொலைக்குத் தூண்டிய வறுமையை ஏதாவது செய்யுமா ? பெறுதற்கரிய உயிரை அவளது வாழும் கனவை அழித்த எங்களது சுயநலத்தை அவளது ஆன்மா மன்னிக்குமா ? எல்லாவற்றுக்குமாய் அவளது மரணத்திற்கு நாமெல்லாம் பொறுப்பாளிகள். இன்னும் பல முன்னாள் போராளிகள் இவள் போன்ற முடிவே சரியென்று செத்து அழிவதற்கிடையில் எங்களுக்காக தங்கள் வசந்தங்களை கரைத்தவர்களுக்காய் உதவ முன்வாருங்கள்.
05.05.2012

Friday, May 4, 2012

காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப் போகிறது.....?

2வாரங்கள் முன்னொரு ஞாயிற்றுக்கிழமை விடிய அவனது தொலைபேசிதான் அவளை நித்திரையால் எழுப்பியது. அக்கா நான் ***கதைக்கிறன். ஏனக்கு ஒரு உதவி வேணும் அதான் எடுத்தனான்.....ஸ்கைப் வருவியளோ கதைக்க......? அத்தோடு தொடர்பறுந்தது.

ஆசிய நாடுகளுக்குள்ளே ஐக்கியநாடுகள் சபையில் அகதி அந்தஸ்த்திற்கு பதிந்துவிட்டு சிறைகளில் இருக்கிற பலர் இப்படித்தான் வந்திருக்கிறார்கள். ஒன்றில் சிறையிருக்கும் நாடுகளில் தமக்கான உதவிகோரல் அல்லது இலங்கை போகிறோம் உதவியென்றே பல அழைப்புகள் வந்திருக்கிறது. அப்படியான ஒன்றாயே இவனது அழைப்பையும் நினைத்தாள். ஸ்கைப் போனாலும் ஓயாத தொடர்புகள் வந்து நிறைந்து விடுவதால் அவனை மறந்து போயிருந்தாள்.
நேற்று ஸ்கைப்பில் வந்தவன் ஒரு தகவலை எழுதியிருந்தான்.

அக்கா எனக்கு இலங்கைக்கு போக அனுமதி கிடைச்சிருக்கு....ஆனா எயாப்போட்டாலை தப்பி வெளியில போட்டா நீங்கள் தான் உதவ வேணுமக்கா.....அதாலை தப்பீட்டா இந்தியா இல்லாட்டி மலேசியாப்பக்கம் போகலாமெண்டு யோசிக்கிறன்....! ஏன ஸ்கைப்பில் எழுத ஆரம்பித்தவனின் எழுத்தை நீள விடாமல் அவள் தனது பதிலை எழுதினாள்.

இந்தியா மலேசியாவுக்கெல்லாம் உதவிற அளவுக்கு எங்கடையாக்கள் முன்வராயினம்.....!

அக்கா என்னுடன் தொலைபேசியில் பேசுங்கள். உங்களுடன் நிறையக் கதைக்க வேணும். எனது குடும்பம் 3மாவீரர்களையும் நாட்டுக்கு கொடுத்தது. நானும் எனது 3தம்பிமாரும் நாட்டுக்காக 18வருடங்கள் உழைத்தோம். நாங்கள் போராட வெளிக்கிட்டதிலிருந்து துரங்களைத் தான் சுமந்தோம் அதுவே இன்றும் தொடர்கிறது. உதவாவிட்டாலும் பறவாயில்லை ஒருதரம் பேசுங்கள். என்றதோடு ஸ்கைப் தொடர்பும் அறுந்தது.

இன்று அவன் கொடுத்த இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினாள். அவன்தான் மறுமுனையில் பதில் கொடுத்தான். முகமறியாத இருவருக்குள்ளுமான சுகவிசாரிப்புகளின் பின்னர் அவன் தனது கதைகளைச் சொல்லத் தொடங்கினாள்.

000          000              000

அவன் பிறந்தது வடமராட்சி. கடற்தொழிலால் வசதிகளோடும் நல்ல வாழ்வோடும் இருந்த குடும்பத்தின் பிள்ளைகளை நாடு தனதாக்கிக் கொள்ள உயர்தரம் படித்துக்கொண்டிருந்த அவனும் தனது கடமைகளுக்காக புறப்பட்டான். தம்பிகள் களத்தில்  நிற்க அவன் கடல்கடந்து சர்வதேச வலையமைப்பில் பணிக்குச் சென்றான். முகவரி பெறாத வெளித்தெரியாத முகத்தைத் தனக்கானதாய் ஆக்கியவன் 12வருடங்கள் தாய் நிலம் காணாமல் சர்வதேசமெங்கும் அளந்து திரிந்தான். அலைவின் பெரும்பகுதி முழுவதும் கடலோடு தான் அவன் வாழ்வு போய்த்தொலைந்தது.

நிலம்விட்டுப் பல்லாயிரமாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் தேசமெங்கும் தாயகக்கடமைக்காய் தலைமறைவாய் பணிக்காய் திரிந்தான். வசதியான வாழ்வும் வருமானமும் பெற்றுவிடக்கூடிய லட்சங்கள் கையில் தவழ்ந்த போதும் தனக்காய் எதையுமே அனுபவிக்கவோ ஆசைப்படவோ இல்லை எல்லாம் மண்ணுக்காய் எல்லாவற்றையும் அர்ப்பணித்தான்.

ஜெயசிக்குறு வெற்றிக்காய் பணியாற்றிய அவனதும் அவன்போன்ற பலரதும் உழைப்பில் யெஜசிக்குறு வெற்றிவாகை சூடிக்கொள்ள அவனது 2தம்பிகளும் கண்டிவீதியின் காற்றோடு தங்கள் மூச்சை நிறுத்திய சேதியும் , அவன் அதிகம் நேசித்த அவனது கடைசித்தம்பி ஆனையிறவில் வேவுப்பணியில் வீரச்சாவடைந்த செய்தியைக்கூட வருடம் போன பின்னாலேயே அறிந்து தனக்குள் அழுதான். ஆயினும் தனது பணியில் வீச்சாய் உயர்ந்தான். விழவிழ எழுவோம் என்ற வார்த்தைகளை அவன் தினமும் உச்சரித்தபடியே தாயக விடுதலைக்காய் உழைத்தான்.

சமாதான காலம் சர்வதேச வலைப்பின்னலில் புதிய நிர்வாகப்புகுதல் அவனையும் பிரித்தது. கடலோடும் அன்னிய தேசங்களோடும் அலைந்தவன் சமாதான காலத்தில் தாயகம் போனான். மண்ணுக்குள்ளிருந்து மறைமுகப்பணிகள் அவனுக்காய் காத்திருந்தது. நிர்வாக மாற்றத்தில் ஏற்பட்ட மனச்சோர்வுகள் நம்பிக்கைத் துரோகங்களை மறந்துவிட்டு சலிக்காமல் மீண்டும் பணிகளில் இறங்கினான்.

2003திருமணம பந்தத்தில் இணைந்தவன் தொடர்ந்தும் தன் பணிகளோடே தன்னை இணைத்தான். 2004அவனது உலகத்தைப் புதுப்பித்துப் பிறந்தாள் அவனது செல்லமகள். உரிமையுடன் அப்பாவென்றழைக்கவும் அவனை மகிழ்ச்சிhல் கட்டிப்போடவும் வீட்டில் அவனது குழந்தை அவனுக்காகக் காத்திருந்தது. கிடைக்கிற ஓய்வுகளை குழந்தையோடு கழித்தான்.

நிலமைகள் மாற்றமடைந்து காலம் எல்லாரையும் களம் வாவென்ற போது தானே முன்னின்று தங்கையின் பிள்ளைகளையும் வாவென்றழைத்துக் களம் போனவன். 'அண்ணை கேக்கிறார்' வீட்டுக்கொரு பிள்ளையைத் தாங்கோவன் என சொந்தங்களையும் அழைத்து நிலம் மீட்கும் பணிக்காய் நின்று பணிசெய்தான்.

அவன் வீட்டிலிருந்து அம்மா அப்பா எல்லோரும் தமக்காயான பணிகளை ஒன்றாயே சேர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். அங்குலம் அங்குலமாய் அவர்கள் நேசித்த பூமியை அதிகாரம் ஆயுதபலத்தால் வென்று கொண்டிருக்க கடைசிக்காலக்களமுனையில் மாற்றங்களும் ஆளாளுக்கானதாய் ஆனது.

அவன் நேசித்த 'அண்ணை''க்குத் தெரியாமலே பல அக்கிரமங்கள் நிகழத்தொடங்கியது. மக்களின் மனங்களை வென்ற மக்களின் தலைவனுக்கும் மக்களுக்குமான தொடர்புகளும் அறுந்து போனது.  கட்டாய ஆட்பிடியும் அநியாங்களும் அவனதும் அவன் போன்ற ஆயிரமாயிரம் பேரின் உழைப்பையெல்லாம் அரசியல்பிரிவு அநியாயமாக்கிக் கொண்டிருந்தது.
கட்டாயப்பிடி வேண்டாம் கடைசிவரையும் நாங்கள் போராடுவோம் என பலருடன் முரண்பட்டுத் தோற்றுப்போனார்கள் மக்களை நேசித்தவர்கள். அத்தகையோருடன் அவனும் அமைதியானான். எங்கெங்கோ சிலரிடம் அதிகாரம் பகிரப்பட்டு உண்மையானவர்களையே போட்டுத்தள்ளும் நிலமையில் களம்மாறியது. அங்கே மனசால் அழுதபடி தாங்கள் நேசித்த தலைவனுக்கும் மக்களுக்குமாய் பல்லாயிரம் போராளிகள் தங்கள் பணிகளைச் செய்(த்)தார்கள்.

முடிவுகள் தலைகீழாய் நம்பமுடியாதனவாய்.....மாறிய போது மிஞ்சிய உயிரையும் மண்ணுக்குள் பலர் புதைத்து வெடித்துச் சிதைக்க இவனால் மட்டும் அப்படியே அழிந்து போக முடியாது போனது. அவனது செல்லமகளும் அவனது காதல் மனைவியும் கைகளில் விலங்கில்லாமல் அவனைச் சிறையிட்டனர். மண்ணுக்காய் கடலோடே காலத்தை அழித்தவன் கடமைக்காய் உலகமெங்கும் திரிந்தவன் தனது மகளுக்காக கடைசியாய் மிஞ்சிய குப்பியையும் கழற்றியெறிந்துவிட்டுக் கடல்கடந்தான்.

வெளிநாடு போகலாமென்று நம்பி ஆசியநாடொன்றில் சிறையில் அடைபட்டு வருடம் 2 முடிந்துவிட்டது. கடைசிநேர முடிவோடு காணாமற்போன தம்பி உயிருடன் இருப்பதற்கான அடையாளங்களும் இல்லை. 3வது தம்பி மட்டும் தடுப்பிலிருந்து விடுபட்டு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிஞ்சியிருக்கிறான். அப்பா பழையபடி கடற்தொழிலுக்குப் போய்வருகிறார். களத்தில் 16வருடங்கள் வாழ்ந்த 3வது தம்பி உடலால் பாதிப்புற்று உழைக்க முடியாத நிலமையில் அப்பாவை நம்பியிருக்கிறான்.

ஊரிற்குத் தொடர்பு கொண்டு உதவி கேட்டான். தம்பி ஆரிட்டையும் கடமைப்படாதை வெளிக்கிட்டு வா பாப்பம்....இவ்வளவு காலமும் ஒருதரிட்டையும் நாங்க கையேந்தேல்ல....இனியேனப்பு கைNயுந்துவான்....உயிருகளைக் குடுத்தம் உடமைகளைக் குடுத்தம்.....என்ரை பிள்ளையளையும் நாட்டுக்காக நான்தான ராசா ஓமெண்டு குடுத்தனான்....பிடிச்சா சிறையில போடுவினம்....போடட்டும்....ஆனா மானத்தைவிட்டு கடமைப்பட வேண்டாம் ராசா....என அம்மா முடிவாகச் சொல்லிவிட்டா. ஆரிடமாவது கையேந்தினால் உனது மகன் உயிர் பிழைக்க வாய்ப்புண்டென்று சொல்ல வேணும் போலிருந்த விருப்பை அம்மாவுக்குச் சொல்லாமல் மௌனமானான்.

அவனை நம்பிய அவனது மனைவியும் மகளும் அவனுக்காக தாயகத்தில் கடலோரக் கிராமமொன்றில் காத்திருக்கிறார்கள். அடைபட்ட சிறைவாழ்வின் கொடுமையும் ஒன்றுமேயில்லாத வெறுமையும் துரத்த இறுதி முடிவாய் இலங்கை போக எழுதிக்கொடுத்துவிட்டு அனுமதியும் பெற்றுவிட்டிருக்கிறான். .

இலங்கை போறது ஆபத்தெல்லோ அண்ணா...? கேட்டவளுக்குச் சொன்னான். வேறை வழியில்லை....இங்கினை எங்கேயும் ஒரு மாற்றத்தைச் செய்து தப்பிறதெண்டாலும் நாட்டுக்காசு குறைஞ்சது 3லட்சம் வேணும்....என்னிட்டை அப்பிடியெல்லாம் வசதியில்லை.....நடக்கிறதைக் காண்பமெண்ட முடிவோடை எழுதிக்குடுத்திட்டன்....

தன் வழிச்செலவுக்குக் கூடக்கையில் காசில்லாதவனுக்கு 3லட்சத்தை யார் கொடுப்பார்...? அவன் உயிரை எவர் காப்பார்....?
தாய்நாட்டுக்காக தங்களை இழந்து ஆயிரமாயிரமாய் ஆசியநாடுகளிலும் ஆபிரிக்கநாடுகளிலும் சிறைகளிலும் வாழு(டு)கிற போராளிகளுக்காக அனைத்துலகத் தமிழினம் என்னத்தை கைமாறாய் செய்யப்போகிறது...? அவள் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

அக்காவென்று அவளுக்கு அறிமுகமானவன் இப்போ அவளுக்கு அண்ணணாகியுள்ளான். அவனை வெளிச்சொல்லி அவனுக்காய் உதவி கேட்க முடியாத துயரம். அவர்கள் நெடுகலுமே உச்சரிக்கும் 'அண்ணை' வளர்த்து வெளிநாடனுப்பி வைத்த பண முதலைகள் மீதும் கோபம் வருகிறது.

இத்தகைய தியாகங்களின் மீது குளிர்காய்கிற சொத்துகளுக்கும் வருமானங்களுக்கும் சொந்தமான சுயநலங்கள் மனம் வைத்தால் எத்தனை உயிர்கள் காக்கப்படலாம்....? நினைத்தாள்.

02.05.2012 அவளது அண்ணனிடமிருந்து ஒரு தகவல் வந்திருந்தது.

தங்கையே நான் தொடர்பில்லாமல் போய்விட்டால் எனது 8வயது மகளுக்கான கல்வியையாவது கொடுத்து உதவுங்கள். கட்டுநாயக்கா தாண்டி தப்பித்தால் என்னிடம் 250ரூபா காசிருந்தால் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.

தனது கடைசி விருப்பைத் தட்டச்சி மெயிலிட்டிருந்தான். அவனுக்காய் எதையும் செய்ய முடியாது போகிற இயலாமையையும் தாங்கமுடியாத வலியையும் வெளிப்படுத்தியது கண்கள். கணணித்திரை மங்கலாக கண்ணீரால் நிறைந்தது கண்கள். யாருமற்ற கணணியறையில் கண்ணீர் விட்டழுதாள் அந்த அண்ணனுக்காய்.

பெயர் பொறிக்கப்படாத வரலாற்றுக்குள் அவனது பெயரைக் காலம் எழுதி வைத்தது. ஆயினும் காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப்போகிறது.....?

எங்காவது ஒரு அதிஸ்டம் கிடைத்தால் அவனுக்கான 3லட்சம் கிடைத்தால் எப்படியிருக்கும்....? ஏண்ணிக் கொள்கிறாள்.....
03.05.2012