Monday, May 31, 2010

அது பிணங்கள் மீதான நடைபயணமென்றே சொல்கிறேன்...உயிர் பிழைத்த ஒருவனின் வாக்குமூலம்

இனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப்பும் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. உயிர் வாழ்தலில் இருந்த விருப்பால் சாத்திரத்தை நம்பி சாத்திரம் கேட்டவனுக்கு மரணம் முடிவென சாத்திரமும் சொல்லியானபின் வாழ்வும் மரணமும் அவனோடு சண்டையிட்ட நாட்களவை. 2009 மேமாத முடிவுகளின் பின்னர் இவன் சாவிலிருந்து தப்பி சரணடைந்தான்….தனது நிலமைகளை எங்களோடு பகிரும் இந்த 28வயது இளைஞனின் குரலைக் கேளுங்கள்.

Saturday, May 29, 2010

குடும்பத்தில் யாவரையும் இழந்து தனியனான ஒரு மாணவனின் குரல்

இந்தக் குரலுக்குரிய 31வயது நிரம்பிய மாணவன் தனது கற்கைக்காலம் தாண்டிய நிலையில் பல்கலைக்கழகம் வந்திருக்கிறான். கடந்த வருடம் 10ம் மாதம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள இவனுக்கு உறவுகள் என்று சொல்ல எவருமேயில்லை. 2006இல் தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்து போக 2009 தாயாரையும் இரு சகோதரர்களையும் இழந்து போனான். இறுதியில் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து முகாமுக்குப் போனான். முகாமிலிருந்து விடுபட்டு கற்றலுக்கென்று வந்த பின்னர்தான் வறுமையும் யாருமற்றுத் தவிக்கின்ற வெறுமையும் இவனை ஆட்கொண்டுள்ளது. யாருமேயில்லை இனிப் படித்தென்ன விட்டென்ன என்கிற நிலைமையில் இருந்தவனை நமது நேசக்கரம் யாழ்மாவட்டத் தொடர்பாளர் தீபச்செல்வனால் நேசக்கரத்திடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளான். இனி வாழ்வதில் என்ன இருக்கிறது என்கிற மனைநிலையில் இருந்தவனுடன் உரையாடிய போது அவனுக்கான ஆறுதலை ஆற்றுப்படுத்தலை செய்ய வேண்டிய நிலையில் இவனது மனநிலை இருப்பதை உணர முடிகிறது. இவனுடனான உரையாடலை ஒரு செவ்வியாக இல்லாமல் தோழமையுடன் அணுகிய போது அவன் சொன்னவற்றிலிருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்கிறோம்.

Monday, May 24, 2010

எங்கடை குடும்பத்தில கனக்க இழப்பு - ஒரு போராளியின் கதை

1997இல் யெயசிக்குறு சமரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழ் இயங்கா நிலைக்குப் போனான் இவன். 17வயதில் ஊனமுற்றுத் தன்னைக் கவனிக்கவே ஒரு துணையோடு வாழ்ந்தவன். குடும்பத்தில் வரிசையாய் நாட்டுக்குக் கொடுத்தவன். மேமாதம் வரையும் கள முனையிலேயே இருந்தவன். கடைசியில் இவனும் தடைமுகாமில் போய் சேர வேண்டிய நிலையில் ஊரோடு இவனும் போய்ச் சேர்ந்தான். எந்தவித வசதிகளுமற்ற இடமொன்றில் இன்று இவன் படுக்கையில் இருக்கிறான். முன்னாள் போராளிகள் வரிசையில் இவனும் ஆனால் அன்றாட தேவைகளுக்கே உதவிகளை எதிர்பார்த்தபடி இவன்.இதோ இவனது குரலிலிருந்து....

Saturday, May 22, 2010

வட்டுவாகலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்களைத் தாண்டி வந்தேன்

என்ரை தம்பியவையை காணேல்ல கடைசி நேரத்தில களத்துக்கு போனவை....இன்னும் வரவுமில்லை அவையைப்பற்றிய எதையும் இதுவரை அறியவும் முடியேல்ல...நான் தான் என்ர தம்பியவையின்ரை குடும்பங்களையும் பாக்கிறேன்....10பேர் என்னை நம்பியிருக்கினம்....கடைசியில எரிஞ்ச அந்த நெருப்பு இன்னும் என்னாலை மறக்கேலாதாம்....இப்பவும் கனவிலை வருது....கடைசி நேர யுத்தத்தில் தான் கண்ட உண்மைகளை பகிர்கிறாள் இந்தப் பெண்.....இரத்தமும் சதைத்துண்டங்களின் நடுவிலிருந்து உயிர் தப்பியது பற்றி உதிரம் உறையும் கதைகளிலிருந்து ஒரு பகுதி இது....ஒலிப்பதிவைக்கேட்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.
அடுத்த பகுதி நாளை....

Friday, May 21, 2010

விடுதலை பேசி நாசமாய்ப்போவோம்.

மரணம் !
அது உனது முகம் முழுவதும்
வியாபித்திருக்கிறது....
சொல்ல எழுகிற சொற்களைக்
குற்றித் துளைக்கும்
கூர்முனைக் கத்தியிலிருந்து
உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது.

உதிரும் குருதித் துளிகள்
உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும்
உறிஞ்சிக் கொண்டு போகிறது.....
கத்தியின் இடுக்கிலிருந்து
ஒழுகுகிறது உனது
கடைசிக் கனவுகள்.....

ஓர் உயிரின் பெறுமதி பற்றிய
எந்தவித கவலையுமின்றி
உன்னைக் குற்றிக் குருதியில்
குளிப்பாட்டி மகிழ்கிறது
காடேறிகளின் கர்வம்.....

இன்றைய முகப்புச் செய்திகளிலும்
தலைப்புச் செய்திகளிலும்
நீ நிறைந்து வழிகிறாய்.....
வியாபாரிகள் வயிறு முட்ட நீ
வலியில் துளித்துளியாய்
செத்துப் போகிறாய்.

எத்தனையோ கொடுமைகள்
படங்களாய் வந்து போயிற்று
அதுபோல நீயும்
நாலுநாள் செய்தி - பின்
நாவுகளில் மட்டுமல்ல
நமது வீரங்களின்
நினைவுகளிலிருந்தும்
நிரந்தரமாய்
மறந்து போய்விடுவாய்.....

உன்போல் பல கதைகள்
அவ்வப்போது வந்து
ஆயுளை அழித்துச் செல்லும்
ஆயினும் வீரமாய் விடுதலை பேசி
நாசமாய்ப்போவோம்....

நீங்கள் சாவது
குருதியில் மிதந்து போவது
நமக்கெல்லாம் இது வீரத்தின் குறியீடு
விடுதலையின் அடையாளம்....

`மனிதம் மனிதவுரிமை`
மேற்படி சொற்களின் பெறுமதி
உனக்கானதும் உன்போன்ற
ஆயிரமாயிரம் பேருக்கான முடிவுகள்
இதுதான் என்பதை மீள்பதிவாக்குகிறது.

தோழனே !
தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சி
இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா
நீங்கள் சாகத்துணிந்ததும்....?
சயனைட் அணிந்ததும்.....?

22.05.2010 (இன்று வெளியான ஒரு போராளியின் கொலை தந்த துயரிலிருந்து....)

Monday, May 17, 2010

தெருவில் படுத்துறங்கும் ஒரு முன்னாள் கரும்புலிப்போராளியின் இன்றைய நிலை

பதின்மூன்று வயதில் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்டத்திற்காக போனான். அவனது இருபத்தியொரு வருடப் போராட்டத்தில் அதிரடிப்பிரிவு. அரசியல்பிவு கரும்புலி உளவுப்பரிவு என பல பிரிவுகளிலும் பணியாற்றி பல தடைவைகள் காயமடைந்து உடல் ஊனமாகிப்போய் கடந்த வருடம் இறுதியுத்தத்தில் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஒருவருடகாலம் கடும் சித்திரவதைகளுடன் சிறை வாழ்வை கழித்தவன் அவனது உடல் ஊனம் காரணமாக வெளியே விடப்பட்டான்.வெளியில் வந்தவனை அவனது தாயார் சகோதரர்களே ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிட மன நினையில் பாதிப்படைந்து தற்கொலைக்கும் முயன்றான்..அதிலிருந்தும் தப்பி வவுனியா பஸ்நிலையத்தில படுத்துற்ங்கி வாழ்வை கழித்துக்கொண்டிருந்தவன் நேசக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான். நேசக்கரம் அவனிற்கான ஆரம்ப உதவிகளை வழங்கிருந்தது. ஆனால் மனஅழுத்தத்தால் பாதிக்கபட்டு தனக்கு வாழ விருப்பம் இல்லை எனவே தற்கொலை செய்யப்போகிறேன் என்று கடிதம் எழுதியிருந்தான். அவனது நிலையை அவனது குரலியே கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.